நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்
- (தொல்காப்பியம்,கற்பியல்-12)
என்று வருகிற இடத்தில் சொல்லு-கூறு என்ற பொருளில் உரை என்ற சொல் இடம் பெறுகிறது. இதுவே பெரும்பான்மையான வழக்கு. அடுத்து, இச்சொல் உரைநடை (prose) என்ற பொருளிலும் தொல்காப்பியரால் பயன்படுத்தப் படுகிறது. செய்யுளியல் என்ற பகுதியில் (சூத்திரம் 157, 158), அடிவரையறையில்லாச் செய்யுள்கள் ஆறு என்று சொல்லி, அவற்றுள் ஒன்றாக, உரை என்பதை அவர் சொல்லுகிறார். பாடல் முழுவதும் பாட்டாக அல்லாமல் இடையிடையே குறிப்பாகவும் விரிவாகவும் இடம் பெறுவது உரை என்பது அவர் கூற்று.
பாட்டிடை
வைத்த குறிப்பி னானும்
பாவின் றெழுந்த கிளவி யானும்
பொருள்மர பில்லாப் பொய்ம்மொழி யானும்
பொருளாடு புணர்ந்த நகைமொழி யானும்
உரைவகை நடையே நான்கென மொழிப
- (செய்யுளியல்-166)
இவ்வாறு உரை அல்லது உரைநடை அமைகிறது என்பதுதான் உரைநடையின் தொடக்கப் பண்பு ஆகும். சிலப்பதிகாரம், ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்று அதன் பதிகம் கூறுகிறது. உரைநடையின் வரலாறு இவ்வாறு அமைகிறது ; அது தனியாகப் பார்க்கத் தகுந்தது.
அடுத்து, உரை என்பது, விளக்கம் அல்லது புலப்பாடு என்ற பொருளில், மரபியலில் தொல்காப்பியர் பேசுகிறார். சூத்திரத்தின் உட்பொருளைப் பேசுவது உரை ; உட்பொருள் மட்டுமல்லாது, இன்றியமையாத கருத்துகளையும் பேசுவது உரை ; மேலும் ‘ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்குவது உரை’ என்று தொல்காப்பியர் சொல்கிறார் (மரபியல் 105, 106).
இம்மூன்று பொருள்களையும் தொகுத்து, “உரைத்தல் – உரைநடையில் உரைத்தல் – இலக்கியம் அல்லது இலக்கணத்தின் உட்பொருளையும் அதனைச் சார்ந்த வேறுபொருட்களையும் செவ்விதின் உரைத்தல் அல்லது விளக்குதல்” உரை என்று சொல்லலாம். உண்மையில் இதுதான் திறனாய்வுக்கும் உரிய அடிப்படையான வரையறையாகும்.
காண்டிகையுரை என்பது கருத்து, சொற்பொருள், எடுத்துக்காட்டு எனும் மூன்றையும் தரவேண்டும் ; அவற்றோடு வினா விடையும் தரப்படல் வேண்டும். இலங்கையைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் நன்னூலுக்கு இவ்வகையான காண்டிகை உரையைத் தந்திருக்கிறார். ஆகவே அது நீண்டகாலமாகப் பாடநூலாகப் பயிலப்பட்டு வருகிறது. விருத்தியுரை என்பது விரிவாகச் சொல்லுகின்ற உரை. சூத்திரத்தின் உட்பொருளை மட்டுமல்லாது,. இன்றியமையாத விளக்கங்களையும் அது சொல்ல வேண்டும். பிறருடைய உரையை அல்லது கருத்தை எடுத்துரைத்து அதனை மறுத்தோ, அதற்கு உடன்பட்டோ, தன்னுடைய கருத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். ஐயங்களை அகற்ற வேண்டும். இவ்வகையில், நன்னூலுக்குச் சங்கர நமச்சிவாயர் சிறந்த விருத்தியுரை எழுதியுள்ளார்.
தொல்காப்பிய உரைகளுக்குக் காண்டிகை, விருத்தி என்ற பாகுபாடுகள் இல்லை. எல்லா உரைகளுமே, விளக்கமாகவும் எடுத்துக்காட்டுகளுடனும் அமைந்த உரைகளாகும். யாப்புக்கள் பற்றிப் பேசும் யாப்பருங்கலக் காரிகை உரை, சுருக்கமான உரை. யாப்பருங்கலம் எனும் நூலுக்கு அமைந்த யாப்பருங்கல விருத்தியுரை, விளக்கமான உரை. இலக்கணங்களுள் தொல்காப்பியத்துக்கே அதிகமான உரைகள் உள்ளன. இன்றும்கூட அதற்கு உரைகள் எழுதப்படுகின்றன. தொல்காப்பியம் இலக்கியம் பற்றியும் வாழ்நெறி பற்றியும் பேசுகிறது என்பதே இதன் காரணி. இது தொல்காப்பியத்தின் பெருமையைக் காட்டுகிறது.
இறையனார்அகப்பொருளுரை பல வகைகளில் சிறப்புடையது. பழைய மரபுகளைக் கொண்டு வந்து ஒப்பவைத்துச் சொல்லுதல், புதிய செய்திகளைச் சொல்லுதல், பிறருடைய கருத்துகளைச் சொல்லி அவற்றை, ஏற்புடையனவெனின் ஏற்றுக் கொள்ளுதல், அல்லவெனின் மறுத்தல், வினாக்களை எழுப்புதல், அவற்றிற்கு விடைகள் சொல்லுதல், நூற்பாக்கள் சார்ந்த பல பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு வந்து சொல்லுதல் என்று பல பண்புகளை இதிலே காணலாம். இவையெல்லாம் திறனாய்வுநெறிக்கு உகந்தவை. தமிழ் உரைமரபு, இவ்வாறு திறனாய்வின் வரலாற்றோடு இணைந்திருக்கிறது.
ஒரு காலத்தில் – அந்தக் காலத்தின் பண்புகளுக்கும் சூழல்களுக்கும் ஏற்ப – எழுதப்பட்ட இலக்கியங்களும் இலக்கணங்களும், காலம் என்ற பரந்த வெளியில் தெளிவாகப் புரியமுடியாமல் போவதுண்டு. அருகிய சொல்லமைப்புகள், சொற்பொருள் மாற்றங்கள், பண்பாட்டு வழக்காறுகளில் ஏற்படும் மாற்றங்கள் முதலியவற்றின் காரணமாகப் ‘புரிதல்’ என்பதில் இடைவெளிகள் ஏற்படக்கூடும். மூலப் பனுவல்களின் நோக்கம், தலைமுறைகள் கடந்து அவை எல்லார்க்கும் பயன்படவேண்டும் என்பது. கால இடைவெளிகள் அல்லது தலைமுறை இடைவெளிகளை நீக்குவதில் உரைகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன. காட்டாகப் பட்டினப்பாலை,
முட்டாச் சிறப்பின் பட்டினம் (அடி: 218)
என்று சொல்லுகிறது. ‘முட்டா…’ என்ற சொல் வழக்கு, சங்க காலத்தில் பெருவழக்காக இருந்தாலும், பின்னாளில் குறிப்பாக நம்முடைய காலத்தில் அது அருகிய வழக்கு. எனவே புரிதலில் ஒரு தகவல் இடைவெளி (Communication gap) விழுகிறது. நச்சினார்க்கினியரின் உரை, இந்த இடைவெளியைக் குறைக்க வருகிறது. “குறைவுபடாத தலைமையை உடைய பட்டினம்” என்று உரை சொல்லுகிறது. இப்போது அந்தப் பாடல் கூறவந்த பொருளும் அதன் சிறப்பும் நமக்கு எளிதாகத் தெரியவருகின்றன. இவ்வாறு உரை, மூலப்பனுவலுக்கும், அதனை வாசிக்கிற பல்வேறு தலைமுறையினர்க்கும் தகவல் இடைவெளிகள் விழாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது. இதுவே, உரைகளின் அடிப்படையான பண்பும் பயனும் ஆகும். திறனாய்வின் அடிப்படையும் இதுதான்.
(1) சங்க கால வீழ்ச்சிக்குப் பிறகு வந்த வேற்றரசர்களின் ஆட்சிக் காலங்களில், மீண்டும் சங்க இலக்கியங்களையும் தொல்காப்பியத்தையும் படிக்கவும், அவை பற்றிச் சிந்திக்கவும் கூடிய ஆர்வநிலை ஏற்பட்டது; அதேபோது, மொழிநடை, பண்பாட்டு மாற்றங்கள், செய்திகளின் அருமைகள் முதலியவை தலைமுறைகளின் இடைவெளி காரணமாகச் சிறிய சிறிய தடைகளை ஏற்படுத்தின. எனவே உரை கூறுவது அவசியமாயிற்று.
(2) சங்க இலக்கியப் பாடல்கள் தனித்தனியாக எழுதப்பட்டவை ; பாடப்பட்டவை ; இவை, கி.பி.6ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு- தொகுக்கப்பட்டன. தொகைகளாக வரும்போது, மொத்தமாகப் படிப்பதற்கும் உரை கூறுவதற்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன.
(3) சமணத் துறவிகளின் செயல்பாடுகளினால் பல சமணப் பள்ளிகள், சங்கங்கள் ஏற்பட்டன ; அப்போது இலக்கண இலக்கிய நூல்களும் தத்துவங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன; விவாதிக்கப்பட்டன. இந்தச் சூழ்நிலைகள் தமிழில் உரைகள் தோன்ற நல்ல தளம் அமைத்தன.
20-ஆம் நூற்றாண்டிலும் உரைகள் பல தோன்றியுள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்கது. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் எழுதிய திருவாசக உரையாகும் கதிர்மணி விளக்கம் என்பது இதன்பெயர். மறைமலையடிகள் எழுதிய முல்லைப்பாட்டு – ஆராய்ச்சி உரை மற்றும் பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை என்ற இரண்டும் உரைகளாக மட்டுமல்லாமல், இக் காலத்துத் தமிழ்த் திறனாய்வின் தொடக்க கால முயற்சிகளாகவும் கருதப்படுகின்றன. உரை என்பதற்கும் திறனாய்வு என்பதற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் குறைவே என்பதனை மறைமலையடிகளின் இந்த இரு உரைகளும் நமக்குக் காட்டுகின்றன.
தமிழில் வழங்கும் இன்றைய திறனாய்வின் வரலாறு எழுதுகிறவர்கள், இதனைக் குறிப்பிடாமல் போவதில்லை. அடுத்து, ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதிய சிலப்பதிகார உரையும், பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் எழுதிய சங்க இலக்கிய உரைகளும் குறிப்பிடத் தக்கவை. வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார், கம்பராமாயணத்துக்கு விரிவான உரை எழுதியுள்ளார். இதிலுள்ள விளக்கங்களும் ஒப்பீட்டுக் குறிப்புகளும் எடுத்துக்காட்டுப் புராணக் கதைகளும் குறிப்பிடத்தக்கவை. சேக்கிழாரின் பெரியபுராணத்துக்கு சி.கே.சுப்பிரமணிய முதலியார் விளக்கமான உரையை எழுதியுள்ளார்.
தமிழின் மொழி வரலாறு, பண்பாடு மற்றும் சமூக வரலாறு முதலியவற்றை எழுத இலக்கண இலக்கிய நூல்கள் உதவுகின்றன. அதுபோலவே உரைகளும் உதவுகின்றன. காட்டாக, தொல்காப்பியம் – சொல்லதிகாரத்துக்குச் சேனாவரையர் ழுதிய உரை, தமிழ்மொழியில் சொற்பாகுபாடுகள், சொல்லமைப்புகள் முதலியவற்றை அறியப் பெரிதும் உதவுகின்றது. அதுபோல் தமிழின் கவிதையியலை (poetics) அறிவதற்கு யாப்பருங்கலத்துக்கு அமைந்த விருத்தியுரை, கவனத்திற்குரிய பல செய்திகளையும் பண்புகளையும் தருகிறது.
உரைகள் யாப்பு வடிவில் அமைந்தவை அல்ல. அவை உரைநடையிலேயே அமைந்துள்ளன. தமிழின் உரைநடை (prose) வளர்ச்சியில் இந்த உரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. தொடரமைப்பு, சொல் தேர்வு, விளக்கமுறைக்கான பிரத்தியேகமான நடை, வினா-விடை பாணியிலான நடை, தெளிவு, ஆற்றொழுக்கான போக்கு முதலியவற்றைக் கொண்டுள்ள இந்த உரைகள், தமிழ் உரைநடையின் சிறந்த பண்புகளாக உள்ளன. உரையாசிரியர்களே அன்று சிறந்த உரைநடையாசிரியர்களாக இருந்திருக்கிறார்கள்..
