10

எழுத்தின் பிறப்பும் பத இலக்கணமும்

பாடம் - 1

எழுத்துகளின் பிறப்பு – பொது அறிமுகம்

1.0 பாட முன்னுரை

தமிழ் மொழியில் எழுத்துகள் இருவகைப்படும் என்றும் அவை முதல் எழுத்துகள், சார்பு எழுத்துகள் என்றும் நீங்கள் படித்திருப்பீர்கள். இந்த எழுத்துகள் ஒவ்வொன்றும் இரு வடிவங்களைக் கொண்டவை; அவை ஒலிவடிவம், வரிவடிவம் என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழ் எழுத்துகளின் வரிவடிவம் அமையும் இயல்பையும் முந்தைய பாடங்களின் வழி அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் தமிழ் எழுத்துகள் ஒலிவடிவம் பெறுவதன் தன்மை விளக்கப்படுகிறது.

எழுத்துப் பிறப்பு – பொது விளக்கம்

ஒவ்வோர் எழுத்தும் பேச்சொலியாக இருந்து, பின்பே எழுத்து ஒலியாகப் பதிவு செய்யப்படுகின்றது. எனவே பேச்சிற்கு அடிப்படையாக அமையும் ஒலிகள் எவ்வாறு உருவாயின என்பதை இலக்கண நூலார் ஆராய்ந்து உள்ளனர். உடலில் இருந்து தோன்றி மேலே எழும் காற்று, எழுத்தொலியாக வெளிப்படும் நிகழ்வு எழுத்துப் பிறப்பு எனப்படும். இத்தகைய எழுத்து ஒலிகள் பிறப்பதற்கு உயிரின் முயற்சியும் உறுப்புகளின் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றன.

1.1 தொல்காப்பியரின் விளக்கம்

தமிழ் மொழியில் இன்று வரை கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம். இதனை இயற்றியவர் தொல்காப்பியர். இந்நூல் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இந்நூல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் தமிழில் உள்ள ஐந்து இலக்கணங்களையும் விளக்குகின்றது. இத்தகைய பழமையான தமிழ் இலக்கண நூல், எழுத்துகளின் பிறப்புப் பற்றி ஆராய்ந்து கூறியிருப்பது சிறப்புடையதாகும்.

1.1.1 எழுத்தொலி பிறத்தல் எழுத்தை உச்சரிக்க முயலும் ஒருவரின் கொப்பூழில் (உந்தி) இருந்து காற்று மேல் நோக்கி எழுகின்றது. இவ்வாறு எழும் காற்று அவரது தலை, கழுத்து, நெஞ்சு (மார்பு) ஆகிய இடங்களில் சென்று தங்கி (தொட்டு) நிற்கும். பின்னர், தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய இந்த மூன்று உறுப்புகளுடன், பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் (மேல்வாய்) ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து இந்த எட்டு உறுப்புகளின் பொருத்தமான முயற்சியின் விளைவாக வெவ்வேறு எழுத்து ஒலிகள் பிறக்கின்றன. தமிழில் உள்ள எல்லா எழுத்து ஒலிகளும் இந்த முறையிலேயே பிறக்கின்றன. இதுவே எழுத்துப் பிறப்பின் பொதுவான இலக்கணம் ஆகும். (தொல்காப்பியம். எழுத்ததிகாரம், 83)

வெவ்வேறு ஒலிகள்

ஆனால், எல்லா எழுத்தொலியும் தோன்றுவதற்கு இந்த எட்டு உறுப்புகளின் முயற்சியும் ஒத்துழைப்பும் தேவைப்படுவது இல்லை. தேவைப்படும் உறுப்புகள் பொருந்தி இயங்கும் தன்மைக்கேற்பவே வெவ்வேறு ஒலிகள் தோன்றும். ஒவ்வோர் எழுத்தொலியும் தோன்றுவதற்கு வெவ்வேறு உறுப்புகளின் ஒத்துழைப்புக் காரணமாக அமைகின்றது.

1.1.2 தேவைப்படும் முயற்சி ஒலியை எழுப்ப நினைக்கும் ஒருவர் முதலில் செய்ய வேண்டியது முயற்சி ஆகும். இந்த முயற்சியை இலக்கண ஆசிரியர்கள் ‘உயிரின் முயற்சி’ என்று அழைக்கின்றனர். ஒலியை எழுப்பக் கருதிய ஒருவரின் உயிர்ப்புத் தன்மையே அடுத்தடுத்த முயற்சிக்குக் காரணமாக அமைகிறது. அதனைத் தொடர்ந்து உறுப்புகளின் ஒத்துழைப்புகளுக்கும் அதுவே காரணமாகிறது. எனவே எழுத்து ஒலிகள் தோன்றுவதற்கு மனித முயற்சி மிகவும் இன்றியமையாததாகும்.

இவ்வகையில், தொல்காப்பியரின் கருத்துப்படி, உயிரின் முயற்சியால் கொப்பூழில் இருந்து காற்று எழுகின்றது. இக்காற்று மேல்நோக்கிச் செல்கின்றது. இம்முயற்சிக்கு உறுப்புகள் துணை செய்கின்றன. இந்த உறுப்புகளில் அக்காற்று சென்று பொருந்துகின்றது. மேல்நோக்கி எழும் இக்காற்று பொருந்தும் உடல் உறுப்புகளைக் குறிப்பிடும் போது, தலை, கழுத்து, நெஞ்சு என்ற வரிசையில் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

1.1.3 ஒத்துழைக்கும் உறுப்புகள் எழுத்தொலிகள் தோன்றுவதற்குத் தேவைப்படும் உறுப்புகளாகத் தொல்காப்பியர் எட்டு உறுப்புகளைக் குறிப்பிடுகின்றார். இந்த எட்டு உறுப்புகளை இரண்டு பிரிவாகப் பகுத்துக் காணலாம். அவை,

(1)காற்றுப் பொருந்தும் உறுப்புகள்.

(2)ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்கும் உறுப்புகள்

என்பன.

காற்றுப் பொருந்தும் உறுப்புகள்:

காற்றுப் பொருந்தும் உறுப்புகள் 3 ஆகும். அவை,

தலை,

கழுத்து,

நெஞ்சு.

என்பன.

ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்கும் உறுப்புகள்:

எழுத்தொலிகள் தோன்றுவதற்கு ஒன்றுடன் ஒன்று இயைந்து ஒத்துழைக்கும் உறுப்புகள் எட்டு ஆகும். அவை, முதலில் கூறப்பட்ட தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய மூன்றுடன்,

பல்,

இதழ்,

நாக்கு,

மூக்கு,

அண்ணம் ஆகிய ஐந்தும், சேர்ந்து 8 ஆகும்.

1.2 நன்னூலாரின் விளக்கம்

இதுவரை, தொல்காப்பியம் எழுத்தொலிகளின் பிறப்புப் பற்றித் தெரிவித்த கருத்துகளைக் கண்டோம். இனி, இதுபற்றி நன்னூல் கூறும் கருத்துகளையும் காண்போம். நன்னூல் 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கண நூல். இது, எழுத்து, சொல் ஆகிய இரு இலக்கணங்களை மட்டுமே விளக்குகின்றது. தமிழ் இலக்கணம் கற்க விரும்புவோர் முதலில் இந்நூலில் இருந்து கற்கத் தொடங்குவது மரபு.

1.2.1. எழுத்தொலி பிறத்தல் நன்னூல், ஒவ்வோர் எழுத்தும் ஒலியாக வெளிப்படுவதற்கு இரண்டு நிலைகள் தேவைப்படுகின்றன என்று தெரிவிக்கின்றது. அவை,

(1)உயிரின் முயற்சி

(2)உடல் உறுப்புகளின் ஒத்துழைப்பு

ஆகியன.

குறைபாடில்லாத நிறைந்த, உயிரின் முயற்சியினால் உள்ளே இருக்கும் காற்றானது மேலே எழும்பி நிற்கும்; அவ்வாறு எழுகின்ற காற்று, செவிகளுக்குக் கேட்கும்படியான அணுக்கூட்டமாகத் திரண்டு, மார்பு, கழுத்து, தலை, மூக்கு என்ற நான்கு இடங்களில் பொருந்தும்; பின்பு இதழ், நாக்கு, பல், அண்ணம் ஆகிய நான்கு உறுப்புகளின் இயக்கத்தினாலும் வேறுவேறு எழுத்துகளுக்கு உரிய ஒலிகள் தோன்றுகின்றன. இவ்வாறே எழுத்துகள் ஒலிவடிவம் பெறுகின்றன. இதனை எழுத்துகளின் பிறப்பு என்று கூறலாம் என்று நன்னூல் தெரிவிக்கின்றது.

1.2.2 தேவைப்படும் முயற்சி எழுத்தொலி தோன்ற முதலில் தேவைப்படுவது ஒருவரின் முயற்சி ஆகும். இந்த முயற்சி உயிரின் முயற்சியாக இருக்க வேண்டும். உயிர்ப்புத் தன்மை நிறைந்த ஒருவரின் முயற்சியாக இருக்க வேண்டும். முயற்சியில் முழுமை இல்லாமல் இருந்தால் நினைத்த ஒலி எழும்பாது. எனவே உயிரின் முயற்சி என்று குறிப்பிடாமல் நன்னூல் ஆசிரியர் இங்குத் தேவைப்படும் முயற்சியை ‘நிறை உயிர் முயற்சி’ என்று குறிப்பிடுகின்றார். இத்தொடர், ஒலி எழுப்ப நினைப்பவரின் முயற்சிக்கு நிறைந்த உயிர் முயற்சிதான் தேவை என்பதைச் சுட்டுகின்றது. இத்தகைய முயற்சியின் விளைவாகவே உந்தியில் இருக்கும் காற்று மேல்நோக்கி எழும். அவ்வாறு எழும் காற்று உடலின் நான்கு உறுப்புகளில் சென்று தங்கும். இந்த நான்கு உறுப்புகளையும் எழுத்துஒலிகள் பிறப்பதற்கு முயற்சி செய்யும் உறுப்புகள் எனலாம். அவை,

(1)மார்பு,

(2)கழுத்து,

(3)தலை (உச்சி)

(4)மூக்கு

என்பன.

1.2.3 ஒத்துழைக்கும் உறுப்புகள் எழுத்தொலிகள் தோன்றுவதற்கு, சில உறுப்புகளின் முயற்சியுடன் வேறு சில உறுப்புகளின் ஒத்து இயங்கும் தன்மையும் தேவைப்படுகின்றது. சில உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டால்தான் எழுத்தொலிகள் பிறக்கும். அவ்வகையில் ஒத்துழைக்கும் உறுப்புகளை நன்னூல் ஆசிரியர் பட்டியலிட்டுக் காட்டுகின்றார். அவை,

(1)இதழ்

(2)நாக்கு

(3)பல்

(4)அண்ணம்

என்பன ஆகும்.

இந்த நான்கு உறுப்புகளில் எந்த உறுப்பின் முயற்சியால் ஓர் எழுத்தொலி பிறக்கின்றதோ, அந்த எழுத்திற்கு அந்த உறுப்பு பிறப்பிடம் என்று அழைக்கப்படுகின்றது. எனவே உறுப்புகளின் ஒத்துழைக்கும் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு எழுத்தொலிகள் தோன்றுகின்றன. ஓர் எழுத்தொலி பிறக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகளின் ஒத்துழைப்பும் தேவையாக அமைவதும் உண்டு.

நிறை உயிர் முயற்சியின் உள்வளி துரப்ப

எழும் அணுத்திரள் உரம், கண்டம், உச்சி

மூக்கு உற்று, இதழ், நாப் பல் அணத் தொழிலின் வெவ்வேறு எழுத்தொலியாய் வரல் பிறப்பே.

என்பது நன்னூல் நூற்பா (73). இதில், உரம் என்பது மார்பையும், கண்டம் என்பது கழுத்தையும் குறிக்கும். அணம் என்பது அண்ணம், (மேல்வாய்) என்று பொருள்படும்.

1.3 எழுத்துப் பிறப்பில் தொல்காப்பியமும் நன்னூலும்

எழுத்தொலிகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவித்த கருத்துகளை அறிந்து கொண்டீர்கள். அவற்றைத் தனித்தனியே பார்த்தபோது அவ்விரு நூல்கள் தெரிவித்த கருத்துகளுக்கு இடையில் சில ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் இருப்பதைக் கண்டிருப்பீர்கள். இப்போது, அந்த ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் தொகுத்துக் காண்போம். இவ்வாறு ஒப்பிட்டுக் காண்பது, நாம், இக் கருத்துகளை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ளத் துணை செய்யும்.

1.3.1 ஒற்றுமை (1)இரண்டு இலக்கண நூலாசிரியர்களும் ஓர் எழுத்துப் பிறப்பதற்கு உந்தியில் (கொப்பூழ்) இருந்து காற்றுத் தோன்றி மேலே எழும்ப வேண்டும் என்கின்றனர்.

(2)எழுத்துகள் பிறப்பதற்கு ஒத்துழைக்கும் உறுப்புகளில் ஒன்று மற்றொன்றோடு இயைந்து இயங்கும் தன்மைக்கேற்ப வேறு வேறு ஒலிகள் பிறக்கின்றன என்று இருவரும் உரைக்கின்றனர்.

(3)இரு நூலாரும், அடிப்படையில் எழுத்துஒலிகள் பிறப்பதற்கு அடிப்படையான உறுப்புகளாகக் குறிப்பிடும் உறுப்புகளின் மொத்த எண்ணிக்கை எட்டு ஆகும்.

1.3.2 வேற்றுமை (1)தொல்காப்பியர் காற்று மேலே எழும்பித் தங்கும் இடங்களாக மூன்று உறுப்புகளை மட்டுமே குறிப்பிடுகின்றார். அவை முறையே தலை, கழுத்து, நெஞ்சு என்பன.

நன்னூலார் காற்று மேலே எழுந்து தங்கும் இடங்களாக நான்கு உறுப்புகளைச் சுட்டுகிறார். அவை முறையே, நெஞ்சு, கழுத்து, உச்சி, மூக்கு என்பன.

(2)உறுப்புகளைக் குறிப்பிடுகையில் தொல்காப்பியர் மேலே இருந்து கீழே இறங்கி வருவது போல் தலை, கழுத்து, நெஞ்சு என்று குறிப்பிடுகின்றார்.

நன்னூலார் காற்று கீழிருந்து மேலே எழும்பும் அதே இயல்பான நிலையில் மார்பு, கழுத்து, உச்சி, மூக்கு என்ற வரிசையில் அமைத்துள்ளார்.

(3)எழுத்தொலிகள் பிறக்கப் பயன்படும் உறுப்புகளைத் தொல்காப்பியர் எட்டு என்று விரித்துள்ளார். காற்றுத் தங்கும் இடங்களான மூன்றையும் சேர்த்துக் குறிப்பிடுகின்றார்.

நன்னூலார், இந்த உறுப்புக்களில் இதழ், நாக்கு, பல், அண்ணம் என்ற நான்கு உறுப்புகளை மட்டுமே எழுத்துப் பிறப்பதற்கு இயங்கும் உறுப்புகளாகக் குறிப்பிடுகின்றார்.

1.4 எழுத்துப் பிறப்பும் மொழியியலும்

எழுத்தொலிகளின் பிறப்புப் பற்றி இலக்கண நூல்கள் தந்த விளக்கங்களை விரிவாகக் கண்டோம். எழுத்தொலிகள் பற்றி மொழிநூல் அறிஞர்கள் மிக விரிவாக ஆராய்ந்துள்ளனர். மொழிநூல் அறிஞர்கள் இது குறித்து ஆராய்ந்து விளக்கங்களை வெளியிட்ட பின்னரே, இத்துறையில் பல உண்மைகள் வெளிப்பட்டன என்று கூறலாம். எனவே எழுத்தொலிகள் பிறப்புப் பற்றி மொழிநூல் அறிஞர்கள் தெரிவிக்கும் கருத்துகளையும் இங்கு ஒப்பிட்டுக் காண்பது பொருத்தம் உடையது.

1.4.1 மரபு ஒரு மொழிக்கு இலக்கணம் வகுக்கும் மரபுவழி இலக்கண ஆசிரியர்கள் மொழியின் எழுத்து வடிவத்திற்கே முதன்மை தருவர். அதனை விளக்கிக் கூறுவர். ஏட்டில் இலக்கிய வடிவம் பெற்ற எழுத்து வடிவத்தினை ஆராய்ந்து அதன் நுட்பத்தை வெளிப்படுத்துவர். மொழியின் பேச்சு வடிவத்தை ஆய்வுக்கு ஏற்றுக் கொண்டு அதனை விளக்குவது மரபுவழி இலக்கண நூல்களில் காணப்படுவது இல்லை. இந்த நிலை உலக மொழிகள் அனைத்திற்கும் பொதுவானதாகும்.

1.4.2 மொழியியல் ஒரு மொழியை அறிவியல் பார்வையோடு அணுகவேண்டும் என்ற கருத்து எழுந்த போது ‘மொழியியல்’ என்ற பிரிவு உருவானது. மொழியியல் துறையில் ஈடுபடும் அறிஞர்கள் ஒரு மொழியின் எழுத்துவடிவத்தை விட அதன் பேச்சு வடிவத்தையே தங்கள் ஆய்விற்கு ஆதாரங்களாக எடுத்துக் கொண்டனர். மொழியியலார் பேச்சு மொழிதான் ஒரு மொழியின் உண்மையான இயல்பினை எடுத்துரைக்கும் என்று கருதுகின்றனர். இதனால் பேச்சொலி எழுவதற்குக் காரணமாக இருக்கும் மொழியின் ஒலி வடிவத்தில் தங்கள் ஆர்வத்தைச் செலுத்தினர். எனவே மொழியின் ஒலி வடிவத்திற்கு முதன்மை தரும் நிலையில் மொழியியல் ஆய்வுகள் எழுந்தன.

1.4.3 மொழியியல் உண்மைகள் பேச்சு ஒலிகளை ஆய்வு செய்ய முற்பட்டவர் மொழியியல் அறிஞர்கள். இந்த ஆய்வு, பேச்சு ஒலிகள் தோன்றுவதற்குக் காரணமாக அமையும் உடல் உறுப்புகளையும் ஆய்வு செய்யத் தூண்டியது. எனவே எந்த ஒலி தோன்றுவதற்கு எந்த உறுப்பின் முயற்சியும் ஒத்துழைப்பும் பயன்படுகின்றது என்பதை ஆய்வு செய்து கண்டனர். அந்த ஆய்வின்படி பல உண்மைகளை வெளியிட்டனர். இந்த மொழியியல் ஆய்வுகள் எல்லாம் 19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டிலும் இடம்பெற்றன. மேனாட்டு அறிஞர்கள் 19-ஆம் நூற்றாண்டில் தொடங்கி 20-ஆம் நூற்றாண்டில் இதில் மிகவும் முனைந்து ஈடுபட்டனர். இவ்வறிஞர்கள் வெளிப்படுத்திய உண்மைகளைத் தொல்காப்பியமும் நன்னூலும் முன்பே எடுத்துரைக்கக் காணலாம்.

எனவே, தமிழ் இலக்கணம் அறிவியல் முறைப்படி அமைந்தது என்பது இதனால் வெளிப்படுகின்றது. 2500 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய தொல்காப்பியம் இன்றைய மொழியியலாரின் கருத்துகளை அன்றே விளக்கி இருப்பது தமிழ் மொழியின் சிறப்புக்குச் சான்றாக உள்ளது.

1.5 தொகுப்புரை

இந்தப் பாடத்தில் எழுத்துப் பிறப்பு என்பது எழுத்தொலிகளின் பிறப்பு என்பதைத் தெரிந்து கொண்டோம். எழுத்தொலிகள் பிறப்பதற்கு உயிரின் முயற்சியும் உடல் உறுப்புகளின் ஒத்துழைப்பும் தேவைப்படுவன என்று தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் விளக்கங்களைக் கண்டோம். எழுத்தொலிகள், உந்தியில் இருந்து மேல் நோக்கி எழும் காற்று தலை, கழுத்து, மார்பு ஆகிய உறுப்புகளில் தங்கி, பல், இதழ், நாக்கு, அண்ணம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பிறக்கின்றன. தொல்காப்பியமும் நன்னூலும் எழுத்தொலிகளின் பிறப்பினை விளக்கி இருந்தாலும் அவற்றிடையே ஒற்றுமை வேற்றுமைகள் இருப்பது ஒப்பிட்டுக் காட்டப்பெற்றது. மொழியை அறிவியல் முறையில் ஆராய்ந்த மொழிநூல் அறிஞர்கள் எழுத்துகளின் பிறப்பினை விளக்கியிருப்பதும் எடுத்துக்காட்டப்பட்டது. தமிழ் இலக்கண நூல்கள் மொழியியல் என்னும் தனித்துறை வளராத காலத்தில் எழுத்துகளின் பிறப்பினை அறிவியல் முறைப்படி விளக்கியிருப்பதையும் இப்பாடத்தின் வழி அறிந்து கொண்டோம்.

