பாடம் - 3. வருணனை
அறிமுகம்
வருணனை என்றால் ஒரு பொருளைப் பற்றிய விவரங்களை அழகுபட விளக்கிக் கூறுவது ஆகும். இந்த வருணனையைப் புனைந்துரை என்றும் கூறுவர், புனைதல் என்றால் அலங்கரித்தல்
என்று பொருள். அலங்காரமாகக் கூறுவதைப் புனைந்துரை என்றும் வருணனை என்றும் கூறலாம்.
வருணனை நடைக்கு எடுத்துக்காட்டாக உள்ள படம் இது. கதை நிகழும் இடங்களை. கதையோட்டத்தில் நிகழும் காட்சிகளை அழகாக வருணிப்பது புதினங்களில் பொதுவாகக் காணப்படும் ஒரு போக்கு ஆகும் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்ற வரலாற்றுப் பதினத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ள வருணனைப் பகுதியாகும் இது.
Lesson Introduction
'VARUNANANI' means describing the sequence of incident's beautiful. This is also known as “PUNAINDHURAI' or Decorative narration. The word PUNAITHAL means 'decorating'. Depicting anything in a decorative style is known as VARUNANAI or PUNAINDHURAI.
படித்துக் கருத்தறிதல்
அந்திநேரம் கடல்
பொன்னியின் செல்வன் (பாகம் 2)
முதல் அத்தியாயம்
பூங்குழலி
அந்தி நேரம் அமைதி பெற்று விளங்கியது. கோடிக்கரையின் ஓரத்தில் கடல் அலை அடங்கி ஓய்ந்திருந்தது. கட்டுமரங்களும், படகுகளும் கரையை நெருங்கிக் கொண்டிருந்தன. கரையில் சிறிது தூரம் வெண்மணல் பரந்திருந்தது. அதற்கு அப்பால் வெகு தூரத்துக்கு வெகு தூரம் காடு படர்ந்திருந்தது. காட்டு மரங்களின் கிளை ஆடவில்லை; இலைகள் அசையவில்லை. நாலாபக்கமும் நிசப்தம் நிலவியது. மேகத்திரள்கள் சில சூரியனுடைய செங்கதிர்களை மறைக்கப் பார்த்துத் தாங்களும் ஒளி பெற்றுத் திகழ்ந்தன. கரை ஓரத்தில் கடலில் ஒரு சிறிய படகு மிதந்தது. கடலின் மெல்லிய அலைப் பூங்கரங்கள் அந்தப் படகைக் குழந்தையின் மணித் தொட்டிலை ஆட்டுவதுபோல மெல்ல மெல்ல அசைத்தன.
இரவுமின்னல்
இருள் மேலும் மேலும் கரியதாகிக் கொண்டு வந்தது. இருட்டை விடக் கரியதான இருட்டு எப்படி இருக்க முடியும்? அப்படியும் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. திடீரென்று வானத்தில் ஒரு மின்னல் தோன்றி ஒரு மூலையிலிருந்து மறு மூலைவரை பாய்ந்தஹ்டு
அதற்குப் பிறகு தோன்றிய இருட்டு இருளைவிடக் கரியதாயிருந்தது. மின்னலைத் தொடர்ந்து இடி முழக்கம் கேட்டது. கடல் அதிர்ந்தது. திசைகள் அதிர்ந்தன.
இன்னொரு மின்னல் அடிவானத்தில் இருளைக் கிழித்துக் கொண்டு புறப்பட்டது. அது மேலும் மேலும் நீண்டு கப்பும் கிளையும் விட்டுப் படர்ந்து பற்பல ஒளிக் கோலங்கள் ஆகாயமெங்கும் போட்டு, வானையும் கடலையும் ஜோதி மயமாகச் செய்துவிட்டு. அடுத்த கணத்தில் அடியோடு மறைந்தது.
அருஞ்சொற்பொருள்
அந்தி நேரம் = பகல் பொழுது முடியும் நேரம் .. dusk
கோடிக்கரை = தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள ஓர் இடம்
கட்டு மரம் = மீனவர்கள் கடலுக்குச் செல்லப் பயன்படுத்தும்
மிதவை. Raft made of logs tied together.