உரைகள் என்பவை சொற்பொருள் விளக்கம் தருகின்றன ; கருத்துரைகள் தருகின்றன ; மேற்கோள்கள் தருகின்றன ; பிறர் கருத்துகளைக் கூறி ஏற்கவோ, மறுக்கவோ செய்கின்றன ; தோன்றக்கூடிய ஐயப்பாடுகளுக்கும் வினாக்களுக்கும் விடை தருவதுபோல் விளக்கங்கள் தருகின்றன. புதிய வழக்குகளைப் புதிய செய்திகளைச் சொல்லுகின்றன. மூலநூலுக்கு உற்ற தோழியாக இருந்து வருவது உரை. திறனாய்வும் இந்தப் பணியைத்தான் செய்கிறது. எனவே, தமிழ்த் திறனாய்வு என்பதை அறிந்து கொள்ளவிரும்புவோர், தமிழில் தோன்றியுள்ள உரைகளையும் உரை மரபையும் புரிந்து கொள்வதும் அறிந்து கொள்வதும் அவசியமாகும்.
பாடம் - 2
காலத்திலோ அதே காலத்திலோ (அது அருகிய வழக்கு)
எழுதப்படுகின்ற – பெரும்பாலும், உரைநடையிலான – விளக்கத்தை,
உரை என்கிறோம். தலைமுறை இடைவெளியையும், எழுதியோன்-
படிப்போன் என்போருக்கு இடையேயுள்ள இடைவெளியையும்
குறைக்கின்ற நோக்கத்தில் அமைகின்ற உரைகள், தமிழ் மரபில்
மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. இன்று, திறனாய்வுகள்
செய்கிற வேலையை, அன்று இந்த உரைகள் ஓரளவு செய்தன
என்று சொல்லலாம். இந்த உரைகள் தொல்காப்பியம், நன்னூல்
முதலிய இலக்கண நூல்களுக்கு அமைந்தவையென்றும்,
பத்துப்பாட்டு, சிலம்பு முதலிய இலக்கிய நூல்களுக்கு
அமைந்தவையென்றும் இரண்டு நிலைகள் கொண்டவை என
அறிகிறோம். உரைகள், தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான
இடம் வகிக்கின்றன. மேலும், சமூக, பண்பாட்டு வரலாற்றிலும்
அவை சிறப்பான இடம் வகிப்பதற்குரியவை. பெரும்கவிஞர்களுக்கு
அன்று இருந்த அதே தகுதி, திறன் ஆகியவற்றுடன் விரிவான
அறிவுப் பரப்பும் கொண்டவர்களாக உரையாசிரியர்களில் பலர்
திகழ்ந்தனர்.
வகைப்படும். ஒன்று இலக்கண உரைகள், மற்றது இலக்கிய உரைகள்.
இவை தவிர, சமயத் தத்துவ நூல்களுக்கும் உரைகள் உண்டு.
உரைகள் இன்னின்னவாறு அமைய வேண்டும் என்று சில இலக்கண
வரையறைகள் உண்டு; ஆனால் அவை, இலக்கண உரைகளுக்கே
உரியவை. காண்டிகை உரை, விருத்தியுரை என்ற பாகுபாடும்
இலக்கண உரைகளுக்கே உரியது. இலக்கிய உரைகளுக்கு
இலக்கணம் என்று தனியே எதுவும் கூறப்படவில்லை.
சூத்திரத்து உட்பொருள் அன்றியும் யாப்புற
இன்றி யமையாது இயைபவை யெல்லாம்
ஒன்ற உரைப்பது உரைஎனப் படுமே – (மரபியல், 105)
என்று தொல்காப்பியர் உரைக்குக் கூறும் வரையறை,
இலக்கண உரைக்கே உரியது. ஆயினும் தொடர்ந்து அவரே,
மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்
. . . . . . . . . . . . . . . .. . . .
ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கித்
தெற்றென ஒருபொருள் ஒற்றுமை கொளீஇத்
துணிவொடு நிற்றல் என்மனார் புலவர் (106)
என்று கூறுவது, இலக்கிய உரைக்கும் பொருந்துகிற
வரையறைதான். ஆயின், இலக்கிய உரையின் முக்கியமான பண்பு,
பொருளை விளக்குவதோடன்றிக் குறிப்பிட்ட அவ்விலக்கியப்
பகுதியின் நயத்தையும் நோக்கத்தையும் விளக்குவதும் ஆகும்.
இலக்கியம் கூறுகிற செய்தியின் உட்பொருளையும், அது
பிறவற்றோடு உறவு கொண்டிருக்கும் திறனையும், குறிப்பிட்ட
இலக்கிய ஆசிரியனின் தனித்திறனையும் இலக்கிய உரை காட்ட
வேண்டும். இலக்கியத்தின் வழியாக வெளிப்படுகின்ற அல்லது
அதிலிருந்து சுட்டி உரைக்கக்கூடிய வரலாற்றுச் செய்தி, பண்பாடு,
தத்துவம் ஆகியவற்றையும் இலக்கிய உரை சொல்லுகிறது.
முந்தியது இறையனார் அகப்பொருள் உரையே என்பதில் கருத்து
வேறுபாடில்லை. அது, கி.பி.9ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக்
கூறப்படுகிறது. கி.பி. ஒன்பதிலிருந்து பதினான்கு முடிய நிறைய
உரைகள் தோன்றின. இந்த இடைக்காலத்தை உரைநடையின் காலம்
எனலாம். ஆனால் இலக்கண உரைகளுக்குப் பின்னர், இரண்டு
அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் இலக்கிய உரைகள்
தோன்றின என்று தோன்றுகின்றது. மொழியின் மாற்றங்கள் மற்றும்
வளர்ச்சி நிலைகளின் பின்னணியில் இலக்கணங்களுக்கு உரைகள்
மிக அவசியமாக இருத்தல் போன்று, இலக்கியங்களுக்கு அத்தகைய
நிலை இல்லை போலும். இலக்கியங்கள், புலவர்கள் பலர் நிறைந்த
அவைகளிலே ஓதப்பட்டன. இந்நிலையில் முதன்முதலில்
அருஞ்சொற்களுக்குப் பொருள் தருதலும், இலக்கணக் குறிப்புகளும்
அணி நயங்களும் குறிப்பிடுதலும், சில வரலாற்றுக் குறிப்புகள்
தருதலும் என்று இவையே வழக்கத்திலிருந்தன.
சிலப்பதிகாரத்திற்கு முதலில் அரும்பதவுரை தோன்றியது. இன்றும்
இது வழக்கிலுள்ளது. அதுபோல், ஐங்குறுநூறு, புறநானூறு,
பதிற்றுப்பத்து, அகநானூறு முதலிய சில சங்கப் பாடல்களுக்கும்
குறிப்புரைகளும், சுருக்கமான பொழிப்புரைகளும் தோன்றின.
இந்தக் குறிப்புரைகளின் ஆசிரியர்கள் யாவரென்று தெரியவில்லை.
சிலப்பதிகாரத்துக்கு விரிவான உரையெழுதிய அடியார்க்கு
நல்லார், சிலம்பின் பழையவுரையைப் பெரிதும் பின்பற்றியே
உரையெழுதினார். அடியார்க்கு நல்லார் காலம் கி.பி.12ஆம்
நூற்றாண்டின் தொடக்கம் என்பர். திருக்குறளுக்கு உரை கண்ட
பரிமேலழகர் கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக்
கூறப்படுகிறார். ஆனால் குறளுக்கு உரை கண்டவர்களாகக்
கூறப்படும் பதின்மரில் இவரே இறுதியானவர். அப்படியாயின்,
இவருக்கு ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பே அதாவது, அடியார்க்கு
நல்லாருக்கும் முன்பே, திருக்குறளுக்கு உரைகள் வந்திருக்கின்றன
எனலாம். நச்சினார்க்கினியர் கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்தவர்.
எழுத்து, சொல் ஆகியவற்றின் இலக்கணங்களுக்கு அமைந்த
உரைகள். இரண்டு; பொருள் (யாப்பு, பொருள், அணி)
இலக்கணத்துக்கு அமைந்த உரைகள். முதலாவது வகை
தொல்காப்பியத்தின் எழுத்து, சொல் அதிகாரங்களுக்கோ,
அல்லது எழுத்து, சொல் மட்டுமே கொண்ட நன்னூலுக்கோ அது
போன்ற பிறவற்றுக்கோ அமைந்த உரைகள்; மொழியின்
அடிப்படைகள், அமைப்பு விதிகள் முதலியவற்றை மட்டும்
பேசுவன இவை. இரண்டாவதாக அறியப்படும் பொருள்
இலக்கணங்கள், இலக்கியம் பற்றிப் பேசுபவை; செய்யுள்
இலக்கியத்தின் பல்வேறு உறுப்புகள், பாடுபொருள்கள் மற்றும் பிற
பண்புகள் பற்றிப் பேசுபவை. ஒருவகையில், இலக்கியக் கொள்கை
பற்றியன இவை எனலாம். தொல்காப்பியப் பொருளதிகாரம்,
இறையனார் களவியல், யாப்பருங்கலம், நம்பியகப் பொருள்
முதலியன இத்தகையவை.
பொருள் இலக்கண உரைகள், இலக்கியத் திறனாய்வுக்கு
அடிப்படையாக உள்ள இலக்கிய உருவாக்கம் – கொள்கை -
பற்றியன; ஆதலால், இவ்வுரைகளில், இலக்கியம் பற்றிய
பார்வைகளும், இலக்கிய நயங்களும், அவற்றிற்கு அடிப்படையாக
உள்ள பண்புகளும் சொல்லப்படுகின்றன. இறையனார்
அகப்பொருள் உரையில் இந்தப் பண்பினைக் காணமுடியும்.
உதாரணத்துக்கு ஒன்று: ஆம்பல் மலர் போல் வாய் மணக்கும்-
இப்படிச் சொல்லுவதில் உவமம், ஏற்கனவே நிருபணமான ஒரு
பொருள் (ஆம்பல்); உவமிக்கப்படுவது, காதலியின் வாய். இதுவே
மரபு. ஆனால் இதனை மாற்றி, ‘வாய்போல் நாறும் ஆம்பல்’
என்று சொல்லலாமா? இதற்கு ஒரு மேற்கோள் பாடலை
எடுத்துக்காட்டி, உரைகாரர் சொல்லுகிறார். “இவள் வாய் போல
நாறும் ஆம்பல் உளவே என, வாயை உவமையாக்கி, ஆம்பலை
உவமிக்கப்படும் பொருளாகச் சொல்லுதல் குற்றம் பிற எனின்,
அறியாது சொல்லினாய்; உலகத்து இவை உவமை, இவை
உவமிக்கப்படும் பொருள் என்று நிலைபெற்றன உளவே யில்லை.
உரைக்கும் கவியது குறிப்பினான் உவமையும் உவமிக்கப்படும்
பொருளாம்; உவமிக்கப்படும் பொருளே உவமையாகவும்
அமையும்..” இறையனார் அகப்பொருள் உரையின் இந்த
வாக்கும், குறிப்பிட்ட பாடல்அடி ஒன்றனுடைய அழகையும்
நயத்தையும் காட்டுவதோடு, அந்த அடியின் பொருத்தத்தினையும்
சொல்லுகிறது. அதனோடு அமையாது, உவமம் எவ்வாறு அமையும்
என்ற கவிதைக் கோட்பாட்டையும் விளக்குகிறது. இவ்வாறு,
பொருள் இலக்கணத்திற்கு அமைந்த உரை இலக்கிய
உரைபோன்று அமைகிறது என்பதை நாம் அறிய வேண்டும்.
மேலும் அவ்விலக்கணத்தின் தன்மையினை ஒட்டி, இலக்கியக்
கோட்பாட்டையும் நாம் அதன்வழி அறிகிறோம். இதுபோலவே,
தொல்காப்பியப் பொருளதிகாரத்துக்கு உரையெழுதிய
பேராசிரியரிடமும், இலக்கிய நயம் பற்றிய பேச்சையும் இலக்கியக்
கோட்பாடு பற்றிய பார்வையையும் நாம் காணலாம்.
உதாரணத்துக்குச் சொன்னால், தொல்காப்பியர் செய்யுளியலில்
(நூற்பா 100) ‘நோக்கு’ எனும் ஓர் உறுப்புப் பற்றிக் கூறுவார்.
அதற்குப் பேராசிரியர் தருகிற உரையைப் படித்து அறிந்து
கொள்க. இதிலே, சொல்லுக்குச் சொல்லும் தொடருக்குத்
தொடருமாக இணைந்து பொருள் வளத்தை எவ்வாறு பாடல்
குறித்து நிற்கிறது என்பதை அறிவதற்கு நெருங்கி நோக்கிப்
பார்க்கிற முறையைப் பேராசிரியர் பயன்படுத்தியுள்ளார். இதனை
அமெரிக்காவின் புதுத்திறனாய்வு (Neo Criticism) எனும்
முறையியலோடு ஒப்பிட முடியும்.
வரையறை இல்லை. ஆயினும், இவ்வுரைகளில் நடைமுறையில்
காணப்படுபவற்றின் அடிப்படையில், அவற்றின் பொதுவான
அமைப்புகளைக் கூறமுடியும்.
