பிச்சை புகினும் கற்கை நன்றே
( 35 )
என்னும் வரிகள் , இதற்கு விளக்கம் தருகின்றன .
ஒருவன் செல்வம் இல்லாதவனாக மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டாலும் , அந்த நிலையிலும் கல்வி கற்க வேண்டும் என்பதை இந்த வரிகள் உணர்த்துகின்றன .
• கற்றவரே உயர்ந்தோர்
நமது சமுதாயத்தில் குலத்தால் உயர்வு , தாழ்வு பார்க்கும் இழிநிலை இருக்கிறது .
குலத்தை நான்காகப் பிரித்து வைத்துள்ளார்கள் .
அவை , அந்தணர் , அரசர் , வணிகர் , வேளாளர் என்பவை .
இந்த நான்கு குலத்திலும் அந்தணரை உயர்ந்தோர் என்றும் , அடுத்த நிலையில் அரசர்கள் என்றும் , அதற்கும் அடுத்த நிலையில் வணிகர்கள் என்றும் , கடைநிலையில் வேளாளர்கள் என்றும் தரப்படுத்தியிருக்கிறார்கள் .
இந்தத் தர வரிசையில் முதலில் இருக்கும் அந்தணர் குலத்தைச் சேர்ந்த ஒருவன் கல்வி அறிவு பெறவில்லை என்றால் அவனும் கீழ்க்குலத்தைச் சேர்ந்தவனாகவே கருதப்படுவான் என்று வெற்றிவேற்கை கூறுகிறது .
நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே
( 37 )
இந்தத் தொடரின் மூலம் அதிவீரராமபாண்டிய மன்னனின் காலத்தில் வருணப் பிரிவு இருந்ததை அறிய முடிகிறது .
இந்த வருணப் பிரிவால் உயர்வு தாழ்வு இருந்ததையும் அறிய முடிகிறது .
எனினும் , கல்வி கற்றவர்களின் உயர்வை வெளிப்படுத்தும் வகையில் கடைநிலையில் இருப்பவர்களும் கற்றவர்களாக இருந்தால் முதல்நிலையில் வைத்துப் போற்றப்படுவார்கள் என்பதையும் பின்வரும் தொடர் வெளிப்படுத்துகிறது .
எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை ‘ மேல்வருக‘ என்பர்
( 38 )
மேற்கூறிய நால்வருணத்தில் எந்தக் குடியில் யாராக இருந்தாலும் , கற்றவராக இருந்தால் அவரை அறிஞர்கள் வரவேற்பார்கள் .
இந்த இரு தொடர்களும் வருணப்பிரிவைத் தெரிவிக்கின்றன .
என்றாலும் , கற்றோருக்கு வருணப் பிரிவு இல்லை என்பதைத் தெரிவித்து , கல்வியின் சிறப்பைத் தெரிவிக்கின்றன .
• கல்லாமை
கல்வி அறிவு இல்லாதவன் எதற்கும் பயன்அற்றவன் .
அவன் தனது குலத்தின் பெருமையைக் கற்றவர்களிடம் பேசுவதால் அவனுக்குப் பெருமை வந்து சேராது .
இதை உணராமல் கல்லாத ஒருவன் தனது குலப்பெருமையைப் பேசினால் அவன் ‘ பதர் ’ ஆகக் கருதப்படுவான் என்பதை ,
கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே
( 36 )
என்னும் தொடர் தெரிவிக்கிறது .
நெல்லின் உள்ளே அரிசி இருந்தால் அதை நெல்மணி அல்லது நெல் என்று கூறுவோம் .
அரிசி இல்லாமல் உமியால் மட்டும் மூடப்பட்டு இருக்கும் நெல்லைப் பதர் என்று கூறுவார்கள் .
அரிசி இல்லாமல் வெறும் உமிமட்டும் இருக்கும் பதர் , உணவுக்குப் பயன்படாது .
அதைப்போல , கல்வி அறிவு இல்லாதவனும் பயன்படமாட்டான் என்பது இத்தொடரின் பொருள் .
இவ்வாறு கல்வியறிவு இல்லாமல் பிறருக்குப் பயன்படாமல் இருப்பவன் , கற்றவர்களிடம் தன் குலத்தை உயர்த்திப் பேசுவது நெல் போன்றே காட்சி தரும் பதருக்கு இணையானது என்று அதிவீரராம பாண்டியன் கூறியுள்ளார் .
4.1.3 உதவியும் உதவாமையும்
மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழவேண்டும் .
உதவியின் சிறப்பை ஒளவையார் மூதுரையில் தெரிவித்துள்ளார் .
