26

பிழைப்பும் பாதுகாப்பும் நாடிச் செல்லுகின்ற சாதாரணச் குடிமக்களிலிருந்து நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானிகள் , கணினிப் பொறியாளர்கள் , பணம் குவிக்கும் கனவுகளோடு வணிகர்கள் , தஞ்சம் அடையும் அரசியல் போராளிகள் என்று இவர்கள் வரை புலம்பெயர்வோர் பல திறத்தினர் ; பல தரப்பினர் .

புலம்பெயர்வுக்குக் காரணங்களைப் பொதுவாக இப்படிக் கூறலாம் .

( 1 ) இயற்கையின் சீற்றம் , வறுமை முதலியன .

( 2 ) யுத்தங்கள் ( 3 ) வேற்றுநாட்டு ஆதிக்கங்கள் ( 4 ) இனக்கலவரங்கள் , பெருந்தேசியவாத அரசியல் தரும் நெருக்கடிகள் , சமய வழக்கு ( 5 ) புதிதாய் வசதிகளும் வாய்ப்புகளும் பற்றிய தேட்டங்கள் / விருப்பங்கள் .

இவை பொதுவான காரணங்கள் .

வெவ்வேறு சூழல்களின் பின்னணியில் நடைபெறும் வெவ்வேறு வகையான புலம்பெயர்வுகளாலும் புலம் அமர்வுகளாலும் , வாழ்நிலை , சூழ்நிலை வேறுபாடுகளும் பொருளாதார - பண்பாட்டுப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன .

இவ்வாறு புலம்பெயர்ந்தோரின் இலக்கியங்களைப் புலம்பெயர்வு இலக்கியம் ( Emigrant Literature ) என்று அழைப்பர் .

6.1.1 புலம்பெயர்வு - வரையறை

பிறந்து வளர்ந்து பரம்பரையாக இருந்த தங்கள் நிலப்பகுதியிலிருந்து அல்லது தேசத்திலிருந்து , அகன்று / பெயர்ந்து , வேறுநாடு சென்று , நீண்ட காலமாகவோ , நிரந்தரமாகவோ குடியமர்தலை அல்லது குடியமராமல் அலைப்புண்டு திரிதலைப் புலம்பெயர்வு என்பது குறிக்கின்றது .

இரண்டு வேறு நாடுகள் , இரண்டு வேறு மொழிகள் , இரண்டு வேறு பண்பாடுகள் என்ற ஒருநிலை , இந்தப் புலம்பெயர்வில் காணப்படும் நிலையாகும் .

இதனுடைய ஆங்கிலச்சொல் Diaspora என்பதாகும் .

இது disappearing என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது .

மொழி , பண்பாடு முதலானவற்றில் பொது அடையாளங் கொண்ட குழுவினர் , தம்முடைய பாரம்பரியமான நிலங்களை அல்லது தேசங்களை விட்டு அகன்று , வேற்றுப்புலம் அல்லது வேற்றுநாடுகளில் சிதறிப் போதல் ( scattering of persons or groups ) என்பது இந்தச் சொல்லின் பொருளாகும் .

ஒரே நாட்டிற்குள் வெவ்வேறு மொழிகள் பேசுகின்ற பகுதிகளில் - உதாரணமாக , இந்தியாவிற்குள் , தமிழ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆந்திர மாநிலத்திற்கோ , மேற்குவங்க மாநிலத்திற்கோ சென்று வசிப்பதை , அதுவும் ஒரு வகையில் இடம்விட்டு இடம் நகர்தலாக இருந்தாலும் புலம்பெயர்வு என்று அழைப்பதில்லை .

புலம்பெயர்வு பற்றிய ஆராய்ச்சிக்கு முக்கியம் இருவேறு நாடுகள் சார்ந்த புலம்பெயர்வாக இருக்க வேண்டும் .

இருவேறு பண்பாட்டுச் சூழமைவுகளும் இருவேறு மொழிநிலைகளும் அடுத்த நிலையில் தளங்களாக அமைகின்றன .

.

புலம்பெயர்வு இலக்கியங்களில் இந்த உணர்வுநிலை பல வடிவங்களில் வெளிப்படக்கூடும் .

திறனாய்வாளன் இவற்றை உற்றறிந்து புலப்படுத்த வேண்டும் .

உதாரணமாக தம் தாயகமாகிய ஈழத்தைவிட்டுப் பிரிந்து கனடாவில் வாழும் சேரன் முதலிய கவிஞர்களின் கவி வரிகளில் இந்த மனநிலையைப் பார்க்கமுடிகிறது .

6.1.2 புலம்பெயர்வு வரலாறு

‘ திரைகடலோடியும் திரவியம் தேடு ’ என்பது பழமொழி .

உலகத்தில் பல இனங்கள் , பல்வேறு காலங்களில் தம் நாடுகளைவிட்டுப் புலம்பெயர்ந்துள்ளனர் .

மிக நீண்டகாலமாக இது நடந்து வருகிற ஒன்றுதான் .

புலம்பெயர்வு ( Diaspora ) பற்றிய கருத்துநிலை முதலில் , பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கின்ற அதே நேரத்தில் தொடர்ந்து ஒரே இடத்தில் இல்லாமல் பல நாடுகளுக்கும் அலைகின்ற / அலைந்து திரிந்த யூதர்களின் ( Jews ) வாழ்நிலைகளைக் குறிப்பதாகவே எழுந்தது .

ஜெரூசேலம் ( Jerusalem ) நகரைச் சேர்ந்த ஆப்ரஹாம் உள்ளிட்ட யூதர்களைப் பார்த்து ஆண்டவர் சபித்தாராம் ; ‘ நீங்கள் பிறந்த , உங்கள் தந்தையர் நாட்டைவிட்டு உடனே வெளியேறக் கடவீர்கள் !

