ஆசிரியப் பாவில் மயங்கிவரும் அடிகள் யாவை ?
ஆசிரியப்பாவில் இயற்றளை வெள்ளடியும் ( இயற்சீர் வெண்டளைகள் அமைந்த வெள்ளடி ) வஞ்சியடியும் மயங்கி வரும் .
ஆசிரியப்பாவில் அருகி வரும் அடிகள் யாவை ?
ஆசிரியப்பாவில் அருகி வரும் அடிகள் ஆசிரியப்பாவில் வெண்சீர் வெள்ளடி , கலியடி ஆகும் .
பட்டினப்பாலை எவ்வகைப் பா ?
பட்டினப்பாலை ஒரு நீண்ட வஞ்சிப்பாட்டு .
‘ கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை ’ - இது எந்தப் பாவுக்குரிய அடி ?
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை ’ - இது வஞ்சியப் பாவுக்குரிய அடி ஆகும் .
கலிப்பாவில் எந்தெந்த அடிகள் மயங்கி வரும் ?
கலிப்பாவில் வெண்பா அடிகளும் ஆசிரிய அடிகளும் மயங்கி வரும் .
ஐஞ்சீரடிகள் அருகிவரும் பாக்கள் யாவை ?
கலிப்பாவிலும் ஆசிரியப்பாவிலும் ஐஞ்சீர் அடிகள் அருகி வரும் .
கடையிணை முரண் என்பது யாது ?
கடையிணை முரண் என்பது அடிகளில் இறுதி இரு சீர்களில் சொல்லோ பொருளோ முரண்படத் தொடுப்பது .
கோதையின் தாழ்ந்த ஓங்குவெள் ளருவி - இது எவ்வகை முரண் ?
மேற்காட்டிய அடியில் நடு இரு சீர்கள் தாழ்ந்த x ஓங்கு என முரண்பட்டு வருவது இடைப்புணர் முரண் ஆகும் .
வருக்க எழுத்து என்றால் என்ன ?
வருக்கம் ( வர்க்கம் ) என்பது ஒரு மெய்யெழுத்தோடு பன்னிரண்டு உயிரெழுத்தும் சேர்ந்து வரும் பன்னிரண்டு உயிர்மெய்யெழுத்தைக் குறிக்கும் .
( க் + அ = க) இவ்வாறே கா , கி , கீ , கு , கூ , கெ , கே , கை , கொ , கோ , கௌ எனும் உயிர்மெய்கள் பிறக்கும் .
இந்தப் பன்னிரண்டும் ஒரு வருக்கமாகும் .
18 மெய்க்கும் இவ்வாறு தனித்தனியே வருக்கம் உண்டு என்பதை அறிவீர்கள் .
ஆவா - கூகூ - மாமா - ஏகீர் என வருவது எவ்வகை எதுகை ?
ஆவா - கூகூ - மாமா - ஏகீர் என வருவது நெடில் எதுகை ஆகும் .
மெல்லின எதுகை எவ்வாறு வரும் ?
மெல்லின மெய்க்கு வேறொரு மெல்லினமெய் எதுகையாக வருவது மெல்லின எதுகை ஆகும் .
நெடில் மோனைக்கு எடுத்துக் காட்டுத் தருக ?
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற்
சிறந்தன் றொழுக்க முடைமை ( முதுமொழிக்காஞ்சி - 1 )
தலையாகு எதுகை என்பது யாது ?
இரண்டாம் எழுத்துமட்டுமின்றிச் சீர்முழுவதும் ஒன்றிவருவது தலையாகு எதுகை .
அதாவது சிறப்பான எதுகை எனப்படும் .
ஆசு எழுத்துகள் யாவை ?
ஆசு என்பது ய , ர , ல , ழ எனும் இடையின மெய்கள் ஆகும் .
மூன்றாம் எழுத்து ஒன்றும் எதுகை எவ்வாறு வரும் ?
மூன்றாம் எழுத்து ஒன்றும் எதுகை என்பது இரண்டாம் எழுத்து ஒன்றாமல் மூன்றாம் எழுத்து ஒன்றி வரும் .
மருட்செந்தொடை என்பது யாது ?
மோனை இயைபு முதலிய எந்தத் தொடை அமைப்பும் இல்லாத பாடலைச் செந்தொடைப் பாடல் என்பர் .
அதன் புறனடையே மருட்செந்தொடை ஆகும் .
தாழிசைகளின் அடிச்சிறுமை ; பெருமை குறிப்பிடுக ?
தாழிசைகளுக்கு அடிச்சிறுமை இரண்டடி ; பெருமை நான்கடி .
வஞ்சிப்பாவில் கூன் எவ்வாறு வரும் ?
வஞ்சிப்பாவில் அடி முதலில் வருவது மட்டுமின்றி அடி இறுதியிலும் கூன் வரும் ; நடுவிலும் வரும் .
இடையிலும் இறுதியிலும் அசை கூனாக வருவது சிறப்புடையது ; சீர் கூனாக வந்தால் உகரத்தில் முடியும் .
மாச்சீராக மட்டுமே வரும் .
' திருத்தார்நன் றென்றேன் தியேன் ' - இது எவ்வகை விகாரம் ?
' திருத்தார்நன் றென்றேன் தியேன் ' - தீயேன் என்பதில் உள்ள நெடில் குறுகித் தியேன் என வந்துள்ளது .
ஆகவே இது குறுக்கல் விகாரம் .
வகையுளி என்றால் என்ன ?
வகை = வகுப்பு , பிரிப்பு ; உளி = உள்ளடக்கியது . அதாவது பிரிக்கப்படுவது என்பது பொருள் .