எனவே இவற்றை மெய் எழுத்தில் தொடங்குகின்ற சொற்களாகவும் , உயிர் எழுத்தில் முடிகின்ற சொற்களாகவும் கொள்ள வேண்டும் .
நின்ற நெறியே உயிர்மெய் முதல் ஈறே
( நன்னூல் -109 )
( பொருள் : உயிர்மெய் எழுத்துகளில் மெய் எழுத்து முன்னும் , உயிர் எழுத்து பின்னும் இருக்கும்)
தனி உயிர் நெடில் எழுத்துகள் சொற்களாக அமைவதும் உண்டு .
எடுத்துக்காட்டு
ஆ ( பசு )
ஈ
ஏ ( அம்பு )
மொழி முதல் எழுத்துகள்
ஒரு சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகள் பற்றி இந்தப் பாடத்தில் காணலாம் .
சொல்லுக்கு முதலில் உயிர் எழுத்துகளோ மெய் எழுத்துகளோ வரும் .
சொல் என்பதும் , மொழி என்பதும் , பதம் என்பதும் ஒரே பொருள் தரும் சொற்கள் ஆகும் .
முதலில் சொல்லுக்கு முதலில் வரும் உயிர் எழுத்துகளைப் பற்றிப் பார்ப்போம் .
5.2.1 சொல்லுக்கு முதலில் வரும் உயிர் எழுத்துகள்
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும் .
எடுத்துக்காட்டு :
அம்மா அல்லி
ஆடு ஆறு
இடை இரண்டு
ஈடு ஈரம்
உடை உடல்
ஊர் ஊக்கம்
எறும்பு எலி
ஏணி ஏடு
ஐந்து ஐப்பசி
ஒன்று ஒட்டகம்
ஓடு ஓடம்
ஒளவையார் ஒளவியம் ( பொறாமை )
5.2.2 சொல்லுக்கு முதலில் வரும் மெய் எழுத்துகள்
இந்தப் பாடத்தின் முதல் பகுதியில் உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள் இயல்பாக மெய் எழுத்தில் தொடங்குகின்றன என்பது விளக்கப்பட்டது .
இப்போது சொல்லின் முதலில் வரும் மெய் எழுத்துகள் பற்றிக் காணலாம் .
மெய் எழுத்துகள் உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தே சொல்லின் முதலில் வரும் என்று கூறப்பட்டது .
மெய்எழுத்துகள் எந்தெந்த உயிர்எழுத்துகளுடன் சேர்ந்து சொல்லின் முதலில் வரும் என்றும் பின்வரும் பகுதியில் விளக்கப்படும் .
ஒரு மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகளை வருக்க எழுத்துகள் என்று கூறுவர் .
எடுத்துக்காட்டாக , க் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து உருவான க , கா , கி , கீ , கு , கூ , கெ , கே , கை , கொ , கோ , கௌ என்னும் பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகளையும் ககர வருக்கம் என்று கூறுவர் .
• க் என்னும் மெய்எழுத்து
ககர மெய் எழுத்து , பன்னிரண்டு உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தும் சொல்லுக்கு முதலில் வரும் .
கல் கரும்பு
கால் காகம்
கிளி கிழமை
கீரி கீரை
குயில் குரங்கு
கூடு கூத்து
கெட்ட கெடுதி ( அழிவு )
கேள்வி கேணி ( கிணறு )
கை கைத்தடி
கொடி கொம்பு
கோடு கோட்டை கௌதாரி
• ங் என்னும் மெய் எழுத்து
ஙகரம் .
அ , இ ஆகிய சுட்டு எழுத்துகளுக்குப் பின்னும் , யா , எ , ஆகிய வினா எழுத்துகளுக்குப் பின்னும் சொல்லுக்கு முதலில் வரும் .
அங்ஙனம் ( அப்படி )
இங்ஙனம் ( இப்படி )
எங்ஙனம் ( எப்படி )
யாங்ஙனம் ( எப்படி )
சுட்டு , யா , எகர வினா வழி , அவ்வை
ஒட்டி ஙவ்வும் முதல் ஆகும்மே ( 106 )
என்னும் நன்னூல் நூற்பா , ஙகர எழுத்து மொழிக்கு முதலில் வருவதை விளக்குகிறது .
• ச் என்னும் மெய்எழுத்து
சகரம் பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும் .
ஆனால் பழங்காலத்தில் அ , ஐ , ஒள என்னும் ழூன்று உயிர் எழுத்துகளுடனும் மொழிக்கு முதலில் வருவதில்லை .
