13

சமூக - பண்பாட்டு அமைவுகளில் ஒதுக்கப்பட்டனவாக விளிம்புகள் ( edge ) இருக்கின்றன என்றும் , எப்போதும் விளிம்புகளுக்கும் மையங்களுக்கும் இடையே மோதல்கள் இருக்கின்றன என்றும் , விளிம்புகள் மையங்களை நோக்கி நகர்கின்றன என்றும் பின்னை நவீனத்துவம் கூறுகின்றது .

பின்னை நவீனத்துவக் கொள்கையில் இதுவன்றியும் பின்வரும் கருத்தியல்களும் அடிப்படைகளாக இருக்கின்றன .

அவற்றுள் சில :

• நவீனத்துவம் , கலை வடிவங்களைப் புதிய வடிவங்களாகக் காண விரும்புகிறது ; பின்னை நவீனத்துவம் , எதிர்நிலை வடிவமாகக் ( anti - form ) காணவிரும்புகிறது .

• உயர்வு , உயர்ந்தோர் வழக்கு , உயர்தரம் என்பவற்றையும் , பலராலும் மரபு வழியாக அங்கீகரிக்கப்பட்ட ‘ புனிதம் ’ என்பதனையும் இது மறுக்கிறது .

• பெரும் நீரோட்டம் , பெருநெறி , பெருங்கதையாடல் என்பதற்கு மறுப்புத் தெரிவிக்கிறது .

அதேபோது சிறு நெறிகளுக்கு முக்கியத்துவம் தருகிறது .

• நடைமுறை நிகழ்வுகளை - அவை , கலகங்களாக , மோதல்களாக இருந்தாலும் - இது மொழி விளையாட்டுகளாகவே காண்கிறது .

மாற்றுவது , தீர்ப்பது இதன் நோக்கமல்ல .

• ஒற்றைப் போக்கு , ஒற்றைத் தன்மை என்பதற்கு மாறாகப் பன்முகத்தன்மையை இது முன்வைக்கிறது .

இவ்வாறு பின்னை நவீனத்துவம் , மொத்தப்படுத்துதல் , முழுமைப்படுத்துதல் , புனிதப்படுத்துதல் என்பவற்றிற்கு மாறாகக் கருத்தியல்களை முன்மொழிந்தாலும் , சுயமுரண்பாடுகள் கொண்டதாகவும் வேறுபட்ட பல கருத்துகளைக் கொண்டதாகவும் இது விளங்குகிறது .

மேலும் , ‘ கொள்கைக்கு எதிராகவே ’ ( Resistance to Theory ) இருப்பதாகவும் இது தன்னைச் சொல்லிக் கொள்கிறது .

இதனுடைய இன்னும் சில முக்கியமான கருத்தமைவுகளைச் சற்று விரிவாக இனிக் காணலாம் .

2.4 மையமும் விளிம்பும்

ஒரு சமூக அமைப்பில் , பார்ப்பனர் அல்லது உயர்சாதி வகுப்பினர் மையம் என்ற நிலையில் நடுவே இருக்கிறார்கள் என்றால்

இதன் காரணமாகப் பெண்ணியம் , தலித்தியம் முதலியவற்றில் இது அக்கறை காட்டுகிறது .

“ விளிம்பு நிலை வாழ்க ” ( “ Hail to Edge ” - Linda Hutcheon ) என்று கூறினாலும் தீர்வுகளுக்கோ , சமூக மாற்றங்களுக்கோ இது வழிமுறை சொல்லுவதில்லை .

மேலும் , விளிம்பு நிலையிலிருப்போரைக் கூடத் தனித்தனிக் குழுக்களாகப் பார்க்கவே இது விரும்புகிறது .

குழுக்களிடையே செயலளவிலான தொடர்புகளை இது கூறவில்லை .

2.4.1 புனிதம்

பின்னை நவீனத்துவத்தின் ஒரு முக்கியமான பங்களிப்பு , வழிவழியாகப் ‘ புனிதம் ’ என்று வழங்கப்படுபவற்றை மறுத்தது ஆகும் .

காட்டாக , திருமணம் - ஒருத்திக்கு ஒருவன் , ஒருவனுக்கு ஒருத்தி எனும் கற்புநிலை , குடும்பம் முதலிய அமைப்புகளும் அவை பற்றிய கருத்தியல்களும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன .

அவற்றை , இது கேள்வி கேட்டு மறுக்கிறது .

அதுபோல் உயர்வு அல்லது தரம் என்று இலக்கியத்தை அடையாளம் காட்டுவதையும் அல்லது பாராட்டுவதையும் இது மறுக்கிறது .

அப்படியானால் , வணிகரீதியாக எழுதப்பெறும் மர்ம நாவல்கள் உள்ளிட்ட ஜனரஞ்சக ( Mass or Popular literature ) எழுத்துகளையும் பின்னை நவீனத்துவம் ஏற்றுக் கொள்கிறது என்று பொருள் .

