36

தமிழகத்தில் 1980-கள் வாக்கில் இயக்கங்கள் பல தோன்றின. இந்தச்    சூழ்நிலையில்தான் பெண்ணுரிமை தொடர்பான இலக்கியங்களும் தோன்றின. வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம், புனைவியல் நவிற்சியாக ஒரு பெண்ணின் அற்புத ஆற்றலைக் கதையாக்கித் தந்துள்ளது.

4.2 பெண்ணியம் : பல கோணங்கள்

பெண்ணியம் அல்லது பெண்ணிலை வாதம் என்பது ஒரே நிலைப்பாடு கொண்டதல்ல. அதனுள் பல கருத்தியல்கள் - கோணங்கள் உண்டு. அவற்றுள், ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.

4.2.1 மிதவாதப் பெண்ணியம்

இது பெண்ணின் சிறப்புக்களைக் கூறுவதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறது கடவுளுக்கு முன், ஆண் - பெண் எல்லோரும் சமம் என்று சொல்லுகிற அதே நேரத்தில் அதற்காகப் போராடுவதைத் தவிர்க்கிறது. வழக்காடுமன்றங்கள், சட்டமன்றங்கள்    முதலியவற்றிற்குப் போவதில் ஆர்வம் கொள்கிறது.

4.2.2 போராட்ட குணம் மிக்க பெண்ணியம்

பெண் உரிமைகளைப் போராடித்தான் பெற முடியும்- பெறவேண்டும் என்று இது வற்புறுத்துகிறது. பெண்களுக்குச் சொத்துரிமை போன்றவற்றிற்காக இது போராடிப் பெற்றும் தந்துள்ளது.

4.2.3 தீவிரவாதப் பெண்ணியம்

நவீனப் பெண்ணியம் என்று சொல்லுகின்ற இது, ‘அரசியல் அமைப்புச்    சட்டங்களிலும் அரசு ஆணைகளிலும் வழங்கப்பட்டுள்ள ஆண் - பெண் சமத்துவம் நடைமுறையில் அவைக்குதவாதது’ என்று குற்றம் காட்டுகிறது. குடும்பம், பாலியல்    உறவு முதலியவை பெண்ணை அடிமைப் படுத்துகின்றவை; எனவே இவற்றிலிருந்து பெண் விடுதலையாகி, வெளியே வர வேண்டும் என்று பேசுகிறது.

4.2.4 புரட்சிகரப் பெண்ணியம்

பாலியல் உரிமை (sexual right), கட்டற்ற அல்லது கட்டுப்பாடற்ற பாலியல் உறவு (free sex), பெண் - ஓரினச் சேர்க்கை (lesbianism), குழந்தை பெறுவதை மறுத்தல்- முதலியவற்றை இது வலியுறுத்துகிறது.

4.2.5 சமதர்மப் பெண்ணியம்

குடும்பத்திற்குள்ளும்    அதற்கு வெளியேயும் பெண், பொருளாதார அடிப்படையில் சுய நிலையும் பெறவேண்டும். அப்போதுதான் பெண் விடுதலை சாத்தியமாகும் என்று சொல்கிறது.    ஒட்டுமொத்தமான    சமூக - சமதர்ம அமைப்பிலேயே பெண்ணும் நிரந்தரமாக சமத்துவநிலை பெறுகிறாள்    என்று இது கூறுகிறது. இந்தியாவில்/ தமிழகத்தில்,    பெண்ணியச்    சிந்தனைகளில் இதுவே பெரும்பான்மையாகக் காணப்படுகிறது.

இந்தியாவில்/ தமிழகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படும் பெண்ணியச் சிந்தனை எது?

இந்தியாவில்/ தமிழகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படும் பெண்ணியச் சிந்தனை சமதர்மப் பெண்ணியம்.

