102

• தனிமனித ஒழுக்கம்

ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறையின் நிலைப்பாடுதான் தனிமனித ஒழுக்கம் .

ஒளவையாரின் ஆத்திசூடி , தனிமனித ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுத்துள்ளது .

தனிமனிதனைப் பார்த்துக் கட்டளையிட்டுக் கூறுவது போன்றே ஆத்திசூடித் தொடர்கள் அமைந்துள்ளன .

அறம் செய விரும்பு ( 1 )

என்னும் முதல் தொடரின் இறுதிச் சொல் ‘ விரும்பு ’ என்பது .

இந்தச் சொல் கட்டளையிடுவது போல் அமைந்திருப்பதை நீங்கள் காணமுடியும் .

எல்லோருமே அறம் செய்ய விரும்ப வேண்டும் என்றாலும் ஒரு மனிதனை நோக்கிச் சொல்வதை நாம் உணர முடியும் .

அறம் : வாழ்க்கைக்குத் தேவையான நெறி முறையும் ஈதல்

முதலான கொடைச் செயல்களும் அறம் ஆகும்

பிறருக்குக் கொடுத்து வாழ்கின்ற வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை .

அத்தகைய வாழ்க்கையை மனிதன் கடைப்பிடிக்க வேண்டும் ; அவ்வாறு வாழ விரும்ப வேண்டும் என்பதை ஒளவையார் இதன்மூலம் தெரிவித்துள்ளார் .

தனிமனிதனை நிலைகுலையச் செய்வதில் சினம் தலைமை இடத்தைப் பெறுகிறது .

எனவே , ஒருவன் சினத்தை அடக்க வேண்டும் .

இதை , ஒளவையார் ,

ஆறுவது சினம்

( 2 )

என்று குறிப்பிட்டுள்ளார் .

இவையும் இவை போன்ற பிற தொடர்களும் தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவதை நாம் காணமுடியும் .

• சமுதாய ஒழுக்கம்

மனிதன் சமுதாயமாகக் கூடி வாழும் இயல்பு கொண்டவன் .

ஒவ்வொரு தனி மனிதனும் தத்தமக்கு உரிய ஒழுக்க நெறிப்படி வாழ்ந்தால் சமுதாயத்தில் ஒழுக்கம் நிலவும் .

என்றாலும் சமுதாயத்தில் ஒருவருக்கு ஒருவர் கருத்து வேறுபாடு இல்லாமல் கலந்து வாழ்வதற்குச் சில பொதுவான ஒழுக்க நெறிகளைப் பின்பற்ற வேண்டும் .

அந்த ஒழுக்க நெறிகளையும் ஒளவையார் தமது ஆத்திசூடியில் பாடியுள்ளார் .

• ஒப்புரவு ஒழுகு

உலக மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் வாழவேண்டும் .

அவ்வாறு வாழாமல் மாறுபட்டு வாழ்பவன் தனிமரமாகி நிற்பான் என்னும் கருத்தை ‘ ஒப்புரவு ஒழுகு ’ ( 10 ) என்னும் தொடர் வாயிலாக ஒளவையார் பாடியுள்ளார் .

இதே கருத்தைத் திருவள்ளுவரும் ,

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்

( 140 )

என்று பாடியுள்ளார் .

உலக நடைமுறைக்கு ஏற்ப வாழத்தெரியாதவர் பல நூல்களைக் கற்றவராக இருந்தாலும் அறிவு இல்லாதவராகவே கருதப்படுவார் என்பது இக்குறளின் கருத்து .

இந்த உலகுடன் பொருந்தி வாழச்சொல்லி ஒளவையார் தனிமனிதனிடம் எடுத்துச் சொல்வது சமுதாய ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும் .

• ஊருடன் கூடிவாழ்

மனிதன் சேர்ந்து வாழத்தொடங்கியதும் ஊர் என்னும் அமைப்பு ஏற்பட்டது .

அந்த ஊரில் பலதிறப்பட்ட மனிதர்கள் வாழ்வார்கள் .

அந்த மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் .

ஊருக்கு என்று நிகழும் பொது நிகழ்ச்சிகளிலும் தனியாள் வீட்டில் நிகழும் நல்ல , கெட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றல் வேண்டும் என்பது சேர்ந்து வாழ்தலின் பொருள் .

இதை ஊருடன் கூடிவாழ் ( 103 ) என்று ஆத்திசூடி தெரிவித்துள்ளது .

2.3.3 ஈகை

ஈகை என்னும் சொல் ஏழைக்குக் கொடுத்தல் என்னும் பொருளைக் கொண்டது .

எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் எதுவும் இல்லாதவர்க்கு வழங்குவதை இச்சொல் குறிக்கும் .

இந்த ஈகைச் செயலைத் தவறாமல் செய்ய வேண்டும் என்பதை ஒளவையார் பல தொடர்களில் விளக்கியுள்ளார் .

• தானமது விரும்பு

பிறருக்குப் பொருள்களை வழங்குவதற்கு விரும்ப வேண்டும் .

ஒருவருக்கு ஒரு பொருளைக் கொடுக்கின்றோமே என்று வேண்டா வெறுப்பாகக் கொடுக்கக் கூடாது .

எவர்க்கும் பொருள்களை விரும்பிக் கொடுக்க வேண்டும் என்பதே இதன் பொருள் .

பிறருக்குப் பொருளைக் கொடுக்க ஏன் விரும்ப வேண்டும் என்னும் கேள்வி நம்மிடையே எழுகிறது அல்லவா ? ஒருவர் நம்மிடம் ஒரு பொருளுக்காக இரங்கி நிற்கிறார் என்றால் அவர் தமது பெருமைகளையும் மானத்தையும் கருதாமல்தான் வந்து நிற்கிறார் என்பதை நாம் உணர்ந்து அவருக்கு உதவ வேண்டும் என்னும் கருத்தைத் ‘ தானமது விரும்பு ’ ( 55 ) என்று ஒளவையார் பாடியுள்ளார் .

• இயல்வது கரவேல்

வறுமை நிலையை அடைந்த ஒருவர் , பொருள் வேண்டி வந்து நின்றால் அந்தப் பொருளை அவருக்குத் தயங்காமல் வழங்கிட வேண்டும் .

நம்மால் கொடுக்கக் கூடியதை , ‘ இல்லை‘ என்று சொல்லி அப்பொருளை மறைத்து வைக்கக்கூடாது என்னும் கருத்தை ‘ இயல்வது கரவேல்‘ ( 3 ) என்று ஒளவையார் கூறியுள்ளார் .

• ஈவது விலக்கேல்

பிறருக்குத் தேவைப்படும் பொருளைக் கொடுத்து உதவுவது பண்புகளில் மிகச்சிறந்தது .

அந்தச் சிறந்த பண்பு நம்மிடம் இருந்தால் அதை விட்டுவிடக்கூடாது .

நம்மிடம் வந்து ஒரு பொருளைக் கேட்கும் நிலைக்குத் தாழ்ந்து விட்ட ஒருவருக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்பது எல்லார்க்கும் பொதுவானது .

அந்தச் சிறந்த பண்பு ஒருவரிடம் இயல்பாக இருந்தால் அந்த ஈகைப் பண்பை ஒருபோதும் நிறுத்தி விடக்கூடாது என்பதை உணர்த்த ‘ ஈவது விலக்கேல் ’ ( 4 ) என்று ஒளவையார் பாடியுள்ளார் .

இதற்குப் பிறர் வழங்கும் ஈகைச் செயலைத் தடுக்கக் கூடாது என்றும் பொருள் கூறுவார்கள் .

2.3.4 போர்

காதலும் வீரமும் சங்ககாலத்தில் போற்றப்பட்டுள்ளன .

ஆனால் அறநூல் கால ஒளவையார் வாழ்ந்த சூழ்நிலையில் அமைதியான வாழ்க்கையையே மக்கள் பெரிதும் விரும்பியிருக்கிறார்கள் .

இரு நாடுகளுக்கு இடையிலும் இரு குழுக்களுக்கு இடையிலும் ஏற்படும் போர்களால் விலை மதிப்பற்ற மனித உயிர்கள் அழிகின்றன .

மனிதன் தனது எதிர்கால வாழ்க்கைக்கு என்று சேர்த்து வைத்த பொருட் செல்வம் அழிகிறது .

கண்ணைக் கவரும் வகையில் உருவாகி இருக்கும் இயற்கை வளங்களும் செயற்கைக் கட்டுமானங்களும் அழிகின்றன .

எனவே , அறிஞர்கள் போர் இல்லா உலகை விரும்பியுள்ளார்கள் .

• போர்த் தொழில் புரியேல்

உலகை நன்றாக உருவாக்குவதற்கு என்று பலவகைத் தொழில்கள் இருக்கின்றன .

அத்தொழில்களை ஒதுக்கிவிட்டு , உலகை அழிக்கும் போர்த் தொழிலைச் செய்யாதே என்னும் கருத்தை இத்தொடர் விளக்குகிறது .