பாடம் - 2

உயிரெழுத்துகளின் பிறப்பு

2.0 பாட முன்னுரை

சென்ற பாடத்தில் தமிழ்மொழியில் எழுத்துஒலிகளின் பிறப்புப் பற்றிய பொதுவான இலக்கணத்தை அறிந்து கொண்டீர்கள். எழுத்துஒலிகள் பிறக்கத் தேவைப்படும் முயற்சியும் உடல் உறுப்புகளின் ஒத்துழைப்பும் எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் நன்கு விளங்கிக் கொண்டிருப்பீர்கள். தமிழ் இலக்கண நூல்கள் எழுத்துஒலிகளின் பிறப்பு இலக்கணத்தை அறிவியல் முறைப்படி ஆராய்ந்து விளக்கியிருப்பதையும் தெரிந்து கொண்டீர்கள். இந்தப் பாடத்தில் உயிர் எழுத்தொலிகள் பிறக்கும் முறை குறித்து விரிவாகக் காணலாம்.

2.1. உயிர்எழுத்துகளின் பிறப்பு - பொது

தமிழில் உள்ள எழுத்துகளை முதல் எழுத்துகள், சார்பு எழுத்துகள் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்துக் காணும் முறையை நீங்கள் முன்பே அறிந்திருப்பீர்கள். இந்த முதல் எழுத்துகள் முப்பதில் முதலில் வருவன உயிர் எழுத்துகள் பன்னிரண்டு ஆகும். இவை உயிர் போலத் தனித்து இயங்கும் தன்மை உடையவை ஆதலால் உயிர்எழுத்துகள் என்று பெயர் பெற்றன. எனவே எழுத்துகளின் பிறப்பிற்கான இலக்கணத்தைக் காணும் போது உயிர்எழுத்துகளின் பிறப்பினை முதலில் அறிவது மிகவும் பொருத்தமானது.

2.1.1 தொல்காப்பியர் கருத்து உயிர்எழுத்துகளின் பொதுப் பிறப்புப் பற்றித் தொல்காப்பியர் கூறும் கருத்துகளை முதலில் காண்போம். முந்தைய பாடத்தில் எழுத்துகளின் பிறப்பிற்குக் கூறப்பட்ட பொதுவான அடிப்படை இலக்கணம் உயிரெழுத்துகளின் பிறப்பிற்கும் பொருந்தும்.

உயிர்எழுத்துகள் பன்னிரண்டும் மிடற்றில் (கழுத்தில்) பிறக்கும் காற்றினால் உருவாகி ஒலிப்பன. தம்நிலையில் இருந்து மாறாமல் இருக்கும் உயிர்எழுத்துகள் மட்டுமே கழுத்தில் இருந்து தோன்றுவன. ‘தம்நிலையில் இருந்து திரியாமல்’ இருப்பது என்னவெனில், ஓர் உயிர்எழுத்து எந்தவித மாற்றமும் பெறாமல் இருப்பது ஆகும். சில உயிர் எழுத்துகள், எடுத்துக்காட்டாக ‘இகர’மும் ‘உகர’மும், குற்றியலிகரமாகவும், குற்றியலுகரமாகவும் வருகின்ற போது, அவை தம்நிலையில் இருந்து திரிந்து (மாறி) விடுகின்றன. அவ்வாறு இல்லாமல், இயல்பாக வருகின்ற உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மிடற்றில் பிறக்கும் காற்றினால் எழுத்துஒலிகளாகத் தோன்றுகின்றன என்பது தொல்காப்பியர் கருத்தாகும். இதனை,

அவ்வழிப்,

பன்னீ ருயிருந் தந்நிலை திரியா

மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்

(எழுத்து. 84)

(தந்நிலை = தம்நிலை; மிடறு = கழுத்து; வளி = காற்று)

என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குவதைக் காணலாம்.

2.1.2 நன்னூலார் கருத்து இனி, உயிர்எழுத்துகளின் பிறப்புப் பற்றி நன்னூல் ஆசிரியர் கூறும் கருத்துகளைத் தெரிந்து கொள்ளலாம்.

நன்னூல் ஆசிரியரும் எழுத்துகள் பிறப்பதற்குக் கூறப்பட்ட பொதுவான இலக்கணத்தின் அடிப்படையில்தான் உயிர்எழுத்துகளும் பிறக்கும் என்கிறார். அந்த வழியில் உயிர்எழுத்துகள் பிறப்பதற்கு இடம் மிடறு ஆகும் (கழுத்து) என்பது அவர் கருத்து. நன்னூல் உயிர்எழுத்துகள் பிறப்பதற்கு உரிய இடத்தைச் சொல்லுகின்ற இந்த இடத்தில், மெய்யெழுத்துகள் பிறப்பதற்கான இடங்களையும் சேர்த்துச் சொல்கின்றது.

நூற்பா

அவ்வழி,

ஆவி இடைமை இடம் மிட றுஆகும்

மேவு மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை

(நன்னூல். 74)

(ஆவி = உயிர்; இடைமை = இடையினம்; மென்மை = மெல்லினம்; உரம் = நெஞ்சு; வன்மை = வல்லினம்)

‘அவ்வழி’ என்பது முந்தைய பாடத்தில் சொல்லப்பட்ட ‘எழுத்துப் பிறப்புக்கான பொது இலக்கணத்தின்படி’ எனப் பொருள்தரும்.

இந் நூற்பா உயிர்எழுத்துகளுக்கும் மெய்எழுத்துகளுக்கும் (முதல் எழுத்துகளுக்குப்) பிறப்பிடம் கூறுவதாக அமைகின்றது. எனினும் நாம் இந்தப் பாடத்தில் உயிர்எழுத்துகள் பிறப்பின் இலக்கணம் பற்றி மட்டும் காண்போம்.

நன்னூல், உயிர்எழுத்துகளில் ‘இயல்பாக அமையும் உயிர்’ என்றும் ‘தந்நிலை திரியும் உயிர்’ என்றும் வேறுபடுத்திக் கூறவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இப்போது, உயிர்எழுத்துகளின் பொதுவான பிறப்பிடம் குறித்த செய்திகளைத் தொகுத்துக் காணலாம்.

(1)உயிர்எழுத்துகள், எழுத்துஒலிகளின் பொதுவான பிறப்பிட இலக்கணத்தின் படியே பிறப்பன.

(2)உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் கழுத்து ஆகும்.

(3)தனியே வருகின்ற உயிர்எழுத்தும், எந்தவித மாற்றமும் அடையாத உயிர்எழுத்தும் மட்டுமே கழுத்தில் இருந்து தோன்றும். தன் மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கும் உயிரொலிகளுக்கு இந்தப் பிறப்பிட விதி பொருந்தாது.

2.2 பிறப்பிடம் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும்

உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளில் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளைத் தொகுத்துக் காண்போம். இச்செய்திகளை மேலும் நன்கு விளங்கிக் கொள்வதற்கு இது பயன்படும்.

2.2.1 ஒற்றுமை முதலில், தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளில் காணப்படும் ஒற்றுமைகளைக் காண்போம்.

(1)இரண்டு நூல்களும், எழுத்துஒலிகள் பிறப்பதற்குத் தேவைப்படும் பொதுவான முயற்சியே, உயிர்எழுத்துகள் பிறப்பதற்கும் தேவைப்படுவது என்பதை உரைக்கின்றன.

(2)இவ்விரு நூல்களும் உயிர்எழுத்துகள் பிறக்கின்ற இடமாகக் கழுத்தைக் (மிடறு) குறிப்பிடுகின்றன.

2.2.2 வேற்றுமை இனி, தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளில் காணப்படும் வேற்றுமையினைக் காணலாம்.

தொல்காப்பியம் ‘தந்நிலை திரியா’ என்ற தொடரைப் பயன்படுத்தித் தந்நிலை திரியும் உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் வேறு என்பதை நுட்பமாகப் புலப்படுத்துகின்றது.

நன்னூலில் அனைத்து உயிர்எழுத்துகளுக்கும் பொதுவாகப் பிறப்பிட இலக்கணம் காணப்படுகின்றது. இதில் இந்த நுட்ப வேறுபாடு கூறப்படவில்லை.

2.3 பிறப்பு முயற்சி வேறுபாடும் உயிரெழுத்துகளின் வகைப்பாடும்

பன்னிரண்டு உயிர்எழுத்துகளும் கழுத்தில் இருந்து தோன்றுகின்றன. ஆனால் இந்த உயிர்எழுத்துகள் அனைத்தும் ஒரே முயற்சியினால் வெளிப்படுவது இல்லை. உயிர்எழுத்துகள் ஒரே இடத்தில் இருந்து பிறக்கின்றன. ஆனால் ஒரே முயற்சியினால் பிறப்பதில்லை என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.

பன்னிரண்டு உயிர்எழுத்துகள் மூன்று விதமான முயற்சியினால் பிறக்கின்றன. அந்த முயற்சி வேறுபாட்டின் அடிப்படையில் உயிர்எழுத்துகளைப் பிரித்துக் காண்போம்.

அவை,

(1)அ, ஆ எழுத்துகளின் பிறப்பு

(2)இ, ஈ, எ, ஏ, ஐ எழுத்துகளின் பிறப்பு

(3)உ, ஊ, ஒ, ஓ, ஒள எழுத்துகளின் பிறப்பு

ஆகியன.

2.4 அ, ஆ உயிர்எழுத்துகளின் பிறப்பு

2.4.1 தொல்காப்பியர் கருத்து உயிர்எழுத்துகள் பன்னிரண்டனுள் முதலில் வருகின்ற ‘அ’கரமும் ‘ஆ’காரமும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சி பற்றி முதலில் காண்போம். இவ்விரண்டு உயிர்எழுத்துகளும் நிறை உயிர் முயற்சியுடன் வாயைத் திறக்கின்ற போது தோன்றுகின்றன. ‘வாயைத் திறக்கின்ற’ முயற்சியைத் தமிழ் இலக்கண ஆசிரியர்கள் ‘அங்காத்தல்’- என்ற சொல்லால் குறிப்பிடுவதை அறியலாம். அ, ஆ உயிர்எழுத்துகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியர்,

அவற்றுள்

அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும்

(எழுத்து. 85)

என்று விளக்குகின்றார்.

எழுத்தொலிகள் பிறப்பதற்கு நான்கு உறுப்புகளின் முயற்சியும் தொழிலும் தேவைப்படுவன என்று முந்தைய பாடத்தில் படித்தீர்கள். அந்த நான்கு உறுப்புகள்

(1)இதழ்

(2)நா

(3)பல்

(4)அண்ணம்

என்பவை. இந்த நான்கினுள் ‘அண்ணம்’ என்பது ‘மேல்வாய்’ என்று பொருள்படும்.

எனவே மேல்வாயைத் திறக்கும் முயற்சியின் பயனாக அகர ஆகார உயிர்ஒலிகள் தோன்றும் என்று அறியலாம்.

2.4.2 நன்னூலார் கருத்து உயிர்எழுத்துகளில் அகரமும் ஆகாரமும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சியை நன்னூலும் தெரிவிக்கின்றது.

அவற்றுள்,

முயற்சியுள் ‘அ ஆ அங்காப்பு உடைய’

(நூற்பா. 75)

என்று தெரிவிக்கின்றது.

அ, ஆ ஆகிய இவை இரண்டும் ‘வாயைத் திறத்தல் – அங்காத்தல்’ என்னும் முயற்சியின் பயனாகத் தோன்றுகின்றன என்பதை, நன்னூலும் தெளிவுபடுத்துகின்றது.

2.5 இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய எழுத்துகளின் பிறப்பு

இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய எழுத்துகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளைக் காண்போம்.

2.5.1 தொல்காப்பியர் கருத்து இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்து எழுத்தொலிகள் தோன்றுவதற்குத் தேவைப்படும் முயற்சிகள் குறித்துத் தொல்காப்பியம் தெரிவிக்கும் கருத்துகளை முதலில் காண்போம். இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் தோன்றுவதற்கு இரு முயற்சிகள் தேவைப்படுகின்றன. அவை,

தேவைப்படும் முயற்சி:

(1)வாயைத் திறத்தலாகிய அங்காத்தல்

(2)மேல்வாய்ப் பல்லை, நாக்கினது அடிப்பகுதியின் விளிம்பு சென்று பொருந்தும் முயற்சி ஆகியன.

ஒத்துழைக்கும் உறுப்புகள்: மேல்வாய்ப்பல், நாக்கு ஆகியன

இந்த எழுத்துகள் பிறப்பதற்கு ஒத்துழைக்கும் உறுப்புகள் மேல்வாய்ப் பல், நாக்கு என்பன. இதனைத் தொல்காப்பியம்,

இ, ஈ, எ, ஏ, ஐ யென இசைக்கும்

அப்பால் ஐந்தும் அவற்று ஓர் அன்ன

அவைதாம்

அண்பல் முதல்நா விளிம்பு உறல் உடைய

(எழுத்து. 86)

(அன்ன = போன்றவை; நா = நாக்கு; அண்பல் = மேல்வாய்ப்பல்; முதல்நா = நாவின் அடி)

என்று விளக்குகின்றது. இந்நூற்பா இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் ஒரே முயற்சியினால் பிறக்கின்றன என்று கூறுகின்றது. ‘ஐந்தும் அவற்று ஓர் அன்ன’ என்னும் தொடர், அகரம் ஆகாரம் என்னும் எழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் அங்காத்தல் முயற்சியே இந்த எழுத்துகள் பிறப்பதற்கும் தேவைப்படுகின்றது என்பதை உணர்த்துகிறது.

2.5.2 நன்னூலார் கருத்து இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய உயிர்எழுத்துகள் பிறப்பது குறித்து நன்னூல் தெரிவிக்கும் கருத்துகளைக் காண்போம்.

இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய உயிர்எழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சி பற்றியும், ஒத்துழைக்கும் உறுப்புகள் குறித்தும் நன்னூல் எடுத்துரைக்கின்றது. அவை,

தேவைப்படும் முயற்சி :

(1) வாயைத் திறத்தலாகிய அங்காத்தல். (2) மேல்வாய்ப் பல்லை நாக்கின் அடியின் ஓரமானது சென்று பொருந்துதல்.

ஒத்துழைக்கும் உறுப்புகள்: மேல்வாய்ப்பல், நாக்கு ஆகியன.

இதனை,

இ ஈ எ ஏ ஐ அங்காப்போடு

அண்பல் முதல்நா விளிம்புற வருமே

என்று நன்னூல் நூற்பா (76) விளக்குகின்றது.

(அங்காத்தல் = வாய் திறத்தல்; முதல் நா = அடி நாக்கு; விளிம்பு = ஓரம்)

2.6 உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய எழுத்துகளின் பிறப்பு

2.6.1 தொல்காப்பியர் கருத்து தொல்காப்பியம், உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய உயிர்எழுத்துகள் ஐந்தும் இதழ் குவிந்து சொல்லப் பிறக்கும் என்று விளக்குகின்றது. இதனை,

உ ஊ ஒ ஓ ஒள என இசைக்கும்

அப்பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்

(எழுத்து. 87)

என்னும் தொல்காப்பிய நூற்பா உரைக்கின்றது. இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் பிறப்பதற்கு உயிரின் முயற்சியோடு, இதழ் குவிதலாகிய முயற்சியும் தேவைப்படுகின்றது என்பது தெளிவாகிறது.

2.6.2 நன்னூலார் கருத்து உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் எவ்வாறு பிறக்கின்றன என்பதை நன்னூலும் விளக்கியுள்ளது.

நன்னூல் இந்த எழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சியையும், ஈடுபடும் உறுப்புகளையும் மிகச் சுருக்கமாகத் தெரிவிக்கக் காணலாம். இந்த உயிர்எழுத்துகள் இதழ் குவிதலால் தோன்றுகின்றன என்று தெரிவிக்கின்றது. இக்கருத்தை,

உ, ஊ, ஒ, ஓ, ஒள இதழ் குவிவே

(நூற்பா. 77)

என்னும் நூற்பாவின் மூலம் நன்னூல் விளக்கிச் செல்கின்றது.

2.7 உயிர் ஒலிகள் பிறப்பது பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும்

உயிர்ஒலிகள் பிறப்பது பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவித்த கருத்துகளில் வெளிப்படும் ஒற்றுமை காணத்தக்கது.

ஒற்றுமை

இரு இலக்கண நூல்களும் அ, ஆ ஆகிய உயிர்எழுத்துகள் இரண்டும் வாயைத் திறத்தலால் பிறக்கும் என்றும், இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்து உயிர்எழுத்துகளும் மேல்வாய்ப் பல்லை (அண்பல்) நாக்கின் அடியானது (நாமுதல்) சென்று பொருந்த (விளிம்புறப்) பிறக்கும் என்றும், உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஐந்து உயிர்எழுத்துகளும் இதழ் குவிதலால் பிறக்கும் என்றும் கூறுகின்றன. எனவே இதில் இரண்டு நூலாசிரியர்களுக்கும் இடையில் எந்த வித வேறுபாடும் இல்லை.

2.8 உயிர்எழுத்துகள் பிறப்பு - இலக்கண நூல்களும்

மொழியியலும்.

எழுத்துகளின் பொதுவான பிறப்பியல் குறித்து இலக்கண நூல்களும் மொழியியலாரும் தெரிவித்த கருத்துகளை முந்தைய பாடத்தில் தெரிந்து கொண்டீர்கள். இந்தப் பாடத்தில் உயிர்எழுத்துகளின் பிறப்புப் பற்றி இலக்கண நூல்கள் தெரிவித்த கருத்துகள் மொழியியல் கருத்துகளோடு ஒத்திருக்கும் தன்மையைக் காணலாம்.

2.8.1 ஒற்றுமை (1)தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இரு இலக்கண ஆசிரியர்களும் தமிழில் உள்ள உயிர்எழுத்துகள் பன்னிரண்டை மூன்று பிரிவாகப் பிரித்துள்ளனர்.

அவை,

(1).அ, ஆ,

(2).இ, ஈ, எ, ஏ, ஐ,

(3).உ, ஊ, ஒ, ஓ, ஒள – ஆகியன.

மொழிநூல் அறிஞர்களும் தமிழிலுள்ள உயிர்ஒலிகளை மேற்கண்ட பகுப்பின்படியே பிரித்துக் காட்டியுள்ளனர். மொழிநூல் அறிஞர்கள் உயிர்எழுத்துகளை பின்வரும் பகுப்பின்படி பிரிக்கின்றனர்.

அவை,

(1)முன் அண்ண உயிர்

(2)இடை அண்ண உயிர்

(3)பின் அண்ண உயிர் என்பன.

இந்த மூன்று பகுப்பின் கீழ், தமிழில் காணப்படும் உயிர்எழுத்துகளை அமைத்துக் காட்டுகின்றனர். அவ்வாறு அமைக்குமிடத்து,

அவை,

(1)முன் அண்ண உயிர்கள் : இ, ஈ, எ, ஏ

(2)இடை அண்ண உயிர்கள் : அ, ஆ

(3)பின் அண்ண உயிர்கள் : உ, ஊ, ஒ, ஓ

என்று வருவதைக் காணலாம். எனவே, தமிழ் இலக்கண நூல்கள், மொழியை, மொழிநூல் அறிஞர்கள் காணும் அறிவியல் நோக்கில் கண்டு ஆய்ந்துள்ளன என்பதையும் நாம் இங்குத் தெரிந்து கொள்ளலாம்.

2.8.2 கூட்டொலியும் தனிஒலியும் மேலே கண்ட மூன்று பகுப்பில் எதிலும் ‘ஐ, ஒள’ ஆகிய இரண்டு உயிர்எழுத்துகளும் இடம் பெறவில்லை என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். தமிழ் இலக்கண நூல்கள் உயிர்எழுத்துகள் பன்னிரண்டு என்று குறிப்பிட்டாலும், மொழிநூல் அறிஞர்கள் உயிர்ஒலிகளைப் பத்து என்றே வகுத்துள்ளனர்.

‘ஐ, ஒள’ ஆகியவை தனியொலிகள் அல்ல என்பது மொழிநூலார் கருத்து; ஐ என்பது அகரமும், யகர மெய்யும் சேர்ந்த கூட்டொலி; ஒள என்பது அகரமும் வகர மெய்யும் இணைந்த கூட்டொலி என்று மொழியியல் விளக்குகின்றது. எனவே ‘கூட்டொலிகள்’ என்று தாம் கருதுகின்ற ஐ, ஒள ஆகிய இரண்டையும் தவிர்த்துவிட்டு உயிர்ஒலிகள் பத்து என்று மட்டும் மொழியியலார் தெரிவிக்கின்றனர்.

