15

எனவே இலக்கியத் திறனாய்வு , இலக்கியத்தின் இந்தப் பண்பினையும் பொருண்மையினையும் பாதுகாக்கிறது ; வளர்க்கிறது .

இதுவே மார்க்சியத் திறனாய்வின் நோக்கமும் ஆகும் .

இலக்கியம் சுயம்புவானது அல்ல ; சுயாதிக்கம் உடையது அல்ல ; தன்னளவில் முற்ற முழுமையுடையதும் அல்ல .

சமுதாய அடிக் கட்டுமானத்தோடும் , ஏனைய அமைப்புக் கூறுகளாகிய அரசியல் , தத்துவம் முதலியவற்றோடும் சேர்ந்து இருப்பது ; அவற்றின் அழகியல் வெளிப்பாடாக இருப்பது .

எனவே திறனாய்வு , இலக்கியத்தை இத்தகையதொரு தளத்திலிருந்து காணவேண்டும் என்று மார்க்சியத் திறனாய்வு கூறுகிறது .

எனவே , கலை , கலைக்காகவே என்பதையும் , கலை , தனிமனிதன் சம்பந்தப்பட்டது என்பதையும் , ஒரு சில உயர்ந்தோருக்கும் மேதைகளுக்கும் மட்டுமே உரியது என்பதையும் மறுத்து , கலையை மக்களுக்குரியதாகச் சொல்லுகிறது .

எனவே மார்க்சியத் திறனாய்வாளனுக்குச் சமூகவுணர்வும் , பொறுப்பும் உண்டு என்பது வற்புறுத்தப்படுகிறது .

3.2 மார்க்சியக் கொள்கையும் இலக்கியமும்

இலக்கியத்தைச் சமூகத்தின் வரலாறாகப் பார்க்கிறது மார்க்க்சியத்திறனாய்வு .

இதன்வழிச் சமூக அமைப்பின் வளர்நிலைகளைக் கணிக்கிறது .

வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்ற கோட்பாட்டை அது முன்வைக்கிறது .

இலக்கியத்தை வர்க்கங்களின் மோதல் அடிப்படையில் மார்க்சியத்திறனாய்வு மதிப்பிடுகிறது .

வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தையும் , வர்க்கப் போராட்டத்தையும் மார்க்க்சியத்திறனாய்வு இலக்கியத்தில் காண்கிறது .

3.2.1 வரலாற்றியல் பொருள் முதல்வாதம்

கருத்து ( idea ) அல்லது சிந்தனையே முதன்மையானது எனக்கூறி , உலகத்தை அதன்வழியாகக் காண்பது கருத்து முதல்வாதம் ( Idealism ) , அவ்வாறன்றிப் பொருளே ( matter ) முதன்மையானது எனக் கொண்டு , உலகை அதன்வழிப் பார்ப்பதும் விளக்குவதும் பொருள் முதல்வாதம் ( materialism ) ஆகும் .

வரலாற்றியல் பொருள்வாதம் என்பது , பொருளின் இயங்குநிலை எவ்வாறு மனிதகுல வரலாற்றை விளக்குவதற்கு அடிப்படையாக இருக்கிறது என்று கூறுகிறது .

மனித சமுதாயத்தை ஒற்றைப் பரிமாணம்

கொண்டதாகவும் , தேக்க நிலை கொண்டதாகவும் பார்க்கக்கூடாது என்று சொல்லி , அதனை எப்போதும் தன்னுள்ளே இயங்குகின்ற ஆற்றலுடையதாகவும் மாற்றமும் வளர்ச்சியும் கொண்டதாகவும் பார்க்கவேண்டும் என்று வரலாற்றியல் பொருள்வாதம் வலியுறுத்துகிறது .

சமூகவியலுக்கு இதனுடைய முக்கியமான பங்களிப்பு , சமுதாய வரலாற்றை , சமுதாய - பொருளாதார வடிவாக்கங்களின் ( socio - economic formations ) படிநிலை வளர்ச்சிகளாக விளக்கியிருப்பது ஆகும் .

அந்த வடிவாக்கங்கள் :

புராதன கூட்டுக்குழு அமைப்பு ( Primitive Communism )

அடிமையுடைமை ( Slave owning )

நிலவுடைமை ( Feudalism )

முதலாளித்துவம் ( Capitalism )

பொதுவுடைமை ( Communism )

பொதுவுடைமை வளர்ச்சிபெறுவதற்கு முன்னால் அதன் முன்னோடியாக இருப்பது சமதர்மம் அல்லது சோஷலிசம் ஆகும் .

