37

4.3.4 தொன்மங்களும் பெண்ணியமும்

தொன்மம் (myth) என்பது பழங்கதை வடிவம். நீண்ட வரலாற்றின் சில நிகழ்வுகளையும் உணர்வுகளையும் சாராம்சமான கதை வடிவத்தில் ஆக்கித் தருவது தொன்மம். சங்க இலக்கியத்தில் பாரி மகளிர், வெள்ளி வீதியார், பேகன் மனைவி கண்ணகி, நன்னனால் (காவல் மரத்தின் மாங்கனி தின்றதற்காகக்) கொலை செய்யப்பட்ட பெண், பூதபாண்டியனின் மனைவி- இவர்கள் பற்றிய செய்திகள் தொன்மம் சார்ந்தவை.

பெண்ணியத் திறனாய்வின் மூலம், இந்தப் படைப்புகளை ஆராய நிறைய வாய்ப்புண்டு. பெண் நிராகரிக்கப்படுதல், அவலத்திற்குள்ளாதல் முதலிய நிலைகளுக்கு ஆளாகிறாள். சமுதாயவியல் அடிப்படையில் பெண் ஏன் அடிமையானாள் என்பதை ஆராயலாம். களவு- கற்பு ஆகிய காதல் உறவுகளில்,    பெண்ணுக்கு    வரையறைகளும் ஒழுக்கக்கட்டுப்பாடுகளும், அச்சம் மடம் நாணம் போன்ற உணர்வுகளும் வலியுறுத்தப்படுகின்றன என்ற செய்தியும் இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு உதவும்.

4.3.5 பெண்மொழியும் பெண் உடலும்

மரபு வழியில் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துமொழி, ஆண் ஆதிக்கத்தைச் சார்ந்தது என்று பெண்ணியச் சிந்தனையாளர்கள் கருகின்றனர். உடல்வலு, வன்மை சார்ந்த மனம், அலட்சியம், ஒதுக்கம் (ஒதுக்கி வைக்கும் மனப்பான்மை), ‘தான்’ என்ற அகந்தை - முதலிய உணர்வுகள் சார்ந்த மொழி, ஆணின் மொழி. குடும்ப உறவுகளிலும் சமூக உறவுகளிலும் பணிந்து போகிறதாகப் பெண்ணின் மொழி வெளிப்படுகிறது. பெண் உரிமை, பெண் விடுதலை    முதலிய சூழல்களில் பெண்ணின் மொழி கூர்மையடைகிறது; இது, புதிய ஆளுமையைப் பிரதிபலிக்கிறது என்று பெண்ணியத் திறனாய்வு கருதுகிறது.

ஆண்டாண்டுக் காலமாகப் பெண்களின் உடலை - உடல் உறுப்புகளை ‘அழகு’ என்ற பெயரில் போகப் பொருளாகவே கருதி வருணித்து வருகிறார்கள் என்று பெண்ணியம் கூறுகின்றது. ஆனால், பெண், தன் உடல் உறுப்புகளின் வலிமையையும் மேன்மையையும் முதலில் அறிந்துகொள்ள வேண்டும் என்று பெண்ணியம் சொல்லுகிறது. பாலின வேறுபாடு், உடல்மொழி ஆகியவற்றைக் கொண்டு பெண் ஒடுக்கப்படுவதையும், இதன் பின்னால் அதிகார அரசியல் செயல்படுவதையும் வெளிப்படுத்துகிறார், கேட் மில்லட் என்ற பெண்ணியத் திறனாய்வாளர், இவர் எழுதிய “பாலியல் அரசியல்” என்ற நூல் (Sexual Politics) இவ்வகையில் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது.

தமிழில் பெண் கவிஞர்கள் பலர் இன்று பெண்ணியச் சிந்தனை யுடையவர்களாக விளங்குகிறார்கள். அவர்களைப் பற்றியும் அவர்களுடைய கவிதைகளில் பெண்ணியம் படிந்து கிடக்கும் படிமங்கள், குறியீடுகள், பலவித சொல்லாடல்கள் பற்றியும் ஆராய்வது பெண்ணிலை வாத ஆராய்ச்சிக்கு உதவக் கூடியதாகும்.

