22

ஆனால் , அவளுக்குள் ஒடுக்கப்பட்ட நிலைமைகளுக்கு எதிராகப் போராட்ட உணர்வு தோன்றி வருகிறது என்ற கருதுகோள்களைக் கொண்டது , பெண்ணியம் .

இலக்கியத்தில் பெண் சித்திரிக்கப்படுகிறாள் .

ஆனால் , எப்படிப் பட்டவளாக அவள் சித்திரிக்கப்படுகிறாள் - அவளுடைய ஆளுமையும் அவளுடைய தனித்தன்மைகளும் , வெளிப்படும்படியாகவா - என்ற கேள்வியோடு , பெண்ணியத் திறனாய்வு தோன்றுகிறது .

இதுகாறும் வெளிப்படாத பல உண்மைகளையும் சமூக அவலங்களையும் இந்தத் திறனாய்வு வெளிப்படுத்தியுள்ளது .

இந்தத் திறனாய்வில் தருக்கவியலும் உண்டு ; கலகக் குரலும் உண்டு .

தமிழ்ச் சூழலில் , பெண்ணியத்தை முன்னிலைப்படுத்திய சிந்தனையாளர்களில் மகாகவி பாரதியார் , பெரியார் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள் .

பெண்ணியச் சிந்தனையின் வழியாகத் தமிழில் சில நாவல்களும் வெளிவந்துள்ளன .

அம்பை , ராஜம்கிருஷ்ணன் , உமா மகேசுவரி முதலியவர்களும் , ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன் , றஞ்சி , தயாநிதி , மல்லிகா , வசந்திராஜா , கருணா முதலிய ஈழத்துப் புலம்பெயர் ( பெண் ) எழுத்தாளர்களும் குறிப்பிடத் தகுந்தவர்கள் , அண்மைக் காலமாகத் தமிழில் பெண் கவிஞர்கள் பலர் , உணர்வுப் பூர்வமாகவும் எழுச்சியுடனும் பெண்ணிய நிலைப்பாட்டுடன் எழுதி வருகிறார்கள் .

பெண்ணியத் திறனாய்வில் ஈடுபாடு கொண்ட / தடம் பதித்த பெண் எழுத்தாளர்கள் குறைவு என்றாலும் , இத்துறை மேலும் மேலும் வளர வாய்ப்புக்கள் பல உண்டு .

5.0 பாட முன்னுரை

ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் என்ற வகைமைக்குள் தொழிலாளர் , கூலி விவசாயி , புலம்பெயர்ந்தோர் , மற்றும் பெண்கள் , தலித்துக்கள் முதலியோருடைய பிரச்சனைகள் குறித்த எழுத்துக்கள் அடங்கும் .

சென்ற பாடத்தில் பெண்ணியம் பற்றிப் பார்த்தோம் .

அது எப்படி ஒடுக்கப்பட்டோர் வழிச் சிந்தனை முறையோ அதுபோன்று தலித்தியம் என்பதும் அத்தகைய பண்பு கொண்டதேயாகும் .

பெண்ணியம் , மனிதகுலத்தில் , பால் வேறுபாடு எப்படிப் பல கொடுமைகளுக்குரியதாக ஆகிறது என்பது பற்றிப் பேசுகிறது .

தலித்தியம் என்பது சாதியப் படிநிலைகள் கொண்டு மனித சமூகம் பிரிக்கப்பட்டிருப்பதன் அவலங்களைப் பற்றிப் பேசுகிறது .

பெண்ணியம் உலகளாவியது ; ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குமேல் பல வடிவங்களில் - பல குரல்களில் பேசப்பட்டு வருவது .

தலித்தியம் , வருணாசிரம தருமம் வேரூன்றியுள்ள இந்தியப் பெருநாட்டில் பரவிக்கிடப்பது .

இதற்கும் ஒரு நூற்றாண்டுக்கால வரலாறு கூறப்பட முடியும் என்றாலும் , மிக அண்மைக் காலத்தில்தான் , அது ஒரு கொள்கை வடிவமாகவும் போராட்டக் கருவியாகவும் ஆகியுள்ளது .

இலக்கியத்திலும் தலித்து - தலித்தியப் பார்வை ஆழமாகவும் கூர்மையாகவும் இடம் பெற்று வருகிறது .

எனவே , திறனாய்வு இதில் அக்கறை கொள்வது இயற்கையே .

5.1 தலித்தியம் - ஒரு விளக்கம்

அண்மைக்காலத்தில் , சமூக - பண்பாட்டுத்தளத்தில் தோன்றியுள்ள தலித் எழுச்சி , கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது .

பரவலாகவும் சற்று ஆழமாகவும் உரத்த குரலில் இது தன்னைக் காட்டி வருகிறது .

‘ தலித் ’ என்ற சொல் மராட்டியச் சொல் .

‘ ஒடுக்கப்பட்ட மக்கள் ’ என்பது இதன் பொருள் .

இது சாதியைக் குறிப்பதல்ல .

ஆனால் , இன்று , ‘ தாழ்த்தப்பட்ட மக்கள் ’ என்ற பொருளை இது உணர்த்துகிறது .

