38

ஆனால் இவர்கள், சமூக மாற்றம் வேண்டுகிற புரட்சிகர மனப்பான்மை கொண்டவர்களாதலால் தங்கள்    எழுத்துக்களை ‘தலித்’ எழுத்துக்கள் என்று அடையாளப்படுத்த விரும்புவதில்லை. மேலும் தலித்துகளின் சாதியடையாளத்தை முதன்மைப் படுத்தாமல் அவர்களை ஒரே நேரத்தில் தலித்துகளாகவும், உழைப்பாளிகளாகவும் பார்க்கின்ற பார்வை, இவ்வகை எழுத்தின் முக்கியமான பண்புகளில் ஒன்று. ஸ்ரீதர கணேசன் என்பவரின் உப்பு வயல் என்ற நாவலில் இந்தப் போக்கு முதன்மையாக உள்ளது. ஒரு தலித் பெண்ணின் வாழ்க்கை அனுபவங்களைச் சித்திரிக்கின்றது இந்த நாவல். அவள் ஒரு பெண்; ஒரு தலித்; உப்பளத் தொழிலாளி என்ற மூன்றும் ஒன்றாக இயங்குகிற ஒரு வடிவமாக அவள் விளங்குகிறாள். உண்மையுணர்வோடும் போராட்ட உணர்வோடும் கூடிய இந்த நாவல், தலித் நாவல் என்ற வகையில் புதியதொரு கோணத்தைச் சேர்ந்ததாகும்.

 சிறுகதைகள், புதினங்களன்றியும் தலித் சிந்தனையாளர்கள் பலர் கவிதைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மிகச்சிறந்த கவிதைகள் வந்துள்ளன. மதிவண்ணன், என். டி. ராஜ்குமார், உஞ்சைராஜன், பாமரன், இராச. முருகுபாண்டியன், பிரதிபா ஜெயச்சந்திரன், பாரதி வசந்தன் முதலிய பெயர்கள் இத்தகைய கவிஞர்களின் அணிக்கு அழகு சேர்க்கின்றன.

5.3 தலித்துக் கலைவடிவம்

    கலை என்பது வட்டாரம், இனம், சாதி, வர்க்கம் முதலியவற்றைச்    சார்ந்து அமைவதுதான். தலித்துகளின் அழகியல் வெளிப்பாடுகளில் அவர்களின் கலை வடிவங்கள் முக்கியமானவை. தலித்து மக்களின் கலை வடிவங்கள், வெளியிடங்களில் நிகழ்த்தப் பெறுகிற நிகழ்த்துகலை வடிவங்களே ஆகும். மேலும் உயர்சாதியினரிடம் காணப்படுவது போன்ற தூலமற்ற நுண்கலை வடிவம் (Abstract Art Form) இவர்களிடம் மிகக் குறைவு. பெருந்தெய்வ வழிபாடுகளைச் சார்ந்திருத்தலும், வைதிகச் சடங்குமுறைகளைச் சார்ந்திருத்தலும் தலித்துக் கலைகளில் இல்லை. நவீன மேடைகள், பெரிய அரங்குகள் முதலியவை இவர்களின் கலை நிகழ்வுகளில் கிடையாது.

    தலித் மக்களின், முக்கியமான கலை வடிவங்களாகக் கூறப்பட்டுபவை:

 பறையாட்டம், தப்பாட்டம், பெரிய மேளம், நையாண்டி மேளம், கரகாட்டம், மாடுபிடியாட்டம், ராசா - ராணியாட்டம், கரடியாட்டம்,    உறுமி மேளம், குறவன் குறத்தியாட்டம் முதலியவைகளாகும்.

சிறு தெய்வங்களையும், சிறு தெய்வங்கள் தொடர்பான கதைகள் அல்லது தொன்மங்களையும், நடைமுறை வாழ்வில் கண்ட அல்லது    வெகுவாகப் பாதித்த செய்திகளையும் இவை சொல்லுகின்றன. தெய்வங்களின் வழிபாட்டு இடங்கள், நடவு நடுதல், கதிர் அறுப்பு முதலிய விவசாயம் நடைபெறும் வயல்வெளிகள், காடுகள், சாவுகள் நடக்கிற இடங்கள்- இவற்றிலேதான் இவை அதிகம் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் அண்மைக் காலங்களில் தலித் கலை வடிவங்கள் ஒரு ‘வித்தியாசம்’ என்ற முறையில், அரசு விழாக்களிலும், பொதுக் கலை அரங்குகளிலும் ஊர்வலங்களிலும் நிகழ்த்தப்படுகின்றன.