பெண் - உடல்மொழி எனும்போது கருப்புப் பெண்ணியமும் (Black Feminism)    பெண்ணியல்    சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுவது நினைவுக்குவரும். பெண்ணடிமைத்தனம், பொதுவாக இருந்தாலும் அதனுள்ளும் கறுப்பர் இனத்துப் பெண்கள் கூடுதலாகவே பாதிக்கப் படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. தமிழ்ச் சூழலில், சிவப்பு - கறுப்பு என்ற நிறங்கள் பேதப்படுத்தப்பட்டு    அதனடிப்படையில்    பெண்கள் அவமானப்படுத்தப் படுகின்றனர். தொலைக்காட்சி ஊடகம், பெண்களை மோசமாகச் சித்திரிப்பதில், இந்த நிற வேற்றுமை மிகவும் வன்மை யுடையதாகக் காணப்படுகிறது. பெண்ணியத் திறனாய்வு இதனுடைய சித்திரிப்பு முறைகளைக் கவனமாக எடுத்துக் கொள்ளுகிறது.

4.4 பெண்ணியத் திறனாய்வின் பணி

பெண்கள் எவ்வாறு இலக்கியங்களிலும் ஊடகங்களிலும் சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று விளக்கவியல் அடிப்படையில் பார்ப்பது போதாது. சமூக- பொருளாதார- பண்பாட்டுத் தளங்களில் பெண்களின் சில இருப்புகளையும் எழுச்சிகளையும், தருக்கவியல் அடிப்படையிலும், எதிர்நிலையிலான முரண்கள் வழியாகவும், வரலாற்றுச் சூழமைவுகள் மற்றும் எதிர்காலத்துவம் என்ற பின்னணியிலும் பார்க்கப்பட வேண்டும். அதுவே பெண்ணியத் திறனாய்வின் பணியாகும்.

படைப்பாளிகள் ஆண்களா, பெண்களா என்பது முக்கியமல்ல- என்றாலும், பெண் என்ற அடையாளம், பெண் என்ற உணர்வு, பெண் என்ற அனுபவம் நேரடியாக இருக்கும் என்பதால் பெண் எழுத்தாளர்களிடம் பெண்ணியச் சிந்தனையையும் பெண்ணிய மொழியையும் எதிர்பார்ப்பது என்பது இயல்பே. பெண்ணிய எழுத்து, ஒடுக்கப்பட்ட பெண்ணின் உணர்வுகளை வெளியே கொண்டு வர வேண்டும். ஏனென்றால்,

4.5 தொகுப்புரை

இலக்கியத் திறனாய்வின் புதிய பரிமாணங்களில் ஒன்று, பெண்ணியத் திறனாய்வு ஆகும். நவீனத்துவத்தின் ஒரு வெளிப்பாடாகவும்,    உலக அளவில் விடுதலை பற்றிய உணர்வுகளின் ஒரு அங்கமாகவும் தோன்றியது, இது. வரலாறு நெடுகிலும் சமூக அமைப்பில்,    பெண்    அடிமைப்பட்டுக் கிடக்கிறாள்; தான், அடிமைப்பட்டிருப்பதும் அதிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதும் அவளுக்கே தெரியாது. ஆனால்,    அவளுக்குள் ஒடுக்கப்பட்ட நிலைமைகளுக்கு எதிராகப் போராட்ட உணர்வு தோன்றி வருகிறது என்ற கருதுகோள்களைக் கொண்டது,பெண்ணியம்.

இலக்கியத்தில் பெண் சித்திரிக்கப்படுகிறாள். ஆனால், எப்படிப் பட்டவளாக அவள் சித்திரிக்கப்படுகிறாள் - அவளுடைய ஆளுமையும்    அவளுடைய    தனித்தன்மைகளும், வெளிப்படும்படியாகவா - என்ற கேள்வியோடு, பெண்ணியத் திறனாய்வு தோன்றுகிறது. இதுகாறும் வெளிப்படாத பல உண்மைகளையும் சமூக அவலங்களையும் இந்தத் திறனாய்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் திறனாய்வில் தருக்கவியலும் உண்டு; கலகக் குரலும் உண்டு.

தமிழ்ச் சூழலில், பெண்ணியத்தை முன்னிலைப்படுத்திய சிந்தனையாளர்களில் மகாகவி பாரதியார், பெரியார் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். பெண்ணியச் சிந்தனையின் வழியாகத் தமிழில் சில நாவல்களும் வெளிவந்துள்ளன. அம்பை, ராஜம்கிருஷ்ணன், உமா மகேசுவரி முதலியவர்களும், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன், றஞ்சி, தயாநிதி, மல்லிகா, வசந்திராஜா, கருணா முதலிய ஈழத்துப் புலம்பெயர் (பெண்) எழுத்தாளர்களும் குறிப்பிடத் தகுந்தவர்கள், அண்மைக் காலமாகத் தமிழில் பெண் கவிஞர்கள் பலர், உணர்வுப் பூர்வமாகவும் எழுச்சியுடனும் பெண்ணிய நிலைப்பாட்டுடன் எழுதி வருகிறார்கள். பெண்ணியத் திறனாய்வில் ஈடுபாடு கொண்ட / தடம் பதித்த பெண் எழுத்தாளர்கள் குறைவு என்றாலும், இத்துறை மேலும் மேலும் வளர வாய்ப்புக்கள் பல உண்டு.

