34

2.

மார்க்சியத் திறனாய்வின் நோக்கம் என்ன?

விடை

3.

மார்க்சியத் திறனாய்வு, இலக்கியம் பற்றிய கருதுகோளை அல்லது வரையறையை எவ்வாறு கூறுகிறது?

விடை

4.

மார்க்சியம், சமுதாயத்தை எவ்வகையான சமுதாயமாகக் காணுகிறது?  

விடை

5.

வர்க்கம் என்பது என்ன?  

விடை

3.3 அடிப்படைக் கூறுகள் - 1

    மார்க்சிய இலக்கியக் கொள்கையில் உள்ளடக்கத்திற்கேற்ற உருவம் என்பது அடிப்படையான கூறாக இருக்கிறது. அதுபோல இலக்கியத்தை மதிப்பிட எதார்த்த இயல்பை அடிப்படையாகக் கொள்கிறது. இவ்விரண்டு அடிப்படைக் கூறுகளும் படைப்பைச் சார்ந்தவை.

3.3.1 உருவமும் உள்ளடக்கமும்    

    பொருள்கள்    தமக்குள்    உறவுபெற்றவை. அவை, எதிர்முறையான சக்திகளின் உள்ளார்ந்தனவும் புறமார்ந்தனவுமான மோதல்கள் கொண்டவை. மோதல்கள்-இணைவுகள் என்ற தன்மை காரணமாகப் பொருள்கள் இயங்கு சக்தி கொண்டிருக்கின்றன. இவ்வாறு மார்க்சிய இயங்கியல் சொல்லுகிறது. காரணகாரிய விதிமுறைகளுக்குட்பட்ட இந்த இயங்குநிலை, பொருள்களின் பண்புநிலை (quality)    மற்றும் அளவுநிலை (quantity) மாற்றங்களுக்குக் காரணமாகின்றது. பண்புநிலையில் ஏற்படுகிற மாற்றம் அளவுநிலை மாற்றத்திற்கும், அளவு நிலை மாற்றம், பண்புநிலை மாற்றத்திற்கும் இட்டுச் செல்லுகிறது. இரண்டும் இவ்வாறு தமக்குள் சார்ந்து செயலாற்றலுடன் இருக்கின்றன. அளவுநிலை என்பது உருவத்தையும், பண்பு நிலை என்பது உள்ளடக்கத்தையும் குறிக்கின்றது.

    உருவம்-உள்ளடக்கம் (form and content) என்பவற்றுள், உள்ளடக்கம்    முதன்மையானது,    ஆனால், உருவத்தின் முக்கியத்துவம் குறைந்தது அல்ல. உள்ளடக்கத்தின் பண்புக்கும் தேவைக்கும் மாற்றத்துக்கும் ஏற்ப, உருவம் அமைகின்றது; அதேபோது உருவம் உள்ளடக்கத்தைத் தன்னுடைய செல்வாக்கிற்கு உட்படுத்தி அதனுடைய வளர்ச்சியை முன்கொண்டு செல்லக்கூடிய ஆற்றல் படைத்தது. மார்க்சிய சித்தாந்தத்தில் உருவம்-உள்ளடக்கம் பற்றிய கருத்துநிலை முக்கியமான ஒன்றாகும். நேர்த்தி, உத்தி முதலியவற்றிற்கு உட்பட்ட உருவத்தை மார்க்சியம் குறைத்து மதிப்பிடாமல் போற்றுகிறது. லெனின் சொல்லுவார்: உருவத்துக்கும் உள்ளடக்கம் போலவே , சார்புடைத் தனித்துவம் (relative independence) உண்டு. உள்ளடக்கத்தின் வீச்சுக்கு அது பின்தங்கிப் போவதும், அதனை மீறிச் சிலபோது பெரும் வேகம் கொள்வதும் உண்டு. மேலும், ஒரு உள்ளடக்கத்திற்கு ஒரே வகையான உருவம்தான் சாத்தியம் என்பதில்லை; ஒத்த அல்லது பலவேறு பட்ட வடிவங்கள் இருக்கலாம். மார்க்சிய அழகியல் இவ்வாறு உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பரஸ்பரம் சார்ந்து இயங்குகிற சக்தியாக விளக்குகிறது.

