பாடம் - 1
தமிழ் மொழியில் உள்ள ஒலிகளைத் தமிழ் இலக்கண நூலாரும், மொழியியலாரும் உயிர் ஒலிகள் (vowels), மெய் ஒலிகள் (consonants) என இரண்டு வகையாகப் பிரித்துள்ளனர்.
இனி, தமிழில் உயிர் ஒலிகள் தோன்றி வளர்ந்த வரலாற்றைப் பார்ப்போம்.
அகரத்துக்கும் இகரத்துக்கும் இடைப்பட்ட நிலையில் தோன்றிய ஒலி எகரம் ஆகும். இகர ஒலி எகர ஒலியாக ஒலிக்கப்படுவதைக் கீழ்க்கண்ட சொற்கள் காட்டும்
இலை > எலை
இடம் > எடம்
விஷம் > வெஷம்
சிவப்பு > செவப்பு
இணை > எணை
இயலும் > ஏலும்
இவ்வாறான சொற்களை நோக்கும்போது, இகர ஒலியிலிருந்து எகர ஒலி தோன்றி வளர்ந்தது புலனாகும்.
இதே போல அகரத்துக்கும் உகரத்துக்கும் இடைப்பட்ட நிலையில் ஒகர ஒலி தோன்றியது. உகர ஒலி ஒகர ஒலியாக ஒலிக்கப்படுவதைக் கீழ்க்கணட சொற்கள் காட்டும்.
உலகம் > ஒலகம்
உடம்பு > ஒடம்பு
உரல் > ஒரல்
உலை > ஒலை
உயரம் > ஒயரம்
துவை > தொவை
இவ்வாறான சொற்களை நோக்கும்போது உகர ஒலியினின்று ஒகர ஒலி தோன்றி வளர்ந்தது புலனாகும்.
இவ்வாறு முதலில் அ, இ, உ என மூன்றாக இருந்த உயிர் ஒலிகள் அ, இ, உ, எ, ஒ என ஐந்தாக வளர்ந்தமைந்தன.
சான்று:
அணி, ஆணி; பல், பால்.
இன்று, ஈன்று; விடு, வீடு.
உடல், ஊடல்; புண், பூண்.
எங்கு, ஏங்கு; கெட்டு, கேட்டு.
ஒட்டு, ஓட்டு; கொல், கோல்.
எனவேதான் தமிழில் குறிலும், அதற்குரிய நெடிலும் ஒலியனும் மாற்றொலியனுமாகக் கருதப்படாமல், தனித்தனி ஒலியன்களாகவே கருதப்படுகின்றன.
தமிழ் இலக்கண நூலார் ஒவ்வொரு குறில் உயிர்க்கும், அதன் இனமான நெடில் உயிர்க்கும் தனித்தனியான வடிவங்களைக் குறியீடுகளாகத் தந்துள்ளனர்.
குறில் நெடில்
அ ஆ
இ ஈ
உ ஊ
எ ஏ
ஒ ஓ
மொழியியலார் ஒவ்வொரு மொழியில் உள்ள ஒலிகளுக்கும் ரோமன் வரிவடிவத்திலே (Roman script) ஒருபொதுவான குறியீடு கொடுப்பார்கள். அவ்வகையில் தமிழ் மொழியில் உள்ள ஐந்து குறில் உயிர்களுக்குத் தனித்தனியே குறியீடுகள் தந்து, அவற்றிற்கு இனமான நெடில் உயிர்களுக்குத் தனித்தனியே குறியீடு தாராது, நெடில் உயிர் என்பதைக் குறிப்பிட /:/ என்னும் ஒரே குறியீடு மட்டுமே தருவர். அவர்கள் தரும் குறியீடுகள் பின்வருமாறு:
குறில் உயிர் ஒலிகள் ரோமன் வரிவடிவம் நெடில் உயிர் ஒலிகள் ரோமன் வரிவடிவம்
அ a ஆ a :
இ i ஈ i :
உ u ஊ u :
எ e ஏ e :
ஒ o ஓ o :
இதனால் தமிழ் இலக்கண நூலார் பத்து வரிவடிவங்களில் எழுதும் உயிர் ஒலிகளை, மொழியியலார் மொத்தம் ஆறு வடிவங்களில் கொண்டு வருகின்றனர். இதனை அவர்கள் ‘simplification’ என்பர். மேலும் ஐந்து நெடில் உயிர் ஒலிகளைக் குறிக்கக் கையாளும் குறியீட்டை அதாவது /:/ என்னும் ஒரே குறியீட்டை ‘Supra Segmental Phone’ என்றும் அழைப்பர். பத்து வரிவடிவங்களை, ஆறு வரிவடிவங்களாகக் குறைத்துக் கொள்வதில் எளிமைப் பண்பு காணப்படுகிறது.
தொல்காப்பியர் தமது இலக்கண நூலில்,
உந்தி முதலா முந்து வளி தோன்றி,
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ,
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புஉற்று அமைய நெறிப்பட நாடி,
எல்லா எழுத்தும் சொல்லுங் காலை
பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல
திறப்படத் தெரியும் காட்சி யான
(தொல்.எழுத்து.83)
என்ற நூற்பாவில் ஒலிகளின் பொதுப்பிறப்பு இலக்கணம் கூறுகிறார்.
இந்நூற்பாவிற்கு உரை கூறவந்த நச்சினார்க்கினியர் எனும் உரையாசிரியர்.
“தமிழெழுத்து எல்லாவற்றிற்கும் பிறப்பினது தோற்றரவைக் கூறுமிடத்து, கொப்பூழ் அடியாகத் தோன்றி முந்துகின்ற உதானன் என்னுங் காற்றுத் தலையின்கண்ணும் மிடற்றின்கண்ணும் நெஞ்சின்கண்ணும் நிலைபெற்றுப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் என்ற ஐந்துடனே, அக்காற்று நின்ற தலையும் மிடறும் நெஞ்சுங் கூட எட்டாகிய முறைமையையுடைய தன்மையோடு கூடிய உறுப்புகளோடு ஒன்றுற்று இங்ஙனம் அமைதலானே, அவ்வெழுத்துகளது தோற்றரவு வேறுவேறு புலப்பட வழங்குதலை உடைய”
என்று கூறுகிறார்.
கொப்பூழ் அடியில் உதானன் என்ற காற்றுத் தோன்றி வருகின்றது என்பது இன்றைய அறிவியல் ஆராய்ச்சிக்கு மாறானது. நெஞ்சில் உள்ள சுவாசப்பையில் இருந்தே காற்றுப் புறப்படும். அக்காற்று மிடற்றின் ஊடாகச் சென்று வாய்க்கு அல்லது வாய்க்கும் மூக்குக்கும் வருகின்றது என இன்றைய மொழியியலார் கொள்வர். இக்காற்றுத் தலைக்கும் செல்கின்றது எனக் கூறும் தொல்காப்பியர், தலை என்று கூறியிருப்பது எதைப் பற்றி எனத் தெரியவில்லை. ஆனால் தலைக்கு இக்காற்றுச் செல்வதில்லை என்கின்றனர் இக்கால மொழியியலார்.
தொல்காப்பியர் கூறியதையே நன்னூலார், தமது நன்னூலில் பிறப்பின் பொதுவிதியாகக் கூறும்பொழுது தலையை உச்சி என்று கூறுகிறார்.
நிறைஉயிர் முயற்சியின் உள்வளி துரப்ப
எழும்அணுத் திரள்உரம் கண்டம் உச்சி
மூக்குஉற்று இதழ்நாப் பல்அணத் தொழிலின்
வெவ்வேறு எழுத்து ஒலியாய் வரல் பிறப்பே
(நன்னூல்.74)
தலை மிடறு, நெஞ்சு என்னும் இடங்களில் நிலைபெற்று என்று தொல்காப்பியர் கூறுகிறார். ஆனால் நன்னூலார் இம்மூன்றுடன் மூக்கையும் சேர்த்து நான்கு ஆக்குகிறார்.
நன்னூலாரே தமது அடுத்த நூற்பாவில் உயிர் எழுத்துகளுக்கும் இடையினத்திற்கும் இடம் கழுத்தாகும், மெல்லினம் மூக்கை இடமாகப் பொருந்தும், வல்லினம் மார்பை இடமாகப் பெறும் என்று கூறுகிறார். ஆதலால் அவரும் உச்சியை ஏன் கூறினார் எனத் தெரியவில்லை. தொல்காப்பியர் கூறி இருப்பதனால் அவரும் கூறி இருக்கலாம் என்பர்.
அவ்வழி
ஆவி இடைமை இடம் மிடறு ஆகும்;
மேவும் மென்மை; மூக்கு உரம் பெறும் வன்மை
(நன்னூல்.75)
தொல்காப்பியர் உயிரெழுத்துகளின் பிறப்பைப் பற்றிக் கூறும்போது, ‘பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் மிடற்றின்கண் பிறந்த காற்றால் ஒலிக்கும்’ என்று கூறுகிறார். இக்கருத்தை அவர்,
அவ்வழி
பன்னீர் உயிரும் தம் நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்
(தொல். எழுத்து. 84)
என்ற நூற்பாவில் குறிப்பிடுகின்றார். எனவே உயிரொலிகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியரும் இக்கால மொழியியலாரும் குறிப்பிடும் கருத்துகள் பெரிதும் ஒத்தே காணப்படுகின்றன எனலாம்.
வரைபடம் – 1
நாவானது வாயினுள் மேலும், தாழ்ந்தும், இடைப்பட்டும் நின்று உயிர் ஒலிகளை ஒலிப்பதைக் காட்டுகிறது.
வரைபடம்-2
நாவானது வாயினுள் முன்னும், பின்னும், நடுவும் நகர்ந்து உயிர் ஒலிகளை ஒலிப்பதைக் காட்டுகிறது.
வரைபடம் -
நாவானது வாயினுள் மேலும், தாழ்ந்தும், இடைப்பட்டு நின்றும், முன்னும், பின்னும் நடுவும் நகர்ந்தும் ஒலிக்கின்ற உயிர் ஒலிகள் யாவை என்பதைக் காட்டுகிறது.
உயிர் ஒலிகளின் அட்டவணை
மேலே காட்டிய வரைபடங்களின் அடிப்படையில் மொழியியலார் உயிர் ஒலிகளைப் பின்வருமாறு அட்டவணை இட்டுக் காட்டுகின்றனர்.
முன் நடு பின்
மேல் இ, ஈ – உ, ஊ
இடை எ, ஏ - ஒ, ஓ
தாழ் – அ, ஆ -
இ, ஈ – முன் உயர் இதழ் குவியா உயிர் ஒலிகள் (
அ, ஆ – கீழ் அடி இதழ்குவியா உயிர் ஒலிகள் (Low Unrounded Vowels)
ஒ, ஓ – பின் இடை இதழ் குவி உயிர் ஒலிகள் (Mid Back Rounded Vowels)
உ, ஊ – பின் உயர் இதழ் குவி உயிர் ஒலிகள் (
பாடம் - 2
அகர உயிர் ஒலி, இகர உயிர் ஒலி ஆகிய இரண்டு உயிர் ஒலிகளின் கூட்டால் தோன்றியது ஐ என்றும், அகர உயிர் ஒலி, உகர உயிர் ஒலி ஆகிய இரண்டு உயிர் ஒலிகளின் கூட்டால் தோன்றியது ஒள என்றும் வடமொழியில் கூறப்படுகின்றன.
அ + இ = ஐ
அ + உ = ஒள
அகர இகரம் ஐகாரம் ஆகும் (தொல். எழுத்து, 54)
அகர உகரம் ஒளகாரம் ஆகும் (தொல். எழுத்து, 55)
என்ற நூற்பாக்களால் அறியலாம். தொல்காப்பியரின் இக்கருத்து வடமொழியில் ஐ, ஒள பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்தைப் பின்பற்றியதாகும்.
அ + இ = ஐ (a + i = ai)
அ + உ = ஒள (a + u = au)
ஐ என்பது பற்றித் தொல்காப்பியர் மற்றொரு கருத்தையும் கூறியுள்ளார். அகர உயிர் ஒலியையும், யகர மெய் ஒலியையும் இணைத்து அய் என எழுதும் கூட்டொலியாகவும் ஐகாரத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதனை,
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்
(தொல். எழுத்து, 56)
என்ற நூற்பாவால் அறியலாம். இது போல ஒள என்பதை அகர உயிர் ஒலியையும் வகர மெய் ஒலியையும் இணைத்து அவ் என்று எழுதும் ஒலியாகத் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை. எனினும், தொல்காப்பிய உரையாசிரியர்கள் இக்கருத்தை எடுத்துக்காட்டி, அதற்கு ஒளவை – அவ்வை என்பதை உதாரணமாகக் குறிப்பிடுகின்றனர்.
அ + ய் = அய் (a + y = ay)
அ + வ் = அவ் (a + v = av)
சங்க இலக்கியங்களில் ஐகாரம் , அகரமும் இகரமும் கூடிய ஒலியாகக் கருதப்பட்டு ஐ என்று மட்டுமே எழுதப்பட்டது ; அய் என்று எந்த ஓர் இடத்திலும் எழுதப்படவில்லை. அதாவது சங்க இலக்கியங்களில் ஐவர், ஐந்து, ஐம்பது போன்ற சொற்கள் அய்வர், அய்ந்து, அய்ம்பது என்றாற்போல எந்த ஓரிடத்திலும் எழுதப்படவில்லை. ஐவர், ஐந்து, ஐம்பது என்றாற்போல மட்டுமே எழுதப்பட்டன.
ஆனால் இதற்கு மாறாக, ஒளகாரமோ சங்க கால இலக்கியங்களில் ஒள என்றும் அவ் என்றும் இரு வகையாக எழுதப்பட்டது. பௌவம் (கடல்) என்ற சொல், பௌவம் என்றும் பவ்வம் என்றும் எழுதப்பட்டது. அதே போலக் கௌவை (அலர் அல்லது பழிச்சொல்) என்ற சொல், கௌவை என்றும், கவ்வை என்றும் எழுதப்பட்டது.
நிறைஇரும் பௌவம் குறைபட முகந்துகொண்டு
(குறிஞ்சிப்பாட்டு : 47)
(நிறைந்த கரிய கடலினது நீர் குறையும் படி முகந்து கொண்டு)
பவ்வம் மீமிசைப் பாற்கதிர் பரப்பி
(பொருநராற்றுப்படை : 135)
(இளஞாயிறு கடலின்மீது பகற்பொழுதைச் செய்யும் கதிர்களைப் பரப்பி.)
ஊரனொடு எழுந்த கௌவையோ பெரிது
(அகநானூறு, 186 : 7)
(தலைவனால் எனக்கு ஊரில் ஏற்பட்ட பழிச்சொல்லோ பெரிதாகும்.)