உதவி செய்வதற்கு மிகுதியான பொருள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை .
பொருள் குறைவாக இருந்தாலும் நிறைந்த மனம் இருந்தால் போதும் என்பதை வெற்றிவேற்கை அறிவித்துள்ளது .
தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை
தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையிலும்
நுண்ணிதே ஆயினும் , அண்ணல் யானை
அணிதேர் , புரவி , ஆள் பெரும்படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே
( 17 )
என்பதே அப்பாடல் ஆகும் .
இந்தப் பாடலில் உதவியின் சிறப்பு வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை .
உதவியின் சிறப்பை விளக்கும் ஓர் உவமை மட்டுமே சொல்லப்பட்டுள்ளது . அந்த உவமையைக் கண்முன் காட்சியாக விரியும் வகையில் தெளிவாக விளக்கியுள்ளார் அதிவீரராம பாண்டியன் .
நன்கு வளர்ந்த ஆலமரத்தில் ஆலம்பழங்கள் கனிந்து இருக்கும் .
அவற்றின் உள்ளே சிறிய விதைகள் இருக்கும் .
அந்த விதைகள் சிறிய மீனின் முட்டையை விடவும் அளவில் சிறிதாக இருக்கும் .
ஆனால் அந்த விதை மரமாக வளர்ந்து பெரிய ஆலமரமாக நிற்கும் .
அந்த ஆலமரத்தின் நிழலில் யானைப்படை , தேர்ப்படை , குதிரைப்படை , காலாட் படை என்னும் நால்வகைப் படையைக் கொண்ட மன்னனும் தங்க முடியும் .
அதைப்போல , குறைந்த அளவு செல்வம் கொண்டவர்களாக இருந்தாலும் மனம் இருந்தால் பிறருக்கு உதவ முடியும் .
• செல்வரின் கடமை
செல்வம் இருப்பவர்கள் அச்செல்வத்தின் மூலம் பிறருக்கு உதவ வேண்டும் .
அதை அவர்கள் தங்கள் கடமையாகக் கருதிச் செயல்படவேண்டும் .
இதை வெற்றிவேற்கை பின்வரும் தொடர் வாயிலாகத் தெரிவித்துள்ளது .
இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே
( 58 )
ஒருவர் இரந்து உண்ணும் நிலைக்கு வருகிறார் என்றால் அவர் தமது மதிப்புநிலையைத் துறந்து வருகிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும் .
தமது மதிப்பை இழந்து ஒருவர் இரக்கின்ற நிலைக்கு வருகிறார் என்றால் அவரது வறுமைக் கொடுமையை உணர்ந்து செல்வம் இருக்கின்றவர்கள் உதவவேண்டும் .
அது , செல்வம் இருப்பவர்களின் கடமையும் ஆகும் .
• உதவாமை
செல்வம் குறைவாக இருந்தாலும் நல்ல மனம் கொண்டவர்கள் பிறருக்கு உதவி செய்யும் இயல்புடன் இருப்பதை முன்பே நாம் கண்டோம் .
மிகுதியாகச் செல்வம் கொண்டவர்களும் பிறருக்கு உதவாதவர்களாக இருப்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது .
தேம்படு பனையின் திரள்பழத்து ஒருவிதை
வான்உற ஓங்கி , வளம்பெற வளரினும்
ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே
( 16 )
பனைமரத்தின் பழம் திரண்டு பெரியதாக இருக்கும் .
அதன் விதையும் பெரிதாக இருக்கும் அந்த விதையிலிருந்து வளரும் பனைமரமும் வானளாவ ஓங்கி வளரும் .
பனைமரம் உயரமாக வளர்ந்தாலும் அதன் நிழலில் ஒருவர் கூடத் தங்க இயலாது .
இந்தப் பனைமரத்தைப் போல , செல்வம் மிகுதியாக உடையவராக இருந்தாலும் , பிறருக்கு உதவும் மனப்பான்மை இல்லாதவர்கள் உதவி செய்ய மாட்டார்கள் .
பிறருக்கு உதவுவதற்கும் உதவாமல் இருப்பதற்கும் செல்வம் தேவை தான் என்றாலும் அது மட்டுமே அடிப்படை ஆகாது .
ஏனெனில் பிறருக்கு உதவும் மனம் வேண்டும் என்னும் கருத்தை வெற்றிவேற்கை தெளிவாக உணர்த்தியுள்ளது .
