2

திறனாய்வாளனுடைய சமூகப் பொறுப்பு , யாது ?

திறனாய்வாளனுடைய சமூகப் பொறுப்பு என்பது , முதலில் நல்லதொரு இலக்கியச் சூழலையேற்படுத்துவதில் கவனம் செலுத்துவது , மொழி மற்றும் அரசியல் - சமூக - பண்பாட்டுத் தளத்தில் முறையான சரியான - சிந்தனைப் பரப்பைக் கட்டமைப்பது முதலினவாகும் .

திறனாய்வு , இலக்கியம் மீது அக்கறை கொள்வதற்குரிய முக்கிய காரணம் என்ன ?

திறனாய்வு , இலக்கியத்தின் மேல் அக்கறை கொள்கிறது என்றால் , முக்கியக் காரணம் இலக்கியம் என்ன சொல்கிறது ; அதனை எப்படிச் சொல்கிறது என்று அறிய வேண்டும் ; அவ்வாறு அறிந்ததைச் சொல்ல வேண்டும் என்பது தான் .

திறனாய்வுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு , எந்த முனையில் அல்லது எந்தக் கோணத்தில் இருக்கிறது ?

திறனாய்வாளன் , இலக்கியத்தைப் பார்க்கிறான் .

அது சொல்லும் வாழ்க்கையைப் பார்க்கிறான் ; ஏன் , எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கிறான் .

வாசகனுக்கு இவை பற்றி விளக்குகிறான் .

திறனாய்வுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு இந்த முனையில் அல்லது இந்தக் கோணத்தில் இருக்கிறது .

படைப்புக்குரிய படைப்பாளி பெறுகிற உந்துதல்கள் யாவை ?

தன்னுடைய வாழ்க்கையனுபவம் , வித்தியாசமானது , விசேடமானது , என்று அவன் ( ள் ) கருதுகிறான் ( ள் )

பிறருடைய வாழ்க்கைப் பற்றி , அனுபவங்கள் பற்றி அறிந்து கொள்ள முயலுகிறான் , கேட்டறிதல் , உற்றறிதல் , உய்த்தறிதல் என்பவற்றின் மூலமாக படைப்பாளி உந்துதல்கள் பெறுகிறான் .

இலக்கியம் , வாழ்க்கையை அப்படியே சித்தரிக்கிறதா ?

அதனுடைய வாழ்க்கையனுபவம்எத்தகையது ?

வாழ்க்கையை அனுபவமாக்கித் தன்வயப்படுத்திக் கொள்வது , இலக்கியத்தின் வழிமுறை .

தன்னுடைய வாழ்க்கை அனுபவம் மட்டுமல்லாமல் பிறருடைய வாழ்க்கையிலிருந்து பெறப்படுபவற்றைத் தன்வயப்படுத்தித் தன் அனுபவமாக ஆக்கிக் கொள்வதும் , இலக்கியத்திற்குரிய வாழ்க்கையனுபவமாகும் .

வாழ்க்கையின் நேரடியான உண்மைகள் , இலக்கியத்தில் என்னவாக ஆகின்றன ?

நேரடியான புறவய உண்மை ( external reality ) எனும் வாழ்க்கை , படைப்பாளி படைப்புக்கோட்பாடு எனும் அகவய நிலைபெற்றுக் கலைவய உண்மையாக ( artistic reality ) இலக்கியத்தில் மாறுகிறது .

இலக்கியம் சொல்லியிருக்கிற வாழ்க்கையைத் திறனாய்வாளன் எவ்வாறு எடுத்துக் கொள்கிறான் ?

வாழ்க்கைச் சித்திரம் , ஒரு கணநேரத்துச் சித்திரமாக இருந்தாலும் , அந்தக் கணநேரம் என்பது கடந்த காலத்தின் ஒரு தொடர்ச்சி அல்லது ஒரு பகுதியேயாகும் ; அதுபோல வருங் காலத்தின் ஒரு முன்கூறு அல்லது ஒரு பகுதியேயாகும் .

அறிஞர் தெயின் தரும் இலக்கியப் பரப்பின் மூன்று பரிமாணங்கள் யாவை ?

அறிஞர் தெயின் தரும் இலக்கியப் பரப்பின் மூன்று பரிமாணங்கள் இனம் , பண்பாட்டுச் சூழல் மற்றும் காலத்தின் மனம் ஆகும் .

வாழ்க்கையின் சில எதிர்நிலைகளை இலக்கியத்தில் மறுதலிக்கிற போது , அது எவ்வெவ்வகையில் வெளிப்படக்கூடும் ?

மறுதலிக்கிறபோது , இதற்கு மாற்று ( Alternative ) கூறுவது உண்டு ; தீர்வு போன்று சில கருத்து நிலைகளைக் கூறுவதும் உண்டு ; இரண்டுமல்லாமல் , மறுதலிக்கிற சித்திரமாகவே முடித்து விடுவதும் உண்டு .

