100

கவியோகி சுத்தானந்த பாரதியாரால் அறநூல் என்னும் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது .

இந்நூல் இருபதாம் நூற்றாண்டில் தோன்றியது .

குறள் வெண்பாவில் அமைக்கப்பட்ட இந்நூல் பதினைந்து இயல்களைக் கொண்டுள்ளது .

ஒவ்வோர் இயலும் ஐந்து அதிகாரங்களைக் கொண்டுள்ளது .

ஒவ்வோர் அதிகாரமும் ஐந்து குறள்பாக்களைக் கொண்டுள்ளது .

மொத்தம் 375 குறள்பாக்கள் இந்நூலில் உள்ளன .

அறநூல் என்னும் இந்நூலில் இல்லறம் , துறவறம் , தொண்டு , ஒழுக்கம் , கல்வி , முயற்சி முதலான கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன .

அவற்றுள் சிலவற்றை இங்கே காண்போம் .

வீடுகளின் ஈட்டம் விரிநாடாம் ; ஆதலினால்

வீடு என்றே நாட்டை விரும்பு

( நாடு - 5 )

( ஈட்டம் = கூட்டம் , விரி = பெரிய )

என்னும் குறள் நாட்டுப்பற்றை வலியுறுத்துகிறது .

பல வீடுகள் சேர்ந்தே பெரிய நாடு என்ற நிலையை அடைகிறது .

ஆகவே எல்லோரும் வீட்டை விரும்புவது போல் நாட்டையும் விரும்ப வேண்டும் என்று இக்குறள் தெரிவிக்கிறது .

இல்லறம் ஈசன்அருள் எய்திய நல்லறம்அஃது

இல்லேல்பூ இல்லையாம் எண்

( இல்லறம் - 5 )

( ஈசன் = கடவுள் , எய்திய = அடைந்த , இல்லேல் = இல்லை என்றால் , பூ = பூமி , எண் = எண்ணிப் பார் )

என்னும் அறநெறிக் குறள் இல்லறத்தின் சிறப்பை விளக்குகிறது .

இல்லறம் என்பது கடவுள் அருளால் மனிதன் அடைந்த நல்லறம் ஆகும் .

இந்த இல்லற வாழ்க்கை இல்லை என்றால் இந்த உலகமே இல்லை என்பதை எண்ணிப் பார்த்து இல்லறத்தைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று இக்குறள் தெரிவிக்கிறது .

தேவன் என்றே இவ்வுலகைத் தேர்ந்து தனைமறந்த

தூய்வினை ஆற்றல் துறவு

( துறவு - 2 )

( தேர்ந்து = அறிந்து , தனைமறந்த = தன்னலம் மறந்த , தூய்வினை = தூயசெயல் , ஆற்றல் = செய்தல் )

என்னும் அறநெறிக் குறள் துறவறத்தின் சிறப்பை விளக்குகிறது .

இந்த உலகத்தைத் தெய்வமாகக் கருதி , தன்னலத்தை மறந்து இந்த உலகிற்காகச் சிறந்த பணியாற்றுவதே துறவு என்று இக்குறள் தெரிவிக்கிறது .

தொண்டால் உறும்மகிழ்வே தொல்புவியும் செய்தோனும்

அண்டரும் போற்றும் அமிழ்து

( வினைமாட்சி - 4 )

( உறும் = அடையும் , மகிழ்வே = மகிழ்ச்சியே , தொல்புவி = பழமையான உலகம் , செய்தோன் = தொண்டு செய்தவன் , அண்டர் = தேவர் , )

என்னும் அறநெறிக் குறள் தொண்டின் சிறப்பை விளக்குகிறது .

தன்னலம் அற்ற தொண்டு செய்வதால் ஏற்படும் மகிழ்ச்சிதான் மனிதர்களாலும் தேவர்களாலும் போற்றப்படும் அமிர்தம் என்று தொண்டின் பெருமையைச் சுத்தானந்த பாரதியார் குறிப்பிட்டுள்ளார் .

உலக நடை தேர்ந்தே உயர்அறனே செய்வான்

பலகற்றோன் ஆவானே பார்

( நற்பழக்கம் - 5 )

என்னும் அறநெறிக் குறள் , உலக நடைமுறைக் கல்வியின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது .

உலகத்தின் போக்கை நன்கு அறிந்து , உயர்ந்த அறச் செயல்களைச் செய்கிறவன் நூல் அறிவு பெறவில்லை என்றாலும் பல நூல்களைக் கற்றவர்க்கு இணையானவன் ஆவான் என்று அறநெறிக் குறள் தெரிவிக்கிறது .

