5

தேடுவதும் தேர்வதும் திறனாய்வின் அடிப்படையான பண்பு.

அஞ்சிறைத் தும்பியின் வாழ்க்கை போன்றது திறனாய்வாளனின் வாழ்க்கைப்பணி எவ்வாறு?

தேனை நாடிப் போவதும், நல்ல தேனை விரும்பித் தேர்வதும் தும்பியின் - தேனீயின் வாழ்க்கை. திறனாய்வாளனுக்கும் இதுவே தொழில் ; இதுவே வாழ்க்கை.

திறனாளி, இலக்கியத்தை அகவய நிலையில் நின்றுபார்க்கிறானா? புறவயநிலையிலா?

திறனாளி, இலக்கியத்தை புறவயநிலையில் நின்றுபார்க்கிறான்.

திறனாய்வாளன், யாரை, யார் பக்கமாக ஆற்றுப்படுத்துகிறான்?

வாசகனைப் படைப்பின் பக்கமாகத் திறனாளி ஆற்றுப்படுத்துகிறான் என்று பொருள்.

திறனாய்வாளன் செவிலியாக இருக்கிறான், எப்படி?

வாசகனுக்கு ஓர் உசாத்துணையாக இருப்பதுபோல, படைப்பாளிக்கும் - படைப்புக்கும் - ஒரு நல்ல படைப்புச் சூழலுக்கும் - செவிலியாக இருந்து நலம் பேணி வளர்த்தெடுக்கும் பணியைத் திறனாய்வு செய்கிறது.

திறனாய்வில் தெளிவு வேண்டப்படுவது ஏன்?

திறனாய்வாளன், தன்னுடைய அணுகுமுறையிலும், நோக்கத்திலும் சரியான கண்ணோட்டம் கொண்டிருக்க வேண்டும் என்று அதேபோது, தான் சொல்லுவதில் குழப்பமற்ற நிலையும் தெளிவும் இருக்க வேண்டும்.

திறனாய்வாளனுக்கு உள்ள சமூக உறவு என்ன?

இலக்கிய அழகு, செய்ந்நேர்த்தி மட்டுமல்லாமல், இலக்கியம் கூறுகின்ற மனித வாழ்க்கையனுபவங்களையும் மனித சமூக மதிப்புகள் அல்லது விழுமியங்களையும் திறனாய்வு ஆராய்ந்து சொல்லுவதால் அதற்கு சமூக உறவுகளும் தாக்கங்களும் இயல்பாகவே இருக்கின்றன.

திறனாய்வாளனுடைய சமூகப் பொறுப்பு, யாது?

திறனாய்வாளனுடைய சமூகப் பொறுப்பு என்பது, முதலில் நல்லதொரு இலக்கியச் சூழலையேற்படுத்துவதில் கவனம் செலுத்துவது, மொழி மற்றும் அரசியல் - சமூக - பண்பாட்டுத் தளத்தில் முறையான சரியான - சிந்தனைப் பரப்பைக்     கட்டமைப்பது முதலினவாகும்.

திறனாய்வு, இலக்கியம் மீது அக்கறை கொள்வதற்குரிய முக்கிய காரணம் என்ன?

    திறனாய்வு, இலக்கியத்தின் மேல் அக்கறை கொள்கிறது என்றால், முக்கியக் காரணம் இலக்கியம் என்ன சொல்கிறது; அதனை எப்படிச் சொல்கிறது என்று அறிய வேண்டும்; அவ்வாறு அறிந்ததைச் சொல்ல வேண்டும் என்பது தான்.

திறனாய்வுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு, எந்த முனையில் அல்லது எந்தக் கோணத்தில் இருக்கிறது?

    திறனாய்வாளன், இலக்கியத்தைப் பார்க்கிறான். அது சொல்லும் வாழ்க்கையைப் பார்க்கிறான்; ஏன், எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கிறான். வாசகனுக்கு இவை பற்றி விளக்குகிறான். திறனாய்வுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு இந்த முனையில் அல்லது இந்தக் கோணத்தில் இருக்கிறது.

படைப்புக்குரிய படைப்பாளி பெறுகிற உந்துதல்கள் யாவை?

தன்னுடைய     வாழ்க்கையனுபவம்,     வித்தியாசமானது, விசேடமானது, என்று அவன்(ள்) கருதுகிறான்(ள்). பிறருடைய வாழ்க்கைப் பற்றி, அனுபவங்கள் பற்றி அறிந்து கொள்ள முயலுகிறான், கேட்டறிதல், உற்றறிதல், உய்த்தறிதல் என்பவற்றின் மூலமாக படைப்பாளி உந்துதல்கள் பெறுகிறான்.

