நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே ; நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே ; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று
( 8 )
இச்செய்யுளில் , நல்லவர்களின் தொடர்பு நான்கு நிலைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
1. நல்ல பண்பு உடையவர்களைக் காண்பது நன்மை தரும் .
2. நல்லவர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நன்மை தரும் .
3. நல்லவர்களின் நற்பண்புகளைக் கூறுவது நன்மை தரும் .
4. நல்லவர்களுடன் நட்புக்கொண்டு வாழ்வது நன்மை தரும் .
இச்செய்யுளில் மனிதனின் இன்றியமையா உறுப்புகளான கண் , காது , வாய் , மெய் ஆகியவற்றின் செயல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன .
நல்லவர்களைக் காணும் கண்ணின் வேலையையும் , நல்லவர்களின் அறிவுரைகளைக் கேட்கும் காதின் வேலையையும் , நல்லவர்களின் நற்பண்புகளைக் கூறும் வாயின் வேலையையும் நல்லவர்களுடன் நட்புக்கொண்டு அருகிருக்கும் மெய்யின் வேலையையும் மூதுரை தெரிவித்துள்ளது .
ஐம்புலன்களில் மூக்கின் வேலையைத் தவிர ஏனைய உறுப்புகளின் வேலைகள் அனைத்தையும் தெரிவித்திருப்பதன் மூலம் நல்லவர்கள் தொடர்பின் பெருமை தெரிவிக்கப்பட்டுள்ளது .
• பொற்குடம் உடைந்தாலும் பொன் ஆகும் !
சான்றோரின் பெருமை எந்த நிலையிலும் குறையாது .
அவர்கள் செல்வ நிலையில் உயர்ந்து இருந்தாலும் தாழ்ந்து இருந்தாலும் அவர்களின் பெருமை குறைவதில்லை .
சீரியர் கெட்டாலும் சீரியரே ; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்ஆகும் ? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் , பொன்ஆகும் ; என்ஆகும்
மண்ணின் குடம்உடைந்தக் கால் ?
( மூதுரை -18 )
( சீரியர் = சான்றோர் , கெட்டாலும் = செல்வத்தில் குறைந்தாலும் , உடைந்தக்கால் = உடைந்தால் )
நல்ல சான்றோர்கள் ஏதோ காரணத்தால் தங்கள் நிலையிலிருந்து தாழ்ந்தாலும் , தங்கள் உயர்ந்த பண்பிலிருந்து மாற மாட்டார்கள் ; மதிப்பும் குறையாது என்பதை மூதுரை இச்செய்யுளில் குறிப்பிட்டுள்ளது .
இதை விளக்குவதற்கு இரண்டு செய்திகளை அது சுட்டிக் காட்டியுள்ளது .
பொன்னின் குடம் உடைந்தால் , பொன் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தால் என் ஆகும் ?
என்பனவே அந்தச் செய்திகள் .
பொன்னால் செய்யப்பட்ட குடம் உடைந்தால் அது தண்ணீர் பிடிப்பதற்கு உதவாது .
எனினும் உடைந்த அந்தப் பொன்குடத்தின் மதிப்புக் குறைவதில்லை .
ஏனென்றால் பொன்குடத்திற்கு மதிப்பு , பொன்னால் வருகிறது .
அதைப் போல , செல்வ நிலையிலிருந்து சான்றோர்கள் தாழ்ந்தாலும் அவர்களின் மதிப்புக் குறைவதில்லை .
ஏனென்றால் சான்றோர்களின் மதிப்பு , அவர்களின் பண்பால் வருகிறது .
சான்றோரைப் பற்றித் தெரிவித்த மூதுரையின் இந்தச் செய்யுள் , தீயோரைப் பற்றியும் தெரிவித்துள்ளது .
தீயோர்களின் செல்வ நிலையில் குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு மதிப்புக் கிடைப்பதில்லை .
ஏனெனில் தீயோருக்கு அவர்களின் நற்பண்பால் மதிப்புக் கிடைக்கவில்லை .