5.3.1 தலித்திய நாட்டுப்புறக் கலைகளும் நாடகங்களும்

    சங்க காலத்திலிருந்தே பல கூத்து வடிவங்கள், பாமர மக்கள் மத்தியிலே பிரத்தியேகமாக வழங்கி வந்தன. தொடர்ந்து எல்லாக்    காலங்களிலும் செவ்வியல் கலைவடிவங்களுக்கு இணையாக, இன்னொரு பக்கம், தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாகப் பங்கு பெறுகிற கூத்துக்களும் இருந்து வந்தன. நாயக்கர் காலத்தில் பள்ளு நாடகங்கள், குளுவ நாடகங்கள், குறவஞ்சி நாடகங்கள் முதலியவை பிரசித்தமாக இருந்தன. ‘அரக்கன்வதை’ என்ற கதை சொல்லல் மரபும் இருந்தது. மேலும்,

நொண்டி நாடகங்கள் என்ற வகை மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். ஆட்டமும் கூத்தும் பாட்டும் இணைந்த எள்ளலும் நகைச்சுவையும் கொண்ட ஒரு கலை வடிவம், இது.

    தலித் மக்களை - அதாவது, அன்று தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்பட்ட மக்களை மையமாகவும் நாயகர்களாகவும் கொண்டு பல நாட்டுப்புறக் கதைகளும் கதைப்பாடல்களும் (Ballads) தோன்றியுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை, காத்தவராயன் கதை மற்றும் மதுரைவீரன் கதை ஆகியவை. காத்தவராயன், பறையர் இனத்தவன்; மதுரை வீரன், சக்கிலிய இனத்தவன். இரண்டு பேருமே தங்கள் சாதிக்கு மீறிய உயர்சாதி. மற்றும்    ஆளும்    இனத்தைச் சேர்ந்த பெண்களைக் காதலிக்கிறார்கள். அதற்காகப் பழி வாங்கப்படுகிறார்கள். கொலைக்கும் செத்தவர் ஆவிக்கும் பயந்தவர்களால் இவர்கள் சிறு    தெய்வங்களாகவும் ஆக்கப்பட்டார்கள். தலித்தியத் திறனாய்வுக்கு, இவை சிறந்த களங்களாக அமையக் கூடியன. நந்தன் கதை, திருநாளைப் போவார் கதையாகப் பெரிய புராணத்தில் இடம் பெறுகிறது. இந்தக் கதையினைத் தாழ்த்தப்பட்ட இனத்தவர், மற்றும் பண்ணை - அடிமை விவசாயிகள் சார்பாக இருந்து, கதா கலாட்சேபமுறையில் கலை வடிவமாக ஆக்கியவர், 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண பாரதியார்.

கதையின் பெயர், நந்தனார் சரித்திரக் கீர்த்தனை. இன்று, நவீனத்துவத்தின் பின்னணியில், தலித்து நாடகங்கள் பல எழுதப்பட்டும் இயக்கப்பட்டும் வருகின்றன.

5.4 தலித்தியத் திறனாய்வு - வரையறைகள்

    

    தலித்திய வழியிலான திறனாய்வு என்பது, நடைமுறையில் சமுதாயவியல் திறனாய்வேயாகும். இலக்கியத்தில் தலித்து மக்கள் எவ்வாறு சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள், அவர்களுடைய வாழ்க்கையனுபவங்கள், உணர்வுகள், சிந்தனைகள், எதிர்வினைகள் முதலியவை எவ்வாறு சித்திரிக்கப் பட்டுள்ளன என்று பார்ப்பது இதனுடைய பணி. இது ஒரு பொதுவான வரையறைதான். ‘தலித்’ என்பதை    விதந்து     (குறிப்பிட்டு)    பிரத்தியேகமாகச் சொல்லுவதற்குரிய காரணத்தையும் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

“தலித்துகளுக்கு    பிரத்தியேகமான - வித்தியாசமான- வாழ்நிலைகள் உண்டு; வித்தியாசமான வரலாற்றுச் சூழல்கள் உண்டு;    தாழ்த்தப்படுதல், ஒடுக்கப்படுதல், தீண்டாமைக்கு ஆளாதல், பொருளாதார நிலையில் பிறரைச் சார்ந்திருத்தல் எனும் கொடிய நிலைகள் உண்டு”- என்ற கருதுகோள்கள் அல்லது முன்னோட்டமான கருத்தியல்கள் தலித்தியத் திறனாய்வுக்குச் சரியான    பார்வையைத் தருபவையாகும். மேலும்,