நிசப்தம் = அமைதி
மேகத் திரள்கள் = மேகக் கூட்டங்கள்
பூங்கரங்கள் = பூப்போன்ற கைகள்
மணித்தொட்டில் = அழகான தொட்டில் : beautiful cradle
கரியது = கறுப்பானது : black
அதிர்ந்தது = குலுங்கி ஆடியது. vibrated
ஒளிக்கோலங்கள் = அழகான ஒளிக்கீற்று light in the form of decorative designs
பயிற்சி
கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்குப் பொருத்தமான விடைகளைத் தேர்வு செய்யுங்கள்.
1. நீங்கள் கேட்ட வருணனைப்பகுதிகளில் முதலாவது இரண்டாவது என்ற வரிசையில் உள்ள இரண்டு பொழுதுகள் எவை?
அ) இரவு, அந்திப் பொழுது
ஆ) அந்தி நேரம், இரவுப் பொழுது
இ) இரவு நேரம். சூரியன் மறையும் பொழுது
விடை : (ஆ)
2. கட்டுமரங்களும் படகுகளும் ஏன் கரையை நெருங்கிக் கொண்டிருந்தன?
அ) கடல் அலை ஓய்ந்ததால்
ஆ) அந்தி நேரம் அமைதியாக இருப்பதால்
இ) பகல் மறைந்து இரவு நெருங்குவதால்
விடை : (இ)
3. அலைப் பூங்கரங்கள் என்ற சொற்றொடர் சுட்டுவது எது?
அ) கரங்கள்
ஆ) பூக்கள்
இ) அலைகள்
விடை : (இ)
4. கடலின் ஓரத்தில் மிதந்தது எது?
அ) மணித்தொட்டில்
ஆ) படகு
இ) அலைக் கரங்கள்
விடை : (ஆ)
5. கடலும் திசைகளும் அதிரக் காரணமாக இருந்தது எது?
அ) இடி
ஆ) மின்னல்
இ) இருட்டு
விடை : (அ)
6. கப்பும் கிளையும் விட்டுப் படர்ந்து ஒளிக் கோலங்களை உண்டாக்கியது எது?
அ) இடி
ஆ) மின்னல்
இ) ஜோதி
விடை : (ஆ)
படித்தல்
அந்திநேரம் கடல்
பொன்னியின் செல்வன் (பாகம் 2)
முதல் அத்தியாயம்
பூங்குழலி
அந்தி நேரம் அமைதி பெற்று விளங்கியது. கோடிக்கரையின் ஓரத்தில் கடல் அலை அடங்கி ஓய்ந்திருந்தது. கட்டுமரங்களும், படகுகளும் கரையை நெருங்கிக் கொண்டிருந்தன. கரையில் சிறிது தூரம் வெண்மணல் பரந்திருந்தது. அதற்கு அப்பால் வெகு தூரத்துக்கு வெகு தூரம் காடு படர்ந்திருந்தது. காட்டு மரங்களின் கிளை ஆடவில்லை: இலைகள் அசைய வில்லை. நாலாபக்கமும் நிசப்தம் நிலவியது. மேகத்திரள்கள் சில சூரியனுடைய செங்கதிர்களை மறைக்கப் பார்த்துத் தாங்களும் ஒளி பெற்றுத் திகழ்ந்தன.
கரை ஓரத்தில் கடலில் ஒரு சிறிய படகு மிதந்தது. கடலின் மெல்லிய அலைப் பூங்கரங்கள் அந்தப் படகைக் குழந்தையின் மணித் தொட்டிலை ஆட்டுவதுபோல மெல்ல மெல்ல அசைத்தன.
இரவுமின்னல்
இருள் மேலும் மேலும் கரியதாகிக் கொண்டு வந்தது. இருட்டை விடக் கரியதான இருட்டு எப்படி இருக்க முடியும்? அப்படியும் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. திடீரென்று வானத்தில் ஒரு மின்னல் தோன்றி ஒரு மூலையிலிருந்து மறு மூலைவரை பாய்ந்தது. அதற்குப் பிறகு தோன்றிய இருட்டு இருளைவிடக் கரியதாயிருந்தது.