அவர்களின் செல்வ நிலையின் காரணமாகவே ஓரளவு மதிப்புக் கிடைத்தது என்பதை அறிந்து கொள்ள முடியும் .
இக்கருத்தை விளக்குவதற்கு ,
என் ஆகும் , மண்ணின் குடம் உடைந்தக்கால் ?
என்ற வினா எழுப்பப்பட்டுள்ளது .
மண்ணால் செய்யப்பட்ட குடம் உடைந்தால் அது தண்ணீர் பிடிப்பதற்கும் உதவாது ; அதற்கு மதிப்பும் கிடையாது .
அதைப்போல , தீயோர்களிடம் செல்வம் இல்லை என்றால் அவர்களுக்கு மதிப்புக் கிடையாது .
ஏனென்றால் தீயோருக்குக் கிடைத்த ஓரளவு மதிப்பும் அவர்களின் செல்வத்திற்குக் கிடைத்தது ஆகும் .
• கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே !
சான்றோரின் சிறப்பை மேலும் ஒரு மூதுரைப் பாடல் பின்வருமாறு தெரிவிக்கிறது .
அட்டாலும் பால்சுவையின் குன்றாது அளவளாய்
நட்டாலும் , நண்புஅல்லார் நண்புஅல்லர் ;
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளே ; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்
( மூதுரை : 4 )
( அட்டாலும் = காய்ச்சினாலும் , குன்றாது = குறையாது , அளவளாய் = கலந்து பழகி , நட்டாலும் = நட்புக் கொண்டாலும் , கெட்டாலும் = நிலையில் தாழ்ந்தாலும் ) அடுப்பில் வைத்து , பாலைக் காய்ச்சுவதால் பாலின் சுவை குறையாது .
மாறாகச் சுவை கூடும் .
நெருப்பில் போட்டுச் சுடுவதால் சங்கின் வெண்மை குறையாது .
மாறாக வெண்மை கூடும் .
இவற்றைப் போல , சான்றோர்கள் வறுமையால் துன்பப்பட்டாலும் , தங்கள் நல்ல பண்பிலிருந்து மாறமாட்டார்கள் .
ஆனால் , தீயோர்களிடம் எவ்வளவு நட்பாகப் பழகினாலும் அந்த நட்புக்குத் தகுதி உடையவர்களாகப் பழக மாட்டார்கள் என்பதே இப்பாடலின் கருத்து ஆகும் .
இந்தப் பாடலில் சான்றோர்களின் உயர்ந்த பண்பிற்கு இரண்டு உவமைகளைத் தெரிவித்துள்ள ஆசிரியர் தீயோருக்கு உவமை எதுவும் கூறாமல் விட்டுள்ளார் .
சான்றோருக்குக் கூறப்பட்டுள்ள இரண்டு உவமைகளிலும் வெண்மை நிறப்பொருள்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன .
ஒன்று பால் , மற்றொன்று சங்கு .
இவை , சான்றோரின் மாசற்ற உள்ளத்தைக் குறிப்பாகக் காட்டுகின்றன .
இந்த இரண்டு பொருள்களும் வெப்பத்தால் தங்கள் இயல்பில் குறைவதில்லை .
இவற்றைப் போன்றே சான்றோர்களும் துன்பத்தால் தங்கள் நற்பண்புகளிலிருந்து மாறுவதில்லை என்பதை மூதுரை உணர்த்துகிறது .
3.1.4 உதவி
ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்வது மனித இயல்பு ஆகும் .
ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழும் இயல்பே குடும்ப வாழ்க்கையாக உருவாகியுள்ளது .
இந்த உதவும் மனப்பான்மையானது குடும்ப வாழ்க்கையைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கும் உரியதாக நிலைத்திருக்க வேண்டும் .
அதற்கு மூதுரைப் பாடல்கள் வழிகாட்டுகின்றன .