4.3 பெண்ணியத்திறனாய்வு : வரையறைகள்

‘சமூக வரலாற்றில், மக்களில் பல பகுதியினர் ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வந்தனர்; அதற்கான காரணகாரியங்களை வெளிப்படுத்த வேண்டும்; அதன் வழி, மாற்றங்களையும் கொண்டு வரவேண்டும்” - இது, பெண்ணியத் திறனாய்வின் நோக்கமாகும். பெண்ணின் நோக்கிலிருந்து செயல்படுவது இத்திறனாய்வு. பெண் விடுதலை என்ற ஒளியில் பெண்ணியத் திறனாய்வு என்பது, சமுதாயம் என்ற பன்முகப்பட்ட அனுபவங்கள் தந்த உணர்வு நிலையில், பெண்ணின் ஆளுமை எவ்வாறு இலக்கியத்தில் வெளிப்படுத்தப்படுகிறது என்று பார்ப்பதாக அமைகிறது. ஆனால் அத்தோடு அமையாது, இதுகாறும் பெண்கள் பற்றிச் சொல்லப்பட்டு வந்த நியாயங்கள், உருவாக்கப்பட்டு வந்த மதிப்புகள், கற்பிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட புனிதங்கள் என்பனவற்றை அடையாளங்கண்டு விளக்குவது, பெண்ணியத் திறனாய்வு ஆகும். இந்தச் சமூக அமைப்பு, ஆண்களை மையமிட்டது; அதனை எதிர்கொண்டு, பெண்களின் எதிர்வினைகளை இது முன்வைக்கிறது.

மரபுவழிவந்த இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுவரும் பெண் பற்றிய போலியான கருத்துருவாக்கங்களை உடைத்தெறிவதும், பெண்    அடக்குமுறைகளின்    பல    வடிவங்களை வெளிக்கொணர்வதும், பாலியல் (sex) மற்றும் பாலினம் (gender) ஆகியவற்றை    மையப்படுத்தி, அதிகார உறவுகளையும்    ஆதிக்க மனப்பான்மைகளையும் எடுத்துக்காட்டுவதும் பெண்ணியத் திறனாய்வின் பணிகளாகும். இவ்வாறு கேட் மில்லட் (Kate Millet) கூறுவார்.

சமூகவியல், வரலாற்றியல், உளவியல், மார்க்சியம், அமைப்பியல், பின்னை அமைப்பியல் முதலிய ஏனைய பிற கோட்பாடுகளோடு இது நெருக்கம் கொண்டிருக்கிறது. மேலும், இதன் கருத்துநிலைகள், மிதவாதம்,    தீவிரவாதம் முதலிய பல பண்புகளைப் பெற்றிருக்கின்றன.

4.3.1 பெண்ணியத்திறனாய்வு : மூன்று கோட்பாடுகள்

மேலை நாடுகளின் சூழலில் பெண்ணியம், மூன்று வகையான கோட்பாடுகளாக வெளிப்படுகின்றது. அவை:

1. பிரஞ்சுப் பெண்ணியத் திறனாய்வு. இது உளவியல் பகுப்பாய்வு முறையில் பெண்ணியத்தை விளக்கவேண்டும் என்கிறது. பெண்ணின் சுயமான விருப்பங்கள், உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், இவற்றின் முறிவுகள், சிதைவுகள் முதலியவை உள்ளத்தே அழுத்தப்பட்டிருக்கின்றன (Repression). அவை ஏற்புடைய சூழ்நிலைகள் வருகிறபோது பல வடிவங்களில்- குறியீடுகளாகவோ, படிமங்களாகவோ, சொற் சிதறல்களாகவோ- வெளிப்படுகின்றன. இவ்வாறு பிரஞ்சு பெண்ணியக் கோட்பாடு சொல்கிறது.