மின்னலைத் தொடர்ந்து இடி முழக்கம் கேட்டது. கடல் அதிர்ந்தது. திசைகள் அதிர்ந்தன. இன்னொரு மின்னல் அடிவானத்தில் இருளைக் கிழித்துக் கொண்டு புறப்பட்டது. அது மேலும் மேலும் நீண்டு கப்பும் கிளையும் விட்டுப் படர்ந்து பற்பல ஒளிக் கோலங்கள் ஆகாயமெங்கும் போட்டு, வானையும் கடலையும் ஜோதி மயமாகச் செய்துவிட்டு, அடுத்த கணத்தில் அடியோடு மறைந்தது.
விரைந்து படித்தல்
ஒளி ஈடுபாடு
மாலைச் சூரியன் மலைவாயிலில் மறைகிறான். இருள் கவிகிறது. விலங்குகளும் பறவைகளும் இருள் மூடிவிட்டால் ஓய்ந்து ஒடுங்கிவிடும். மனிதன் முயற்சியின் ஒட்டு மொத்த உருவமாகத் திகழ்பவன். அவன் இருளை வெல்வான். இருள் வந்து மூடிவிட்டால் மனிதனின் இயக்கம் நின்று போவதில்லை.
தன் மதியைக் கொண்டு நெருப்பை உருவாக்கக் கற்று கொண்ட மனிதன் விளக்கு ஏற்றி ஒளியையும் உருவாக்க கற்றுக் கொண்டான்.
மாலைநேரத்தில் மங்கையர் நீராடினார்கள். கூந்தலைச் சீவிமுடித்து மலர் சூடிக் கொண்டார்கள். நெற்றியில் திலகம் அணிந்தார்கள்.
வீட்டு வாயிலில் அந்தக் காலத்தில் (இரும்பால் செய்த விளக்கைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்) விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து நெல் மலர் இரண்டையும் கலந்து அவ்விளக்குகளின் முன்பு தூவி வழிபட்டார்கள்.
நாள் தோறும் மகளிர் செய்து வரும் வழிபாடு கார்த்திகை மாதத்தில் முழு நிலவு நாளில் விழாவாக உருவெடுக்கிறது. மழைக்காலம் நின்று பனிக்காலம் தொடங்கும் பருவம். கார்த்திகை.
மார்கழி என்னும் சொற்களிலேயே இந்தப் பொருள் அமைந்திருக்கிறது.
எங்கும் ஒளி நாட்டம், ஒளி காணும் முயற்சிகள், ஒளி ஈடுபாடு, ஒளி வழிபாடு.
பயிற்சி-1
1. எப்போது இருள் சூழ்கிறது ?
(அ) விலங்குகள் பறவைகள் ஓயும் போது
(ஆ) சூரியன் மறையும் போது
(இ) மனிதனின் இயக்கம் நிற்கும் போது
விடை : (ஆ)
2. இருள் கவியும்போது யாருடைய அல்லது எதன் இயக்கம் நிற்பதில்லை?
(அ) மனித குலம்
(ஆ) சூரியன்
(இ) விலங்கு பறவையினம்
விடை : (அ)
3. நெருப்பை மனிதன் எதன் மூலம் உருவாக்கக் கற்றான்?
(அ) வீட்டு விளக்கின் மூலம்
(ஆ) தனது மதி (அறிவு) மூலம்
(இ) மங்கையர் மூலம்
விடை : (ஆ)
4. தற்காலத்தில் கார்த்திகை மாதத்தில் முழுநிலா அன்று கொண்டாடப்படும் விழா எது?