இதே கருத்தைத் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்துள்ளார் .

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்

( திருக்குறள் - 140 )

என்னும் திருக்குறளில் உலக நடைமுறையை நன்கு அறிந்து வாழ அறியாதவர் பல நூல்களைக் கற்று , கல்வி அறிவு உடையவராக இருந்தாலும் கல்வி அறிவு பெறாதவராகவே கருதப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

அறநெறிக்குறள் இதே கருத்தைச் சற்று மாற்றித் தெரிவித்துள்ளது .

ஒருவர் கல்வி அறிவு இல்லாதவராக இருந்தாலும் உலக நடைமுறையை அறிந்தவராக இருந்தால் அவர் அறிவு உடையவராகவே கருதப்படுவார் என்று அறநெறிக் குறள் தெரிவித்துள்ளது .

1.3.8 பாரதியாரின் புதிய ஆத்திசூடி

பாரதியாரின் புதிய ஆத்திசூடி 110 அடிகளைக் கொண்டது .

ஒளவையார் இயற்றிய ஆத்திசூடி என்னும் நூல் அனைவராலும் படிக்கப்பட்டு வந்தது . எனவே பாரதியார் தாம் இயற்றிய ஆத்திசூடிக்குப் புதிய ஆத்திசூடி என்று பெயரிட்டுள்ளார் .

புதிய ஆத்திசூடியின் பரம்பொருள் வாழ்த்தில் சிவன் , திருமால் , நபிகள் நாயகத்திற்கு மறை உணர்த்தியவன் , இயேசுவின் தந்தை என்று பல மதத்தினர் வழிபடும் கடவுளர்களைப் பாரதியார் குறிப்பிட்டுள்ளார் .

இவ்வாறு பல மதத்தினரும் வழிபடும் பரம்பொருள் ஒன்றுதான் ; அதன் இயல்பு , அறிவும் ஒளியும் ஆகும் என்று பாடியுள்ளார் .

ஒளவையார் ‘ அறம் செய விரும்பு ’ என்று தமது ஆத்திசூடியைத் தொடங்கினார் .

பாரதியார் ‘ அச்சம் தவிர் ’ என்று தொடங்கியுள்ளார் .

ஒளவையார் வாழ்ந்த காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு .

அந்தக் காலச்சூழலுக்கு ஏற்ப ஒளவையார் ‘ அறம் செய விரும்பு ’ என்று பாடியுள்ளார் .

பாரதியார் வாழ்ந்த காலம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் .

அப்போது நமது நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்தது .

மக்கள் அஞ்சி , அஞ்சி வாழ்ந்தனர் .

இந்த அச்சத்தைப் போக்க விரும்பிய பாரதியார் ` அச்சம் தவிர் ’ என்று பாடியுள்ளார் .

1.3.9 பாரதிதாசனின் புதிய ஆத்திசூடி

பாரதிதாசன் இயற்றிய ஆத்திசூடி நாற்பது அடிகளைக் கொண்டது .

இந்நூலின் தொடக்கத்தில் பாயிரம் அமைந்துள்ளது .

பாயிரம் என்பது உரைநடை நூல்களுக்கு உள்ள முன்னுரை போன்று கவிதை நூல்களில் அமைக்கப்படுவது .

இந்தப் பாயிரத்தில் பாரதிதாசன் , கடவுள் வாழ்த்து எதுவும் பாடவில்லை .

அதற்குப் பதிலாக உலக ஒற்றுமையையும் அமைதியையும் பாடியுள்ளார் .

இனப்பற்றும் நாட்டுப் பற்றும் உலகப் பற்றுக்கு வழி வகுக்க வேண்டும் .

அவ்வாறு உலகப் பற்று வரவில்லை என்றால் உலகில் அமைதி நிலவாது என்பதை ,

நவில்இனப் பற்றும் நாட்டுப் பற்றும்

வையப் பற்றை வளர்க்கும் நோக்கத்தன

இல்லை ஆயின் இன்று இவ்வுலகில்

தொல்லை அணுகுண்டு தொகு கொலைக்கருவி

பொல்லா நச்சுப் புகைச்சல் இவற்றை

அகற்றல் எப்படி ?

அமைதி யாங்ஙனம் ?

( பாரதிதாசன் ஆத்திசூடி , பாயிரம் : 1 - 6 )

என்று பாரதிதாசன் பாடியுள்ளார் .