பகல்வரின் கவ்வை அஞ்சுதும் (அகநானூறு, 118 : 6)
(தலைவனே ! தலைவியைக் காணப் பகற்பொழுதில் வரின் அதனால் ஏற்படும் பழிச்சொல்லுக்கு அஞ்சுகிறோம்.)
சங்க காலத்தில் தோன்றிய தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களை நோக்கும்போது ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் பற்றிப் பழங்காலத்திலேயே இருவேறு கருத்துகள் இருந்தன என்பது புலனாகிறது.
அம்முன் இகரம் யகரம் என்றுஇவை
எய்தின் ஐ ஒத்து இசைக்கும் ; அவ்வோடு
உவ்வும் வவ்வும் ஒள ஓரன்ன
(நன்னூல், 125)
நன்னூலார் கருத்துப்படி ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் பின்வருமாறு இருவகையில் அமைந்து விளங்கும்.
அ + இ = ஐ
அ + ய் = அய்
அ + உ = ஒள
அ + வ் = அவ்
இவ்வாறு நன்னூலார் இருவகையாகக் கூறினார் என்றாலும், அய், அவ் என்பனவற்றை முறையே அஇ (ஐ), அஉ (ஒள) என்பனவற்றிற்குப் போலி என்று கொள்கிறார். ஒரு சொல்லில் ஓர் எழுத்து நிற்றற்கு உரிய இடத்தே, அதற்குப் பதிலாகப் பிறிதோர் எழுத்து வந்துநின்றால், அதனால் அச்சொல்லின் பொருள் மாறவில்லை என்றால் அவ்வெழுத்து போலி எனப்படும். ஈண்டு அஇ, அஉ என்னும் கூட்டொலிகளில் இ, உ என்பனவற்றிற்குப் பதிலாக முறையே ய், வ் என்னும் எழுத்துகள் அவ், இவ் என்னும் சொற்களில் வந்ததால், அவ்வெழுத்துகள் போலி ஆகும்.
ஐயர் – அய்யர்
ஐயா – அய்யா
ஐயனார் – அய்யனார்
ஒளவையார் – அவ்வையார்
சௌக்கியம் – சவுக்கியம்
இதுகாறும் கண்டவற்றால் தமிழில் கூட்டொலிகளாகிய ஐ, ஒள என்னும் இரண்டும் ஈருயிர்களின் கூட்டொலி என்ற முறையிலும், ஓர் உயிர் ஒரு மெய் என்ற ஈரொலிகளின் கூட்டொலி என்ற முறையிலும் ஆக இருவேறு முறையில் பழங்காலந்தொட்டுத் தற்காலம் வரை எழுதப்பட்டு வந்திருக்கும் இயல்பினை அறியலாம்.
ஐயர் என்ற சொல் உரைநடையில் அய்யர் எனவும், கைவேல் என்ற சொல் செய்யுளில் கய்வேல் (திருக்குறள், 774) எனவும் எழுதப்பட்டுள்ளன. கை என்ற சொல் பேச்சுமொழியில் கய் என உச்சரிக்கப்படுகிறது. அதேபோல் ஒளவை என்ற சொல் அவ்வை எனவும், சௌக்கியம் என்ற சொல் சவுக்கியம் எனவும் எழுதப்படுகின்றன.
இவ்வாறு ஒரு குறில் உயிரையும் (அ), ஒரு மெய்யையும் (ய் அல்லது வ்) இணைத்து எழுதுவதற்கு இடம் தரலால், தமிழில் யாப்பிலக்கண நூலார் இவ்விரண்டு கூட்டொலிகளுக்கும் ஒன்றரை மாத்திரை என்றே ஒலியளவு கூறியுள்ளனர்.
அ – ஒரு மாத்திரை
ய், வ் – அரை மாத்திரை
அய், அவ் – ஒன்றரை மாத்திரை
இவை வடமொழியில் இருப்பது போலச் சந்தியக்கரங்களாயின் இரண்டு மாத்திரை என்று கூறப்பட்டிருக்க வேண்டும். ஒன்றரை மாத்திரை எனக் கூறப்பட்டதால் இவை ஈருயிர் ஒலிகள் இணைவால் உருவாகும் சந்தியக்கரம் அல்ல என்பது புலனாகும்.
ஐகார ஈற்றுப் பெயர்ச்சொற்கள் விளியேற்கும்போது அடையும் மாற்றங்கள், தொடக்கக் காலத்தில் ஐ, ஒள ஆகிய இரண்டும் அய், அவ் என்றே இருந்திருக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. அன்னை, தந்தை, குழந்தை என்ற சொற்கள் விளியேற்கும்போது அன்னாய், தந்தாய், குழந்தாய் என மாற்றம் அடைகின்றன.
அன்னை > அன்னாய் (அன்னையே)
தந்தை > தந்தாய் (தந்தையே)
குழந்தை > குழந்தாய் (குழந்தையே)
இச்சொற்களில் ஐ என்பது ஆய் என திரிந்தது என்று தொல்காப்பியர் கூறுவார்.
ஐ ஆய் ஆகும் (தொல். சொல், 121)
நன்னூலாரும் இவ்வாறே கூறுவார் (நன்னூல், 306).
தொல்காப்பியரும், நன்னூலாரும் இவ்வாறு கூறுவது பொருத்தம் உடையதாக இல்லை. மக்கள் என்ற சொல் விளியேற்கும்போது மக்காள் (மக்களே) என மாற்றம் அடைகிறது. இங்கே அள் என்பது ஆள் என நீண்டு அமைந்துள்ளது. அதேபோல,
அன்னய் > அன்னாய்
தந்தய் > தந்தாய்
குழந்தாய் > குழந்தாய்
என அய் என்பது ஆய் என்று திரிந்ததாகக் கூறுவதே பொருத்தம் உடையது. இதுவே மொழியியல் முறைக்கு ஒத்ததாக உள்ளது.
எனவே தமிழில் ஐ, ஒள என்பன அய், அவ் என்பனவற்றின் வேறல்ல என்பதும், வடமொழியில் உள்ளது போல ஈருயிர் ஒலிகளின் கூட்டொலியாகிய சந்தியக்கரம் அல்ல என்பதும் தெளிவாகின்றன என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர்.
சொல்லின் முதல்
சொல்லின் முதலில் தனித்தும், மெய்யொடு சேர்ந்தும் ஐ வருகிறது.
சான்று :
ஐயம், ஐவர், ஐம்பது.
கைக்கிளை, தையல், நைந்தது, மையம்.
சொல்லின் இடை
சொல்லின் இடையில் ஐகாரம் மெய்யோடு சேர்ந்து வருகிறது.
சான்று :
இளைஞர், இடையன்.
சொல்லின் இறுதி
சொல்லின் இறுதியில் ஐகாரம் மெய்யோடு சேர்ந்து வருகிறது.
சான்று :
பகை, பசை, கதை, தலை, களை, ஒளவை.
ஐகாரம் சொல்லின் எல்லா நிலைகளிலும் வந்தாலும், ய், ர், ல், ழ், ள் ஆகிய மெய்யொலிகளுக்கு முன்னர் வருவது இல்லை.
பன்னீர் உயிரும் மொழிமுதல் ஆகும்
(தொல். எழுத்து, 59)
என்ற நூற்பாவில் தொல்காப்பியர் ஒளகாரம் மொழி முதலாவதைக் குறிப்பிடுகிறார்.
ஒளகாரம் சொல்லுக்கு முதலில் மட்டும் வருமே தவிர, சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் தனித்தும், மெய்யோடு சேர்ந்தும் வருவது இல்லை.
சொல்லுக்கு முதலில் ஒளகாரம் வருவது பழங்காலத் தமிழில் மிகுதியாகக் காணப்படுகிறது.
சான்று :
ஒளவையார்
மௌவல் (முல்லை மலர்)
நௌவி (மான்)
கௌவை (அலர், பழிச்சொல்)
பௌவம் (கடல்)
பாடம் - 3
1. வல்லினம்
2. மெல்லினம்
3. இடையினம்
க, ச, ட, த, ப, ற என்பனவற்றை வல்லின ஒலிகளாகவும் ங, ஞ, ண, ந, ம, ன ஆகியவற்றை மெல்லின ஒலிகளாகவும், ய, ர, ல, வ, ழ, ள என்பனவற்றை இடையின ஒலிகளாகவும் பிரிக்கின்றனர். இதனை,
வல்லெழுத்து என்ப கசட தபற
மெல்லெழுத்து என்ப ஙஞண நமன
இடையெழுத்து என்ப யரல வழள
(தொல். எழுத்து, 19-21)
என்ற நூற்பாக்களில் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.
வல்லின ஒலிகள் மார்பினை இடமாகக் கொண்டும், மெல்லின ஒலிகள் மூக்கை இடமாகக் கொண்டும், இடையின ஒலிகள் மிடற்றினை (கழுத்து) இடமாகக் கொண்டும் பிறக்கின்றன என்றகிறார் நன்னூலார். இதனை,
அவ்வழி
ஆவி இடைமை இடம் மிடறு ஆகும்;
மேவும் மென்மை மூக்கு; உரம் பெறும் வன்மை
(நன்னூல். எழுத்து. 75)
என்ற நூற்பாவில் அவர் உணர்த்துகிறார்.
ஒலிக்கருவிப் பாகுபாடு
மொழியியலார் மெய் ஒலிகளைப் பாகுபாடு செய்யும்போது, ஒலிக்கும் கருவிகளாகிய (பேச்சு உறுப்புகளாகிய) இதழ், நா, பல், அண்ணம் என்பனவற்றால் பிறத்தலை (points of articulation) ஒட்டிப் பின்வரும் ஏழு வகைகளாகப் பாகுபாடு செய்துள்ளனர். (இதழ், நா, பல், அண்ணம் ஆகியவற்றை மெய் ஒலிகள் வாயின்கண் பிறத்தற்கு உதவும் இடங்கள் (places of articulation) என்றும் மொழியியலார் கூறுவர்,
1. ஈரிதழ் (Bi-labial) – ப, ம
2. பல் இதழ் (Labio-dental) – வ
3. பல் (Dental) – த, ந
4. அண்பல் (Alveolar) – ர, ல, ழ, ன, ஸ
5. வளை நா (Retroflex) – ட, ண, ள, ஷ
6. முன் அண்ணம் (Palatal) – ச, ஞ, ய, ற
7. பின் அண்ணம் (Velar) – க, ங
ஒலிப்புமுறைப் பாகுபாடு
மெய் ஒலிகளின் ஒலிப்பு முறையை (Manner of articulation) ஒட்டித் தமிழில் உள்ள மெய் ஒலிகளைப் பின்வரும் ஆறு வகைகளாக மொழியியலார் பாகுபாடு செய்துள்ளனர்.
1. வெடிப்பொலிகள் (Plosive Sounds) – க, ச, ட, த, ப
2. மூக்கொலிகள் (Nasal Sounds) – ங, ஞ, ண, ந, ம, ன
3. மருங்கொலிகள் (Lateral Sounds) – ல, ள
4. வருடொலிகள் (Flap Sounds) – ர, ழ, ற
5. உரசொலிகள் (Fricative Sounds) – ஸ, ஷ
6. அரை உயிர்கள் (Semi-Vowels) – ய, வ
இவ்விருவகையான பாகுபாடு குறித்து மொழியியலார் கூறும் கருத்துகளை விரிவாகக் காண்போம். முதற்கண் ஒலிப்புமுறைப் பாகுபாடு பற்றி மொழியியலார் கூறும் கருத்துகளைக் காண்போம்.
இவ்வெடிப்பொலிகள் ஒவ்வொன்றும் சொற்களில் வரும் இடம் நோக்கி இருவேறு வகையான ஒலிகளாக ஒலிக்கும். அவை குரல் இலா ஒலி (voiceless sound), குரல் உடை ஒலி (Voiced Sound) என்பன ஆகும். இவ்விரு வகை ஒலிகள் குறித்து மொழியியலார் தரும் விளக்கத்தைக் காண்போம்.
குரல் இலா ஒலி
குரல்வளை மடல் (vocal cords) மூடுவதால் வாயின் அறையில் உள்ள காற்று அங்கிருந்து வெளிப்படுகிறது. இதனையே குரல் இலா ஒலி என்பர்.
குரல் உடை ஒலி
குரல்வளை மடல் இறுக மூடும்போது அதன் ஒரு பகுதி சற்றுத் திறந்ததும் அதன் வழியாக மூச்சுக்காற்றானாது வேகமாக வெளிவரும்போது அந்தக் குரல்வளை மடல் சற்று அதிர்கிறது (vibration). இவ்வாறு ஏற்படும் அதிர்வு ஒலியை குரல் உடை ஒலி என்பர்.
வெடிப்பொலிகள் குரல் இலா ஒலிகளாக வருதல்
வெடிப்பொலிகள் சொல்லில் முதலில் வரும்போதும், இடையில் இரட்டித்து வரும்போதும் பின்வருமாறு வன்மையாக ஒலிக்கும்.
க் – /k/
ச் – /c/
ட்- /t/
த்- /—/
ப்- /p/
சான்று:
‘க்’ – /k/ – கடல் (Kadal). பக்கம் (pakkam)
‘ப்’ – /k/ – பட்டு (pattu), கோப்பு (Koppu)
இவ்வாறு வன்மையாக ஒலிக்கும் இத்தகு வெடிப்பொலிகளை மொழியியலார் குரல் இலா ஒலிகள் (Voiceless Sounds) என்கின்றனர். இவ்வொலிகளை நாம் ஒலிக்கும்போது குரல்வளை மடல் இறுக மூடியிருக்கும்.
வெடிப்பொலிகள் குரல் உடை ஒலிகளாக வருதல்
வெடிப்பொலிகள் சொல்லில் மூக்கொலிகளை (ங், ஞ், ண், ந், ம், ன்) அடுத்து வரும்போதும், இரண்டு உயிர்களுக்கு நடுவில் வரும்போதும் வன்மையாக ஒலிக்காமல், சற்று மென்மையாகப் பின்வருமாறு ஒலிக்கும்.
க் – /g/
ச் – /j/
ட்- /d/
த்- //
ப்- /b/
சான்று:
‘க்’ – /g/ – தங்கம் (Tangam). அகம் (Agam)
‘ப்’ – /b/ – இன்பம் (Inbam), உபயம் (Ubayam)
இவ்வாறு சற்று மென்மையாக ஒலிக்கும் இத்தகு வெடிப்பொலிகளை மொழியியலார் குரல் உடை ஒலிகள் (voiced sounds) என்கின்றனர். இவ்வொலிகளை நாம் ஒலிக்கும்போது குரல்வளை இறுக மூடியிருந்தாலும், அதன் ஒரு பகுதி சற்றே திறந்திருக்கும். அதன் வழியாக மூச்சுக் காற்று வெளிப்பட்டுக் குரல்வளை மடலை அதிரச் செய்வதால், அப்போது எழும்பும் வெடிப்பொலிகள் வன்மைத் தன்மை குறைந்து மென்மைத் தன்மை அல்லது இசைமைத் தன்மை பெற்றுத் திகழக் காணலாம்.
