14

3.0 பாட முன்னுரை

இலக்கியவுலகில் மிகவும் செல்வாக்கு வாய்ந்த திறனாய்வுமுறை , மார்க்சியத் திறனாய்வு ஆகும் .

மார்க்சியம் எனும் சமூகவியல் தத்துவத்தை அடித்தளமாகவும் வழிகாட்டுதலாகவும் கொண்டது மார்க்சிய அணுகுமுறையாகும் .

மார்க்சியம் என்பது அரசியல் , பொருளாதாரம் , பண்பாடு ஆகிய சமூக தளங்களில் மனிதகுல விடுதலையை முன்னிறுத்துவது ஆகும் .

இது , அறிவியல் பூர்வமானது ; தருக்கம் சார்ந்தது ; இயங்கியல் தன்மை கொண்டது .

மார்க்சியத்தின் மூல ஊற்றுக்கண் கார்ல்மார்க்ஸ் ஆவார் ; மற்றும் அவருடன் சேர்ந்து சிந்தித்த , சேர்ந்து செயல்பட்ட ஏங்கல்சும் , தொடர்ந்துவந்த லெனினும் மாசேதுங்கும் மார்க்சிய சித்தாந்தத்தின் முன்னணிச் சிந்தனையாளர்கள் ஆவர் .

மேலும் , இந்தத் தத்துவத்தை இவர்களும் , தொடர்ந்து ஜார்ஜ் லூகாக்ஸ் , கிறிஸ்டோபர் காட்வெல் , மற்றும் இக்காலத்து டெர்ரி ஈகிள்டன் , ஃபிரெடெரிக் ஜேம்சன் முதலியோரும் இலக்கியத் திறனாய்வுக்குரிய ஒரு நெறிமுறையாக விளக்கிக் காட்டியுள்ளனர் இவர்களின் எழுத்துக்களையும் சிந்தனைகளையும் கொண்டு அமைவது மார்க்சியத் திறனாய்வு .

3.1 மார்க்சிய அணுகுமுறை

மார்க்சிய அணுகுமுறைக்கு , மார்க்சிய சித்தாந்தமே அடிப்படை .

மார்க்சியம் , ஓர் அரசியல் பொருளாதார சித்தாந்தமாக விளங்கினாலும் , அது சமூகவியல் அடிப்படைகளை விளக்குகிற ஒரு சித்தாந்தமாகலின் , அழகியல் , கலை , இலக்கியம் , ஆகியவற்றையும் அது விளக்குகிறது ; ஏனெனில் , இவை சமூகத்தின் பண்புகளாகவும் பகுதிகளாகவும் இருப்பவை .

3.1.1 வரையறையும் விளக்கமும்

மார்க்சியத் திறனாய்வு , சமூகவியல் திறனாய்வோடும் வரலாற்றியல் திறனாய்வோடும் மிக நெருக்கமாக உறவு கொண்டது .

இலக்கியம் என்பது , ஒரு குறிப்பிட்ட சமூகத்திலிருந்து தோன்றுகிறது .

அந்தச் சமூகத்தை நோக்கியே அது அமைகிறது .

அதுபோல , சமூகம் என்பது காலம் , இடம் என்ற வெளிகளில் அவற்றை மையமாகக் கொண்டு இயங்குவது ; எனவே வரலாற்றியல் தளத்தில் இயங்குவது .

இலக்கியம் இத்தகைய சமூக- வரலாற்றுத்தளத்தில் தோன்றி , அதன் பண்புகளைக் கொண்டது ஆகலின் , இலக்கிய ஆராய்ச்சிக்குச் சமூக - வரலாற்றுப் பின்புலங்களும் அவற்றின் செய்திகளும் மிகவும் முக்கியமானவையாக அமைகின்றன .

மார்க்சியத் திறனாய்வு இங்கிருந்துதான் தொடங்குகிறது என்று சொல்ல வேண்டும் .

அதாவது , சமூக வரலாற்றுத் தளத்திலிருந்துதான் மார்க்சியத் திறனாய்வு தொடங்குகிறது .

சமூகம் மாறக்கூடியது ; வளர்ச்சி பெறக்கூடியது .

அது போன்று இலக்கியமும் வளர்நிலைப் பண்புகளைக் கொண்டது .

அத்தகைய பண்புகளைத் தற்சார்பு இல்லாத முறையில் , காரணகாரியத் தொடர்புகளுடன் மார்க்சியத் திறனாய்வு விளக்குகிறது .

இலக்கியம் , மக்களுடைய வாழ்க்கை நிலைகளிலிருந்து தோன்றுகிற உணர்வுநிலைகளின் வெளிப்பாடு .

அதேபோது அந்த உணர்வுநிலைகளை அது செழுமைப்படுத்துகிறது .

மக்களிடமிருந்து தோன்றுகிற இலக்கியம் , மக்களின் வாழ்வோடு நெருக்கம் கொண்டு இயங்குகிறது .

மார்க்சியத் திறனாய்வு , இலக்கியத்தை மக்களோடு நெருங்கியிருக்கச் செய்கிறது .

மனிதகுல மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இலக்கியம் உந்துதலாக இருப்பதை அது இனங் காட்டுகிறது .

மார்க்சியத் திறனாய்வின் நோக்கம் , இலக்கியத்தை மனிதனோடு நெருங்கியிருக்கச் செய்வதும் , மனிதனை இலக்கியத்தோடு நெருங்கியிருக்கச் செய்வதும் ஆகும் .