4.1.4 நல்லவரும் தீயவரும்
பிறருக்கு நன்மை செய்கிறவர்களை நல்லவர்கள் என்கிறோம் ; தீமை செய்கிறவர்களைத் தீயவர்கள் என்கிறோம் .
நன்மை செய்கின்ற மனத்தை இயல்பாகக் கொண்டவர்கள் எக்காரணத்தாலும் பிறருக்குத் தீமை செய்ய மாட்டார்கள் இந்த நல்லவர்களின் இயல்பை விளக்குவதற்கு ஐந்து தொடர்களை வெற்றிவேற்கை வழங்கியுள்ளது .
அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது
சுடினும் செம்பொன் தன்ஒளி கெடாது
அரைக்கினும் சந்தனம் தன்மணம் அறாது
புகைக்கினும் கார்அகில் பொல்லாங்கு கமழாது
கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது
( 23-27 )
( அடினும் = காய்ச்சினாலும் , கார் அகில் = கறுத்த அகில் கட்டை , பொல்லாங்கு = தீய மணம் )
இந்த ஐந்து தொடர்களிலும் ஐந்து பொருள்கள் குறிக்கப் பட்டுள்ளன .
அவை ஆவின்பால் , செம்பொன் , சந்தனம் , அகில் , கடல் ஆகியவை ஆகும் .
இவை ஐந்தின் நிலைத்த தன்மைகளை நல்லவர்களின் நல்ல குணத்திற்குச் சான்றாக வெற்றிவேற்கை கூறியுள்ளது .
• அடுப்பில் வைத்துக் காய்ச்சுவதால் பசும் பாலின் சுவை குறையாது .
• நெருப்பில் போட்டுச் சுடுவதால் பொன்னின் ஒளி இல்லாமல் போகாது .
• கல்லில் வைத்து அரைப்பதால் சந்தனத்தின் மணம் போகாது .
• நெருப்பில் போட்டு அகில் கட்டையைப் புகைத்தால் கெட்ட மணம் வராது .
• கலக்குவதால் கடல்நீர் சேற்று நீராக மாறாது .
இந்த ஐந்து பொருள்களும் அவற்றின் இயல்பான தன்மையில் மாறாதது போல் நல்லவர்களும் தங்கள் நல்ல குணத்திலிருந்து மாறமாட்டார்கள் .
• தீயவர்கள்
தீயவர்களுக்கு எவ்வளவு நல்ல நெறிகளைக் கூறினாலும் அவர்கள் திருந்துவதில்லை . அவர்களின் இயல்பான தீய குணமே வெளிப்படும் .
இதை வெற்றிவேற்கையின் இரண்டு தொடர்கள் விளக்குகின்றன .
அடினும் பால்பெய்து , கைப்பு அறாது , பேய்ச்
சுரைக்காய்
( 28 )
( கைப்பு = கசப்பு , அறாது = நீங்காது )
என்பது ஒருதொடர் .
இதனை ,
‘ பால் பெய்து அடினும் , பேய்ச்சுரைக்காய் கைப்பு அறாது ’
என்று படித்துப் பொருள் கொள்ள வேண்டும் .
பேய்ச்சுரைக்காய் கசப்புச் சுவை கொண்ட காய் .
இது கடற்கரைகளில் வளரும் .
இந்தப் பேய்ச்சுரைக்காயை எவ்வளவுதான் பால் விட்டுச் சமைத்தாலும் அதிலுள்ள கசப்புச் சுவை மாறாது .
அதைப்போல , தீயவர்களிடம் எவ்வளவு நல்ல கருத்துகளை எடுத்துக் கூறினாலும் அவர்கள் தீய செயல்களையே செய்வார்கள் .
ஊட்டினும் பல்விரை , உள்ளி கமழாதே
( 29 )
( விரை = நறுமணம் )
என்பது மற்றொரு தொடர் .
உள்ளி என்பது வெங்காயத்தின் வேறு பெயர் .
இந்த வெங்காயத்துடன் எவ்வளவு மணப்பொருள்களைக் கலந்தாலும் அதன் இயல்பான வெங்காய வாசம் மாறாது .
அதைப் போல , தீயவர்கள் நல்லவர்களுடன் சேர்ந்து இருந்தாலும் அவர்களின் தீய குணம் போகாது .
4.1.5 உயர்வும் தாழ்வும்
கடலில் உருவாகும் அலைகள் எழுவதும் வீழ்வதும் போல் வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் நிகழ்வது இயல்பு .
செல்வ நிலையில் உயர்ந்து இருப்பவர் , தொடர்ந்து உயர்ந்தே இருப்பார் என்று சொல்ல இயலாது .