சான்று:
‘ங்’ /Œ/
‘ஞ்’ //
‘ண்’ /–/
‘ந்’ /n/
‘ம்’ /m/
‘ன்’ /‹/
‘ல்’ /l/
‘ள்’ /˜/
3.3.4 வருடொலிகள்
நாக்கின் நுனி (Apex) மேலே எழுந்து உள்நோக்கி வளைந்து பின் வேகமாகக் கீழே வரும்போது அண்ணத்தில் மோதுவதால் எழுகின்ற ஒலிகளே வருடொலிகள் (Flap Sounds) ஆகும். தமிழ் மொழியில் மூன்று வருடொலிகள் உள்ளன. அவையாவன:
‘ர்’ /r/
‘ற்’ /r/
‘ழ்’ /l/
3.3.5 உரசொலிகள்
மூச்சுக்காற்றானது வாய் அறையின் உள் புகுந்து வரும்போது அதனை முழுவதும் தடுக்காமல் அது வெளியேறும் பாதையைக் குரல் ஒலிப்பினால் குறுக்கி அந்த இடுக்கின் வழியே அதனைச் செலுத்தினால் உராய்வுத்தன்மை (friction) ஏற்படுகிறது. இந்த உராய்வுத் தன்மையோடு கூடிப் பிறக்கும் ஒலிகளே உரசொலிகள் (Fricative Sounds) ஆகும். தற்காலத் தமிழில் பின்வரும் இரண்டு உரசொலிகள் உள்ளன.
‘ஸ்’ /s/
‘ஷ்’ /™/
3.3.6 அரை உயிர்கள்
‘ய்’ (y), ‘வ்’ (v) என்னும் இரண்டையும் மொழியியலார் அரை உயிர்கள் (semi-vowels) என்று குறிப்பிடுகின்றனர். தமிழ் இலக்கண நூலார் இவற்றை இடையின மெய்கள் வரிசையில் வைத்துக் கூறினாலும், உடம்படு மெய்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். உடம்படு மெய்கள் பற்றி அடுத்த பாடத்தில் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
நாவின் அடிப்பகுதியானது முன் அண்ணத்தைப் பொருந்திய நிலையில், உள்ளிருந்து வரும் காற்று வாயில் சிறிது தடைப்படுத்தப்பட்டு வெளியே வருவதால் ‘ய்’ என்னும் அரை உயிர் பிறக்கிறது.
உள்ளிருந்து வரும் காற்று, மேற்பல்லும் கீழ் இதழும் இயைந்து தடை ஏற்படுத்தும் நிலையில் வெளிவருவதால் ‘வ்’ என்னும் அரை உயிர் பிறக்கிறது.
இதுகாறும் ஒலிப்புமுறை அடிப்படையில், தமிழில் உள்ள மெய் ஒலிகளை மொழியியலார் பாகுபாடு செய்து, அவற்றின் ஒலிப்புமுறை பற்றிக் கூறிய கருத்துகளை விரிவாகக் கண்டோம். இனி ஒலிக்கருவிப் பாகுபாடு பற்றி அவர்கள் கூறுவனவற்றைக் காண்போம்.
இனி வெடிப்பொலிகள் முதலான ஆறுவகையான மெய்ஒலிகள் ஒவ்வொன்றும், ஏழு வகை இடங்களை ஒட்டி எவ்வாறு பிறக்கின்றன என்பது பற்றி மொழியியலார் கூறும் கருத்துகளைக் காண்போம்.
‘க்’ /k,g/
தொல்காப்யிர் கூற்றின்படி அடி நாக்கு, (back of a tangue) பின்அண்ணத்தைத் (palatal) தொடுதலால் இவ்வல்லின ஒலிகள் பிறக்கின்றன.
ககார ஙகாரம் முதல் நா அண்ணம்
(தொல்.எழுத்து.89)
(முதல் நா – அடிநாக்கு அதாவது நாவின் பின் பகுதி; அண்ணம் – மேல்வாய்)
இன்றைய மொழியியலார் இவ்வொலிகளை வெடிப்பொலிகள் என்றும் அவை நாக்கின் அடியும், பின் அண்ணமும் தொடும்போது பிறக்கின்றன என்றும் கூறுகின்றனர். இவற்றில் ‘க்’ /k/ என்பது குரல் இலா ஒலி (Voiceless Sound) ஆகும். அதே இடத்தில் சற்றுக் குரல்வளை மடல் அதிர்ந்து ஏற்படும் ஒலியாகிய ‘க்’ /g/ என்பது குரல் உடை ஒலியாகப் (Voiced Sound) பிறக்கின்றது.
‘ப்’ /p, b/
‘ப்’ எனும் வெடிப்பொலியைப் பற்றிக் கூறவந்த தொல்காப்பியர் இது இதழ் இயைந்து பிறக்கும் என்கின்றார்.
இதழ் இயைந்து பிறக்கும் பகாரம்…..
(தொல். எழுத்து.97)
இன்றைய மொழியியலார் இவ்வொலி ஈரிதழ் (bilabial) உதவியுடன் பிறக்கிறது என்பர். இதே இடத்தில் இரு வேறு வெடிப்பொலிகள் தோன்றுகின்றன. ஒன்று குரல் இலா ஒலி ‘ப்’ /p/; மற்றொன்று குரல் உடை ஒலி ‘ப்’ /b/. இந்தக் குரல் உடை ஒலி பெரும்பாலும் சொல்லில் மூக்கொலிகளுக்கு அடுத்தாற்போல் வந்து அமையும்.
‘த்’ /t,d/
இங்கும் குரல் இலா ஒலி, குரல் உடை ஒலி என இரு ஒலிகள் உள்ளன. வழக்கம் போல் சொல்லின் முதலில் வரும் போது குரல் இலா ஒலியாகவும் ‘த்’ /t/, மூக்கொலிக்கு அடுத்தாற்போல், வரும்போது குரல் உடை ஒலியாகவும் ‘த்’ /d/, வருகின்றது. இவ்வொலிகள் பல்லில் பிறக்கின்றன.
‘ட்’ /—, /
டகர ஒலியும் மற்ற வெடிப்பொலிகளைப் போல இரண்டாகப் பிறக்கின்றது. இவ்வொலிகள் வளைநா இடத்தில் பிறக்கின்றன. ஒன்று குரல் உடை ஒலி ‘ட்’ /d/; மற்றொன்று குரல் இலா ஒலி ‘ட்’ /—/.
ச், ஜ் /c,j/
சகரம், ஜகரம் என்னும் இரு ஒலிகளும் முறையே குரல் இலா ஒலியாகவும், குரல் உடை ஒலியாகவும் பிறக்கின்றன. இவ்வொலிகள் முன் அண்ணத்தின் உதவியுடன் பிறக்கின்றன.
ங், ஞ், ண், ந், ம், ன் / Œ, , –, n, m, ‹ /
இம் மூக்கொலிகள் தற்காலத் தமிழ் மொழியில் உள்ள ஒலிகள் ஆகும். இவற்றுள் ‘ந், ன்’ என்ற மூக்கொலிகள் இரண்டும் தற்காலத் தமிழில் ஒன்று சேர்ந்துவிட்டன என்பதைச் சொல்லெழுத்து மாற்ற வரலாறு என்ற பாடத்தின் கீழ் பார்த்தோம்.
‘ங்’ /Œ/ – அடிநாக்கு, பின் அண்ணத்தைத் தொடுதலால் பிறக்கிறது.
‘ஞ்’ // – முன் அண்ணத்தின் உதவியுடன் பிறக்கிறது.
‘ண்’ /–/ – வளைநா இடத்தில் பிறக்கிறது.
‘ந்’ /n/ – மேல்வாய்ப் பல்லில் பிறக்கிறது.
‘ம்’ /m/ – ஈரிதழ் உதவியுடன் பிறக்கிறது.
‘ன்’ /n/ – அண்பல்லில் பிறக்கிறது.
ல், ள், /l, ˜/
இவ்விரண்டு மருங்கொலிகளுள் ‘ல்’ , /l/ அண்பல் இடத்திலும், ‘ள்’ /˜/ வளை நாவிலும் பிறக்கின்றன.
ர், ழ், ற் /r. l. r/
இம்மூன்று வருடொலிகளுள் ‘ர்’ /r/ அண்பல் இடத்திலும், ‘ழ்’ /l/, ‘ற்’ /r/ என்ற ஒலிகள் அண்ணத்தின் உதவியுடனும் பிறக்கின்றன.
ஸ், ஷ் /s, s/
இவ்விரண்டு உரசொலிகளுடன் ‘ஸ்’ /s/ என்பது அண்பல்லிலும், ‘ஷ்’ /™/ என்பது வளைநாவிலும் பிறக்கின்றன.
ய், வ் /y, v/
‘ய்’ /y/ என்பது முன் அண்ணத்தின் உதவியுடன் பிறக்கின்றது. ‘வ்’ /v/ என்பது மேற்பல்லும் கீழ் இதழும் இயையப் பிறக்கின்றது.
பாடம் - 4
சான்று:
1. எது + ஆயினும் = எதுவாயினும் (எது + வ் + ஆயினும்)
etu + āyinum = ‘etuvāyinum (etu + v + āyinum)
2. ஆ + இடை = ஆயிடை (ஆ + ய் + இடை)
ā + itai = āyitai (ā + y + i-ai)
இங்கே காட்டிய சான்றுகளில் முதல் சான்றை நோக்குவோம். அதில் எது என்பது நிலைமொழி. அதன் இறுதியில் உ என்னும் உயிர் ஒலி உள்ளது. ஆயினும் என்பது வருமொழி. அதன் முதலில் ஆ என்னும் உயிர் ஒலி உள்ளது. எது ஆயினும் என ஒலிக்கும்போது, எது என்பதை ஒலித்து, சிறிது இடைவெளி விட்டு, பின்பே ஆயினும் என்பதை ஒலிக்கிறோம். இவ்வாறு இடைவெளி விட்டு ஒலிப்பதில் அருமை (கடினம்) காணப்படுகிறது. ஆனால் எதுவாயினும் என ஒலிக்கும்போது, இடைவெளி விட்டு ஒலிப்பதில்லை. இவ்வாறு இடைவெளி இல்லாமல் ஒலிப்பதில் எளிமை காணப்படுகிறது. இதற்குக் காரணம் நிலைமொழி இறுதி உயிர் ஒலிக்கும் (உ), வருமொழி முதல் உயிர் ஒலிக்கும் (ஆ) இடையே வ் என்னும் மெய் ஒலி சேர்க்கப்படுவதே ஆகும். விட்டிசைத்து நிற்கும் இரண்டு உயிர் ஒலிகளை விட்டிசைக்காமல் உடம்படுத்தும் மெய் ஒலியாக ‘வ்’ வருவதால் அதனை உடம்படுமெய் ஒலி என்று தமிழில் கூறினர்.
அதேபோல இரண்டாவது சான்றாகிய ஆயிடை என்பதில் ய் என்னும் மெய் ஒலி, உடம்படுமெய் ஒலியாக வருவதைக் காணலாம்.
1. நிலைமொழியின் இறுதியில் இ, ஈ, ஐ என்னும் உயிர் ஒலிகள் இருக்குமானால் அந்தச் சூழலில் யகரம் உடம்படுமெய் ஒலியாக வரும்.
சான்று:
மணி + அரசன் = மணியரசன் (மணி+ய்+அரசன்)
தீ + எரிந்தது = தீயெரிந்தது (தீ+ய்+எரிந்தது)
மனை + அறம் = மனையறம் (மனை+ய்+அறம்)
2. நிலைமொழியின் இறுதியில் ஏ என்னும் உயிர் ஒலி இருக்குமானால் அந்தச் சூழலில் ய், வ் என்னும் இரண்டும் உடம்படுமெய் ஒலிகளாக வரும்.
சான்று:
தாயே + ஆனாலும் = தாயேயானாலும் (தாயே+ய்+ ஆனாலும்)
சே + அடி = சேவடி (சே+வ்+வடி)
(சேவடி – செம்மையான அடி)
3. நிலைமொழியின் இறுதியில் மேலே கூறிய உயிர் ஒலிகளைத் தவிர, ஏனைய உயிர் ஒலிகள் இருக்குமானால், அந்தச் சூழலில் வகரம் உடம்படுமெய் ஒலியாக வரும்.
சான்று:
வர + இல்லை = வரவில்லை (வர+வ்+இல்லை)
திரு + அருள் = திருவருள் (திரு+வ்+அருள்)
பூ + அழகி = பூவழகி (பூ+வ்+அழகி)
இதுகாறும் தமிழில் உள்ள உடம்படுமெய் ஒலிகள் பற்றியும், சொற்களின் புணர்ச்சியில் அவை இடம் பெறும் சூழல் பற்றியும் விரிவாகப் பார்த்தோம். மேலே சொன்ன கருத்துகளின் வழி நின்று, உடம்படுமெய் ஒலிகளின் வருகை சங்க காலத்தில் எவ்வாறு இருந்தது, இடைக்காலத்தில் எவ்வாறு மாறி வந்தது, தற்காலத்தில் எவ்வாறு இருக்கிறது என்பன பற்றி விரிவாகக் காண்போம்.
தொல்காப்பியத்தில் உடம்படுமெய் ஒலிகள்
தொல்காப்பியர் உடம்படுமெய் ஒலிகள் பற்றி, எழுத்ததிகாரத்தில் உள்ள புணரியலில் ஒரு நூற்பாவில் கூறுகிறார். அந்நூற்பா வருமாறு:
எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்
(தொல். எழுத்து, 140)
(மொழி – சொல்; உருவு – வடிவு; கொளல் – சேர்த்துக் கொள்ளுதல்; வரையார் – நீக்கார்.)
“எல்லா உயிர் ஈற்றுச் சொற்களுக்கும் முன்னர், உயிரை முதலாகக் கொண்ட சொற்கள் வரும்பொழுது, அவ்விரு சொற்களுக்கும் இடையே உடம்படுமெய்யினது வடிவைச் சேர்த்துக் கொள்ளுதலை நீக்கார்” என்பது இந்நூற்பாவின் பொருள்.
இந்நூற்பாவில் தொல்காப்பியர், நிலைமொழியின் இறுதி உயிர்க்கும் வருமொழியின் முதல் உயிர்க்கும் இடையே உடம்படுமெய் வரும் என்று பொதுப்படக் கூறியுள்ளாரே தவிர, எந்தெந்த மெய்கள் உடம்படுமெய்யாக வரும் என்று கூறவில்லை. இருப்பினும் இந்நூற்பாவிற்கு உரை வரைந்த இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தொல்காப்பியர் உடம்படுமெய் என்று குறிப்பிடுவது யகரமும், வகரமும் ஆகும் எனக் கொள்கின்றனர்.