5.0 பாட முன்னுரை

    ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் என்ற வகைமைக்குள் தொழிலாளர், கூலி விவசாயி, புலம்பெயர்ந்தோர், மற்றும் பெண்கள், தலித்துக்கள் முதலியோருடைய பிரச்சனைகள் குறித்த எழுத்துக்கள் அடங்கும். சென்ற பாடத்தில் பெண்ணியம் பற்றிப் பார்த்தோம். அது எப்படி ஒடுக்கப்பட்டோர் வழிச் சிந்தனை முறையோ அதுபோன்று தலித்தியம் என்பதும் அத்தகைய பண்பு கொண்டதேயாகும். பெண்ணியம், மனிதகுலத்தில், பால் வேறுபாடு எப்படிப் பல கொடுமைகளுக்குரியதாக ஆகிறது என்பது பற்றிப் பேசுகிறது. தலித்தியம் என்பது சாதியப் படிநிலைகள் கொண்டு மனித சமூகம் பிரிக்கப்பட்டிருப்பதன் அவலங்களைப் பற்றிப் பேசுகிறது. பெண்ணியம் உலகளாவியது; ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குமேல் பல வடிவங்களில் - பல குரல்களில் பேசப்பட்டு வருவது.    தலித்தியம், வருணாசிரம தருமம் வேரூன்றியுள்ள இந்தியப் பெருநாட்டில் பரவிக்கிடப்பது. இதற்கும் ஒரு நூற்றாண்டுக்கால வரலாறு கூறப்பட முடியும் என்றாலும், மிக அண்மைக் காலத்தில்தான், அது ஒரு கொள்கை வடிவமாகவும் போராட்டக் கருவியாகவும் ஆகியுள்ளது. இலக்கியத்திலும் தலித்து- தலித்தியப் பார்வை ஆழமாகவும் கூர்மையாகவும் இடம் பெற்று வருகிறது. எனவே, திறனாய்வு இதில் அக்கறை கொள்வது இயற்கையே.

5.1 தலித்தியம் - ஒரு விளக்கம்

    அண்மைக்காலத்தில்,    சமூக - பண்பாட்டுத்தளத்தில் தோன்றியுள்ள தலித் எழுச்சி, கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது. பரவலாகவும் சற்று ஆழமாகவும் உரத்த குரலில் இது தன்னைக் காட்டி வருகிறது.

‘தலித்’ என்ற சொல் மராட்டியச் சொல்.‘ஒடுக்கப்பட்ட மக்கள்’ என்பது இதன் பொருள். இது சாதியைக் குறிப்பதல்ல. ஆனால், இன்று, ‘தாழ்த்தப்பட்ட மக்கள்’ என்ற பொருளை இது உணர்த்துகிறது. பஞ்சமர், அட்டவணைச் சாதிகள் (Sheduled castes and tribes), அரிசனங்கள், ஆதி திராவிடர்கள் என்றெல்லாம் முன்னர் அழைக்கப்பட்டு வந்த (அரசு நிலையில்    இன்றும் அப்படித்தான்) வகுப்பினர், அண்மைக்காலமாகத் ‘தலித்துகள்’ என்று அடையாளப்படுத்தப் படுகின்றனர். இன்று தலித் என்ற சொல், தாழ்த்தப்பட்ட சில சாதிகளின் ஒரு கூட்டுவடிவ இலச்சினையாகவும், சற்று விரிவான பொருளில் ஒரு பண்பாட்டு அரசியலின் அடையாளமாகவும் இருக்கின்றது. மேலும், இந்தச் சொல்லோடு, போராடுகிற ஒரு பண்பு, கூர்மையான ஒரு கருத்தாடல், ஒரு கலகக் குரல் என்ற பொருண்மைகளும் இணைந்துள்ளன. தலித் என்ற வழக்கு, குறிப்பிட்ட சில தாழ்த்தப்பட்ட வகுப்பினரைக் குறித்தாலும், இன்று சமூகச் சிந்தனையாளர்கள் பலரும் இந்தச் சொல்லை, சமூக விழிப்புணர்ச்சி பற்றிய சூழலில் பயன்படுத்துகின்றனர்.