(1) பாடலின் திரண்ட கருத்தைப் பொழிப்புரையாகச்
சொல்லுதல்.
(2) பாடலின் அமைப்பை, அதன் சொற்களாலேயே
சுருக்கமாக்கிச் சொல்லிப் பாடல் வாக்கிய அமைப்புப்
பிறழாமல் இருக்குமாறு செய்தல்.
(3) பொழிப்புரை, பொதுவான திரண்ட கருத்தாக
இருத்தலின், சிறப்புக் கருதிச் சில சொற்கள் அல்லது
சொற்றொடர்களுக்குச் சுருக்கமான குறிப்புரை தருதல்.
(4) மேற்கோள் பாடல்கள் காட்டுதல் அல்லது பாடல்
அடிகளோடு ஒப்புமையுடைய பிற பாடல் அடிகளைக்
காட்டுதல்.
(5) உவமம், உருவகம் போன்ற அணிச் சிறப்புகளைக்
காட்டுதல்.
(6) அருஞ்சொற்களுக்கு விளக்கம்/பொருள் கூறுதல்.
(7) சில போது, இலக்கணப் பொருத்தங்கள்/குறிப்புகள்
காட்டுதல்.
(8) பாட வேறுபாடு காட்டுதல்
மேலே நாம் கூறியவை, இதே வரிசைமுறையில் எல்லா
உரைகளிலும் இருக்கின்றன என்ற பொருளில் அல்ல. ஆனால்,
இந்தக் கூறுகள் அல்லது பகுதிகள் இந்த உரைகளில்
அமைந்திருக்கின்றன அல்லது இடம் பெற்றிருக்கின்றன
என்பதையே குறிக்கும்.
அழைக்கப்படுகின்ற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை
கி.பி.ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டுவாக்கில்
தொகுக்கப்பட்டனவாகக் கூறப்படுகின்றன. தொகுக்கப்பட்ட
காலத்துக்குப் பின்னர், இவற்றுக்குக் குறிப்புரைகளும்,
பொழிப்புரைகளும் எழுதப்பட்டன. இவற்றை யார் எழுதினார்கள்
என்று தெரியாவிட்டாலும், இவை முக்கியமான இரண்டு
பணிகளைச் செய்தன. ஒன்று, இந்தப் பாடல்களைச் சிதறவிடாமல்
பாதுகாத்தன. இரண்டு, பின்னால், சற்று விரிவாக உரையெழுத
முனைந்தவர்களுக்கு இவை அடியெடுத்துக் கொடுத்தன.
பத்துப்பாட்டுள் ஒன்றாகிய திருமுருகாற்றுப்படைக்கு
மட்டும் (நச்சினார்க்கினியருக்கு முன்பு எழுதப்பட்ட) நான்கு
பழையவுரைகள் கிடைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவற்றின்
ஆசிரியர்களுடைய பெயர்களில் பரிமேலழகர் முதற்கொண்டு பல
பெயர்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எதுவும்
நிறுவப்படவில்லை. இது போலவே, எட்டுத்தொகை நூல்களுள்
நற்றிணை தவிர ஏனையவற்றுக்கும் பழையவுரைகள்
வெளிவந்திருக்கின்றன. பத்துப்பாட்டு நூல்கள் முழுமைக்கும்
சேர்த்து நச்சினார்க்கினியர் (14ஆம் நூற்றாண்டு)
உரையெழுதியிருக்கிறார். இவரே, எட்டுத்தொகையுள் ஒன்றாகிய
கலித்தொகைக்கும் முழுதாக உரையெழுதியிருக்கிறார்.
சங்கப் பாடல்களுக்கு அமைந்துள்ள – ஆசிரியர் பெயர்
தெரியாத பழைய உரைகளில் – புறநானூற்றுக்குள்ள பழைய
உரை, மிகவும் சிறப்பாகவும் ஓரளவு விரிவாகவும் உள்ளது.
இவ்வுரையைப் பதிப்பித்த உ.வே.சாமிநாத ஐயர், “இளம்பூரணர்,
பேராசிரியர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார்
முதலியவர்களுடன் ஒப்பக்கருதும் அறிவுடையவராக” இந்த
உரையாசிரியரைப் புகழ்ந்துரைக்கிறார். திணை, துறை பற்றிய
உணர்வும், புறநானூற்றுக் காலத்திய வரலாறு பற்றிய உணர்வும்,
இலக்கிய மரபும் நன்கறிந்த திறனும் புறநானூற்று உரையில்
புலப்படுகிறது. இவர் வேதத்திலும் சமயத்திலும் பெரும் ஈடுபாடு
உடையவர். அதனுடைய பிரதிபலிப்பு உரையில் உண்டு.
பெயர் தெரியாத பழைய உரைகள் அல்லது குறிப்புரைகளன்றிப்
புகழும் பெருமையும் வாய்ந்த உரையாசிரியர்களால் எழுதப்
பெற்ற விரிவான உரைகள் இடம் பெற்றவை கலித்தொகை,
பரிபாடல் மற்றும் பத்துப்பாட்டு ஆகியவையேயாகும்.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனும் இரண்டு தொகைகளிலுமே
நச்சினார்க்கினியரின் பங்களிப்பு இருக்கின்றது.
கலித்தொகைக்கு அமைந்த நச்சினார்க்கினியர் உரை,
தொல்காப்பியர் வழிநின்று அகப்பொருள் இலக்கண உணர்வோடு
கூடியதாக அமைகிறது. மேலும், கலித்தொகையின் அமைப்பு,
கூற்று நிலைகளுடன் கூடிய நாடக அமைப்புடன் கூடியது.
நச்சினார்க்கினியரின் உரை, இந்த அமைப்பு முறையை
நன்குணர்ந்து அதற்கேற்ப அமைகிறது. அடுத்து எட்டுத்
தொகையில் பரிபாடலுக்குச் சிறந்த உரையெழுதியவர்,
திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் ஆவார். இதன்
பதிப்பாசிரியராகிய உ.வே.சா. கூறுவர் : “நுணுகி ஆராயின்,
திருக்குறள் உரையிலும் இவ்வுரையிலும் ஒத்த கருத்துகளும்
பரிமேலழகருடைய கொள்கைகளும் பல காணலாம்.”
(பரிமேலழகரின் கொள்கை – வைதிகம், வைணவம்).
பத்துப்பாட்டு முழுமைக்கும் உரையெழுதியவர்
நச்சினார்க்கினியர். இலக்கண நூல்களுள் தொல்காப்பியம், சங்க
இலக்கியங்களுள் கலித்தொகை, பத்துப்பாட்டு, காப்பியங்களில்
சீவக சிந்தாமணி ஆகிய நூல்களுக்கு உரையெழுதியவர் இவர்.
‘உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்’ என்று புகழப்படும்
இவர் பரந்த இலக்கிய – இலக்கண அறிவும், வைதிக சமய
ஈடுபாடும் உடையவர். பழம்பாடல்களில் உள்ள வாக்கிய
அமைப்புகளில் எப்போதும் ‘இடர்’ காண்கின்றவர் இவர். எனவே,
தமிழ்மொழித் தொடரமைப்பின் விதிகளுக்குட்பட்ட சங்கப் பாடல்
அடிகளை உடைத்து, முன் பின்னாக மாற்றி, ஒரு நேர்கோட்டில்
சமன்படுத்துவது போன்ற உணர்வுடன் தம்முடைய
உரையின்பொருட்டு அந்த அடிகளை இவர், மாற்றியமைக்கிறார்.
கொண்டு கூட்டல் பொருள்கோள் என்ற பெயரளவில், இவர்
இதனைச் செய்கிறார். எளிமையான தொடரமைப்புக்கூட இவ்வாறு
மாற்றப்படுகிறது. காட்டாக:
அருவிட ரமைந்த களிறுதரு புணர்ச்சி
வானுரி யுறையுள் வயங்கியோ ரவாவும்
பூமலி சோலை யப்பகல் கழிப்பி
– (குறிஞ்சிப்பாட்டு, 212-214)
என்ற அடிகள், எவ்வித மாற்றமும் இல்லாமல், எளிதாகப்
பொருள் தரக்கூடியவை. ஆனால் நச்சினார்க்கினியர், ‘வான்
உரிய உறையுள் வயங்கியோர் அவாவும் அருவிடர் அமைந்த
பூமலி சோலை களிறுதருபுணர்ச்சி அப்பகல் கழிப்பிய – என்று
தொடரமைப்பினை மாற்றிக் கொள்கிறார். இதன் மூலம், இலக்கிய
நயம் எதனையும் அவர் கொண்டு வரவில்லை. மேலும்,
களிறுதருபுணர்ச்சி’ என்ற நிகழ்ச்சியின் சிறப்பினையும் இது
போக்கிவிடுகிறது. தவிரவும், கவிதைத் தொடர்மொழியின் (Poetic
Syntax) அழகும் போய்விடுகிறது. இவ்வாறு பல இடங்கள்
உண்டெனினும், நச்சினார்க்கினியர், அகன்று பரந்த தம்
உரையினாலும், சொல் விளக்கங்களினாலும், பல நூல்களுக்கு
உரையெழுதிய ஆற்றலினாலும் பின்னால் வந்த பலரால் பெருமை
சேர்க்கப்படுகிறார்.
காதல் முதலியன பற்றிய நூல்கள் சிலவும், பதினெண்
கீழ்க்கணக்கு என்ற பெயரில் தொகுக்கப்பட்டன. திருக்குறள்,
இதில் தலையாயது; அடுத்து, நாலடியாரும் சிறப்புடையது.
திருக்குறளுக்கு கி.பி.15 ஆம் நூற்றாண்டுக்கு முன்
உரையெழுதியவர்கள் பத்துப் பேர். ஏனைய பதினேழு நூல்களில்
பெரும்பாலனவற்றிற்குப் பழைய உரைகள் கிடைத்துள்ளன. இவை
பெரும்பாலும் பொழிப்புரைகளாக உள்ளன. இவற்றுள்
நாலடியார்க்கு மட்டும் மூன்று பழைய உரைகள் உள்ளன.
இவற்றுள் பதுமனார் என்பவர் எழுதிய உரை நாலடியார்க்கு
முழுமையாக உள்ளது. உரையன்றியும், நாலடியாரை அறம்,
பொருள், இன்பம் என்று மூன்றாகப் பகுத்து, மேலும், பத்துப்
பத்துப் பாடல்களாகப் பொருளின் அடிப்படையில்
அதிகாரங்களாகப் பகுத்தவரும், இவரே. திருக்குறளைப்
பின்பற்றி இதனை இவர் செய்தார்.
திருக்குறள் பழங்காலத்திலேயே சான்றோரையும்
புலவரையும் உரையாசிரியர்களையும் கவர்ந்துள்ளது என்பது
அறிந்ததே. இதற்குப் பத்துப் பேர் உரையெழுதியதாகக் கூறுகிறது
ஒரு தனிப்பாடல்;
தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமே லழகர் – திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற்(கு)
எல்லையுரை செய்தார் இவர்.
ஆனால், மணக்குடவர், பரிதி, பரிப்பெருமாள்,
பரிமேலழகர், காலிங்கர் என்ற ஐந்துபேரின் உரைகளே
கிடைக்கின்றன. இவர்கள் தவிர, வெவ்வேறு நூல்களுக்கு
உரையெழுதியவர்களும் திருக்குறள்கள் ஒன்றிரண்டை
எடுத்துக்காட்டி விளக்கமும் தந்துள்ளனர்.
திருக்குறள் உரைகளிடையே பல வேற்றுமைகள்
காணப்படுவது பற்றிப் பல அறிஞர்கள் எழுதியுள்ளனர்.
அதிகாரங்களுக்குப் பெயரிடுவது, திருக்குறள் அடிகளில் பாட
வேறுபாடுகள் கொள்ளுவது ஆகியவை இந்த வேறுபாடுகளில்
குறிப்பிடத்தக்கவை. காட்டாக, இரண்டாவது பிரிவாகிய
பொருட்பாலைப் பரிமேலழகர், அரசியல், அங்கவியல், ஒழிபியல்
என்று மூன்றாகப் பிரிக்கிறார். மணக்குடவர், பரிப்பெருமாள்,
பரிதி ஆகிய மூவரும், அரசியல், அமைச்சியல், பொருளியல்,
நட்பியல், துன்பவியல், குடியியல் என்று ஆறாகப் பிரிக்கின்றனர்.
காலிங்கர், அரசியல், அமைச்சியல், அரணியல், கூழ்இயல்,
படையியல், நட்பியல், குடியியல் என்று ஏழாகப் பிரிக்கின்றார்.