• பயன் கருதா உதவி
உதவி செய்கிறவர்கள் பயனைக் கருதாமல் உதவிசெய்ய வேண்டும் என்பதைப் பின்வரும் மூதுரைப் பாடல் விளக்குகிறது .
நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாள்உண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்
( மூதுரை : 1 )
( நன்றி = உதவி , தெங்கு = தென்னைமரம் , தாள் = அடிமரம் )
ஒருவருக்கு ஓர் உதவியைச் செய்தவுடன் அந்த உதவிக்கான பலனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது .
தென்னை மரத்தின் அடிப்பகுதியில் தண்ணீரை விட்டு வளர்க்கிறோம் .
சில ஆண்டுகளுக்குப் பிறகு , அதன் தலைப்பகுதி இனிய இளநீரைத் தருகிறது .
அதைப்போல் , பிறருக்கு நாம் செய்த உதவியும் பின்னர் , பயனைத் தரும் என்று இப்பாடல் தெரிவித்துள்ளது .
• உதவியின் பயன்
ஒருவர் செய்கின்ற உதவியைப் பெறுகின்றவரின் தன்மைக்கு ஏற்பவே அந்த உதவி , உயர்வாகவோ தாழ்வாகவோ கருதப்படும் .
நல்லவர்களுக்கு உதவி செய்தால் அந்த உதவி மதிக்கப்படும் .
தீயவர்களுக்கு உதவி செய்தால் அந்த உதவி அப்போதே மறக்கப்படும் .
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே ; அல்லாத
ஈரம்இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்திற்கு நேர்
( மூதுரை : 2 )
( காணுமே = தெரியுமே , ஈரம் இலா = இரக்கம் இல்லாத , உபகாரம் = உதவி )
என்னும் பாடல் நல்லவர்க்குச் செய்த உதவியையும் தீயவர்க்குச் செய்த உதவியையும் தெரிவிக்கிறது .
நல்லவர்க்குச் செய்த உதவியானது கல்லில் பொறித்த எழுத்தைப் போல் நிலைத்து நிற்கும் .
தீயவர்க்குச் செய்த உதவியானது நீரின் மேல் எழுதிய எழுத்தைப் போல் உடனே அழிந்து போகும் .
இச்செய்யுளில் ஒளவையார் இரண்டு உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார் .
1. கல்மேல் எழுத்து .
2. நீர்மேல் எழுத்து .
கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்து எந்தச் சூழ்நிலையிலும் நிலைத்து இருக்கும் ; வெள்ளத்தால் , காற்றால் , தீயால் வேறு இயற்கைச் சீற்றங்களால் அழிந்து போகாது .
அதைப் போன்று நல்லவர்க்குச் செய்த உதவி , காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் ; நாட்டு மக்களால் விரும்பிப் போற்றப்படும் .
ஆனால் , நீரில் எழுதிய எழுத்தானது , எழுதிய நொடியிலேயே அழிந்து விடும் .
அதைப்போல , தீயவர்களுக்குச் செய்த உதவி , அதன் பயனைப் பெற்றவர்களாலேயே கூட நினைக்கப்படாமல் உடனே மறக்கப்பட்டு அழிந்து விடும் .
• தீயவருக்குச் செய்த உதவி மேலும் ஒரு மூதுரைப்பாடல் தீயவர்க்குச் செய்த உதவியின் தன்மையை விளக்குகிறது .
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்குஅதனுக்கு ஆகாரம் ஆனாற்போல் பாங்குஅறியாப் புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்
( மூதுரை : 15 )
( நோய் = துன்பம் , விடகாரி = மருத்துவன் , பாங்கு அறியா = பண்பு அறியாத , புல்லறிவாளர் = தீயவர் , கலம் = பாத்திரம் )
இச்செய்யுளில் , தீயவர்களுக்கு உதவி செய்தால் , அந்தத் தீயவர்கள் , உதவி செய்தவர்களுக்கே துன்பம் ஏற்படும்படி செய்து விடுவார்கள் என்னும் கருத்து விளக்கப்பட்டுள்ளது .