5.1.1 தலித்திய வரலாறு

    இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் சூழலில், சமூகத்தின் பல மட்டங்களிலிருந்து எழுச்சியின் அசைவுகளும் அறிகுறிகளும் தோன்றின.    அவற்றில்    முக்கியமானது, ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியாகும். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர்,

தலித்து எழுச்சிக்கு வித்திட்டவர்கள்; அதுபற்றிய சிந்தனையையும் முன்வரைவுத் திட்டங்களையும் வகுத்துக் கொடுத்தவர்கள். கோயில் நுழைவுப் போராட்டங்கள் உள்ளிட்ட “ஒடுக்கப்பட்டோர் எழுச்சி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே    ஏற்பட்டுவிட்டது என்றாலும், தொடர்ந்து விடுதலைப்    போராட்டக் காலத்தில் அவ்வப்போது தலைகாட்டியது என்றாலும், 1990 - களில்தான் தலித் எழுச்சி, குறிப்பிடத்தக்க உணர்வு நிலையாகவும் போராட்டப் பண்பாகவும் ஆகியது.

1991, 1992 ஆகிய இரண்டு ஆண்டுகள் அம்பேத்கர் நூற்றாண்டு    விழா நடந்தது. இதனுடைய தூண்டுதல், தலித்தியத்திற்கு உந்து சக்தியாக இருந்தது. முக்கியமாக, ஜனநாயகம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையான விடுதலையைத்    தரவில்லை; இந்திய அரசியல் கட்சிகள் தங்களைப் பகடைக் காய்களாகவும், வாக்கு வங்கிகளாகவுமே (vote bank) பயன்படுத்துகின்றன என்ற உணர்வு தலித் மக்களை வெகுவாகப் பாதித்த சூழல், அது. எனவே தலித்தியம், ஒரு    வேகத்தோடு    எழுந்தது.    முக்கியமாகச் சிந்தனையாளர்களையும்    இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் ஈடுபட்டோரையும் இது அதிகமாகப் பாதித்தது. இதற்குமுன்    பிரபலமடைந்திருந்த பெண்ணியத்தைவிடத் தலித்தியமே    பரவலாகவும்    கூர்மையாகவும் படைப்பிலக்கியத்திலும் மற்றும் பண்பாட்டுத் தளங்களிலும் தடம் பதித்திருக்கிறது.

5.2 தலித்தியமும் இலக்கியமும்     

    தாழ்த்தப்பட்டவர்கள் (தலித்துகள்) பற்றிய குறிப்புகள் பழைய    இலக்கியங்களில்    காணப்படுகின்றன. சங்க இலக்கியத்திலும்    பக்தி    இலக்கியத்திலும் பிற்கால இலக்கியங்களிலும்    தலித்துகளின் வாழ்வும் பணியும் பேசப்படுகின்றன.    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சமய மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையில் தாழ்த்தப்பட்டவர்களை மையப்படுத்திய ‘பள்ளு இலக்கியம்’ போன்றவையும் உருவாயின. இன்றைய இலக்கியத்திலும் அது பேசப்படுகிறது. தனி இலக்கிய வகையாகவும் அது உருப்பெற்றுத் தலித் இலக்கியம் எனப் பெயர் பெற்றிருக்கிறது.

5.2.1 பழைய இலக்கியங்களில் தலித்துகள்

  தொல்காப்பியம் உள்ளிட்ட சங்கநூல்கள் உழைக்கும் மக்களைத் தாழ்த்தப்பட்டவர்களாகச் சித்திரிக்கின்றன. இழிசினன் (புறநானூறு, 82,287,289), இழிபிறப்பாளன், புலையன் (புறம்,360), புலைத்தி (புறம், 259,311)    முதலிய சொற்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. துடியெனும் இசைக்கருவியை இசைக்கிறவனைப் புறநானூறு (170) சித்திரிக்கின்றது.

    ‘இழி பிறப்பாளன் கருங்கை சிவப்ப

    வலி துரந்து சிலைக்கும் வன்கட் கடுந்துடி.’

    இந்தப் பாடலுக்கு அப்படியே பொருள் தருவது திறனாய்வாகாது. அவனுடைய கைகளைக் ‘கருங்கை’ என்று அடைகொடுத்துச் சொல்லுவதையும், கைகள் ‘சிவப்ப’ என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதன் காரணத்தையும், ‘துடி’ என்ற இசைக்கருவிக்குக்    கொடுக்கின்ற    அடைமொழிக்குரிய அவசியத்தையும் சொல்லவேண்டும். அப்போதுதான் அது தலித்திய வாழ்க்கையைக் காட்டும் திறனாய்வாக ஆகமுடியும்.