    இதன் பின்னணியில், சிறு கதை என்ற இலக்கிய வடிவத்திற்கும் நாவல் எனும் இலக்கிய வடிவத்திற்குமுள்ள வேறுபாடுகளை, உருவம் உள்ளடக்க வீச்சுக்கள் அடிப்படையில் அறிந்துகொள்ளலாம். மையமான ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு உணர்வு நிலையைச்சுற்றி, ஒரு இடம் அல்லது ஒரு சூழலை மையமாகக் கொண்டு (பிறவும் வரும் எனினும் அவை மையங்களைச் சார்ந்தனவாகவே இருக்கும்), குறுகிய நேரத்தில் வாசிக்கக்கூடிய கூர்மையைக் கொண்டிருப்பது சிறுகதை. நாவல் என்பது, விரிவான சூழல்களையும், விளக்கமான நிகழ்ச்சிகளையும் பலவான உணர்வு நிலைகளையும் கொண்டு, நீண்ட நெடும் நேரத்தில் வாசிக்கக் கூடியதாக அமைந்திருக்கும்; குறிப்பிட்ட வாழ்நிலையின் விளக்கத்தை அதன்    பல அம்சங்களைச் சொல்வதாக அமைந்திருக்கும். காட்டாக, கி. ராஜநாராயணன், கம்மவார் எனும் தெலுங்கு பேசும் மக்கள், கரிசல் காட்டுப்பகுதியில், கிராமப் புறங்களில் குடியேறி அமர்ந்திருப்பதையும், அவர்களின் வாழ்க்கையில் உள்ள முரண்களையும் சிரமங்களையும் சொல்ல விரும்புகிறார். இதனைக் ‘கிடை’ எனும் சிறுகதையாக ஆடுகள்- காதல் - கிராமத்து நியாயம் என்ற உணர்வுநிலையில் கம்மவார் மக்களைச் சித்திரிப்பார். ஏறத்தாழ அதேவகையான கிராமத்து வாழ்க்கையை - ஒரு விரிவான தளத்தில், சொல்லுவதற்கு, அவர் நாவல் எனும் வடிவத்தைத் தேர்ந்தெடுக்கிறார். கோபல்ல கிராமம் என்பது அப்படி அமைந்த ஒரு நாவலாகும். இப்படி உள்ளடக்கத்தின் தேர்வும் அதன் தன்மையும் பண்பும், பொருத்தமான வடிவத்தை தேர்ந்தெடுத்துக் கொள்வதைத் தமிழ் இலக்கியங்களின் வழி அறிந்து கொள்ளவேண்டும். இரண்டும் ஒன்றற்கொன்று    ஒத்தும்    பொருந்தியும் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

3.3.2 எதார்த்தம் அல்லது நடப்பியல்

    எதார்த்தம் (realism) என்பது ஓர் உள்ளடக்கம். எதார்த்தம் என்பது ஓர் உத்தி அல்லது வடிவம். ஆம், எதார்த்தம் இவ்விரண்டும் தான். நல்ல இலக்கியத்தில் இவ்விரண்டும் இணைந்து பரிணமிப்பதைக் காணமுடியும். மார்க்சியத் திறனாய்வு இதன் காரணமாகத்தான், இதனை முதன்மைப் படுத்துகிறது. இதனை ஒரு சக்தி வாய்ந்த கருவியாகக் கருதுகிற மார்க்சிய முன்னவர்கள், இது இலக்கியத்தில் எவ்வாறு அமைந்திருக்கும் அல்லது எப்படி இதனை உருவாக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளனர். மார்க்சியத் திறனாய்வுக்கு எதார்த்தவியல் அல்லது நடப்பியல் என்பது ஒரு நல்ல அளவுகோலாக விளங்குகிறது/பயன்படுகிறது. கண்டதைக் கண்டவாறே சொல்லுதலோ, விவரங்களை அடுக்குதலோ எதார்த்தமாகி விடாது. அது இயல்பு நவிற்சி (Naturalism) யாகலாம். வெளித்தோற்றமெல்லாம் உண்மையாகிவிடுவதில்லை.

    கண்ணால்    காண்பது    அல்ல, அதனைத் தீர விசாரித்தறியவேண்டும். காரண காரியங்களோடு வெளிப்படுத்துதல் வேண்டும். சமூகப் பின்புலமும் நடத்தைகளின் சுருக்கநிலைகளும் எதார்த்தத்தைச் சரிவரக் காட்டும்.