வேற்று தேசங்களில் அலைந்து திரியக் கடவீர்கள் ! ” - இந்தச் சாபத்திற்கு விமோசனம் இல்லை .

எனவே யூதர்கள் பல்வேறு நாடுகளிலும் அலைகிறார்கள் ; குடியேறியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது .

இதுவே Diaspora என்ற கருத்துநிலைக்கு மூலமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது .

இசுரேயில் ( Isreal ) என்று இவர்களுக்கென ஒரு நாடு பிறந்திருக்கிறது ; இருப்பினும் அமெரிக்கா , ஜெர்மனி உள்ளிட்ட மிகப் பல நாடுகளில் ( இந்தியாவிலும் தான் ;

கேரளாவில் ) இவர்கள் குடியமர்ந்திருக்கிறார்கள் .

புலம்பெயர்வு அதிகம் நடந்த இடம் என்று பார்த்தால் மத்திய ஆசியா - மெசபடோமியா , ஐரோப்பா முதலியன உள்ளிட்ட பகுதிதான் .

தொடக்கத்தில் அதிகமாகப் புலம்பெயர்ந்தவர்கள் ஆரியர்கள் .

அதன்பின் தொடர்ந்து , அதே இனத்தோடு உறவுடைய ஐரோப்பியர்கள் .

உலகத்தின் பல நாடுகள் , ஐரோப்பியர்களின் குடியேற்ற நாடுகளாக ஆகியிருக்கின்றன .

இருப்பினும் தொழிற்புரட்சி மற்றும் இரண்டு உலகப் போர்கள் ஆகியவற்றுக்குப்பின் , பல தேசிய இனங்களின் புலம்பெயர்வுகள் கணிசமாகவே காணப்படுகின்றன .

2005 ‘ சர்வதேச ஒருங்கிணைவு மற்றும் அகதிகள் சங்கம் ’ ( I.I.R.N ) என்ற அமைப்பின் கணக்குப்படி , தம் நாடுகளையும் உறவுகளையும் விட்டுப் புலம்பெயர்ந்து சென்றோரின் எண்ணிக்கை , ஏறத்தாழ இருநூறு மில்லியனையும் தாண்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது .

6.2 புலம்பெயர்வு சில விவரங்கள்

நவீன காலத்தில் ( Modern period ) தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்ற காலப்பகுதியை இரண்டு வகையாகப் பகுக்கலாம் .

சுதந்திரத்திற்கு முன்னர்ச் சென்றவர்கள் இந்தியாவை அன்று ஆண்ட ஆங்கிலப் பேரரசு , பிரெஞ்சுப் பேரரசு , போர்த்துகீசிய அரசு ஆகியவற்றினால் அவர்களுடைய ஆதிக்கங்களின் கீழ் இருந்த ஃபிஜி , பர்மா முதலிய பின்தங்கிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் .

இவர்கள் அங்கே துயரம் மிகுந்த அநாதரவான வாழ்க்கையை அனுபவித்தார்கள் .

சுதந்திரத்திற்குப் பின்னர் , முதலில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பணிக்காகப் போனவர்கள் , முதல் அலை ; எழுபதுகளுக்குப் பிறகு போனவர்களில் பெரும்பான்மையோர் கணினிப் பொறியாளர்கள் , இரண்டாவது அலை .

தமிழர்களில் துயரமான சூழ்நிலைகளுக்கு இடையே தாயகம் விட்டு வெளியேறியவர்கள் , ஈழத்துத் தமிழர்களே .

இலங்கையின் பெருந்தேசிய இனவாத அரசியலே இதற்குக் காரணம் .

1956-இல் இலங்கை அரசினால் புகுத்தப்பட்ட ‘ சிங்களவர்கள் மட்டுமே ’ என்ற நடவடிக்கைகள் முதற்கொண்டு , பின்னர் 1972 அதன் பின்னர் 1983இல் நடந்த பெருங்கலவரத்தையொட்டிக் கணக்கற்ற தமிழர்கள் அடைந்த பெருந்துயரம் , நிராதரவான நிலை என்ற இந்தச் சூழ்நிலைகள் மற்றும் நெருக்கடிகளுக்கிடையே ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கனடா , ஜெர்மனி , நார்வே , பிரிட்டன் முதலிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றார்கள் .

தமிழ் இனத்தவர்கள் , ஏறத்தாழ எழுபது மில்லியன்பேர் உலகின் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர் .

ஏற்கெனவே கூறியது போல , பிரிட்டிஷ் , பிரெஞ்சு குடியேற்ற ஆதிக்க அரசுகளால் 18-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி ஆயிரக்கணக்கான பேர் மொரீஷியஸ் , ஃபிஜி , ரியூனியன் , தென்னாப்பிரிக்கா , இலங்கை ( மலையகம் ) , மலேசியா , பர்மா முதலிய நாடுகளுக்குக் கரும்புத் தோட்டங்கள் , தேயிலைத் தோட்டங்கள் , இரப்பர்த் தோட்டங்கள் முதலியவற்றை உருவாக்கவும் , தொடர்ந்து அந்தப் பொருட்களை உற்பத்தி செய்யவும் அனுப்பப்பட்டார்கள் .

அண்மைக் காலத்தில் அமெரிக்கா , பிரிட்டன் , ஜெர்மனி , பிரான்சு முதலிய செல்வந்தர் நாடுகளுக்குத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர் .

இவர்களிடையே பல தரங்களும் பல நோக்கங்களும் உண்டு . தமிழ்மொழியையும் பண்பாட்டையும் இவர்கள் தங்களிடையே தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று காண்பது , புலம்பெயர்வு ஆய்வின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாகும் .