மேலும் அவ்வுரையாசிரியர்கள் இருவரும், இந்நூற்பாவில் தொல்காப்பியர் வரையார் (நீக்கார்) என்று கூறியிருப்பது கொண்டு, உடம்படுமெய் இரண்டு உயிர்களுக்கு இடையே கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என்பதில்லை எனவும், கிளி அரிது, மூங்கா இல்லை (மூங்கா- கீரி) என்றாற் போல அமைந்து வரும் சொற்றொடர்களில் இரண்டு உயிர்களுக்கு இடையில் உடம்படுமெய் இல்லாமலும் வரலாம் எனவும் கருத்துத் தெரிவிக்கின்றனர். உரையாசிரியர்களின் இக்கருத்தை இக்கால மொழியியலாரும் உடன்படுகின்றனர்.
இவ்வாறு தொல்காப்பியரது நூற்பாவிற்கு விளக்கம் காண வாய்ப்பிருந்தாலும் கூட, ஒருமொழிச் சந்தியில் உடம்படுமெய் இல்லாமல் சொற்கள் வருவது தமிழ்மொழியில் இல்லை.
சான்று:
கிளி + ஆ = கிளியா
கிளி, ஆ என்னும் இருசொற்கள் கிளியா என ஒரு சொல்லாகப் புணர்ச்சியில் இணைந்துவிடுவதால் இதனை ஒருமொழிச் சந்தி என்பர் (மொழி – சொல்; சந்தி – புணர்ச்சி). ஒருமொழிச் சந்தியில் இவ்வாறு உடம்படுமெய்யுடன் வருவதே நல்ல மொழிநடையாகக் கருதப்படுகிறது. இதை விடுத்து,
கிளி + ஆ = கிளிஆ
என்று உடம்படுமெய் இல்லாமல் சொல் அமைவது வழக்கல்ல.
அதே நேரத்தில் கிளி + அன்று என்பது, கிளியன்று என உடம்படுமெய் பெற்றோ, கிளிஅன்று என உடம்படுமெய் பெறாமலோ அமையலாம். கிளி + அன்று = கிளியன்று எனவும், கிளி அன்று எனவும் இருசொல்லாகவே இணைந்து வருவதால் இவை இரண்டும் இருமொழிச் சந்தி எனப்படும். இவ்வாறு கட்டாயம் வரவேண்டிய இடத்தில் உடம்படுமெய் பெற்றும், கட்டாயம் இல்லாத இடத்தில் உடம்படுமெய் பெற்றும் பெறாமலும் வரலாம் என்ற விளக்கத்தைக் கூறுவதற்கு ஏற்ற வகையில் தொல்காப்பியரின் இந்நூற்பா இடம் தருகிறது.
தொல்காப்பியர் காலத்தில் இரண்டு உயிர்கள் ஒன்று சேர்ந்து, உடம்படுமெய் எதுவும் பெறாமல் வழங்கியதற்கு அவரது நூலிலேயே சில சான்றுகள் காணப்படுகின்றன.
தற்காலத்தில் நாய் என்று நாம் குறிப்பிடும் சொல், தொல்காப்பியர் காலத்தில் நாய் எனவும், நாஇ எனவும் இருவேறு வடிவில் வழங்கியது. இதனை,
இகர யகரம் இறுதி விரவும்
(தொல்.எழுத்து, 58)
என்ற தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பாவால் அறியலாம். நாஇ என்ற சொல் உடம்படுமெய் பெற்ற வருவதாக இருந்தால், நாயி (நா+ய்+இ) என யகர உடம்படுமெய் பெற்றே வரவேண்டும். ஆனால் உடம்படுமெய் பெறாமல் ‘நாஇ’ என்று வழங்கியுள்ளது. ‘நாஇ’ என்ற சொல்லில் உடம்படுமெய் இல்லாமலேயே ஆ, இ என்னும் இரண்டு உயிர்கள் இணைந்து நிற்பதைக் காணலாம்.
அதேபோலத் தொல்காப்பியர் காலத்தில் தேஎம் என்ற சொல்லிலும், கோஒன் என்ற சொல்லிலும் உடம்படுமெய் இல்லாமலேயே இரண்டு உயிர்கள் சேர்ந்து வருவதைக் காண்கிறோம். (தேஎம்- தேயம், நாடு, இடம்; கோஒன் – அரசன் அல்லது தலைவன்). இவ்விரு சொற்களையும் சிலர் அளபெடைச் சொற்கள் என்று கூறுவர். அது பொருந்தாது. ஏனெனில் இவ்விரு சொற்களில், ‘கோஒன்’ என்ற சொல்லில் உள்ள ‘ஒன்’ என்பதைச் சாரியை என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார் (தொல்.எழுத்து,294).
சான்று:
கோ + கை = கோஒன்கை (அரசனது கை)
மேலே கூறியவற்றால் தொல்காப்பியம் தோன்றிய காலத்தில் உடம்படுமெய் ஒலிகளின் வருகை என்பது விருப்பநிலையிலே இருந்தது எனலாம்.
சங்க இலக்கியங்களில் உடம்படுமெய் ஒலிகள்
சங்க இலக்கியங்களில் யகரமும், வகரமும் உடம்படுமெய் ஒலிகளாக வழங்குகின்றன. உடம்படுமெய் ஒலிகள் இல்லாமல் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியனவாக மேலே குறிப்பிட்ட இரு சொற்களில் தேஎம் என்பது மட்டும் அதே வடிவில் அல்லது ஒலியமைப்பில் வழங்குகிறது.
சான்று:
மாயோள் இருந்த தேஎம் நோக்கி
(நற்றிணை, 371:3)
(தலைவி இருந்த இடத்தை நோக்கி. மாயோள் – கரிய நிறத்தை உடையவள்; தலைவி.)
மற்றொரு சொல்லாகிய கோஒன் என்பது சங்க இலக்கியத்தில் கோன் என வழங்குகிறது.
கொற்றவர்தம் கோன் ஆகுவை
(மதுரைக்காஞ்சி:74)
(வெற்றி உடையவர் தம்முடைய தலைவன் ஆகுவாய்)
இங்குத் தொல்காப்பியர் காலத்தில் கோ என்பதோடு சேர்ந்து வந்த ஒன் சாரியையில்னகரம் மட்டும் வழங்குகிறது. ஒகரம் நிலைபெறாமல் நீங்குகிறது. இதற்குக் காரணம் யாது? ‘கோஒன்’ என்ற சொல்லில் உள்ள இரண்டு உயிர்களை (ஓஒ) அடுத்தடுத்து ஒலிப்பதில் விட்டிசைக்கும் அருமை உணரப்பட்டு, எளிமையாக ஒலித்தற் பொருட்டு ‘ஒ’ என்னும் உயிர் ஒலிக்காமல் விடப்பட்டது எனலாம்.
சங்க இலக்கியங்களில் யகரமும் வகரமும் உடம்படுமெய் ஒலிகளாக வழங்கினாலும், அவை இரண்டும் இன்னின்ன சூழலில்தான் வரும் என்று இடைக்காலத்தில் தோன்றிய நன்னூலில் கூறப்பட்ட விதிக்கு மாறுபட்டும் வந்துள்ளன. இதனைச் சில சான்றுகள் கொண்டு காண்போம்.
1. நிலைமொழியின் இறுதியில் ஆகாரம் வரும்போது, வகரம் மட்டுமே உடம்படுமெய் ஒலியாக வரவேண்டும். ஆனால் சங்க இலக்கியங்களில் வகரத்தோடு யகரமும் உடம்படுமெய் ஒலியாக வருகிறது.
மாயோள், மாயோன் ஆகிய சொற்களில் மா என்னும் நிலைமொழியின் இறுதியில் உள்ள ஆகார ஒலியை அடுத்து யகரம் உடம்படுமெய் ஒலியாக வரக் காணலாம்.
சான்று:
மாயோள் இருந்த தேஎம் நோக்கி
(நற்றிணை, 371:3)
மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
(நற்றிணை, 32:1)
(திருமாலைப் போன்ற கரிய மலைப்பக்கத்தே. மாயோன்- கரிய நிறத்தை உடைய திருமால்.)
மா + ஓள் = மாயோள் ( மா+ய்+ஓள்)
மா + ஓன் = மாயோன் (மா+ய்+ஓன்)
‘ஓள்’, ‘ஓன்’ என்பன முறையே சங்க காலத்தில் வழங்கிய பெண்பால், ஆண்பால் விகுதிகள் ஆகும்.
மேலும் ஆயிடை, மாயிரு போன்ற சொற்களிலும் ஆகார உயிர் முன் யகரமே உடம்படுமெய் ஒலியாக வருகிறது.
சான்று:
ஆயிடைக் கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி
(அகநானூறு, 69:16-17)
(அவ்விடத்தே அணைத்தலை விடாத தலைவன் கைகள் நெகிழ்ந்தமை கண்டு. ஆயிடை – அவ்விடத்தே)
மாயிரு முள்ளூர் மன்னன் மாவூர்ந்து
(நற்றிணை 291:7)
(மிகப்பெரிய முள்ளூர்க்கு மன்னவனாகிய மலையமான் திருமுடிக்காரி என்பவன் குதிரை ஏறிச் சென்று. மாயிரு- மிகப்பெரிய)
ஆகார உயிர் ஒலி முன்னர் விதிப்படி வகர உடம்படுமெய் ஒலியும் வருவது காணப்படுகிறது.
சான்று:
மாவென மதித்து மடல் ஊர்ந்து
(நற்றிணை, 342:1)
(குதிரை எனக் கருதிப் பனைமடல் ஏறி வந்ததும். மா- குதிரை.)
மாயிரு முள்ளூர் மன்னன் மாவூர்ந்து
(நற்றிணை 291:7)
மா + என = மாவென (மா+வ்+என)
மா + ஊர்ந்து = மாவூர்ந்து (மா+வ்+ஊர்ந்து)
2. ஐகாரத்தை அடுத்து யகரமே உடம்படுமெய் ஒலியாக வரவேண்டும் எனப்படுகிறது. ஆனால் சங்க இலக்கியங்களில் யகரத்தோடு வகரமும் வருகிறது. ஐயள் என்ற சொல்லில் யகரமும், ஐவர் என்ற சொல்லில் வகரமும் வருகின்றன.
சான்று:
வைஎயிற்று ஐயள் மடந்தை முன்னுற்று
(நற்றிணை, 2:7)
(கூரிய பற்களை உடைய மெல்லியளாகிய மடந்தையை முன்னே செல்லவிட்டு. வை – கூர்மை; எயிறு – பல்; ஐயள்- மெல்லியள்; ஐ- மென்மை.)
ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள்
(கலித்தொகை, 25:3)
(பாண்டவர் ஐவர் இவர்கள்தாம் என்று உலகம் புகழும் தருமர் முதலியோர்.)
இச்சான்றுகளில், ஐ + அள் = ஐயள் (ஐ+ய்+அள்) என்பது யகர உடம்படுமெய் பெற்றும்,
ஐ + அர் = ஐவர் (ஐ+வ்+அர்) என்பது வகர உடம்படுமெய் பெற்றும் வருகின்றன.
3. ஓகாரத்தை அடுத்து வகரமே வரவேண்டும் எனக் கூறப்படுகிறது. ஆனால் கோ+இல் என்பது கோவில் என்று வகர உடம்படுமெய் பெறாமல், யகர உடம்படுமெய் பெற்றுக் கோயில் என வழங்குகிறது.
சான்று:
நளிமலைச் சிலம்பின் சிலம்பும் கோயில்
(நெடுநல்வாடை:100)
(மலையின் ஆரவாரம் போல ஆரவாரிக்கும் கோயில். கோயில்- அரசனது அரண்மனை.)
கோ + இல் = கோயில் (கோ+ய்+இல்)
4. ஏகாரத்தை அடுத்து யகர, வகரங்கள் இரண்டுமே வரலாம் என்பது விதி. சங்க இலக்கியங்களில் ஏகாரத்தை அடுத்து இவ்விரண்டும் வருகின்றன.
சான்று:
பகழி அன்ன சேயரி மழைக்கண்
(நற்றிணை, 13:4)
(இரத்தம் தோய்ந்த அம்பு போன்ற சிவந்த வரி படர்ந்த கண்கள். சேயரி- சிவந்த வரி.)
தாமரை புரையும் காமர் சேவடி
(குறுந்தொகை, கடவுள் வாழ்த்து:1)
(செந்தாமரை மலரைப் போன்ற அழகிய சிவந்த திருவடி. சேவடி- சிவந்த அடி.)
இச்சான்றுகளில் இடம்பெறும் சேயரி என்பது யகர உடம்படுமெய் பெற்றும், சேவடி என்பது வகர உடம்படுமெய் பெற்றும் வந்துள்ளன.
சே + அரி = சேயரி (சே+ய்+அரி)
சே + அடி = சேவடி (சே+வ்+அடி)
மேலே கூறியவற்றை ஒருசேர நோக்கினால், யகரமும் வகரமும் இன்னின்ன சூழலின்தான் வரும் என்று வரையறுத்துக் கூற இயலாத அளவுக்கு, அவற்றின் வருகை சங்க காலத்தில் ஊசலாட்ட நிலையில் அமைந்துள்ளது புலனாகின்றது.
இஈ ஐவழி யவ்வும்; ஏனை
உயிர்வழி வவ்வும்; ஏமுன் இவ்விருமையும்;
உயிர்வரின் உடம்படு மெய்என்று ஆகும்
(நன்னூல், 162)
இதற்கான சான்றுகளை இப்பாடத்தில் ‘உடம்படுமெய் ஒலிகள் வரும் சூழல்’ என்ற தலைப்பில் ஏற்கனவே பார்த்தோம். அவற்றை ஈண்டு நினைவு கூரவும்.
இடைக்காலத்தில் உடம்படுமெய் ஒலிகளின் வருகையில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. சங்க காலத்தில் ஓகார உயிர் ஈற்றுச் சொல்லாகிய ‘கோ’ என்பதன் முன்னர் ‘இல்’ என்ற சொல் புணரும்போது, இடையில் யகர உடம்படுமெய் ஒலி பெற்றுக் ‘கோயில்’ என வழங்கியதை ஏற்கனவே பார்த்தோம். அது நன்னூலார் காலத்தின் விதிப்படி வகர உடம்படுமெய் ஒலி பெற்றுக் ‘கோவில்’ எனவும் வழங்கியது. ‘கோவில்’ என்ற சொல் வழக்கு இடைக்கால இலக்கியங்களிலும் உள்ளது. இவ்வாறு நன்னூலார் வாழ்ந்த இடைக்காலத்தில் கோவில், கோயில் என்னும் இருசொற்கள் வழங்கவே, அவற்றுள் ஒன்றை அறிஞர்கள் போலி என்று கொண்டனர். பொருள் மாற்றம் எதுவும் இல்லாமல், இப்படிப்பட்ட ஒலிமாற்றம் (ய்>வ்) இருந்தால், அப்படி மாற்றம் பெற்று வருகின்ற சொற்களில், ஒன்றை அடிப்படைச் சொல்லாகவும், மற்றொன்றைப் போலியாகவும் கொள்வது மரபு. சான்றாகப் பந்தல், பந்தர் ஆகிய சொற்களில் பந்தல் என்பதை அடிப்படைச் சொல்லாகவும், பந்தர் என்பதைப் போலியாகவும் கொண்டனர். அது போலக் கோவில், கோயில் என்னும் சொற்களில் விதிப்படி அமைந்த ‘கோவில்’ என்பதை அடிப்படைச் சொல்லாகவும், ‘கோயில்’ என்தைப் போலியாகவும் கூறினர். நன்னூல் உரையாசிரியர்கள், கோவில் என்பதைக் கோயில் என்று கூறுவது இலக்கணப்போலி என்கின்றனர் (நன்னூல், 267.உரை).