இனத்தின் காரணமாகவோ , நிறத்தின் காரணமாகவோ வேறு எந்தக் காரணமாகவோ மனிதன் போர் புரிய வேண்டிய தேவையில்லை .

அறநூல்கள் தெரிவிக்கும் அறவழியில் வாழ்ந்து போர் இல்லாத சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் ஒளவையார் , ‘ போர்த் தொழில் புரியேல்‘ ( 86 ) என்று குறிப்பிட்டுள்ளார் .

• முனைமுகத்து நில்லேல்

மனிதனுக்கு எந்த வகையான நெருக்கடி ஏற்பட்டாலும் இன்னொரு நாட்டுடன் போர் புரியும் நோக்கத்துடன் போர்முனைக்குச் செல்லக் கூடாது என்பது இதன் பொருள் .

அவ்வாறு போர் முனைக்குச் சென்று போர் புரிவதன் மூலம் ஏற்படும் வெற்றியுடன் இழப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இழப்புகளே மிகுதி என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும் .

எனவேதான் ஒளவையார் ‘ முனைமுகத்து நில்லேல் ’ ( 92 ) என்று பாடியுள்ளார் .

மேலும் தகுந்த ஏற்பாடுகள் இல்லாமல் போர் முனைக்குச் செல்லக் கூடாது என்பதையும் இத்தொடர் விளக்குகிறது .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. ஆத்திசூடி , கொன்றைவேந்தன் ஆகியவை எத்தனை அடிகளைக் கொண்ட பாடல்களைக் கொண்டுள்ளன ?

[ விடை ]

2. ‘ நூல் பல கல் ’ என்பதற்கு இணையான பழமொழி எது ?

[ விடை ]

3. ‘ எண் ’ என்னும் சொல் எதைக் குறிக்கிறது ?

[ விடை ]

4. ‘ எழுத்து ’ என்னும் சொல் எதைக் குறிக்கிறது ?

[ விடை ]

5. ஒழுக்கத்தின் இருநிலைகள் யாவை ?

[ விடை ]

6. அறம் எனப்படுவது யாது ?

கொன்றை வேந்தன்

ஒளவையார் எழுதிய அறநூல்களில் ஒன்று கொன்றைவேந்தன் .

கொன்றை என்பது ஒரு மரம் .

அதில் மலரும் மலர் கொன்றை மலர் எனப்படும் .

கொன்றை மலரை விரும்பி அணிந்த இறைவன் சிவன் .

சிவனின் மக்களாக விநாயகனையும் முருகனையும் நாம் வணங்குகிறோம் .

அவர்களில் முருகனைப் போற்றி இந்த அறநூல் பாடப்பட்டுள்ளது .

இந்நூலின் காப்புச் செய்யுள் ,

கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை

என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே

( காப்பு ) என்று அமைந்துள்ளது .

இதில் இடம்பெற்றுள்ள கொன்றை வேந்தன் என்பது சிவனைக் குறிக்கிறது ; கொன்றை வேந்தன் செல்வன் என்பது சிவன் மகனாகிய முருகனைக் குறிக்கிறது .

இந்தக் காப்புச் செய்யுளில் முதலில் இடம் பெற்றுள்ள கொன்றை வேந்தன் என்பதே இந்நூலுக்கு உரிய தலைப்பு ஆனது .

கொன்றை மாலையை விரும்பிச் சூடிக் கொண்ட சிவபெருமானின் செல்வனாகிய முருகப் பெருமானை நாள்தோறும் நாம் போற்றி வணங்குவோம் என்று இந்தக் காப்புச் செய்யுள் தெரிவிக்கிறது .

2.4.1 கல்வி

ஒளவையார் , ஆத்திசூடியில் கல்விக்கு முதன்மை கொடுத்தது போன்று கொன்றை வேந்தனிலும் முதன்மை இடம் கொடுத்துள்ளார் .

மனிதனை முழுமையாக்கும் தகுதி கல்விக்கு உண்டு என்பதைக் கொன்றை வேந்தன் தெளிவுபடுத்துகிறது .

• எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்

மனித உறுப்புகளில் கண் சிறப்பிடம் பெறுகிறது .

அந்தக் கண்ணுக்கு இணையாகக் கல்வியை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார் .

நமது முகத்தில் இரண்டு கண்கள் இருக்கின்றன .

அந்த இரண்டு கண்களுக்கு இணையாகக் கருதத் தக்கவை எண்ணும் எழுத்தும் .

எனவே , ஒளவையார்

எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்

( 7 )

என்று பாடியுள்ளார் .