2. ஆங்கிலப் பெண்ணியத் திறனாய்வு. இது முக்கியமாக, மார்க்சிய ஒளியில் பெண்ணியத்தை விளக்குகிறது. பெண் ஒடுக்கப்பட்டவள் (Oppression) என்ற கோணத்தில், வரலாற்றின் இறுக்கத்தில் சமுதாயத்தில் பெண் ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறாள் என்றும் பெண்ணடிமைத்தனம் பல்வேறு வடிவங்களையும் செயல்நிலைகளையும்    கொண்டிருக்கிறது என்றும், இது பெண்ணியத்தைக் காணுகின்றது.

3. அமெரிக்கப் பெண்ணியத் திறனாய்வு. இது,முக்கியமாக, புறவய நிலைக்குச் செல்லாமல், இலக்கியப் பனுவலை (text) மையமிட்டே செல்லுகின்றது. பெண்ணியம்,இலக்கியப் பனுவல்களில் எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் காட்டிக் கொள்கிறது, அல்லது, அதனைச் சொல்லிக் கொள்கிறது (Expression) என்று காண்பதை வலியுறுத்துகிறது. பின்னை அமைப்பியல் கூறும் வழியை இது பயன்படுத்திக் கொள்கிறது.

இந்தியச் சூழலிலோ, தமிழ்ச் சூழலிலோ பெண்ணியத்திறனாய்வு, இவ்வாறுதான் இருக்கிறது என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாது. இந்த மூன்றனுடைய தாக்கங்களும் இங்கே பரவலாக உண்டு. ஆயினும், முக்கியமாக,ஆங்கிலப் பெண்ணியத் திறனாய்வுமுறையே, இங்கே அதிகம் வழக்கத்திலுள்ளது என்று சொல்ல வேண்டும்.

4.3.2 பெண்ணியப் பார்வையில் பெண்ணடிமை

வரலாற்று    நிலையில் தமிழ்ச் சமூக அமைப்பில் பெண்ணடிமைத்தனம் எவ்வாறு இருந்தது என்பதனையும்,அதனைச் சங்கப்பாடல் எவ்வாறு பதிவு செய்திருக்கிறது என்பதனையும் ஓர் எடுத்துக்காட்டு மூலம் இங்கே காணலாம். மன்னன் பூதபாண்டியன் மாண்டு போகின்றான். மனைவி பெருங்கோப் பெண்டு, அவன் எரியுண்ட ஈமத்தீயில் தானும் விழுந்து சாக முனைகிறாள். அருகே இருந்த சான்றோர் தடுக்கின்றனர். அதனை மறுத்து, ‘பல்சான்றீரே பல் சான்றீரே..... பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான்றீரே..’ என்று விளித்து அவள் பேசுகிறாள்!

     அணில் வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்திட்ட

    காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது

    அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்

    வெள் எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட

    வேளை வெந்தை வல்சி யாகப்

    பரல்பெய் பள்ளிப்பா யின்று வதியும்

    உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ...

    (...எமக்கு)

    நள்ளிரும் பொய்கையும், தீயும் ஓரற்றே.”

                 (புறம். 246)

இந்தப் பாடலைக் கொண்டு, பெருங்கோப் பெண்டு, எவ்வளவு அன்பு கொண்டிருந்தாள் அவனிடம் என்றும், என்னே அவள் கற்புத் திறன் என்றும் வியந்து பலர் விளக்குகின்றனர். ஆயின், பெண்ணியத் திறனாய்வு இந்த விளக்கத்தை மறுக்கிறது. இந்தப்பாடலில், எங்காவது பூதபாண்டியன்- பெருங்கோப்பெண்டு அன்பு சொல்லப்பட்டிருக்கிறதா? இல்லை.

