23

இழிசினன் ( புறநானூறு , 82,287,289 ) , இழிபிறப்பாளன் , புலையன் ( புறம் , 360 ) , புலைத்தி ( புறம் , 259,311 ) முதலிய சொற்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன .

துடியெனும் இசைக்கருவியை இசைக்கிறவனைப் புறநானூறு ( 170 ) சித்திரிக்கின்றது .

‘ இழி பிறப்பாளன் கருங்கை சிவப்ப

வலி துரந்து சிலைக்கும் வன்கட் கடுந்துடி’

இந்தப் பாடலுக்கு அப்படியே பொருள் தருவது திறனாய்வாகாது .

அவனுடைய கைகளைக் ‘ கருங்கை ’ என்று அடைகொடுத்துச் சொல்லுவதையும் , கைகள் ‘ சிவப்ப ’ என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதன் காரணத்தையும் , ‘ துடி ’ என்ற இசைக்கருவிக்குக் கொடுக்கின்ற அடைமொழிக்குரிய அவசியத்தையும் சொல்லவேண்டும் .

அப்போதுதான் அது தலித்திய வாழ்க்கையைக் காட்டும் திறனாய்வாக ஆகமுடியும் .

பெரியபுராணத்தில் திருநீல கண்ட யாழ்ப்பாணர் , திண்ணன் , திருநாளைப் போவார் எனும் நந்தன் ஆகிய மாந்தர்கள் நாயன்மார்களாக வருகிறார்கள் .

இவர்களின் சித்திரங்கள் வரலாற்றுப் பின்புலங்களோடும் காரண காரியங்களோடும் ஆராயப்படுகின்ற போது , தலித்தியத் திறனாய்வின் பயன் சிறப்படையும் .

இப்படிப் பழைய இலக்கியங்கள் சிலவற்றில் ‘ இழிசினர் ’ அல்லது ஒடுக்கப்பட்டோர் வருகின்றனர் .

ஆனால் மிகவும் குறைவாகவே இடம் பெறுகின்றனர் .

பல இலக்கிய வகைமைகளில் இவர்கள் இடம் பெறுவதே இல்லை .

ஏன் என்று தலித்தியத் திறனாய்வு கேள்வி கேட்டுப் பதில் சொல்ல வேண்டும் .

ஆனால் இவர்களை அல்லது இவர்களின் உழைப்புகளைப் போற்றுவதற்காக இல்லை ; அவர்கள் பெரிய பண்ணையார்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்ளவேண்டும் என்ற உட்குறிப்பு இவற்றிலே உண்டு .

பள்ளு இலக்கியம் பற்றித் திறனாய்வாளர் கோ. கேசவன் கூறும் கருத்து தலித்தியத் திறனாய்வுக்கு முன்னோடியாக அமைகிறது .

5.2.2 இன்றைய இலக்கியங்களில் தலித்துகள்

தலித்து என்ற சொல்லை மையமாகக் கொண்டு , தலித்து பற்றிய கொள்கை உருவானது , தமிழில் 1990-களுக்குப் பிறகுதான் .

ஆனால் அதற்குப் பிறகுதான் தலித் இலக்கியம் தோன்றியது என்று சொல்வது பொருந்தாது .

அந்தச் சொல் புதிதாக இருந்தாலும் , அதே பொருண்மை நீண்டகாலமாக இருந்து வருவதுதான் .

அதுபோல் , தலித் உணர்வு என்பதும் வெவ்வேறு வகைகளில் ஏற்கனவே இருந்து வருவதுதான் .

இன்றைய இலக்கியம் என்பதைப் பொறுத்த அளவில் , டி. செல்வராஜ் எழுதிய ‘ மலரும் சருகும் ’ ( 1970 ) என்ற நாவல்தான் முதல் தலித் நாவல் என்று சொல்லப்படவேண்டும் .

நெல்லை வட்டாரத்தைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல் , தலித்துக்களை ஒரே தளத்தில்- ஒரே பரிமாணத்தில் - அல்லாமல் , பல தளங்களில் பல பரிமாணங்களில் காட்டுகின்றது .

கூலி விவசாயிகளாகவும் சிறு நிலவுடைமைக்கிழார்களாகவும் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட பாமர மக்கள் எப்படித் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் , தங்கள் நிலங்களையும் தொழில்களையும் காப்பாற்றிக் கொள்ளவும் துன்பப்படுகிறார்கள் என்பதை இந்த நாவல் , எதார்த்தமான உத்தியில் சித்திரிக்கின்றது .

இவர்கள் மத்தியில் தோன்றிய ஒரு இளைஞன் சப்இன்ஸ்பெக்டராக ஆகிறான் .

ஆனால் அந்த அதிகாரமும் புதிய உறவுகளும் அவனைத் தன்னுடைய சக மனிதர்களுக்கு எதிராக நிறுத்துகின்றன .

இன்னொருவன் , ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வருகிறவன் ; தன்னுடைய மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு அவர்களுக்காக உழைக்கிறான் .

இந்நாவலில் வருகிற ஒவ்வொரு பாத்திரமும் , தலித்துகளின் மாறிவரும் வாழ் நிலைகளையும் உணர்வுகளையும் நடப்பியல் நிலையில் சிறப்பாக வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது .

அடுத்து , ஈழத்தின் சூழலில் கே. டானியல் எழுதிய ‘ பஞ்சமர் ’ என்ற நாவலும் தலித்துக்களின் வாழ்க்கையை எதார்த்தமாகவும் போராட்டப் பண்போடும் சித்திரிக்கின்றது .

ஆனால் இவர்கள் , சமூக மாற்றம் வேண்டுகிற புரட்சிகர மனப்பான்மை கொண்டவர்களாதலால் தங்கள் எழுத்துக்களை ‘ தலித் ’ எழுத்துக்கள் என்று அடையாளப்படுத்த விரும்புவதில்லை .

மேலும் தலித்துகளின் சாதியடையாளத்தை முதன்மைப் படுத்தாமல் அவர்களை ஒரே நேரத்தில் தலித்துகளாகவும் , உழைப்பாளிகளாகவும் பார்க்கின்ற பார்வை , இவ்வகை எழுத்தின் முக்கியமான பண்புகளில் ஒன்று .

ஸ்ரீதர கணேசன் என்பவரின் உப்பு வயல் என்ற நாவலில் இந்தப் போக்கு முதன்மையாக உள்ளது .

ஒரு தலித் பெண்ணின் வாழ்க்கை அனுபவங்களைச் சித்திரிக்கின்றது இந்த நாவல் .

அவள் ஒரு பெண் ; ஒரு தலித் ; உப்பளத் தொழிலாளி என்ற மூன்றும் ஒன்றாக இயங்குகிற ஒரு வடிவமாக அவள் விளங்குகிறாள் .

உண்மையுணர்வோடும் போராட்ட உணர்வோடும் கூடிய இந்த நாவல் , தலித் நாவல் என்ற வகையில் புதியதொரு கோணத்தைச் சேர்ந்ததாகும் .

சிறுகதைகள் , புதினங்களன்றியும் தலித் சிந்தனையாளர்கள் பலர் கவிதைகளிலும் ஈடுபட்டுள்ளனர் .

இவர்களிடமிருந்து மிகச்சிறந்த கவிதைகள் வந்துள்ளன .

மதிவண்ணன் , என். டி. ராஜ்குமார் , உஞ்சைராஜன் , பாமரன் , இராச .

முருகுபாண்டியன் , பிரதிபா ஜெயச்சந்திரன் , பாரதி வசந்தன் முதலிய பெயர்கள் இத்தகைய கவிஞர்களின் அணிக்கு அழகு சேர்க்கின்றன .

5.3 தலித்துக் கலைவடிவம்

கலை என்பது வட்டாரம் , இனம் , சாதி , வர்க்கம் முதலியவற்றைச் சார்ந்து அமைவதுதான் .

தலித்துகளின் அழகியல் வெளிப்பாடுகளில் அவர்களின் கலை வடிவங்கள் முக்கியமானவை .

தலித்து மக்களின் கலை வடிவங்கள் , வெளியிடங்களில் நிகழ்த்தப் பெறுகிற நிகழ்த்துகலை வடிவங்களே ஆகும் .

மேலும் உயர்சாதியினரிடம் காணப்படுவது போன்ற தூலமற்ற நுண்கலை வடிவம் ( Abstract Art Form ) இவர்களிடம் மிகக் குறைவு .

பெருந்தெய்வ வழிபாடுகளைச் சார்ந்திருத்தலும் , வைதிகச் சடங்குமுறைகளைச் சார்ந்திருத்தலும் தலித்துக் கலைகளில் இல்லை .

நவீன மேடைகள் , பெரிய அரங்குகள் முதலியவை இவர்களின் கலை நிகழ்வுகளில் கிடையாது .

தலித் மக்களின் , முக்கியமான கலை வடிவங்களாகக் கூறப்பட்டுபவை :

பறையாட்டம் , தப்பாட்டம் , பெரிய மேளம் , நையாண்டி மேளம் , கரகாட்டம் , மாடுபிடியாட்டம் , ராசா - ராணியாட்டம் , கரடியாட்டம் , உறுமி மேளம் , குறவன் குறத்தியாட்டம் முதலியவைகளாகும் .

சிறு தெய்வங்களையும் , சிறு தெய்வங்கள் தொடர்பான கதைகள் அல்லது தொன்மங்களையும் , நடைமுறை வாழ்வில் கண்ட அல்லது வெகுவாகப் பாதித்த செய்திகளையும் இவை சொல்லுகின்றன .

தெய்வங்களின் வழிபாட்டு இடங்கள் , நடவு நடுதல் , கதிர் அறுப்பு முதலிய விவசாயம் நடைபெறும் வயல்வெளிகள் , காடுகள் , சாவுகள் நடக்கிற இடங்கள் - இவற்றிலேதான் இவை அதிகம் நிகழ்த்தப்படுகின்றன . ஆனால் அண்மைக் காலங்களில் தலித் கலை வடிவங்கள் ஒரு ‘ வித்தியாசம் ’ என்ற முறையில் , அரசு விழாக்களிலும் , பொதுக் கலை அரங்குகளிலும் ஊர்வலங்களிலும் நிகழ்த்தப்படுகின்றன .