    இலக்கியங்களில் இது எவ்வாறு வெளிப்படக்கூடும்? விவரங்களின் உண்மையோடு, சித்திரிக்கப்படும் சூழ்நிலைகள் வகைநிலையாகவும் (type) பொருத்தமாகவும் அமைய வேண்டும்; பாத்திரங்களும்அதுபோல, இந்த இந்தச் சூழ்நிலையில் இன்னின்னவாறு இருக்கும் என்று உறுதிபடக் கூறுகிற அளவில் வகைநிலை உடையதாகப் பொருத்தமுற அமைய வேண்டும். இதனை ஏங்கல்ஸ் typical characters in the typical situations என்பார். வகைநிலையான பாத்திரம் என்பது பொதுமையின் பிரதிநிதியாக, அதே நேரத்தில் பிரத்தியேகப் பண்புகளுடன் அமையக் கூடியது ஆகும். மாந்தர்களும் அவர்கள் தோன்றும் சூழல்களும் பொருத்தமாகவும் உண்மையாகவும் இருக்கிறபோது, சித்திரமாகியிருக்கும்    இலக்கியம்    நடப்பியல் அல்லது யதார்த்தத்தைப் பெற்றிருக்கும்.

    இத்தகைய எதார்த்தம், விமரிசனப் போக்குக் கொண்டதாக அமையலாம். சோஷலிசம் போன்ற சமூகக் கட்டுமானத்தை உருவாக்க உதவுவதாகவும் இருக்கலாம்.

3.4 அடிப்படைக் கூறுகள் - 2

    உலக    நடப்புகள் படைப்பாளனுக்குள் பிரதிபலித்து இலக்கியத்தில் இடம்பெறுகின்றன. இதனை மார்க்சியம் பிரதிபலிப்புக் கொள்கை என்கிறது. படைப்பாளன் சமூக உணர்வுள்ளவனாக உழைப்பவர் ஒடுக்கப்பட்டவர் ஏழைகள் என்ற வர்க்கத்தின் சார்பாளனாக இருந்து படைக்க வேண்டும் எனவும் மார்க்சியம் கூறுகிறது; நம்பிக்கையும் முன்மாற்றமும் தரும் தீர்வுகளையும் படைத்துக்காட்ட வேண்டுமென்று கூறுகிறது. இவையும் மார்க்சியத் திறனாய்வின் அடிப்படைக் கூறுகள்.

3.4.1 பிரதிபலிப்புக் கொள்கை

    உலகத்தில் காணப்படுகிற நடைமுறை உண்மைகள், மற்றும் சமூக அமைப்பிலுள்ள வர்க்க முறைகள், வர்க்க உணர்வுகள், சமூக மாற்றங்கள் முதலியன இலக்கியங்களில் பிரதிபலிக்கின்றன; அந்த அந்தக்காலங்கள், அவ்வக் காலங்களில் தோன்றும் இலக்கியங்களில் பிரதிபலிக்கின்றன.இவ்வாறு மார்க்சியம், பிரதிபலிப்புக் கொள்கையை (Theory of Reflexion) கூறுகின்றது. ஆனால் புறவயமாகத் தோன்றுகிற     (objective) இவையெல்லாம் அப்படியப்படியே பிரதிபலிக்கின்றன    என்று இதனை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதிலும் மார்க்சிய அழகியல் கவனமாக இருக்கிறது. புறவய உண்மை, கலைஞனுடைய அகவய நிலையில் (subjective feelings) சென்றடைகிறது. ஆனால் அது, கலைப் பொருளில் கலை வயப்பட்டு வெளிவர வேண்டும். புறவய உண்மை, அழகியல் உண்மையாக அல்லது கலையியல் உண்மையாக (Aesthetic or Artistic Reality) வரவேண்டும்.    இதுதான் பிரதிபலிப்பினுடைய பண்பாகும். கலைஞனுடைய பயிற்சி, நோக்கம்,மற்றும் கலைப்படைப்பின் தேவை, தேசிய விடுதலை எனும் ஒரு உண்மை / புறவய உண்மை, எப்படியெல்லாம் நம் கவிஞர்களிடமும் எழுத்தாளர்களிடமும் பிரதிபலித்துள்ளது என்பதை அறியலாம். இது பாரதியிடம் இருந்ததுபோலப் பாரதிதாசனிடம் இருக்க வில்லை; நாமக்கல் கவிஞரிடமும், சுத்தானந்த பாரதியிடமும் இருந்தது போல, தேசிகவிநாயகம் பிள்ளையிடம் இருக்கவில்லை. இவர்களிடம் இருந்தது போல, புதுக்கவிதையாளர்களிடம் இருக்கவில்லை;அல்லது, வித்தியாசமாக இருந்தது. பிரதிபலிப்பினுடைய பல கோணங்கள் இவை. ஒரு பொருள் அல்லது ஒரு நடப்பு, எவ்வாறு ஒரு படைப்பாளியிடம் பிரதிபலிக்கிறது என்று அறிவதன் மூலம், அந்தப் படைப்பையும் படைப்பாளியையும் நம்மால் திறனாய முடியும்.