(அ) திருக்கார்த்திகை
(ஆ) தீபாவளி
(இ) பொங்கல்
விடை : (அ)
பயிற்சி - 2
இங்குக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மற்றும் படத்தைக் கொண்டு வருணனை எழுதிப் பழகுங்கள்
பூந்தோட்டம் - அதை ஒட்டி - வட்ட வடிவில் அமைந்த சிமெண்டுப் பாதை - உள் வட்டத்தில் புல் தரை - புல் தரைக்கு நடுவில் - தாமரைப்பூ வடிவு - சிறிய குளம் - குளத்தைச் சுற்றி பிரம்பு நாற்காலிகள் - குளத்தின் மையம் - பளிங்குச் சிலை - குளத்தைச் சுற்றிலும் விளிம்பின் ஓரம் சட்டி விளக்குகள் - கிரேக்கப் பெண் சிலைக்கு எதிரே ஒரு பங்களா - பங்களாவின் மூன்று புறமும் குட்டை மதில் சுவர்கள் - பின் பக்க மதில் சுவர் மிக உயரம் - சிறைச் சுவர் போல அமைப்பு - உயரமான அந்தச் சுவர் அப்பால் தென்னை மரங்கள்.
விடை : மாதிரி வருணனை
சுற்றிலும் அழகு நிறைந்த பெரிய பூந்தோட்டம். அதனை ஒட்டினாற்போல் பெரிய வட்ட வடிவத்தில் அமைந்த சிமெண்டுப் பாதை. அதன் உள் வட்டத்தில் மேடைபோல் அமைந்த புல்தரை. அந்தப் புல்தரைக்கு நடுவில் தாமரைப்பூ வடிவிலே ஒரு சிறிய குளம். குளத்தைச் சுற்றிலும் வண்ண வண்ணப் பிரம்பு நாற்காலிகள் உள்ளன. குளத்தின் மையத்தில், கிரேக்கப் பெண்ணொருத்தி தன் தோளில் சுமந்திருக்கும் பூவாளியைச் சாய்த்துத் தண்ணீர் கொட்டுவது போல அமைந்த பளிங்குச் சிலை நிற்கிறது. அந்தக் குளத்தைச் சுற்றி விளிம்பின் ஓரமாக (கண்ணுக்குத் தெரியாமல்) பொருத்தப்பட்டிருந்த 'சட்டி விளக்குகள்' குளிர்ச்சியான ஒளியை மேல் நோக்கிப் பாய்ச்சுகின்றன. கிரேக்கப் பெண் சிலைக்கு எதிர்முகமாக அமைந்த ஒரு பங்களா. அந்த பங்களாவின் மூன்று புறமும் குட்டையான அழகிய மதில் சுவர்கள் இருக்க. அதன் பின் பக்க மதில் சுவர் மட்டும் உயரமாக - சிறைச் சுவர்போல் அமைந்திருக்கிறது. உயரமான அந்தச் சுவருக்கு அப்பால் தென்னை மரங்கள் காணப்படுகின்றன.
இலக்கணம்
சுட்டு எழுத்துகள்
ஒரு பொருளைச் சுட்டிக் காட்ட உதவும் எழுத்துகளைச் சுட்டு எழுத்துகள் என்பர்.
எடுத்துக்காட்டு : அவன்
இவன்
உவன்
மேலே பார்த்த எடுத்துக்காட்டுகளில் உள்ள அ, இ, உ என்னும் எழுத்துகள் சுட்டு எழுத்துகள் ஆகும்.
தற்காலத்தில் தமிழ் நாட்டில் உ என்னும் சுட்டு எழுத்தைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் இலங்கைத் தமிழர்கள் தங்கள் பேச்சில் உ என்னும் சுட்டு எழுத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
அண்மைச்சுட்டு
அருகில் இருக்கும் பொருளைச் சுட்டிக்காட்டுவது அண்மைச்சுட்டு எனப்படும்.
எடுத்துக்காட்டு :
இவன், இந்தவீடு, இப்பையன்
சேய்மைச் சுட்டு
தொலைவில் இருக்கும் பொருளைச் சுட்டிக்காட்டுவது சேய்மைச் சுட்டு எனப்படும்.