இது, மற்றையவற்றைவிடப் பொருத்தமாக இருப்பதாக அறிஞர்கள்
கருதுவர். ஏனெனில், திருக்குறளின் பொருட்பால், முதல் குறளிலேயே,
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு
என்று கூறுகிறது. அரசியல் என்று முதலிற்கூறி, அதன்பின்
ஆறையும் சேர்த்து, ஏழு இயல்களாகப் பிரித்திருப்பது மிகவும் பொருந்துகிறதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
ஒன்று, தமிழில் வேறு எவற்றையும்விட இதற்கே உரைகளும்
விளக்கங்களும் அதிகம் உண்டு என்பது. மேலும், இதுவே
அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டு வந்துள்ளது. உரைகளும்,
விளக்கங்களும் பலவாகத் திருக்குறளுக்குத் தோன்றியமைக்குக்
காரணம், இது ‘தமிழ் இனப் பெருமைக்கு’ அடையாளமாக
விளங்குகிறது என்பது மட்டுமல்லாமல், இதனுடைய செறிவும்,
இது உணர்த்துகின்ற சிந்தனைவளமும், காலந்தோறும் இதற்குள்ள
ஏற்புடைமை மற்றும் தேவையும் ஆகும்.
திருக்குறளுக்கு உரையெழுதியவர்களுள் பலராலும்
பாராட்டப்படுகிறவர் பரிமேலழகர். இவர் குறளின் ஏனைய
உரையாசிரியர்களைவிடக் காலத்தால் பிந்தியவர். 13-ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்தவர். தமக்கு முந்திய
உரையாசிரியர்களிடமிருந்து கொள்ளுவன கொண்டு, தள்ளுவன
தள்ளி உரை செய்தவர் பரிமேலழகர். மேலும், தமக்கு முந்திய
பல இலக்கியங்களிலிருந்து கற்ற கல்வியையும் உரையில் அவர்
பயன்படுத்திக் கொள்கிறார். இதன்மூலம் , பொருள்விளக்கமும்
நயமும் வெளிப்படுகின்றன. உதாரணமாக:
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ் – (திருக்குறள் – 64)
எனும் குறளுக்கு (மக்கட்பேறு, 64) விளக்கம் கூறுகிறபோது,
பாண்டியன் அறிவுடைநம்பியின் (புறம், 188) பாடல் அடிகளைக்
கொண்டுவந்து மிக இயல்பாக விளக்குகிறார்.
“சிறுகையான் அளாவலாவது, இட்டும் தொட்டும், கவ்வியும்
துழந்தும், நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல்” என்று
நயம்படச் சொல்கிறார். அதுபோலப் “பெயக்கண்டும்
நஞ்சுண்டமைவர்…’ என்ற குறளுக்கு (580) உரையெழுதுகிறபோது,
“நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல், முந்தை யிருந்து
நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்…’ எனும்
நற்றிணை (355) அடிகளை எடுத்தாளுகிறார். இன்றைய
திறனாய்வாளன், ஒப்பியல் நோக்குக் கொண்டிருப்பது போன்று
பரிமேலழகரிடமும் ஒப்பியல் நோக்குக் காணப்படுகிறது.
பரிமேலழகர் உரை இவ்வாறு பல சிறப்புகள்
கொண்டிருந்தாலும், வைதிக சமயக் கருத்துகளைக் குறட்பாக்களில்
ஏற்றிச் சொல்லுதல் பலவிடங்களில் காணப்படுகிறது. உதாரணமாக
அறம் என்று வள்ளுவர் பேசுவது தமிழ் அறம். வடமொழி மனு
சொல்லுவதோ வருணாசிரம தருமம். ஆனால், பரிமேலழகர்
வலிந்து சென்று, “இனி, மனு முதலிய அற நூல்களால்
பொதுவாகக் கூறப்பட்ட இல்லறங்கள் எல்லாம் இவர் தொகுத்துக்
கூறிய இவற்றுள் அடங்கும்” (குறள் 240) என்று கூறுகிறார். இவர்
என்று அவர் சொல்லுவது வள்ளுவரை.
பரிமேலழகர், திருக்குறளுக்கு மட்டும் அன்றி, சங்க
இலக்கியத் தொகுப்புக்குள் ஒன்றாகக் கருதப்படும்
பரிபாடலுக்கும் உரையெழுதியுள்ளார்.
ஏற்படும் இடைவெளிகளையும் கால இடைவெளிகளையும்
தவிர்க்கிற அல்லது குறைக்கிற பணியைச் செய்வன உரைகள்.
அவை, இன்றைய திறனாய்வு செய்கிற வேலையையே அன்றே -
ஓரளவாயினும் செய்தன. உரைகள், பொதுவாக இலக்கண
உரைகள், இலக்கிய உரைகள் மற்றும் சமய, தத்துவ நூல்
உரைகள் என்ற முறையில் அறியப்படுகின்றன. இலக்கண
உரைகளில், எழுத்து, சொல் ஆகிய மொழியமைப்புப் பற்றிய
உரைகளன்றி, பொருள் இலக்கணத்திற்கு விளக்கம் தரும்
உரைகளும் உண்டு. அகம், புறம் உட்பட்ட பொருள், யாப்பு,
அணி ஆகிய இலக்கணங்களுக்கு உரை கூறும்போது, இலக்கியக்
கோட்பாடும், திறனாய்வுக்குரிய அடித்தளமும்
புலப்படுத்தப்படுகின்றன.
சங்க இலக்கியம் முதற்கொண்ட இலக்கியங்களுக்கு எழுந்த
உரைகளை இலக்கிய உரைகள் என்கிறோம். இவை, செய்யுள்
இலக்கியங்களுக்கே உரியனவாக உள்ளன. இலக்கிய உரைகள்,
குறிப்புரைகளாகவோ, பொழிப்புரைகளாகவோ, அல்லது
இரண்டுமே கொண்டு, மற்றும் அருஞ்சொல் விளக்கங்களையும்
பொருள் நயங்களையும் அணிநயங்களையும் கொண்டனவாகவோ
விளங்குகின்றன.
தமிழில் அதிகமான நூல்களுக்கு உரையெழுதியவர் கி.பி.
14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நச்சினார்க்கினியர். இவர்
தொல்காப்பியம் எனும் இலக்கண நூலுக்கும்,
கலித்தொகைக்கும், பத்துப்பாட்டுக்கும் மற்றும் சீவக
சிந்தாமணிக்கும் உரையெழுதியுள்ளார். விளக்கமான விரிவான
உரைகள் இவை. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில்
பெரும்பாலானவற்றிற்குப் பழைய உரைகள், பெரும்பாலும்,
சுருக்கமான பொழிப்புரைகளாக அமைந்துள்ளன.
நாலடியார்க்குப் பதுமனார் உள்ளிட்ட மூன்றுபேர் உரை
யெழுதியுள்ளனர். திருக்குறளுக்குப் பதின்மர்
உரையெழுதியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், காலிங்கர்,
பரிமேலழகர், மணக்குடவர், பரிதி, பரிப்பெருமாள் ஆகியோர்
உரைகளே கிடைக்கின்றன. இவர்களுள், கி.பி. 13-ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்த பரிமேலழகர், திருக்குறளுக்கு மட்டும்
அன்றி, பரிபாடலுக்கும் உரையெழுதியிருக்கின்றார். பழைய
இலக்கியங்களைக் கற்க விரும்புவோர்க்கு இன்றும், இந்த
உரைகள் மிகவும் உதவியாக இருந்து வருகின்றன.
பாடம் - 3
ஏனெனில் உரைகளுக்குத் தேவைகள் இருந்தன; கற்றறிந்த
அறிஞர்கள் உரையெழுத ஆர்வம் கொண்டிருந்தனர்; மேலும்
இலக்கியக் கல்வி தொடர்ந்து பேணப்பட்டு வந்தது. சங்க
இலக்கியத்துக்கும் திருக்குறளுக்கும் பல உரைகள்
இடைக்காலத்திலே தோன்றின எனக் கண்டோம். ஆனால்,
காப்பியங்களுக்கு அந்த அளவிற்கு உரைகள் தோன்றவில்லை.
காப்பியங்களுள் சிலப்பதிகாரமே அந்தக் காலப் பகுதியில் புகழும்
பெருமையும் பெற்றிருந்தது. கி.பி.12-ஆம் நூற்றாண்டில்தான்
கம்பராமாயணம் உருவாயிற்று. காப்பியங்களுக்குப் பெருமையும்
விசாலமான தளமும் இருந்தாலும், சங்க இலக்கியங்களுக்கும்
திருக்குறளுக்குமே பலகாலம் வரை, செல்வாக்கு இருந்தது போலும்!
எனவே உரையாசிரியர்களையும் அவை வெகுவாகக் கவர்ந்தன.
இப்பாடத்தில் காப்பிய உரைகளையும், சமய இலக்கியங்களுக்கான
உரைகளையும் தற்கால உரையாசிரியர்களின் உரைகள் குறித்தும்
காணலாம்.
காப்பியங்களுள், சிலம்பு, சீவகசிந்தாமணி எனும் இந்த இரண்டனுக்கும் பெருமையும் சிறப்பும் உடைய உரைகள் உண்டு. இந்த இரண்டுமே சமண சமயம் சேர்ந்தவை; இவற்றிற்கு மட்டுமே உரைகள் அன்று தோன்றின என்று தெரிகின்றது. பொதுவாகக் காப்பியங்கள் உரையாசிரியர்களை ஏன் கவரவில்லை? இதற்குக் காரணங்களாக முக்கியமாக இரண்டு கருதுகோள்களை இங்கே கூறலாம்:
சிலம்பு முதலிய ஓரிரண்டு தவிர பெரும்பாலான காப்பியங்களின் கதைகளும் கருத்துகளும், தமிழ் மரபிலிருந்து வரவில்லை; வடமொழி மரபிலிருந்து அல்லது வெளியேயிருந்து வந்தவை.
காப்பியங்கள் விசாலமான தளங்கள் கொண்டவை; பல கிளைக் கதைகள், பல புராண மரபுக் கதைகள் உடையவை; எனவே, உரை கூறுவதில் சிரமம் இருக்கக் கூடும்.இந்த இரண்டையும் முக்கியமான கருதுகோள்களாகக் கூறலாம்.
இந்தத் தேவைகளும் பண்புகளும் மட்டும் அன்றி i) காப்பியம் என்ற இலக்கிய வகையினத்தை (Genre) நன்குணர்ந்திருக்க வேண்டும்; அதாவது, சங்கப் பாடல்கள் போன்ற தனிநிலைப் பாடல்களிருந்து இது மாறுபட்டது என்ற உணர்வு இருக்க வேண்டும். ii) காப்பிய உத்திகள், சொற்சுவைகள், முரண்கள் உள்ளிட்ட நயங்களை அறிந்திருக்க வேண்டும். மேலே கூறிய இப்பண்புகள், காப்பிய உரையாசிரியர்களிடமிருந்து நாம் கண்டறிந்தவை யாகும். குறிப்பாக, அடியார்க்கு நல்லாருடைய உரையில் சிலம்பின் காப்பியப் பண்பு நன்கு புலப்படும்படியாக அதன் விளக்கம் அமைந்துள்ளதைக் காணலாம். அண்மைக்காலத்தில் கம்பராமாயணத்துக்கு உரையெழுதிய வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார், பெரியபுராணத்துக்கு உரையெழுதிய சி.கே. கப்பிரமணிய முதலியார் முதலியோர் உரைகளிலும் இத்தகையபண்புகள் இருக்கின்றன என்பதைக் காணலாம்.
அரும்பதவுரையின் வழியிலேயே அடியார்க்கு நல்லாரின் உரை, பெரிதும் அமைந்திருக்கிறது. சிலம்பின் அரும்பதவுரை, வெறுமனே அரும்பதங்களுக்கு, அதாவது கடினமான சொற்களுக்கு மட்டும் உரை தரவில்லை. மாறாகப் பல இடங்களில் நீண்ட தொடர்களையும் திரண்ட கருத்துகளையும், காட்சிகளையும், சிலம்புக்குத் தேவைப்படும் பிற கலை வடிவங்களையும் விளக்கமாகவே சொல்லுகிறது. அரங்கேற்று காதையில், மேடை அரங்கம் பற்றிய செய்திகளும், பாடலாசிரியன், யாழ் ஆசிரியன், குழல் ஆசிரியன் முதலிய கலைஞர்கள் – கலை வடிவங்கள் பற்றிய செய்திகளும் சுருக்கமாகவும் குறிப்பாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அரும்பதவுரையாசிரியர், இவற்றை விளக்கியுரைக்கிறார். மேலும், இசை, நடனம், முதலிய கலைகள் பற்றித் தெளிவாகப் பேசுகிறார். அடியார்க்கு நல்லாரும், இந்த விளக்கத்தை அப்படியே பின்பற்றுகின்றார். சில இடங்களில் மாறுபடுவதுண்டு. ஆனால், 20- ஆம் நூற்றாண்டின் சிலம்பு உரையாசிரியர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ‘இருவரும் மாறுபட எழுதியிருக்கும் உரைகளை ஆராய்வுழிச் சிலவிடங்களில் அரும்பதவுரையே பொருத்தமுடையதாகக் காணப்படுகிறது’ என்று கூறுவார். அரும்பதவுரைகாரரின் சிறப்பு, இதன்மூலம் புலப்படும்.