அ என்னும் எழுத்துடன் சேர்ந்து சக்கரம் , சங்கு , சங்கம் முதலான சொற்கள் பழங்காலம் முதலே பயன்படுத்தப் படுகின்றன .
ஐ , ஒள ஆகிய உயிர் எழுத்துகளுடன் சகரம் சேர்ந்துவரும் சொற்கள் தமிழில் இல்லை .
சைகை , சௌக்கியம் முதலான பிறமொழிச் சொற்களே பயன்படுத்தப்படுகின்றன .
சக்கரம் சந்தனம்
சாலை சாறு
சிரிப்பு சிலந்தி
சீற்றம் சீப்பு
சுட்டு சுண்ணாம்பு
சூடு சூடாமணி
செறிவு செம்பு
சேறு சேரன்
சைகை சைவம்
சொல் சொட்டு
சோறு சோழன்
• ஞ் என்னும் எழுத்து
ஞகரம் அ , ஆ , எ , ஒ ஆகிய நான்கு உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும் .
ஞமலி ( நாய் ) ஞலவல் ( மின்மினிப் பூச்சி ) = ஞ் + அ
ஞாலம் ( உலகம் ) ஞாயிறு = ஞ் + ஆ
ஞெகிழி ( தீப்பொறி ) ஞெலிகோல் ( தீக்கடையும் கோல் ) = ஞ் + எ
ஞொள்குதல் ( இளைத்தல் ) = ஞ் + ஒ
அ , ஆ , எ , ஒவ்வொடு ஆகும் ஞம் முதல்
( நன்னூல் .
105 )
( பொருள் : ஞகர மெய் எழுத்து அ , ஆ , எ , ஒ , ஆகிய நான்கு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்)
• த் என்னும் மெய்எழுத்து
தகர மெய் எழுத்து , பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும் .
தரை தம்பி
தாமரை தாய்
திசை திணை
தீர்ப்பு தீமை
துடிப்பு துன்பம்
தூண் தூக்கம்
தென்னைமரம் தென்றல்
தேன் தேங்காய்
தைமாதம் தையல்
தொழில் தொட்டி தோட்டம் தோகை
தௌவை ( அக்காள் )
• ந் என்னும் மெய்எழுத்து
நகர மெய் எழுத்து , பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும் .
நன்றி நகை
நாடு நாள்
நிறம் நிழல்
நீர் நீளம்
நுங்கு நுனி
நூல் நூறு
நெல் நெஞ்சு
நேற்று நேர்மை
நையாண்டி ( கேலி ) நைதல்
நொடி நொறுங்குதல்
நோக்கம் நோட்டம்
நௌவி ( மான் )
• ப் என்னும் மெய்எழுத்து
பகரமெய் எழுத்து , பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும் .
பல் பழம்
பால் பாட்டு
பிடி பிரிவு
பீலி ( தோகை ) பீடு ( பெருமை )
புகழ் புல்
பூங்கா பூட்டு
பெட்டி பெண்
பேச்சு பேழை ( பெட்டி )
பை பையன்
பொன் பொங்கல்
போட்டி போர்
பௌத்தர் ( புத்த சமயத்தவர் )
• ம் என்னும் மெய் எழுத்து
மகர மெய் எழுத்து , பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும் .
மண் மக்கள்
மான் மாடு
மின்னல் மிதியடி
மீன் மீண்டும்
முரசு முடி
மூங்கில் மூன்று
மெய் மெழுகு
மேடு மேளம்
மை மையம்
மொழி மொட்டு
மோதிரம் மோசடி
மௌனம் மௌவல் ( முல்லை மலர் )
• ய் என்னும் மெய்எழுத்து
யகர மெய் எழுத்து அ , ஆ , உ , ஊ , ஓ , ஓள ஆகிய ஆறு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும் .
யகர மெய் எழுத்து , பழங்காலத்தில் ஆ ( ய் + ஆ = யா ) என்னும் எழுத்துடன் மட்டுமே பயன்படுத்தப்பட்டது .
யவனர் யவை ( நெல்வகை )
யானை யாழ்
யுகம் ( கால அளவு ) யூகி ( அறிவாளி )
யோகம் ( இணைந்து நிற்றல் )
யௌவனம் ( இளமை )
அ , ஆ , உ , ஊ , ஓ , ஒள யம் முதல்
( நன்னூல் .
104 )
( பொருள் : அ , ஆ , ஊ , ஓ , ஒள ஆகிய உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து யகர மெய் சொல்லுக்கு முதலில் வரும்)
• வ் என்னும் மெய் எழுத்து
வகர மெய் எழுத்து அ , ஆ , இ , ஈ , எ , ஏ , ஐ , ஒள ஆகிய எட்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும் .