அகச்சந்தி
ஒரு தனி உருபோடு (Free form) ஒரு கட்டுருபு (Bound form) சேர்ந்து நிற்பது அகச்சந்தி எனப்படும்.
சான்று:
கை + யை = கையை
தனி உருபு என்பது தனிச்சொல் ஆகும். இது தனித்து வழங்கும்போது, எந்தப் பொருளைத் தருகிறதோ, அந்தப் பொருளிலேயே புணர்ச்சியில் சேர்ந்து வரும்போதும் தரும். கட்டுருபு என்பது தனித்து வழங்காது. அதற்குப் பொருள் உண்டு என்றாலும், தனி உருபோடு சேர்ந்து வழங்கும்போதே அப்பொருளைத் தரும். இங்கே காட்டிய சான்றில் ‘கை’ என்பது தனி உருபு ஆகும். இது தனித்து வழங்கும் போது தரும் பொருளையே, ‘ஐ’ என்ற கட்டுருபோடு சேர்ந்து வரும்போதும் தருகிறது. ‘ஐ’ என்பது கட்டுருபு ஆகும். இது இரண்டாம் வேற்றுமை உருபு ஆகும். இதற்குச் செயப்படுபொருள் என்பது பொருள் ஆகும். ஆனால் ‘கை’ என்ற தனிச்சொல்லோடு சேர்ந்து வரும்போதே அப்பொருளைத் தருகிறது.
புறச்சந்தி
இரண்டு தனி உருபுகள் அல்லது தனிச்சொற்கள் சேர்ந்து வருவது புறச்சந்தி எனப்படும். தனி உருபுகள் இரண்டும் தனித்தனியே வரும்போது என்ன பொருளைத் தருகின்றனவோ, அதே பொருளையே அவை சேர்ந்து வரும்போதும் தரும்.
சான்று:
தமிழ் + சங்கம் = தமிழ்ச் சங்கம் மரம் + கிளை = மரக் கிளை
அகச்சந்தியில் உடம்படுமெய் ஒலிகள்
தற்காலத் தமிழில் அகச்சந்தியில் உயிர் ஒலியை இறுதியாகக் கொண்ட நிலைமொழியும், உயிர் ஒலியை முதலாகக் கொண்ட வருமொழியும் புணரும்போது அவற்றிற்கு இடையில் உடம்படுமெய் ஒலி கட்டாயம் வரவேண்டும்.
சான்று:
யானை + ஆ = யானையா (யானையா வந்தது) யானை + ஐ = யானையை (யானையைப் பார்த்தான்) தெரு + இல் = தெருவில் (தெருவில் வந்தான்) ஆ + இன் = ஆவின் (ஆவின் பால்)
இங்கே காட்டிய சான்றுகளில் யகர, வகர உடம்படுமெய் ஒலிகள் கட்டாய நிலையில் வருகின்றன. இச்சான்றுகளில் அகச்சந்தியை மட்டும் காண்கிறோம். இவற்றை ‘யானைஆ’ யானைஐ, தெருஇல், ஆஇன்’ என உடம்படுமெய் ஒலிகள் இல்லாமல் எவரும் எழுதுவது இல்லை.
புறச்சந்தியில் உடம்படுமெய் ஒலிகள்
ஆனால் புறச்சந்தியில் யகர, வகர உடம்படுமெய் ஒலிகள் கட்டாயமாக வரவேண்டும் என்பது இல்லை.
சான்று:
இந்த ஆண்டு வேண்டிய அளவுக்கு மழை இல்லை.
இந்தத் தொடரில் புறச்சந்தியை மட்டும் காண்கிறோம். ஏனெனில் உடம்படுமெய் ஒலிகள் இல்லை. உடம்படுமெய் ஒலிகள் வந்திருந்தால் இதே தொடர்,
இந்தவாண்டு வேண்டியவளவுக்கு மழையில்லை.
என அமையவேண்டும். ஆனால் இவ்வாறு எழுதுவது பெருவழக்கு அன்று. ‘இந்த ஆண்டு வேண்டிய அளவுக்கு மழை இல்லை’ என உடம்படுமெய் ஒலிகள் இல்லாமல் எழுதுவதே ஏற்புடையதாகவும், பெருவழக்காகவும் உள்ளது.
பாடம் - 5
மனிதன் பேசும் மொழிகள் அனைத்தின் வாழ்விலும் பல்வேறு ஒலி மாற்றஙகள் நிகழ்வது இயற்கை. இத்தகைய மாற்றங்கள் பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன. சில மாற்றங்கள் உடல் கூறின் காரணங்களாலும், இன்னும் சில மாற்றங்கள் சமுதாய அடிப்படையாலும், வேறு சில மாற்றங்கள் மனிதனிடம் காணப்படும் எளிமை, வேட்கை, சோம்பல் ஆகிய காரணங்களாலும் உண்டாகின்றன.
1. தமிழ் மொழியில் காணப்படும் ஐகார ஈற்றுச் சொற்களையும் அவற்றுக்கு இணையான மலையாள மொழிச் சொற்களையும் எடுத்து நோக்கினால் இவ்வுண்மை புலப்படும்.
சான்று:
தமிழ் மலையாளம்
மலை - மல
தலை – தல
வரை - வர
சிலை – சில
கரை - கர
இவை போன்ற நூற்றுக்கணக்கான சொற்கள் இருமொழிகளிலும் காணப்படுகின்றன. தமிழில் ஐகாரத்தைக் கொண்டு முடிகின்ற சொற்கள் மலையாளத்தில் ஒழுங்கான முறையில் அகரத்தைக் கொண்டு முடிகின்றன. இத்தகு ஒலி மாற்றத்தை,
ஐ > அ
ai > a
என்ற விதியில் அடக்கி விடலாம்.
2. இத்தகு ஒழுங்குமுறையைத் தமிழ்மொழிக்கு உள்ளேயும் காணலாம். பழந்தமிழ் இலக்கியங்கள் என்று கருதப்படும் சங்ககால இலக்கியங்களில் யாகாரத்தை முதலாகக் கொண்ட சில சொற்கள் காணப்படுகின்றன. ஆனால் இச்சொற்கள் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் யகர மெய்யை இழந்து ஆகாரத்தை முதலாகக் கொண்ட சொற்களாக மாறி வழங்குவதைக் காணலாம்.
சான்று:
யாறு > ஆறு
யாண்டு > ஆண்டு
யாடு > ஆடு
யாமை > ஆமை
யார் > ஆர்
இத்தகு ஒலி மாற்றத்தை,
யா > ஆ
ya: > a:
என்ற விதியின் கீழ்க் கொண்டு வரலாம்.
3. தற்கால எழுத்துத் தமிழில் உள்ள ழ, ற ஆகிய மெய்கள், தற்காலப் பேச்சுத்தமிழில் முறையே ள, ர என ஒலிக்கப்படுதல் காணலாம்.
சான்று:
பழம் > பளம்
வாழை > வாளை
கறி > கரி
குறித்தான் > குரித்தான்
இந்த ஒலி மாற்றங்களை,
ழ > ள ற > ர
l > ˜ ŗ > r
என்ற அடிப்படை விதியின் கீழ்க் கொண்டு வரலாம்.
மேலே கூறியவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து நோக்கினால், மொழியில் காணப்படும் ஒலி மாற்றங்கள் தாறுமாறாக நிகழ்வன அல்ல என்பதும், அவை ஓர் ஒழுங்கான முறையிலே நிகழ்கின்றன என்பதும் நன்கு விளங்கும்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட சூழலின் அடிப்படையில் மட்டும் மாறிவரும் ஒலி மாற்றத்தை நிபந்தனை மாற்றம் (Conditional Change) என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர். இத்தகைய ஒலி மாற்றத்தைச் சான்று கொண்டு விளக்கிக் காண்போம்.
தமிழில் யகர ஒற்றுக்குப்(மெய்க்கு) பின்னாலும், இ, ஐ ஆகிய உயிர்களுக்குப் பின்னாலும் வரும் இரட்டைத் தகர ஒற்றுகள், சகர ஒற்றுகளாக மாறுகின்றன.
சான்று:
யகர ஒற்றுக்குப் பின்னால்:
காய்த்தது > காய்ச்சது
வாய்த்தது > வாய்ச்சது
இகர உயிருக்குப் பின்னால்:
சிரித்தான் > சிரிச்சான்
அடித்தான் > அடிச்சான்
ஐகார உயிருக்குப் பின்னால்:
அடைத்தான் > அடைச்சான்
படைத்தான் > படைச்சான்
இவ்வாறு இரட்டைத் தகரம், ‘ய், இ, ஐ’ என்னும் மூன்று எழுத்துகளுக்குப் பின்னால் வரும்போது மட்டுமே, சகரமாக மாறுகிறது. மற்ற எழுத்துகளுக்குப் பின்னால் வரும்போது மாறுவது இல்லை. ‘காத்தான், எடுத்தான், பூத்தது, ஒத்தது’ என்பன போன்ற சொற்களில் ‘அ, உ, ஊ, ஒ’ என்னும் நான்கு உயிர் எழுத்துகளுக்குப் பின்னால் வரும் இரட்டைத் தகரம், ‘காச்சான், எடுச்சான், பூச்சது, ஒச்சது’ எனச் சகரமாக மாறுவது இல்லை. யகரமோ, இகரமோ, ஐகாரமோ இருக்கும்போதுதான் இந்த ஒலிமாற்றம் நடைபெறுகிறது. எனவே இதனை ‘நிபந்தனை மாற்றம்’ என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர். இத்தகைய ஒலிமாற்றத்தை,
என்ற விதியில் அடக்கிக் கூறலாம்.
சான்றாக, வல்லெழுத்துகளில் ஒன்றான ‘க்’ (k) என்பது குரல் இலா ஒலி (Voiceless Sound) ஆகும். இது ‘ங்’ (Œ) என்ற மெல்லெழுத்திற்குப் பின்னால் வரும்போது ‘க்’ (g) என்ற குரல் உடை ஒலியாக மாறுகிறது.
சான்று:
தங்கம் (tangam)
இதுபோல், ‘ச் (c), ட் (—), த் (t), ப் (p)’ ஆகிய பிற வல்லெழுத்துகள் குரல் இலா ஒலிகளாகும். இவை முறையே ‘ஞ் (), ண் (–), ந் (n), ம் (m)’ என்ற மெல்லெழுத்துகளுக்குப் பின்னால் வரும்போது முறையே j, , d, b என்னும் குரல் உடை ஒலிகளாக மாறுகின்றன.
c → j
— →
t → d
p → b
சான்று:
மஞ்சள் (manjal)
நண்டு (na–u)
தந்தம் (ta‹dam)
கம்பர் (Kambar)
இச்சான்றுகளை நோக்கின் தமிழில் வல்லெழுத்துகள் மெல்லெழுத்துகளுக்குப் பின்னால் வரும் சூழ்நிலையில் அவை குரல் உடை ஒலிகளாக மாறும் ஒழுங்கான அமைப்புக் காணப்படுவதை அறியலாம். இத்தகு ஒலி மாற்றத்தை மொழியியலார், இன ஒலி மாற்றம் (Class Change) என்று குறிப்பிடுகின்றனர்.
தமிழில் மகன் என்ற சொல்லினை எடுத்துக் கொள்வோம். இச்சொல்லின் இடையில் காணப்படும் ககரத்தை ‘g’ ஆக ‘magan’ என்று சிலர் உச்சரிக்கின்றனர். இன்னும் சிலர் ‘h’ ஒலியாக ‘mahan’ என்று உச்சரிக்கின்றனர். பண்டைக் காலத்தில் இவ்வொலி (‘h’) உரசொலியாக இருந்தது எனக் கருதலாம். உரசொலியாக இருந்த இவ்வொலி, ‘g’ ஆக உச்சரிக்கப்படும்போது ககர ஒலியனின் ஒரு மாற்றொலியாகவே காணப்படுகிறது. இன்னொரு மாற்றொலியாக இருந்த அது வழக்கொழிய அதனிடத்தில் குரல் உடை ஒலி இடம்பெறக் காணுகிறோம். எனவே இந்த ஒலி மாற்றத்தினால் மேலும் ஒரு மாற்றொலி தோன்றுகிறதே தவிரப் புதிய ஒலியன்கள் எதுவும் தோன்றவில்லை உச்சரிப்பில் மாற்றமே தவிர ஒலியன் அமைப்பில் மாற்றம் எதுவும் நிகழவில்லை. எனவேதான் இத்தகைய மாற்றம் ஒலிமாற்றம் எனப்படுகிறது.
சான்று:
ஸந்தர்ப்பம் (வாய்ப்பு)
ஸாகரம் (கடல்)
போன்ற சொற்களில் ஸகரம் தனி ஒலியனாகி விட்டதைக் காண்கிறோம். இத்தகைய சொற்கள் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழில் கடன் பேறு விளைவாக வந்தனவாகும். வடமொழியில் உள்ள ஸ என்ற ஒலியனின் செல்வாக்கால், தமிழில் உள்ள ச (c) என்ற ஒலியன் ஸ (s) என்ற ஒலியனாக மாற்றி உச்சரிக்கப்படுகின்றது.
சான்று:
சோறு > ஸோறு
சிவப்பு > ஸெவப்பு
சங்கம் > ஸங்கம்
இவ்வாறு ஓர் ஒலியன் (ச) , இன்னொரு ஒலியனாக (ஸ) மாறுவது ஒலியன் மாற்றம் எனப்படுகிறது.
ஸ என்ற ஒலியனைப் போன்றே தமிழ் மொழியின் வரலாற்றில் ஜகரம் (j) புதியதொரு ஒலியனாக வருதல் காணலாம். இதுவும் பெரும்பாலும் கடன்பேற்றுச் சொற்களிலேயே காணப்படுகிறது.
