கண்ணால் காண்பது அல்ல , அதனைத் தீர விசாரித்தறியவேண்டும் .
காரண காரியங்களோடு வெளிப்படுத்துதல் வேண்டும் .
சமூகப் பின்புலமும் நடத்தைகளின் சுருக்கநிலைகளும் எதார்த்தத்தைச் சரிவரக் காட்டும் .
இலக்கியங்களில் இது எவ்வாறு வெளிப்படக்கூடும் ?
விவரங்களின் உண்மையோடு , சித்திரிக்கப்படும் சூழ்நிலைகள் வகைநிலையாகவும் ( type ) பொருத்தமாகவும் அமைய வேண்டும் ; பாத்திரங்களும்அதுபோல , இந்த இந்தச் சூழ்நிலையில் இன்னின்னவாறு இருக்கும் என்று உறுதிபடக் கூறுகிற அளவில் வகைநிலை உடையதாகப் பொருத்தமுற அமைய வேண்டும் .
இதனை ஏங்கல்ஸ் typical characters in the typical situations என்பார் .
வகைநிலையான பாத்திரம் என்பது பொதுமையின் பிரதிநிதியாக , அதே நேரத்தில் பிரத்தியேகப் பண்புகளுடன் அமையக் கூடியது ஆகும் .
மாந்தர்களும் அவர்கள் தோன்றும் சூழல்களும் பொருத்தமாகவும் உண்மையாகவும் இருக்கிறபோது , சித்திரமாகியிருக்கும் இலக்கியம் நடப்பியல் அல்லது யதார்த்தத்தைப் பெற்றிருக்கும் .
இத்தகைய எதார்த்தம் , விமரிசனப் போக்குக் கொண்டதாக அமையலாம் .
சோஷலிசம் போன்ற சமூகக் கட்டுமானத்தை உருவாக்க உதவுவதாகவும் இருக்கலாம் .
3.4 அடிப்படைக் கூறுகள் - 2
உலக நடப்புகள் படைப்பாளனுக்குள் பிரதிபலித்து இலக்கியத்தில் இடம்பெறுகின்றன .
இதனை மார்க்சியம் பிரதிபலிப்புக் கொள்கை என்கிறது .
படைப்பாளன் சமூக உணர்வுள்ளவனாக உழைப்பவர் ஒடுக்கப்பட்டவர் ஏழைகள் என்ற வர்க்கத்தின் சார்பாளனாக இருந்து படைக்க வேண்டும் எனவும் மார்க்சியம் கூறுகிறது ; நம்பிக்கையும் முன்மாற்றமும் தரும் தீர்வுகளையும் படைத்துக்காட்ட வேண்டுமென்று கூறுகிறது .
இவையும் மார்க்சியத் திறனாய்வின் அடிப்படைக் கூறுகள் .
3.4.1 பிரதிபலிப்புக் கொள்கை
உலகத்தில் காணப்படுகிற நடைமுறை உண்மைகள் , மற்றும் சமூக அமைப்பிலுள்ள வர்க்க முறைகள் , வர்க்க உணர்வுகள் , சமூக மாற்றங்கள் முதலியன இலக்கியங்களில் பிரதிபலிக்கின்றன ; அந்த அந்தக்காலங்கள் , அவ்வக் காலங்களில் தோன்றும் இலக்கியங்களில் பிரதிபலிக்கின்றன .
இவ்வாறு மார்க்சியம் , பிரதிபலிப்புக் கொள்கையை ( Theory of Reflexion ) கூறுகின்றது .
ஆனால் புறவயமாகத் தோன்றுகிற ( objective ) இவையெல்லாம் அப்படியப்படியே பிரதிபலிக்கின்றன என்று இதனை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதிலும் மார்க்சிய அழகியல் கவனமாக இருக்கிறது .
புறவய உண்மை , கலைஞனுடைய அகவய நிலையில் ( subjective feelings ) சென்றடைகிறது .
ஆனால் அது , கலைப் பொருளில் கலை வயப்பட்டு வெளிவர வேண்டும் .
புறவய உண்மை , அழகியல் உண்மையாக அல்லது கலையியல் உண்மையாக ( Aesthetic or Artistic Reality ) வரவேண்டும் .
இதுதான் பிரதிபலிப்பினுடைய பண்பாகும் .
கலைஞனுடைய பயிற்சி , நோக்கம் , மற்றும் கலைப்படைப்பின் தேவை , தேசிய விடுதலை எனும் ஒரு உண்மை / புறவய உண்மை , எப்படியெல்லாம் நம் கவிஞர்களிடமும் எழுத்தாளர்களிடமும் பிரதிபலித்துள்ளது என்பதை அறியலாம் .
இது பாரதியிடம் இருந்ததுபோலப் பாரதிதாசனிடம் இருக்க வில்லை ; நாமக்கல் கவிஞரிடமும் , சுத்தானந்த பாரதியிடமும் இருந்தது போல , தேசிகவிநாயகம் பிள்ளையிடம் இருக்கவில்லை .