‘ஐ’ காரத்தைத் தொல்காப்பியர் உயிர்எழுத்தாகக் கூறியிருப்பினும் ஒலி அமைப்பினை விளக்குமிடத்து அது ‘கூட்டொலி’ என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்.

அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் ‘ஐ’ யென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் (எழுத்து. 56)

என்னும் தொல்காப்பிய நூற்பாவில், அகர உயிர் யகர மெய்யுடன் இணைந்து ஐ காரம் தோன்றுகிறது என்று விளக்குகின்றார். எனவே பிற்காலத்தில் மொழிநூல் அறிஞர்கள் ஆய்ந்து கண்ட ‘கூட்டொலி’ பற்றிய கருத்தினைத் தொல்காப்பியர் எண்ணிப் பார்த்து விளக்க முற்பட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

2.9 தொகுப்புரை

இந்தப் பாடத்தில், தமிழ் முதல் எழுத்துகள் முப்பதில் அடங்கி இருக்கும் பன்னிரண்டு உயிர்எழுத்துகளும் கழுத்தில் இருந்து பிறக்கின்றன என்பதை அறிந்து கொண்டீர்கள். தொல்காப்பியமும் நன்னூலும் உயிர்எழுத்துகள் பிறப்பதற்கு இடம் கழுத்து என்றும், ஆனால் அந்த உயிர்எழுத்துகள் மூன்று வித முயற்சியினால் பிறக்கின்றன என்றும் சுட்டிக் காட்டின. அ, ஆ வாயைத் திறத்தலாலும், இ, ஈ, எ, ஏ, ஐ ஆகியவை மேல்வாய்ப் பல்லை நாக்கின் அடிப்பகுதி சென்று பொருந்துவதாலும், உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகியவை இதழ்குவிதல் என்ற முயற்சியாலும் பிறக்கின்றன என்பதையும் கண்டோம். தொல்காப்பியமும் நன்னூலும் உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் பற்றிக் கூறிய கருத்துகளில் காணப்பட்ட ஒற்றுமை வேற்றுமைகளைத் தொகுத்துக் கண்டோம். அதைப்போலவே உயிர்ஒலிகள் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சிகளை விளக்கும் இடத்து இந்த இரு இலக்கண நூல்களும் தெரிவித்த கருத்துகளின் ஒற்றுமையைப் பார்த்தோம். தமிழ் இலக்கண நூல்கள் உயிரொலிகளின் பிறப்புப் பற்றித் தெரிவித்த கருத்துகளை மொழிநூலார் கருத்துகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாறு கண்டதில் மொழிநூல் அறிஞர்கள் உயிர்ஒலிகளைப் பகுத்த முறையிலேயே தமிழ் இலக்கண நூல்களும் தமிழ் உயிர்ஒலிகளைப் பகுத்துள்ளன என்பதைக் காண முடிந்தது. இது, தமிழ் இலக்கண நூல்கள், மொழியை, அறிவியல் நெறியோடு அணுகிய நுட்பத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

பாடம் - 3

மெய்யெழுத்துகளின் பிறப்பு

3.0 பாட முன்னுரை

முதற்பாடத்தில் எழுத்துகளின் பிறப்புப் பற்றிய பொதுவான கருத்துகளைத் தெரிந்து கொண்டீர்கள். இரண்டாம் பாடத்தில் உயிர்எழுத்துகள் பிறப்பது குறித்து அறிந்து கொண்டீர்கள். முதல் எழுத்துகள் முப்பது என்பதை நாம் முன்னரே கண்டோம். அவற்றுள் பன்னிரண்டு உயிர்எழுத்துகளும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் அடங்கும். உயிர்எழுத்துகள் பன்னிரண்டு நீங்கலாக எஞ்சியிருக்கும் பதினெட்டு மெய்யெழுத்துகளின் பிறப்புக் குறித்து இப்பாடத்தில் அறிந்து கொள்வோம். அவற்றுடன் சார்பெழுத்துகளின் பிறப்புப் பற்றியும் இப்பாடத்தில் காண்போம்.

மெய்யெழுத்துகள் தோன்றுகின்ற முறை குறித்து அறிந்து கொள்வதற்கு முன்னர், மெய்யெழுத்துகள் அமைக்கப்பட்டிருக்கும் வரிசை முறையை அறிந்து கொள்வது நல்லது. மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை இந்த மூன்று வரிசைப்படி அடுக்கப்படவில்லை. மெய்யெழுத்துகள் பதினெட்டில் முதலில் வரும் பத்து எழுத்துகள் ஒரு வல்லினம், ஒரு மெல்லினம் என்ற அமைப்பில் அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருக்கின்றன. அதன் பின்னர் இடையின எழுத்துகள் ஆறும் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளன. கடைசியில் இருக்கும் இரண்டு எழுத்துகளும் ஒரு வல்லினம், ஒரு மெல்லினம் என்ற முறையில் அமைந்துள்ளன.

மெய்யெழுத்துகளின் வகைப்பாடு :

வல்லினம் : க், ச், ட், த், ப், ற்

மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்

இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்

இப்போது மெய்யெழுத்துகள் அமைக்கப்பட்டிருக்கும் முறையைப் பாருங்கள்.

முதல் பத்து எழுத்துகள்

க்-வல்லினம்

ங் -மெல்லினம்

ச் -வல்லினம்

ஞ்-மெல்லினம்

ட் -வல்லினம்

ண் -மெல்லினம்

த் -வல்லினம்

ந் -மெல்லினம்

ப் -வல்லினம்

ம் -மெல்லினம்

கடைசி எட்டு எழுத்துகள்

ய்

ர்

ல்              இடையின மெய்கள்

வ்

ழ்

ள்

ற்-வல்லினம்

ன்-மெல்லினம்

முதலில் மெய்யெழுத்துகள் பிறப்பது பற்றித் தொல்காப்பியம் தெரிவிக்கும் கருத்துகளைக் காண்போம்.

3.1 மெய்யெழுத்துகள் பிறப்பு - தொல்காப்பியர் கருத்து

மெய்யெழுத்துகள் எவ்வாறு பிறக்கின்றன என்பதைத் தொல்காப்பியம் தெளிவாக விளக்கியுள்ளது. தொல்காப்பியம் மெய்யெழுத்துகளின் பிறப்பினைக் குறித்து விளக்கும்போது இரண்டு வகையாக விளக்குகின்றது. அவை,

(1)வல்லின, மெல்லின மெய்களின் பிறப்பு

(2)இடையின மெய்களின் பிறப்பு

3.1.1 மெய்யெழுத்துகளின் பிறப்பிடம் ஒவ்வோர் எழுத்துக்கும் அது பிறக்கின்ற இடமும், பிறப்பதற்குத் தேவைப்படும் உறுப்புகளின் முயற்சியும் இன்றியமையாதன என்று முன்னரே அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் மெய்யெழுத்துகள் பிறக்கின்ற இடம் குறித்துத் தொல்காப்பியம் கூறும் கருத்துகளை அறியலாம். உந்தியில் இருந்து எழும் காற்று தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய மூன்று இடங்களில் வந்து தங்கிப் பின்னர்ப் பல்வேறு உறுப்புகளால் வெவ்வேறு எழுத்தாகப் பிறக்கும் என்பதை முதல் பாடத்தில் கண்டோம்.

இங்கு மெய்யெழுத்துகள் பிறக்கின்ற இடங்களைப் பின்வருமாறு காணலாம். அவை,

(1)வல்லின மெய்கள் – தலையில் தங்கிய காற்றினால் பிறக்கின்றன.

(2)மெல்லின மெய்கள்- மூக்கில் தங்கிய காற்றினால் பிறக்கின்றன.

(3)இடையின மெய்கள்- கழுத்தில் தங்கிய காற்றினால் பிறக்கின்றன.

என்பன.

இதனைத் தொல்காப்பிய நூற்பா (எழுத்ததிகாரம் 3:10), அதன் உரை ஆகியவற்றிலிருந்து அறியலாம்.

3.1.2 வல்லின, மெல்லின மெய்களின் பிறப்பு மெய்யெழுத்துகளின் வகைப்பாட்டில் வல்லினம் என்றும், மெல்லினம் என்றும் தனித்தனியாக இருக்கும் போது, இவ்விரு வகை மெய்களின் பிறப்பினைச் சேர்த்துக் கூறியிருப்பதன் காரணம் என்ன என்று உங்களுக்குள் வினா எழும். அவ்வாறு வினா எழுவது பொருத்தம்தான். இந்த வினாவிற்கு விடை இதுவே – மெய்யெழுத்துகளின் வரிசையில் ஒரு வல்லின எழுத்துப் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சியே அதையடுத்து வைக்கப்பட்டுள்ள மெல்லின எழுத்துப் பிறப்பதற்கும் தேவைப்படுகின்றது. எனவேதான், ஒரு வல்லினத்தை அடுத்து ஒரு மெல்லின மெய் என்ற முறையில் அவை வைக்கப்பட்டுள்ளன.

3.1.3 க் ங் – மெய்களின் பிறப்பு வல்லின மெய்களில் முதலில் வருவது ‘க்’ – ஆகும். அதைப்போல மெல்லின மெய்களில் முதலில் வருவதும் ‘ங்’ – ஆகும். இவ்விரண்டும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சியில் ஒத்துழைக்கும் உறுப்புகள் அண்ணமும் (மேல்வாய்) நாக்கும். இவை, நாவின் அடி மேல்வாயின் அடிப்பகுதியைச் சென்று பொருந்தும்போது பிறக்கின்றன என்கிறார் தொல்காப்பியர். இதனை,

ககார ஙகாரம் முதல்நா அண்ணம் (எழுத்து. 3 : 89)

என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குகின்றது

3.1.4 ச் ஞ் – மெய்களின் பிறப்பு அடுத்துவரும் மெய்களான ‘ச்’ என்னும் வல்லின மெய்யும், ‘ஞ்’ என்னும் மெல்லின மெய்யும், நாவின் இடைப்பகுதி, அண்ணத்தின் (மேல்வாயின்) இடைப்பகுதியைச் சென்று பொருந்தும் நிலையில் பிறக்கும்.

இதனை,

சகார ஞகாரம் இடைநா அண்ணம் (எழுத்து. 3 : 90)

என்ற நூற்பா கூறுகின்றது

3.1.5 ட் ண் – மெய்களின் பிறப்பு ‘ட்’, ‘ண்’ ஆகிய இரு மெய்களும் ஒரே முயற்சியினால் தோன்றுகின்றன. இவை நாவின் நுனி, அண்ணத்தின் நுனிப்பகுதியைச் சென்று பொருந்துகின்ற நிலையில் பிறக்கின்றன. இதனை,

டகாரம் ணகாரம் நுனிநா அண்ணம் (எழுத்து. 3 : 91)

என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குகிறது.

3.1.6 த் ந் – மெய்களின் பிறப்பு மேல்வாய்ப் பல்லினது அடிப்பகுதியை நாவின் நுனியானது நன்கு பரந்து ஒற்றும் போது ‘த்’, ‘ந்’ என்னும் மெய்கள் பிறக்கின்றன. இதனை,

அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின்

நாநுனி பரந்து மெய்யுற ஒற்றத்

தாம்இனிது பிறக்கும் தகாரம் நகாரம்

(எழுத்து. 3 : 93)

என்னும் நூற்பா எடுத்துக் கூறுகின்றது. இந்நூற்பா தகாரம், நகாரம் எனப்படும் த், ந் என்னும் மெய்கள் தாம் இனிதாகப் பிறப்பதற்கு ‘மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியை நாவின் நுனி நன்கு சென்று பொருந்த வேண்டும்’ என்று அழகுபடக் கூறுகின்றது.

3.1.7 ப் ம் – மெய்களின் பிறப்பு ‘ப்’, ‘ம்’ என்னும் இந்த இரு மெய்களும் இரு இதழ்களின் (உதடுகள்) செயற்பாட்டால் பிறக்கின்றன. மேல் இதழும் கீழ் இதழும் ஒன்றோடு ஒன்று இயைந்து பொருந்திட, ‘ப்’, ‘ம்’ என்பவை பிறக்கின்றன. இதனை,

இதழ்இயைந்து பிறக்கும் பகாரம் மகாரம் (எழுத்து. 3 : 97)

என்னும் நூற்பா தெரிவிக்கின்றது.

3.1.8 ற் ன் – மெய்களின் பிறப்பு நாவின் நுனி, அண்ணத்தைச் சென்று நன்கு ஒற்றும் போது ‘ற்’ ‘ன்’ என்னும் மெய்கள் தோன்றும். இதனை,

அணரி நுனிநா அண்ணம் ஒற்ற

றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்

(எழுத்து. 3 : 94)

என்னும் நூற்பா விளக்குகின்றது.

3.2 மெய்யெழுத்துகள் பிறப்பு - நன்னூலார் கருத்து

மெய்யெழுத்துகளின் பிறப்புக் குறித்து நன்னூலார் தெரிவிக்கும் கருத்துக்களையும் இங்குக் காண்போம். நன்னூலாரும் வல்லின, மெல்லின, இடையின மெய்களின் பிறப்பிடத்தையும் அவை பிறப்பதற்குத் தேவைப்படும் உறுப்புகளின் முயற்சியையும் தனித்தனியே விளக்குகிறார்.

3.2.1 மெய்யெழுத்துகளின் பிறப்பிடம் நன்னூலார் உயிர்எழுத்தொலிகளின் பிறப்பிடத்தைக் கூறிய இடத்திலேயே மெய்களின் பிறப்பிடத்தையும் கூறியுள்ளார். நன்னூலார் தெரிவிக்கும் மெய்யொலிகளின் பிறப்பிடத்தைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம். அவை,

(1)வல்லின மெய்கள் பிறக்குமிடம்:மார்பு

(2)மெல்லின மெய்கள் பிறக்குமிடம்:மூக்கு

(3)இடையின மெய்கள் பிறக்குமிடம்:கழுத்து

என்பன. இதனை,

அவ்வழி

ஆவி இடைமை இடம் மிடறு ஆகும்.

மேவும் மென்மை மூக்கு, உரம்பெறும் வன்மை

(நூற்பா. 74)

என்னும் நூற்பா விளக்குகின்றது. இந்நூற்பா இடையின மெய்களும் உயிர்எழுத்துகளும் கழுத்தில் (மிடறு) இருந்து பிறக்கின்றன என்பதைச் சேர்த்து உரைக்கின்றது. உரம் என்பது நெஞ்சு, மார்பு என்று பொருள்படும்.

3.2.2 வல்லின மெல்லின மெய்களின் பிறப்பு தொல்காப்பியத்தைப் போலவே, நன்னூலும் வல்லெழுத்துகள் மற்றும் மெல்லெழுத்துகளின் பிறப்பினை இணைத்தே விளக்குகின்றது. வல்லெழுத்துகள் ஆறும் மெல்லெழுத்துகள் ஆறும் பிறக்கின்ற முறையை நன்னூல் நான்கு நூற்பாக்களில் எடுத்துக் கூறுவதைக் காண்கிறோம். அவை,

(1)க், ங், ச், ஞ், ட், ண்- பிறக்கும் முறை.

(2)த், ந்- பிறக்கும் முறை

(3)ப், ம்- பிறக்கும் முறை

(4)ற், ன் – பிறக்கும் முறை – என்பன.

3.2.3 க் ங், ச் ஞ், ட் ண் – மெய்கள் பிறப்பு நன்னூல் க், ச், ட் என்னும் மூன்று வல்லின மெய்களும், அவற்றுக்கு இனமான மூன்று மெல்லின மெய்கள் ங், ஞ், ண் ஆகியனவும் பிறக்கும் முறையை ஒரே நூற்பாவில் விளக்குகிறது.

நாவின் அடி மேல்வாயின் அடியைச் சென்று பொருந்தினால் க், ங் பிறக்கும்;

நாவின் நடுப்பகுதி மேல்வாயின் நடுப்பகுதியைச் சென்று பொருந்தும் நிலையில் ச், ஞ் என்னும் மெய்கள் தோன்றும்;

நாவின் நுனிப்பகுதி மேல்வாயின் நுனியைச் சென்று பொருந்தும்போது ட், ண் மெய்கள் பிறக்கும். இதனை,

கஙவும் சஞவும் டணவும் முதல்இடை

நுனிநா அண்ணம் உறமுறை வருமே (நூற்பா. 78)

என்னும் நன்னூல் நூற்பா எடுத்துரைக்கின்றது. இந்நூற்பாவில் ‘முதல் இடை நுனி’ என்பதை,

முதல்நா முதல் அண்ணம் என்றும்,

இடைநா இடை அண்ணம் என்றும்,

நுனிநா நுனி அண்ணம் என்றும்

விரித்துப் பொருள் காண வேண்டும்.

3.2.4 த் ந் – மெய்கள் பிறப்பு த், ந் என்னும் மெய்கள் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துகின்ற போது தோன்றுகின்றன. இதனை,

அண்பல் அடிநா முடியுறத் த, ந வரும் (நூற்பா. 79)

என்னும் நன்னூல் நூற்பா விளக்குகின்றது. இந்நூற்பாவில் ‘அண்பல்’ என்பது ‘மேல்வாய்ப்பல்லின் அடிப்பகுதி’ என்று பொருள்படும்.

3.2.5 ப் ம் – மெய்கள் பிறப்பு நன்னூல் ப், ம் மெய்கள் தோன்றும் முறையைச் சற்றுத் தெளிவாக விளக்குகின்றது. மேல்உதடும், கீழ்உதடும் தம்முள் பொருந்தினால் அப்போது ப், ம் பிறக்கும் என்று கூறுகின்றது.

மீகீழ் இதழ்உறப் பம்மப் பிறக்கும் (நூற்பா. 80)

என்பது நன்னூல் நூற்பா. இந்த நூற்பாவில் மீ என்பது மேல் என்று பொருள்படும். எனவே மேல் இதழும் கீழ் இதழும் பொருந்த (உற) ப், ம் என்னும் மெய்கள் பிறக்கும் என்று அறியலாம்.

3.2.6 ற் ன் – மெய்கள் பிறப்பு மெய்யெழுத்துகளின் வரிசையில் கடைசியாக இருப்பவை ற், ன் என்பன. இவை, மேல்வாயை நாவின் நுனி மிகவும் (நன்றாகப்) பொருந்தினால் பிறப்பவை என்பது நன்னூல் கூறும் விளக்கம் ஆகும். இதனை,

அண்ணம் நுனிநா நனிஉறின் ற, ன வரும் (நூற்பா. 85)

என்னும் நூற்பா தெளிவுபடுத்துகின்றது. இந்நூற்பாவில் வரும் ‘நனி’ என்னும் சொல் நன்றாக என்னும் பொருளைத் தருவதாகும்.

3.3 மெய்யெழுத்துகளின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியமும்

நன்னூலும்

மெய்யெழுத்துகளின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளை ஒப்பிட்டுக் காணலாம். முதலில் அவை இரண்டிற்கும் இடையில் காணப்படும் ஒற்றுமைகளைக் காண்போம்.

3.3.1 ஒற்றுமைகள் (1)இரு நூல்களும் மெல்லின மெய்கள் மூக்கில் இருந்து தோன்றுகின்றன என்று கூறுகின்றன.

(2)இரு நூல்களும் இடையின மெய்கள் கழுத்தில் இருந்து தோன்றுகின்றன என்பதில் ஒற்றுமையாக இருக்கின்றன.

3.3.2 வேற்றுமை தொல்காப்பியம் வல்லின மெய்கள் தலையில் இருந்து தோன்றுகின்றன என்று கூறுகிறது.

நன்னூலோ வல்லின மெய்கள் நெஞ்சில் இருந்து பிறக்கின்றன என்று உரைக்கின்றது.

3.4 இடையின மெய்களின் பிறப்பு

வல்லின மெல்லின மெய்யெழுத்துகளின் பிறப்பினைப் பற்றிய செய்திகளை விரிவாகக் கண்டோம். மெய்யெழுத்துகளில் இனி எஞ்சி இருப்பவை இடையின எழுத்துகள் ஆகும். இடையின எழுத்துகள் ய், ர், ல், வ், ழ், ள் என்ற வரிசையில் அமைந்துள்ளன. இவை பிறப்பதற்கு ஒலி உறுப்புகள் செயற்படும் முறையை இனிக் காண்போம்.

ஆறு இடையின எழுத்துகள் அவை பிறக்கும் இயல்பிற்கு ஏற்ப நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

(1)ய்

(2)ர் ழ்

(3)ல் ள்

(4)வ்

என்பன.

3.4.1 தொல்காப்பியமும் நன்னூலும் இடையின மெய்களின் பிறப்பினை விளக்குவதில் தொல்காப்பியமும் நன்னூலும் பெரிதும் வேறுபடவில்லை. எனவே, அவை ஒவ்வொரு இடையின மெய்யெழுத்தினையும் விளக்குவதைச் சேர்த்தே அறிந்து கொள்ளலாம்.