3.1.2 மார்க்சியத் திறனாய்வின் அடிப்படைகள்

மார்க்சும் ஏங்கல்சும் திறனாய்வுநூல்கள் எழுதியவர்கள் அல்லர் ; அதுபோல் , இலக்கியக் கொள்கைகளைப் பரிமாறிக் கொண்டவர்கள் அல்லர் .

ஆனால் , தம்முடைய அரசியல் - பொருளாதார நூல்களிடையே இலக்கியங்கள் பற்றியும் பேசுகின்றனர் .

இருவரும் ஜெர்மனியப் பேரறிஞர்கதே ( Goethe ) என்பவர் பற்றிப் பேசுகின்றனர் .

அதுபோல் மின்னா கவுட்ஸ்கி , மார்கரெட் ஹார்கன்ஸ் , லாசல்லே ஆகியோரின் இலக்கியப் படைப்புகளைப் பற்றிப் பேசுகின்றனர் .

ஷேக்ஸ்பியர் மற்றும் பால்ஜாக் ஆகிய இலக்கிய மேதைகளை உதாரணங்களாக்கிப் பேசுகின்றனர் .

லியோ டால்ஸ்டாயின் நாவல்களைப் பற்றி லெனின் பாராட்டிப் பேசுகிறார் .

இலக்கியம் பற்றிய கருதுகோள்களை இதன் மூலம் இவர்கள் வெளிப்படுத்துகின்றனர் .

குறைகள் கண்டவிடத்தும் கூட , அவற்றைப் பெரிதுபடுத்தாமல் , குறைகளைக் களைந்து மேலும் சிறந்த முறையில் எழுதுவதற்கு யோசனைகள் சொல்லும் முறை , மார்க்சிடமும் ஏங்கல்சிடமும் காணப்படுகிறது .

அதுபோல் , லெனினும் .

லியோ டால்ஸ்டாய் , மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளாமல் கிறித்துவ இறையாண்மையே ஏற்றுக் கொண்டவரானாலும் , அவருடைய நாவல்களில் அன்றைய சமூகமும் , அதன் மாற்றங்களும் பாராட்சமில்லாமல் சித்திரிக்கப்படுகின்றன என்று சொல்லிப் பாராட்டுகின்றார் .

மார்க்சியத் திறனாய்வின் நசம் கொண்ட வழிகாட்டுதலை இந்த உதாரணங்கள் உணர்த்துகின்றன .

மார்க்சியத் திறனாய்வின் அடிப்படை , மார்க்சியமே என்பதைச் சொல்லிக் காட்டவேண்டியதில்லை .

அரசியல் - பொருளாதாரக் கோட்பாடுகளன்றியும் இந்த மார்க்சியத்திற்கு அடிப்படையாகி இருப்பவை , இயங்கியல் வாதம் ( Dialectical Materialism ) மற்றும் பொருள்முதல் வாதம் ( Historical Materialism ) ஆகியவை .

வரலாற்றியல் வாதம் மற்றும் இயங்கியல் பொருள்முதல் வாதம் ( Historical Materialism and Dialectical Materialism ) இவற்றிற்குட்பட்டவையாகும் .

மேலும் , எதார்த்தம் , உருவம் உள்ளடக்கம் பற்றிய கருத்துநிலை , எதிரொலிப்பு , தீர்வு முதலியவை பற்றிய கருத்து நிலைகள் மார்க்சிய அழகியலுக்கு அடிப்படை நெறிமுறைகளாக உள்ளன .

3.1.3 இலக்கியம் பற்றிய கருதுகோள்

ஒவ்வொரு திறனாய்வு முறைக்கும் , இலக்கியம் பற்றிய கருதுகோள் என்பது மிகவும் அவசியம் .

ஆயின் இது , அவ்வத் தேவைகளுக்கு ஏற்றவாறு வெவ்றோக இருக்கக் கூடும் .

மார்க்சியத் திறனாய்வைப் பொறுத்த அளவில் இலக்கியம் பற்றிய அதனுடைய கருதுகோள் அல்லது வரையறை ; இலக்கியம் என்பது ஒரு கலைவடிம் ; சமுதாய அமைப்பில் அதன் மேல் கட்டுமானத்தில் ( Super - Structure ) உள்ள ஓர் உணர்வு நிலை .

சமுதாய அடிக்கட்டுமானமாகிய ( Basic Structure ) பொருளாதார உற்பத்தியுறவுகளை நேரடியாகவோ , மறைமுகமாகவோ சார்ந்து இருப்பது , அது. இதுவே , இலக்கியத்தைப் பற்றிய அடிப்படையான வரையறை என மார்க்சியம் கருதுகிறது .

மேல்கட்டுமானத்தைச் சேர்ந்த கலை , இலக்கியம் , அரசியல் தத்துவம் , சாதி , சமயம் முதலியவை அடிக்கட்டுமானத்தோடு ஒன்றுக் கொன்று தொடர்பும் தாக்கமும் கொண்டவை . அதாவது இதனுடைய பொருண்மை என்னவென்றால் - இலக்கியம் , மக்களிடமிருந்து தோன்றுகிறது ; மக்களை நோக்கியே செல்கிறது ; மக்களின் உணர்வுகளையும் வாழ்நிலைகளையும் ஏதேனும் ஒருவகையில் பாதிக்கிறது .