ஒளவையார் பாடியது ஆத்திசூடி என்று அழைக்கப்பட்டதால் பாரதியாரின் ஆத்திசூடி , புதிய ஆத்திசூடி என்று அழைக்கப்பட்டது .

பாரதியாரின் ஆத்திசூடி , புதிய ஆத்திசூடி என்று அழைக்கப்பட்டதால் அதற்குப் பின் தோன்றிய பாரதிதாசனின் ஆத்திசூடி , ‘ பாரதிதாசன் ஆத்திசூடி ’ என்று அழைக்கப்பட்டது .

பாரதியார் வாழ்ந்த காலத்தில் இந்திய ஒற்றுமை பெரிதாகக் கருதப்பட்டது போல் பாரதிதாசனின் காலத்தில் உலக ஒற்றுமை பேணப்பட்டது .

எனவே பாரதிதாசன் , ‘ அனைவரும் உறவினர் ’ என்று தமது ஆத்திசூடியைத் தொடங்கி , உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதிப் பாடியுள்ளார் .

• இளையோர் ஆத்திசூடி

குழந்தைகளுக்கு என்று ஆத்திசூடியைப் பாடிய பாரதிதாசன் இளைஞர்களுக்கு என்றும் ஓர் ஆத்திசூடியைப் பாடியுள்ளார் .

அது இளையோர் ஆத்திசூடி என்று அழைக்கப்படுகிறது .

பாரதிதாசனின் இளையோர் ஆத்திசூடி 88 அடிகளைக் கொண்டுள்ளது .

இளைஞர்கள் எதையும் தாங்கும் இதயத்தையும் தீமையை எதிர்த்துப் போரிடும் வீரத்தையும் குன்றாத பொறுமையையும் கொண்டு விளங்க வேண்டும் .

இத்தகு சிறந்த குணங்களைப் பெற்று விளங்கவேண்டிய இளைஞர்கள் செய்வது அறியாது திகைத்து நிற்கக் கூடாது ; தேம்பி அழக்கூடாது என உணர்த்த விரும்பினார் பாரதிதாசன் .

எனவே அவர் இளையோர் ஆத்திசூடியை ' அழுபவன் கோழை ' என்னும் தொடருடன் தொடங்கியுள்ளார் .

தொகுப்புரை

மனித குலத்தை நல்வழிப்படுத்துவதற்குப் பல அறக்கருத்துகளைச் சான்றோர்கள் படைத்துள்ளனர் .

அக்கருத்துகளைத் தாங்கி , பல அறநூல்கள் தோன்றியுள்ளன .

அந்த அறநூல்களில் பதினெண்கீழ்க்கணக்கில் இடம் பெற்றுள்ள பதினோர் அறநூல்களும் முதன்மையானவை ஆகும் .

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆறாம் நூற்றாண்டுவரை தோன்றியுள்ளன .

இந்நூல்களுக்குப் பிறகு பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பிற்கால அறநூல்கள் படைக்கப்பட்டுள்ளன .

அவ்வாறு எழுதப்பட்டுள்ள அறநூல்கள் பல. அவற்றுள் சில அறநூல்கள் சிற்றிலக்கியங்களாக உள்ளன .

மேலும் சில அறநூல்கள் சமயம் சார்ந்தவையாக உள்ளன .

மேலும் சில அறநூல்கள் மிகவும் பிற்காலத்தில் 19 , 20ஆம் நூற்றாண்டுகளிலும் எழுந்துள்ளன .

இந்த அறநூல்களின் வாயிலாக மக்கள் வாழ்க்கைக்கு வேண்டிய நல்ல அறங்களை நாம் அறிந்து கொள்ள இயலும் .

அவற்றைப் பின்பற்றி வாழ்கின்றவரின் வாழ்க்கை சிறந்த வாழ்க்கையாக அமைவதுடன் மற்றவர்களுக்குப் பயன்படும் வாழ்க்கையாகவும் அமையும் . இந்தப் பாடம் பிற்கால அறநூல்களைப் பொதுவாக அறிமுகம் செய்யும் நோக்கத்தைக் கொண்டது .

எனவே இதில் பிற்காலத்தில் தோன்றிய அறநூல்களாக இருபது நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன .

இந்த அறநூல்களில் ஒன்பது அறநூல்களை , இத்தொகுதியில் இடம்பெறும் ஏனைய ஐந்து பாடங்களும் விரிவாக விளக்கும் .

