1

டிப்ளமோ படிப்பு

மொழி அமைப்பு

தமிழ் இலக்கண அறிமுகம் : எழுத்து , சொல்

பாட முன்னுரை

தமிழ் , இலக்கிய வளமும் இலக்கண வளமும் உடைய மொழி .

பல நூற்றாண்டுகளாகவே தமிழில் இலக்கியம் நன்கு செழித்து வளர்ந்துள்ளது .

இலக்கியங்களைப் போலவே இலக்கண நூல்களும் மிகுதியாகத் தமிழில் தோன்றியுள்ளன .

இலக்கியம் மொழியை அடிப்படையாகக் கொண்டது .

மொழி அமைப்பை விளங்கிக்கொள்ள இலக்கணம் உதவியாக இருக்கிறது .

இந்தப் பாடத்தில் தமிழ்மொழியில் உள்ள எழுத்து இலக்கணமும் , சொல் இலக்கணமும் எளிய முறையில் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றன .

இலக்கியமும் இலக்கணமும்

இலக்கியங்களை முதலில் வாய்மொழியாகப் பாடிக்கொண்டிருந்தனர் .

அவற்றை எழுதி வைக்கத் தொடங்கியபோது , மொழியின் அமைப்புப் பற்றிய சிந்தனை தோன்றியது .

மொழி அமைப்புப் பற்றிய சிந்தனையின் காரணமாக இலக்கணம் தோன்றியது .

எனவே முதலில் தோன்றியது இலக்கியமே .

அந்த இலக்கியத்தைப் பார்த்து , இலக்கணத்தை உண்டாக்கினார்கள் .

கால மாற்றத்தால் இலக்கியத்திலும் சில மாற்றங்கள் தோன்றின .

இதனால் இலக்கணத்தை மீண்டும் மாற்றி எழுதவேண்டிய தேவையும் ஏற்பட்டது .

இவ்வாறு இலக்கியத்திலும் மொழியிலும் காலம்தோறும் மாற்றங்கள் ஏற்பட்டு வந்ததால் , இலக்கணத்திலும் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன .

எனவே தமிழில் காலம்தோறும் புதிய இலக்கண நூல்கள் தோன்றிக் கொண்டே இருந்தன .

இலக்கண நூலை இயற்றுபவரை இலக்கண நூல் ஆசிரியர் என்று அழைப்பர் .

தமிழில் காலம் தோறும் பல ஆசிரியர்கள் இலக்கண நூல்களை எழுதி வந்துள்ளனர் .

சமண சமயத்தைச் சார்ந்த துறவிகளே இலக்கண நூல்களை மிகுதியாக இயற்றியுள்ளனர் .

எனினும் சைவம் , வைணவம் , கிறித்தவம் முதலிய சமயத்தைச் சேர்ந்தவர்களும் இலக்கண நூல்களை இயற்றியுள்ளனர் .

இலக்கண நூல் ஆசிரியர்கள் இலக்கணத்தை , விதிகளாகச் செய்யுள் வடிவில் அமைத்து இயற்றினார்கள் .

விதிகளைச் சூத்திரம் என்றும் நூற்பா என்றும் கூறுவர் .

ஒரு பொருள் பற்றிய சில விதிகள் எல்லாவற்றையும் தொகுத்து ஓர் இயலாக அமைப்பர் .

ஓர் இலக்கண நூலில் அப்படிப் பல இயல்கள் சேர்ந்து அமைந்திருக்கும் .

இலக்கண நூல்களை இயற்றும் ஆசிரியர்கள் , அவற்றைச் சூத்திரங்களாக இயற்றியதால் , எளிதில் பொருள் விளங்காமல் இருந்தன .

மாணவர்கள் இவற்றைக் கற்பதற்கு மிகவும் இடர்ப்பட்டனர் .

அதனால் , மாணவர்க்கு விளங்கும் வகையில் அச்சூத்திரங்களுக்கு எளிமையாக உரைநடையில் சிலர் பொருள் எழுதினார்கள் .

இவர்கள் எழுதியதை உரைகள் என்று வழங்குவர் .