இக்கருத்தை விளக்குவதற்கு ஒரு காட்சி விளக்கத்தையும் ஓர் உவமையையும் மூதுரை பயன்படுத்தியுள்ளது .
விடகாரி என்பவன் உடலில் பரவியுள்ள நஞ்சை அகற்றும் மருத்துவன் ஆவான் .
ஒரு வேங்கைப் புலியானது உடலில் நஞ்சு பரவி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது .
அந்த வழியாக வந்த நஞ்சு முறிவு மருத்துவர் , அந்தப் புலிக்கு மருத்துவம் செய்து காப்பாற்றினார் .
உயிர் பிழைத்த அந்தப் புலிக்குப் பசி எடுத்தது .
தன்னை உயிர் பிழைக்கச் செய்த மருத்துவன் என்றும் கருதாமல் அந்த மருத்துவனையே கொன்று தனது பசியைத் தீர்த்துக் கொண்டது .
இந்த நிகழ்ச்சியில் , உயிர் பிழைத்த புலியானது , தனக்கு மருத்துவ உதவி செய்தவரையே கொன்றுவிட்டது .
அதைப்போல , தீயவர்களுக்கு உதவிசெய்தால் , உதவி செய்தவர்களுக்கே தீமையாக முடிந்து விடும் .
இதை மேலும் வலியுறுத்துவதற்கு , ‘ கல்லின் மேல் இட்ட கலம்‘ என்னும் உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது .
கலம் என்பது பாத்திரத்தைக் குறிக்கும் .
இங்கே அது மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தைக் குறிக்கிறது .
மண்ணால் செய்யப்பட்ட பாத்திரம் கல்லில் விழுந்தால் எப்படி உடைந்து பயன் இல்லாமல் போகுமோ அதைப் போல , தீயவர்களுக்குச் செய்த உதவியும் பயன் இல்லாமல் போகும் .
மண் பாத்திரம் எவ்வாறு உடைந்து போகுமோ அதைப் போன்று , தீயவர்களுக்கு உதவி செய்தவர்களும் துன்பம் அடைவார்கள் என்பதை இப்பாடல் விளக்குகிறது .
இதே கருத்தை விளக்கும் வகையில் ‘ பாத்திரம் அறிந்து பிச்சை இடு ’ என்னும் பழமொழியும் உள்ளது .
3.1.5 நட்பு
சங்க காலம் முதல் தமிழ்ச் சமுதாயத்தில் நட்பு , சிறப்பிடம் பெற்றுள்ளது .
பிசிராந்தையார் என்னும் புலவரும் கோப்பெருஞ்சோழன் என்னும் மன்னனும் ஒருவருக்கு ஒருவர் நேரில் பார்க்காமலேயே நட்புக் கொண்டிருந்தனர் .
ஒளவையாரும் அதியமான் என்னும் மன்னனும் நட்புடன் விளங்கியிருக்கிறார்கள் .
பாரி வள்ளலும் கபிலர் என்னும் புலவரும் நல்ல நண்பர்களாய் இருந்துள்ளனர் .
இத்தகைய நட்பின் சிறப்பை மூதுரை இரண்டு பாடல்களில் தெரிவித்துள்ளது .
• எது நல்ல நட்பு ?
இருவர் சிலநாள் நெருங்கிப் பழகுவதால் ஏற்படுவது அல்ல நட்பு .
அந்த இருவருக்கு இடையே அன்பாலும் அறிவாலும் ஏற்படும் இணைப்புத் தான் நட்பாகச் சிறந்து விளங்கும் .
நல்ல நண்பர்கள் , நண்பனுக்குத் துன்பம் ஏற்பட்ட வேளையில் உதவுவார்கள் .
தீய நண்பர்கள் , நண்பனுக்குத் துன்பம் ஏற்படும் போது அவர்களை விட்டு விலகி விடுவார்கள் .