3.4.2 யகர மெய்யெழுத்தின் பிறப்பு யகர மெய், மேல்வாயை நாவின் அடிப்பகுதி சேரும் போது, கழுத்தில் இருந்து எழும் காற்று மேல்வாயைச் சென்று அடையப் பிறக்கும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

யகர மெய் பிறப்பதை நன்னூலும்,

அடிநா அடிஅணம் உறயத் தோன்றும் (நூற்பா. 81)

என்ற நூற்பாவில் விளக்குகின்றது. நாக்கின் அடியானது மேல்வாய் அடியைச் சென்று பொருந்த யகரம் பிறக்கும் என்று நன்னூல் சுருக்கமாகக் கூறுகின்றது.

3.4.3 ர ழ – மெய்களின் பிறப்பு மேல்வாய் நுனியை நாக்கின் நுனி வருடும் போது ர், ழ் மெய்கள் தோன்றுகின்றன எனத் தொல்காப்பியமும் நன்னூலும் கூறுகின்றன.

ரகர, ழகர மெய்களின் பிறப்பினை நன்னூல்,

அண்ணம் நுனிநா வருட ர ழ வரும் (நூற்பா. 82)

என்று கூறுகின்றது.

3.4.4 ல் ள் – மெய்களின் பிறப்பு ல் ள் என்னும் இரண்டு இடையின மெய்களும் உச்சரிப்பில் சிறிதளவே வேறுபாடு உடையவை. எனினும் அவற்றிற்கு இடையில் வேறுபாடு தோன்றுமாறு ஒலித்துப் பழகுவதே சிறப்பு.

மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியை நாவின் ஓரமானது (விளிம்பு) தடித்துப் பொருந்தும் (ஒற்றும்) போது லகர மெய் தோன்றும; மேல்வாயை நாவின் ஓரமானது தடித்துத் தடவ (வருட) ளகர மெய் தோன்றும். இதனை,

நன்னூல் பின்வரும் நூற்பாவில் விளக்குகின்றது.

அண்பல் முதலும் அண்ணமும் முறையின் நாவிளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும் லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும் (நூற்பா. 83)

3.4.5 வகர மெய்யின் பிறப்பு மேற்பல் கீழ் இதழோடு இயைந்து பொருந்த வகர மெய் தோன்றுகிறது. இதனைத் தொல்காப்பியம்,

பல்இதழ் இயைய வகாரம் பிறக்கும் (எழுத்து. 3 : 98)

என்று கூறுகிறது.

இக்கருத்தையே நன்னூலும்,

மேற்பல் இதழ்உற மேவிடும் வவ்வே (நூற்பா. 84)

என்று விளக்கிக் கூறுகின்றது.

தொல்காப்பியம் பல், இதழ் என்று பொதுவாகக் கூறியிருப்பதைச் சற்று விளக்கமாக மேற்பல் என்றும் கீழ் இதழ் என்றும் நன்னூல் பிரித்துக் காட்டி விளக்கியுள்ளதை உணர வேண்டும்.

3.5 சார்பெழுத்துகளின் பிறப்பு

இதுவரை பதினெட்டு மெய்யெழுத்துகளும் பிறக்கின்ற முறையினைக் கண்டோம். உயிர்எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டும் சேர்த்து முப்பது முதல் எழுத்துகளும் எவ்வாறு பிறக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டீர்கள். இனி அடுத்த நிலையில் சார்புஎழுத்துகளின் பிறப்பினைப்பற்றித் தெரிந்து கொள்வோம்.

நீங்கள் முந்தைய பாடங்களில் சார்புஎழுத்துகள் பத்து என்று படித்து இருப்பீர்கள். அவை,

(1)உயிர்மெய்

(2)ஆய்தம்

(3)உயிரளபெடை

(4)ஒற்றளபெடை

(5)குற்றியலிகரம்

(6)குற்றியலுகரம்

(7)ஐகாரக்குறுக்கம்

(8)ஒளகாரக்குறுக்கம்

(9)மகரக்குறுக்கம்

(10)ஆய்தக்குறுக்கம்

ஆகியன.

சார்புஎழுத்துகளைப் பத்து என்று வகைப்படுத்தியிருப்பது நன்னூல். ஆனால் தொல்காப்பியம் சார்பெழுத்துகளை மூன்று என்று மட்டுமே தெரிவிக்கின்றது. அவை,

(1)குற்றியலிகரம்

(2)குற்றியலுகரம்

(3)ஆய்தம்

ஆகியன.

சார்பெழுத்துகள் பிறக்கும் முறையினைப் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளைத் தனித்தனியே காண்போம்.

3.5.1 சார்பெழுத்துகள் பிறப்புப் பற்றித் தொல்காப்பியம் தொல்காப்பியம் முப்பது முதல்எழுத்துகளின் பிறப்பினை விளக்கிய பின்னர்ச் சார்புஎழுத்துகளின் பிறப்பினை எடுத்துக் கூறுகின்றது.

தாமே தனித்து வரும் இயல்பில்லாமல் சில எழுத்துகளைச் சார்ந்துவரும் இந்தச் சார்புஎழுத்துகள் மூன்றும் தத்தமக்குச் சார்பாகிய எழுத்துகளின் பிறப்பிடத்திலேயே பிறக்கும் என்று தொல்காப்பியம் விளக்குகிறது. (எழுத்து. 3 : 10)

ஆய்தம் மட்டும் குற்றெழுத்தைச் சார்ந்து வரும் எனினும், அது தலையில் தங்கி வெளிப்படும் காற்றினால் பிறப்பதால், உயிரோடு சேர்ந்து வரும், வல்லெழுத்தினைச் சார்ந்தே பிறக்கும். வல்லின மெய்கள் தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எனத் தொல்காப்பியம் கூறுவதை முன்பு கண்டீர்கள்.

3.5.2 சார்பெழுத்துகள் பிறப்புப் பற்றி நன்னூல் நன்னூல் சார்பெழுத்துளைப் பத்து என்று பட்டியலிட்டுக் கூறியிருப்பதை முன்னரே அறிந்து கொண்டீர்கள். இந்தப் பத்தினுள் ஆய்தம் பிறக்கும் இடம் தலை ஆகும். ஆய்தம் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சி வாயைத் திறத்தல். இது நீங்க, எஞ்சியிருக்கும் ஒன்பது சார்புஎழுத்துகளும் தத்தம் முதல் எழுத்துகள் பிறக்கும் இடத்தில் பிறப்பன. அந்த முதல் எழுத்துகளுக்குத் தேவைப்படும் முயற்சியே இவை பிறப்பதற்குத் தேவைப்படுவன. இதனை,

ஆய்தக்கு இடம்தலை; அங்கா முயற்சி; சார்புஎழுத்து ஏனவும் தம்முதல் அனைய (நூற்பா. 86)

என்னும் நன்னூல் நூற்பா விளக்குகின்றது.

3.6 எழுத்துகளின் பிறப்புக்குப் புறனடை

இதுவரை, தமிழில் உள்ள எழுத்துகள் ஒவ்வொன்றும் பிறக்கின்ற இடமும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சியும் குறித்து விரிவாக அறிந்து கொண்டீர்கள். எனினும் இந்த எழுத்துகளுக்குச் சொல்லப்பட்ட பிறப்பு விதிகள் அந்தந்த எழுத்துகளை இயல்பாக ஒலிக்கின்ற போது மட்டும் பொருந்துவன. இந்த எழுத்துகளை உயர்த்தியோ, தாழ்த்தியோ அல்லது நடுத்தரமாகவோ ஒலிக்கும் போது இவற்றில் சில மாறுதல்கள் எழுகின்றன. இதனைத் தெரிவிப்பதே புறனடை (விதிவிலக்கு) எனப்படும். இதனை,

எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிதுஉள வாகும் (நூற்பா. 87)

என்று நன்னூல் விளக்குகின்றது. இந்நூற்பாவில் எடுத்தல் என்பது உயர்த்தி ஒலித்தல் என்றும், படுத்தல் என்பது தாழ்த்தி ஒலித்தல் என்றும், நலிதல் என்பது நடுத்தரமாக ஒலித்தல் என்றும் பொருள்படும்.

எனவே எழுத்துகளுக்கான பிறப்பு விதிகள் அவற்றை உயர்த்தியும் தாழ்த்தியும் ஒலிக்கும் போது சிற்சில மாற்றங்களோடு அமைகின்றன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

3.7 மெய்யெழுத்துகளின் பிறப்பும் மொழியியல் கருத்தும்

எழுத்துகளின் பிறப்புக் குறித்து இலக்கண நூல்கள் தெரிவித்த பொதுவான கருத்துகளை மொழியியல் அறிஞர்களின் கருத்துகளோடு ஒப்பிட்டு அறிந்தீர்கள். பின்னர் உயிர்எழுத்துகளின் பிறப்புக் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவித்த கருத்துகளையும் மொழியியல் கருத்துகளோடு ஒப்பிட்டுத் தெரிந்து கொண்டீர்கள். இந்தப்பாடத்தில் மெய்யெழுத்துகளின் பிறப்புக் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவித்திருக்கும் கருத்துகளை மொழியியல் கருத்துகளோடு பொதுவாக ஒப்பிட்டுக் காண்போம்.

தொல்காப்பியமும் நன்னூலும் மெய்யெழுத்துகள் பிறக்கின்ற இடத்தை அடிப்படையாக வைத்து மூன்று வகையாகப் பிரித்துள்ளன. அவை:

வல்லின மெய்கள்-பிறப்பிடம் நெஞ்சு (நன்னூல்); தலை (தொல்.)

மெல்லின மெய்கள்-மூக்கு

இடையின மெய்கள்-கழுத்து (மிடறு)

மொழியியல் அறிஞர்களும் மெய்யொலிகளை முதலில் அவை பிறக்கின்ற இடத்தை வைத்துப் பிரிக்கின்றனர். அடுத்த நிலையில் அந்த மெய்யொலி பிறப்பதற்கு முயற்சியில் ஈடுபடும் உறுப்புகளின் அடிப்படையில் பிரிக்கின்றனர். எனவே மொழியியல் அறிஞர்கள் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து வெளியிட்டுள்ள பாகுபாடு, இலக்கண நூல்கள் கூறும் பிறப்பிலக்கண அடிப்படையில் அமைந்திருக்கும் சிறப்பு வெளிப்படக் காண்கிறோம்.

பிறப்பிடம் குறித்த செய்திகள் ஒப்பிட்டு அனைத்தையும் ஆராய்வது மிகவும் நீண்டு விடும். எனவே, மெல்லின மெய்களின் பிறப்பிடத்தை மட்டும் ஒப்பிட்டுக் காண்பது போதுமானதாக அமையும்.

மொழியியல் அறிஞர்கள் மெல்லின மெய்களை அவற்றின் பிறப்பிடம் நோக்கி ‘மூக்கொலி’ (Nasal) என்று வரையறுக்கின்றனர். இந்த மூக்கொலிகளுள் ஒன்றாகிய மகரம் பிறப்பதை,

இதழ்இயைந்து பிறக்கும் பகார மகாரம் (எழுத்து. 3 : 97)

என்று தொல்காப்பியமும்,

மீகீழ் இதழ்உறப் பம்மப் பிறக்கும் (நூற்பா. 80)

என்று நன்னூலும் தெரிவிக்கின்றன.

மொழியியல் அறிஞர்கள் மகரத்தை முதலில் மூக்கொலி என்று வகைப்படுத்தி விட்டுப் பின்னர் அது ஈரிதழ் ஒலி என்று விளக்கிக் கூறுகின்றனர்.

3.8 தொகுப்புரை

இந்தப் பாடத்தில் தமிழில் மெய்யெழுத்துகளின் வரிசையில் வல்லின, மெல்லின, இடையின மெய்கள் அடுக்கப்பட்டிருக்கும் முறை விளக்கப்பட்டது. வல்லின, மெல்லின, இடையின மெய்களின் பிறப்பிடங்கள் விளக்கப்பட்டன. மூவகை மெய்யெழுத்துகளுக்கும் பிறப்பிடம் வெவ்வேறாக அமைகின்றன என்றாலும் பிறப்பு முயற்சியில் வல்லின மெல்லின மெய்கள் ஒத்திருப்பதை இலக்கண நூல்கள் விளக்குகின்றன. ‘க் ங், ச் ஞ், ட் ண், த் ந், ப் ம், ற் ன்’ என்ற வகையில் இவ்வெழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் உறுப்புகளின் முயற்சி விளக்கப்படுகின்றது. இடையின மெய்களின் பிறப்பினை விளக்கும் போது நன்னூல் ய, ர, ழ, ல, ள, வ என்று பிரித்துக் கொண்டு அவற்றின் பிறப்பின் தன்மையை வெளிப்படுத்துகின்றது. மெய்யெழுத்துகளோடு, சார்புஎழுத்துகளின் பிறப்பும் இப்பாடத்தில் விளக்கப்பட்டது. சார்பெழுத்துகளின் எண்ணிக்கையும் எடுத்துக்காட்டப்பட்டது. மெய்யெழுத்துகளின் பிறப்பினைக் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவித்த கருத்துகளின் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் தொகுத்துக் காட்டப்பட்டன. தமிழ் இலக்கண நூல்கள் எழுத்தொலிகளின் பிறப்புக் குறித்துக் கூறியுள்ள செய்திகளையே மொழியியல் அறிஞர்களும் தெரிவித்துள்ளனர் என்பது மெல்லின மெய்களைக் கொண்டு விளக்கப்பட்டது.

பாடம் - 4

பதம் – பொது அறிமுகம்

4.0 பாட முன்னுரை

தமிழ் எழுத்துகள் தனித்தனியே வருகின்றபோது அவற்றிற்குரிய மாத்திரை முதலிய செய்திகளை, நீங்கள் முன்னரே அறிந்து கொண்டீர்கள். தமிழ் எழுத்துகள் எவ்வாறு பிறக்கின்றன என்பதையும் இதற்கு முந்தைய மூன்று பாடங்களில் தெரிந்து கொண்டீர்கள். இப்போது தனித்தனியே இருக்கும் எழுத்துகள் சொல்லாக உருவாகும் முறையை இந்தப் பாடத்தில் தெரிந்து கொள்ளலாம்.

4.1 பதம் என்பதன் பொருள் வரையறை

ஓர் எழுத்துத் தனியே வந்து பொருளைத் தந்தால், அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருளைத் தந்தால் அது பதம் எனப்படும். பதம் என்பது ‘சொல்’ (word) என்று பொருள்படும். சொல் என்பதை உணர்த்த ‘மொழி’ என்ற சொல்லையும் பயன்படுத்தலாம். எனவே பதம், சொல், மொழி ஆகிய மூன்று சொற்களும், பொருள் தரக்கூடிய தனி எழுத்தை அல்லது எழுத்துகளின் கூட்டத்தைக் குறிப்பன எனக் கொள்ளலாம். இதனை நன்னூல்,

எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம்

(நூற்பா – 127)

என்ற நூற்பாவில் விளக்குகிறது.

இந்த நூற்பாவில் பின்வரும் செய்திகள் வெளிப்படையாகப் புலப்படுகின்றன; அவை,

(1)எழுத்துத் தனித்தும் வரலாம்.

(2)ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வரலாம்.

(3)ஆனால் அது பொருள் தருதல் வேண்டும் என்பதே இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இந்த நூற்பா உட்கருத்தாக மற்றொரு பொருளையும் தெரிவிக்கிறது. எழுத்துத் தனித்து வந்தாலும், எழுத்துகள் தொடர்ந்து வந்தாலும் பொருள் தரவில்லை என்றால் அது பதமாகாது; சொல்லெனக் கருதப்படமாட்டாது என்பதே அந்தக் கருத்தாகும்.

எனவே, இந்த நூற்பாவில் உயிர்ப்பாக இருப்பது ‘பொருள் தருதல்’ என்னும் தொடராகும்.

முதலில் தனித்துவரும் எழுத்துப் பதமாவதற்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

ஆ, ஈ – இவ்விரண்டு எழுத்துகளும் தனித்தனியே வந்து பொருள் தருகின்றன. ‘ஆ’ என்பது பசு என்னும் பொருளையும், ஈ என்பது பெயர்ச்சொல்லாக இருந்தால் பூச்சியாகிய ஈ என்னும் பொருளையும், வினைச்சொல்லாக இருந்தால் ‘தா’ என்னும் பொருளையும் உணர்த்துகின்றன. எனவே ஆ, என்பது ஒரு பதமாகிறது. ஈ என்பது மற்றொரு பதமாகிறது.

தனித்து வரும் எழுத்துப் பதமாகாமல் இருப்பதற்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

ச, க என வரும் குற்றெழுத்துகள் தனியே வருகின்றபோது அவை எந்தப் பொருளையும் உணர்த்துவதில்லை. எனவே பதமாகவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இரண்டாவதாக, எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருகின்ற போது பதமாகின்றதற்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

தலை, தலைவி, தலைவன் என வரும் சொற்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

தலை-இரண்டெழுத்துகள் வந்து பொருள் தந்துள்ளது.

தலைவி-மூன்றெழுத்துகள் வந்து பொருள் தந்துள்ளது.

தலைவன்-நான்கு எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருகின்றது.

எழுத்துகள் தொடர்ந்து வந்தாலும் பொருள்தராமல் இருப்பின் பதம் ஆகாததற்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

கப, கபம, கிகருந என வருவனவற்றில் எழுத்துகள் தொடர்ந்து வந்துள்ளன. ஆனால் இவை பொருள் தரவில்லை என்பதால் பதமாக ஆவதில்லை. இதனை நன்கு மனத்தில் பதித்துக் கொள்ள வேண்டும்.

4.1.1 ஓரெழுத்து ஒருமொழியும், தொடர்எழுத்து ஒரு மொழியும் எழுத்துகள் தனித்து வந்து பொருள் தருவதும், தொடர்ந்து வந்து பொருள் தருவதும் பதம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஓர்எழுத்து மட்டும் தனித்து நின்று பொருள் தருமானால் அது ஓர்எழுத்து ஒருமொழி என்று அழைக்கப்படுகின்றது. பல எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருமானால் அது தொடர் எழுத்து ஒருமொழி என்று அழைக்கப்படுகின்றது.

இந்த இருவகைச் சொற்கள் (மொழி) குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளைக் காண்போம்.

4.2 தொல்காப்பியர் கருத்து

தொல்காப்பியர் எழுத்துகளை விளக்கி விட்டுச் சொல் தோன்றும் முறையை எடுத்துக்காட்டுகிறார். தொல்காப்பியர், சொல் மூன்று முறைகளில் தோன்றும் என்று வகுத்துரைக்கிறார். அவை,

(1)ஓர்எழுத்து ஒருமொழி

(2)ஈர்எழுத்து ஒருமொழி

(3)பலஎழுத்து ஒருமொழி

.ஆகியன. இக்கருத்தை,

ஓர்எழுத்து ஒருமொழி ஈர்எழுத்து ஒருமொழி இரண்டுஇறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே (எழுத்து. 2 : 45)

என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குகின்றது. எனவே மேலே கண்ட மூவகை நிலைகளையும் இனித் தனித்தனியே காண்போம்.

4.2.1 ஓர்எழுத்து ஒருமொழி தமிழில் உள்ள உயிர்எழுத்துகள் பன்னிரண்டில் நெடில்எழுத்துகளாக இருக்கும் ஏழு எழுத்துகளும் ஓர்எழுத்து ஒருமொழிகள் என்பதை,

நெட்டெழுத்து ஏழே ஓர்எழுத்து ஒருமொழி

(எழுத்து. 2: 43)

என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குகின்றது.

இந்நூற்பா, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனவரும் ஏழு நெடில் எழுத்துகளும் பொருள் தருவன. எனவே இவை ஓர்எழுத்து ஒருமொழிகள் என்று விளக்குகின்றது. இந்த நெடில்எழுத்துகள் ஒவ்வொன்றிற்கும் என்ன பொருள் என்பதைக் காண்போம்.

வ.எண் எழுத்து பொருள்

(1)ஆ பசு

(2)ஈ ஈ

(3)ஊ இறைச்சி

(4)ஏ அம்பு

(5)ஐ அழகு, தலைவன்

(6)ஓ மதகுநீர் தாங்கும் பலகை

(7)ஒள இந்த எழுத்திற்குப் பொருள் இல்லை

மேலே கண்டவற்றுள் ‘ஒள’ என்னும் எழுத்து ஓர்எழுத்து ஒருமொழி ஆவதில்லை. எனவே இந்நூற்பாவிற்கு உரை கூறும் அறிஞர்கள், இந்த நூற்பா உயிர்எழுத்துகளுக்கும் உயிர்மெய்எழுத்துகளுக்கும் பொது என்பதால் ‘ஒள’ என்பதை உயிர்மெய்யில் வரும் ‘கௌ, வௌ’ முதலியவற்றை உணர்த்துவதாகக் கருதவேண்டும் என்று தெரிவிக்கின்றனர். எனவே உயிர்எழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஆறு மட்டுமே ஓர்எழுத்து ஒருமொழி என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

உயிர் எழுத்துகளில் நெட்டெழுத்துகளைப் பற்றிக் கூறிய தொல்காப்பியம், குற்றெழுத்துகள் ஐந்தும் ஒர்எழுத்து ஒருமொழியாக வருதல் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.

குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே

(எழுத்து. 2 : 44)

என்பது தொல்காப்பிய நூற்பா.

இந்த நூற்பாவைக் காணும்போது அ, இ, உ, எ, ஒ என வரும் குற்றெழுத்துகளில் அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டுப் பொருளை உணர்த்துவன என்பது நினைவுக்கு வரும். எ என்னும் எழுத்து வினாப்பொருளை உணர்த்தும் என்பதும் நினைவுக்கு வரும். ஆனால் இவற்றை ஏன் ஓர்எழுத்து ஒருமொழி என்று குறிப்பிடவில்லை என்ற வினா நமக்கு எழக்கூடும். அ, இ, உ இம் மூன்றும் சுட்டெழுத்துகள்; எ என்பது வினா எழுத்து. சுட்டெழுத்துகளும் வினா எழுத்தும் ‘இடைச் சொற்கள்’ என்னும் பிரிவில் அடங்குவன. இடைச்சொல் என்பது தனியே வந்து பொருள் தரக்கூடியது அல்ல. அது பிற சொற்களோடு (பெயர், வினை) சேர்ந்து வந்தே பொருள் தரும். எனவே தனியே நின்று பொருள் தராத காரணத்தால் சுட்டெழுத்துகளான அ, இ, உ ஆகியவையும் ‘எ’ என்னும் வினா எழுத்தும் ஓர்எழுத்து ஒருமொழி என்னும் இலக்கண வரம்பிற்குள் வரவில்லை என்பது தெளிவாகிறது.

4.2.2 ஈர்எழுத்து ஒருமொழி தொல்காப்பியர் சொல் தோன்றும் முறையில் அடுத்ததாகக் கூறுவது ஈரெழுத்து ஒருமொழி ஆகும்.

இரண்டு எழுத்துகள் சேர்ந்து வந்து பொருள் தருமானால், அது ஈர்எழுத்து ஒருமொழி எனப்படும்.

அணி, மணி, கல், நெல் எனவரும் சொற்களில் இரண்டு எழுத்துகள் இணைந்து வந்து பொருள் தருவதைக் காணலாம். இவை ஈர்எழுத்து ஒருமொழிக்கு எடுத்துக்காட்டுகள்.

4.2.3 தொடர்எழுத்து ஒருமொழி பல எழுத்துகள் சேர்ந்து வந்து பொருள் தருவதைத் தொடர்எழுத்து ஒருமொழி என்று அழைப்பர். இரண்டுக்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருமானால் அது தொடர்எழுத்து ஒருமொழி ஆகும் என்கிறார், தொல்காப்பியர்.

கல்வி, கொற்றன், பாண்டியன் என வரும் சொற்களைப் பாருங்கள்.

(1)கல்வி-என்பதில் மூன்று எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருகின்றன.

(2)கொற்றன்-இதில் நான்கு எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருகின்றன.

(3)பாண்டியன்-இதில் ஐந்து எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருகின்றன.

ஆக, தொல்காப்பியம், ஒன்று, இரண்டு, பல என்னும் அடிப்படையில் எழுத்துகள் இணைந்து வந்து பொருள் தருவதை விளக்குகிறது.

4.3 நன்னூலார் கருத்து

பதம் என்பதன் இலக்கணத்தை வரையறை செய்யும்போது, எழுத்துத் தனித்துப் பொருள் தரின் அல்லது தொடர்ந்து நின்று பொருள் தரின் அது ‘பதம்’ எனப்படும் என்று நன்னூல் விளக்கியதைக் கண்டோம்.

அவ்வாறு ஓர்எழுத்து ஒருமொழியாக அமையும் தமிழ் எழுத்துகள் எத்தனை என்பதை நன்னூல் பட்டியலிட்டுக் காட்டுகின்றது. அவற்றை,

உயிர் ம வில் ஆறும், தபநவில் ஐந்தும் கவசவில் நாலும், யவ்வில் ஒன்றும், ஆகும் நெடில், நொ,து ஆம் குறில் இரண்டோடு ஓர் எழுத்து இயல்பதம் ஆறேழ் சிறப்பின

என்னும் நூற்பாவின் (128) வழி நன்னூல் விளக்குகிறது.

4.3.1 ஓர்எழுத்து ஒருமொழி நன்னூல் மேற்காணும் நூற்பாவில் விளக்கும் செய்திகளைப் பின்வருமாறு பட்டியலிட்டுக் காணலாம்.

உயிர், மவில் ஆறும் (1)

உயிர்எழுத்துகள் 6

‘ம’ வருக்கத்தில் ஆறு 6

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ

மா, மீ, மூ, மே, மை, மோ

தபந – இல் ஐந்தும்

(2) ‘த’ வருக்கத்தில் ஐந்து 5 ‘ப’ வருக்கத்தில் ஐந்து 5 ‘ந’ வருக்கத்தில் ஐந்து 5 தா, தீ, தூ, தே, தை

பா, பூ, பே, பை, போ

நா, நீ, நே, நை, நோ

கவச – இல் நாலும் (3) ‘க’வருக்கத்தில் நான்கு 4 ‘வ’வருக்கத்தில் நான்கு4 ‘ச’வருக்கத்தில் நான்கு 4 கா, கூ, கை, கோ

வா, வீ, வை, வௌ

சா, சீ, சே, சோ

ய வில் ஒன்றும் (4) ‘ய’ வருக்கத்தில் 1 யா

குறில் இரண்டும் (5)‘நொ, து’- குறில் 2 நொ, து

மொத்தம்42

மேலே பட்டியலில் காட்டியபடி தமிழில் ஓர் எழுத்து ஒரு மொழியாக அமைவன 42 என்று நன்னூல் வகுத்துள்ளது.

இப்போது இந்த 42 ஓர் எழுத்து ஒருமொழிகளும் உணர்த்தும் பொருள்களைக் காண்போம். இவற்றுள் பல சொற்களின் பொருள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். சில சொற்களை நாம் பேச்சு வழக்கிலே பயன்படுத்துகிறோம். பேச்சு வழக்கில் இல்லாத இலக்கிய வழக்குச் சொற்களும் இதில் இடம் பெற்றுள்ளன. அவற்றின் பொருள்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். எனவே மேலே கண்ட 42 எழுத்துகளும் உணர்த்தும் பொருள்களையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.

இந்த 42 எழுத்துகளை மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். அவை,

(1)உயிர்எழுத்துகள்- 6

(2) உயிர் மெய் நெடில் எழுத்துகள்-34

(3)உயிர் மெய்க் குறில் எழுத்துகள்- 2

மொத்தம் – 42

என்று அமையும்.

4.3.2 ஓர்எழுத்து ஒருமொழியில் உயிர் எழுத்துகள் ஓர்எழுத்து ஒருமொழியாக வரும் உயிர்எழுத்துகள் ஆறும் நெடில்எழுத்துகள் என்பதை இங்கு மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவது நல்லது. தொல்காப்பியம் கூறும் ஓர்எழுத்து ஒருமொழிகள்பற்றி விளக்கும்போது, இவற்றின் பொருள்கள் எடுத்துக் கூறப்பட்டன. எனினும் நினைவில் நிற்க வேண்டி மீண்டும் அவற்றின் பொருள் இங்குச் சுட்டப்படுகின்றன.

எழுத்து பொருள்

ஆ – பசு,

ஈ- ஈ,

ஊ- இறைச்சி,

ஏ- அம்பு,

ஐ- அழகு,தலைவன்,

ஓ – மதகு நீர் தாங்கும் பலகை.

4.3.3 ஓர்எழுத்து ஒருமொழியில் உயிர்மெய் எழுத்துகள் உயிர்மெய் நெடில் எழுத்துகளில், ம, த, ப, ந, க, வ, ச, ய என வரும் எட்டு வருக்கங்களில் வருபவை மட்டுமே ஓரெழுத்து ஒரு மொழிகள் ஆக வந்துள்ளன.

‘ம’ வருக்கத்தில் (6)

மா- பெரியது,

மீ- மேல்,

மூ- மூப்பு,

மே- மேல்,

மை- மசி,

மோ- மோத்தல் ( நீர் மோத்தல் – முகத்தல்)

‘த’ வருக்கத்தில் (5)

தா, தீ, தை இவற்றின் பொருளை நீங்கள் அறிவீர்கள்.

தூ என்பது தூய்மை, வெண்மை என்றும்,

தே – என்பது கடவுள் என்றும் பொருள்படும்.

‘ப’ வருக்கத்தில் (5)

பா, பூ, பே, பை, போ என வருவனவற்றில் பூ, பை, போ ஆகியவற்றின் பொருள் உங்களுக்குத் தெரியும்.

பா என்பது பாடல் என்றும்

பே என்பது அச்சம் என்றும் பொருள்படும்.

‘ந’ வருக்கத்தில் (5)

நா, நீ, நே, நை, நோ இவற்றில் நா, நீ எனவரும் இரண்டு எழுத்துகள் உணர்த்தும் பொருள்களை நீங்கள் அறிவீர்கள்.

நே என்பது அன்பு என்று பொருள்படும்.

நை என்பது வருத்தம், துன்பம் என்று பொருள்படும்.

நோ என்பது துன்பம் என்று பொருள்படும்.

‘க’ வருக்கத்தில் (4)

கா, கூ, கை, கோ இவற்றில்

கா- காப்பாற்று, சோலை

கூ- பூமி

கோ- மன்னன், தலைவன்.

‘வ’ வருக்கத்தில் (4)

வா, வீ, வை, வௌ இவற்றில் வா, வை எனவரும் இரு எழுத்துகளின் பொருளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

வீ- மலர்

வௌ – திருடல், கவர்தல்

‘ச’ வருக்கத்தில் (4)

சா, சீ, சே, சோ இவற்றில் சா என்பது இறத்தல் என்று பொருள்படும்.

சீ இகழ்ச்சிக் குறிப்பாக வரும்; ஒளி என்றும் பொருள்படும்.

சே எருது (காளை)

சோ மதில்.

‘ய’ வருக்கத்தில் (1)

யா என்பது ஒருவகை மரம்.

உயிர்மெய்க் குறில்

நொ, து – ஆகிய உயிர்மெய்க் குறில் எழுத்துகள் இரண்டும் ஓர்எழுத்து ஒருமொழிகளாக அமைகின்றன.

நொ என்பது ‘வருத்து’ அல்லது ‘துன்புறுத்து’ என்ற பொருளையும், து என்பது ‘உண்’ என்னும் பொருளையும் உணர்த்தும்.

4.4 தொல்காப்பியம் - நன்னூல் கருத்து ஒப்பீடு

ஓர்எழுத்து ஒருமொழி குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்துக் காண்பது மிகவும் பொருத்தம் ஆகும்.

4.4.1 ஒற்றுமைகள் (1)தொல்காப்பியமும் நன்னூலும் ஓர்எழுத்தே ஒருமொழியாக வரும் என்பதைக் குறிப்பிடுகின்றன.

(2)பெரும்பாலும் நெட்டெழுத்துகளே ஓரெழுத்து ஒருமொழிகளாக வரும் என்பதை இரு நூல்களும் குறிப்பிடுகின்றன.

4.4.2 வேற்றுமைகள் (1) தொல்காப்பியம் ஓர்எழுத்து ஒருமொழிகளாக உயிர்எழுத்துகளை மட்டுமே தெரிவிக்கிறது.

நன்னூல் உயிர்எழுத்துகளோடு உயிர்மெய் எழுத்துகளிலும் வரும் ஓர்எழுத்து ஒருமொழிகளைக் கூறுகின்றது.

(2) தொல்காப்பியம் ஏழு உயிர் நெடில் எழுத்துகளையும் ஓர்எழுத்து ஒருமொழிகள் என்று வகுத்துள்ளது.

நன்னூல், உயிர் நெடில்களில் ‘ஒள’ வை நீக்கி விட்டு, ஆறு நெடில்களை மட்டுமே ஓர்எழுத்து ஒருமொழி என்று வரையறுக்கின்றது. (3) தொல்காப்பிய நூற்பா குற்றெழுத்துகளில் எதுவும் ஓர்எழுத்து ஒருமொழியாக வருவது இல்லை என்று தெரிவிக்கின்றது.

ஆனால் நன்னூல் உயிர்மெய் எழுத்துகளில் இரண்டு குற்றெழுத்துகள் (நொ,து) ஓர்எழுத்து ஒருமொழியாக வருவன என்பதைக் கூறுகின்றது.

4.5 தமிழ் எழுத்துகள் சொற்களாவதன் தனித்தன்மை

தமிழில் எழுத்துகள் இணைந்து பொருள் தரும் நிலையில் மொழியாக (சொல்லாக) உருவாகின்றன. அவ்வாறு சொற்களாக மாறுகின்றபோது எழுத்துகளில் மாற்றங்கள் நிகழ்கின்றனவா என்னும் ஒரு வினா நம்முன் தோன்றக் கூடும்.

தமிழில் எழுத்துகள் தனித்து ஒலிக்கும்போது எந்த ஒலியைப் பெற்று இருக்கின்றனவோ அதே ஒலியைத் தான் அவை சொற்களில் வந்து அமையும்போதும் பெறுகின்றன. ஓர் எழுத்து சொல்லாக வரும் போதும், அல்லது பல எழுத்துகள் சேர்ந்து ஒரு சொல்லாக உருவாகும்போதும் எழுத்தின் ஒலிகளில் மாற்றம் நிகழ்வதில்லை என்பதே தமிழ் எழுத்துகளின் தனித்தன்மை ஆகும்.

இக்கருத்தை அரிய உவமை ஒன்றின் மூலம் நன்னூல் உரையாசிரியர் விளக்குகின்றார். “எழுத்துகள் இணைந்து சொற்கள் உருவாகும்போது அது மணம் தரும் நறுமணப் பொடிகள் (மஞ்சள், சுண்ணம் போன்றவை) கலந்த கலவையாக இருத்தல் கூடாது. அது வண்ணமலர்களால் தொடுக்கப்பட்ட மாலையாகத் திகழவேண்டும்” என்பதே அந்த உவமை ஆகும். இந்த உவமை உணர்த்தும் பொருள் என்னவெனில், சுண்ணப் பொடியில் கலந்துள்ள நறுமணப் பொடிகளைத் தனித்தனியே பிரித்து எடுக்க முடியாது. அதைப்போல அல்லாமல், சொற்களில் அமைந்திருக்கும் எழுத்துகள் தங்கள் ஒலி அடையாளங்களை இழந்து விடுதல் கூடாது.

மாறாக, மலர் மாலையில் காணப்படும் பூக்கள் இணைந்து நின்றாலும், அவை மாலையில் இருப்பது தனித்தனியாகத் தென்படுகின்றது. இதைப் போலவே தமிழ் எழுத்துகள் சொற்களில் அமையும் போது அவை ஒவ்வொன்றும் தத்தம் ஒலிஅமைப்பை இழக்காமல் இருக்கின்றன என்பதை இந்த உவமை உணர்த்துகிறது.

இக்கருத்தை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். தமிழில் எ – ண் – ண – ம் என்று நான்கு எழுத்துகள் சேர்ந்து ‘எண்ணம்’ என்ற சொல் உருவாகிறது. இந்த நான்கு எழுத்துகள் தனித்தனியே ஒலிக்கும்போது எழும் ஒலி ‘எண்ணம்’ என்ற சொல்லாகும் போதும் மாறிவிடுவதில்லை.

எனவே தமிழ் எழுத்துகள் தனித்து ஒலிக்கும் போதும், இணைந்து நின்று சொல்லில் அமையும் போதும் தங்கள் ஒலியின் தன்மையைப் பெரும்பாலும் இழப்பதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

4.7 தொகுப்புரை

ஓர் எழுத்து தனித்து வந்தோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தோ பொருள் தருமானால் அது ‘பதம்’ அல்லது மொழி எனப்படும். பதம், மொழி ஆகிய இரு சொற்களும் ‘சொல்’ என்று பொருள்படுவன. ஓர்எழுத்துத் தனித்து வந்து பொருள் தந்தால் அது ஓர்எழுத்து ஒருமொழி எனப்படும். பல எழுத்துகள் தொடர்ந்து (சேர்ந்து) வந்து பொருள் தந்தால் அது தொடர்எழுத்து ஒருமொழி எனப்படும். இதனால் உணரப்படும் மற்றொரு கருத்து என்னவெனில், ஓர்எழுத்துத் தனித்தோ அல்லது எழுத்துகள் தொடர்ந்தோ வந்து பொருள் தரவில்லை என்றால் அது சொல்லாவதில்லை என்பதாம். எனவே ‘பொருள்தருதல்’ என்னும் நிலைப்பாடே எழுத்து அல்லது எழுத்துகள் சொல்லாவதற்கு இன்றியமையாததாகும்.

ஓர்எழுத்து ஒருமொழி குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் விளக்கிக் கூறியுள்ளன. தொல்காப்பியம் சுருங்கச் சொல்லிய ஓர்எழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கையை நன்னூல் விரித்துக் கூறியுள்ளது. ஓர்எழுத்து ஒருமொழிகள் அனைத்தும் நெடில் எழுத்துகளாகவே வரும் என்பது அடிப்படைக் கருத்தாக அமைகின்றது. குறிப்பாக, உயிர்எழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஆறும் ஓர்எழுத்து ஒருமொழிகள் ஆகும், உயிர்மெய் எழுத்துகளில் நெட்டெழுத்துகள் முப்பத்தி நான்கும், உயிர்மெய்க் குற்றெழுத்துகளில் இரண்டும் என, 42 எழுத்துகள் ஓர்எழுத்து ஒருமொழிகளாக வருவன என்று நன்னூல் தெரிவிக்கின்றது.

தொல்காப்பியம் ஓர்எழுத்து ஒருமொழி, ஈரெழுத்து ஒருமொழி, தொடர்எழுத்து ஒருமொழி என்ற பகுப்பின் வழி செய்திகளை விளக்குகிறது. நன்னூல் தொடர்எழுத்து ஒருமொழியைப் பகாப்பதம், பகுபதம் என்று பெயரிட்டுப் பகுத்துக் காட்டுகிறது. பகாப்பதம் என்பது இரண்டு முதல் ஏழு எழுத்துகளைக் கொண்ட சொல்லாகும். பகுபதம் இரண்டு முதல் ஒன்பது எழுத்துகளைக் கொண்ட சொல்லாகும்.

பாடம் - 5

பகாப்பதமும் பகுபதமும்-பகுதி I

5.0 பாட முன்னுரை

எழுத்து, தனித்தோ அல்லது தொடர்ந்தோ வந்து பொருள் தருமானால் அது ‘பதம்‘ எனப்படும் என்பதை முந்தைய பாடத்தில் அறிந்து கொண்டீர்கள். மேலும் அந்தப் ‘பதம்‘ என்பது ‘பகாப்பதம்‘, ‘பகுபதம்‘ என இருவகைப்படும் என்பதையும் தெரிந்து கொண்டீர்கள்.

5.1 பகாப்பதம்

இப்பாடத்தில் பகாப்பதம், பகுபதம் ஆகியவற்றின் வகைளைக் காண்போம். பகுபதத்தின் உறுப்புகள் பற்றியும் அறிந்து கொள்வோம்.

5.1.1 பகாப்பதத்தின் இலக்கணம் பிரித்தால் பொருள் தராத பதமே பகாப்பதம் ஆகும். அது இடுகுறியாக வழங்கிவரும்; நெடுங்காலமாக ஒரே தன்மையுடையதாக அமைந்திருக்கும். (இடுகுறி = காரணம் இன்றி இடப்பட்டு வழங்கி வரும் சொல்).

எடுத்துக்காட்டு :

‘மழை பொழிகிறது‘ இந்த வாக்கியத்தில் மழை, பொழிகிறது என்ற இரு பதங்கள் (சொற்கள்) உள்ளன. பொழிகிறது என்பதை, பொழி + கிறு + அது என்று பிரிக்கலாம். ‘பொழி‘ என்பதைப் பிரிக்கமுடியாது. பொ, ழி எனப்பிரித்தால் இரண்டு எழுத்துகளுக்கும் பொருள் இல்லை. அதே போல, ‘மழை‘ என்பதும் பிரித்தால் பொருள் தராதது, ஆகவே ‘மழை‘, ‘பொழி‘ ஆகிய இரண்டும் பகாப்பதம் ஆகும்.