இப்படி இலக்கண நூல்களுக்கும் இலக்கிய நூல்களுக்கும் விளக்கம் எழுதியவர்களை உரையாசிரியர் என்று அழைப்பர் .

இலக்கணத்தின் வகைகள்

தமிழ் இலக்கணம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது .

எனவே ஐந்திலக்கணம் என்ற சொல்மரபு வழங்கி வருகிறது .

அவை , எழுத்து , சொல் , பொருள் , யாப்பு , அணி ஆகியவை ஆகும் .

இவற்றில் எழுத்து , சொல் இலக்கணங்கள் மொழிக்கு இலக்கணம் கூறுபவை ஆகும் .

பொருள் இலக்கணம் மொழியில் எழுதப்படும் இலக்கியத்தின் உள்ளடக்கத்திற்கு இலக்கணம் கூறுவது ஆகும் .

யாப்பிலக்கணம் என்பது இலக்கியம் எழுதப்படும் செய்யுளின் இலக்கணம் கூறுவதாகும் .

யாப்பிலக்கணத்தின் ஒரு வளர்ச்சியாகப் பாட்டியல் இலக்கணம் தோன்றியது .

பாட்டியல் இலக்கணம் இலக்கிய வடிவங்களினது இலக்கணத்தைக் கூறுகிறது .

பிள்ளைத்தமிழ் , உலா , தூது போன்ற இலக்கியங்களின் இலக்கணம் பாட்டியல் நூல்களில் இடம்பெற்றுள்ளது .

அணி இலக்கணம் செய்யுளில் அமையும் உவமை , உருவகம் முதலிய அணிகளின் இலக்கணத்தைக் கூறுகிறது .

இந்தப் பாடத்தில் எழுத்து , சொல் ஆகிய இலக்கணங்களின் அமைப்பும் , வரும் பாடத்தில் பொருள் , யாப்பு , அணி , பாட்டியல் இலக்கணங்களின் அமைப்பும் அறிமுகம் செய்யப்படும் .

எழுத்து இலக்கணத்தில் , எழுத்துகளின் வகைகள் , அவை ஒலிக்கும் கால அளவு , எழுத்துகள் பிறக்கும் முறை ஆகியனவும் சந்தி இலக்கணமும் இடம்பெற்றுள்ளன .

சந்தி இலக்கணம் என்பது இரண்டு சொற்கள் சேரும்போது முதல் சொல்லின் கடைசி எழுத்திலும் இரண்டாம் சொல்லின் முதல் எழுத்திலும் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லுவது ஆகும் .

சொல் இலக்கணத்தில் , சொல்லின் வகைகளான பெயர்ச்சொல் , வினைச்சொல் , இடைச்சொல் , உரிச்சொல் ஆகியனவும் திணை , பால் , எண் , இடம் , காலம் முதலியனவும் தொகை ( எழுத்துகள் மறைந்து வருதல் ) , வேற்றுமை ஆகியனவும் சொல்லப்பட்டிருக்கும் .

பொருள் இலக்கணம் என்பது தமிழ் மொழிக்கே சிறப்பாக உரிய இலக்கணம் ஆகும் .

தமிழ் மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களின் பாடுபொருளுக்கு எழுதப்பட்ட இலக்கணமே பொருள் இலக்கணம் ஆகும் . பழங்காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட சங்க இலக்கியம் என்ற இலக்கியத் தொகுப்புக்கு எழுதப்பட்டதே பொருள் இலக்கணம் ஆகும் .

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கொள்ளும் காதல் அகப்பொருள் எனப்பட்டது .

போர் , வீரம் , இரக்கம் , நிலையாமை , கொடை , கல்வி முதலியவை எல்லாம் புறப்பொருள் எனப்பட்டன .

தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுளில் இயற்றப் பட்டவையே .

செய்யுள்களின் அமைப்பு , ஓசை , பாக்களின் வகைகள் முதலியவற்றைச் சொல்லுவதே யாப்பு இலக்கணம் ஆகும் .

சங்க காலத்திற்குப்பின் பக்தி இலக்கியக் காலத்திலும் அதற்குப் பின்பும் பல வகைச் சிறிய இலக்கிய வடிவங்கள் தோன்றின .

