25

ஒரு தலித்து , தலித்துக்களின் வாழ்க்கை பற்றி நன்றாக அறிந்திருப்பது சாத்தியம் தான் .

ஆனால் மாறிவரும் சூழலில் , இன்றைய தலித்துகளில் பலர் , புதிய சூழ்நிலைகளால் , பல புதிய பின்புலங்களோடு வாழ்கிறார்கள் .

மேலும் , பிறப்பினாலேயே , ஒருவர் , தன்னுடைய வர்க்கம் , தன்னைச் சுற்றியிருப்போரின் தாழ்த்தப்பட்ட நிலை , தன்னுடைய வரலாற்றுப் பின்புலம் முதலியவற்றில் உணர்வும் சார்பும் பெற்றிருப்பார் என்பது நிச்சயமில்லை .

இன்னொரு பக்கம் - வேறொரு சூழ்நிலையைச் சேர்ந்த ஒருவர் , தலித்துக்களின் மேலோ , ஒடுக்கப்பட்ட பிறர் மேலோ , அனுதாபமும் அக்கறையும் கொண்டிருக்கக்கூடும் என்பதை மறுத்துவிடவும் முடியாது .

எனவே சார்பு என்பது வெறுமனே பிறப்பின் அடிப்படையில் அமைவதல்ல .

மனிதநேயம் சார்ந்த கொள்கை , உண்மையின் மீதான அக்கறை போன்றவை , சார்பு நிலைகளைத் தீர்மானிக்கின்றன .

மேலும் , குறிப்பிட்ட ஒன்றனை எழுதியவர் யார் , அவருடைய சாதி என்ன , உட்சாதி என்ன என்பவற்றை வாசகரோ திறனாய்வாளரோ அறிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறாகும் .

அது இயலாததும் ஆகும் .

படைப்பும் , அதனுள்ளிருக்கும் உண்மைகளுமே முக்கியம் .

தலித் இலக்கியத்தின் பிறப்பிடம் என்று அறியப்படுவது , மராத்திய மாநிலம் , வளர்ப்பிடம் என்றறியப்படுவது , கர்நாடகம் .

பம்பாயில் 1958-இல் தலித் இலக்கியம் - பண்பாடு பற்றிய முதல் மாநாட்டில் ஒரு பிரகடனம் அறிவிக்கப்பட்டது .

“ ஒடுக்கப்பட்டோரால் எழுதப்பட்ட இலக்கியமும் ஒடுக்கப்பட்டோர் பற்றி மற்றோரால் எழுதப்பட்ட இலக்கியமும் தலித் இலக்கியம் எனும் தனியடையாளத்துடன் ஏற்றுக் கொள்ளப்படுகிறது ” தலித்தியத் திறனாய்வுக்கு இது ஒரு வரைகோடு தருகிறது .

மேலும் , யார் எழுதுகிறார்கள் என்பதை விட , யாருடைய வாழ்க்கை , எவ்வாறு தரப்படுகிறது என்று பார்ப்பது தான் சரியான கண்ணோட்டமாகும் ; சரியான திறனாய்வாகும் .

5.5 தொகுப்புரை

ஒட்டுமொத்தமான மக்கட் பிரிவினரில் , தாழ்த்தப்பட்டோர் அல்லது தலித்து எனும் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு , அம்மக்களின் தனிச் சிறப்பியல் கூறுகளாக ( distinctive features ) உள்ளவற்றை ஆய்வு செய்வது , தலித்தியல் திறனாய்வாகும் .

வருணாசிரமம் அல்லது சாதிய அமைப்புமுறை கொண்ட இந்தச் சமுதாயத்தில் ஆண்டாண்டுக் காலமாகத் தொடர்ந்து தீண்டாமை , கடின உழைப்பு , ஏழ்மை முதலியவற்றால் அவதிப்படும் தலித் மக்கள் , அண்மைக் காலமாக எழுச்சி பெற்று வருகிறார்கள் .

இந்த எழுச்சி , இலக்கியத்தில் ஆழமாகவும் பரவலாகவும் காணப்பட்டு வருகிறது .