பஞ்சமர் , அட்டவணைச் சாதிகள் ( Sheduled castes and tribes ) , அரிசனங்கள் , ஆதி திராவிடர்கள் என்றெல்லாம் முன்னர் அழைக்கப்பட்டு வந்த ( அரசு நிலையில் இன்றும் அப்படித்தான் ) வகுப்பினர் , அண்மைக்காலமாகத் ‘ தலித்துகள் ’ என்று அடையாளப்படுத்தப் படுகின்றனர் .

இன்று தலித் என்ற சொல் , தாழ்த்தப்பட்ட சில சாதிகளின் ஒரு கூட்டுவடிவ இலச்சினையாகவும் , சற்று விரிவான பொருளில் ஒரு பண்பாட்டு அரசியலின் அடையாளமாகவும் இருக்கின்றது .

மேலும் , இந்தச் சொல்லோடு , போராடுகிற ஒரு பண்பு , கூர்மையான ஒரு கருத்தாடல் , ஒரு கலகக் குரல் என்ற பொருண்மைகளும் இணைந்துள்ளன .

தலித் என்ற வழக்கு , குறிப்பிட்ட சில தாழ்த்தப்பட்ட வகுப்பினரைக் குறித்தாலும் , இன்று சமூகச் சிந்தனையாளர்கள் பலரும் இந்தச் சொல்லை , சமூக விழிப்புணர்ச்சி பற்றிய சூழலில் பயன்படுத்துகின்றனர் .

5.1.1 தலித்திய வரலாறு

இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் சூழலில் , சமூகத்தின் பல மட்டங்களிலிருந்து எழுச்சியின் அசைவுகளும் அறிகுறிகளும் தோன்றின .

அவற்றில் முக்கியமானது , ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியாகும் .

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் ,

தலித்து எழுச்சிக்கு வித்திட்டவர்கள் ; அதுபற்றிய சிந்தனையையும் முன்வரைவுத் திட்டங்களையும் வகுத்துக் கொடுத்தவர்கள் .

கோயில் நுழைவுப் போராட்டங்கள் உள்ளிட்ட “ ஒடுக்கப்பட்டோர் எழுச்சி , பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஏற்பட்டுவிட்டது என்றாலும் , தொடர்ந்து விடுதலைப் போராட்டக் காலத்தில் அவ்வப்போது தலைகாட்டியது என்றாலும் , 1990 - களில்தான் தலித் எழுச்சி , குறிப்பிடத்தக்க உணர்வு நிலையாகவும் போராட்டப் பண்பாகவும் ஆகியது .

1991 , 1992 ஆகிய இரண்டு ஆண்டுகள் அம்பேத்கர் நூற்றாண்டு விழா நடந்தது .

இதனுடைய தூண்டுதல் , தலித்தியத்திற்கு உந்து சக்தியாக இருந்தது .

முக்கியமாக , ஜனநாயகம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையான விடுதலையைத் தரவில்லை ; இந்திய அரசியல் கட்சிகள் தங்களைப் பகடைக் காய்களாகவும் , வாக்கு வங்கிகளாகவுமே ( vote bank ) பயன்படுத்துகின்றன என்ற உணர்வு தலித் மக்களை வெகுவாகப் பாதித்த சூழல் , அது. எனவே தலித்தியம் , ஒரு வேகத்தோடு எழுந்தது .

முக்கியமாகச் சிந்தனையாளர்களையும் இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் ஈடுபட்டோரையும் இது அதிகமாகப் பாதித்தது .

இதற்குமுன் பிரபலமடைந்திருந்த பெண்ணியத்தைவிடத் தலித்தியமே பரவலாகவும் கூர்மையாகவும் படைப்பிலக்கியத்திலும் மற்றும் பண்பாட்டுத் தளங்களிலும் தடம் பதித்திருக்கிறது .

5.2 தலித்தியமும் இலக்கியமும்

தாழ்த்தப்பட்டவர்கள் ( தலித்துகள் ) பற்றிய குறிப்புகள் பழைய இலக்கியங்களில் காணப்படுகின்றன .

சங்க இலக்கியத்திலும் பக்தி இலக்கியத்திலும் பிற்கால இலக்கியங்களிலும் தலித்துகளின் வாழ்வும் பணியும் பேசப்படுகின்றன .

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சமய மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையில் தாழ்த்தப்பட்டவர்களை மையப்படுத்திய ‘ பள்ளு இலக்கியம் ’ போன்றவையும் உருவாயின .

இன்றைய இலக்கியத்திலும் அது பேசப்படுகிறது .

தனி இலக்கிய வகையாகவும் அது உருப்பெற்றுத் தலித் இலக்கியம் எனப் பெயர் பெற்றிருக்கிறது .

5.2.1 பழைய இலக்கியங்களில் தலித்துகள் தொல்காப்பியம் உள்ளிட்ட சங்கநூல்கள் உழைக்கும் மக்களைத் தாழ்த்தப்பட்டவர்களாகச் சித்திரிக்கின்றன .