தூது , உலா , அந்தாதி , மாலை , பிள்ளைத்தமிழ் முதலியவை இவ்வகையான இலக்கியங்களாகும் .

இவற்றுக்கு இலக்கணம் சொல்லுவது பாட்டியல் இலக்கணம் ஆகும் .

இலக்கியங்களில் அழகுக்காகவும் பொருள் விளங்குவதற்காகவும் உவமைகளைப் பயன்படுத்துவது கவிஞர்களின் இயல்பு .

அவ்வாறு இடம்பெறும் உவமை , உருவகம் முதலியவற்றுக்கு அணி என்று பெயரிட்டு அவற்றின் இலக்கணத்தைச் சொல்லுவது அணி இலக்கணம் ஆகும் .

தமிழ் இலக்கண நூல்கள்

தமிழ் இலக்கியத்தின் வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்டது .

இரண்டாயிரம் ஆண்டுகளில் ஏராளமான இலக்கியங்கள் தோன்றி , மொழியை வளப்படுத்தியுள்ளன .

இலக்கியங்களைப் போலவே இலக்கண நூல்களும் தமிழில் மிகுதியாகத் தோன்றியுள்ளன .

நீண்ட வரலாற்றில் அரசாட்சி , பிறமொழிகளின் தாக்கம் , சமூக மாற்றம் , பண்பாடு , நாகரிகம் முதலியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக மொழியும் இலக்கியமும் மாறின .

எனவே இந்த மாற்றங்களை உள்வாங்கிப் புதிய இலக்கண நூல்கள் தோன்ற வேண்டியதும் அவசியம் ஆனது .

இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு காலம் தோறும் புதிய இலக்கண நூல்கள் தோன்றி வந்தன .

எனவே தமிழில் இலக்கண வளம் மிகுதியாக உள்ளது என்று கூறலாம் .

தமிழில் உள்ள சில இலக்கண நூல்கள் பற்றிச் சிறு குறிப்பு இங்கே தரப்படுகிறது .

1.3.1 தொல்காப்பியம்

தமிழில் மிகவும் பழைய இலக்கண நூலாக விளங்குவது தொல்காப்பியம் ஆகும் .

இது கி.மு. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது .

இதை இயற்றியவர் தொல்காப்பியர் ஆவார் .

இந்த நூலில் எழுத்து அதிகாரம் , சொல் அதிகாரம் , பொருள் அதிகாரம் என்ற மூன்று அதிகாரங்கள் உள்ளன .

ஒவ்வோர் அதிகாரத்திலும் ஒன்பது இயலாக இருபத்து ஏழு இயல்கள் உள்ளன .

தமிழில் உள்ள இலக்கண நூல்களிலேயே மிகவும் பெரியது தொல்காப்பியம் ஆகும் .

பொருள் அதிகாரத்தில் தமிழின் பொருள் இலக்கணமும் , யாப்பு இலக்கணமும் சொல்லப்பட்டுள்ளன .

தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில் உள்ள உவமை இயலில் அணி இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது .

இன்று தமிழில் உள்ள ஐந்திலக்கணங்களுக்கும் தோற்றுவாயாகத் தொல்காப்பியம் திகழ்கிறது .

தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் என்னும் அறிஞர் பாயிரம் எழுதியுள்ளார் .

இவர் தொல்காப்பியருடன் பயின்றவர் என்று அறிய முடிகிறது .

பாயிரம் என்பது தற்காலத்தில் எழுதப்படும் முன்னுரை போன்றது .

நிலந்தரு திருவின் பாண்டிய மன்னனின் அவையில் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேறியது என்று பாயிரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .

தொல்காப்பியம் இலக்கணத்தை மிகவும் விரிவாகக் கூறுகிறது .

சூத்திரங்கள் இலக்கண அமைப்பை விளக்கும் முறையில் அமைந்துள்ளன .

சிறு இலக்கண விதிகளைக்கூட விட்டுவிடாமல் மிகவும் நுட்பமாகத் தொல்காப்பியம் கூறுகிறது .

தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் , நச்சினார்க்கினியர் , சேனாவரையர் , தெய்வச்சிலையார் , கல்லாடர் , பேராசிரியர் ஆகியோர் உரை எழுதியுள்ளனர் .

1.3.2 நன்னூல்

பவணந்தி முனிவர் என்ற சமண சமய முனிவரால் இயற்றப்பட்டது நன்னூல் என்ற இலக்கண நூல் .

இது , எழுத்து இலக்கணம் , சொல் இலக்கணம் ஆகிய இரண்டு இலக்கணங்களையும் கூறுகிறது .

நன்னூல் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றியது .

நன்னூல் , இலக்கணத்தைச் சுருக்கமாகக் கூறும் நூல் ஆகும் .

நன்னூலில் முதலில் பாயிரம் என்று ஒரு பகுதி உள்ளது .

இதில் ஐம்பத்தைந்து சூத்திரங்கள் உள்ளன .

பாயிரப் பகுதியில் நூலின் இலக்கணம் , நூலைக் கற்றுத்தரும் ஆசிரியர் இலக்கணம் , கற்றுத்தரும் முறை , மாணவர்களின் குணங்கள் , மாணவர்கள் கற்கும் முறை ஆகியவை இடம் பெற்றிருக்கும் .

எழுத்து அதிகாரத்தில் ஐந்து இயல்கள் உள்ளன ; 202 சூத்திரங்கள் உள்ளன .

சொல்லதிகாரத்தில் ஐந்து இயல்கள் உள்ளன ; 205 சூத்திரங்கள் உள்ளன .

அருங்கலை விநோதன் என்ற பட்டப் பெயர் பெற்ற சீயகங்கன் என்ற அரசனின் வேண்டுகோளின்படி நன்னூல் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது .

தொல்காப்பியம் தோன்றிப் பல நூற்றாண்டுகள் சென்றுவிட்டதால் அதில் உள்ள மரபுகள் மாறிவிட்டன .

மேலும் தொல்காப்பியம் கடல் போலப் பரந்துவிரிந்த நூல் ஆகும் . எனவே நன்னூல் தோன்றிய பின்பு பரவலாக அனைவரும் நன்னூலையே கற்கத் தொடங்கினர் .

எனவே நன்னூலுக்குப் பல உரைகள் தோன்றின .

மயிலைநாதர் , சங்கர நமச்சிவாயர் , கூழங்கைத் தம்பிரான் , விசாகப் பெருமாளையர் , இராமானுச கவிராயர் , ஆறுமுக நாவலர் முதலிய பலர் நன்னூலுக்கு உரை எழுதியுள்ளனர் .

நன்னூல் தோன்றியபிறகு எழுத்து , சொல் இலக்கணங்களைக் கற்போர் நன்னூலையே விரும்பிப் படித்து வருகின்றனர் .

தமிழில் நாற்பதுக்கும் மேற்பட்ட இலக்கண நூல்கள் உள்ளன .

முக்கியமான இலக்கண நூல்களின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது .

நூல் ஆசிரியர் காலம் இலக்கண வகை

தொல்காப்பியம் தொல்காப்பியர் கி .

மு.4ஆம் நூற் .

எழுத்து , சொல் , பொருள்

நன்னூல் பவணந்தி முனிவர் 13ஆம் நூற் .

எழுத்து , சொல்

நேமிநாதம் குணவீர பண்டிதர் 12ஆம் நூற் .

எழுத்து , சொல்

இறையனார் களவியல் -- - 7ஆம் நூற் .

அகப்பொருள்

நம்பியகப் பொருள் நாற்கவிராசநம்பி 13ஆம் நூற் .

அகப்பொருள்

மாறனகப் பொருள் குருகைப்பெருமாள் கவிராயர் 16ஆம்நூற் .

அகப்பொருள்

புறப்பொருள் வெண்பாமாலை ஐயனாரிதனார் 9ஆம் நூற் .

புறப்பொருள்

யாப்பருங்கலம் அமிர்தசாகரர் 10ஆம் நூற் .

யாப்பு

யாப்பருங்கலக் காரிகை அமிர்தசாகரர் 10ஆம் நூற் .