வணக்கம் வரிசை
வால் வாய்
வில் விண்
வீடு வீண்
வெற்றி வெண்மை
வேல் வேங்கை
வைகை வையகம் ( உலகம் )
வௌவால்
உ , ஊ , ஒ , ஓ அலவொடு வம் முதல்
( நன்னூல் - 103 )
( பொருள் : வகர மெய் எழுத்து உ , ஊ , ஒ , ஓ ஆகிய நான்கு தவிர மற்ற ( அ , ஆ , இ , ஈ , எ , ஏ , ஐ , ஒள ) எட்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்)
5.2.3 சொல்லுக்கு முதலில் வராத மெய் எழுத்துகள்
க , த , ந , ப , ம , ச , ஞ , ய , வ , ங என்னும் பத்து மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும் என்பதை அறிந்தோம் .
இவை தவிர உள்ள ட , ண , ர , ல , ழ , ள , ற , ன என்னும் எட்டு மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வருவதில்லை .
ஆனால் இந்த எழுத்துகளைக் குறிக்கும் போது இவை மொழிக்கு முதலில் வரும் .
‘ ட‘ என்னும் எழுத்து , ‘ ண‘ என்னும் எழுத்து என்று எழுத்தைக் குறிப்பிடும் போது இவையும் முதலில் வருகின்றன .
தமிழ்மொழி பேசும் மக்கள் பிறமொழி பேசுகிறவர்களுடன் கலந்து பழகி வாழ்கின்றனர் .
அவ்வாறு அவர்களுடன் பழகும்போது பிறமொழிச் சொற்களையும் பயன்படுத்துகிறார்கள் .
அப்படிப் பேச்சுவாக்கில் தமிழ் மொழியில் நுழைந்த பிறமொழிச் சொற்கள் பலவும் தமிழ்மொழியில் பயன்பாட்டில் உள்ளன .
அவற்றையும் தமிழ் மக்கள் பயன்படுத்துகிறார்கள் .
அப்படிப்பட்ட பிறமொழிச் சொற்களில் ட , ண , ர , ல , ற என்னும் ஐந்து மெய்எழுத்துகளும் முதலில் வருகின்றன .
ராமன்
லலிதா
முதலான பிறமொழிப் பெயர்களைத் தமிழில் பயன்படுத்துகிறோம் .
இவ்வாறு பிறமொழிப் பெயர்களைத் தமிழ்மொழியில் பயன்படுத்தும் போது அவற்றைத் தமிழ்மொழியின் இயல்புக்கு ஏற்பவே காலங்காலமாகப் பயன்படுத்தி வருகிறோம் .
ரகர வருக்க எழுத்துகளும் லகர வருக்க எழுத்துகளும் தமிழ்மொழியில் சொல்லுக்கு முதலில் வருவதில்லை என்பதை அறிந்து அவற்றுக்கு முன் ‘ இ ’ என்னும் எழுத்தைச் சேர்த்து அப்பெயர்களை எழுதுகிறோம்
ராணி இராணி
ரவி இரவி
ராமன் இராமன்
லலிதா இலலிதா
லாபம் இலாபம்
லாடம் இலாடம்
மேலே ‘ இ ’ என்னும் எழுத்தைச் சேர்த்தது போல் ‘ அ ’என்னும் எழுத்தைச் சேர்த்துப் பயன்படுத்துவதும் உண்டு .
ரங்கன் அரங்கன்
இ , அ என்னும் எழுத்துகளைச் சேர்த்துப் பயன்படுத்துவதுபோல் ‘ உ ’ என்னும் எழுத்தைச் சேர்த்தும் பிறமொழிப் பெயர்களைப் பயன்படுத்துவது உண்டு .
ரோம் உரோம்
ரோமம் உரோமம்
ரொட்டி உரொட்டி
இவ்வாறு பிறமொழியிலிருந்து பெற்றுப் பயன்படுத்தும் சொற்கள் அனைத்தும் பெயர்ச் சொற்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும் .
அந்தப் பிறமொழிப் பெயர்களையும் நம் தமிழ் மொழியின் தன்மைக்கு ஏற்பவே அமைத்துப் பயன்படுத்துகிறோம் .
பிற மொழிப் பெயர்களைத் தேவை கருதிப் பயன்படுத்துவதைப் போல் பிறமொழி வினைச் சொற்களையும் பிறசொற்களையும் பயன்படுத்தக் கூடாது . • ஒலிக்குறிப்புச் சொற்கள்