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவுஅல்லர் அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு
( மூதுரை : 17 )
( அற்ற = நீர் இல்லாத , அறு = அகன்று செல்லும் , உற்றுழி = துன்பம் ஏற்பட்ட வேளை , தீர்வார் = விலகிச் செல்கிறவர் , கொட்டி , ஆம்பல் , நெய்தல் = நீர்த் தாவரங்கள் , உறுவார் = நட்புக் கொள்கிறவர் )
என்னும் மூதுரைப் பாடல் நல்ல நண்பர்களையும் தீய நண்பர்களையும் அடையாளம் காட்டியுள்ளது .
குளத்தில் கொட்டி என்னும் நீர்க் கொடியும் ஆம்பல் என்னும் கொடியும் நெய்தல் கொடியும் நிறைந்து இருக்கும் .
அதே குளத்தில் உள்ள மீன்களை உண்ணும் நோக்கத்துடன் பறவைகளும் இருக்கும் .
குளத்தில் நீர் நிறைந்து இருக்கும் போது அங்கே தங்கி இருக்கும் பறவைகள் , நீர் வற்றிவிட்டால் வேறு குளத்திற்குப் பறந்து போய் விடும் .
ஆனால் கொட்டி , ஆம்பல் , நெய்தல் முதலிய நீர்க் கொடிகள் நீர்வற்றி விட்டாலும் அந்தக் குளத்திலேயே கிடந்து வாடும் .
குளத்தில் நீர்வற்றிய உடன் பறந்து விடும் பறவையைப் போன்றவர்கள் தீய நண்பர்கள் .
நீர்வற்றிய பிறகும் அங்கேயே கிடக்கும் கொட்டி , ஆம்பல் , நெய்தல் முதலிய கொடிகளைப் போன்றவர்கள் நல்ல நண்பர்கள் என்று மூதுரை தெரிவித்துள்ளது .
• சுற்றமும் நட்பும்
நம்முடன் பிறந்தவர்கள் மட்டுமே நமது சுற்றத்தார் என்று முழுமையாக நம்பி இருக்க வேண்டாம் .
அந்த உடன்பிறந்தார் நமது உயிரைப் போக்கும் அளவிற்குத் துன்பம் செய்து விடுவதும் உண்டு .
ஆனால் உடன்பிறவாத நண்பர்கள் நமக்கு நன்மை செய்வார்கள் என்பதைப் பின்வரும் மூதுரைப் பாடல் விளக்குகிறது .
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றுஇருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும் ;
அம்மருந்து போல்வாரும் உண்டு
( மூதுரை : 20 )
( சுற்றத்தார் = உறவினர் , வியாதி = நோய் , பிணி = நோய் )
நோயானது நமது உடலிலே தோன்றி நமது உயிரையே பறிக்கும் கொடுமை உடையது .
ஆனால் , நம்முடன் தோன்றாமல் தொலைவில் உள்ள மலையில் தோன்றிய அரிய மூலிகை மருந்து அந்த நோயைப் போக்கி நமது உயிரைக் காக்கும் .
அதைப் போன்று , நம் உடன் பிறந்தோர் நமக்குத் துன்பம் செய்வது உண்டு .
ஆனால் உடன் பிறவாமல் தொலைவில் இருந்தே நமக்கு உதவும் நண்பர்களும் உண்டு .
எனவே , நண்பர்களை நமது உறவினர்கள் இல்லை என்று ஒதுக்கிட வேண்டாம் என மூதுரை தெரிவிக்கிறது .
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. ‘ மூதுரை ’ - பெயர்க்காரணம் தருக .
[ விடை ]
2. மூதுரையின் கடவுள் வாழ்த்தில் போற்றப்பட்டுள்ள கடவுள் யார் ?
[ விடை ]
3. ஒளவையார் , யாரை ‘ மரம் ’ என்று குறிப்பிடுகிறார் ?
[ விடை ]
4. பொன்னின் குடம் உடைந்தால் என்ன ஆகும் ?
