55

பாராட்டு முறைத் திறனாய்வின் பண்பினைக் கூறுக ?

பாராட்டு முறைத் திறனாய்வு இலக்கியத்தின் நிறை , குறைகளைச் சமமாக அறிந்து மதிப்பீடு செய்யாமல் , நிறைகளை மட்டும் எடுத்துக் கூறி அவற்றைப் போற்றும் தன்மையைக் கொண்டது ஆகும் .

‘ எதனைப் போற்றுகின்றமோ அது வளரும் ’ என்று சொன்னவர் யார் ?

‘ எதனைப் போற்றுகின்றமோ அது வளரும் ’ என்று சொன்னவர் பாரதியார் .

முடிபுமுறைத் திறனாய்வின் அடிப்படையான பண்பு யாது ?

முடிபுமுறைத் திறனாய்வின் பண்பு ஒரே அளவுகோல் அல்லது ஒரேவிதமான வரையறை கொண்டு ஒன்றற்கு மேற்பட்ட இலக்கியங்களைப் பொருத்திப் பார்ப்பது ஆகும் .

விதிமுறைத் திறனாய்வுக்கும் முடிபுமுறைத் திறனாய்வுக்கும் உள்ள வேறுபாடு கூறுக ?

முடிபுமுறைத் திறனாய்வு என்பது சில அளவுகோல்களைக் கொண்டு , குறிப்பிட்ட இலக்கியம் பற்றிய முடிபுகளையும் மதிப்புகளையும் வழங்குவது ஆகும் .

விதிமுறைத் திறனாய்வு என்பது , விதிகளையும் அளவுகோல்களையும் அப்படியே ஓர் இலக்கியத்தில் பொருத்திக் காண முற்படுவது .

நெடுநல்வாடையை அகம் என்பது தவறு , அது புறமே என்று கூறிய உரையாசிரியர் யார் ?

நெடுநல்வாடையை அகம் என்பது தவறு , அது புறமே என்று கூறிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் .

செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு பற்றி விளக்குக ?

படைப்புவழித் திறனாய்வு இலக்கியத்திலிருந்து இலக்கணத்திற்குச் செல்லுகிறது .

இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் என்ற முறையில் அமைகிற திறனாய்வு வகை எது ?

இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் என்ற முறையில் அமைகிற திறனாய்வு வகை முடிபுமுறைத் திறனாய்வு .

பொதுவான விதிமுறைகளை உருவாக்குவதற்குப் படைப்புவழித் திறனாய்வுமுறை உதவுகிறதா ?

இல்லையா ?

ஆம். பொதுவான விதிமுறைகளை உருவாக்குவதற்குப் படைப்புவழித் திறனாய்வுமுறை உதவுகிறது .

விளக்க முறையை எவ்வாறு வரையறை செய்யலாம் ?

விளக்கமுறைத் திறனாய்வு என்பதைக் குறிப்பிட்ட இலக்கியப் பனுவலின் உட்பொருளையும் , அதனோடு இணைந்த , பொருத்தமான பிற வசதிகளையும் ஏற்புடையதாகச் சொல்லுதல் என்பதாக வரையறை செய்யலாம் .

விளக்கமுறைத் திறனாய்வு குறித்து அறிஞர் லியோன்லெவி தரும் விளக்கம் யாது ?

‘ ஒரு பொருள் அல்லது ஓர் அனுபவம் , குறிப்பிட்ட ஒரு முறையில் அல்லது மொழியமைப்பில் அமைந்திருக்குமானால் , அதன்மீது ஒளி பாய்ச்சி , அதன் உண்மையையும் பல்வேறு பண்புகளையும் வேறு சொல் வடிவங்களில் அல்லது மொழியமைப்பில் வெளிப்படுத்துவதே விளக்கமுறைத் திறனாய்வு எனப்படுகிறது ' என லியோன்லெவி விளக்குகிறார் .

திறனாய்வில் மதிப்பீட்டு முறை என்றால் என்ன ?

குறிப்பிட்ட ஓர் இலக்கியத்தில் சமுதாயம் பற்றிய செய்திகள் எவ்வளவு ஆழமாகவும் , உண்மையாகவும் , திறம்படவும் சொல்லப் பட்டிருக்கின்றன என்ற அடிப்படையில் அவ்விலக்கியத்தை மதிப்பிடலாம் .

இவ்வாறு மதிப்பிட்டுரைப்பதுதான் மதிப்பீட்டு முறைத் திறனாய்வின் அடிப்படைக் கருதுகோள் ஆகும் .

மதிப்பீட்டு முறையின் நோக்கம் யாது ?

ஒரு குறிப்பிட்ட இலக்கியத்தின் நிறை குறைகளைக் கண்டு , குணம் நாடிக் குற்றமும் நாடி , அவற்றுள் மிகை நாடி மிக்கன கொண்டு அது இத்தகையது என மதிப்பீடு செய்தல் , மதிப்பீட்டுத் திறனாய்வின் நோக்கம் ஆகும் .

தத்துவ நிலையில் அமைந்த புதுமைப்பித்தனின் கதையின் பெயர் என்ன ?

தத்துவ நிலையில் அமைந்த புதுமைப்பித்தனின் கதையின் பெயர் கயிற்றரவு .

பின்வருவனவற்றுள் ஒப்பிடுதலுக்கு அடிப்படையானது எது ?

( அ )

ஒப்பிடும் இரண்டு இலக்கியப்பனுவல்களும் ஒத்து இருக்க வேண்டும் .

( ஆ )

இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு இருக்க வேண்டும் .

( இ )

இரண்டிலும் ஒற்றுமையும் இருக்க வேண்டும் ; வேற்றுமையும் இருக்க வேண்டும் .

( இ )

இரண்டிலும் ஒற்றுமையும் இருக்க வேண்டும் ; வேற்றுமையும் இருக்க வேண்டும் .

ஒப்பீட்டுத் திறனாய்வின் நோக்கம் யாது ?

ஒப்பிடுவதன் நோக்கம் , ஒன்றனைவிட இன்னொன்று சிறப்பானது , உயர்வானது என்று பேசுவது அல்ல .

ஒவ்வொன்றன் சிறப்பையும் தனித்தனியே அறிவதற்கு ஒப்பீடு என்பது ஒருவழிமுறை அல்லது உத்தியே ஆகும் .

கம்பனை மேலைநாட்டு இலக்கியத்தோடும் , வடமொழி இலக்கியத்தோடும் ஒப்பிட்ட தமிழ் அறிஞர் யார் ?

கம்பனை மேலைநாட்டு இலக்கியத்தோடும் , வடமொழி இலக்கியத்தோடும் ஒப்பிட்ட தமிழ் அறிஞர் வ. வே. சு. ஐயர் .

பகுப்பு முறைத் திறனாய்வு - விளக்கம் தருக ?

பகுப்புமுறைத் திறனாய்வு ( Analytical Criticism ) என்பது குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகள் அல்லது கூறுகளை யாதாயினும் ஓர் அளவுகோல் அல்லது நோக்கம் கொண்டு பகுத்துக் காண்பது ஆகும் .

தமிழில் பகுப்பு முறைத் திறனாய்வைப் பயன்படுத்தியவர்களில் ஒருவரைக் குறிப்பிடுக ?

தமிழில் பகுப்பு முறைத் திறனாய்வைப் பயன்படுத்தியவர் சி.சு.செல்லப்பா .

அணுகுமுறை என்பதன் பொருள் என்ன ?

அணுகுமுறை என்பதன் பொருள் முறையாக நெருங்கும் முறை . அணுகுமுறை எவற்றை அடியொற்றி அமைகிறது ?