தலித் இலக்கியம் என்று அடையாளம் காட்டுகிற நிலையில் இது வளர்ச்சி பெற்றுள்ளது .

தலித்தியத் திறனாய்வு என்பது , இலக்கியங்களில் தலித்துகள் சித்திரிக்கப்படுவதை மட்டுமல்லாது , ஏனைய பிற மக்களோடு அவர்களுடைய உறவுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதையும் , அவர்களை இந்தச் சமுதாயம் எவ்வாறு பல்வேறு நிலைகளில் அடிமைப்படுத்தி அல்லது தாழ்த்தி வைத்திருக்கிறது என்பதையும் , தலித்து மக்களின் வெவ்வேறு எதிர்வினைகளையும் ஆராய்கிறது .

ஏனைய அணுகுமுறைகளோடு ஒப்ப நோக்கினால் , இது அண்மைக் காலத்தில் அறிமுகமான அணுகுமுறைதான் .

ஆனால் அதே நேரத்தில் , இது , அழுத்தமும் வேகமும் கொண்டியங்குவது ஆகும் .

சமுதாயவியல் திறனாய்வின் ஓர் அங்கமாக இருந்தாலும் , அதற்கு அணிசேர்க்கிற விதத்தில் இது தனித்து இயங்குகிறது .

தன் மதிப்பீடு : வினாக்கள் – II

1 .

விடை

2 .

விடை

3 .

விடை

4 .

விடை

5 .

விடை

6 .

விடை

7 .

விடை

பாடம் – 6

D06146 புலம்பெயர்வுத் திறனாய்வு

6.0 பாட முன்னுரை

தமிழ்த் திறனாய்வுப் பரப்பில் , பல சூழ்நிலைகளின் காரணமாகப் புதிய புதிய கொள்கைகளும் தளங்களும் தோன்றுகின்றன .

சமூக வரலாற்றிலும் இலக்கிய வரலாற்றிலும் ஏற்படுகின்ற மாற்றங்களும் வளர்ச்சிகளும் இத்தகைய புதிய தளங்களையும் புதிய பரிமாணங்களையும் தவிர்க்க முடியாதனவாக ஆக்குகின்றன .

பின்னை அமைப்பியலும் பின்னை நவீனத்துவமும் அதுபோலப் பெண்ணியமும் தலித்தியமும் , கொள்கைகளையும் அவற்றின் புதிய கோணங்களையும் ஒட்டிப் பிறந்தன .

புலம்பெயர்வு என்பது குறிப்பிட்ட கொள்கை அல்லது முறையியல் சார்ந்தது அல்ல ; மாறாக , வித்தியாசமான சூழ்நிலையையும் வாழ்நிலையையும் அது குறிக்கின்றது .

புலம்பெயர்வு என்ற நிகழ்வு பழைமையானது ; ஆனால் அது பற்றிய உணர்வும் ஆய்வும் புதியது .

இன்று அது சமூகவியலாளர்களிடையேயும் , இலக்கிய ஆய்வாளர்களிடையேயும் பெரிதும் கவனத்திற்குள்ளாகி வருகிறது .

தமிழ்ச் சூழலிலும் இத்தகைய ஆய்வுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகக் கருதப்படுகிறது .

6.1 புலம்பெயர்வு - விளக்கம்

ஒரே இடத்தில் தொடர்ந்து வாழாமல் , இடம்விட்டு இடம் நகர்தல் , ஊர் விட்டு வேற்றூர் வாழ்தல் என்ற பொதுவான பொருளை இது குறிக்கிறது என்றாலும் , இன்று ஒரு கலைச்சொல்லாக ( technical term ) வழங்குகிறது . சமூக நகர்வுகள் ( Social mobility ) குடியேற்றங்கள் , இருவகைப்பட்ட பண்பாடுகளின் உறவுகள் , மொழி உறவுகள் என்ற பொருள்நிலை , புலம்பெயர்வு என்ற சொல்லுக்கு உண்டு .