அரும்பதவுரைகாரரின் உரைத் திறனுக்கு ஓர் உதாரணம்;
இமிழ்கடல் வரைப்பில் தமிழக மறியத்
தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி
(அரங்கேற்றுகாதை; 37-38)
என்று இளங்கோ பேச, அரும்பதவுரைகாரர்: “ஆரவாரத்தினையுடைய கடல் சூழ்ந்த நிலத்தில், வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும் வேங்கடங் குமரி, தீம்புனற் பௌவமெனத் தமிழோரால் எல்லை கூறப்படா நின்ற தமிழ்த் தேசத்தாரறிய மூன்று தமிழும் போலுமென்னும் தன்மையுடையனாகி” என்று உரையெழுதுவார். இதனை அடியார்க்கு நல்லார் தம் உரையில், எழுத்துப் பிறழாமல் அப்படியே பின்பற்றுகிறார். இந்த உரையில், தமிழோர் என்பது, தமிழ்த்தேசம் என்பது, அதற்கு எல்லை கூறுவது, மற்றும் முத்தமிழ் என்று சொல்லுவது ஆகிய இவை கவனத்திற்கு உரியவை. இவருக்கு முத்தமிழ் அறிவும் முத்தமிழ் உணர்வும் மட்டுமல்லாமல், கட்டடக் கலை பற்றிய அறிவும் இருக்கிறது. “வேயாமாடம்” (இந்திரவிழவூரெடுத்த காதை,7) என்பதற்குத் “தட்டோடிட்டுச் சார்ந்து வாரப்பட்டன; நிலா முற்றமுமாம்” என்று விளக்கவுரை தருவார். மேலும் இந்தச் சொற்கள் இன்றும் பெருவழக்காக உள்ளன என்பதும் கவனித்தற்குரியது.
அடியார்க்கு நல்லார் உரைக்குப் பல சிறப்புகள் உண்டு. அவற்றில் சில: சிலம்பு எனும் காப்பியத்தின் கட்டுக்கோப்பை நன்கறிந்து அதற்கேற்றாற் போல உரை கூறுதல்; ‘இயலிசை நாடகப் பொருட்டொடர்நிலைச் செய்யுள்’ என்று சுட்டுதல்; பாத்திரப் படைப்பு முறைகளை நன்கறிந்து அதனை விளக்குதல் ஆகியன. அரங்கேற்று காதையின் உரை, பல்லாற்றானும் சிறப்புடையது; பலரும் போற்றுவது. சுருக்கமாகச் சொன்னால்- அடியார்க்கு நல்லார், சிறந்த திறனாய்வாளர்க்குரிய பல பண்புகளைப் பெற்றவர். திறனாய்வுக்குரிய எடுபொருள் அல்லது தளம் பற்றிய கூர்த்த அறிவும், அதற்கு உரிய, அதனோடு சார்ந்த பல கருத்துகளையும், துறைகளையும் நன்கு கைவரப்பெற்று உரியவாறு பயன்படுத்துதலும், இலக்கிய நயம்/உத்திகள் முதலியவற்றைப் புலப்படுத்துதலும், இவருடைய உரைகளில் காணத்தக்கன.
இன்னோரிடம் சீவகன் ஆண்மகன் என்பதையும் நாயகன் என்பதையும் சிறப்பிக்கின்ற விதத்தில், ஆசிரியர், “ஈயின்றி இருந்த தேன்” என்று வருணிப்பார். ஆண்மகனைத் தேனீயாகவும் பெண்ணைத் தேன் அல்லது பூ என்பதாகவும் வருணிப்பது மரபு. இங்கே, மாறாகப் பெண்மக்கள் தான் சீவகனை நாடிச் செல்கின்றனர் என்று கூறப்படுகிறது. “இதற்கு முன்பு ஒரு மகளிரும் இவனை நுகராது இருந்தமை உணர்ந்து…” என்று நச்சினார்க்கினியர் உரை இதனை உணர்ந்து விளக்குகிறது:
சமய இலக்கியங்களுள், வைணவம் சார்ந்த நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களுக்கு (பழைய) உரைகள் உண்டு. குருபரம்பரையாக/ அல்லது ஆசிரிய – மாணவ வழியில் தொடர்ந்து பல உரைகள், இப்பாசுரங்களுக்குத் தோன்றின. சைவம் சமய இலக்கியங்களுள் – பத்துப் பாட்டில் ஒன்றாகத் கருதப்படுகிற- திருமுருகாற்றுப்படைக்கு நச்சினார்க்கினியர் உரை உண்டு. அதுபோன்று, மணிவாசகரின் திருக்கோவையாருக்குச் சிறந்ததோர் உரை உண்டு. பொதுவாக, இந்த இடைக்காலத்தில் சைவ சமயமே, வேறு எந்தச் சமயத்தை விடவும் மிகுந்த செல்வாக்குடன் இருந்தது என்றாலும் , சைவ இலக்கியங்கள் உரையாசிரியர்களின் கவனத்தை அதிகம் கவரவில்லை. 20-ஆம் நூற்றாண்டில்தான், இவற்றுள் சிலவற்றிற்கு விரிவான உரைகள் தோன்றியுள்ளன.
திருக்குருகைப் பிரான் பிள்ளை (பிள்ளான்)
- 6,000 படி(ஆறாயிரப்படி)
நம்பிள்ளை
- 9,000 படி (ஒன்பதாயிரப்படி) (இந்த உரை சொன்னவர் நஞ்சீயர் என்ற கருத்து உண்டு.)
பெரியவாச்சான் பிள்ளை
- 24,000 படி (இருபத்து நாலாயிரப்படி)
வடக்குத் திருவீதிப் பிள்ளை
- 36,000 படி முப்பத்தாறாயிரப்படி)
மணவாளசீயர் (சுருக்கமாக)
- 12,000 படி (பன்னீராயிரப்படி)
இந்தத் திருவாய்மொழி வியாக்கியானங்களை வைணவர்கள் ‘பகவத்விஷயம்’ என்று கொண்டு அவற்றைப் போற்றுவர். இவ்வுரையாசிரியர்களில் தனிச்சிறப்புப் பெற்றவர் பெரியவாச்சான்பிள்ளை ( ஆசான் = ஆச்சான் ). இவர், திருவாய்மொழிக்கு மட்டுமல்லாமல், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் முழுமைக்கும் உரையெழுதியுள்ளார். இதனால் இவரை “வியாக்கியானச் சக்கரவர்த்தி” என்பர்.
வடக்குத்திருவீதிப் பிள்ளையின் திருவாய்மொழி 36,000 படி உரை, ‘ஈடு’ என்றும் வழங்கப்படுகிறது. நம்பிள்ளை, நாள்தோறும் காலட்சேபத்தில் (சொற்பொழிவில்) அருளிச் செய்தவற்றை வடக்குத் திருவீதிப் பிள்ளை உரையாக்கி எழுதிவைத்தார்; அதனாலேயே இது ஈடு எனக் கூறப்பட்டதெனச் சொல்லப்படுகிறது. இந்த உரை பதசாரம் (பொழிப்புரை-சுருக்கம்), விளக்கம், (தேவைப்படுகிறபோது) மேற்கோள்கதை, கருத்துரை, எடுத்துக்காட்டு- என்ற சில பகுதிகளைக் கொண்டு விளக்கமாக அமைகிறது.
திருவாய்மொழிக்கும் ஏனைய திவ்வியப் பிரபந்தங்களுக்கும் அமைந்த வியாக்கியானங்கள், கதாகாலட்சேப முறையைக் கொண்டு, எளிய பேச்சு நடையில் அழகும் ஆற்றலும் கொண்டு, எண்ணற்ற பழமொழிகளையும் நாட்டுப்புறக் கதைகளையும், நாட்டுப்புறப் பழக்கவழக்கங்களையும், அவர்களின் மொழியில் உள்ள மரபுத் தொடர்களையும் கொண்டு விளங்குகின்றன. இவற்றுள் பல இடங்களில் வைணவ தத்துவமும், இலக்கிய நயமும் ஒருசேர விளக்கப்படுகின்றன. இவை, திருவாய்மொழியை ரசனையோடு காணுகின்றன; சாரமான கருத்துகளையும், உள்ளுறையாக விளங்கும் தத்துவங்களையும் ஒருசேர விளக்குகின்றன. முக்கியமாக, பெரியவாச்சான் பிள்ளை உரையும், வடக்குத் திருவீதிப் பிள்ளையின் உரையும், அன்றைய திறனாய்வுக்குச் சாட்சியமாகவும், திறனாய்வு வரலாற்றுக்கு அணிகலமாகவும் விளங்குகின்றன.
சைவ இலக்கியங்களில், சிறந்த உரையைப் பெற்றது, மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ஆகும். கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்த உரையின் ஆசிரியர் யார் என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. தொல்காப்பியத்துக்கு உரையெழுதிய பேராசிரியரே இதற்கும் உரையெழுதியதாகப் பலர் கூறுகின்றனர். ஆனால், ஆராய்ந்து பார்த்தால், தொல்காப்பிய உரையாசிரியர்க்கும் இவர்க்கும் நடையாலும், மொழியாலும், கருத்தாலும் ஒற்றுமைகள் இல்லை. ஆயின், திருக்கோவையார் உரை, இலக்கியத்தின் பண்பும் சிறப்பும் உணர்ந்த சிறந்த உரையாகும். “திரு” என்பதற்கு அவர் தருகிற உரை, தமிழர்தம் அழகியலுக்கு (Aesthetics) அடியெடுத்துக் கொடுக்கிறது. “திரு என்பது கண்டோரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் – என்றது அழகு” என்று தெளிவாக வரையறை செய்கிறது. தொடர்ந்து அது பற்றி விளக்கவும் செய்கிறது.
இந்நூலாசிரியரின் திருவாசகம், ‘திருவாசகத்துக்கு உருகார், ஒருவாசகத்துக்கும் உருகார்’ என்று போற்றப்படுவது. ஆனால், 19- ஆம் நூற்றாண்டில்தான், தாண்டவராயர் என்பவரால் திருவாசக அனுபூதி உரை என்பது எழுதப்பட்டது. ‘சம்பிரதாய உபதேசம்’ என்று இதனை இவர் குறிப்பிடுகிறார். 20-ஆம் நூற்றாண்டில், திருவாசகத்தில் உள்ள திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை ஆகிய மூன்றற்குமட்டும் பண்டிதமணி. மு.கதிரேசன் செட்டியார் உரையெழுதினார். கதிர் மணி விளக்கம் என்ற பெயர் பெற்ற இவ்வுரை, பலவகையாலும் சிறப்புக் கொண்ட உரையாகப் போற்றப்படுகிறது.
பெரியபுராணம், அறுபத்து மூன்று நாயன்மார்களின் கதைகளைக் கோத்துக் காப்பியப் பண்புடன் ஆக்கப்பட்ட செல்வாக்கு மிக்க சைவ இலக்கியம். இதற்கு விளக்கவுரை, 20-ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது. சி.கே. சுப்பிரமணிய முதலியார், சைவத்திலும், சைவ அடியார்களிடத்திலும் சேக்கிழாரிடத்தும் மிகுந்த பற்றுதலோடு இதற்கு உரையெழுதியுள்ளார். அவ்வுரை, குறிப்பிடத்தக்க ஒரு பணியைச் செய்கிறது: நாயன்மார்கள், குறிப்பாக அப்பரும் சம்பந்தரும் பல தலங்களுக்குச் சென்று, வழிபாடுகள் நிகழ்த்தியவர்கள்; வழிபாடுகளைத் தொடங்கி வைத்தவர்கள்; இவர்களும் பிற நாயன்மார்களும் தலயாத்திரை சென்று வந்த வழிகளைப் பெரியபுராணம் துணை கொண்டு விளக்குகிற வகையில் மண்டல வரைபடங்கள் (maps) தயாரிக்கப்பட்டு இவ்வுரையில் தரப்பட்டுள்ளன. 20-ஆம் நூற்றாண்டின் அறிவியல் முன்னேற்றத்தின் பயன் இவ்வாறு உரையில் வெளிப்படுகிறது.
