35

5.

விடை

பாடம் – 4

D06144 பெண்ணியத் திறனாய்வு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

திறனாய்வின் புதிய பரிமாணங்களைத் தொடர்ந்து பேசுகிறது. பெண்ணியத்தை இன்னது, இத்தகையது என விளக்குகிறது. பெண்ணியத்தின் வகைகளையும் கொள்கைகளையும் பேசுகிறது.

தமிழில் பெண்ணிய எழுத்துக்கள் பற்றி எடுத்துக்காட்டுடன் கூறுகிறது.    பெண்ணியத்திறனாய்வின்    பணியையும் சாதனைகளையும் எடுத்துரைக்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

• பெண்ணியம் ஒரு நவீனச் சிந்தனை முறை. அதனை அறிந்துகொள்ளலாம்.

• பெண்ணியம், ஒடுக்கப்பட்டவர்களின் ஒரு கலகக்குரல் என்பதை அறிந்து கொள்ளலாம்.

• ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், பெண்விடுதலை பற்றிய உணர்வு, அதனுடைய தன்மை ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

• தமிழில் பெண்ணியச் சிந்தனை, பெண்ணிய எழுத்துக்களை வளர்த்துள்ளது, வளர்த்துவருகிறது என்னும் உண்மையை அறிந்து கொள்ளலாம்.

• பெண்ணியத்திறனாய்வு    பல    கோட்பாடுகளையும் கோணங்களையும் கொண்டது என்பதை அறியலாம்.

4.0 பாட முன்னுரை

இலக்கியத் திறனாய்வு முறைகளில் பெண்ணியம் (Feminism) சிறப்பான தொரு பார்வைக் கோணத்தைத் தந்திருக்கிறது. எந்தத் திறனாய்வுக்கும் அதனுடைய பார்வை, கூர்மையும் தெளிவும் கொண்டிருப்பது மிகவும் அவசியம். பெண்ணியம், அத்தகையதொரு கூர்மையைத் தந்திருப்பதோடு, வழக்கமான விளக்கங்களுக்கு மாற்றாகப் (alternative) புதிய விளக்கங்களை- பெண்மை- என்ற கோணத்திலிருந்து தந்திருக்கிறது. எனவே திறனாய்வுக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்திருக்கிறது. நவீன இலக்கியத்தை எழுதுவதற்குரிய புதிய தளங்களை அது முன்வைக்கிறது; அதேபோது, வாழ்க்கைநிலையிலுள்ள    எதிரும்புதிருமான பிரச்சனைகளின் உண்மைகளைக் காட்டிச் சிந்திக்கவும் தூண்டுகிறது. அண்மைக் காலமாக - குறிப்பாக +1970-களுக்குப் பிறகு, தமிழகத்தில் பெண்விடுதலை முழக்கங்கள் கேட்கத் தொடங்கியுள்ளன. அதன் பின்னணியில் இலக்கியத்திலும் பெண்ணியச் சிந்தனை பெருகி வந்துள்ளது.

4.1 பெண்ணியம் : விளக்கம்

    

பெண்ணின் நிலையிலிருந்து கருத்துக்கள் அல்லது வாதங்கள் எழுவது, பெண்ணியவாதம் ஆகும். ஆண்டாண்டுக் காலமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் பெண் அடிமைப்பட்டே இருந்தாள். குடும்ப நிர்வாகம் முதற்கொண்டு பல கடமைகளைச் செய்தாலும், இனவிருத்தி செய்து குடும்பத்தைப் பெருக்கினாலும், அன்பு, பாசம் முதலிய பல நல்ல பண்புகளைப் பெற்றிருந்தாலும் பெண், தொடர்ந்து அடிமையாகவே இருக்கிறாள். இந்தச் சமுதாயம் ஆண்களை மையமிட்டது; எல்லாக் கருத்துக்களும் செயல்களும் ஆண்களை மையமிட்டே நடக்கின்றன. இவ்வாறு பெண்ணியம் தீவிரமான கருத்துக்களை முன்வைக்கிறது. இத்தகைய சமுதாயச் சூழ்நிலையை மாற்றவேண்டும்; பெண், விடுதலை பெற வேண்டும் என்று பெண்ணியம் கூறுகிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆளுமை (personality) உண்டு; அந்த ஆளுமை காப்பாற்றப்பட வேண்டும்; வளர்க்கப்பட வேண்டும்;    காட்டிக்கொள்ளப்பட வேண்டும் - என்று பெண்ணியம் கூறுகின்றது. பெண் விடுதலை என்பது, சமூக - பொருளாதார அரசியல் - பண்பாட்டுத் தளங்களில், பெண் சுயமாக இயங்குவதற்கு வேண்டிய உரிமைகளைப் பெறுவது - போராடியாவது பெறுவது- ஆகும்.

4.1.1 பெண்ணியம் : வரலாறு

    கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெண்ணியம் என்ற கோட்பாடு, நவீனத்துவத்தின் சூழமைவில், எழுந்தது. தொடர்ந்து பிரான்சு நாட்டைச் சேர்ந்த சய்மோன் தெபௌவோ (Simon De Beauvoir) எழுதிய இரண்டாவது பாலினம் (The Second Sex; 1949) என்ற பிரசித்தமான நூலை முன்னோடியாகக் கொண்டு, பெண்ணியம் ஓர் அறிவார்ந்த கொள்கையாகவும் போராட்டக் கருவியாகவும் முன்வைக்கப்பட்டது. பல நாடுகளில் பெண்ணுரிமை ஒரு பிரச்சினையாகப் பேசப்பட்டது; இயக்கங்களும் தோன்றின. இந்தியாவில் சமூகச் சீர்திருத்த உணர்வுடைய பலர் இது பற்றிப் பேசியும் எழுதியும் வந்தனர். தமிழகத்தில், முதல் நாவலாசிரியராகிய மாயவரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பெண் விடுதலை பற்றி எழுதியுள்ளார். பெண்மதி மாலை அவருடைய நூல்களில் ஒன்று. திரு. வி.க.வின் பெண்ணின் பெருமை இவ்வகையில் மிகச் சிறந்த ஒரு நூலாகும். தமிழகத்தில் பெண் விடுதலை பற்றி அழுத்தமாகவும் புதுமைக் கண்ணோட்டத்துடனும்    எழுதியவர்கள் இருவர்.