    குறிப்பிட்ட    வகுப்பினரின் வாழ்க்கையை - அதன் பிரச்சனைகளைச் - சொல்லுவதாக இருந்தாலும் அதனை, நேர் கோடாகப் பார்ப்பதை இது மறுக்கிறது. சாதியம், தீண்டாமை, என்பது தத்துவம் என்ற அடிப்படை மதவாதத்தோடு பிணைந்து கிடக்கிறது என்பதனைக் கருத்திற் கொண்டு, அத்தகையதொரு சூழலை மறுதலிப்பதாகவும், மாற்றுத் (alternative) தேடுவதாகவும் தலித்துக்களின் வாழ்க்கைச் சித்திரம் அமைய வேண்டும் என்று இத்திறனாய்வு கருதுகிறது. எனவே தலித் இலக்கியத்தை இயங்கியல் (dialectics) முறையில், முரண்பட்ட சக்திகளின் மோதலாகப்பார்க்க வேண்டும். இது, இந்தத் திறனாய்வின் அடிப்படையான பார்வைக் கோணமாகும்.

5.4.1 தலித் இலக்கியத்தின் பரிமாணங்களும் திறனாய்வும்

    தலித் வாழ்க்கை நிலைகளையும் தலித் உணர்வுகளையும், அவர்களுடைய தனிச் சிறப்பான பண்பு நிலைகள் என்று கொள்வதும் இவ்வகை எழுத்தின் முக்கியமான பணியாகும். அமிழ்த்தப் பட்டுக் கிடக்கும் தலித் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, ஒன்றோடு ஒன்றாயிணைந்த இரண்டு பக்கங்கள் உண்டு.

இவ்விரண்டும், பொருளாதார- சமூகத் தளங்களில் தொடர்ந்து காணப்படுகின்றவை. தலித் இலக்கியத்தின்    முக்கியமான பரிமாணங்களாக இவை விளங்குகின்றன.

    தலித்தியத்தின் இன்னொரு முக்கியமான பகுதி, தலித்தியப் பெண்கள் பற்றியது. தலித் என்ற முறையிலும் பெண் என்ற நிலையிலும்- இரண்டு பக்கங்களிலும் அவர்களுக்கு ஏற்படுகின்ற நிலை பற்றியது தலித்தியப் பெண்ணியம். சாதிய முறையிலான அடக்கு முறைகளின் ஒரு அடையாளமாக உயர்சாதிக்காரர்களால், தலித் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள். காவல் துறையும் நீதி மன்றங்களும் கூட இத்தகைய பெண்கள் மீது பரிவோ நியாய உணர்வோ கொள்வதில்லை என்பது இன்னொரு அவலம்.

    தலித்திய இலக்கியத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய கலையியல் பரிமாணம் ஒன்று உண்டு. அது,

பிராமணர்கள் தங்கள் மொழிவழக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். வாழ்க்கை நடைமுறைகள், புழங்குகிற பொருள்கள், பிற பிற சூழ்நிலைகள் காரணமாகத் தலித் மக்களிடம், தனிப்பட்ட சில மொழி வழக்குகள் காணப்படுகின்றன. உயர் சாதி மக்கள். அதனை இழிவழக்கு என்று கருதுதல் கூடும். ஆனால் அந்த மொழியில் உயிர்ப்பும் எதார்த்தமும் உண்டு. திறனாய்வு, இத்தகைய சொல்வழக்குகளையும் மொழி நடையையும் ஆழ்ந்து கவனித்து அதன் அழகையும் பயனையும் கண்டறிந்து சொல்ல வேண்டும். அதேபோது இந்த மொழிவழக்கு, சூழ்நிலைகளையும் காலங்களையும் பொறுத்து மாறுதல் அடையக் கூடியதே என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.

5.4.2 தலித்தியத் திறனாய்வின் சில பிரச்சனைகள்     தலித் இலக்கியமும் அதன் திறனாய்வும் சந்திக்கின்ற ஒரு முக்கியமான கேள்வி, தலித் இலக்கியம், யாரால் எழுதப்படுவது என்பதாகும். தலித்துக்கள் பற்றித் தலித் எழுதுவதே தலித் இலக்கியம் என்றொரு கருத்துநிலை- முக்கியமாக, ஒரு சில தலித் எழுத்தாளர்களால் முன் வைக்கப்படுகிறது. ஒரு தலித்து, தலித்துக்களின் வாழ்க்கை பற்றி நன்றாக அறிந்திருப்பது சாத்தியம் தான்.