ஏனைய பதினோர் அறநூல்கள் பற்றிய குறிப்புகளை இப்பாடம் வழங்கியுள்ளது .

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1. பிற்கால அறநூல்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடுக .

[ விடை ]

2. சிற்றிலக்கியங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள அறநூல்கள் யாவை ?

[ விடை ]

3. சதகம் என்றால் என்ன ?

[ விடை ]

4. நீதிநூல் , பெண்மதிமாலை ஆகியவற்றை இயற்றியவர் யார் ?

[ விடை ]

5. ‘ அனைவரும் உறவினர் ’ என்னும் தொடர் எந்த ஆத்திசூடியில் இடம் பெற்றுள்ளது ?

[ விடை ]

6. உலக நீதியில் எந்தப் பாவகை பயன்படுத்தப்பட்டுள்ளது ?

[ விடை ]

ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும்

பாட முன்னுரை

ஒளவையாரால் ஆத்திசூடி , கொன்றைவேந்தன் , மூதுரை ( வாக்குண்டாம் ) , நல்வழி என்னும் அறநூல்கள் பாடப்பட்டுள்ளன .

இவற்றுள் ஆத்திசூடி , கொன்றைவேந்தன் என்னும் இரு அறநூல்களிலும் உள்ள அறக்கருத்துகளை இந்தப் பாடம் விளக்கிக் கூறுகிறது .

ஆத்திசூடி , கொன்றைவேந்தன் இரண்டுமே ஓரடிப் பாடல்களைக் கொண்டவை .

ஐந்து வயது கொண்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய அறங்கள் இந்நூல்களில் அடங்கி உள்ளன .

ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும் எளிமையான நூல் அமைப்புடன் எளிய சொற்களில் அமைந்துள்ளன .

எனவே , இந்நூல்கள் தோன்றிய காலம்முதல் இன்றுவரை அனைவராலும் படிக்கப்படுகின்றன .

ஔவையார்

ஔவையார் என்னும் பெயரில் பல புலவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்துள்ளனர் .

சங்க காலத்தில் ஓர் ஔவையார் வாழ்ந்து இலக்கியம் படைத்ததாகவும் அதற்குப் பின்பு பக்தி இலக்கிய காலத்தில் ஓர் ஔவையார் வாழ்ந்து இலக்கியம் படைத்ததாகவும் அதன்பின்பு ஆத்திசூடி முதலிய இலக்கியங்களைப் படைத்த ஔவையார் வாழ்ந்ததாகவும் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர் .

மேலும் சில அறிஞர்கள் , ஔவையார் நால்வர் இருந்ததாகவும் , அவர்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்ததாகவும் கருதுகின்றனர் .

ஆத்திசூடி , கொன்றைவேந்தன் முதலியவற்றைப் பாடிய ஔவையார் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக அறிய முடிகிறது .

இந்த ஔவையாரே மக்களால் நன்கு அறியப்பட்ட ஔவையார் ஆவார் .

ஔவையார் என்னும் சொல்லுக்கு வயது முதிர்ந்த பெண் என்பது பொருள் .

தனிப்பாடல்கள்

ஒளவையார் பாடியதாகப் பல தனிப்பாடல்கள் உள்ளன .

அவற்றுடன் தொடர்பு உடையவையாகப் பல நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டில் நிலவுகின்றன .

அவை உண்மையா ?

என்ற ஐயம் ஒருபுறம் இருந்தாலும் அந்த நிகழ்ச்சிகள் சுவை உடையனவாகவும் அறிவுக்கு விருந்து தருவனவாகவும் அமைந்துள்ளன .

அவற்றை இங்கே காண்போம் .

2.2.1 நாலு கோடி பாடல்

சோழ மன்னன் ஒருவன் தனது அவைக்களப் புலவர்களை அழைத்து , ‘ நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும் ’ என்று ஆணையிட்டான் .

ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று அவைக்களப் புலவர்கள் திகைத்தனர் .

அப்போது அங்கே ஒளவையார் வந்தார் ; புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார் .

உடனே அவர் புலவர்களைப் பார்த்து , ‘ இதற்காகவா திகைத்தீர்கள் .

கவலை வேண்டாம் .

இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன் ; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள் ’ என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார் .

ஒரு பாடல் எப்படி நாலு கோடி பாடலுக்கு இணையானது ஆகும் ?

வியப்பாக இருக்கிறதா ?

இதோ அந்த நாலு கோடி பாடலைப் பாருங்கள் .