எண்ணும் எழுத்தும் எவற்றைக் குறிக்கின்றன என்பதை ஆத்திசூடியில் படித்துவிட்டீர்கள் .

அதே பொருளில் தான் அவை இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன .

• கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி

நாம் பலவகையான செல்வங்களைப் பெற்றிருந்தாலும் அவற்றை விடவும் சிறந்த செல்வம் கல்வி ஆகும் .

ஏனைய செல்வங்கள் அனைத்தும் நம்மைவிட்டு நீங்கும் .

ஆனால் கல்விச் செல்வம் நம்மைவிட்டுச் செல்லாது .

எனவே , ஏனைய செல்வங்கள் மெய்யான செல்வங்கள் அல்ல .

கல்விச் செல்வம் மட்டுமே மெய்யான செல்வமாகக் கருதப்படும் .

இதையே ஒளவையார் ,

கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி

( 22 )

என்று பாடியுள்ளார் .

ஒருவன் கையில் இருக்கும் பொருள் செல்வத்தை விட , அவன் கற்ற கல்வியே உண்மையான செல்வம் என்பது இது தெரிவிக்கும் பொருள் .

• நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை

கல்வி கற்றவர்கள் நல்ல ஒழுக்கம் உடையவர்களாய் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை .

அவர்கள் உண்மையே பேசுவார்கள் .

நேற்று ஒன்றாகவும் இன்று வேறாகவும் பேசமாட்டார்கள் .

அதை ஒளவையார் ,

நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை ( 50 )

என்னும் தொடர்மூலம் விளக்கியுள்ளார் .

எப்படிக் கற்க வேண்டும் என்பதை இத்தொடர் விளக்கியுள்ளது .

கல்வியைக் கற்கும்போது அது நம் மனத்தில் பதியும்படியாகக் கற்க வேண்டும் .

அவ்வாறு மனத்தில் நிலைக்கும்படியாகக் கற்றவர்கள் , தாங்கள் சொன்ன சொல்லிலிருந்து தவறமாட்டார்கள் என்பது இதன் பொருள் .

• நூன்முறை தெரிந்து சீலத்து ஒழுகு

மனத்தில் பதியும்படியாகக் கற்றவர்கள் , தாம் கற்றவற்றிற்கு ஏற்ப ஒழுக்க வாழ்வு வாழ வேண்டும் .

ஒழுக்க வாழ்க்கை வாழ்கின்ற உயர்ந்தவர்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாய் வாழ்வார்கள் .

அந்த ஒழுக்க வாழ்க்கைக்கு அடிப்படை கல்வி ஆகும் .

நூன்முறை தெரிந்து சீலத்து ஒழுகு ( 53 )

என்று , ஒழுக்க வாழ்க்கைக்கு அறநூல்களைக் கற்றல் அடிப்படை என்பதை ஒளவையார் பாடியுள்ளார் .

அறநூல்களைக் கற்று உணர்ந்து , அந்த அறவுரைகளுக்கு ஏற்ப ஒழுக்கத்தோடு வாழவேண்டும் என்பதே இத்தொடரின் பொருள் ஆகும் .

கற்றவற்றின்படி நடக்க வேண்டும் என்பதை இத்தொடர் விளக்குகிறது .

• ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்

கல்வி அறிவு இல்லாதவர்கள் நல்ல உணர்வும் நல்ல ஒழுக்கமும் உடையவர்களாக இருக்க மாட்டார்கள் .

எனவே , எல்லோரும் அற நூல்களைக் கற்றல் வேண்டும் . இதை ,

ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம் ( 9 )

என்று ஒளவையார் தெரிவித்துள்ளார் .

நல்ல அற நூல்களைப் படிக்காதவர்களுக்கு நல்ல உணர்வும் நல்ல ஒழுக்கமும் இருப்பது இல்லை என்பது இதன் பொருள் ஆகும் .

கல்வி அறிவு இல்லாமையால் ஏற்படும் இழிவை இத்தொடர் விளக்குகிறது .

2.4.2 முயற்சி

முயற்சி உடையவர்கள் , தங்கள் வாழ்வில் ஏற்படும் தடைகளைக் கடந்து செல்லும் திறம் பெற்றவர்கள் ஆவார்கள் .

எனவேதான் , திருவள்ளுவர் முயற்சி திருவினை ஆக்கும் ( திரு - செல்வம் ) என்று குறிப்பிட்டுள்ளார் .