சான்று:
ஜாதி
ஜாக்கிரதை
ஒலியன் மாற்றத்தை மொழியியலார் பிளவு (split) என்றும், இணைவு (merger) என்றும் இருவகைப்படுத்தியும் ஆராய்கின்றனர்.
பிளவு
ஒரு மொழியில் காணப்படும் ஒரு ஒலியன் காலப்போக்கில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒலியன்களாகப் பிரியுமானால் அதனைப் பிளவு என்று கூறுவர். தமிழில் சோறு என்பதை,
co : ŗu
so : ŗu
என இருவகையாக ஒலிப்பதால், ச /c/ என்ற ஒலியன், /c/, /s/ என்ற இரண்டு ஒலியன்களாகப் பிரிந்து விட்டது. இத்தகைய பிளவினை,
என்ற விதியின் கீழ் மொழியியலார் அடக்குவர்.
இணைவு
இரண்டு ஒலியன்கள் ஒன்றாக இணைகின்ற மாற்றத்தையே இணைவு என்று கூறுவர்.
தமிழ் மொழியில் எழுத்து வழக்கில் /ழ்/, /ள்/ என்ற இரண்டும் இருவேறு ஒலியன்கள்.
சான்று:
வாழ்
வாள்
ஆனால் தற்காலத் தமிழில் பேச்சுவழக்கில் /ழ்/, /ள்/ ஆகிய இரண்டு ஒலியன்களும் /ள்/ என்ற ஒரே ஒலியனாகி விட்டது.
சான்று:
வாழைப்பழம் > வாளப்பளம்
இத்தகு இணைவினை,
என்ற விதியின் கீழ் மொழியியலார் அடக்குவர்.
எளிமையின் காரணமாக இம்மாற்றங்கள் நிகழ்கின்றன எனலாம். சிலர் வேகமாகப் பேசும்போது சில ஒலியன்களை ஒலிக்காமல் விட்டு விடுகின்றனர். பாய்ச்சு என்ற சொல்லைப் பாச்சு எனவும், பார்த்தான் என்ற சொல்லைப் பாத்தான் எனவும் கூறுகின்றனர்.
மொழிக்கு இறுதியில் மெய்யொலிகளை விட்டுவிட்டு உச்சரிக்கின்றனர். அவள் வந்தாள் என்பதை அவ வந்தா என்றும், வந்தால் (நிபந்தனை வினை) என்பதை வந்தா என்றும் கூறுகின்றனர்.
மொழிக்கு முதலிலும் இத்தகைய மாற்றங்கள் நிகழ்கின்றன. யாறு > ஆறு, இங்கே மொழிக்கு முதலில் வரும் மெய் ஒலியை விட்டுவிட்டு, உயிர் ஒலியை மட்டும் ஒலிக்கிறோம்.
இது போன்ற மாற்றங்கள் மெய் ஒலிகளில் மட்டும் நிகழ்வது இல்லை. உயிர் ஒலிகளிலும் உண்டு. மாதவி என்பதை மாத்வி என்கிறோம். இங்கே மொழிக்கு இடையில் வரும் உயிர் ஒலியை விட்டு விட்டு, மெய் ஒலியை மட்டும் உச்சரிக்கிறோம்.
ஒலிகள் கெடுவது மட்டும் அல்லாமல் தோன்றுதலும் உண்டு. எலும்பு என்பதை யெலும்பு என்றும் எனக்கு என்பதை யெனக்கு என்றும் கூறுவர்.
இவ்வாறு மொழியில் ஓர் ஒலி மற்றொரு ஒலியாகத் திரிதலும், ஒலிகள் தோன்றுதலும், கெடுதலும் உண்டு. இதனையே நன்னூலார்,
தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
மூன்றும் மொழிமூ இடத்தும் ஆகும்
(நன்னூல், 154)
என்று கூறியுள்ளார் . இத்தகைய ஒலி மாற்றங்களை மொழியியலார் ஓரினமாக்கம், வேற்றினமாக்கம், உயிர் மாற்றங்கள், அண்ணமாக்கம், ஈடுசெய் நீட்டம், இடம் பெயரல் என்று பல்வேறு வகைகளாகப் பிரித்து விளக்குகின்றனர். அவற்றைக் கீழே காண்போம்.
ஒரு சொல்லில், அடுத்தடுத்து வருகின்ற இரண்டு ஒலியன்கள் வெவ்வேறு இடத்தில் பிறக்கின்றனவாகவோ, வெவ்வேறு இனத்தைச் சார்ந்தவனவாகவோ இருந்தால், அவை இரண்டையும் சேர்த்து உச்சரித்தல் அரிதாகும். இதற்கு மாறாக அவை இரண்டும் ஒரே இடத்தில் பிறப்பனவாகவும், ஒரே இனத்தைச் சார்ந்தனவாகவும் இருந்தால், அவற்றைச் சேர்த்து உச்சரித்தல் எளிதாகும்.
சான்று:
செண்பகம்
இச்சொல்லில் ண், ப் ஆகிய இரண்டும் அடுத்தடுத்து வருகின்ற மெய் ஒலியன்கள் ஆகும். இரண்டும் வெவ்வேறு இனங்கள். ண்- மெல்லினம்; ப்- வல்லினம். இரண்டும் வெவ்வேறு இடத்தில் பிறப்பவை. ண்- வளைநா இடத்தில் பிறக்கின்றது; ப்- ஈரிதழ் உதவியுடன் பிறக்கிறது. எனவே ‘ண்’ என்ற ஒலியன், தனக்குப் பின்னால் வரும் ‘ப்’ என்ற ஒலியனின் இனவெழுத்தாகிய ‘ம்’ என மாறி,
செம்பகம்
என ஓரினமாகிறது. ‘ப்’, ‘ம்’ ஆகிய இரண்டும் ஈரிதழ் உதவியுடன் பிறப்பன ஆகும். இத்தகைய ஓரினமாக்கம் தமிழில் மிகுதியான சொற்களில் காணப்படுகிறது.
சான்று:
நன்செய் > நஞ்செய் (நஞ்சை)
புன்செய் > புஞ்செய் (புஞ்சை)
வன்சினம் > வஞ்சினம்
வெட்கம் > வெக்கம்
கட்சி > கச்சி
தன்பின் > தம்பி
எண்பது > எம்பது
சான்று:
பட்டடை > பட்டரை (ட > ர)
ஒட்டடை > ஒட்டரை (ட > ர)
மார்வாரி > மார்வாடி (ர > ட)
போடடா > போட்ரா (ட > ர)
ரப்பர் > லப்பர் (ர > ல)
ரவிக்கை > லவிக்கை (ர > ல)
லாந்தர் > ராந்தர் (ல > ர)
தகராறு > தகராலு (ற > ர)
முன்னுயிர், பின்னுயிராதல்
இ, ஈ என்ற முன்னுயிர்கள், உ, ஊ என்ற பின்னுயிர்களாக மாறி அமையும்.
சான்று:
வீடு > வூடு
விடு > வுடு
விழுந்தான் > வுழுந்தான்
பிடுங்கு > புடுங்கு
பின்னுயிர், முன்னுயிராதல்
உ என்ற பின்னுயிர், இ என்ற முன்னுயிராக மாறி அமையும்.
சான்று:
கத்திக்கு > கத்திக்கி
பெட்டிக்கு > பெட்டிக்கி
எழுந்திரு > எழுந்திரி
மேலுயிர், கீழுயிராதல்
இ, உ என்னும் மேலுயிர்கள் முறையே எ, ஒ என்னும் கீழுயிர்களாக மாறி அமையும்.
சான்று:
இலை > எலை
இடம் > எடம்
விஷம் > வெஷம்
சிவந்து > செவந்து
சிவப்பு > செவப்பு
உடல் > ஒடல்
உடம்பு > ஒடம்பு
உரல் > ஒரல்
உதை > ஒதை
துடை > தொடை
கீழுயிர் மேலுயிராதல்
கீழுயிராகிய ஒ என்பது, மேலுயிராகிய உ என மாறி அமையும்.
சான்று:
கொடு > குடு
சான்று:
அடித்தான் > அடிச்சான்
கிழிந்தது > கிழிஞ்சது
படைத்தான் > படைச்சான்
உடைந்தது > உடைஞ்சது
காய்த்தது > காய்ச்சது
செய்தான் > செஞ்சான்
சான்று:
மிகுதி > மி(கு)தி > மீதி
பகுதி > ப(கு)தி > பாதி
தொகுப்பு > தொ(கு)ப்பு > தோப்பு
பகல் > ப(க)ல் > பால்
மெய் இடம் பெயரல்
ஒரு சொல்லில் மெய் ஒலிகள் தம்முள் இடம் மாறி அமைதல் மெய் இடம் பெயரல் எனப்படும். இம்மாற்றத்தால் பொருள் சிறிதும் மாறுவது இல்லை. விரைவு காரணமாகவும், ஒலி நயம் காரணமாகவும் இந்த மெய் இடம் பெயரல் நிகழ்கிறது.
சான்று:
சதை > தசை
விசிறி > சிவிறி
இடறி > இறடி
கொப்புளம் > பொக்குளம்
தப்பை > பத்தை
மதுரை > மருதை
கொப்பூழ் > பொக்குழ்
உயிர் இடம் பெயரல்
சொற்களில் உயிர் ஒலிகள் இடம் பெயரல் ஒரு புதுமையான முறையில் காணப்படுகிறது. ஓர் உயிர் ஒலியை முதலாகக் கொண்ட சொற்களில் மூன்று உயிர் ஒலிகள் வரும்போதே இந்தப் புதுமையான இடம் பெயரல் காணப்படுகிறது. அச்சொற்களில் உள்ள மூன்று உயிர் ஒலிகளும் குறிலாகவே இருக்கும். இத்தகு சொற்களில் இரண்டாவது நிற்கும் உயிர் ஒலி மறைந்து போகும். முதலாவது நின்ற உயிர் ஒலி, அவ்விரண்டாவது உயிர் ஒலி நின்ற இடத்திற்குச் சென்று, அங்கு மறைந்துபோன உயிர் ஒலிக்கு ஈடாக நெடிலாக மாறும். இதுவே உயிர் இடம் பெயரல் எனப்படும்.
தமிழில் பேச்சுவழக்கில் மூன்று உயிர் ஒலிகளைக் கொண்ட சில சொற்களில் இத்தகைய மாற்றம் நடைபெறக் காணலாம்.
சான்று:
எனக்கு > னேக்கு
ஒனக்கு (உனக்கு) > னோக்கு
ஒலகம் (உலகம்) > லோகம்
இங்கே சான்று காட்டப்பட்ட சொற்களுள், ‘எனக்கு’ என்பது ‘னேக்கு’ என மாறி அமையும் முறை பின்வருமாறு:
எ + ன் + அ + க் + க் + உ = எனக்கு
எ + ன் + x + க் + க் + உ = என்க்கு
x + ன் + எ + க் + க் + உ = னெக்கு
ன் + ஏ + க் + க் + உ = னேக்கு
இவ்வாறே மற்றச் சொற்களும் உயிர் இடம் பெயரல் முறையில் மாறி அமைவதைப் பிரித்துப் பார்த்து விளங்கிக் கொள்ளுங்கள்.
பாடம் - 6
இடைக்காலத்தில் வழங்கிய கிளைமொழிகளின் ஒலியமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வீரசோழிய உரை கொண்டும், கல்வெட்டுகள் கொண்டும் அறிய விருக்கிறோம்.
தற்காலத்தில் வட்டாரம், சமூகம், தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் மொழியியலார் கிளைமொழிகளைப் பலவாறு பாகுபடுத்தி விளக்குகிறார்கள். தற்காலத் தமிழில் வழங்கும் பல்வேறு வகைக் கிளைமொழிகளில் நிகழும் ஒலி மாற்றங்களைத் தக்க சான்றுகளுடன் காணவிருக்கிறோம்.
கிளைமொழிக்கான இவ்விளக்கத்தைச் சில சான்றுகள் வழி நின்று பார்த்தால் நன்கு புரிந்துகொள்ளலாம்.
தேங்காய் ஓட்டை (இரண்டாக உடைத்துப் பருப்பை எடுத்த பிறகு உள்ள ஒரு தேங்காய் ஓட்டை), தமிழ் நாட்டின் வடபகுதியில் உள்ள சென்னையைச் சார்ந்த மக்கள் கொட்டாங்கச்சி என்று கூறுகின்றனர்; தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி முதலான இடங்களில் வாழ்பவர்கள் சிரட்டை அல்லது செரட்டை என்று கூறுகின்றனர். இவ்வாறு ஒரு பொருளைக் குறிக்க இடத்திற்கு இடம் வெவ்வேறு சொற்கள் வழங்கும்போது, அச்சொற்களைக் கிளைமொழி என்று மொழியியலார் கூறுகின்றனர்.
சொற்களின் ஒலியமைப்பிலும் இடத்திற்கு இடம் வேறுபாடு காணப்படுகிறது. ‘சாமான்’ (things) என்ற சொல் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஸகர ஒலியுடன் (‘s’) சாமான் என்று ஒலிக்கப்பட, தென்பகுதியில் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் ஜகர ஒலியுடன் (‘j’) ஜாமான் என ஒலிக்கப்படுகிறது. இவ்வாறு ஒலிக்கப்படும் சொல்லும் கிளைமொழியே ஆகும்.
இலக்கண அமைப்பிலும் வேறுபாடு காணப்படுகிறது. அண்ணன் வந்தான், அக்காள் வந்தாள் என்று எழுவாய் பயனிலை இயைபாகிய திணை, பால் இயைபோடு கூறவேண்டிய தொடர்களை, சமுதாயத்தில் ஒரு சில பிரிவினர் அண்ணன் வந்திச்சி, அக்கா வந்திச்சி என்று திணை, பால் இயைபில்லாமல் கூறுகின்றனர். வந்தான் என்ற ஆண்பால் சொல்லையும், வந்தாள் என்ற பெண்பால் சொல்லையும் வந்திச்சி (வந்தது) என்ற அஃறிணை ஒருமைப்பால் சொல்லால் கூறுவது இலக்கண அமைப்பில் வேறுபாடு ஆகும். எனவே வந்திச்சி என்பது கிளைமொழி எனப்படுகிறது.
தற்காலத்தில் மொழியியலார் கிளைமொழியைப் பல்வேறு கோணங்களில் பாகுபடுத்தி விரிவாக விளக்கியுள்ளனர்.
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே
(தொல்.சொல், 397)
இந்நால்வகைச் சொற்களுள் திசைச்சொல் என்று தொல்காப்பியர் குறிப்பிடுவது கிளைமொழியே என்று தற்கால மொழியியலார் கூறுகின்றனர். தொல்காப்பியர் திசைச்சொல் பற்றி,
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம்குறிப் பினவே திசைச்சொல் கிளவி
(தொல்.சொல், 400)
என்று கூறுகின்றார். “செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளிலும், தாம் குறித்த பொருளை விளக்கி நிற்கும் சொற்கள் திசைச்சொல் எனப்படும்” என்பது இந்நூற்பாவின் பொருள்.