யாப்பு

தண்டியலங்காரம் தண்டி 12ஆம் நூற் .

அணி

மாறன் அலங்காரம் குருகைப்பெருமாள் கவிராயர் 16ஆம் நூற் .

அணி

வீரசோழியம் புத்தமித்திரர் 11ஆம் நூற் , ஐந்திலக்கணம்

இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகர் 17ஆம் நூற் .

ஐந்திலக்கணம்

தொன்னூல் விளக்கம் வீரமாமுனிவர் 18ஆம் நூற் .

ஐந்திலக்கணம்

சுவாமிநாதம் சுவாமி கவிராயர் 18ஆம் நூற் .

ஐந்திலக்கணம்

அறுவகை இலக்கணம் தண்டபாணி சுவாமிகள் 19ஆம் நூற் .

ஐந்திலக்கணம்

முத்துவீரியம் முத்துவீர உபாத்தியாயர் 19ஆம் நூற் .

ஐந்திலக்கணம்

பன்னிரு பாட்டியல் -- - 10ஆம் நூற் .

பாட்டியல்

வெண்பாப் பாட்டியல் குணவீர பண்டிதர் 12ஆம் நூற் .

பாட்டியல்

இலக்கண விளக்கப் பாட்டியல் தியாகராச தேசிகர் 17ஆம் நூற் .

பாட்டியல்

எழுத்து இலக்கண அறிமுகம்

தமிழ் மொழியில் எழுத்து இலக்கணம் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது .

எழுத்து இலக்கணத்தில் , எழுத்தின் வகைகள் , பத இலக்கணம் , சந்தி இலக்கணம் ஆகியன முக்கியப் பகுதிகள் ஆகும் . 1.4.1 எழுத்தின் வகைகள்

தமிழ் எழுத்து இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது .

அவை ,

1.முதல் எழுத்து 2. சார்பு எழுத்து .

1. முதல் எழுத்து

மொழிக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் உயிர் எழுத்துகள் , மெய் எழுத்துகள் ஆகியவை முதல் எழுத்துகள் என்று கூறப்படும் .

உயிர் எழுத்துகள் குறில் , நெடில் என்றும் , மெய் எழுத்துகள் வல்லினம் , மெல்லினம் , இடையினம் என்றும் ஒலி அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன .

எழுத்துகளின் பயன்பாடு நோக்கிச் சுட்டு எழுத்து , வினா எழுத்து ஆகியனவும் குறிப்பிடப்பட்டுள்ளன .

2. சார்பு எழுத்து

முதல் எழுத்துகளைச் சார்ந்து வருபவை சார்பு எழுத்துகள் எனப்படுகின்றன .

உயிர்மெய் , ஆய்தம் , உயிரளபெடை , ஒற்றளபெடை , குற்றியலுகரம் , குற்றியலிகரம் , ஐகாரக்குறுக்கம் , ஒளகாரக்குறுக்கம் , மகரக்குறுக்கம் , ஆய்தக்குறுக்கம் ஆகிய பத்தும் சார்பு எழுத்துகள் ஆகும் .

எழுத்துகள் ஒலிக்கும் நேரத்தை மாத்திரை என்று கூறுவர் .

எந்த எந்த எழுத்துகள் எவ்வளவு நேரம் ஒலிக்கும் என்பதைத் தெளிவாக வரையறுத்து இலக்கண நூல்கள் கூறுகின்றன .

மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுவது மொழி .

மொழி , சொற்களால் உருவாகிறது .

சொல் , எழுத்துகளின் சேர்க்கை .

எழுத்தின் அடிப்படை ஒலி. மனித உடலில் இருந்து ஒலி எப்படித் தோன்றுகிறது என்பதைத் தமிழ் இலக்கண நூல்கள் விளக்குகின்றன .

மொழியின் அடிப்படை ஒலி என்பதால் ஒவ்வோர் எழுத்தும் எப்படிப் பிறக்கின்றன என்பது பற்றியும் இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ளது .