ஒருவன் செல்வம் இல்லாதவனாக இருந்தாலும் அவனிடம் முயற்சி இருந்தால் அவனால் செல்வத்தைத் தேடி விட முடியும் என்பதை இது உணர்த்தும் .

முயற்சி உடையவர்களுக்குத் தேவையான வழிகள் திறக்கும் .

அந்த வழிகள் திறப்பதற்கான முயற்சிகளை , அவர்களை அறியாமலேயே அவர்கள் செய்து முடித்திருப்பார்கள் .

• போனகம் என்பது தான் உழந்து உண்டல்

முயற்சியின் சிறப்பை ஒளவையார் ,

போனகம் என்பது தான் உழந்து உண்டல் ( 69 )

என்று குறிப்பிட்டுள்ளார் .

போனகம் என்பது உணவைக் குறிக்கும் .

உழந்து என்பது வருந்தி உழைப்பதைக் குறிக்கும் .

உழைத்தவர்களுக்கு மட்டுமே உண்பதற்கு உரிமை உண்டு என்பதை இத்தொடர் விளக்குகிறது .

தான் முயன்று உழைத்து உருவாக்கிய செல்வத்தால் உண்பதே உணவு எனப்படுவது .

தான் முயன்று சம்பாதித்த உணவுப் பொருளைப் பிறருக்கும் கொடுத்து உண்பது பெருமை உடையது ஆகும் .

• ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

ஒருவனுக்குச் சிறந்த அழகைத் தருவது தளரா முயற்சி .

தளர்ச்சியில்லா முயற்சி இல்லாதவனிடம் இருக்கும் செல்வம் நிலைக்காது .

அது குறைந்து கொண்டே போகும் .

முயற்சி உடையவனிடம் இருக்கும் செல்வமே மேலும் கூடும் .

எனவே ,

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு ( 86 )

என்று ஒளவையார் பாடியுள்ளார் .

ஒருவன் முயற்சி உடையவனாக இருப்பதே சிறந்த செல்வமும் அழகும் ஆகும் என்பது இதன் பொருள் .

• தேடாது அழிக்கின் பாடாய் முடியும்

இருக்கின்ற செல்வத்தைப் பாதுகாப்பதற்கு உரிய வழி எது என்றால் மேலும் முயற்சி செய்து செல்வத்தைச் சேர்ப்பதே ஆகும் .

அவ்வாறு சேர்க்காமல் , இருக்கின்ற செல்வத்தைச் செலவு செய்து கொண்டே இருந்தால் அனைத்துச் செல்வத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும் .

எல்லாச் செல்வத்தையும் ஒருவன் இழந்துவிட்டால் அதுவே அவனுக்குப் பெரிய துன்பம் ஆக முடியும் .

தேடாது அழிக்கின் பாடாய் முடியும் ( 44 )

( பாடு = துன்பம் )

என்னும் தொடரின் வாயிலாக ஒளவையார் இதைத் தெளிவாக்கியுள்ளார் .

• சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்

முயற்சி செய்து உழைக்காமல் இருப்பவர்கள் சோம்பர் என்று அழைக்கப்படுவார்கள் .

அவ்வாறு சோம்பராய் இருப்பவர்கள் தங்களிடம் இருக்கின்ற செல்வத்தையும் இழந்து திண்டாடுவார்கள் .

இதை ,

சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் ( 36 )

என்று ஒளவையார் குறிப்பிட்டுள்ளார் .

முயற்சி செய்து உழைக்கின்றவர்களுக்கு எச்செயலையும் செய்வதற்குத் துணிவு ஏற்படும் .

முயற்சியுடன் துணிந்து செயல்படுகிறவர்களுக்குத் தோல்வி வருவதற்கு வாய்ப்பே கிடையாது .

அவ்வாறு முயற்சியும் , துணிவும் , உழைப்பும் இல்லாமல் சோம்பலுடன் இருப்பவர்கள் துன்பத்துடன் அலைவார்கள் என்பதை யாரும் தெரிந்து கொள்ளமுடியும் .

2.4.3 உழவு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் போற்றிய தொழில் உழவுத் தொழில் .

இந்த உலகில் உழவுத் தொழில் நடைபெறவில்லை என்றால் , மக்கள் உண்ண உணவு இல்லாமல் திண்டாட நேரிடும் .

ஒளவையார் உழவுத் தொழிலின் பெருமையைக் கொன்றைவேந்தனில் அழகாகப் பாடியுள்ளார் .

• சீரைத்தேடின் ஏரைத் தேடு உழவுத் தொழிலை ஏர்த் தொழில் என்றும் கூறுவார்கள் .