29

புலம்பெயர்ந்த பல்வேறு இனத்தவருள் , ஈழத்தமிழ் மக்களே , அதிகமாக இணையத்தளங்களை ( Web - sites ) பயன்படுத்துவோர் ஆவர் .

என்ன என்ன வகைகளில் இவை பயன்படுகின்றன ?

( 1 ) பல்வேறு நாடுகளிலேயுள்ள தமிழர்களிடையே கருத்துப் பரிமாற்றங்கள் முக்கியமான பயன்பாடாகும் .

( 2 ) மேலும் , தாய்நாட்டுத் தமிழர்களுக்குச் செய்திகள் சொல்லுதல் , அவர்களிடமிருந்து தம் நாட்டின் நிலவரங்களையறிதல் .

( 3 ) இலங்கையிலே நடக்கும் பலவிதமான எழுச்சிகளுக்கு ஆதரவாக உலகத் தமிழர்களின் ஆதரவைத் திரட்டுதல் .

இத்தகைய பயன்பாடுகளை நோக்கமாகக் கொண்ட இலக்கிய இதழ்கள் , புத்தகங்கள் முதலியவற்றை வெளியிடுகிற முயற்சிகளும் நடைபெறுகின்றன .

புலம்பெயர்ந்து சென்ற தமிழ் இனத்தவருள் , புகலிடங்களிலிருந்து தம்முடைய மொழி , பண்பாடு , இலக்கியம் பற்றி அதிகம் சிந்திப்பவர்கள் ஈழத்தமிழர்களே யாவர் .

எனவே இவர்களிடமிருந்து இலக்கிய ஆக்கம் தொடர்ந்தும் பலவாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது .

இவை , தமிழகம் ஈழம் உள்ளிட்ட தாயகப் பகுதிகளிலிருந்து வருகிற எழுத்துகளுக்குச் சளைப்பில்லை என்று சொல்லுகிற அளவிற்குப் பல தளங்களையும் , பல தரங்களையும் பல பரிமாணங்களையும் பெற்றிருக்கின்றன .

ஈழத்தமிழர் புலம்பெயர்வு இலக்கியங்களிலே காணப்படுகின்ற முக்கியச் செல்நெறிகளும் பண்புகளும் கவனிக்கத்தக்கன .

அவை :

( 1 ) தம் தாயகம் பற்றியும் , தம்முடைய மரபு , பண்பாடு , மொழி பற்றியும் திரும்ப நினைத்தல் ; நினைவூட்டிக் கொள்ளுதல் .

( 2 ) தாயகத்திலுள்ள அரசியல் நிகழ்வுகளையும் நிலைகளையும் விமரிசனம் செய்தல் .

( 3 ) புகலிடங்களில் படுகிற துயரங்கள் , புகலிடங்களில் இணைந்து ஒன்றி விடுவதற்கான முயற்சிகள் , பண்பாட்டுக் கலப்புகள் முதலியவற்றை வெளிப்படுத்துதல் .

( 4 ) தம் இனத்தவரிடையேயுள்ள சாதியம் , பெண்ணடிமைத்தனம் முதலிய முரண்பாடுகளைச் சுயவிமரிசனம் செய்தல் .

( 5 ) மேலைநாட்டுச் சிந்தனை முறைகளின் தாக்கத்தினால் பின்னை அமைப்பியல் , பின்னை நவீனத்துவம் , பின்னைக் காலனித்துவம் , நவீன - பெண்ணியம் முதலிய கருத்துநிலைகளுக்குட்பட்டுப் புதிய எழுத்துமுறையை உருவாக்குதல் .

இவை ஈழத்துத் - தமிழ்ப் புலம்பெயர்வு இலக்கியத்தில் வெளிப்பட்டு நிற்கும் பண்புகள் .

ஆனால் , இவை யெல்லாவற்றிற்கும் செயல்கள் , சிந்தனைகள் , எழுத்துகள் இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் உணர்வு , அடையாளம் தேடுதல் ( Ethnic Identity ) என்பதேயாகும் .

6.4.2 பிற முயற்சிகள்

தமிழர்களின் புலம்பெயர்வு , விசாலமான தளங்களைக் கொண்டது ; பல தரப்பட்ட சூழல்களைக் கொண்டது .

ஆயின் , இதனை ஒப்புநோக்க இலக்கியங்கள் , இதுகாறும் கூறியன தவிரவும் ஒருவகையில் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும் .

பர்மாவில் தமிழர்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் குடியிருந்து அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் பங்களிப்புச் செய்தார்கள் .

இனக்கலவரம் , உலகப் போர் காரணமாகத் தமிழர்கள் பெரும்பகுதியினர் திருப்பியனுப்பப்பட்டனர் .

ஆனால் , அவர்கள் பற்றிய இலக்கியங்கள் மிகக் குறைவேயாகும் .

ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு , ப .

சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி மற்றம் கலைஞர் மு.கருணாநிதியின் பராசக்தி ( நாடகமாக எழுதப்பட்டு பிரசித்தமான திரைப்படமாக வந்தது ) முதலியவை குறிப்பிடத்தக்கன .

இவற்றில் பர்மா போய் இருந்து பின்னர் திரும்பி வந்தோரின் துயரங்கள் நன்கு சொல்லப்பட்டிருக்கின்றன .

மலேசியத் தமிழர்கள் தமிழ் உணர்வும் பண்பாட்டுணர்வும் அதிகம் உடையவர்கள் .

1910-20 என்ற காலப் பகுதியில் இங்கிருந்து நாவல்கள் தோன்றத் தொடங்குகின்றன .

1950-60 காலப்பகுதியில் ம.இராமையாவும் மா.செ.மாயத்தேவனும் சேர்ந்து எழுதிய நீர்ச்சுழல் என்ற நாவலும் , அறிவானந்தம் எழுதிய மல்லிகா என்ற நாவலும் , முழுக்க மலேசியப் பின்னணியைக் கொண்டு எழுந்தவையாகும் .

தொடர்ந்து மலேசியாவிலிருந்து பல நாவல்களும் சிறுகதைகளும் கவிதைகளும் வெளிவந்துள்ளன .

மலேயாவில் உள்ள ரப்பர்த் தோட்டங்களில் தமிழர்கள் படுகிற துயரங்களை பால்மரக் காட்டிலே என்னும் நாவலாக எழுதியவர் தமிழகத்து அகிலன் ஆவார் .

சிங்கப்பூர்த் தமிழர்களிடமிருந்தும் பல கவிதைகளும் புனைகதைகளும் வெளிவந்துள்ளன .

புலம்பெயர்ந்தோருள் இணையத்தளங்களை அதிகம் பயன்படுத்துவோர் யார் ?

6.5 தொகுப்புரை

புலம்பெயர்வு என்பது மனித சமூக வரலாற்றில் நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு நிகழ்வு ஆகும் .

முதன்முதலில் பல நாடுகளில் படர்ந்துகிடக்கும் யூதர்களின் வாழ்நிலைகளை ஒட்டித்தான் புலம்பெயர்வு எனும் கருத்து நிலை தோன்றியது .

எனினும் இன்று அது விரிவான பொருளைப் பெற்றுள்ளது .

சமூக - பண்பாட்டு வரலாற்றறிஞர்கள் பலரின் கவனத்தைப் புலம்பெயர்வு பற்றிய ஆய்வு கவர்ந்துள்ளது .

பழந்தமிழகத்தில் பல வெளிநாடுகளிலிருந்து ( கிரேக்கம் , எபிரேயம் மற்றும் வடக்கே மகதம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ) புலம்பெயர்ந்து இங்கே இனிதே வாழ்ந்திருக்கிறார்கள் .

ஆனால் பழந்தமிழகத்தில் , தமிழர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடு செல்வது போற்றப்படவில்லை .

‘ பதியெழுபு அறியாப் பழங்குடி ’ என்பது போற்றப்பட்டது .

தமிழர்களில் பல பகுதியினர் , பிரிட்டீஷ் - குடியேற்ற ஆதிக்க அரசு , பிரெஞ்சுக் குடியேற்ற அரசு , போர்த்துகீசியக் குடியேற்ற அரசு ஆகியவற்றினால் கி.பி .18ஆம் நூற்றாண்டினிறுதியிலிருந்து , அவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட பின்தங்கிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள் .

அவர்களுடைய பின்னணியிலிருந்த ஏழ்மை , அவர்களுடைய புகலிடங்களும் தொடர்ந்தது .

இந்தியச் சுதந்திரத்திற்குப் பின்னர்ப் பல நாடுகளுக்குக் குடிபெயர்ந்து சென்றவர்களின் பின்புலங்களும் நன்றாக இருந்தன ; புகலிடங்களிலும் அந்த வசதிகளைப் பெற்றுள்ளார்கள் .

ஆயினும் இன அடையாளம் பற்றிய நெருக்கடிகள் அவர்களிடம் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன .

இந்தியத் தமிழகத்திலிருந்து இலங்கை மலையகங்களில் குடியேறிய மக்களிடமிருந்தும் , ஈழத்திலிருந்து பேரினவாத அரசியல் தந்த நெருக்கடிகள் காரணமாக நார்வே , கனடா முதற்கொண்டு பல நாடுகளுக்குச் சென்ற தமிழர்களிடமிருந்தும் கணிசமாகப் புலம்பெயர்வு இலக்கியம் வெளிவந்தது .

திறனாய்வுக்கு நல்ல தளங்களையும் புதிய பரிமாணங்களையும் இந்த இலக்கியங்கள் தருகின்றன .

பாடம் - 1D06141 அமைப்பியலும் பின்னை அமைப்பியலும்