இந்நூற்றாண்டில் காணப்படுகின்ற உரைகாணும் முயற்சிகளில் இரண்டு முக்கிய அம்சங்கள் கவனிக்கத்தக்கன: i) இலக்கியங்களின் பல வகைகளுக்கும் உரைகள் எழுந்தன. ii) ஏற்கெனவே, முன்பு உரைகள் எழுதப்பட்ட இலக்கியங்களுக்கு மீண்டும் உரைகள் எழுதப்பட்டன. திருக்குறள், தொடர்ந்து பல அறிஞர்களின் கருத்தை ஈர்த்தது. ஏறத்தாழ ஒரு நூறுபேருக்கு மிகாமல், பலர், திருக்குறளுக்குப் பல தேவைகளின் பொருட்டும், பல நோக்கங்களோடும் உரைகள் எழுதினர். பழைய இலக்கியங்கள், செய்யுள் வடிவத்தில் இருப்பதால், இன்றைய பொதுமக்களுக்கு வசதியாக, அவை வசனங்களாகவும் எழுதப்பட்டன. இன்றைய உரையாசிரியர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், பெருமழைப்புலவர். பொ.வே.சோமசுந்தரனார்., சி.கே. சுப்பிரமணிய முதலியார் மற்றும் எளிய முறையில் சாதாரண மக்களுக்காக எழுதிய புலியூர்க் கேசிகன் ஆகியோர். 14-ஆம் நூற்றாண்டின் நச்சினார்க்கினியர் போன்று இருபதாம் நூற்றாண்டின், வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியாரே தமிழில் அதிகமான நூல்களுக்கு உரையெழுதியவர். கம்பராமாயணம் முழுவதற்கும் உரையெழுதினார். மேலும், வில்லிபாரதம், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரத்தில் அடைக்கலக்காதையும் கடலாடுகாதையும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், முதுமொழிக் காஞ்சி, மதுரைக் கலம்பகம், திருவேங்கடக் கலம்பகம், நாலடியார். அஷ்டப் பிரபந்தம். சடகோபர் அந்தாதி முதலிய பலவற்றின் உரையாசிரியர், இவர். இவ்வுரைகளில் கம்பராமாயணத்துக்கு அமைந்த உரையே மிகவும் சிறப்பானது. தொடர்களுக்கு உரை, கருத்துரை, நயம், இலக்கணக்குறிப்பு முதலியவை மட்டுமல்லாமல், தொடர்புடைய பல புராணக்கதைகளையும் ஒப்புமை கருதி எடுத்துக்காட்டி விளக்குகின்றார். அவருடைய ஆழ்ந்தகன்ற புலமையையும் இராமாயணத்தில் உள்ள ஈடுபாட்டையும் இந்த உரை உணர்த்துகிறது. ந.மு.வேங்கடசாமி நாட்டார், சிலப்பதிகாரம் முழுமைக்கும் விரிவான உரை எழுதியுள்ளார். பலவிடங்களில் பழையவுரைகாரரையும் அடியார்க்கு நல்லாரையும் பின்பற்றிச் சென்றாலும், காலத்திற்கேற்ற வளர்ச்சி, அவ்வுரையில் காணப்படுகிறது. சிலம்புக்கு மட்டுமல்லாமல் மணிமேகலைக்கும் மற்றும் அகநானூறு, திருவிளையாடற் புராணம், நானாற்பது (இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது) ஆகியவற்றுக்கும் நாட்டார் உரையெழுதியுள்ளார். பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்காக, சங்ககால இலக்கியங்களுக்கும் பிற்கால இலக்கியங்கள் சிலவற்றுக்கும் விரிவான உரைகள் எழுதியுள்ளார்.
மரபுவழி உரைக்கும், வளர்ந்துவரும் புதிய திறனாய்வு முறைக்கும் இடைப்பட்டதாக மறைமலையடிகள், முல்லைப்பாட்டுக்கும் பட்டினப்பாலைக்கும் ஆராய்ச்சியுரைகள் எழுதியுள்ளார். நச்சினார்க்கினியர், மாட்டு எனும் உறுப்பைப் பயன்படுத்திப் பாடல் அடிகளைச் சிதைப்பார். இதனைப் பொறாது, மறைமலையடிகள் இந்த ஆராய்ச்சி உரைகளை எழுதினார். இந்த உரைகள் ஆழமாகவும் தெளிவாகவும் அமைந்துள்ளன. விமர்சனரீதியாகப் பாடல் அடிகளை மதிப்பிடவும் செய்கின்றன. தமிழ்த் திறனாய்வாளர்கள் வரிசையில், மறைமலையடிகளுக்கு இடம் தந்துதான் திறனாய்வு வரலாறு எழுதப்படுகிறது.
சமய இலக்கியங்களுள், திராவிடவேதம் என்று போற்றப்படும் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களுக்குச் சிறந்த உரைகள் தோன்றின. நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு நம்பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை முதலியோர் விரிவான உரைகள் எழுதியுள்ளனர். இலக்கிய நயம் பற்றிய உணர்வும், தத்துவ நெறி பற்றிய உணர்வும் ஒருங்கே கூடிவருகிற விளக்கங்களை இந்த உரைகளில் காணமுடியும். இவை, எழுத்துகளின் எண்ணிக்கையளவில் ‘படி’ எனும் பெயரால் சொல்லப்படுகின்றன. வடக்குத் திருவீதிப் பிள்ளையின் உரைகள் ஈட்டு உரைகள் என்று வழங்கப்படுகின்றன. அன்று, நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களுக்கு உரைகள் தோன்றினாலும் சிறந்த வைணவக் காப்பியமாகிய கம்பனின் இராமகாதைக்கு, 20-ஆம் நூற்றாண்டில்தான் விளக்கமான உரை எழுந்திருக்கிறது.
சைவத் திருமுறைகள், உரையாசிரியர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கவில்லை. ஆனால், மணிவாசகரின் திருக்கோவையார்க்கு, இலக்கியவுணர்வுடன் கூடிய சிறந்த உரையொன்று அன்றே உண்டு. பெரியபுராணத்துக்கு 20-ஆம் நூற்றாண்டில்தான், சி.கே.சுப்பிரமணிய முதலியார் என்பவரால் உரையெழுதப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டில் பல இலக்கியங்களுக்கு உரைகள் எழுதப்பட்டுள்ளன. திருக்குறளே, பல சான்றோர்களையும் தொடர்ந்து கவர்ந்துள்ளது; அதற்குப் பல உரைகள் இந்நூற்றாண்டில் தோன்றியுள்ளன.
பாடம் - 4
செல்வக்கேசவராயர் கல்வியியலாளர் ; அன்று உரைநடை வேகமாக வளர்ந்து வந்தது ; செல்வக்கேசவராயர் கம்பனிடம் ஈடுபாடு கொண்டவர். ‘வசனம்’ என்ற கட்டுரையில், தமிழில் உரைநடையின் வளர்ச்சியை மதிப்பீடு செய்கிறார். வசனத்தின் நடை பற்றியும் விளக்குகின்றார். ‘செய்யுள்’ என்ற கட்டுரை, அழகும் நுட்பமும் கொண்டது. இதில் அவர் ஆங்கிலத் திறனாய்வு முறையைப் பின்பற்றியிருப்பதாக, க.நா. சுப்பிரமணியன் என்ற திறனாய்வாளர் மதிப்பிடுகிறார். 1897-ஆம் ஆண்டிலேயே இவர் கம்பன் பற்றி ஆராய்ந்து சித்தாந்த தீபிகை என்ற இதழில் எழுதியிருக்கிறார். இவரையடுத்து, மறைமலையடிகளைக் குறிப்பிட வேண்டும். மாணவர்களுக்காகவும் மற்றும் நச்சினார்க்கினியர் என்ற உரையாசிரியரின் கருத்திலிருந்தும் உரைகூறுகிற முறையிலிருந்தும் மாறுபடுவதற்காகவும், முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, (1903) பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை (1906) ஆகிய இரண்டு சிறுநூல்கள் எழுதினார். உரைமரபு சார்ந்த திறனாய்வு இவற்றிலே காணப்படுகிறது. பொழிப்புரை, கருத்துரை, விளக்கம் என்ற முறை பின்பற்றப்படுகிறது. சங்கப்பாடல் அடிகளை முன்பின்னவாக மாற்றிக், கொண்டுகூட்டிப் பொருள் உரைக்கின்றவர் நச்சினார்க்கினியர். பத்துப்பாட்டு எனும் தொகை நூல் முழுக்க இவ்வாறு வாக்கியங்களை முறிக்கின்ற மாட்டு எனும் இலக்கணம் இருப்பதாகச் சொல்லிப் பாட்டுகளை விருப்பம்போல் சிதைத்து விடுவார் நச்சினார்க்கினியர். இதனை மறுக்கிற விதமாகவும் வாக்கிய மரபிலிருந்து பொருள்கள் நேராகவும் தெளிவாகவும் எவ்வாறு புலப்படுகின்றன என்பதைக் காட்டுகின்ற விதமாகவும் மறைமலையடிகள், முல்லைப்பாட்டுக்கும் பட்டினப்பாலைக்கும் உரையெழுதுகின்றார். மேலும், இப்பாடல்களின் பொருட்சிறப்பையும், அணிநயத்தையும் ஒலிநயத்தையும் புலப்படுத்தி விளக்கம் தந்திருக்கிறார்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், The Tamilian Antiquary என்ற ஆராய்ச்சி இதழ், தொடர்ந்து பல ஆண்டுகள் வெளிவந்தது. தமிழ் இலக்கியம், பண்பாடு, சமூக வரலாறு முதலிய துறைகளில் ஆழங்கால்பட்டு எழுதிய பல ஆய்வுக் கட்டுரைகளை இது வெளியிட்டு வந்தது. ஜி.யூ.போப், கே.ஜி.சேஷ ஐயர், மு.இராகவையங்கார், ஜே.எம். நல்லசாமிப்பிள்ளை, வெ.கனகசபைப்பிள்ளை, பெ.சுந்தரம் பிள்ளை முதலிய பல அறிஞர்களின் ஆய்வுகளை இந்த இதழ் வெளியிட்டுவந்தது. பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை (1906) திருஞானசம்பந்தரின் காலம் குறித்து எழுதிய ஆய்வுக்கட்டுரை, (இது ஆங்கிலத்தில் எழுதப்பட்டது), கால ஆராய்ச்சி பற்றிய மிகச் சிறந்த கட்டுரையாகும். அது போன்று பத்துப்பாட்டு ஆராய்ச்சி குறித்த கட்டுரை, பத்துப்பாட்டுத் தொகை நூல்களின் சிறப்புகளைப் பகுத்து ஆராய்கின்ற முறையில் ஆராய்ந்து கூறுகின்றது.
வ.வே.சு. ஐயர், ‘கவிதை’ பற்றி (1924) எழுதினார். பழம்பாடல்கள் பற்றியே பேசினாலும், கவிதையின் பண்புகளைத் தனியே எடுத்து விதந்து கூறியமையும், செய்யுள் எனக் கூறாது, கவிதை என்ற சொல்லைப் பயன்படுத்தியமையும் இக்கட்டுரையின் சிறப்புகள். மேலைநாட்டார் கூறும் கவிதைப் பண்புகள் சிலவற்றை இவர் எடுத்துக்காட்டுகிறார். பின்னர், இவர் ‘Kambaramayanam – A Study’ என்ற ஒரு நூலை எழுதினார். கம்பனை வடமொழியின் வால்மீகியோடும் ஆங்கிலத்தின் மில்ட்டனோடும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ள இந்த நூல், தமிழில் ஒப்பிலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. கம்பனே பிறரினும் சிறந்தவன் என்பது இவருடைய முடிவு. மேலும், ‘இரசனைச்சுகம், கம்பராமாயணத்தில் அதிகம் காணப்படுகிறது என்பதே எனது கட்சி’ என்று இவர் சொல்லுவார். இவருடைய அணுகுமுறையில், ரசனையும், கம்பன் பற்றிய ஒரு வியப்பு நிலையும் காணப்படுகின்றன.
இவ்வாறு, தமிழ்த் திறனாய்வு முன்னோடிகளிடம் மரபு மீதான சார்பு, ரசனை மீதான ஆர்வம்/ பயிற்சி, தமிழிலக்கியம் மற்றும் தமிழர் பண்பாடு குறித்த ஒரு செம்மாப்புணர்வு முதலியவை தூக்கலாகக் காணப்படுகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் புதிய தேவைகளையொட்டி நாடு, இனம், மொழி, இலக்கியம், பண்பாடு முதலியவற்றின் தேடுதல்களாக வந்தவை, முதலில் ஆராய்ச்சிகளேயாகும். ஆயினும் இவற்றில் பல, இலக்கியங்களை மையமிட்டே செய்யப்பட்டன. யாழ் விபுலானந்த அடிகள், பண்டித நடேச சாஸ்திரியார், எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார், மு.இராகவையங்கார், ரா.ராகவையங்கார்,கே.என். சிவராஜபிள்ளை, எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை, வெ. கனகசபைப்பிள்ளை , எம். சீனிவாசஐயங்கார், பி.டி. சீனிவாச ஐயங்கார், கே. எஸ். சீனிவாச பிள்ளை, வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர், எல். டி. சாமிக்கண்ணுப்பிள்ளை, நா. கதிரைவேற்பிள்ளை ஆகியவர்கள் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் இலக்கியங்களைத் திறனாய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகினர். தமிழ் இலக்கியம் பற்றிய ஆழமான பரந்த அறிவும் மதிப்பீடுகளும் கருத்து நிலைகளும் இவர்களுடைய நூல்களிலே உண்டு. இவர்களைத் தொடர்ந்துதான் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, எஸ்.வையாபுரிப்பிள்ளை, டி.வி. சதாசிவ பண்டாரத்தார், தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், கலாநிதி கைலாசபதி முதலிய பலஆராய்ச்சியாளர்கள் தோன்றினர்.