நால்வகைச் சொற்களுள் இயற்சொல் என்பது செந்தமிழ் நாட்டில் வழங்குவது; எல்லா நாட்டார்க்கும் பொருள் இயல்பாகத் தெரியக் கூடியது. ஆனால் திசைச்சொல் என்பது எல்லோருக்கும் பொருள் விளங்கக்கூடியது இல்லை; எந்த நாட்டில் வழங்குகிறதோ அந்த நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருள் தெரியக் கூடியது. இக்கருத்தையே தொல்காப்பியர் இந்நூற்பாவில் உணர்த்துகிறார்.
தொல்காப்பியர் இந்நூற்பாவில் செந்தமிழ் நாடு எது என்றோ, பன்னிரு கொடுந்தமிழ் நாடுகள் எவை என்றோ கூறவில்லை. இவை அவர் காலத்தில் கற்றறிந்த பலரும் அறிந்த ஒன்றாக இருந்திருக்கலாம்.
இடைக்காலத்தில் வாழ்ந்த நன்னூலாரும் நன்னூலில் தொல்காப்பியரை அடியொற்றி, கொடுந்தமிழ் நாடுகள் பன்னிரண்டு என்று கூறினார். ஆனால் அவரும் அந்நாடுகள் எவை என்று கூறவில்லை.
இடைக்காலத்தில் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் ஆகியோரும், நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர் ஆகியோரும் அந்நாடுகள் எவை எனக் குறிப்பிடுகின்றனர். இவர்களுள் சங்கரநமச்சிவாயர் செந்தமிழ்நாடு என்பதை, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையைச் சூழ்ந்துள்ள பாண்டிய நாடு என்று கொண்டார். பண்டைக் காலத் தமிழ்ப் புலவர்கள் மதுரையைத் ‘தமிழ்கெழு கூடல்’ என்றே குறிப்பிட்டுள்ளனர். மதுரையைச் சூழ்ந்த பகுதி, பண்டைக் காலத்தில் பாண்டிய நாட்டின் வடபகுதி ஆகும். இப்பகுதியில் வழங்கிய தமிழைச் செந்தமிழாக – எல்லோருக்கும் விளங்கும் பொதுமொழியாகக் (Standard spoken language) கொண்டு, அதிலிருந்து வேறுபட்டு ஏனைய பன்னிரு தமிழ்ப் பகுதிகளில் வழங்கும் தமிழைக் கொடுந்தமிழ் அல்லது கிளைமொழி (dialect) என்று கொண்டனர். அவர்கள் குறிப்பிடும் பன்னிரு நாடுகள் வருமாறு:
1. தென்பாண்டி நாடு
2. குட்ட நாடு
3. குட நாடு
4. கற்கா நாடு
5. வேணாடு
6. பூழி நாடு
7. பன்றி நாடு
8. அருவா நாடு
9. அருவா வடதலை நாடு
10. சீத நாடு
11. மலாடு
12. புனல் நாடு
இந்நாடுகளில் வழங்கும் திசைச்சொற்களையும், அவற்றுக்கான செந்தமிழ்ச் சொற்களையும் உரையாசிரியர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். பின்வரும் பட்டியல் உரையாசிரியர்கள் குறிப்பிடும் பன்னிரு கிளைமொழிப் பகுதிகள், அவற்றிற்குரிய தற்காலப் பெயர் கொண்ட பகுதிகள், அப்பகுதிகளில் பழங்காலத்தில் வழங்கிய திசைச்சொற்கள் அல்லது கிளைமொழிகள், அச்சொற்களுக்கு இணையாக அக்காலத்தில் வழங்கிய செந்தமிழ் அல்லது பொதுமொழிச் சொற்கள் ஆகியவற்றைக் காட்டும்.
கிளைமொழி அல்லது திசைச்சொல் வழங்கிய இடம்
தற்காலப் பெயர்
கிளைமொழி அல்லது திசைச்சொல்
பொதுமொழி அல்லது செந்தமிழ்ச்சொல்
1.தென்பாண்டி நாடு
திருநெல்வேலிப் பகுதி
பெற்றம் ஆ(பசு)
சொன்றி சோறு
2. குட்ட நாடு
கேரளாவில் கோட்டயம், கொல்லம் மாவட்டங்கள் தள்ளை தாய்
3. குட நாடு வடமலபார் அச்சன் தந்தை
4. கற்கா நாடு கோயம்புத்தூர் சார்ந்த மலைப் பகுதிகள் கையர் வஞ்சர்
5. வேணாடு திருவாங்கூரின் தென்பகுதி கிழார் தோட்டம்
6. பூழி நாடுகோழிக்கோடு
பாழி சிறுகுளம்
ஞமலி நாய்
7. பன்றி நாடு
பழனி மலை சூழ்ந்த பகுதி
செய் வயல்
8. அருவா நாடு
வட ஆர்க்காடு தென் ஆர்க்காடு செல்கல்பட்டு
கேணி சிறுகுளம்
9. அருவா வடதலை நாடு
தமிழகத்தின் வடக்குப் பகுதி
எகின் புளி
10. சீத நாடு
நீலகிரி
எலுவன் தோழன்
இகுளை தோழி
11. மலாடு* திருக்கோவலூர் சூழ்ந்த பகுதி இகுளை தோழி
12. புனல் நாடு
சோழ நாடு
ஆய் தாய்
*மலாடு- மலையமான் நாடு என்பதன் மரூஉ ஆகும். பண்டைக் காலத்தே இருந்த கடையெழு வள்ளல்களுள் ஒருவனான மலையமான் திருமுடிக்காரி என்பவன் ஆண்ட நாடு மலையமான் நாடு ஆகும்.
வட்டாரக் கிளைமொழி (Regional dialect)
சமூகக் கிளைமொழி (Social dialect)
பார்வைக் கிளைமொழி (Eye dialect)
பொதுக் கிளைமொழி (Standard dialect)
என்றாற் போலப் பலவாறு பாகுபடுத்துகின்றனர்.
கிளைமொழி தமிழ்நாட்டில் வழங்கும் இடம் பற்றி அதை ‘வட்டாரக் கிளைமொழி’ என்றும், அதைப் பேசுகின்ற மக்களின் சமூக நிலை பற்றிச் ‘சமூகக் கிளைமொழி’ என்றும் கூறுவர். கிளைமொழியை வரிவடிவத்தில் அளிக்கும்போது அதனைப் ‘பார்வைக் கிளைமொழி’ என்று கூறுவர். ஒரே மொழி வட்டாரத்திற்கு வட்டாரம், சாதிக்குச் சாதி, தொழிலுக்குத் தொழில் வேறுபட்டாலும் கூட, அவற்றிடையே ஒரு பொதுத்தன்மையைக் காணலாம். எழுத்துமொழியுடன் பெரும்பாலும் ஒத்துப் போகின்ற ஒரு கிளைமொழியைப் ‘பொதுக் கிளைமொழி’ என்று கூறுவர்.
மொழியியலார் கிளைமொழியை மேலே குறிப்பிட்டவாறு பாகுபடுத்தினாலும், வட்டாரக் கிளைமொழி, சமூகக் கிளைமொழி ஆகிய இரண்டை மட்டும் பலவாறு வகைப்படுத்தி விளக்குகின்றனர். அவற்றைப் பற்றி இப்பாட இறுதியில் தற்காலக் கிளைமொழி என்ற தலைப்பில் விரிவாகக் காண்போம்.
இனிக் காலந்தோறும் கிளைமொழிகள் எவ்வாறு இருந்தன? எவ்வாறு மாற்றம் அடைந்தன? என்பனவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
புறநானூற்றில் ஓசை என்னும் சொல் ‘பொரியல்’ என்ற பொருளில் வருகிறது.
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை
(புறநானூறு, 261:8)
(நெய் காய்கின்ற உலையின்கண் சொரியப்பட்ட ஆட்டு இறைச்சியினது பொரியல். மை – கரிய ஆடு; ஊன்- இறைச்சி; ஓசை- பொரியல்.)
கலித்தொகையில் செறு என்னும் சொல் ‘வயல்’ என்ற பொருளில் வருகிறது.
நீர்ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய
(கலித்தொகை, 75:1)
(நீர் நிறைந்த வயலில் பூத்த நெய்தல் பூவொடு. செறு- வயல்.)
சங்க காலக் கிளைமொழியில் ‘நான்கு’ என்பதை நால்கு என்றும், ‘ஒன்பது’ என்பதைத் தொண்டு என்றும் வழங்கியுள்ளனர். இக்கிளைமொழி வழக்குகள் சங்க இலக்கியத்தில் புலவர்களால், செய்யுட் ஈட்டச் சொற்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
பால்புரை புரவி நால்கு உடன் பூட்டி
(பொருநராற்றுப்படை, 165)
(பரிசிலரை வழியனுப்பும்போது அவர்களைப் பால் போன்ற வெண்ணிறக் குதிரைகள் நான்கு பூட்டிய தேரில் ஏற்றி. நால்கு- நான்கு)
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என
(பரிபாடல், 3:79)
(தொண்டு – ஒன்பது)
கருமண் நிலப்பகுதி
இது கொங்குநாடு என்று அழைக்கப்படும் வட்டாரம் ஆகும். தற்போதைய கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் போன்ற மாவட்டப் பகுதிகளை இடைக்காலத்தில் உள்ளடக்கிய வட்டாரம் ஆகும். இவ்வட்டாரத்தில் ழகர ளகர மெய்கள் மயங்கி வருகின்றன.
1. ழ் > ள்
நாழி > நாளி
உழக்கு > உளக்கு
கோழி > கோளி
வாழை > வாளை
2. ள் > ழ்
விளக்கு > விழக்கு
பளிங்கு > பழிங்கு
இளமை > இழமை
காவிரி பாயும் பகுதி
இது இடைக்காலத்தில் சோழநாடு ஆகும். இவ்வட்டாரத்தில் இரட்டித்து வரும் இரட்டை றகரம், ‘வெற்றிலை > வெத்திலை’ என இரட்டைத் தகரமாக மாறாமல், இரட்டைச் சகரமாக மாறுகிறது.
வெற்றிலை > வெச்சிலை
முற்றம் > முச்சம்
கற்றை > கச்சை
பாலாறு பாயும் பகுதி
இது பல்லவ நாடு ஆகும். தற்போதைய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்னார்க்காடு மாவட்டப் பகுதிகளை இடைக்காலத்தில் உள்ளடக்கிய வட்டாரம் ஆகும்.
இவ்வட்டாரத்தில் ‘வீட்டின் பக்கத்தில் நின்றது’, ‘நெல்லின் பக்கத்தில் நின்றது’ என்பனவற்றிற்குப் பதிலாக ‘வீட்டுக்கா நின்றது’, ‘நெல்லுக்கா நின்றது’ என்னும் தொடர்கள் வழங்குகின்றன.
மேலும் சில கிளைமொழி வழக்குகள்
வீரசோழிய உரையாசிரியர் வட்டாரம் எதனையும் குறிப்பிடாமல், மேலும் சில இழிந்த கிளைமொழி வழக்குகளைக் குறிப்பிடுகிறார். அவை வருமாறு:
1. ரகரம் மறைதல்
இவனைப் பார்க்க > இவனைப் பாக்க
2. ஆக்க அசைநிலை தோன்றுதல்
இங்கு > இங்காக்க
அங்கு > அங்காக்க
3. இரட்டை றகரம் இரட்டைத் தகரமாதல்
சேற்றுநிலம் > சேத்துநிலம்
ஆற்றுக்கால் > ஆத்துக்கால்
4. ழகரம் யகரமாதல்
கோழி முட்டை > கோயி முட்டை
வாழைப் பழம் > வாயைப் பயம்
5. யகரம் சகரமாதல்
உயிர் > உசிர்
மயிர் > மசிர்
சொற்கள் மாற்றம்
ஒரே பொருளை உணர்த்த ஒரு சொல் ஒரு வட்டாரத்திலும், இன்னொரு சொல் மற்றொரு வட்டாரத்திலும் உள்ள கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கக் காணலாம். இதனைச் சில சான்றுகள் கொண்டு காண்போம்.
சான்று 1:
சம்வத்சரம் – வருஷம்
இங்கே கூறப்படும் ‘சம்வத்சரம்’ என்றசொல் ஆண்டைக் குறிக்கும் சொல்லாகச் செங்கல்பட்டு, வட ஆர்க்காடு மாவட்டக் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆண்டைக் குறிக்க மற்றப் பகுதிக் கல்வெட்டுகளில் ‘வருஷம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சான்று 2:
புத்திர பவுத்திர பாரம்பரியம் – மக்க மக்கள்
ஒருவனுடைய மகன் மற்றும், பேரன் வழியில் தொடர்ந்து வரக்கூடிய பரம்பரையைப் பற்றிய சொல்லாகப் ‘புத்திர பவுத்திர பாரம்பரியம்’ (புத்திர- மகன்; பவுத்திர- பேரன்; பாரம்பரியம்-பரம்பரை) என்ற சொல், மதுரை, வட ஆர்க்காடு மாவட்டக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. அதே பொருளைக் குறிக்கக் கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகளில் ‘மக்க மக்கள்’ என்ற சொல் காணப்படுகிறது. தற்காலத்திலும் சில பகுதிகளில் ‘மக்க மக்கள்’ என்ற சொல் ‘மக்க மக்க’ என்று மேலே குறிப்பிட்ட பொருளில் வழங்கிவரக் காணலாம்.
சான்று 3:
அனுபவி – மய்யாள்
‘அனுபவி’ என்ற பொருளைக் குறிக்கும் ‘மய்யாள்’ என்ற சொல் கி.பி. 15, 16, 17 ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்த கன்னியாகுமரி, திருநெல்வேலிக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. கி.பி. 1598 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டு ஒன்றில் ‘அனுபவி’ என்ற சொல்லே காணப்படுகிறது.
ஒலியமைப்பில் மாற்றம்
இடைக்காலக் கல்வெட்டுகளில் உள்ள கிளைமொழிகளில் குறிப்பிடத்தக்க ஒலிமாற்றங்களைக் காணமுடிகிறது. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.
1. ன்ற் > ண்ண்
புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகளில் இந்த ஒலிமாற்றம் காணப்படுகிறது.
ஒன்று > ஒண்ணு
கொன்று > கொண்ணு
தென்மாவட்டங்களில் இருந்த இந்த ஒலிமாற்றம், வட மாவட்டங்களுக்கும் சென்றது. கி.பி. 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வடமாவட்டக் கல்வெட்டு ஒன்றில் ‘ன்ற் > ண்ண்’ மாற்றம் காணப்படுகிறது.