ஆனால் மாறிவரும் சூழலில், இன்றைய தலித்துகளில் பலர், புதிய சூழ்நிலைகளால், பல புதிய பின்புலங்களோடு வாழ்கிறார்கள். மேலும், பிறப்பினாலேயே, ஒருவர்,தன்னுடைய வர்க்கம், தன்னைச் சுற்றியிருப்போரின் தாழ்த்தப்பட்ட நிலை, தன்னுடைய வரலாற்றுப் பின்புலம் முதலியவற்றில் உணர்வும் சார்பும் பெற்றிருப்பார் என்பது நிச்சயமில்லை. இன்னொரு பக்கம் - வேறொரு சூழ்நிலையைச் சேர்ந்த ஒருவர், தலித்துக்களின் மேலோ, ஒடுக்கப்பட்ட பிறர் மேலோ, அனுதாபமும் அக்கறையும் கொண்டிருக்கக்கூடும் என்பதை மறுத்துவிடவும் முடியாது. எனவே சார்பு என்பது வெறுமனே பிறப்பின் அடிப்படையில் அமைவதல்ல. மனிதநேயம் சார்ந்த கொள்கை, உண்மையின் மீதான அக்கறை போன்றவை, சார்பு நிலைகளைத் தீர்மானிக்கின்றன.

    மேலும்,    குறிப்பிட்ட ஒன்றனை எழுதியவர் யார், அவருடைய சாதி என்ன, உட்சாதி என்ன என்பவற்றை வாசகரோ திறனாய்வாளரோ அறிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறாகும். அது    இயலாததும் ஆகும். படைப்பும், அதனுள்ளிருக்கும் உண்மைகளுமே முக்கியம்.

    தலித் இலக்கியத்தின் பிறப்பிடம் என்று அறியப்படுவது, மராத்திய மாநிலம், வளர்ப்பிடம் என்றறியப்படுவது, கர்நாடகம். பம்பாயில் 1958-இல் தலித் இலக்கியம்- பண்பாடு பற்றிய முதல் மாநாட்டில்    ஒரு    பிரகடனம்    அறிவிக்கப்பட்டது. “ஒடுக்கப்பட்டோரால் எழுதப்பட்ட இலக்கியமும் ஒடுக்கப்பட்டோர் பற்றி மற்றோரால் எழுதப்பட்ட இலக்கியமும் தலித் இலக்கியம் எனும் தனியடையாளத்துடன் ஏற்றுக் கொள்ளப்படுகிறது” தலித்தியத் திறனாய்வுக்கு இது ஒரு வரைகோடு தருகிறது.

    மேலும், யார் எழுதுகிறார்கள் என்பதை விட, யாருடைய வாழ்க்கை, எவ்வாறு தரப்படுகிறது என்று பார்ப்பது தான் சரியான கண்ணோட்டமாகும்; சரியான திறனாய்வாகும்.

5.5 தொகுப்புரை

    ஒட்டுமொத்தமான மக்கட் பிரிவினரில், தாழ்த்தப்பட்டோர் அல்லது தலித்து எனும் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு, அம்மக்களின் தனிச் சிறப்பியல் கூறுகளாக (distinctive features) உள்ளவற்றை ஆய்வு செய்வது, தலித்தியல் திறனாய்வாகும். வருணாசிரமம் அல்லது சாதிய அமைப்புமுறை கொண்ட இந்தச் சமுதாயத்தில் ஆண்டாண்டுக் காலமாகத் தொடர்ந்து தீண்டாமை, கடின உழைப்பு, ஏழ்மை முதலியவற்றால் அவதிப்படும் தலித் மக்கள், அண்மைக் காலமாக எழுச்சி பெற்று வருகிறார்கள். இந்த எழுச்சி, இலக்கியத்தில் ஆழமாகவும் பரவலாகவும் காணப்பட்டு வருகிறது. தலித் இலக்கியம் என்று அடையாளம் காட்டுகிற நிலையில் இது வளர்ச்சி பெற்றுள்ளது.

    தலித்தியத் திறனாய்வு என்பது, இலக்கியங்களில் தலித்துகள் சித்திரிக்கப்படுவதை மட்டுமல்லாது, ஏனைய பிற மக்களோடு அவர்களுடைய உறவுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதையும், அவர்களை இந்தச் சமுதாயம் எவ்வாறு பல்வேறு நிலைகளில் அடிமைப்படுத்தி அல்லது தாழ்த்தி வைத்திருக்கிறது என்பதையும், தலித்து மக்களின் வெவ்வேறு எதிர்வினைகளையும் ஆராய்கிறது. ஏனைய அணுகுமுறைகளோடு ஒப்ப நோக்கினால், இது அண்மைக் காலத்தில் அறிமுகமான அணுகுமுறைதான். ஆனால் அதே நேரத்தில், இது, அழுத்தமும் வேகமும் கொண்டியங்குவது ஆகும். சமுதாயவியல் திறனாய்வின் ஓர் அங்கமாக இருந்தாலும், அதற்கு அணிசேர்க்கிற விதத்தில் இது தனித்து இயங்குகிறது.

     தன் மதிப்பீடு : வினாக்கள் – II

1.

விடை2.