இப் பகாப்பதம் நான்கு வகைப்படும். அவை,

(1)பெயர்ப்பகாப்பதம்

(2)வினைப் பகாப்பதம்

(3)இடைப் பகாப்பதம்

(4)உரிப் பகாப்பதம்

ஆகியன.

5.1.2 பகாப்பதத்தின் வகைகள் (1) பெயர்ப் பகாப்பதம்:

பெயர்ச் சொல்லாக அமையும் பகாப்பதம் பெயர்ப் பகாப்பதம் எனப்படும்.

எடுத்துக் காட்டுகள் :

நிலம், நீர், நெருப்பு, காற்று என வருவன.

(2) வினைப் பகாப்பதம்:

வினைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் வினைப் பகாப்பதங்கள் எனப்படும்.

எடுத்துக் காட்டுகள் :

நட, வா, உண், தின் முதலியன.

(3) இடைப்பகாப்பதம் :

இடைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் இடைப் பகாப்பதம் எனப்படும்.

எடுத்துக் காட்டுகள் :

மன், கொல், போல், மற்று என்பன.

(4) உரிப் பகாப்பதம் :

உரிச் சொற்களாக வரும் பகாப்பதம் உரிப் பகாப்பதம் எனப்படும்.

எடுத்துக் காட்டுகள் :

கூர், மிகு, உறு, தவ, நனி, கழி

மேலே சுட்டிய எடுத்துக் காட்டுகளில் கண்ட பெயர், வினை, இடை, உரிச் சொற்களைப் பிரித்தால் பொருள் தருவதில்லை; அவை இடுகுறியில், இட்டு வழங்கி வருகின்ற தன்மையில் அமைந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதனை நன்னூல் பின்வருமாறு விளக்குகின்றது.

பகுப்பால் பயனற்று இடுகுறியாகி

முன்னே ஒன்றாய் முடிந்தியல் கின்ற

பெயர் வினை இடை உரி நான்கும் பகாப்பதம்

5.2 பகுபதம்

5.2.1 பகுபதத்தின் இலக்கணம் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறு பெயர்களையும் அடிப்படையாகக் கொண்டு அமையும் பெயர்களும், வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காலம் காட்டும் வினைச்சொற்களும் பகுபதங்கள் ஆகும். இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பகுபதங்கள் ஆக மாட்டா.

5.2.2 பகுபதத்தின் வகைகள் முதல் நிலையில் பகுபதத்தை இருவகையாகப் பிரிக்கலாம். அவை,

(1)பெயர்ப் பகுபதம் (பெயர்ச்சொல்லாக அமையும் பகுபதம்)

(2)வினைப் பகுபதம் (வினைச்சொல்லாக அமையும் பகுபதம்)

பெயர்ப் பகுபதத்தை மேலும் ஆறு வகையாகப் பிரிக்கலாம்.

அவை,

(1)பொருட்பெயர்ப் பகுபதம்

(2)இடப் பெயர்ப் பகுபதம்

(3)காலப் பெயர்ப் பகுபதம்

(4)சினைப் பெயர்ப் பகுபதம்

(5)குணப் பெயர்ப் பகுபதம்

(6)தொழில் பெயர்ப் பகுபதம்

என்பன.

5.2.3 பெயர்ப் பகுபதங்கள் (1) பொருட்பெயர்ப் பகுபதம்

ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பெயர்ப் பகுபதம் பொருட்பெயர்ப் பகுபதம் எனப்படும்.

எடுத்துக்காட்டு :

பொன்னன் – அவன் பொன்னை உடையவன் என்பது பொருள். இதைப் பிரித்தால் (பொன்+அன்) பொருள் தரக் கூடியதாகவும் அமைந்திருக்கின்றது. எனவே இது பொன் என்னும் பொருள் அடிப்படையாகப் பிறந்த பொருட் பெயர்ப் பகுபதம் ஆகும். ( இதைப் போலவே, பிற பெயர்ப் பகுபதங்களும் அமைகின்றன.)

(2) இடப் பெயர்ப் பகுபதம்

இடத்தின் அடிப்படையில் அமைவது இடப்பெயர்ப் பகுபதம் ஆகும்.

எடுத்துக்காட்டு :

விண்ணோர் – ‘விண்‘ என்னும் இடப்பெயரால் அமைந்த பகுபதம்.

அகத்தான் – ‘அகம்‘ என்னும் இடப்பெயரின் அடிப்படையில் அமைந்திருப்பதால் இது இடப் பெயர்ப் பகுபதம் என்று அழைக்கப்படுகிறது.

(3) காலப் பெயர்ப் பகுபதம்:

நாள், திங்கள், ஆண்டு எனவரும் காலப் பெயர்களின் அடிப்படையில் அமையும் பகுபதங்கள் காலப் பெயர்ப் பகுபதங்கள் எனப்படுவன.

எடுத்துக்காட்டு :

கார்த்திகையான் – இது கார்த்திகைத் திங்களில் பிறந்தவன் என்று பொருள்படும். இது காலப் பெயரின் அடிப்படையில் அமைந்திருப்பதால் காலப்பெயர்ப் பகுபதம் ஆகும்.

ஆதிரையாள் – ஆதிரை நாளில் (நட்சத்திரத்தில்) பிறந்தவள் என்று காலப் பெயர் அடிப்படையில் அமைந்த பகுபதம் ஆகும்.

(4) சினைப் பெயர்ப் பகுபதம்

சினை என்பது உறுப்பு என்று பொருள்படும். உறுப்பின் பெயர் அடிப்படையில் அமைந்த பகுபதங்கள் சினைப் பெயர்ப் பகுபதங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டு :

கண்ணன் – இச் சொல்லில் ‘கண்‘ என்பது உடலின் உறுப்பு (சினை). அதன் அடிப்படையில் கண்ணன் எனும் பெயர் அமைந்துள்ளது. இதனை கண் + அன் என்று பிரித்தால் ‘கண்‘ என்பது பொருள்தரும் சொல்லாக அமைகின்றது. எனவே இது சினைப் பெயர்ப் பகுபதம் ஆகும்.

இதைப் போலவே, மூக்கன், பல்லன் என்னும் சினைப் பெயர்ப் பகுபதங்களையும் அறிந்து கொள்ளலாம்.

(5) குணப் பெயர்ப் பகுபதம்:

ஒரு பண்பைக் (குணம்) குறிக்கும் சொல்லின் அடிப்படையில் அமையும் பெயர் குணப் பெயர்ப் பகுபதம் எனப்படும்.

எடுத்துக்காட்டு :

கரியன், – இச் சொல் கருமை என்னும் பண்புப் பெயரின் அடிப்படையில் அமைந்தது.

(6) தொழிற் பெயர்ப் பகுபதம்:

தொழிலின் பெயரை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பெயர்ச் சொற்கள் தொழிற் பெயர்ப் பகுபதங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டு :

தட்டான், தச்சன் எனவரும் பெயர்ச் சொற்கள் தொழிற்பெயரால் அமைந்தவை.

5.2.4 வினைப் பகுபதங்கள் பெயர்ப் பகுபதங்கள் ஆறு வகைப்படும் என்பதைக் கண்டோம். இனி, வினைப் பகுபதங்களின் வகைகளைக் காண்போம்.

தெரிநிலை (வெளிப்படையாக)யாகவும் குறிப்பாகவும் காலத்தைக் காட்டும் வினைச் சொற்கள் வினைப் பகுபதங்கள் எனப்படுவன. வினைப் பகுபதங்களை முதலில் இரு வகையாகப் பிரித்துக் காணலாம். அவை,

(1)வினைமுற்றுப் பகுபதம்

(2)வினையாலணையும் பெயர்ப் பகுபதம்

என்பன.

வினைமுற்றுப் பகுபதம் இருவகைப்படும். அவை,

(1)தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம்

(2)குறிப்பு வினைமுற்றுப் பகுபதம்

என்பன.

தெரிநிலை, குறிப்பு வினைமுற்றுப் பகுபதங்களின் விளக்கங்களைக் காணலாம்.

(1) தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் : ஒரு வினைப் பகுபதம் காலத்தை வெளிப்படையாகக் காட்டுமானால் அது தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் எனப்படும்.

எடுத்துக்காட்டு :

நடந்தான், நடக்கின்றான், நடப்பான் – எனவரும் வினைமுற்றுகளில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று காலங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. இவ்வாறு வினை நிகழ்ந்த காலம் வெளிப்படையாகத் தெரிவதால் இவை தெரிநிலை வினைமுற்றுகள் எனப்படுகின்றன. தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் எதிர்மறையாகவும் வரும்.

எடுத்துக்காட்டு : நடவான்

(2) குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் : ஒரு வினைப் பகுபதம் காலத்தைக் குறிப்பால் உணர்த்துமானால் அது குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் எனப்படும். குறிப்பு வினை என்பது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறுவகைப் பெயர்களின் அடிப்படையாகத் தோன்றி, வினைச்சொல்லின் பொருளைத் தருவது எனப்படும்.

எடுத்துக் காட்டு :

பொன்னன், ஊணன், அற்று, இற்று எனவரும் சொற்களில் காலம் தெரிநிலையாக வெளிப்படவில்லை. ஆனால் இச்சொற்களில் காலம் குறிப்பால் உணர்த்தப்படுகின்றது. அவன் பொன்னனாக இருந்தான், பொன்னனாக இருக்கிறான், பொன்னனாக இருப்பான் எனப் பொருள் வரும் போது காலம் குறிப்பாக உணரப்படுகிறது. எனவே இவை குறிப்பு வினை முற்றுகள் எனப்படுகின்றன.

குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் எதிர்மறையிலும் வரும்.

எடுத்துக் காட்டு : அவன் இல்லாதவன்.

தெரிநிலையாகவும் குறிப்பாகவும் காலம் காட்டும் பெயரெச்சங்களும் வினையெச்சங்களும் வினைப் பகுபதங்களே.

பெயர் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம்.

எடுத்துக் காட்டு :

(1)உண்ட பையன்

(2)ஓடாத குதிரை

இத் தெரிநிலை வினைகள் பையன், குதிரை என்ற பெயர்ச்சொற்களைக் கொண்டு பொருள் முடிவு பெறுகின்றன. எனவே, இவை தெரிநிலைப் பெயரெச்சப்பகுபதம் எனப்படும்.

மற்றொரு வினைமுற்றைக் கொண்டு பொருள் நிறைவடையும் வகையில் அமையும் எச்சம் வினையெச்சப் பகுபதம் எனப்படும்.

எடுத்துக்காட்டு :

உண்டு வந்தான்

உண்ண வருகின்றான்

உண்டு, உண்ண எனவரும் வினைகள், வந்தான், வருகின்றான், என்னும் வினைமுற்றுகளைக் கொண்டு பொருள் முடிவைப் பெறுகின்றன.

குறிப்புப் பெயரெச்சம், குறிப்பு வினையெச்சம் இவை காலத்தைக் குறிப்பாகக் காட்டுவன.

எடுத்துக்காட்டு :

பெரிய பையன் – பெயரெச்சம்

மெல்ல வந்தான் – வினையெச்சம்

இதுவரையில் வினைமுற்றுப் பகுபதங்களை மட்டும் கண்டோம். இனி வினையாலணையும் பெயர்ப் பகுபதங்களைப் பற்றிக் காணலாம். அவை, இருவகைப் படும்.

(1) தெரிநிலை வினையாலணையும் பெயர்ப் பகுபதம்.

எடுத்துக்காட்டு : நடந்தானைக் கண்டேன், நடந்தவனைக் கண்டேன் என்பன. இவை காலத்தை வெளிப்படையாகக் காட்டுகின்றன.

(2) குறிப்பு வினையாலணையும் பெயர்ப் பகுபதம்:

எடுத்துக்காட்டு : பொன்னனைக் கண்டேன்,

இது காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. குறிப்பாகவே காலம் உணர்த்தும்.

5.3. பகுபத உறுப்புகள்

ஒரு பதத்தைப் பிரித்தால் அது பொருள் தருமானால் அது பகுபதம் என்று கண்டோம் அல்லவா? அவ்வாறு ஒரு பகுபதம் பிரிந்து நிற்கும் நிலையில் அமையும் உறுப்புகள் பகுபத உறுப்புகள் எனப்படுவன. இப்பகுபத உறுப்புகள் ஆறு. அவை,

(1)பகுதி

(2)விகுதி

(3)இடைநிலை

(4)சாரியை

(5)சந்தி

(6)விகாரம்

ஆகியன.

இப்பகுபத உறுப்புகளைப் பின்வரும் நன்னூல் நூற்பா தொகுத்துக் கூறுகின்றது.

பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை,

சந்தி, விகாரம் ஆறினும் ஏற்பவை

முன்னிப் புணர்ப்ப முடியும் எப்பதங்களும்

என்பது நூற்பா(133).

இந்த ஆறு உறுப்புகளையும் அறிவுடையோர் கூட்டிச் சேர்த்தால் எல்லாவிதமான பகுபதங்களும் அமையும் என்பது பொருள்

இனி, இந்த ஆறு உறுப்புகள் ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

பெயர்ப்பகுபதம் :வேலன்

வேல் + அன்.

இதில் வேல் – பகுதி

அன் – விகுதி

வினைப் பகுபதம் :செய்தான்

செய்+த்+ஆன்

இதில் செய் – பகுதி

த் – இடைநிலை

ஆன் – விகுதி.

எனவே ஒருபகுபதம் பகுதி, விகுதி ஆகிய இரு உறுப்புகளைப் பெற்றுவரலாம்: இவ்விரண்டோடு இடைநிலையைப் பெற்றும் வரலாம்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் பகுபத உறுப்புகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டுத் தரப்பட்டன. இனி ஆறு பகுபத உறுப்புகளையும் பற்றிக் காண்போம்.

5.3.1 பகுதி பகுதி ஒரு பகுபதத்தின் முதலில் அமையும் உறுப்பு ஆகும். எனவே இதனை முதனிலை என்றும் வழங்கலாம்.

உண்டான் என்னும் பகுபதத்தில் (உண்+ட்+ஆன்) உண் என்பது பகுதியாகும்.

5.3.2 விகுதி விகுதி பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு என்பதால் இதனை இறுதிநிலை என்றும் வழங்குவது மரபு. பகுதியின் பொருளை, அதற்குப் பின்னால் வந்து நின்று விகாரப் படுத்துவதால் (வேறுபடுத்திக் காட்டுவதால்) இது விகுதி என்ற பெயர் பெற்றது என்பர்.

உண்டான் என்னும் பகுபதத்தில் (உண்+ட்+ஆன்) ஆன் என்பது விகுதி ஆகும். இது திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டுகிறது.

5.3.3 இடைநிலை இடைநிலை, முதனிலைக்கும் (பகுதி) இறுதிநிலைக்கும் (விகுதி) இடையில் நிற்கும் உறுப்பு என்பதால் இடைநிலை என்னும் பெயர் பெறுகின்றது. வினைப் பகுபதத்தில் இடைநிலை காலம் காட்டும் உறுப்பு ஆகும்.

உண்+ட்+ஆன் என்னும் பகுபதத்தில் – உண் : முதனிலை

ட் : இடைநிலை

ஆன் : இறுதிநிலை.

என ‘இடைநிலை‘ – பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்திருத்தலைக் காணலாம்.

5.3.4 சாரியை சாரியை, பெரும்பான்மையாக, இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் உறுப்பு ஆகும். சிறுபான்மையாகச் சந்திக்கும் விகுதிக்கும் இடையிலும் வரும். சாரியை = சார்ந்து இயைந்து நிற்பது. தனக்கெனப் பொருள் எதுவும் இன்றிப் பிற உறுப்புகள் இணையும்போது இடையில் வருவது.

வந்தனன் என்னும் சொல் ‘வா+த்+த்+அன்+அன்‘

என்று பிரிந்து நிற்கும். இதில்,

வா-பகுதி

த்-சந்தி

த்-இடைநிலை

அன்-சாரியை

அன்-விகுதி,

‘த்’ இடைநிலைக்கும், ‘அன்‘ விகுதிக்கும் இடையில் சாரியை வந்துள்ளதைக் காணலாம்.

5.3.5 சந்தி சந்தி பெரும்பாலும் முதனிலை (பகுதி)க்கும் இடைநிலைக்கும் இடையில் வரும். பகுதிக்கும் விகுதிக்கும் இடையிலும் சிறுபான்மை வரக்கூடும். உறுப்புகளின் இணைவில் (சந்தி), அவற்றை இணைக்க வருவது சந்தி.

நடத்தல் என்னும் பகுபதம் நட+த்+தல் என்று பிரிந்து வரும்.

இதில் -நட -பகுதி

த்-சந்தி

தல்-விகுதி

பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் ‘த்‘ சந்தி வந்திருப்பதைக் காண முடிகிறது.

5.3.6 விகாரம் விகாரம் என்று தனியாக ஓர் உறுப்பு இல்லை. பகுதியும் சந்தியும் மாற்றம் அடையலாம். அல்லது சந்தி மட்டும் மாற்றம் அடைந்து வரலாம். இவ்வாறு மாற்றம் பெறுவதை ‘விகாரம்‘ என்பர்.

எடுத்துக்காட்டு :

வந்தனன் -வா+த்+த்+அன்+அன்

வா -பகுதி

த் -சந்தி

த் -இடைநிலை

அன் -சாரியை

அன் -விகுதி

இதில் வரும் வா என்னும் பகுதி வ எனக் குறுகியும், த் என்னும் சந்தி ந் என்று மாற்றம் அடைந்தும், விகாரமாகியுள்ளன.

5.4 பகுதி - விளக்கம்

பகுபத உறுப்புகள் ஆறு என்று கண்டோம். அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ஆகியன. இவற்றுள் முதலாவதாக இருக்கும் ‘பகுதி‘ அமையும் தன்மையை விரிவாகக் காண்போம்.

5.4.1 பகுதியின் பொது இயல்பு பெயர்ப் பகுபதங்கள், வினைப் பகுபதங்கள் என இருவகையாகப் பகுபதங்கள் அமைவதை முன்னரே கண்டோம். எனவே இவ்விரு பகுபதங்களிலும் முதலில் நிற்கும் ‘பகாப்பதங்களே’ பகுதிகளாகும். பகுதியைப் ‘பகாப்பதங்கள்’ என்று குறிப்பிடுவதன் காரணம் என்னவென்று நீங்கள் கருதலாம். ஒரு பகுபதத்தின் முதலில் உள்ள உறுப்பு பகுதி. அதை மேலும் பிரிக்க முடியாது. ஆகவே ‘பகுதி’யைப் ‘பகாப்பதம்’ எனக் குறிப்பிடுவர்.

இதனைப் பின்வரும் நன்னூல் நூற்பா விளக்குகின்றது.

தத்தம் பகாப்பதங்களே பகுதி யாகும் (134)

என்பது நூற்பா,

5.4.2 பெயர்ப் பகுபதப் பகுதி பெயர்ப்பகுபதங்களின் பகுதிகள் பெயர், வினை, இடை, உரிச் சொற்களாக அமைகின்றன.

(1)பொன்னன் – இதன் பகுதி பொன். இது பெயர்ப் பகுதிக்கு எடுத்துக்காட்டாகும்.

(2)அறிஞன் – இதில் அறி என்னும் பகுதி வினைப்பகுதிக்கு எடுத்துக் காட்டாகும்.

(3)பிறன் என்னும் சொல்லில் பகுதி பிற என்பதாகும். இதில் ‘பிற‘ என்பது இடைச்சொல்லாகும். இது இடைச் சொல் பகுதி.

(4)கடியவை என்னும் பெயர்ப்பகுபதத்தின் பகுதி கடி என்பதாகும். இதன் பகுதியான ‘கடி‘ என்பது உரிச்சொல். எனவே இது உரிச்சொல் பகுதி.

5.4.3 வினைப் பகுபதப் பகுதி வினைப் பகுபதங்களில் பகுதியாகப் பெரும்பாலும் வினைச் சொற்களே வருகின்றன. சிறுபான்மை இடைச் சொற்களும் உரிச் சொற்களும் வருதல் உண்டு.

(1)நின்றான், இதில் நில் என்பதும், நடந்தான் என்பதில் நட என்பதும் வினைப் பகுதிகள். இங்கு வினைச்சொற்களே பகுதிகள் ஆயின.

(2)போன்றான் என்பதில் போல் என்பது இடைச்சொல்; இங்கு இடைச்சொல் வினைப்பகுதியாக உள்ளது.

(3)

சான்றோன், கூர்ந்தான் என்பனவற்றில் வரும் சால், கூர் என்பவை உரிச்சொற்கள் வினைப்பகுதியாக வந்தமைக்கு எடுத்துக்காட்டுகள்.