எடுத்துக்காட்டு:
அவன், அந்தவீடு, அப்பையன்
வினா எழுத்துகள்
வினாப் பொருளைத் தரும் எழுத்துகள் வினா எழுத்துகள் ஆகும் எ, யா, ஆ, ஓ, ஏ என்னும் ஐந்து எழுத்துகளும் வினா எழுத்துகள் ஆகும்.
எடுத்துக்காட்டு
எது உன் வீடு? - எ
யார் உன் தந்தையா? - யா
அறிஞனா நீ? - ஆ
யானோ அரசன் ? - ஓ
ஏன் இங்கு வந்தாய் ? - ஏ
இவன்தானே செய்தான்? - ஏ
இந்த எடுத்துக்காட்டுகளில் உள்ள எ, யா என்னும் இரு வினா எழுத்துகளும் சொல்லின் முதலில் மட்டும் வரும். ஆ, ஓ என்னும் இரு வினா எழுத்துகளும் சொல்லின் இறுதியில் மட்டும் வரும். ஏ என்னும் வினா எழுத்து, சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும்.
பயிற்சி
1. பின்வரும் பகுதியில் உள்ள சுட்டுச் சொற்களைச் சுட்டுக.
அதோ, அங்கே பாருங்கள், மீனாட்சியம்மன் கோபுரம் தெரிகிறது. இந்த ஊரின் நடுவில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கே வேறு சில கோபுரங்களும் தெரிகின்றன. இக்கோயிலின் நான்கு வாயிலிலும் நான்கு கோபுரங்கள் உண்டு. இந்தப் பகுதி மிகவும் நெரிசலான பகுதி. இந்தக் கோயிலைப் பார்ப்பதற்காக இங்கு நிறைய மக்கள் வருகின்றனர்.
இவர்களில் பலர் வெளியூரைச் சேர்ந்தவர்கள்
விடை: 1. அதோ 2. அங்கே
3. இந்த ஊர் 4. இக்கோயில்
5. இங்கே 6. இந்தப்பகுதி
7. இங்கு 8. இவர்கள்
9. இந்தக் கோயில்
2. பின்வரும் பகுதியில் காணப்பெறும் வினாச் சொற்களைச் சுட்டுக.
கன்னியாகுமரி எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அது இந்தியாவின் தென் எல்லையில் இருக்கிறது. அங்கே எத்தனை கடல்கள் சங்கமம் ஆகின்றன? மூன்று கடல்கள் கலக்கின்றன. அங்கே உள்ள திருவள்ளுவர் சிலை எவ்வளவு உயரம் என்று தெரியுமா? அது 133 அடி உயரம் கொண்டது. இவ்வளவு உயரமான சிலையை எப்படி நிறுவினார்கள் என்று அங்கே வருபவர்கள் அண்ணாந்து பார்ப்பதை நாம் காண முடியும். கன்னியாகுமரியில் கோயில் கொண்டுள்ள இறைவியின் பெயர் யாது? தேவி பகவதி என்பது தான் அந்த இறைவியின் திருப்பெயர் அந்தப் பகவதி அம்மன் சிலை ஏன் கடலைப் பார்த்தபடி அமைக்கப்பட்டிருக்கிறது தெரியுமா? தென் எல்லையைக் கடல் அழித்துவிடுமோ? என்ற எண்ணத்துடன் அதைக் காப்பதற்காகவே பகவதி அம்மன் சிலை கடலைப் பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது.
விடை :
1. எங்கே? 2. தெரியுமா?
3. எத்தனை? 4. எப்படி?
5. யாது? 6. ஏன் ?
7. அழித்துவிடுமோ?
3. பின்வரும் சொற்களில் உள்ள அண்மைச்சுட்டுகளையும் சேய்மைச்சுட்டுகளையும் சுட்டுக.
அண்மைச்சுட்டு |
சேய்மைச்சுட்டு |
|
|
இவன், அங்கே, இப்பெண், இச்செடி, அந்த நாய், அது, அவர்கள், இக்கட்டடம்.
விடை:
அண்மைச் சுட்டு
இவன்
இப்பெண்
இச்செடி
இக்கட்டடம்
சேய்மைச் சுட்டு
அங்கே
அந்த நாய்
அது
அவர்கள்