71

கலிப்பாவில் இடம் பெறும் உறுப்புகள் தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம் என்பன ஆகும்.

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவில் இடம்பெறும் உறுப்புகள் யாவை?

தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் ஆகிய நான்கு உறுப்புகள் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவில் இடம்பெறும் உறுப்புகள் ஆகும்.

அராகத்தின் அடிச் சிறுமை,பெருமைகளைக் கூறுக?

அராகம் நான்கடிச் சிறுமையும், எட்டடிப் பெருமையும் கொண்டது.

வெண்கலிப்பா எத்தனை வகைப்படும்?

வெண்கலிப்பாவை வெண்கலிப்பா, கலிவெண்பா என இரு வகைகளாகக் குறிப்பிடுவதுண்டு.

வஞ்சிப்பாவில் பெரும்பாலும் வரும் சீர்கள் யாவை?

    வஞ்சியுரிச்சீர் எனப்படும் கனிச்சீர்களால் ஆயது வஞ்சிப்பா. சிறுபான்மை காய்ச்சீர்களும் கலந்து வரலாம்.

வஞ்சிப்பா எவ்வாறு முடிவுறும்?

வஞ்சியடிகளின் இறுதியில் ஒரு தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் கொண்டு வஞ்சிப்பா முடிவடையும்.

வஞ்சிப்பா வகைப்படுத்தப்படுவதன் அடிப்படை யாது?

 வஞ்சிப்பா பாவுக்குரிய அடியை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப் படுகின்றது.

மருட்பாவின் பெயர்க்காரணம் கூறுக?

மருள்+பா = மருட்பா. மருள் = மயக்கம். மயக்கம் என்பது ஒன்றோடு மற்றொன்று கலந்து வருவதைக் குறிக்கும். வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து அமையும் பா,மருட்பா.

மருட்பாவில் அடி எண்ணிக்கை எவ்வாறு அமையும்?

முதலில் வரும் வெண்பா அடிகள் குறைந்த அளவு இரண்டடி வரும் ; அதிக அளவுக்கு வரம்பு இல்லை ; இறுதியில் ஆசிரியப்பா அடிகள் இரண்டடியாக வரும் எனப் புரிந்து கொள்ளலாம்.

மருட்பாவின் வகைகளைக் கூறுக.

மருட்பா, புறநிலை வாழ்த்து மருட்பா, கைக்கிளை மருட்பா,வாயுறை வாழ்த்து மருட்பா,செவியறிவுறூஉ மருட்பா என நான்கு வகைப்படும்.

புறநிலை வாழ்த்து என்றால் என்ன?

தெய்வத்தை வாழ்த்துவது வாழ்த்து. தெய்வத்தை முன்னிலையாக்கி வாழ்த்துவதும் உண்டு ; படர்க்கையில், புறத்தே நிறுத்தி வாழ்த்துவதும் உண்டு. இவ்வாறு புறத்தே நிறுத்தி வாழ்த்துவது புறநிலை வாழ்த்து ஆகும்.

வாயுறை என்பதன் பொருள் என்ன?

வாய் = வாய்மை, மெய்ம்மை ; வாயுறை = மருந்து எனவும் பொருள்படும்.

‘வாயுறை வாழ்த்து’ – விளக்குக?

வாயுறை     வாழ்த்து = மெய்ப்பொருளை உள்ளடக்கியுள்ள வாழ்த்து. வேப்பங்காயும் கடுக்காயும் போன்ற ஒவ்வாத சுவைகளையுடைய ஆன்றோர் சொற்கள் முதலில் கசப்பாயிருந்தாலும் பின்னர் நன்மை பயக்கும். இத்தகைய சொற்களைத் தடையின்றி, நல்ல நோக்கத்துக்குப் பயன்படுத்தி அறிவுறுத்துவது வாயுறை வாழ்த்து ஆகும்.

‘செவியறிவுறூஉ ‘- விளக்குக?

பெரியோர்களின் முன்னிலையில் அடங்கி அறங்களைப் பின்பற்றி வாழ்க என வாழ்த்துவது செவியறிவுறூஉ.

ஒவ்வொரு பாவுக்கும் உரிய இனங்கள் யாவை?

ஒவ்வொரு பாவுக்கும் உரிய இனங்கள் தாழிசை, துறை, விருத்தம் என மூன்று வகைப்படும்.

பா ‘வகை’ பா ‘இனம்’ இரண்டும் ஒன்றா?

பாக்களின் ‘வகை’ என்பது வேறு; ‘இனம்’ என்பது வேறு.

குறள் வெண்பாவின் இனங்கள் யாவை?

வெண்பா இனங்களுள் இரண்டடியாலானது குறள்வெண்பாவின் இனம் ஆயிற்று. 

குறள்வெண் செந்துறையின் பொருள் எவ்வாறு இருக்க வேண்டும்?

ஒழுகிய ஓசையும் (தடையில்லாத இனிய ஓசையும்) விழுமிய பொருளும் (மேன்மையான பொருளும்) பெற்று வரும்.

வேற்றுத்தளை, குறள்வெண்பாவில் நுழைந்தால் அதனை எவ்வாறு வகைப்படுத்தலாம்?

குறள்வெண்பா எழுதும் போது வெண்டளை அல்லாத வேற்றுத்தளை கலந்து, செப்பலோசை சிதைந்துவிடுமாயின் அது குறள்வெண்பா ஆகாது. அதனைக் குறட்டாழிசையுள் அடக்குவர்.

வெண்டாழிசையின் இலக்கணம் தருக?

மூன்றடியாய், ஈற்றடி வெண்பாப் போலச் சிந்தடியாய் வருவது வெண்டாழிசை ஆகும். இதற்கு வெள்ளொத்தாழிசை என்பதும் பெயர்.

வெண்டுறையின் அடி எண்ணிக்கையைக் குறிப்பிடுக?

குறைந்த அளவு மூன்றடிகளும் அதிக அளவு ஏழடிகளும் பெற்று வரும்.

ஓரொலி வெண்டுறை, வேற்றொலி வெண்டுறை - வேறுபாடு காட்டுக?

முதலில் வரும் சில அடிகள் ஓர் ஓசை அமைப்பிலும் பின்னர் வரும் அடிகள் வேறு ஓர் ஓசை அமைப்பிலும் வந்தால் அது வேற்றொலி வெண்டுறை எனப்படும்.எல்லா     அடியும் ஒரே மாதிரியான ஓசை அமைப்பில் வந்தால் அது ஓரொலி வெண்டுறை எனப்படும்.

அடியிறுதியில் தனிச்சொல் பெறும் வெண்பா இனம் எது?

அடியிறுதியில் தனிச்சொல் பெறும் வெண்பா இனம் வெளிவிருத்தம் ஆகும்.

வெளிவிருத்தத்தின் அடி எண்ணிக்கையைக் குறிப்பிடுக?

மூன்று அல்லது நான்கடிகளாய் வரும்.

ஆசிரியப் பாவின் இனங்கள் யாவை?ஆசிரியத் தாழிசை, ஆசிரியத் துறை, ஆசிரிய விருத்தம் எனும் மூன்றும் ஆசிரியப்பாவின் இனங்கள் ஆகும்.