20

மேலும் , இதன் கருத்துநிலைகள் , மிதவாதம் , தீவிரவாதம் முதலிய பல பண்புகளைப் பெற்றிருக்கின்றன .

4.3.1 பெண்ணியத்திறனாய்வு : மூன்று கோட்பாடுகள்

மேலை நாடுகளின் சூழலில் பெண்ணியம் , மூன்று வகையான கோட்பாடுகளாக வெளிப்படுகின்றது .

அவை :

1. பிரஞ்சுப் பெண்ணியத் திறனாய்வு .

இது உளவியல் பகுப்பாய்வு முறையில் பெண்ணியத்தை விளக்கவேண்டும் என்கிறது .

பெண்ணின் சுயமான விருப்பங்கள் , உணர்வுகள் , ஆசைகள் , எதிர்பார்ப்புகள் , இவற்றின் முறிவுகள் , சிதைவுகள் முதலியவை உள்ளத்தே அழுத்தப்பட்டிருக்கின்றன ( Repression )

அவை ஏற்புடைய சூழ்நிலைகள் வருகிறபோது பல வடிவங்களில்- குறியீடுகளாகவோ , படிமங்களாகவோ , சொற் சிதறல்களாகவோ - வெளிப்படுகின்றன .

இவ்வாறு பிரஞ்சு பெண்ணியக் கோட்பாடு சொல்கிறது .

2. ஆங்கிலப் பெண்ணியத் திறனாய்வு .

இது முக்கியமாக , மார்க்சிய ஒளியில் பெண்ணியத்தை விளக்குகிறது .

பெண் ஒடுக்கப்பட்டவள் ( Oppression ) என்ற கோணத்தில் , வரலாற்றின் இறுக்கத்தில் சமுதாயத்தில் பெண் ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறாள் என்றும் பெண்ணடிமைத்தனம் பல்வேறு வடிவங்களையும் செயல்நிலைகளையும் கொண்டிருக்கிறது என்றும் , இது பெண்ணியத்தைக் காணுகின்றது .

3. அமெரிக்கப் பெண்ணியத் திறனாய்வு .

இது , முக்கியமாக , புறவய நிலைக்குச் செல்லாமல் , இலக்கியப் பனுவலை ( text ) மையமிட்டே செல்லுகின்றது .

பெண்ணியம் , இலக்கியப் பனுவல்களில் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் காட்டிக் கொள்கிறது , அல்லது , அதனைச் சொல்லிக் கொள்கிறது ( Expression ) என்று காண்பதை வலியுறுத்துகிறது .

பின்னை அமைப்பியல் கூறும் வழியை இது பயன்படுத்திக் கொள்கிறது .

இந்தியச் சூழலிலோ , தமிழ்ச் சூழலிலோ பெண்ணியத்திறனாய்வு , இவ்வாறுதான் இருக்கிறது என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாது .

இந்த மூன்றனுடைய தாக்கங்களும் இங்கே பரவலாக உண்டு .

ஆயினும் , முக்கியமாக , ஆங்கிலப் பெண்ணியத் திறனாய்வுமுறையே , இங்கே அதிகம் வழக்கத்திலுள்ளது என்று சொல்ல வேண்டும் .

4.3.2 பெண்ணியப் பார்வையில் பெண்ணடிமை

வரலாற்று நிலையில் தமிழ்ச் சமூக அமைப்பில் பெண்ணடிமைத்தனம் எவ்வாறு இருந்தது என்பதனையும் , அதனைச் சங்கப்பாடல் எவ்வாறு பதிவு செய்திருக்கிறது என்பதனையும் ஓர் எடுத்துக்காட்டு மூலம் இங்கே காணலாம் .

மன்னன் பூதபாண்டியன் மாண்டு போகின்றான் .

மனைவி பெருங்கோப் பெண்டு , அவன் எரியுண்ட ஈமத்தீயில் தானும் விழுந்து சாக முனைகிறாள் .

அருகே இருந்த சான்றோர் தடுக்கின்றனர் .

அதனை மறுத்து , ‘ பல்சான்றீரே பல் சான்றீரே .

பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான்றீரே.’ என்று விளித்து அவள் பேசுகிறாள் !

அணில் வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்திட்ட

காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது

அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்

வெள் எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட

வேளை வெந்தை வல்சி யாகப்

பரல்பெய் பள்ளிப்பா யின்று வதியும்

உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ..

(..எமக்கு )

நள்ளிரும் பொய்கையும் , தீயும் ஓரற்றே”

( புறம் .

246 )

இந்தப் பாடலைக் கொண்டு , பெருங்கோப் பெண்டு , எவ்வளவு அன்பு கொண்டிருந்தாள் அவனிடம் என்றும் , என்னே அவள் கற்புத் திறன் என்றும் வியந்து பலர் விளக்குகின்றனர் .

ஆயின் , பெண்ணியத் திறனாய்வு இந்த விளக்கத்தை மறுக்கிறது .

இந்தப்பாடலில் , எங்காவது பூதபாண்டியன் - பெருங்கோப்பெண்டு அன்பு சொல்லப்பட்டிருக்கிறதா ?

இல்லை .

காதல் கொண்ட அவனைப் பிரிந்திருக்கமுடியாது என்று எங்காவது அவள் சொல்லியிருக்கிறாளா ?

இல்லை .

கணவன் இறந்த பின் , அந்தப் பொறுப்பு இவளுக்குத் தரப்படலாம் என்று குறிப்புரையாக எதாவது உண்டா ?

இல்லை .

ஆனால் கைம்மை நோன்பின் கொடுமை , பெயரளவில் உயிரோடு இருந்து நடைமுறையில் செத்துக்கொண்டிருக்கும் அவலம் - இதுதானே பாடல் முழுதும் இடம் பெறுகிறது !

பெண்ணடிமைத்தனம் ஆழமாக வேரூன்றிக் கிடப்பதைப் பெண்ணியத் திறனாய்வு வெளிப்படுத்துகின்றது .

அந்தப் பெண் - பெருங்கோப் பெண்டு , இறுதியில் “ உயவற் பெண்டிரேம் அல்லேம் ” என்று ( உயவற் பெண்டிர் = கைம்மை நோன்பால் வருந்தும் பெண்டிர் ) பிரகடனப்படுத்துவது , வேதனைகளின் குமுறலாக மட்டுமல்லாமல் , ஒரு கலகக்குரலாகவும் ( rebellious voice ) வெளிப்படுகிறது .

இவ்வாறு , பெண்ணியத் திறனாய்வு , மறைந்து கிடப்பவற்றிலிருந்து உட்பொருள் கண்டு விளக்குகிறது . 4.3.3 ஆண் - பெண் சமத்துவம்