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று

மிதியாமை கோடி பெறும் ; உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்

உண்ணாமை கோடி பெறும் ;

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு

கூடுதல் கோடி பெறும் ;

கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்

கோடாமை கோடி பெறும் .

( ஒளவையார் தனிப் பாடல் : 42 )

என்பதே அப்பாடல் .

இப்பாடலில் கோடி என்று ஒரு கோடி பொன் குறிப்பிடப் பட்டுள்ளது .

இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார் .

1. நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரை மதித்து அவரது வீட்டின் முன்பகுதியை மிதிக்காமல் இருப்பது , செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும் .

( நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள் )

2. உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும் .

3. கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும் .

4. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும் .

இப்பாடலில் முதல் இரண்டு கருத்துகளையும் எதிர்மறைப் பொருளில் பாடிய ஒளவையார் இறுதி இரண்டு கருத்துகளையும் உடன்பாட்டுப் பொருளில் பாடியுள்ளார் .

நல்ல பண்புகளை மதிக்காதவர் வீட்டுக்குச் செல்லாதே !

விரும்பி உண்ணச் சொல்லாதவரின் வீட்டில் உண்ணாதே !

என்பவை எதிர்மறை ஆகும் .

நல்ல குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ் !

சொன்ன சொல் தவறாமல் வாழ் !

என்பவை உடன்பாடு ஆகும் .

2.2.2 சுட்ட பழமும் சுடாத பழமும்

ஒரே ஊரில் தொடர்ந்து தங்கி இருக்கும் இயல்பு ஒளவையாருக்குக் கிடையாது .

அவர் பல ஊர்களுக்குச் சென்று தமது புலமைத் திறத்தால் அறக்கருத்துகளைப் பரப்பி வந்தார் .

ஒருமுறை ஒளவையார் ஓர் ஊரிலிருந்து வேறோர் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார் .

அவ்வாறு சென்ற வழியில் ஒரு காடு இருந்தது .

அந்தக் காட்டில் வெயில் அதிகமாகக் காய்ந்து கொண்டிருந்தது .

வெயிலில் நடந்து வந்த ஒளவையாருக்கு மிகவும் களைப்பாக இருந்தது .

அருகில் நின்ற நாவல் மர நிழலில் அவர் அமர்ந்தார் .

அந்த நாவல் மரத்தின் மேல் ஆடு , மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான் .

நாவல் மர நிழலில் களைப்புடன் இருந்த ஒளவையாரை அவன் பார்த்தான் .

‘ பாட்டீ...!

நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் .

நாவல் பழம் சாப்பிடுகிறீர்களா ? ’ என்று ஒளவையாரைப் பார்த்துக் கேட்டான் .

ஆடு , மாடு மேய்க்கும் அந்தச் சிறுவனை ஒளவையார் மிகவும் சாதாரணமாகக் கருதினார் .

எனவே , ‘ சரி .

அப்பா .

நாவல் பழங்களைப் பறித்துப் போடு ! ’ என்றார் .

ஒளவையாரின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட அந்தச் சிறுவன் ‘ பாட்டீ .

உங்களுக்குச் சுட்ட பழம் வேண்டுமா ?

சுடாத பழம் வேண்டுமா ? ’ என்று கேட்டான் .

ஒளவையாருக்கு ஒன்றும் புரியவில்லை .

‘ நாவல் பழத்தில் சுட்ட பழம் , சுடாத பழம் என்று எதுவும் கிடையாதே ! ’ என்று எண்ணினார் .

என்றாலும் இந்தச் சிறுவனிடம் , சுட்ட பழத்திற்கும் சுடாத பழத்திற்கும் விளக்கம் கேட்பது தமது புலமைக்கு இழிவு என்று அவர் கருதினார் .

‘ சுட்ட பழமாகவே நீ பறித்துப் போடப்பா....’ என்று ஒளவையார் கூறினார் .

மரத்தில் இருந்த சிறுவன் நன்கு பழுத்த நாவல் பழங்களைப் பறித்து மண்ணில் வேகமாகப் போட்டான் .

மண்ணில் கிடந்த நாவல் பழங்களை ஒளவையார் ஒவ்வொன்றாகக் கையில் எடுத்தார் .

அவற்றில் நிறைய மண் ஒட்டி இருந்தது .

அந்த மண்ணைத் துடைப்பதற்காக ஒளவையார் ‘ ஃபூ . ஃபூ ’ என்று ஊதினார் .