16

3 .

மார்க்சியத் திறனாய்வு , இலக்கியம் பற்றிய கருதுகோளை அல்லது வரையறையை எவ்வாறு கூறுகிறது ?

விடை

4 .

மார்க்சியம் , சமுதாயத்தை எவ்வகையான சமுதாயமாகக் காணுகிறது ?

விடை

5 .

வர்க்கம் என்பது என்ன ?

விடை

3.3 அடிப்படைக் கூறுகள் - 1

மார்க்சிய இலக்கியக் கொள்கையில் உள்ளடக்கத்திற்கேற்ற உருவம் என்பது அடிப்படையான கூறாக இருக்கிறது .

அதுபோல இலக்கியத்தை மதிப்பிட எதார்த்த இயல்பை அடிப்படையாகக் கொள்கிறது .

இவ்விரண்டு அடிப்படைக் கூறுகளும் படைப்பைச் சார்ந்தவை .

3.3.1 உருவமும் உள்ளடக்கமும்

பொருள்கள் தமக்குள் உறவுபெற்றவை .

அவை , எதிர்முறையான சக்திகளின் உள்ளார்ந்தனவும் புறமார்ந்தனவுமான மோதல்கள் கொண்டவை .

மோதல்கள் - இணைவுகள் என்ற தன்மை காரணமாகப் பொருள்கள் இயங்கு சக்தி கொண்டிருக்கின்றன .

இவ்வாறு மார்க்சிய இயங்கியல் சொல்லுகிறது .

காரணகாரிய விதிமுறைகளுக்குட்பட்ட இந்த இயங்குநிலை , பொருள்களின் பண்புநிலை ( quality ) மற்றும் அளவுநிலை ( quantity ) மாற்றங்களுக்குக் காரணமாகின்றது .

பண்புநிலையில் ஏற்படுகிற மாற்றம் அளவுநிலை மாற்றத்திற்கும் , அளவு நிலை மாற்றம் , பண்புநிலை மாற்றத்திற்கும் இட்டுச் செல்லுகிறது .

இரண்டும் இவ்வாறு தமக்குள் சார்ந்து செயலாற்றலுடன் இருக்கின்றன .

அளவுநிலை என்பது உருவத்தையும் , பண்பு நிலை என்பது உள்ளடக்கத்தையும் குறிக்கின்றது .

உருவம் - உள்ளடக்கம் ( form and content ) என்பவற்றுள் , உள்ளடக்கம் முதன்மையானது , ஆனால் , உருவத்தின் முக்கியத்துவம் குறைந்தது அல்ல .

உள்ளடக்கத்தின் பண்புக்கும் தேவைக்கும் மாற்றத்துக்கும் ஏற்ப , உருவம் அமைகின்றது ; அதேபோது உருவம் உள்ளடக்கத்தைத் தன்னுடைய செல்வாக்கிற்கு உட்படுத்தி அதனுடைய வளர்ச்சியை முன்கொண்டு செல்லக்கூடிய ஆற்றல் படைத்தது .

மார்க்சிய சித்தாந்தத்தில் உருவம் - உள்ளடக்கம் பற்றிய கருத்துநிலை முக்கியமான ஒன்றாகும் .

நேர்த்தி , உத்தி முதலியவற்றிற்கு உட்பட்ட உருவத்தை மார்க்சியம் குறைத்து மதிப்பிடாமல் போற்றுகிறது .

லெனின் சொல்லுவார் : உருவத்துக்கும் உள்ளடக்கம் போலவே , சார்புடைத் தனித்துவம் ( relative independence ) உண்டு .

உள்ளடக்கத்தின் வீச்சுக்கு அது பின்தங்கிப் போவதும் , அதனை மீறிச் சிலபோது பெரும் வேகம் கொள்வதும் உண்டு .

மேலும் , ஒரு உள்ளடக்கத்திற்கு ஒரே வகையான உருவம்தான் சாத்தியம் என்பதில்லை ; ஒத்த அல்லது பலவேறு பட்ட வடிவங்கள் இருக்கலாம் .

மார்க்சிய அழகியல் இவ்வாறு உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பரஸ்பரம் சார்ந்து இயங்குகிற சக்தியாக விளக்குகிறது .