இவர்களிடம் இருந்தது போல , புதுக்கவிதையாளர்களிடம் இருக்கவில்லை ; அல்லது , வித்தியாசமாக இருந்தது .
பிரதிபலிப்பினுடைய பல கோணங்கள் இவை. ஒரு பொருள் அல்லது ஒரு நடப்பு , எவ்வாறு ஒரு படைப்பாளியிடம் பிரதிபலிக்கிறது என்று அறிவதன் மூலம் , அந்தப் படைப்பையும் படைப்பாளியையும் நம்மால் திறனாய முடியும் .
3.4.2 சார்பு நிலையும் தீர்வும்
ஒரு எழுத்தாளனிடம் சார்பு நிலை இருக்குமா- இருக்கவேண்டுமா - என்பது பல காலமாக இருந்து வரும் கேள்வி .
சார்பு என்பது , எழுத்தாளனுடைய பின்னணி , நோக்கம் முதலியவற்றைச் சார்ந்தது .
வசதியான பின்புலங்களையுடையவன் , அத்தகையவர்க்கு உதவுகிறமாதிரியாக எழுதுவான் என்பது ஒருநிலை .
ஆனால் மார்க்சியம் இதனை முழுதுமாக ஒத்துக் கொள்வதில்லை .
படைப்பாளியினுடைய உண்மையுணர்வும் ( sincerity ) படைப்பு மீதான அவனுடைய நேர்மையும் , அவனுடைய உயர் வர்க்கத்தையும் தாண்டிச் சமூக உணர்வு கொண்ட சார்பு நிலைகளைத் தரும் என்கிறார் மார்க்ஸ் .
பால்ஜாக் ( Balzac ) என்ற புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் பற்றி அவர் கூறினார் .
பால்ஜாக் , பிரபுக்களைக் கொண்ட நிலவுடைமைச் சமுதாய அமைப்பில் நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டவர் .
ஆனால் , தன் காலத்துச் சமுதாயத்தை ஆழமாகவும் உண்மையாகவும் கண்டு அதனை நேர்மையுணர்வுடன் சித்திரிக்கிற முயற்சியின் காரணமாக , தனக்குப் பிடித்தமான பிரெஞ்சு நிலவுடைமைச் சமுதாயம் , தன்னுடைய கண்ணுக்கு எதிரேயே நொறுங்கி விழுவது கண்டு அப்படியே உண்மையாக எழுதுகிறார் .
எனவே , உண்மைகளின்பால் தனக்குள்ள ‘ உண்மை ’ அல்லது நேர்மை காரணமாகத் தன்னுடைய சொந்த வர்க்க நலன்கள் மற்றும் அரசியல் பேதங்களுக்கு எதிராகச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிவிட்டார் .
எனவே சார்பு என்பது , எழுத்தாளனுடைய நேர்மையையும் உண்மையின் தீவிரத்தையும் பொறுத்தது ஆகும் .
சார்பு என்பதற்காக அந்தச் சார்பை வெளிப்படுத்த எழுத்தாளன் பிரச்சாரம் செய்ய வேண்டியதில்லை .
கலைத்தன்மையோடு அது இயல்பாக வெளிப்பட வேண்டும் .
எனவே , கதைகளில் தீர்வுகள் சொல்லுவது ( நீதிக்கதைகளில் இப்படி உண்டு) தவிர்க்கப் படவேண்டும் என்று மார்க்சியத் திறனாய்வு கூறுகிறது .
முடிவுகள் , ‘ தட்டிலே வைத்துத் தரப்படுவன அல்ல’ பிரச்சனைகளுக்குத்தான் தீர்வு .
இது முக்கியமாக இரண்டு வகைகளில் வெளிப்படுகின்றது .
முதலில் - தீர்வு , தீர்வின்மை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் , கதைத்தளத்துக்குள் பரவி நின்று சித்திரமாக அமைந்திருப்பது .
அதிலிருந்து தீர்வினை , வாசகன் எளிதாக ஊகித்து அறிந்து கொள்ளுவான் .
இனி இரண்டாவது - பாத்திரங்களின் மற்றும் கதைச் சூழமைவுகளின் இயங்கு திசை வேகத்தின் காரணமாக , கதை எனும் அந்தத் தளத்தினுள் ஒரு முனைப்புப் பெற்று வெடிக்கப் பெறுவது .
இத்தகைய தீர்வு , வெளிப்படையாக இருப்பது போல் தோன்றினாலும் , இது பல சமயங்களில் , படைப்புகளின் கலைத்தன்மையோடு நெருக்கமாக இணைந்திருக்கக் கூடியதேயாகும் .
இந்த இரண்டுமல்லாது , தீர்வு , வெறுமனே நீதி சொல்லுவதாகவோ , பிரச்சாரம் செய்வதாகவோ இருக்கக் கூடாது என்று மார்க்சியத் திறனாய்வு கூறுகிறது .
சமூகஉணர்வும் வேண்டும் அதேபோது கலைத்தன்மையும் வேண்டும் என்று இத் திறனாய்வு முறை வலியுறுத்துகிறது . 3.5 தொகுப்புரை