இலக்கியத்தில் நழுவல் அல்லது தப்பித்தல் மனநிலை என்பது என்ன ?

கதைமாந்தர்களையும் அவர்தம் வாழ்க்கையையும் சித்தரிக்கும்போது பிரச்சனைகள் பற்றியோ அவற்றை எதிர்கொள்வது பற்றியோ சித்தரிக்காமல் , மிகையான கற்பனைகள் , அலங்காரமான சொற்கோலங்கள் முதலியவற்றால் திருப்தியடைந்து சித்திரங்களை முடித்துவிடுவது ஆகும் .

தொலைநோக்குப் பார்வை அமைவதற்குக் காரணம் என்ன ?

தொலைநோக்குப் பார்வை அமைவதற்குக் காரணம் , படைப்பாளியிடம் வாழ்க்கைப்பற்றி , இந்தச் சமூக வாழ்க்கை பற்றி , ஒரு தீர்க்கமான கண்ணோட்டமும் சார்பு நிலையும் இருப்பதுவேயாகும் .

மொழித்திறன் , இலக்கியத்திற்கு முக்கியமானது - எவ்வாறு ?

மொழியைப் பயன்படுத்துகிற விதம் , இலக்கியத்தின் புலப்பாட்டுத் திறனை உணர்த்தும் .

அழகியல் உத்திகளையும் தொடர் மற்றும் பொருள் நிலைகளையும் இத்தகைய மொழித்திறன் பண்புகளாகும் .

மொழி , என்ன என்ன தளங்களிலிருந்து செயல்படுகிறது ?

குறிப்பிட்ட காலம் , இடம் , இலக்கியத்தின் வகை ( Genre and type ) ,

படைப்பாளியின் தற்கூற்றுநிலை , கதைமாந்தர் பின்புலம் கூற்று ,

வாசகர் / படைப்பு வெளியாகும் இதழ் ஆகியனவாகும் .

சொல்லுக்குப் பொருள் தரும் நிலையில் உள்ள இரு பண்புகள் யாவை ?

நேரடிப் பொருள் தருவது ( denotative / referential ) மற்றும் குறிப்பு நிலையில் ( Suggestrue / connotative )

இலக்கியத்தில் சிறிய தொடர்கள் இடம் பெறுகிற சூழல்கள் யாவை ?

தேவையும் சூழரும் கருதி நாடக உத்தி , உணர்ச்சிப் பீறல் , ஆணையிடுதல் , அறுதியிடுதல் முதலிய சூழல்களில் சிறிய தொடர்கள் இடம் பெறுகிறது .

சொல்லுக்கு ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் கூறும் நான்கு வகையான பொருட்கள் யாவை ?

ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் கூறும் நான்கு வகையான பொருட்கள் அறிவு புலப்படுதல் ( Sense ) , உணர்வு புலப்படுதல் ( Feeling ) , தொனி அல்லது குறிப்புப் பொருள் ( Tone ) மற்றும் விருப்பம் அல்லது நோக்கம் ( Intention ) ஆகும் .

உருவகம் , படிமம் – விளக்குக ?

உருவகம் ( Metaphor ) என்பது உவம உருபுகள் நீங்கிப் போகச் செரிவுடைய ஓர் உவம வடிவமாகும் .

படிமம் ( Image ) என்பது சொல்லப்படும் பொருளை கேட்பு அல்லது காட்சி வடிவில் , உருவெளித் தோற்றம் என்ற நிலைக்கு கொண்டுவருவது ஆகும் .

‘ மாண்ட ’ என்ற சொல் , வழங்குகிற விதத்தைக் கூறுக ?

இன்றைய வழக்கியல் ‘ மாண்ட ’ என்ற சொல்லுக்கு ‘ இறந்துபோன ’ என்பது பொருள் .

பழைய வழக்குக்கு மாண் ( பு ) என்பது அடிச்சொல் ; புதிய வழக்கிற்கு ‘ மாள் ’ என்பது அடிச்சொல் .

குறிப்பிட்ட இலக்கியம் எந்தக் காலத்தில் தோன்றியதோ அந்தக் காலத்தின் மொழிநிலையை அது சார்ந்திருக்கும் என்று சொல்லுவதில் உள்ள நிலைப்பாடுகள் என்ன ?

சிறு சிறு வேறுபாடுகள் இருந்தாலும் , அந்தக் குறிப்பிட்ட காலத்தின் இலக்கியங்களிலுள்ள மொழி நிலைகளையெல்லாம் குறிப்பிட்ட ஒரே தளத்துக்குள் கொண்டு வந்து விடுகிறோம் . வட்டார மொழி என்றால் என்ன ?