இதன் பின்னணியில் , சிறு கதை என்ற இலக்கிய வடிவத்திற்கும் நாவல் எனும் இலக்கிய வடிவத்திற்குமுள்ள வேறுபாடுகளை , உருவம் உள்ளடக்க வீச்சுக்கள் அடிப்படையில் அறிந்துகொள்ளலாம் .

மையமான ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு உணர்வு நிலையைச்சுற்றி , ஒரு இடம் அல்லது ஒரு சூழலை மையமாகக் கொண்டு ( பிறவும் வரும் எனினும் அவை மையங்களைச் சார்ந்தனவாகவே இருக்கும் ) , குறுகிய நேரத்தில் வாசிக்கக்கூடிய கூர்மையைக் கொண்டிருப்பது சிறுகதை .

நாவல் என்பது , விரிவான சூழல்களையும் , விளக்கமான நிகழ்ச்சிகளையும் பலவான உணர்வு நிலைகளையும் கொண்டு , நீண்ட நெடும் நேரத்தில் வாசிக்கக் கூடியதாக அமைந்திருக்கும் ; குறிப்பிட்ட வாழ்நிலையின் விளக்கத்தை அதன் பல அம்சங்களைச் சொல்வதாக அமைந்திருக்கும் .

காட்டாக , கி. ராஜநாராயணன் , கம்மவார் எனும் தெலுங்கு பேசும் மக்கள் , கரிசல் காட்டுப்பகுதியில் , கிராமப் புறங்களில் குடியேறி அமர்ந்திருப்பதையும் , அவர்களின் வாழ்க்கையில் உள்ள முரண்களையும் சிரமங்களையும் சொல்ல விரும்புகிறார் .

இதனைக் ‘ கிடை ’ எனும் சிறுகதையாக ஆடுகள்- காதல் - கிராமத்து நியாயம் என்ற உணர்வுநிலையில் கம்மவார் மக்களைச் சித்திரிப்பார் .

ஏறத்தாழ அதேவகையான கிராமத்து வாழ்க்கையை - ஒரு விரிவான தளத்தில் , சொல்லுவதற்கு , அவர் நாவல் எனும் வடிவத்தைத் தேர்ந்தெடுக்கிறார் .

கோபல்ல கிராமம் என்பது அப்படி அமைந்த ஒரு நாவலாகும் .

இப்படி உள்ளடக்கத்தின் தேர்வும் அதன் தன்மையும் பண்பும் , பொருத்தமான வடிவத்தை தேர்ந்தெடுத்துக் கொள்வதைத் தமிழ் இலக்கியங்களின் வழி அறிந்து கொள்ளவேண்டும் .

இரண்டும் ஒன்றற்கொன்று ஒத்தும் பொருந்தியும் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள வேண்டும் .

3.3.2 எதார்த்தம் அல்லது நடப்பியல்

எதார்த்தம் ( realism ) என்பது ஓர் உள்ளடக்கம் .

எதார்த்தம் என்பது ஓர் உத்தி அல்லது வடிவம் .

ஆம் , எதார்த்தம் இவ்விரண்டும் தான் .

நல்ல இலக்கியத்தில் இவ்விரண்டும் இணைந்து பரிணமிப்பதைக் காணமுடியும் .

மார்க்சியத் திறனாய்வு இதன் காரணமாகத்தான் , இதனை முதன்மைப் படுத்துகிறது .

இதனை ஒரு சக்தி வாய்ந்த கருவியாகக் கருதுகிற மார்க்சிய முன்னவர்கள் , இது இலக்கியத்தில் எவ்வாறு அமைந்திருக்கும் அல்லது எப்படி இதனை உருவாக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளனர் .

மார்க்சியத் திறனாய்வுக்கு எதார்த்தவியல் அல்லது நடப்பியல் என்பது ஒரு நல்ல அளவுகோலாக விளங்குகிறது / பயன்படுகிறது .

கண்டதைக் கண்டவாறே சொல்லுதலோ , விவரங்களை அடுக்குதலோ எதார்த்தமாகி விடாது .

அது இயல்பு நவிற்சி ( Naturalism ) யாகலாம் . வெளித்தோற்றமெல்லாம் உண்மையாகிவிடுவதில்லை .