இலக்கியம், வாழ்க்கையை அப்படியே சித்தரிக்கிறதா? அதனுடைய வாழ்க்கையனுபவம்எத்தகையது?

வாழ்க்கையை     அனுபவமாக்கித் தன்வயப்படுத்திக் கொள்வது, இலக்கியத்தின் வழிமுறை. தன்னுடைய வாழ்க்கை அனுபவம் மட்டுமல்லாமல் பிறருடைய வாழ்க்கையிலிருந்து பெறப்படுபவற்றைத் தன்வயப்படுத்தித் தன் அனுபவமாக ஆக்கிக் கொள்வதும், இலக்கியத்திற்குரிய வாழ்க்கையனுபவமாகும்.

வாழ்க்கையின் நேரடியான உண்மைகள், இலக்கியத்தில் என்னவாக ஆகின்றன?

நேரடியான புறவய உண்மை (external reality) எனும் வாழ்க்கை, படைப்பாளி படைப்புக்கோட்பாடு எனும் அகவய நிலைபெற்றுக் கலைவய உண்மையாக (artistic reality) இலக்கியத்தில் மாறுகிறது.

இலக்கியம் சொல்லியிருக்கிற வாழ்க்கையைத் திறனாய்வாளன் எவ்வாறு எடுத்துக் கொள்கிறான்?

    வாழ்க்கைச் சித்திரம், ஒரு கணநேரத்துச் சித்திரமாக இருந்தாலும், அந்தக் கணநேரம் என்பது கடந்த காலத்தின் ஒரு தொடர்ச்சி அல்லது ஒரு பகுதியேயாகும்; அதுபோல வருங் காலத்தின் ஒரு முன்கூறு அல்லது ஒரு பகுதியேயாகும்.

அறிஞர் தெயின் தரும் இலக்கியப் பரப்பின் மூன்று பரிமாணங்கள் யாவை?

அறிஞர் தெயின் தரும் இலக்கியப் பரப்பின் மூன்று பரிமாணங்கள் இனம், பண்பாட்டுச் சூழல் மற்றும் காலத்தின் மனம் ஆகும்.

வாழ்க்கையின் சில எதிர்நிலைகளை இலக்கியத்தில் மறுதலிக்கிற போது, அது எவ்வெவ்வகையில் வெளிப்படக்கூடும்?

மறுதலிக்கிறபோது, இதற்கு மாற்று (Alternative) கூறுவது உண்டு; தீர்வு போன்று சில கருத்து நிலைகளைக் கூறுவதும் உண்டு; இரண்டுமல்லாமல், மறுதலிக்கிற சித்திரமாகவே முடித்து விடுவதும் உண்டு.

இலக்கியத்தில் நழுவல் அல்லது தப்பித்தல் மனநிலை என்பது என்ன?

கதைமாந்தர்களையும் அவர்தம் வாழ்க்கையையும் சித்தரிக்கும்போது பிரச்சனைகள் பற்றியோ அவற்றை எதிர்கொள்வது பற்றியோ சித்தரிக்காமல், மிகையான கற்பனைகள், அலங்காரமான சொற்கோலங்கள் முதலியவற்றால் திருப்தியடைந்து சித்திரங்களை முடித்துவிடுவது ஆகும்.

தொலைநோக்குப் பார்வை அமைவதற்குக் காரணம் என்ன?

தொலைநோக்குப் பார்வை அமைவதற்குக் காரணம், படைப்பாளியிடம் வாழ்க்கைப்பற்றி, இந்தச் சமூக வாழ்க்கை பற்றி, ஒரு தீர்க்கமான கண்ணோட்டமும் சார்பு நிலையும் இருப்பதுவேயாகும்.

மொழித்திறன், இலக்கியத்திற்கு முக்கியமானது - எவ்வாறு?

    மொழியைப் பயன்படுத்துகிற விதம், இலக்கியத்தின் புலப்பாட்டுத் திறனை உணர்த்தும். அழகியல் உத்திகளையும் தொடர் மற்றும் பொருள் நிலைகளையும் இத்தகைய மொழித்திறன் பண்புகளாகும்.

மொழி, என்ன என்ன தளங்களிலிருந்து செயல்படுகிறது?

குறிப்பிட்ட காலம், இடம், இலக்கியத்தின் வகை (Genre and type),

படைப்பாளியின் தற்கூற்றுநிலை, கதைமாந்தர் பின்புலம் கூற்று,

வாசகர் / படைப்பு வெளியாகும் இதழ் ஆகியனவாகும்.

சொல்லுக்குப் பொருள் தரும் நிலையில் உள்ள இரு பண்புகள் யாவை?    நேரடிப் பொருள் தருவது (denotative / referential) மற்றும் குறிப்பு நிலையில் (Suggestrue / connotative).