3.4.2 சார்பு நிலையும் தீர்வும்

    ஒரு    எழுத்தாளனிடம்    சார்பு நிலை இருக்குமா- இருக்கவேண்டுமா- என்பது பல காலமாக இருந்து வரும் கேள்வி. சார்பு என்பது,    எழுத்தாளனுடைய பின்னணி, நோக்கம் முதலியவற்றைச் சார்ந்தது. வசதியான பின்புலங்களையுடையவன், அத்தகையவர்க்கு உதவுகிறமாதிரியாக எழுதுவான் என்பது ஒருநிலை. ஆனால் மார்க்சியம் இதனை முழுதுமாக ஒத்துக் கொள்வதில்லை. படைப்பாளியினுடைய உண்மையுணர்வும் (sincerity) படைப்பு மீதான அவனுடைய நேர்மையும்,அவனுடைய உயர் வர்க்கத்தையும் தாண்டிச் சமூக உணர்வு கொண்ட சார்பு நிலைகளைத் தரும் என்கிறார் மார்க்ஸ். பால்ஜாக் (Balzac) என்ற புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் பற்றி அவர் கூறினார். பால்ஜாக், பிரபுக்களைக் கொண்ட நிலவுடைமைச் சமுதாய அமைப்பில் நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டவர். ஆனால், தன் காலத்துச் சமுதாயத்தை ஆழமாகவும் உண்மையாகவும் கண்டு அதனை நேர்மையுணர்வுடன் சித்திரிக்கிற முயற்சியின் காரணமாக, தனக்குப் பிடித்தமான பிரெஞ்சு நிலவுடைமைச் சமுதாயம், தன்னுடைய கண்ணுக்கு எதிரேயே நொறுங்கி விழுவது கண்டு அப்படியே உண்மையாக எழுதுகிறார். எனவே, உண்மைகளின்பால் தனக்குள்ள ‘உண்மை’ அல்லது நேர்மை காரணமாகத் தன்னுடைய சொந்த வர்க்க நலன்கள் மற்றும் அரசியல் பேதங்களுக்கு    எதிராகச்    செல்ல    வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிவிட்டார்.    எனவே    சார்பு என்பது, எழுத்தாளனுடைய நேர்மையையும் உண்மையின் தீவிரத்தையும் பொறுத்தது ஆகும்.