அதுபோல் , முதலாளித்துவம் என்பது பொதுவான சொல்லாக இருந்தாலும் , குழும முதலாளித்துவம் ( Corporate capitalism ) , பன்னாட்டு முதலாளித்துவம் ( Multi national capitalism ) , ஏகபோக முதலாளித்துவம் ( Monopoly capitalism ) என்று பல நிலைகள் அதிலே உண்டு .

இத்தகைய சமூக அமைப்புக்களுக்கு ஏற்ப , அவ்வக் காலத்திய சமூகவுணர்வு நிலைகளும் , அழகியல் , அரசியல் , கலை இலக்கியம் முதலியனவும் இருக்கும் என்று மார்க்சியம் கூறுகிறது .

தமிழில் , சங்க இலக்கியம் முதல் தொடர்ந்து வரும் இலக்கியங்களில் , மேற்கூறிய சமூக அமைப்புக்களும் அவை சார்ந்த உணர்வு நிலைகளும் எவ்வாறு காணப்படுகின்றன என்று பார்ப்பதற்கு ஏராளமான வாய்ப்புக்கள் உண்டு .

3.2.2 வர்க்கமும் இலக்கியமும்

மார்க்சியம் , சமூகத்தை வர்க்க சமுதாயமாகக் காணுகிறது .

வரலாற்றியல் பொருள் முதல் வாதத்தின் ஒருபகுதியாக அமைந்துள்ள வர்க்கக் கண்ணோட்டம் இலக்கியத்தின் செய்நெறிகளையும் இலக்கியம் கூறும் செய்திகளையும் கண்டறிய உதவுகிறது .

வர்க்கம் ( class ) என்பது என்ன ?

சமுதாயத்தின் வளங்களையும் நலன்களையும் , பெறுவதிலும் , பங்கிடுவதிலும் , துய்ப்பதிலும் உள்ள பிரிவினையைக் குறிப்பது இது. பொருளாலே உற்பத்தியுறவுகளின் அடிப்படையில் பிறரோடு வேறுபட்டும் , தமக்குள் பொதுத்தன்மை பெற்றும் இருக்கிற மக்கள் பிரிவினைகளே வர்க்கங்கள் ஆகும் .

ஏழை - பணக்காரன் என்ற பிரிவினை அல்ல , இது .

உற்பத்திகளையும் உற்பத்திசாதனங்களையும் உடைமையாகக் கொண்ட முதலாளி - அதிலே உழைக்கிற , உழைப்பைக் கூலியாகப் பெறுகிற தொழிலாளி என்ற பிரிவினையே , இது. உற்பத்தியில் முழுதுமாகத் தன் உழைப்பை நல்கிடும் தொழிலாளி , அதன் பலனையும் நலனையும் பெறமுடியாத நிலையில் , முதலாளியோடு முரண்படுகிறான் ; குழுவாக இணைகிறான் , மோதல் நடைபெறுகிறது .

இதனை வர்க்கப் போராட்டம் என்கிறோம் .

சமூகத்தில் நடைபெறும் இத்தகைய நிலைகளை இலக்கியத்தில் காணமுடியும் .

உதாரணமாக , ரகுநாதனின் ‘ பஞ்சும்பசியும் ’ என்ற நாவலில் இதனைக் காணலாம் .

விக்கிரமசிங்கபுரம் நூற்பாலையில் பணிபுரியும் தொழிலாளிகள் , தங்களுடைய வேலை உத்திரவாதம் , கூலி நிர்ணயம் முதலியவற்றுக்காக , ஒன்றிணைந்து , ஊர்வலம் , வேலை நிறுத்தம் முதலிய வழிமுறைகள் கொண்டு முதலாளியோடு போராடுகிறார்கள் .

இவ்வாறு சித்திரிக்கும் இந்த நாவல் , தொழிலாளிகள் வர்க்க உணர்வு பெற்று இணைந்து நிற்பதைக் காட்டுகிறது .

ராஜம்கிருஷ்ணனின் ‘ கரிப்புமணிகள் ’ , ஸ்ரீதர கணேசனின் ‘ உப்பு வயல் ’ ஆகிய நாவல்களில் தூத்துக்குடி வட்டார உப்பளங்களில் உழைக்கும் உப்பளத் தொழிலாளிகள் தங்களுடைய முதலாளிகளுக்கு எதிராக எழுச்சி பெற்று நிற்பது இடம் பெறுகிறது .

‘ நாங்கள் சேற்றில் கால்வைக்காவிட்டால் , நீங்கள் சோற்றில் கைவைக்க முடியாது , - என்பது போன்ற புதுக்கவிதைகளிலும் இத்தகைய குரல் ஒலிப்பதைக் கேட்கலாம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1 .

மார்க்சியத் திறனாய்வு எங்கிருந்து தொடங்குகிறது ?

விடை

2 .

மார்க்சியத் திறனாய்வின் நோக்கம் என்ன ? விடை