பழைய இலக்கியங்களைத் திறனாய்வு செய்வோர், அதிகமாக எடுத்துக்கொண்ட இலக்கியங்கள் கம்பனுடைய இராமகாதை, இளங்கோவின் சிலம்பு, வள்ளுவரின் குறள் மற்றும் சங்க இலக்கியங்கள் ஆகும். சமயத்தில் ஈடுபாடு கொண்டோர் பெரியபுராணம், திருவாசகம், தேவாரம் முதலிய நூல்களில் ஆர்வம் கொண்டிருந்தனர். பொதுவாக இத்தகையவர்களில் பெரும்பான்மையோர், ரசனை முறையிலும் உரை மரபிலேயும் சென்றார்கள். மொழிப்பற்றும், சமயப்பற்றும் இவர்களின் ஆய்வுகளிலே இருந்தன.
புதிய இலக்கியங்களிலே ஈடுபாடு கொள்ளாமல், பழைய இலக்கியங்களையே தம் ஆய்வுப்பொருளாகக் கொண்ட கல்வியியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்ரா. பி. சேதுப்பிள்ளை, ச. சோமசுந்தர பாரதியார், மு. வரதராசன், அ.ச. ஞானசம்பந்தன், வ.சுப. மாணிக்கம் ஆகியோர். இவர்களுள் பேராசிரியர் மு. வரதராசன், 1950-60-களிலே கல்லூரி மாணவர்களையும் இளைஞர்களையும் கவருகின்ற விதத்தில் பல நாவல்கள் எழுதிப் பிரபலமானவர். ஆனால், இவர் தம்மையொத்த நாவலாசிரியர்கள் பற்றியோ, பாரதியார், பாரதிதாசன் போன்ற சமகாலத்திய கவிஞர்கள் பற்றியோ திறனாய்வு செய்யவில்லை. மாறாகச் சங்க இலக்கியத்தில் இயற்கை, குறுந்தொகைச் செல்வம், நெடுந்தொகைச் செல்வம், நற்றிணை விருந்து என்று பெரிதும் சங்க இலக்கியங்களிலேயே கவனம் கொண்டிருந்தார். இது, அண்மைக்காலம் வரை, தமிழ்க் கல்வியியலாளர்கள் மத்தியிலே பெரும் போக்காக இருந்தது. மேலும், பொதுவாக ரசனை முறைத் திறனாய்வுக்கும் மரபு சார்ந்த பார்வைக்கும் கம்பன், இளங்கோ உள்ளிட்ட தொன்மை இலக்கியங்களே ஏற்புடையனவாக இருந்தன. இன்றும் கூட இந்தப்போக்குப் பிரதானமாகக் காணப்படுகிறது. மேலும், மேடைச் சொற்பொழிவாளர்களுக்கு, இந்தத் தளமே பொருந்தி வருகிறது. ஆனால் அதேபோது, அமைப்பியல் மார்க்சியம், பெண்ணியம் முதலிய புதிய பார்வைகளுக்கும் கொள்கைகளுக்கும், சங்க இலக்கியம் உள்ளிட்ட தொன்மை இலக்கியங்களும் சிறந்த களங்களாக இருந்து வருகின்றன. அணுகுமுறைகளும் கொள்கைககளுமே திறனாய்வுக்குச் சரியான பண்புகளையும் பயன்பாடுகளையும் தருவன. எந்த இலக்கியம் என்பதல்ல – எவ்வாறு அது திறனாய்வு செய்யப்படுகிறது என்பதுவே முக்கியம்.
இலக்கியத்தைப் பற்றிப் பாரதியாருக்கு அனுமானங்களும் சில கணிப்புக்களும் உண்டு. பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும் என்ற போது, இலக்கியத்தின் நோக்கம் பற்றிய கணிப்பும், யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் இளங்கோவைப் போல் வள்ளுவன் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்று சொல்லும்போது ஒரு மதிப்பீடும் – இப்படிப் பல தன்மைகளும் வெளிப்படுகின்றன. ஆனால், இவற்றிலும் சிறப்பாக, சில கட்டுரைகளிலே, கலை இலக்கியங்கள் பற்றி அவர் விரிவாகவும் தீர்க்கமாகவும் பேசியிருக்கிறார்.
1916-ஆம் ஆண்டிலேயே இவர், ஜப்பானிய ஹைக்கூ பற்றி எழுதியிருக்கிறார். அதன் வரையறை, பண்பு, திறன் ஆகியன பற்றிப் பேசியிருக்கிறார். சுருங்கச் சொல்லி விளங்கவுரைக்கும் அதன் செறிவைத் திருக்குறளோடு ஒப்பிட்டிருக்கிறார். சில ஹைக்கூ கவிதைகளை மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார்; அதோடு நிற்காமல், அந்தக் கவிதைகளை விமரிசனமும் செய்திருக்கிறார். (ஜப்பானிய கவிதை பற்றி முதலில் சொன்னவர் பாரதியாரே ஆவார்.)
‘ஸங்கீத விஷயம்’ என்ற கட்டுரை மிகவும் அற்புதமான ஒன்று. நாட்டுப்புறப் பாடல்களின் மேன்மையைக் கூறி, வித்வான்கள் அவற்றிலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தவும் செய்கிறார். “பொது ஜனங்களை நம்ப வேண்டும் ; இனிமேல் கலைகளுக்கெல்லாம் போஷணையும் ஆதரவும் பொது ஜனங்களிடமிருந்து கிடைக்கும்” என்று பேசுகிறார். கலையும் சமூகமும் பற்றிய உணர்வு நிலையின் வெளிப்பாடு, இது. மேலும் கமலாம்பாள் சரித்திரம் எழுதிய ராஜம் ஐயர் பற்றி இவர் பாராட்டியிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும். இவ்வாறு, பாரதியார், ஒரு திறனாய்வாளராகவும் காட்சி தருகிறார்.
வெகுஜன-ஜனரஞ்சக ரசனைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த புதுமைப்பித்தன், அத்தகைய ஜனரஞ்சகப் போக்கின் பிரதிநிதியாக இருந்த கல்கியை மிகத் தீவிரமாகச் சாடி, மறுத்து எழுதுகிறார். ஆர்வ நிலைகளை ஏற்படுத்துதல், மிகையான புனைவுகள், தொடர்கதைத் தன்மைகள் முதலியவற்றை எதிர்த்துப் புதுமைப்பித்தன் போர் தொடுக்கிறார். இலக்கியத்தில் ஜனரஞ்சகப் பண்பாடு (Mass Culture) மற்றும் பிரபலத்துவம் (Populism) ஆகியவற்றிற்கு மாற்றாக, நவீனத்துவம் (Modernity) என்பதை முன்வைத்த கலகக் குரல் இவருடையது. ஆனால் இதனாலேயே, பலருக்கும் புரியாது என்று சொல்லுகிற முறையில் எழுதிய மௌனியை இவர் பாராட்டிப் பேசுகிறார். அதேபோது, நேரடியாகத், திராவிடர் பகுத்தறிவு இயக்கத்தின் குரலாக ஒலித்த பாரதிதாசனையும் இவர் பாராட்டுகிறார். பாரதிதாசன் பற்றி அதே காலத்தில் ஒரு உடனடித் தன்மையோடு எழுதியவர் புதுமைப்பித்தன். ‘பாரதியார் தமிழுக்கென்று விட்டுச்சென்றவை இரண்டு ; ஒன்று, அவருடைய கவிதை; இன்னொன்று பாரதிதாசன்’ – என்பது புதுமைப்பித்தனுடைய பாராட்டு மொழி.
கு.ப.ரா, தேசிய விடுதலை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். பாரதியாரைக் கல்கியும் ராஜாஜியும், ‘அவர் கவிஞர் தான் ; நல்ல கவிஞராக இருக்கலாம் ; ஆனால் ஷேக்ஸ்பியர், மில்ட்டன், ஷெல்லி போல மகாகவி அல்ல’ என்று மறுத்துரைப்பர். பாரதி பற்றிய கல்கியின் இந்தக் கருத்தைத் தீவிரமாக மறுப்பவர், கு.ப.ரா. அவரும், பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி) என்ற இன்னொரு எழுத்தாளரும் சேர்ந்து, கல்கியை மறுப்பதோடு, பாரதியார், மகாகவி தான் என்று வலியுறுத்தி எழுதினார்கள் (நூல் : ‘கண்ணன்- என்கவி’).
பாடம் - 5
தமிழ்த் திறனாய்வில் மேலைநாட்டுத் திறனாய்வு மற்றும் சிந்தனை முறைகளின் தாக்கம் உண்டு. ஆனால், திறனாய்வே அங்கிருந்து வந்த கொடை அல்ல. தமிழ்த் திறனாய்வின் நீண்ட வரலாற்றில் பல நீரோட்டங்கள் உண்டு. மேலைநாட்டு முறையியலும் தாக்கம் செலுத்துவதில் வியப்பு இல்லை. ஆனால், எது எது எந்த அளவில், எந்தத் திறனில் என்று சரியாகக் கணித்துவிட முடியாது. அறிவியல் வளர்ச்சி காரணமாகவும், உலகளாவிய தகவலியப் பரப்புகள் காரணமாகவும், புலம்பெயர்வு போன்றவை காரணமாகவும், தமிழில் திறனாய்வு, சர்வதேசப் பண்புகளைப் பெற்று வளர்ந்துள்ளது என்று சொல்ல வேண்டும். இன்றைய தமிழ்த் திறனாய்வாளர்களுள் (1970) எழுபதுகளுக்குப் பிற்பட்டவர்களிடமே மேலைநாட்டு முறையியல்கள் மற்றும் சிந்தனைகளின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. எவ்வாறாயினும், எல்லாமே தமிழ்ச் சூழலின் பின்னணியிலும், அதன் பொருத்தத்திலுமே இங்கு வந்து அமர்கின்றன ; இடம் பெறுகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவை மறுத்து, அது மருட்பாவே என்று சொல்லி ஈழத்து ஆறுமுக நாவலர் போர் தொடுக்கிறார். இதற்குக் காரணமாக அமைந்தது, ‘சைவ சமயத் தூய்மை’ பற்றிய கருத்தியலே ஆகும். சைவ சமயப்பற்றுக் காரணமாகச் சமணக் காப்பியம் என்று கருதப்படும் சிலப்பதிகாரத்தையும் திருக்குறளையும் சைவ சமய நூல்களே என்று பேசியவர்கள் பலர் உண்டு. அதுபோலப் பெரிய புராணத்தின்மீதும் சேக்கிழார் மீதும் தனிப்பற்றுக் கொண்ட அ.ச.ஞானசம்பந்தன், அதனைத் தேசிய இலக்கியம் என்பதாக முத்திரை குத்தி, விளக்கம் தருவார். இத்தகையவர்கள், கம்பனை வெறுமனே ரசனைக்காகவும், பெரியபுராணம், தேவாரம், திருவாசகம் முதலியவற்றைக் கொள்கைக்காகவும் பாராட்டியுரைக்கின்றனர். ஆனால், இத்தகைய சமயச் சார்பு, பெரும்பாலும் ஆராய்ச்சிகளிலேயே அதிகம் காணப்படுகிறது; அதுவும் பழைய இலக்கியங்கள், அவற்றை மையமிட்ட வரலாறு ஆகியவற்றிலேயே காணப்படுகிறது. (இன்றைய) திறனாய்வில் வேறு பிற சார்நிலைகள் உண்டு.
அ) இலக்கிய ரசனை : சொல்நயம், பொருட்சிறப்பு, சந்தம், வருணனை, காதல் முதலிய அம்சங்களில் ஏற்பட்ட ரசனை முக்கிய காரணம். இதிலும் கம்பனைப் பற்றி எழுதுபவர்களிடமும் பேசுபவர்களிடமும் இந்த ரசனை உணர்வு பிரதானமாகக் காணப்படுகிறது. வ.வே.சு. ஐயர், டி.கே.சி. முதலியவர்களிடம் இந்தப் போக்கினைக் காணலாம்.
ஆ) கதைச்சுவை : காப்பியங்கள் கூறும் கதைகளும் கிளைக்கதைகளும் ஏற்கெனவே தமிழர்கள் மத்தியில் நன்றாகப் பரவியிருக்கின்றன. எனவே அவற்றைப் பற்றி எழுதுவதும் பேசுவதும் பலருக்கு வசதியாகவும் எளிதாகவும் இருக்கிறது. முக்கியமாக மேடைச் சொற்பொழிவாளர்களுக்கு, இதன் காரணமாகக் கம்பனையும் இளங்கோவையும் பற்றிப் பேசுவது வசதியாக இருக்கிறது.