    சார்பு என்பதற்காக அந்தச் சார்பை வெளிப்படுத்த எழுத்தாளன்    பிரச்சாரம்    செய்ய வேண்டியதில்லை. கலைத்தன்மையோடு அது இயல்பாக வெளிப்பட வேண்டும் .எனவே, கதைகளில் தீர்வுகள் சொல்லுவது (நீதிக்கதைகளில் இப்படி உண்டு.) தவிர்க்கப் படவேண்டும் என்று மார்க்சியத் திறனாய்வு கூறுகிறது. முடிவுகள்,     ‘தட்டிலே    வைத்துத் தரப்படுவன அல்ல.’ பிரச்சனைகளுக்குத்தான் தீர்வு. இது முக்கியமாக இரண்டு வகைகளில் வெளிப்படுகின்றது. முதலில் - தீர்வு, தீர்வின்மை என்ற பேச்சுக்கே இடமில்லாமல், கதைத்தளத்துக்குள் பரவி நின்று சித்திரமாக அமைந்திருப்பது. அதிலிருந்து தீர்வினை, வாசகன் எளிதாக ஊகித்து அறிந்து கொள்ளுவான். இனி இரண்டாவது -பாத்திரங்களின் மற்றும் கதைச் சூழமைவுகளின் இயங்கு திசை வேகத்தின் காரணமாக, கதை எனும் அந்தத் தளத்தினுள் ஒரு முனைப்புப் பெற்று வெடிக்கப் பெறுவது. இத்தகைய தீர்வு, வெளிப்படையாக இருப்பது போல் தோன்றினாலும், இது பல சமயங்களில், படைப்புகளின் கலைத்தன்மையோடு நெருக்கமாக இணைந்திருக்கக் கூடியதேயாகும். இந்த இரண்டுமல்லாது, தீர்வு, வெறுமனே நீதி சொல்லுவதாகவோ, பிரச்சாரம் செய்வதாகவோ இருக்கக் கூடாது என்று மார்க்சியத் திறனாய்வு கூறுகிறது. சமூகஉணர்வும் வேண்டும் அதேபோது கலைத்தன்மையும் வேண்டும் என்று இத் திறனாய்வு முறை வலியுறுத்துகிறது.

3.5 தொகுப்புரை

    சமுதாயவியலோடும் வரலாற்றியலோடும் நெருக்கம்கொண்டது மார்க்சியத் திறனாய்வு. இலக்கியம் மக்களிடமிருந்து தோன்றுகிறது; மக்களிடம் செல்கிறது; திறனாய்வு இதற்கு அனுகூலமாக இருக்க வேண்டும் என்று அது கூறுகிறது. மார்க்சியம் அரசியல்- பொருளாதார - சமூக அறிவியல் சித்தாந்தம் எனினும், சமூக அமைப்பை இயங்குநிலையோடு காண்பதாலும், அந்தச் சமூகத்தை, மனித மேன்மை குறித்ததாக ஆக்க வேண்டும் என்று விரும்புவதாலும், கலை, இலக்கியம், அழகியல் ஆகியன குறித்தும் மார்க்சும் ஏங்கல்சும் பேசுகின்றனர். பொருளாதார அமைப்பு சமூகத்தின் அடிக்கட்டுமானமாக, இறுதித் தீர்மான சக்தியாக விளங்கினாலும், மேல்கட்டுமானங்களில் ஒன்றாகிய இலக்கியம், சமூக-    பொருளாதாரக்    கட்டமைப்புக்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இலக்கியம், இந்நிலையில், அவ்வக்காலச் சமூகத்தின் பிரதிநிதியாகவும் பிரதிபலிப்பாகவும் அமைகின்றது. இலக்கியத்தில் உள்ளடக்கமே பிரதானமானது என்றாலும் அதனை வடிவமைக்கிற உருவமும் முக்கியமானது ஆகும். இலக்கியம், நேர்த்தியாகவும் கலையியல் தன்மையோடும் அமைய வேண்டுவது; எனவே புறவய உண்மைகள், இலக்கியத்தில் கலையியல் உண்மைகளாக    மறு ஆக்கம் பெறுகின்றன. இத்தகைய உண்மைகளில் நேர்மையும் அக்கறையும் இருக்க வேண்டுவது படைப்பாளியின் பொறுப்பு ஆகும் . மார்க்சியத் திறனாய்வு, இவ்வாறு சமூகத்தின் மேன்மைக்கு உரியதாக இலக்கியத்தைக் கண்டு மதிப்பிடுகிறது; படைப்பாளியை ஊக்கப் படுத்துகிறது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் – II

1.

மார்க்சியத் திறனாய்வுக்கு ஒரு அளவுகோலாகப் பயன்படுவது ஏது?

விடை

2.

சிறுகதை வடிவத்திலிருந்து வேறுபட்டு நாவலின் வடிவம் எவ்வாறு அமைந்திருக்கும்?

விடை

3.

கதைகளில் தீர்வுகள் இரண்டுவகையாக அமையலாம். அவை யாவை?

விடை

4.

புறவய உண்மை, இலக்கியத்தில் எதுவாக அமைய வேண்டும்?விடை