ஆனால் , நடைமுறையில் தமிழில் பின்னை நவீனத்துவவாதிகள் இதனை ஏற்றுக் கொள்ளுவதில்லை .

2.4.2 பெருங்கதையாடல்

பின்னை நவீனத்துவ வாதிகளால் அதிகமாகப் பேசப்பெறும் ஒன்று கதையாடல் ( Narrative ) ஆகும் .

நடைமுறை நிகழ்ச்சிகளின் மீது ஒரு தொடர்ச்சியையும் அர்த்தத்தையும் திணிக்கின்ற ஒரு செயல் வடிவத்தின் வடிவமாகவே இது கொள்ளப்படுகிறது என்று விளக்கம் அளிப்பார் ஹேடன் ஒயிட் என்பார் .

இதனைப் பின்னை நவீனத்துவம் இரண்டு நிலைகளாகப் பார்க்கிறது .

ஒன்று - மிகப் பலரால் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு வருகின்ற , பலவற்றிற்கு மையமாக இருக்கின்ற , பெருங்கதையாடல் ( grand or great narrative ) என்பது .

இது , சங்க கால வரலாறு , வீரயுகம் என்பது போன்ற வரலாறாக இருக்கலாம் ; தாய்மை என்பது போன்ற கருத்துநிலை பற்றிய விளக்கமாக இருக்கலாம் .

இவற்றைப் பின்னை நவீனத்துவம் மறுக்கிறது ; மாறாகத் தனித்தனி வட்டாரங்கள் , தனித்தனிக் குழுக்கள் , குடும்பமோ பிற கட்டுப்பாடுகளோ அற்ற உறவுகள் முதலியவற்றைச் சிறுகதையாடல் ( Little narrative ) என்று கொண்டு , அவற்றைப் பின்னை நவீனத்துவம் வரவேற்றுப் போற்றுகிறது .

2.5 தொகுப்புரை

அண்மைக் காலத்திய ஒரு திறனாய்வு மற்றும் பண்பாட்டுச் சிந்தனை முறை , பின்னை நவீனத்துவமாகும் .

இது , நவீனத்துவத்துக்குப் பிறகு வந்தது என்றாலும் , நவீனத்துவத்தின் போதாமையில் தோன்றியது என்பது மட்டுமல்லாமல் , நவீனத்துவத்திற்கு மறுப்பாக இது தோன்றியது என்பதாக , இதனுடைய கொள்கையைப் பற்றிப் பேசுகிற லியோதா , மோதிலார் முதலிய பலர் கூறுகின்றனர் .

நவீனத்துவம் , புதுமை , புதிய கலை , புதிய வடிவம் என்று தன்னை முன்னிறுத்துகிறது .

அதுபோல உயர்வு , தரம் , தாராளத்துவம் என்பன பற்றிப் பேசுகிறது .

தமிழில் நவீனத்துவத்தின் முக்கியமான பிரதிநிதிகளில் ஒருவராக மதிக்கப்படுகிறவர் புதுமைப்பித்தன் ஆவார் .

சிறுகதை உத்திகளில் பல சோதனைகள் செய்தவர் இவர் .

தமிழில் ஒருசார் நவீனத்துவ விமரிசகர்கள் தமிழ் மரபுகளையும் தொன்மை இலக்கியங்களின் பெரும் சாதனைகளையும் மறுப்பர் .

இருப்பினும் , நவீனத்துவம் பல போக்குகள் கொண்டது .

தற்காலத் தமிழ் உலகில் பல நல்ல இலக்கியங்களை அது உருவாக்கித் தந்துள்ளது .

புதுக்கவிதை எனும் இலக்கிய வகை நவீனத்துவத்தின் குழந்தையாகக் கருதப்படுகிறது .

பின்னை நவீனத்துவம் என்பது பண்பாட்டு முதலாளித்துவம் , நுகர்வுக் கலாச்சாரம் ஆகியவற்றின் ஒரு விளைவாகும் .

மொத்தப்படுத்துதல் , முழுமை , மையம் , புனிதம் , தரம் முதலிய கருத்து நிலைகளை இது தீவிரமாக மறுக்கிறது .

அவற்றிற்குப் பதிலாக , கூறுபடுத்துதல் , கூறு அல்லது பகுதி , விளிம்பு , எதிலும் புனிதம் , தரம் என்று பார்க்கக் கூடாது என்ற மனநிலை முதலியவற்றை முன்னிறுத்துகிறது .

பெருநெறி மரபுகளை மறுத்து சிறு நெறிகளை , தொடர்பற்ற தன்மைகளை இது போற்றுகிறது .

1990-களில் இது தமிழில் மிகப் பிரபலமாக - முக்கியமாக - இலக்கியச் சிற்றிதழ்களால் பேசப்பட்டது . இன்று , மீண்டும் திறனாய்வு புதிய தடங்களை நோக்கி நகரத் தயாராகவுள்ளது .