இ) காப்பியக் கட்டமைப்பு : சிலப்பதிகாரத்தின் கட்டுக்கோப்பு, பாத்திரப் படைப்பு, அழகியல் இவற்றையொட்டிப் பலர் விளக்கம் தந்துள்ளனர். காப்பியங்களின் பொதுப்பண்புகளையும் வரலாறுகளையும், அவற்றுள் குறிப்பாகக் கம்பராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியவற்றையும் பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் காவிய காலம் விரிவாகவும் முறையாகவும் விளக்கிப் பேசுகிறது. பேராசிரியர், தொ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் குடிமக்கள் காப்பியம், கானல்வரி ஆகிய நூல்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை. மார்க்கபந்து சர்மா, சிலம்பு பற்றிப் பல நூல்களை எழுதியுள்ளார். சிலப்பதிகார ரசனை அவற்றுள் குறிப்பிடத்தகுந்தது.
ஈ) தமிழ் மேம்பாட்டுணர்வு : சிலப்பதிகார ஆராய்ச்சியில் இது, பிரதானமாகக் காணப்படுகிறது. ம.பொ.சிவஞானம், சிலப்பதிகாரத்தைப் புரட்சிக் காப்பியம் என்று வருணிக்கிறார். தமிழ்த் தேசியம், சிலம்பின் மூலமாகக் கட்டமைக்கப்படுகிறது. ம.பொ.சிவஞானம், சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்படுகிறார். பழைய இலக்கியத்தை இன்றைய சூழலுக்கேற்பப் பொருத்திக் காணுகிற முயற்சி பலரால் மேற்கொள்ளப் பட்டுள்ளது. கம்பனுடைய காப்பியத்தை இன்றைய சமுதாயத்தின் தேவைக்கேற்ப விளக்கம் கொடுத்தவர்களில் முக்கியமானவர் ப.ஜீவானந்தம்.
உ) சமூக வரலாறு : காப்பியங்களைக் கொண்டு, தமிழக அரசியல் – சமூக – பண்பாட்டு வரலாறுகளைக் காணுகிற முயற்சியும் பல ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. தொ.மு.சி.ரகுநாதனின் “இளங்கோவடிகள் யார்” எனும் நூல் இத்தகையது.
ஊ) ஒப்பிலக்கியம்/ இலக்கிய ஒப்பீடு : கம்பராமாயணம் இவற்றிற்குரிய முக்கியமான தளமாக இருந்து வந்துள்ளது. வ.வே.சு. ஐயர், ஏ.சி.பால் நாடார், எஸ்.ராமகிருஷ்ணன் முதலியோர் இதிலே முக்கியமானவர்கள். கம்பனை மறுத்தும் எதிர்த்தும் பகுத்தறிவு இயக்கம் சார்ந்தவர்கள் விளக்கம் தந்துள்ளனர். சி.என்.அண்ணாத்துரையின் தீ பரவட்டும், கம்பரசம் ஆகிய நூல்கள் இத்தகையன.
தருமு சிவராமு, எழுத்து இதழில் தொடர்ந்து எழுதியவர் ; புதுக்கவிதைப் படைப்பாளி ; படிமக்கவிஞர் என்று பேசப்படும் சிறப்புடையவர். திறனாய்வில் சில சார்புகளோடு கண்டிப்பும் வேகமும் கொண்ட இவர் எழுதிய இத்தகைய நூல், விமரிசன ஊழல்கள் என்பது. திறனாய்வில் காணப்படுகின்ற சாதிச்சார்பு நிலை உள்ளிட்ட வெளிப்படையான சில உண்மைகளையும் கருத்துகளையும் இந்நூல் பேசுகிறது.
இதே 60-70-களின் காலப்பகுதியின் திறனாய்வில், புதிய இலக்கியம் பற்றி அக்கறை கொண்ட பிற கல்வியாளர்கள், சாலை இளந்திரையன், தா.வே.வீராசாமி, மா.இராமலிங்கம், இரா.தண்டாயுதம், தி.லீலாவதி முதலியோர். மேலும், இதே காலப்பகுதியில் கல்வியாளர்கள் மத்தியிலிருந்து பல திறனாய்வாளர்கள் மலர்ந்தனர். அவர்களுள் கலாநிதி கைலாசபதி, நா.வானமாமலை, கா.சிவத்தம்பி முதலியோரும் அடங்குவர்.
இன்றைய திறனாய்வுலகில், 1950-70-களின் காலப்பகுதியில் அதிகமான பங்களிப்புச் செய்தவர்கள் பலர். அவர்களுள் டி.கே.சி., க.நா.சு., சி.சு.செல்லப்பா, வல்லிக்கண்ணன், தருமு சிவராமு, வெங்கட் சாமிநாதன், சி.கனசபாபதி முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களிடம், உருவவியல் சார்ந்த பார்வை அதிகமாகக் காணப்படுகிறது. தரம் பற்றிப் பேசுவதும், தனிமனிதர்கள் நிலையில் கசப்பும் வெறுப்பும் காட்டுவதும் இன்றைய திறனாய்வுலகில் காணப்படுகிற சில போக்குகள். ஆயினும், இன்றைய இலக்கியத்தின் பன்முகப்பட்ட வளர்ச்சிக்கும் சில கூர்மையான போக்குகளுக்கும், திறனாய்வு பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளது. இலக்கிய இதழ்கள் என்ற ஊடகம், பல திறனாய்வாளர்களுக்கு நல்ல களமாக இருந்துவருகிறது என்பது கவனிக்கத்தகுந்தது.
பாடம் - 6
அ) பொதுவான ஆராய்ச்சியாளர்கள் : பொதுவான ஆராய்ச்சிகள், ஓரே தளத்திலிருந்து செய்யப்படுபவை; பல திறத்தவை ;பல தரத்தவை. இவர்களுள் இலக்கிய ஆராய்ச்சியைப் பொறுத்த அளவில் குறிப்பிடப்பட வேண்டியவர், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறு எழுதிய ஏ.வி.சுப்பிரமணிய ஐயர் ஆவார். இவையன்றி இலக்கியம், வரலாறு, தத்துவம், கலைகள், மொழிநூல் முதலிய பல துறைகளை இணைத்து ஆராய்கின்ற பல்துறை ஆய்வு (Inter disciplinary) முக்கியமானதாகும். இதில் குறிப்பிடத்தக்கவர்கள், பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் மற்றும் மயிலை சீனி. வேங்கடசாமி முதலியோர்.
ஆ) மார்க்சியத் திறனாய்வாளர்கள்: தமிழில் மார்க்சியத் திறனாய்வு மிகவும் செல்வாக்குடையது. மார்க்சியம் அல்லது மார்க்சியம் அல்லாதது என்று இரு நிலைகளாகப் பார்க்கின்ற அளவுக்கு, மார்க்சியத் திறனாய்வு செல்வாக்குடன் விளங்குகிறது. இதில் பலர் குறிப்பிடத் தகுந்தவர்களெனினும், மிக முக்கியமாகக் குறிப்பிடத் தகுந்தவர்கள். தொ.மு.சி.ரகுநாதன், பேராசிரியர் நா.வானமாமலை, கலாநிதி கைலாசபதி மற்றும் கா.சிவத்தம்பி, கோ.கேசவன், எஸ்.தோத்தாத்திரி ஆகியோர் ஆவர்.
இ) குறிப்பிட்ட படைப்புகளை ஆய்வோர் : ஆய்வுப் பொருளாக – தளமாக அமைந்தவர்களில் முதன்மையானவர்கள் இளங்கோவடிகள், திருவள்ளுவர், கம்பர், பாரதியார் ஆகியோர். இந்தத் தளங்களுள்ளும் பாரதி ஆய்வுகள் பல பரிமாணங்களையும் அணுகுமுறைகளையும் பெற்றுள்ளன. முக்கியமாகப் பாரதி மீது தனி அக்கறை செலுத்துகிறவர்கள் மற்றும் பாரதி ஆய்வாளர்கள் என்று கருதத்தக்கவர்கள். இன்றைய படைப்பிலக்கியத்தில் தனியாக – சிறப்பாகக் கவனம் செலுத்துகிறவர்கள் ஆவர். ஜீவா, வ.ரா., கு.ப.ராசகோபாலன், பெ.சு.மணி முதலியோர் பாரதி ஆய்வாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஈ) அழகியல் ஆய்வாளர்கள் : உருவம், உத்தி, அழகு, தரம் முதலியன பற்றித் தனி அக்கறை செலுத்திய – செலுத்துகிற திறனாய்வாளர்களும் தமிழில் பலராக உள்ளனர். இவர்களுள் டி.கே.சி., க.நா.சு. மிக முக்கியமானவர்கள்.
உ) மேலைத் திறனாய்வு முறையில் ஆய்வோர்: அடுத்து, மேலைநாட்டுப் புதிய சொல்லாடல்கள் – சிந்தனை முறைகள் (discourses), புதிய பிரச்சனைகள் முதலியவற்றில் கவனம் செலுத்துகிற போக்கு 1990-களுக்குப் பிறகு, தமிழில் வளர்ந்து வந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்கவர்கள் தமிழவன், எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ், தி.சு.நடராசன், ராஜ்கௌதமன், க.பஞ்சாங்கம், பிரேம்-ரமேஷ் முதலியோர் ஆவர்.
கோவை ஞானி 1970-90-களில் நிறைய எழுதினார். இவருக்குக் கலை-இலக்கியப் பிரச்சனைகள் என்பவை உருவம்- உள்ளடக்கம் என்பவற்றையும் தாண்டி, அப்பால், மனிதனின் ஆன்மீகம் பற்றிய பிரச்சனைகளாகத் தோன்றின. “எப்போதும், சூத்திரங்கள் எனக்குப் போதுமானவையல்ல; சூத்திரங்களினூடேயும் அப்பாலும் உண்மைகளைத் தேடிச் செல்வது என் இயல்பு” என்று இவர் சொல்கிறார். சமூக அக்கறையும் உணர்வும் ஒரு பக்கம் இருக்க, வைதிக சமயங்களின் வழிப்பட்ட ஆன்மீக வாதம் சார்ந்த தத்துவத்தேடல் இவருடைய திறனாய்வின் அம்சமாக உள்ளது. மேலைநாட்டுத் தத்துவங்களில் அந்நியமாதல் (alienation) என்பது இவர் அதிக அக்கறை கொண்ட ஒரு கருத்தியல் ஆகும். கலை இலக்கியம் ஒரு தத்துவப் பார்வை, மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் என்ற நூல்கள் இவர் எழுதியவற்றுள் சில.
தொடர்ந்து, இன்றுவரை பல திறனாய்வாளர்கள் படைப்பிலக்கியத்தின் பல்வேறு தளங்களையும் பரிமாணங்களையும் புலப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இளம்படைப்பாளிகள் பலர், திறனாய்விலும் ஆர்வம் செலுத்தி வருவது பாராட்டுக்குரியதாகவுள்ளது.
தமிழில் திறனாய்வும், ஆராய்ச்சியும் நெருக்கமாகக் காணப்படுகின்றன. அத்தகைய முறையில் சிலர் இலக்கியத்தைத் திறனாய்ந்துள்ளனர். மேலும், இலக்கியத்தை, தத்துவம், நாட்டுப்புறவியல், வரலாறு, மொழியியல் உள்ளிட்ட பல துறைகளை இணைத்துப் பல்துறை ஆய்வாக ஆராய்கிற முறையும் தமிழ்த் திறனாய்வு உலகில் காணப்படுகிறது. அடுத்து, அமைப்பியல், பின்னை அமைப்பியல், பின்னை நவீனத்துவம் முதலிய அண்மைக் காலத்துக் கொள்கைகள் / சிந்தனை முறைகள் ஆகியவற்றின் பின்னணியில் இலக்கியப் பனுவல்களையும், பிற ஆவணங்களையும் ஆராய்ந்து கூறுகிற போக்கு, இன்று பல திறனாய்வாளர்களிடையே காணப்படுகிறது. இப்போக்குத் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இலக்கியப் பனுவல்களுக்குப் புதிய புதிய விளக்கங்கள் தருவதும், இன்றைய சூழலின் சமூக – அரசியல் – பண்பாட்டுச் சூழமைவுகளுக்கும் தேவைகளுக்கும் பொருந்துமாறு திறனாய்வு முறைகளை வகுத்துக் கொள்வதும் இன்றைய திறனாய்வாளர்களிடையே காணப்படுகிற முக்கியமான போக்குகளாகும். இன்று படைப்பாளர்கள் பலர், கல்வியாளர்களாகவும் இருக்கிறார்கள். இத்தகையோரில் பலர், திறனாய்வாளர்களாகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது வரவேற்கத்தக்க ஒருநிலை ஆகும்.