பன்றி > பண்ணி
2. ற்க், ட்க் > க்க்
இந்த ஒலிமாற்றம் தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் உள்ள கி.பி. 14, 15, 16 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
மேற்கு > மேக்கு
தெற்கு > தெக்கு
விற்கிற > விக்கிற
உட்கிடை > உக்கிடை
3. ரகர மறைவும், ரகரத் தோற்றமும்
இடைக்காலக் கல்வடெ்டுகளில் இம்மாற்றங்கள் காணப்படுகின்றன.
அ) கீர்த்தியை > கீத்தியை
கார்த்திகை > காத்திகை
தளர்ந்து > தளந்து
வார்த்து > வாத்து
பார்க்க > பாக்க
இச்சொற்களில் ரகரம் மறைகின்றது.
ஆ) கோவை > கோர்வை
சேவை > சேர்வை
சீமை > சீர்மை
இச்சொற்களில் ரகரம் தோன்றுகிறது.
சமூகக் கிளைமொழி
சமூகக் கிளைமொழி பற்றியும் கல்வெட்டுகளில் காணமுடிகிறது. கி.பி. 16 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில்,
செய்தவாள்
என்ற சொல் ‘செய்தவர்’ என்ற பொருளிலும், கி.பி. 17 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில்,
வைஷ்ணவாள்
என்ற சொல் ‘வைணவர்’ என்ற பொருளிலும் வழங்கக் காணலாம். இவ்வடிவங்களை இக்காலத்திலும் பிராமணர்களின் பேச்சு வழக்கில் காணலாம்.
1. வடக்குக் கிளைமொழி
2. கிழக்குக் கிளைமொழி
3. மேற்குக் கிளைமொழி
4. தெற்குக் கிளைமொழி
இக்கிளைமொழிகள் தமிழ்நாட்டில் வழங்கும் இடங்கள் பற்றியும், இவற்றின் ஒலியமைப்பு, இலக்கண அமைப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும் மொழியியலார் குறிப்பிடும் கருத்துகளைக் காண்போம்.
வடக்குக் கிளைமொழி
சென்னை, செங்கல்பட்டு, வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு முதலான வடமாவட்டங்களில் வழங்கும் கிளைமொழியை வடக்குக் கிளைமொழி என்பர்.
ஒலியமைப்பில் மாற்றங்கள்
வடக்குக் கிளைமொழியில் ழகரம், யகரமாகவும் ளகரமாகவும் ஸகரமாகவும் மாறி வழங்குகிறது.
கழுதை > கய்தை
கிழவி > கெயவி
பழம் > பயம்
குழாய் > கொயா
பிழைப்பு > பொயப்பு
பழம் > பளம்
இழுத்துக்கொண்டு> இஸ்துகினு
இலக்கண அமைப்பில் மாற்றங்கள்
i) நிகழ்கால இடைநிலையாகிய ‘கிறு’ இல்லாமல் வினைமுற்று வழங்குகிறது.
இருக்கிறது > கீது
கிழிகிறது > கீயுது
ii) ‘விட்டால்’ என்ற உருபு வரவேண்டிய இடத்தில் ‘காட்டி’ என்ற உருபு வருகிறது.
இல்லாவிட்டால் > இல்லாங்காட்டி
வராவிட்டால் > வராங்காட்டி
iii) ‘ஆக’ என்ற உருபு வருமிடத்தில் ‘கோசரம்’ என்பது வருகிறது.
எனக்காக > எனக்கோசரம்
அவளுக்காக > அவளுக்கோசரம்
iv) ஏழாம் வேற்றுமைப் பொருளைக் குறிக்க ‘ஆண்டெ’ என்ற உருபு பயன்படுத்தப்படுகிறது.
என்னிடம் > என்னாண்டெ
வீட்டில் > வீட்டாண்டெ
சொற்கள்
இலவசம் என்பதைக் ‘கொசுரு’ என்றும், பணம் என்பதைத் ‘துட்டு’ என்றும், சின்னம்மா என்பதைத் ‘தொத்தா’ என்றும், அப்பா என்பதை ‘நயினா’ என்றும், கொஞ்சம் என்பதை ‘ரவ்வுண்டு’ என்றும் இக்கிளைமொழியில் வழங்குவர்.
கிழக்குக் கிளைமொழி
தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை போன்ற கிழக்கு மாவட்டங்களில் வழங்கும் கிளைமொழியைக் கிழக்குக் கிளைமொழி என்பர்.
ஒலியமைப்பில் மாற்றங்கள்
i) ககரம் வகரமாக மாறுகிறது
போக > போவ
சாக > சாவ
வேக > வேவ
தோகை > தோவ
ii) பகரம் வகரமாக மாறுகிறது
கோபம் > கோவம்
கபம் > கவம்
இலக்கண அமைப்பில் மாற்றங்கள்
‘வொ’ என்னும் விகுதி உயர்திணை ஒருமையையும், அஃறிணை ஒருமையையும் பன்மைப்படுத்த வருகிறது.
அவனுவொ வந்தானுவொ (அவன்கள் வந்தான்கள்)
மாடுவொ (மாடுகள்)
சொற்கள்
திருநாள் என்பது ‘திருணா’ என்றும், எண்பது என்பது ‘எம்பளது’ என்றும், பதநீர் என்பது ‘பழணி’ என்றும் வழங்குகின்றன. இக்கிளைமொழியில் சிறிய மூட்டையைச் ‘சிப்பம்’ என்றும், குரல்வளையை ‘ஊட்டி’ என்றும் கூறுகின்றனர்.
மேற்குக் கிளைமொழி
கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி முதலான மேற்கு மாவட்டங்களில் பேசப்படும் கிளைமொழியை மேற்குக் கிளைமொழி என்பர்.
ஒலியமைப்பில் மாற்றங்கள்
i) சகரம் ஸகரமாதல்
சாப்பாடு > ஸாப்பாடு
சோறு > ஸோறு
ii) ஜகரம் ஸகரமாதல்
ராஜா > ராஸா
ஜோலி > ஸோலி
இலக்கண அமைப்பில் மாற்றங்கள்
i) மேற்குக் கிளைமொழி கொங்குநாட்டுத் தமிழ் எனப்படும். இதில் ‘ங்க’ என்ற பன்மை விகுதி, வினைமுற்றுகளில் உயர்வு ஒருமை விகுதியாக வழங்குகிறது.
வந்துடுங்கோ
பார்த்தமுங்க
ii) ‘விடு’ என்ற துணைவினைக்குப் பதிலாக, ‘போடு’ என்ற துணைவினை வருகிறது.
சொல்லிவிடு > சொல்லிப்போடு
செய்துவிடு > செய்துபோடு
சொற்கள்
தலைப்பாகை என்பதை ‘உருமாலை’ என்றும், ஒரு வேளை உணவு என்பதை ‘ஒரு சந்தி’ என்றும், தலையணை என்பதைத் ‘தலை மூட்டை’ என்றும், சமையலறை என்பதை ‘அட்டாவி’ என்றும், ஓணான் என்பதை ‘ஒதெக்காண்’ என்றும் கூறுவர்.
தெற்குக் கிளைமொழி
மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி முதலான தென்மாவட்டங்களில் வழங்கும் கிளைமொழி தெற்குக் கிளைமொழி எனப்படும்.
ஒலியமைப்பில் மாற்றங்கள்
i) ழகரம் ளகரமாகவே ஒலிக்கப்படுகிறது.
வாழைப் பழம் > வாளப் பளம்.
ii) சகரம் யகரமாக மாறுகிறது
ஊசி > ஊயி
பாசி > பாயி
iii) சில சொற்களில் மொழிமுதலில் வரும் சகரம் ஜகரமாக மாறுகிறது.
சாமான் > ஜாமான்
இலக்கண அமைப்பில் மாற்றங்கள்
i) ‘மார்’, ‘ஆக்கமார்’ என்னும் பன்மை விகுதிகள் கன்னியாகுமரித் தமிழில் காணப்படுகின்றன.
அக்காமார்
நாடாக்கமார்
ii) ‘அவனை அங்கே பார்த்தான்’ என்னும் தொடரைத் திருநெல்வேலி மாவட்டத்தில் ‘அவனை அங்ஙனே வச்சிப் (வைத்துப்) பார்த்தான்’ என்பர்.
சொற்கள்
அரைஞாண் என்பதை ‘அர்ணாக் கொடி’ என்றும், கறி என்பதை ‘வெஞ்சனம்’ என்றும், ஒன்றும் தெரியாதவனை ‘அப்ராணி’ என்றும் இங்கே, அங்கே, எங்கே என்பனவற்றை முறையே ‘இங்கிட்டு, அங்கிட்டு, எங்கிட்டு’ என்றும், இடையில் அல்லது நடுவில் என்பதை ‘வூடாலே’ என்றும் இக்கிளைமொழியில் கூறுவர்.
இதுகாறும் வட்டாரக் கிளைமொழிகளைப் பற்றிப் பார்த்தோம். இனிச் சமூக கிளைமொழிகளைப் பற்றிப் பார்ப்போம்.
பிராமணர் பேச்சுமொழி
பிராமணர்கள் வடமொழியையும் ஆங்கிலத்தையும் கற்ற இரு மொழியாளர்களாக விளங்குகின்றனர். கோயில்களில் நேரிடையாகப் பெரும்பங்கு வகித்ததால் சமூகத்தில் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டார்கள். இவர்கள் குமரி முதல் சென்னை வரை எந்த வட்டாரத்தில் வாழ்ந்தாலும், இவர்களது பேச்சு வழக்கினில் எந்த வேறுபாடும் காணப்படுவது இல்லை. ஆனால் இவர்களது பேச்சுத்தமிழ் மற்றவர்களது பேச்சுத்தமிழினின்று வேறுபடுகிறது.
வடமொழியில் உள்ள ஸ், ஜ், ஹ் போன்ற ஒலிகள் இவர்களது பேச்சுவழக்கில் காணப்படுகின்றன. மெய் ஒலிகள் தமிழில் மொழி முதல் வாரா. ஆனால் இவர்களது பேச்சு வழக்கில் சில நேரங்களில் மொழி முதலில் வரவும் செய்கின்றன:
மூவிடப் பெயர்களில் தன்மை ஒருமை இடப்பெயராகிய நான் என்பதும், முன்னிலை ஒருமை இடப்பெயராகிய நீ என்பதும், நான்காம் வேற்றுமைக்கு உரிய கு உருபை ஏற்கும்போது மற்றவர்கள் பேச்சுவழக்கில் எனக்கு, ஒனக்கு (உனக்கு) என மாறும். ஆனால் இவர்களுடைய பேச்சுவழக்கிலோ இவை முறையே னேக்கு, னோக்கு என வேறுவிதமாக மாற்றம் அடைகின்றன.
படர்க்கைப் பெயர்கள் எழுவாய் வடிவங்களாக இருக்கும்போது மாற்றம் அடைகின்றன.
அவன் – ஆண்பால் ஒருமை
அவெ – பெண்பால் ஒருமை (அவள்)
அவா – உயர்வு ஒருமைப் பன்மை (அவர்)
அவுங்க – பலர்பால் (அவர்கள்)
மற்றவர்கள் பேச்சில் முன்னிலையில் உள்ளவரை வினவும் போது, எப்போ வந்தீர்கள் அல்லது எப்போ வந்தீங்க என வினவுவர். இவர்கள் பேச்சில் அவ்வாறு வினவுவது எப்போ வந்தேள் என மாறி அமைவதைக் காணலாம்.
மேலும் இவர்களது பேச்சுவழக்கில் கீழ்க்கண்ட அருஞ்சொற்கள் காணப்படுகின்றன.
ஆம்படையான் (கணவன்)
ஆத்துக்காரி (மனைவி)
தோப்பனார் (அப்பா)
மாட்டுப் பொண் (மருமகள்)
ஓரகத்தி (கணவனுடைய சகோதரர் மனைவி)
சட்டகர் (மனைவியினுடைய சகோதரி கணவர்)
அத்திம்பேர் (அக்கா கணவர், அத்தை கணவர்)
பொண்டுகள் (பெண்கள்)
ஜாகை (தங்கியுள்ள இடம்)
ஜலம் (தண்ணீர்)
ஆத்துக்கு (வீட்டிற்கு)
தலித்துகள் பேச்சுமொழி
இந்து சமயச் சாதி அடிப்படைக் கோட்பாட்டின்படி தலித்துகள் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் உள்ளனர். தனியாக வாழ்தல், மற்றவர்கள் இவர்கள் மீது கொண்டுள்ள சமுதாய நோக்கு முதலியவற்றால் பல்லாண்டு காலமாக இவர்கள் தனித்து வாழ்கின்றனர். நாடு விடுதலை அடைந்த பின்னர் இவர்களது கல்வி, சமூக, பொருளாதாரத் துறையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் இவர்களது பேச்சுத்தமிழ் மற்றவர்களின் பேச்சுத்தமிழினின்று வேறுபட்டுக் காணப்படுகிறது.
ஒலியமைப்பில் மாற்றம்
i) உகரம் இகரமாக மாறுகிறது.
முக்கியம் > மிக்கியம்
புல்லு > பில்லு
காசு > காசி
ii) ழகரம் ளகரமாக மாறுகிறது.
குமிழ் > கும்ளு
சிமிழ் > சிம்ளு
iii) இடையில் வரும் பகரம் வகரமாக மாறுகிறது.
சாபம் > சாவம்
கோபம் > கோவம்
iv) இடையில் வரும் ‘க’ என்பது ‘கா’ என மாறுகிறது.
தங்கச்சி > தங்காச்சி
சொற்கள்
ஏந்த்ரொம் (திரிகை)
ஏணெ (தூளி)
குந்து (உட்கார்)
கெடாசு (எறி)
பிசினி (கோந்து)
மச்சி (மனைவியின் தங்கை)
முதுக்கான் (பெரியவீடு)
தற்காலத் தமிழில் உள்ள கிளைமொழிகளைச் சமூகநிலை அடிப்படையில் காணும்போது, பிராமணர், தலித்துகள் ஆகிய இரு சமூகப் பிரிவினரின் கிளைமொழிகளைப் பற்றி மட்டுமே மேலே காண்போம். மொழியியலார் பிராமணர், தலித்துகள் மட்டுமன்றி வேறுபல சாதிப் பிரிவினரின் கிளைமொழிகளின் அமைப்பையும் ஆராய்ந்து காண்கின்றனர். மேலும் செய்கின்ற தொழில் அடிப்படையிலும் கிளைமொழிகளை ஆராய்கின்றனர். சான்றாக மீன்பிடித்தலைத் தொழிலாக உடைய மீனவர் பேச்சுமொழி பற்றி மொழியியலார் ஆராய்ந்து விளக்கியுள்ளனர். இது போலக் கிளைமொழிகள் பற்றிய பலதரப்பட்ட ஆய்வுகள் நடந்துள்ளன; நடந்து வருகின்றன.