[ விடை ]
5. நல்லவர்க்குச் செய்த உதவி எதைப் போன்றது ?
நல்வழி
மக்கள் நல்ல வழியில் நடப்பதற்கு உதவும் அறக்கருத்துகளைக் கொண்டதால் , இந்நூல் ‘ நல்வழி ’ என்று அழைக்கப்படுகிறது .
இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாக்களைக் கொண்டது .
3.2.1 கடவுள் வாழ்த்து
நல்வழியின் கடவுள் வாழ்த்தில் விநாயகக் கடவுள் போற்றப் பட்டுள்ளார் .
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துஉனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே !
நீஎனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா
( நல்வழி : கடவுள் வணக்கம் )
( கோலம் = அழகு , துங்க = பெருமை மிகுந்த , கரிமுகம் = யானை முகம் , தூமணி = தூய மணி , தமிழ் மூன்று = இயல் தமிழ் , இசைத் தமிழ் , நாடகத் தமிழ் )
பெருமை மிகுந்த யானை முகத்தைக் கொண்ட விநாயகக் கடவுளே !
நான் உனக்கு இனிய பாலையும் தெளிந்த தேனையும் வெல்லப் பாகினையும் பருப்பு வகைகளையும் கலந்து படைக்கின்றேன் .
நீ எனக்கு இயல் , இசை , நாடகம் என்னும் மூன்று தமிழையும் தருவாயாக !
என்று ஒளவையார் வேண்டுகிறார் .
இச்செய்யுளில் விநாயகக் கடவுள் பின்வருமாறு வருணிக்கப் பட்டுள்ளார் .
விநாயகக் கடவுள் அழகிய அணிகலன்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளார் ; பெருமை மிகுந்த யானை முகத்துடன் விளங்குகிறார் ; தூய்மையான மணி போன்ற ஒளியுடன் காட்சி அளிக்கிறார் என்று ஒளவையார் பாடியுள்ளார் .
3.2.2 வள்ளல் தன்மை
வள்ளல்கள் தங்களிடம் இருக்கும் செல்வத்தைப் பொருள் இல்லாதவர்களுக்கு வாரி வழங்குவார்கள் .
இவ்வாறு வழங்கும் வள்ளல் குணம் கொண்டவர்கள் தங்களிடம் பொருள் குறைந்து விட்டாலும் , தங்களைத் தேடி வந்தவர்களுக்குப் பொருள் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள் .
ஆற்றுப் பெருக்குஅற்று அடிசுடும் அந்நாளும்
ஊற்றுப் பெருக்கால் உலகுஊட்டும் ; ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
‘ இல்லை ’என மாட்டார் இசைந்து
( நல்வழி : 9 )
( பெருக்கு = வெள்ளப்பெருக்கு , அற்று = இல்லாமல் , அடி = பாதம் , ஊற்று = நீரூற்று , உலகு = உலக மக்களுக்கு , ஊட்டும் = தண்ணீரைக் கொடுக்கும் , ஏற்றவர்க்கு = தேடி வந்தவர்களுக்கு , நல்கூர்ந்தார் = வறுமை நிலையை அடைந்தார் , இசைந்து = மனமார )
வழி வழியாகப் பிறருக்குப் பொருளை வழங்கும் நல்ல குடியில் பிறந்தவர்களை ‘ வள்ளல் குடியினர் ’ என்று சிறப்பித்துக் கூறுவார்கள் .
அத்தகைய வள்ளல் குடியில் பிறந்தவர்கள் வறுமை நிலையை அடைந்தாலும் , தங்களைத் தேடி வந்தவர்களுக்குப் ‘ பொருள் இல்லை ’ என்று சொல்ல மாட்டார்கள் .
அவ்வாறு சொல்வதற்கு அவர்களது உள்ளம் விரும்பாது . இதை விளக்குவதற்கு ஒளவையார் ஆற்றை உவமைப் படுத்தியுள்ளார் .