5.4.4 பண்புப் பெயர்ப் பகுதிகளும் அவை அடையும் மாற்றங்களும்

பெயர்ப் பகுபதங்கள் ஆறு வகைப்படும். அவை பொருள், இடம், காலம், சினை, குணம் (பண்பு), தொழில் எனப்படுவன. இந்த ஆறுவகைப் பதங்களில் பண்புப் பெயர்ப் பகுபதங்கள். பிற பெயர்ப் பகுபதங்களில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றன. பண்புப் பெயர்களின் தனி அமைப்பே அதற்குக் காரணம். அவற்றின் தனித் தன்மையை நன்னூலார் நன்கு விளக்கிச் செல்கிறார்.

கரியன் என்னும் பண்புப் பெயர்ப் பகுபதத்தைப் பிரித்தால், அது,

கருமை+அன் என்று அமையும். இதில் ‘கருமை‘ என்பது பகுதி ‘அன்’ என்பது விகுதி. இதில் கருமை என்பதை, கரு+மை என மேலும் பிரிக்க இயலும் எனினும், இதில் வரும் ‘மை’ என்பதற்குப் பகுதிப் பொருளே அன்றி வேறு பொருள் இல்லை. ஆகவே, ‘கருமை’ என்பது பொருள் நிலையில் பகுக்கவியலாத தன்மையில் அமைந்துவிட்டது. எனவே ‘கருமை’ என்பதே பகாப் பதமாக நின்று, பகுபதத்தின் பகுதியாகி உள்ளது. இதனையே,

செம்மை, சிறுமை, சேய்மை, தீமை

வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை

திண்மை, உண்மை, நுண்மை, இவற்று எதிர்

இன்னவும் பண்பின் பகாநிலைப் பதமே

என்னும் நூற்பாவில் (135) நன்னூல் விளக்குகின்றது.

செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை, திண்மை, உண்மை, நுண்மை எனவரும் பண்புப் பெயர்ப் பகுபதங்களின் பகுதிகள் பகுபதங்களாக இருப்பினும், அவை பொருள் நிலையில் பகாப்பதங்களாக இருப்பதால் பகுதிகளாகவே கொள்ளப்படுகின்றன என்று இந்நூற்பா கூறுகிறது.

மேலே கண்ட பண்புப் பெயர்ப் பகுதிகளுடன் அவற்றிற்கு எதிரான பண்புப் பெயர்ப் பகுதிகளும் பொருள் நிலையில் பகாப்பதங்களே. அவை முறையே

செம்மை xவெண்மை, கருமை, பொன்மை, பசுமை

சிறுமை xபெருமை

சேய்மை xஅண்மை

தீமைxநன்மை

வெம்மை xதண்மை

புதுமை xபழமை

மென்மை xவன்மை

மேன்மை xகீழ்மை

திண்மை xநொய்மை

உண்மை xஇன்மை

நுண்மை xபருமை.

எனவருவன.

மேலே கண்ட பண்புப் பெயர்ப் பகுதிகள் பிற சொற்களோடு சேர்ந்து (புணர்ந்து) வரும்போது சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த மாற்றங்கள் ஏழு வகைகளில் நிகழ்கின்றன என்பர். ஒரு பண்புப்பெயர்ப் பகுபதம் பிற சொல்லோடு புணரும் போது இந்த ஏழுவகை மாற்றங்களில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவையோ ஒரே சொல்லில் வந்து அமையலாம். அம் மாற்றங்கள் பின்வருவன:

(1)ஈறுபோதல்

(2)இடை ‘உ‘கரம் ‘இ‘ ஆதல்

(3)ஆதி நீடல்

(4)அடி அகரம் ‘ஐ‘ ஆதல்

(5)தன் ஒற்று இரட்டல்

(6)முன்நின்ற மெய்திரிதல்

(7)இனம் மிகல்

இந்த மாற்றங்களை எல்லாம் பின்வரும் நன்னூல் நூற்பா தொகுத்துக் கூறுதல் காணலாம்.

ஈறு போதல், இடைஉகரம் ‘இ‘ ய்யாதல்

ஆதி நீடல், அடிஅகரம் ‘ஐ‘ ஆதல்

தன்ஒற்று இரட்டல், முன்நின்ற மெய்திரிதல்,

இனம்மிகல், இனையவும் பண்பிற்கு இயல்பே

(136)

இனி, இந்த மாற்றங்கள் ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

(1) ஈறுபோதல்

சிறுவன் – சிறுமை + அன், நல்லன் – நன்மை+அன் இவற்றில் ஈற்றில் உள்ள ‘மை‘ விகுதி கெட்டது

(2) இடை ‘உ‘கரம் ‘இ‘ ஆதல்

பெரியன் – பெருமை + அன்

இவற்றில் ‘மை‘ கெட்டது மட்டுமன்றிப் பெருமை, கருமை என்பதில் இடையில் உள்ள உகரம், இகரமாக ஆகியுள்ளது.

கரியன் – கருமை + அன்

(3) ஆதிநீடல் (முதல் எழுத்து நீண்டு வருதல்)

பசுமை + இலை = பாசிலை. பசுமை + இலை. பசுமை என்பதில் உள்ள முதல் எழுத்தான பகரம் நீண்டு ‘பா‘ ஆகியுள்ளது. ‘சு‘ என்பதில் உள்ள உகரம் ‘சி‘ என இகரமாயிற்று. ‘மை‘ விகுதிகெட்டது. எனவே பாசிலை என்றாயிற்று.

(4) அடி அகரம் ‘ஐ‘ ஆதல்

பைங்கண் என்பது பசுமை + கண் – பைங்கண். பசுமை என்பதில் உள்ள அடி (முதல்) எழுத்தான ப(ப்+அ) இல் உள்ள அகரம் பை (ப்+ஐ) என ஆகியுள்ளது. ‘மை‘ கெட்டுள்ளது. ‘சு‘ என்பதும் கெட்டுள்ளது.

(5) தன் ஒற்று இரட்டல்

வெற்றிலை = வெறுமை + இலை என்பது வெற்றிலை என்றாகிறது. இதில் று (ற்+உ) இல் உள்ள ஒற்றான ‘ற்‘ இரட்டித்துள்ளது. ‘மை‘ கெட்டுள்ளது.

(6) முன்நின்ற மெய்திரிதல்

செம்மை + ஆம்பல் – சேதாம்பல் என்றாயிற்று. இதில் ‘மை‘ விகுதி கெட்டது. ஆதி செ – சே என நீண்டது. ‘செம்‘ முன்னின்ற ‘ம்‘ ‘த்‘ என்னும் மெய்யாகத் திரிந்துள்ளது.

(7) இனம் மிகல்

பசுமை + தழை என்பது பசுந்தழை என்றாகும். இதில் ஈற்றில் உள்ள ‘மை‘ கெட்டது. ‘தலை‘ என்னும் சொல்லில் உள்ள ‘த்‘ என்னும் மெய்க்கு இனமான ‘ந்‘ என்னும் நகரமெய் மிகுந்துள்ளது (தோன்றியுள்ளது).

5.4.5 வினைப் பகுபதங்களின் பகுதிகள் இதுவரை பண்புப் பெயர்ப் பகுபதங்களின் பகுதிகள் பற்றி விரிவாகக் கண்டோம் இனி, வினைப் பகுபதங்களின் பகுதிகள் எவ்வாறு அமைகின்றன என்பதைக் காணலாம்.

முதலில் தெரிநிலை வினைப் பகுபதத்தின் பகுதிகளைக் காண்போம். தெரிநிலை வினைப் பகுதிகள் செய் என்னும் ஏவல் பகாப்பதங்களாகவும் அமையும். இதனை,

நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை,

நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின்,

தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்று

எய்திய இருபான் மூன்றாம் ஈற்றவும்

செய் என் ஏவல் வினைப் பகாப்பதமே

என்னும் நன்னூல் (137) நூற்பா விளக்குகின்றது. இதில் நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை, நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்று வரும் இருபத்து மூன்றும் ‘செய்‘ என்னும் வாய்பாட்டில் அமைந்த ஏவலுக்குப் பகுதியாகவும் வரும்; பிற தெரிநிலை வினைகளுக்குப் பகுதியாகவும் வரும்.

இவை ஏவலாய் வரும் இடத்து நடப்பாய், வருவாய், தின்பாய் என்பவற்றில் நட, வா, தின் என்ற வினைப்பகுதிகளைப் பெற்று வரும்.

இவை வினைமுற்றுப் பகுபதங்களாய் வருமிடத்து இவற்றின் ‘வினைப்பகுதி‘ பின்வருமாறு அமையும்:

நடந்தான் நட

வந்தான் வா

மடிந்தான் மடி

சீத்தான் சீ

விட்டான் விடு

கூவினான் கூ

வெந்தான் வே

நொந்தான் நொ

போனான் போ

வௌவினான் வௌ

உரிஞினான் உரிஞ்

உண்டான் உண்

பொருநினான் பொருந்

திருமினான் திரும்

தின்றான் தின்

தேய்ந்தான் தேய்

பாய்ந்தான் பாய்

சென்றான் செல்

வவ்வினான் வவ்

வாழ்ந்தான் வாழ்

கேட்டான் கேள்

அஃகினான் அஃகு

மேலே காணும் வினை முற்றுகளில்

சீத்தான் என்பது சீவினான் என்றும்,

உரிஞினான் என்பது தேய்த்தான் என்றும்

பொருநினான் என்பது பொருந்தினான் என்றும்,

திருமினான் என்பது திரும்பினான் என்றும்

அஃகினான் என்பது சுருங்கினான் என்றும்

பொருள்படுவன.

இந்த 23 வினைப்பகுதி வாய்பாடுகளுக்கும் பொது வாய்பாடு ‘செய்‘ என்பதாகும்.

5.4.6 வினைப் பகுபதப் பகுதிகள் அடையும் மாற்றங்கள் மேலே கண்ட 23 பகுதிகள் விகுதிகளுடன் புணரும் போது சில பகுதிகள் இயல்பாக வரும். சில விகாரப்பட்டு வரும்.

(1) இயல்பாக வருதல்

நட+ஆன் -நடந்தான்

பார்+ஆன் -பார்த்தான்

(2) விகாரம் அடைந்து வருதல்

தா + ஆன் – தந்தான். இதில் ‘தா‘ – தகரமாகக் குறுகியுள்ளது

சா + ஆன் – செத்தான் – இதில் ச்+ஆ (சா) என்பது (ச்+எ) செ ஆகத் திரிந்துள்ளது.

5.4.7 தன்வினை ஏவல் பகுதிகள் பிறவினைப்பகுதிகளாக மாறுதல்

ஒரு செயலைத் தானே செய்வது தன்வினை. பிறரைக் கொண்டு செய்விப்பது பிறவினை. நட, வா, என வரும் 23 வினைகளும் தன்வினைப் பகுதிகள் ஆகும். இவற்றிற்கான பிறவினைப் பகுதிகளைக் காண்போம்.

இத் தன்வினை ஏவல் பகுதிகள் பிறவினைப் பகுதிகளாக மாறுதற்கு உரிய இலக்கணத்தை நன்னூலார் வகுத்துள்ளார்.

‘செய்’ என்னும் வினைப் பகுதியின் பின் ‘வி‘ என்பதோ அல்லது ‘பி‘ என்பதோ தனித்து வருமாயின் அது ‘செய்வி‘ என்னும் வாய்பாட்டு ஏவல் பகுதியாகும். அந்த வினையுடன் இவ்விரு விகுதிகளில் ஏதேனும் ஒன்று தன்னுடன் தானோ (பி+பி) தன்னுடன் பிறவோ (பி+வி அல்லது வி+பி) இணைந்து வருமாயின் அது செய்விப்பி என்னும் வாய்பாட்டு ஏவல் பகுதியாகும். இரு விகுதிகள் சேர்ந்து வருவது ஈரேவல் எனப்படும்.

வரு+வி – வருவி – ‘வி’ தனித்து வந்துள்ளது நடப்பி – நட+பி – பி தனித்து வந்துள்ளது நட+பி+பி – நடப்பிப்பி – ‘பி’ தன்னுடன் தான் பி+ பி என இணைந்து வந்துள்ளது. நடப்பிவி – இதில் நட+பி+வி என்று ‘பி’ யுடன் ‘வி’ இணைந்து வந்துள்ளது. ‘வி’ என்னும் விகுதி தன்னுடன் தான் இணைந்து வருவதில்லை.

இவை விகுதியுடன் சேர்ந்து வருவியாய், வருவிப்பாய், நடப்பியாய், நடப்பிப்பாய் என வரும். இதனை,

செய்என் வினைவழி ‘வி‘ப்‘பி‘ தனிவரின் செய்விஎன் ஏவல்; இணையின் ஈர்ஏவல்

என்னும் நூற்பா (138) விளக்குகிறது.

இவையே அல்லாமல் ஏவல் வினைப் பகுதிகள் பின்வரும் மூன்று முறைகளிலும் பிறவினையாக மாறுகின்றன. அவை,

(1)கு, சு, டு, து, பு, று என்ற விகுதிகளைப் பெற்றுப் பிறவினையாக மாற்றம் அடைகின்றன.

(2)சிலபகுதிகளில் இடையில் உள்ள மெல்லின மெய் வல்லின மெய்யாகத் திரிகின்றன.

(3)சில பகுதிகளில் நடுவில் மெய் இரட்டித்துப், பிறவினையாய் வருகின்றன.

(1) கு, சு, டு, து, பு, று என்ற விகுதிகளைப் பெற்றுப் பிறவினையாதல்

(1)போ + கு-போக்கு-கு விகுதி

(2)பாய் + சு-பாய்ச்சு-சு விகுதி

(3)உருள் + டு-உருட்டு-டு விகுதி

(4)நட + து – நடத்து-து விகுதி

(5)எழு + பு -எழுப்பு-பு விகுதி

(6)துயில் + று-துயிற்று-று விகுதி

(2) மெல்லின மெய்கள் வல்லின மெய்களாதல்

திருந்து – திருத்து – ந்- த் ஆதல்

தோன்று – தோற்று – ன்- ற் ஆதல்

(3) நடுவில் மெய் இரட்டித்தல்.

உருகு – உருக்கு – க் – க்க் – ஆதல்

ஆடு – ஆட்டு – ட் – ட்ட் – ஆதல்

தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவான வினைப்பகுதிகள்

தன்வினைகளுக்கும் பிறவினைகளுக்கும் பொதுவான வினைப் பகுதிகளும் உள்ளன. அவை,

கரை, தேய், மறை, உடை, அலை, சேர், மடி என்பன.

கரைந்தான், தேய்ந்தான் என்று மெல்லின மெய் பெற்றுத் தன்வினையாக வருவன. இவையே,

கரைத்தான், தேய்த்தான் என்று வல்லின மெய் பெற்றுப் பிறவினையாக வருவன.

5.4.8 ஏனைய வினைப் பகுதிகள் பிறவினை ஆதல் ‘நடவாய்’ என்னும் ஏவல் வினைமுற்றில் உள்ள ‘நட’ முதலான பகுதிகள் ‘நடப்பியாய்’, ‘நடப்பிப்பியாய்’ என்று பிற வினையாக வருவதைப் போல, ‘நடப்பித்தான்’, ‘நடப்பிப்பித்தான்’ என்ற முறையில் ஏனைய வினைப் பகுதிகளும் பிறவினையாக வரும். இதற்கான இலக்கண அமைதியை, ‘விளம்பிய பகுதி வேறாதலும் விதியே’ என்னும் நன்னூல் நூற்பா (139) விளக்கிச் செல்கிறது.

5.5 தொகுப்புரை

இந்தப் பாடத்தில் பகாப்பதம், பகுபதம் ஆகியவற்றின் வகைகள் விளக்கப் பெற்றன.

பகாப்பதம் பெயர், வினை, இடை, உரி என நான்கு வகைப்படும் என்பது எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டது. பகுபதம் பெயர்ப்பகுபதம் என்றும் வினைப்பகுபதம் என்றும் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றது.

அடுத்ததாக வரும் வினைப்பகுபதங்களும் வினைமுற்று, வினையாலணையும் பெயர் என்று இருவகையாகப் பிரித்துக் காட்டப்பட்டன. இவற்றுள் வினைமுற்றுப் பகுபதம் தெரிநிலை என்றும் குறிப்புவினை என்றும் வகைப் படுத்தப்பட்டன. பெயரெச்சங்களும், வினையெச்சங்களும் பகுபதங்களாக அமைவதற்கான இலக்கணக் கூறுகள் விளக்கப்பட்டன.

வினையாலணையும் பெயர்ப் பகுபதங்கள் தெரிநிலை என்றும் குறிப்பு என்றும் இருவகைப்படும் என்பது எடுத்துக் காட்டுகளுடன் விளக்கப்பட்டது.

அடுத்ததாகப் பகுபதத்தின் உறுப்புகள் ஆறும் விளக்கப்பட்டன. அவை, ஒருபகுபதத்தில் வந்தமையும் பாங்கும் எடுத்துக் காட்டுகளுடன் காட்டப்பட்டது.

பகுபத உறுப்புகள் ஆறனுள் ‘பகுதி’ என்பது குறித்து விரிவாகக் கூறப்பட்டது. ஒரு பகுபதத்தின் முதலில் நிற்கும் ‘பகாப்பதமே’ பகுதி என்பதும், பெயர்ப்பகுபதத்திலும் வினைப்பகுபதத்திலும் வரும் பகுதிகள், எவ்வாறு வரும் என்பதும் விளக்கப்பட்டன.

பண்புப் பெயர்ப் பகுபதத்தின் பகுதிகளாக வரும் செம்மை, சிறுமை என்பனவற்றின் தன்மையும் இவை பிற சொற்களோடு புணரும் போது அடையும் மாற்றங்களும் விளக்கிக் கூறப்பட்டன.

தெரிநிலை வினைமுற்றுப் பகுபதத்தின் பகுதிகள். இவை ‘செய்’ என்னும் ஏவல் பகாப்பதங்களாகவும் அமையும் என்பதும் காட்டப்பட்டது. நட, வா, மடி, சீ எனவரும் 23 ஏவல்மற்றும் தெரிநிலைப் பகாப்பதங்களின் பட்டியல் எடுத்துக் காட்டப்பட்டது. இவை பிறவினையாய் வரும் முறைகள் எடுத்துக்காட்டப்பட்டன.

பாடம் - 6

பகாப்பதமும் பகுபதமும் – பகுதி II

6.0 பாட முன்னுரை

பதவியல் தொடர்பான முந்தைய பாடத்தில் பகுபதத்தின் இலக்கணத்தை அறிந்து கொண்டோம். அதன் உறுப்புகள் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் ஆகிய ஆறு என்பதையும் தெரிந்து கொண்டோம். மேலும் சென்ற பாடத்தில் பகுபதத்தின் பகுதி குறித்து விரிவான பல செய்திகளையும் அறிந்தோம். இந்தப் பாடத்தில் பகுபத உறுப்புகளில் விகுதி, இடைநிலை ஆகிய இரண்டு குறித்தும் விளக்கமாகக் காண்போம்.

6.1 விகுதி - அறிமுகம்

பகுபதத்தில் கடைசியில் நிற்கும் உறுப்பு விகுதி ஆகும். இதனை இறுதிநிலை என்றும் கூறுவர். இந்த விகுதியைப் பலவாறாகப் பகுத்துக் கூறுகிறது தமிழ் இலக்கணம்.

விகுதிகளின் எண்ணிக்கை

நன்னூல் ‘அன்’ என்று தொடங்கி, ‘உம்’ என்று முடியும் 37 விகுதிகளைத் தொகுத்துக் கூறுகின்றது. அவை,

அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார்

அ, ஆ, கு, டு, து, று, என், ஏன், அல், அன்

அம், ஆம், எம், ஏம், ஓம்

கும், டும், தும், றும்

ஐ, ஆய், இ, மின், இர், ஈர், ஈயர்,

க, ய, உம் – என்பனவாம்.

இந்த விகுதிகளை நன்னூல் நூற்பா (140) தொகுத்துக் கூறுகிறது. இவற்றுள் கு, டு, து, று என்னும் நான்கும் தன்மை ஒருமை விகுதிகள். இவற்றுக்குள் து, று, டு என்னும் அஃறிணை ஒன்றன்பால் விகுதிகளும் அடங்கியுள்ளன. ஆகவே விகுதிகளின் மொத்த எண்ணிக்கை 40 ஆகும்.

விகுதிகளின் வகைகள்

விகுதிகளின் எண்ணிக்கையை 40 என்று நன்னூல் தொகுத்துத் தந்துள்ள போதிலும் அவற்றை முதல்நிலையில் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

(1)வினைமுற்று விகுதிகள்

(2)பெயர் விகுதிகள்

6.1.1 தெரிநிலை வினைமுற்று விகுதிகள் காலத்தை வெளிப்படையாகக்காட்டும் வினைமுற்றுகள் தெரிநிலை வினை முற்றுகள் என்பதை முன்னரே அறிந்துள்ளீர்கள். இவ்வகையில் தெரிநிலை வினைமுற்றுகளுக்கு விகுதியாய் வருபவை தெரிநிலை வினைமுற்று விகுதிகள் ஆகும். இத்தெரிநிலை வினைமுற்று விகுதிகள் தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூவிடங்களிலும் வருவன.