மூக்கு , உதடு , பல் , நாக்கு , அண்ணம் ஆகிய உறுப்புகளின் செயல்பாட்டால் உயிர் எழுத்துகளும் , மெய் எழுத்துகளும் எவ்வாறு தோன்றுகின்றன என்று இலக்கண நூல்கள் துல்லியமாகக் கூறுகின்றன .

தமிழில் எல்லா எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வருவதில்லை .

சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடிய எழுத்துகள் இவை என்று வரையறை செய்யப்பட்டுள்ளது .

அதுபோலவே சொல்லுக்கு இறுதியில் வரக்கூடிய எழுத்துகள் பற்றியும் வரையறை செய்யப்பட்டுள்ளது .

சொல்லுக்கு இடையில் ஒரு மெய் எழுத்துக்கு அடுத்து எந்த மெய் எழுத்து வரும் என்ற வரையறையும் தரப்பட்டுள்ளது .

1.4.2 பதவியல்

தமிழ் ஓர் ஒட்டு நிலை மொழியாகும் .

ஒட்டுநிலை மொழி என்பது ஒரு வேர்ச் சொல்லுடன் விகுதி , இடைநிலை , சாரியை முதலியன சேர்ந்து ஒரு சொல்லாகத் தோன்றுவது ஆகும் .

( இவற்றைப் பற்றி விரிவாகப் பின்னர் படிக்கலாம் ) தமிழில் முன் ஒட்டுகள் இல்லை ; பின் ஒட்டுகளே உள்ளன .

வேர்ச் சொல்லுடன் பல உருபுகளும் சேர்ந்து சொற்கள் உருவாகும் முறை இலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ளது .

எடுத்துக்காட்டாக

போ என்பது ஒரு வேர்ச் சொல்லாகும் .

இதனுடன் வ் என்ற எதிர் கால இடைநிலையும் , ஆன் என்ற ஆண்பால் ஒருமை வினைமுற்று விகுதியும் இணைந்து ,

போ + வ் + ஆன் = போவான்

என்று ஒரு சொல் உருவாகிறது .

இலக்கணத்தில் இதைப் பற்றிச் சொல்லும் பகுதிக்குப் பதவியல் என்று பெயர் .

1.4.3 சந்தி இலக்கணம்

தமிழில் எழுத்திலக்கணத்தில் முக்கியப் பகுதியாகவும் பெரிய பகுதியாகவும் இருப்பது சந்தி இலக்கணம் ஆகும் .

சந்தி இலக்கணம் என்பது இரண்டு சொற்கள் சேரும்போது ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய இலக்கணம் ஆகும் .

இலக்கண நூல்களை இயற்றிய ஆசிரியர்கள் சந்தி இலக்கணத்தைப் புணர்ச்சி இலக்கணம் என்று கூறுவர் .

எடுத்துக்காட்டாக

ஓடி + போனான் = ஓடிப்போனான்

என்று வரும் .

இங்கு இரண்டு சொற்கள் சேரும்போது , இரண்டுக்கும் இடையில் ப் என்ற மெய் எழுத்துத் தோன்றி இருக்கிறது .

இவ்வாறு இரண்டு சொற்கள் சேரும்போது பல வகையான மாற்றங்கள் ஏற்படும் .

1.4.4 சந்தி வகைகள்

இரண்டு சொற்கள் சேரும்போது ஏற்படும் மாற்றங்கள் நான்கு வகைகளில் அமையும் .

1. கதவு + மூடியது = கதவுமூடியது - இயல்பாக இருக்கிறது .

2. மாலை + பொழுது = மாலைப்பொழுது - ஒரு மெய்எழுத்துத் தோன்றியது .

3. மரம் + நிழல் = மரநிழல் - ஓர் எழுத்துக் கெட்டது ( அழிந்தது ) .

4. கல் + சிலை = கற்சிலை - ல் என்ற எழுத்து ற் என்ற எழுத்தாகத் திரிந்தது ( மாறியது ) .

எனவே , இரண்டு சொற்கள் சேரும்போது இயல்பாக வருதல் , தோன்றுதல் , திரிதல் , கெடுதல் ஆகிய நான்கு வகைகளிலும் வரும் என அறியலாம் . இங்கு இரண்டு சொற்கள் இருக்கின்றன .