வஞ்சி விருத்தம் எவ்வடியால் வரும்?
சிந்தடி நான்காய் வருவது வஞ்சி விருத்தம்.
வஞ்சி விருத்தத்தின் ஓசை அமைப்பு ஒரே தன்மையினதா?
வஞ்சி விருத்தத்தின் ஓசை அமைப்பு ஒரே தன்மையினது இல்லை இது பல்வேறு ஓசை அமைப்புகளில் வரும்.
வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம் வேறுபாடு என்ன?
குறளடி நான்கு தனித்து வருவது வஞ்சித் துறை; சிந்தடி நான்கு வருவது வஞ்சி விருத்தம்.
வஞ்சித் தாழிசை, வஞ்சித் துறை ஒற்றுமை வேற்றுமை தருக?
குறளடி நான்கு ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவது வஞ்சித் தாழிசை; குறளடி நான்கு தனித்து வருவது வஞ்சித் துறை;
வஞ்சிப்பா எவ்வாறு முடியும்?
வஞ்சிப்பாவில் வஞ்சியடிகளின் இறுதியில் தனிச்சொல் பெற்றுப் பிறகு ஆசிரியச் சுரிதகத்தால் முடியும்.
ஒழிபியலில் சொல்லப்படும் மூன்று வகையான இலக்கணக் கருத்துகள் யாவை?
(1) முதலிரண்டு இயல்களில் சொல்லப்படாமல் விடுபட்டவை.
(2) முன்பு சொல்லப்பட்டவற்றிற்குப் புறனடையாக, வேறுபட்டு வரும் கருத்துகள்.
(3) இதுவரை சொல்லப்படாத முற்றிலும் புதிய கருத்துகள்
சீரும் தளையும் சிதையுமானால் குற்றியலிகரமும் குற்றியகரமும் எவ்வாறு அலகிடப் பெறும்?
சீரும் தளையும் சிதையுமானால் குற்றியலிகரத்தையும், குற்றியலுகரத்தையும் ஒற்றுப் போலக் கொண்டு, அலகிடாமல் விட்டுவிட வேண்டும்.
அருளல்ல - தியாதெனில் - இதனைப் புளிமாங்காய் - கருவிளம்>கலித்தளை என அலகிடுவது சரியா?
சரி, இவ்வெண்பாவில் அருளல்ல தியாதெனில்>புளிமாங்காய் - கருவிளம், காய் முன் நிரை எனக் கலித்தளை வரும்.
சீரும் தளையும் சிதையுமானால் உயிரளபெடையை எவ்வாறு அலகிட வேண்டும்?
சீரும் தளையும் சிதையும் நிலை வருமானால் அளபெடை நெட்டெழுத்துப் போலவே கொண்டு அலகிடப் பெறும்.
ஐகாரக் குறுக்கம் எவ்வாறு அலகிடப் பெறும்?
அலகிடும்போது ஐகாரக் குறுக்கம் குற்றெழுத்தைப் போலக் கொள்ளப்பட்டு அதன்பின் வரும் குறில் அல்லது நெடிலுடன் சேர்த்து நிரையசையாக அலகிடப் பெறும்.
ஒற்று அளபெடுக்கும் போது அது எவ்வாறு கொள்ளப்படும்?
ஒற்று அளபெடுக்கும் போது ஒரு நேரசையாகக் கொள்ளப்படும்.
சீரின் முதலில் தனிக்குறில் நேரசையாக வரும் இடம் எது?
சீரின் முதலில் ஒரு குற்றெழுத்து விட்டிசைத்து வரும்போது அக்குற்றெழுத்துத் தனித்து ஒரு நேரசையாக வரும்.
ஏஎர், எலாஅநின் - இவற்றை எவ்வாறு அலகிட வேண்டும்?
ஏஎர்>ஏ-எர்> நேர் நேர்>தேமா அழாஅல்>அழா-அல்>நிரை நேர்>புளிமா எலாஅநின்>எலா-அ-நின்>நிரை நேர் நேர்>புளிமாங்காய் - இவற்றை இவ்வாறு அலகிட வேண்டும்.
கலிப்பாவில் வாராத சீர்கள் யாவை?
நேரீற்றியற் சீரும் (நேர் ஈற்று இயற்சீர்) (தேமா, புளிமா எனும் மாச்சீர்கள்) நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீரும் (கருவிளங்கனி, கூவிளங்கனி எனும் சீர்கள்) கலிப்பாவில் வாரா.
அகவற்பாவில் வாராத சீர்கள் யாவை?
ஆசிரியப்பாவில் நிரைநடுவாகிய வஞ்சி உரிச்சீர்கள் (கருவிளங்கனி, கூவிளங்கனி) வாரா.
வெண்பாவில் பிற பாக்களின் அடிகள் மயங்கி வருமா?
இல்லை, வெண்பாவைத் தவிர மற்ற எல்லாப் பாக்களிலும் பிற பாக்களுக்குரிய அடிகள் மயங்கி வரும்.
ஆசிரியப் பாவில் மயங்கிவரும் அடிகள் யாவை?
ஆசிரியப்பாவில் இயற்றளை வெள்ளடியும் (இயற்சீர் வெண்டளைகள் அமைந்த வெள்ளடி) வஞ்சியடியும் மயங்கி வரும்.
ஆசிரியப்பாவில் அருகி வரும் அடிகள் யாவை?
ஆசிரியப்பாவில் அருகி வரும் அடிகள் ஆசிரியப்பாவில் வெண்சீர் வெள்ளடி, கலியடி ஆகும்.
பட்டினப்பாலை எவ்வகைப் பா?
பட்டினப்பாலை ஒரு நீண்ட வஞ்சிப்பாட்டு.
‘கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை’ - இது எந்தப் பாவுக்குரிய அடி?
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை’ - இது வஞ்சியப் பாவுக்குரிய அடி ஆகும்.
கலிப்பாவில் எந்தெந்த அடிகள் மயங்கி வரும்?
கலிப்பாவில் வெண்பா அடிகளும் ஆசிரிய அடிகளும் மயங்கி வரும்.
ஐஞ்சீரடிகள் அருகிவரும் பாக்கள் யாவை?கலிப்பாவிலும் ஆசிரியப்பாவிலும் ஐஞ்சீர் அடிகள் அருகி வரும்.