I. படர்க்கை வினைமுற்று விகுதிகள்:

(1)நடந்தனன், நடந்தான் – அன் – ஆன் – ஆண்பால்

(2)நடந்தனள், நடந்தாள் – அள், ஆள் – பெண்பால்

(3)நடந்தனர், நடந்தார் நடப்ப, நடமார் – அர், ஆர், – ப, மார் – பலர்பால்

(4)நடந்தன, நடவா – அ, ஆ – பலவின்பால்

(5)குறுந்தாட்டு, நடந்தது, போயிற்று – டு, து, று – ஒன்றன்பால்

(குறுந்தாட்டு = குறுகிய தாள்களை உடையது.)

II. தன்மை வினைமுற்று விகுதிகள்

தன்மை வினைகளைச் சுட்டும் வினைமுற்றுகளில் அமையும் விகுதிகளைத் தன்மை வினைமுற்று விகுதிகள் என்கிறோம்.

முதலில் தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகளைக் காண்போம்.

கு, டு, து, று. என்னும் விகுதிகள்:

யான் நடக்கு (நடப்பேன்) உண்டு (உண்டேன்) நடந்து (நடந்தேன்) சேறு (செல்வேன்)

இவை இன்று வழக்கில் இல்லை. இவற்றோடு என், ஏன், அல், அன் என்பனவும் தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் ஆகும்.

யான்

நடந்தனென், நடந்தேன் – என், ஏன்

நடப்பல், நடப்பன் – அல், அன்

நடப்பல் என்பது நடப்பேன் என்று பொருள்படும்.

தன்மைப் பன்மை வினை முற்று விகுதிகள்:

அம், ஆம், எம், ஏம், ஓம், கும், டும், தும், றும் ஆகியவை தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள் ஆகும்

யாம்

நடப்பம் – நடப்பாம் – அம், ஆம் நடப்பெம் – நடப்பேம் – எம், ஏம் நடப்போம், – ஓம்

யாம்

நடக்கும், உண்டும், நடந்தும், சேறும் – கும், டும், தும், றும்.

III. முன்னிலை வினைமுற்று விகுதிகள்

முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள்:

நடந்தனை, நடந்தாய், நடத்தி – ஐ, ஆய், இ முன்னிலை ஒருமை விகுதிகள்

(நடத்தி என்பது நடப்பாய் என்று பொருள்படும்.)

முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள்:

நடமின் – மின்

நடந்தனிர் – இர்

நடந்தீர் – ஈர்

முன்னிலைப் பன்மை விகுதிகள்

இவற்றோடு வியங்கோள் வினைமுற்று விகுதிகளையும் ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டு வினைமுற்று விகுதியையும் சேர்த்துக் காண்பது பொருத்தமாகும்.

வியங்கோள் வினைமுற்று விகுதிகள்:

நிலீயர் – ஈயர்

நிற்க – க

வாழிய – ய

செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று விகுதி, ‘உம்’ என்பதாம்.

அவன் நடக்கும் – உம

6.1.2 குறிப்பு வினைமுற்று விகுதிகள் வினைமுற்று விகுதிகளில் அடுத்ததாக வருபவை குறிப்பு வினைமுற்று விகுதிகள் ஆகும். இவை குறிப்பாகக் காலங்காட்டுவன என்பதால், மேலே கண்ட விகுதிகளுள், காலம் காட்டும் விகுதிகளைத் தவிர மற்ற விகுதிகளான, அன், ஆன், அள், ஆள், அர், ஆர், அ, டு, து, று, என், ஏம், அம், ஆம், எம், ஏம், ஓம், ஐ, ஆய், இ, இர், ஈர் என்னும் 22 விகுதிகளோடு அந்தக் குறிப்பு வினைமுற்றுகள் வரும். இவற்றிற்கான எடுத்துக் காட்டுகளைக் கீழே காண்போம்.

கரியன், கரியான் கரியள், கரியாள் கரியர், கரியார் கரியன கருந்தாட்டு, கரிது, குழையிற்று – அன், ஆன் – அள், ஆள் – அர், ஆர் – அ – டு, து, று படர்க்கை

கரியென், கரியேன் கரியம், கரியாம் கரியெம், கரியேம் கரியோம் – என், ஏன் – அம், ஆம் – எம், ஏம் – ஓம்

தன்மை

கரியை, கரியாய் வில்லி கரியிர், கரியீர் – ஐ, ஆய் – இ – இர், ஈர் முன்னிலை

இதுவரையில் வினைமுற்று விகுதிகளைக் கண்டோம். இனிப் பெயர் விகுதிகளைக் காண்போம்.

6.1.3 எச்சவினை விகுதிகள் எச்சவினை விகுதிகளையும் இங்குக் காண்போம்.

தெரிநிலைப் பெயரெச்ச விகுதிகள்:

நடந்த, நடக்கின்ற, நடவாத, நடக்கும் – இவற்றுள் அ, உம் விகுதிகள்.

குறிப்புப் பெயரெச்ச விகுதிகள்:

சிறிய – அ

பெரிய – அ

தெரிநிலை வினையெச்ச விகுதிகள்:

தெரிநிலை வினையெச்ச விகுதிகள் பின்வருமாறு.

உ, இ, ய், பு, ஆ, ஊ, என, ஏ, அ, இன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, கண், வழி, இடத்து, உம், மல், மை, மே, து முதலியன. இவற்றில் மல், மை, மே, து என்ற நான்கும் எதிர்மறைப் பொருளிலும் வருவன.

இனி இவற்றில் சிலவற்றிற்கு எடுத்துக் காட்டுகளைக் காண்போம்.

நடந்து, சென்று உ

ஓடி, நாடி இ

போய் ய்

உண்ணா ஆ

உண்ண, ஆட அ

உண்டால், பார்த்தால் ஆல்

உண்ணாமல், உண்ணாமை மல், மை

உண்ணாமே, உண்ணாது மே, து

இனி, குறிப்பு வினையெச்ச விகுதிகளைக் காண்போம்.

குறிப்பு வினையெச்ச விகுதிகள் பின்வருமாறு :

அ, றி, து, ஆல், மல், கால், கடை, வழி, இடத்து என்னும் 9 விகுதிகள்.

இவற்றில் சிலவற்றிற்கு எடுத்துக் காட்டுகளைக் காண்போம்.

மெல்ல – அ அன்றி – றி

அல்லது – து அல்லால் – ஆல்

என வருவன.

6.1.4 பெயர் விகுதிகள் பெயர்ப்பகுபத விகுதிகளையும் நன்னூல் நூற்பா சுட்டிக் காட்டுகின்றது. அவை,

அன், ஆன், அள், ஆள், அர், ஆர், மார், து, அ, இ

என்பவை. இவற்றிற்கு எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்.

சிறியன், சிறியான் – அன், ஆன்

சிறியள், வானத்தாள் – அள், ஆள்

குழையர், வானத்தார் தேவிமார் – அர், ஆர், மார்

சிறியது, சிறியன, பொன்னி – து, அ, இ

இவற்றோடு, மன், மான், கள், வை, தை, கை, பி, முன், அல், ன், ள், ர், வ் என்னும் 13 விகுதிகளும் பெயர் விகுதிகளாம்.

வடமான், கோமான், கோக்கள் – மன், மான், கள்

அவை, இவை – வை.

எந்தை, எங்கை, – தை, கை

எம்பி, எம்முன், தோன்றல் – பி, முன், அல்

பிறன், பிறள், பிறர், அவ் – ன், ள், ர், வ்

6.1.5 தொழிற்பெயர் விகுதிகள் பெயர்ப் பகுபதங்களில் தொழிற்பெயர்களும் அடங்கும். எனவே தொழிற்பெயர் விகுதிகளையும் இங்குச் சேர்த்துக் காண்போம்.

தொழிற்பெயர் விகுதிகள் பின்வருமாறு:

தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து, என்னும் 19 விகுதிகள். இனி இவற்றில் சிலவற்றிற்கான எடுத்துக் காட்டுகளைக் காண்போம்.

நடத்தல் – தல்; ஆடல் – அல்; வாட்டம் – அம்; கொலை – ஐ; பார்வை – வை; போக்கு – கு; நடப்பு – பு; நடவாமை – மை.

6.1.6 பண்புப் பெயர் விகுதிகள்: பண்புப் பெயர்களுக்கு அமைந்த விகுதிகள் பத்து. அவை,

மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், ஆர் என்பன. இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

நன்மை – மை தொல்லை – ஐ

மாட்சி – சி மாண்பு – பு

மழவு – வு நன்கு – கு

நன்றி – றி நன்று – று

நலம் – அம் நன்னர் – அர்

6.1.7 பிறவினை விகுதிகள் பிறவினை விதிகளை முன்பே அறிந்துள்ளீர்கள். அவை, வி, பி, கு, சு, டு, து, பு, று என்பனவாம்.

இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

செய்வி – வி நடப்பி – பி

போக்கு – கு பாய்ச்சு – சு

உருட்டு – டு நடத்து – து

எழுப்பு- பு துயிற்று – று

என்பன.

6.1.8 விகுதிகள் புணர்ந்து கெடுதல் சில விகுதிகள் புணர்ந்து கெடுகின்றன. எனவே வழக்கில் அச் சொல்லில் அவ்விகுதிகள் வெளிப்படுவதில்லை.புணர்ந்து கெட்ட விகுதிகளுக்கு எடுத்துக்காட்டுகள்:.

ஆய் விகுதி புணர்ந்த சொல்:

நீ நட; நீ நடப்பி; நீ செல் – இவற்றில் ஆய்விகுதி புணர்ந்து கெட்டது. ‘நீ நடப்பாய்’ எனவராமல் ‘நீ நட’ என்று வருதலே மரபாயிற்று.

பெயரெச்ச விகுதிகள் புணர்ந்து கெடல்:

கொல்களிறு, ஓடாக்குதிரை இவற்றில் பெயரெச்ச விகுதிகள் புணர்ந்து கெட்டன. இவற்றில் கொன்ற-அ; ஓடாத-அ எனும் விகுதிகள் கெட்டன.

தல் என்னும் தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெடல்:

அடி, கேடு, – இவற்றில் தல் என்னும் தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெட்டது. அடித்தல், கெடுதல், என்பவை விகுதி கெட்டு அடி, கேடு என வந்துள்ளன.

6.2. இடைநிலைகள்

பகுபத உறுப்புகளில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் இருக்கும் உறுப்பு இடைநிலை எனப்படும். இதன் பெயரே இது பகுபதத்தில் நிற்கும் இடத்தைக் குறித்தலைக் காணலாம்.

வகைகள்

பகுதி, விகுதிகளைப் போலவே இடைநிலைகளையும் இரு பிரிவுகளாகப் பிரித்துக் காணலாம்.

(1)பெயர் இடைநிலை

(2)வினை இடைநிலை

6.2.1 பெயர் இடைநிலைகள் வினையாலணையும் பெயர் அல்லாத பிற பெயர்களுக்கு இடையில் நிற்கும் இடைநிலைகள் பெயர் இடைநிலைகள் எனப்படும்.

பெயர் இடைநிலைகளாக ஞ், ச், ந், த் என்னும் எழுத்துகள் அமைகின்றன.

அறிஞன், இளைஞன், கவிஞன் – ‘ஞ்’ இடைநிலை

வலைச்சி, இடைச்சி, புலைச்சி – ‘ச்’ இடைநிலை

செய்குநன், பொருநன் – ‘ந்’ இடைநிலை

வண்ணாத்தி, பாணத்தி – ‘த்’ இடைநிலை

6.2.2 வினை இடைநிலைகள் வினைப் பகுபதத்தில் காலம் காட்டும் இடைநிலைகளை வினை இடைநிலைகள் என்பர். இந்த இடைநிலைகள் உணர்த்தும் காலத்தைக் கருத்தில் கொண்டு அவற்றை மூன்றாகப் பிரிக்கலாம் அவை,

(1) இறந்தகால இடைநிலைகள்

(2) நிகழ்கால இடைநிலைகள்

(3) எதிர்கால இடைநிலைகள்

என்பன.

இறந்தகால இடைநிலைகள்

த், ட், ற் என்னும் மெய்களும், இன் என்பதும் ஐம்பால் மூவிடங்களிலும் இறந்த காலத்தைத் தருகின்ற வினைப் பகுபதங்களுடைய இடைநிலைகளாகும். இதனை, நன்னூல்,

தடற ஒற்று, இன்னே ஐம்பால் மூவிடத்து

இறந்த காலம் தரும் தொழில் இடைநிலை (142)

என்று விளக்குகின்றது.

இதற்கான எடுத்துக்காட்டைப் பின்வருமாறு காண்போம்.

நடந்தான், பார்த்தான் – ‘த்’ இடைநிலை

கொண்டான், விண்டது – ‘ட்’ இடைநிலை

நின்றான், தின்றான் – ‘ற்’ இடைநிலை

ஒழுகினான், வழங்கினான் – ‘இன்’ இடைநிலை

‘இன்’ என்னும் இடைநிலை மட்டும் சில இடங்களில் இறுதி மெய் ‘ன்‘ கெட்டு ‘இ’ மட்டும் தனித்து வரும். சில இடங்களில் ‘இ’ கெட்டு ன் மட்டும் வரும்.

எடுத்துக்காட்டு:

எஞ்சியது – எஞ்சு+இ(ன்)ய்+அ+து இதில் ‘ன்’ கெட்டு ‘இ’ வந்தது.

போனது – போ(இ)ன்+அ+து. இதில் ‘இ’ கெட்டு ‘ன்’ மட்டும் உள்ளது.

நிகழ்கால இடைநிலைகள்

வினைப் பகுபதத்தில் நிகழ்காலத்தைக் காட்டும் இடைநிலைகளாக ஆநின்று, கின்று கிறு என்ற மூன்றினை நன்னூல் விளக்குகின்றது.

‘ஆநின்று கின்று, கிறு மூவிடத்தின்

ஐம்பால் நிகழ்பொழுது அறைவினை இடைநிலை, (143)

செல்லாநின்றான், நடவாநின்றான்- ஆநின்று

செல்கின்றான், நடக்கின்றான் – கின்று

செல்கிறான், நடக்கிறான் – கிறு

இதைப்போலவே இவ்வினை இடைநிலைகளை மற்ற பால், இடம் ஆகியவற்றிலும் இணைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எதிர்கால இடைநிலைகள்

எதிர்காலத்தைக் காட்டும் இடைநிலைகள் எதிர்கால இடைநிலைகள் எனப்படும். இவை, ப், வ், என இரண்டு மெய்களாகும். இரண்டிற்கும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

நடப்பான், துறப்பான் – ப்

வருவான், வருவாள் – வ்

6.3. காலம் காட்டும் விகுதிகள்

வினைப் பகுபதங்களில் இடைநிலைகள் காலத்தைச் சுட்டுவன: அவை மூன்று காலத்திற்கும் தனித்தனி இடைநிலைகளாக அமைந்துள்ளன. என்றாலும் சில வினைப் பகுபதங்களில் விகுதிகளும் காலத்தைக் காட்டும் பணியைச் செய்கின்றன என்பதை அறிய முடிகிறது. (நன்னூல், நூற்பா, 145)

இனி, இவற்றை எடுத்துக்காட்டுகளுடன் காண்போம்.

(1)று, றும் இறந்தகாலமும், எதிர்காலமும் காட்டும்.

சென்று (சென்றேன்) – று சென்றும் (சென்றோம்) – றும் இறந்தகாலம்

சேறு (செல்வேன்) – று சேறும் (செல்வோம்) – றும் எதிர்காலம்

(2)து, தும்: இறந்தகாலமும், எதிர்காலமும் காட்டும்.

வந்து (வந்தேன்) – து வந்தும் (வந்தோம்) தும் இறந்தகாலம்

வருது (வருவேன்) – து வருதும்(வருவோம்) தும் எதிர்காலம்

(3)டு, டும்: இறந்தகாலம் காட்டும்

உண்டு (உண்டேன்) – டு உண்டும் (உண்டோம்) – டும் இறந்தகாலம்

(4)கு, கும் எதிர்காலம் காட்டும்

உண்கு (உண்பேன்) – கு உண்கும் (உண்போம்) – கும் எதிர்காலம்

(5)மின், ஈர், உம், ஆய் எனும் ஏவல்விகுதிகள், வியங்கோள் விகுதிகள், இ, மார் விகுதிகள்

உண்மின் – மின் உண்ணீர் – ஈர் உண்ணும் – உம் உண்ணாய் – ஆய்

எதிர்காலம்

உண்க, உண்ணிய, உண்ணியர்-எதிர்காலம்

சேறி (செல்வாய்)-எதிர்காலம்

உண்மார் (உண்பதற்காக)-எதிர்காலம்

(6)ப விகுதி : இறந்தகாலமும், எதிர்காலமும் காட்டும்.

உண்ப (உண்டார்)-இறந்தகாலம்

உண்ப (உண்பார்)-எதிர்காலம்

(7)செய்யும் எனும் வாய்பாட்டின் உம் விகுதி

அவன் உண்ணும்-நிகழ்காலம் (உண்கிறான்)

அவள் உண்ணும்-எதிர்காலம் (உண்பாள்)

(8)ஆ விகுதி :எதிர்மறைப் பொருளில் மூன்றுகாலத்துக்கும் வரும்

உண்ணா -இறந்தகாலம்

உண்ணா -நிகழ் காலம்

உண்ணா -எதிர்காலம்

6.3.1 பகுதி இரட்டித்துக் காலம் காட்டுதல் கு, டு, று என்னும் எழுத்துகளை ஈற்றில் கொண்ட ‘புகு’, ‘தொடு’, ‘உறு’ என்பன போன்ற பகுதிகள் மெய் இரட்டித்து இறந்த காலத்தைக் காட்டும்.

புகு+ஆன் – புக்கான் விடு+ஆள் – விட்டாள் பெறு+ஆர் – பெற்றார் இறந்தகாலம்

நெட்டெழுத்தைச் சார்ந்து வரும் ‘கு’ என்ற ஈற்றை உடைய சில சொற்களும் மெய் இரட்டித்து, இறந்தகாலத்தைக் காட்டும்.

போடு + ஆன் – போட்டான்

6.4 தொகுப்புரை

பகுபத உறுப்புகளுள் விகுதி என்பது பகுபதத்தின் கடைசியில் நிற்கும் உறுப்பு என்பதும், எனவே அது இறுதிநிலை என்று அழைக்கப்படுகின்றது என்பதும் விளக்கப்பட்டது. நன்னூல் விகுதிகளின் எண்ணிக்கையை 40 என்று காட்டியுள்ளது எடுத்துக் காட்டுகளுடன் சுட்டப்பட்டது. இந்த விகுதிகள் தெரிநிலை வினைமுற்று விகுதிகள், தன்மை வினைமுற்று விகுதிகள், முன்னிலை வினைமுற்று விகுதிகள், வியங்கோள் வினைமுற்று விகுதிகள், குறிப்பு வினைமுற்று விகுதிகள், என்று வினைப்பகுபத விகுதிகளாக வகைப்படுத்தி விளக்கப்பட்டன. சில விகுதிகள் பெயர்ப்பகுபத விகுதிகளாகவும் அமைகின்ற விதமும் எடுத்துக் காட்டப்பட்டது. இவற்றுடன் பெயரெச்ச, வினையெச்ச விகுதிகளும், தொழிற்பெயர், பண்புப் பெயர் விகுதிகளும், தன்வினை, பிறவினை விகுதிகளும் விளக்கப்பட்டன. தொழிற்பெயர் விகுதிகளில் சில புணர்ந்து கெடும் தன்மையில் அமைந்துள்ளன என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது.

அடுத்ததாக, பகுபத உறுப்புகளில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து நிற்கும் உறுப்பான இடைநிலைகள் இருவகைப்படும் என்றும், அவை பெயர், வினை இடைநிலைகள் என்றும் கண்டோம். வினை இடைநிலைகள் இறந்த கால, நிகழ்கால, எதிர்கால இடைநிலைகள் என்று மூன்று காலத்தைக் காட்டுவதற்குத் தனித்தனியே அமைந்துள்ளன என்பது விளக்கப்பட்டது.

மூன்றாவதாக, காலங்காட்டும் விகுதிகள் டு, டும், று, றும், து, தும், கு, கும், ஆகியவற்றோடு ஏவல் வினை விகுதிகளும், வியங்கோள் வினை விகுதிகளும் காலங்காட்டும் தன்மை, எடுத்துக்காட்டுகளோடு விளக்கப்பட்டது.

சில பகுதிகள் இரட்டித்துக் காலம் காட்டும் தன்மையுடையன என்பதையும் இப் பாடத்தில் கண்டோம்.