    பெரியபுராணத்தில் திருநீல கண்ட யாழ்ப்பாணர், திண்ணன், திருநாளைப் போவார் எனும் நந்தன் ஆகிய மாந்தர்கள் நாயன்மார்களாக வருகிறார்கள். இவர்களின் சித்திரங்கள்    வரலாற்றுப் பின்புலங்களோடும் காரண காரியங்களோடும் ஆராயப்படுகின்ற போது, தலித்தியத் திறனாய்வின் பயன் சிறப்படையும். இப்படிப் பழைய இலக்கியங்கள் சிலவற்றில் ‘இழிசினர்’ அல்லது ஒடுக்கப்பட்டோர் வருகின்றனர். ஆனால் மிகவும் குறைவாகவே இடம் பெறுகின்றனர். பல இலக்கிய வகைமைகளில் இவர்கள் இடம் பெறுவதே இல்லை. ஏன் என்று தலித்தியத் திறனாய்வு கேள்வி கேட்டுப் பதில் சொல்ல வேண்டும்.

ஆனால் இவர்களை அல்லது இவர்களின் உழைப்புகளைப் போற்றுவதற்காக இல்லை; அவர்கள் பெரிய    பண்ணையார்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்ளவேண்டும் என்ற உட்குறிப்பு இவற்றிலே உண்டு. பள்ளு இலக்கியம் பற்றித் திறனாய்வாளர் கோ. கேசவன் கூறும் கருத்து தலித்தியத் திறனாய்வுக்கு முன்னோடியாக அமைகிறது.

5.2.2 இன்றைய இலக்கியங்களில் தலித்துகள்

    தலித்து என்ற சொல்லை மையமாகக் கொண்டு, தலித்து பற்றிய கொள்கை உருவானது, தமிழில் 1990-களுக்குப் பிறகுதான். ஆனால் அதற்குப் பிறகுதான் தலித் இலக்கியம் தோன்றியது என்று சொல்வது பொருந்தாது. அந்தச் சொல் புதிதாக இருந்தாலும், அதே பொருண்மை நீண்டகாலமாக இருந்து வருவதுதான். அதுபோல், தலித் உணர்வு என்பதும் வெவ்வேறு வகைகளில் ஏற்கனவே இருந்து வருவதுதான்.

    இன்றைய இலக்கியம் என்பதைப் பொறுத்த அளவில், டி. செல்வராஜ் எழுதிய ‘மலரும் சருகும்’ (1970) என்ற நாவல்தான் முதல் தலித் நாவல் என்று சொல்லப்படவேண்டும். நெல்லை வட்டாரத்தைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல், தலித்துக்களை ஒரே தளத்தில்- ஒரே பரிமாணத்தில்- அல்லாமல், பல தளங்களில் பல பரிமாணங்களில் காட்டுகின்றது. கூலி விவசாயிகளாகவும் சிறு நிலவுடைமைக்கிழார்களாகவும் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட பாமர மக்கள் எப்படித் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும்,    தங்கள் நிலங்களையும் தொழில்களையும் காப்பாற்றிக் கொள்ளவும் துன்பப்படுகிறார்கள் என்பதை இந்த நாவல், எதார்த்தமான உத்தியில் சித்திரிக்கின்றது. இவர்கள் மத்தியில் தோன்றிய ஒரு இளைஞன் சப்இன்ஸ்பெக்டராக ஆகிறான். ஆனால் அந்த அதிகாரமும் புதிய உறவுகளும் அவனைத் தன்னுடைய சக மனிதர்களுக்கு எதிராக நிறுத்துகின்றன. இன்னொருவன், ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வருகிறவன்;    தன்னுடைய    மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு அவர்களுக்காக உழைக்கிறான். இந்நாவலில் வருகிற ஒவ்வொரு பாத்திரமும், தலித்துகளின் மாறிவரும் வாழ் நிலைகளையும் உணர்வுகளையும் நடப்பியல் நிலையில் சிறப்பாக வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது.    அடுத்து, ஈழத்தின் சூழலில் கே. டானியல் எழுதிய ‘பஞ்சமர்’ என்ற நாவலும் தலித்துக்களின் வாழ்க்கையை எதார்த்தமாகவும் போராட்டப் பண்போடும் சித்திரிக்கின்றது.