காதல் கொண்ட அவனைப் பிரிந்திருக்கமுடியாது என்று எங்காவது அவள் சொல்லியிருக்கிறாளா? இல்லை. கணவன் இறந்த பின், அந்தப் பொறுப்பு இவளுக்குத் தரப்படலாம் என்று குறிப்புரையாக எதாவது உண்டா? இல்லை. ஆனால் கைம்மை நோன்பின் கொடுமை, பெயரளவில்    உயிரோடு    இருந்து    நடைமுறையில் செத்துக்கொண்டிருக்கும் அவலம்- இதுதானே பாடல் முழுதும் இடம் பெறுகிறது! பெண்ணடிமைத்தனம் ஆழமாக வேரூன்றிக் கிடப்பதைப் பெண்ணியத் திறனாய்வு வெளிப்படுத்துகின்றது. அந்தப் பெண்- பெருங்கோப் பெண்டு, இறுதியில் “உயவற் பெண்டிரேம் அல்லேம்” என்று (உயவற் பெண்டிர் = கைம்மை நோன்பால் வருந்தும் பெண்டிர்)    பிரகடனப்படுத்துவது, வேதனைகளின்    குமுறலாக    மட்டுமல்லாமல், ஒரு கலகக்குரலாகவும்     (rebellious voice) வெளிப்படுகிறது. இவ்வாறு, பெண்ணியத் திறனாய்வு, மறைந்து கிடப்பவற்றிலிருந்து உட்பொருள் கண்டு விளக்குகிறது.

4.3.3 ஆண் - பெண் சமத்துவம்

எல்லா நிலைகளிலும் ஆணும் பெண்ணும் சமநிலையிலிருக்க வேண்டும்; சலுகைகள் வேண்டாம் - உரிமைகளே வேண்டும்; பெண்ணின் பங்கு இல்லையென்றால், குடும்பம் மட்டுமல்ல, சமூக முன்னேற்றமும் தடைப்படும் என்று பெண்ணியத் திறனாய்வு கூறுகிறது. ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் என்ற நாவலை முன்வைத்து இதனைப் பார்க்கலாம். எழுபதுகளுக்கு முன்னால், வழக்கமான குடும்ப நாவல்கள் எழுதியவர், இவர். அதன் பின்னர் சமூக உணர்வும் போராட்ட குணமும் கொண்ட படைப்புக்களை எழுதத் தொடங்கினர்.கரிப்பு மணிகள் என்ற நாவல், தூத்துக்குடி உப்பளத் தொழில் பற்றியதாகும். உப்பளத்தில் பல பிரச்சனைகள்- வேலை நிரந்தரமின்மை, தொழிலாளர்களுக்குப் பல வசதிக்குறைகள், போதாத கூலி, பெண்தொழிலாளர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் - இப்படி அவ்வப்போது பிரச்சனைகள். சங்கம் வைக்கிறார்கள். போராடுகிறார்கள். ஆனால் பாதிக்கப்படுகிறார்களே தவிர, வெற்றி கிடைக்கவில்லை. காரணம்? நாவலாசிரியர், கதையின் ஊடேயும் இறுதியிலும் முத்தாய்ப்பாக முன் வைக்கும் கருத்து: தொழிற் சங்கத்திலும் எல்லோரும் ஆண்கள். போராட்டத்தில் தலைமை தாங்குபவர்களும் முன்னணியில் நிறுத்தப்படுபவர்களும் ஆண்கள். தொழிலாளர்களுள், பாதிக்குமேற்பட்டவர்கள் பெண்கள்; ஆனால், சங்க அமைப்புகளிலும் போராட்டங்களிலும் அவர்களின் பங்கு இல்லை. ஆண் ஆதிக்கம் வெற்றி தேடித்தராது. பெண்களின் பங்கு- செயல்பாடு- இல்லையேல் சமூக நியாயங்களும் உரிமைகளும் கிடைக்காது. இந்தக் கருத்து, நாவலின் சாராம்சமாகச் சித்திரிக்கப்படுகிறது. எனவே ஆண் பெண் சமத்துவம் என்பது சமுதாயத்தின் பல பரிமாணங்களிலும் ஏற்படவேண்டும் என்று பெண்ணியம் வலியுறுத்துகிறது.