அவரே தமது நிலையில் தாழ்ந்தும் போகலாம் .
• நிலை உயர்வு
பொருள் எதுவும் இல்லாமல் ஏழையாக இருக்கும் ஒருவர் பொருள் உடையவராக மாறவும் வாய்ப்பு உண்டு .
ஏனெனில் செல்வம் நிலையற்ற தன்மை கொண்டது .
இதைத் திருவள்ளுவர் ,
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால்
( 248 )
( பூப்பர் = பொருள் உடையவர் ஆவார் )
என்று குறிப்பிட்டுள்ளார் .
பொருள் இல்லாதவர் மன்னனாகக் கூட முடியும் என்பதை அதிவீரராம பாண்டியன் ,
அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசோடு இருந்து அரசாளினும் ஆளுவர்
( 52 )
என்று பாடியுள்ளார் .
வீடு வீடாகச் சென்று பிச்சை கேட்டு வாழ்கின்ற இரவலன்கூட அரசனுடன் சேர்ந்து , ஒருநாள் அரசனாகி நாட்டை ஆள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்பது இதன் பொருள் .
இது ஒரு தனி மனிதனின் நிலை உயர்வைக் காட்டுகிறது .
பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
பொன்தொடி மகளிரும் மைந்தரும் கூடி
நெல்பொலி நெடுநகர் ஆயினும் ஆகும்
( 55 )
( பெற்றம் = எருது , தொடி = வளையல் )
என்னும் பாடலில் பாழான நிலம் , பெரிய நகரமாக நிலைமையில் உயர்வதற்கும் வாய்ப்பு உண்டு என்று வெற்றிவேற்கை கூறியுள்ளது .
வயல்வெளி இல்லாத மேட்டு நிலத்தில் மாடுகளும் கழுதைகளும் மேயும் .
அப்படிப்பட்ட மேட்டு நிலம் கூட ஒரு நாள் , ஆண்களும் பெண்களும் மகிழ்ந்து வாழும் பெரிய நகரமாக மாறும் .
அதைப்போல நிலைமையில் தாழ்ந்தவரும் உயர்ந்தவராக மாறுவார் .
எனவே , யாரையும் இகழ்ச்சியுடன் பார்க்கக்கூடாது என்பதை இவ்வடிகளின் உதவியால் புரிந்து கொள்ள முடியும் . • நிலை தாழ்வு
எல்லா வகையான செல்வங்களையும் பெற்று இன்பமாக வாழ்கின்ற ஒருவர் , இன்று போல் என்றும் இன்பமாகவே வாழ்வார் என்று யாரும் எதிர்பார்க்க இயலாது .
எதிர்பார்க்காத மாற்றங்கள் நிகழ்வது உண்டு .
அந்த எதிர்பாராத தாழ்வுகளை ஐந்து பாடல்களில் வெற்றிவேற்கை தெரிவித்துள்ளது .
குடைநிழல் இருந்து , குஞ்சரம் ஊர்ந்தோர்
நடைமெலிந்து , ஓர்ஊர் நண்ணினும் நண்ணுவர்
( 50 )
( குஞ்சரம் = யானை , நண்ணுவர் = அடைவர் )
வெண்கொற்றக் குடையின் கீழிருந்து ஆட்சி செய்யும் மன்னர் யானைமேல் ஊர்வலம் செல்லும் உயர்ந்த நிலையில் இருப்பவர் .
அந்த உயர்ந்த நிலையில் இருக்கும் மன்னரும் தமது நிலையில் தாழ்ந்து , அந்த ஊரில் வாழ இயலாது வேறு ஓர் ஊருக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்பதை இந்த வரிகள் தெரிவிக்கின்றன .
சிலப்பதிகாரத்தில் காவியத்தலைவனாக இருப்பவன் கோவலன் .
காவியத் தலைவி கண்ணகி .
சோழமன்னனுக்கு இணையாகப் பூம்புகாரில் வாழ்ந்து வந்தவன் கோவலன் .
அவனும் தனது நிலையில் மாறி , பாண்டிய நாட்டிற்குச் சென்று தொழில் செய்து பிழைக்க வேண்டிய நிலைக்குத் தாழ்ந்து விடுகிறான் .
எனவே , எப்போதும் உயர்ந்த நிலையிலேயே இருப்போம் என்று எண்ணக்கூடாது என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம் .
மன்னனாக வாழ்ந்தவன் தனது நாட்டை இழந்து வேறு நாட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது .
புகழும் செல்வமும் உடையவர்கள் அன்ன சத்திரத்துக்குப் போய் உண்டு வாழக்கூடிய வறுமை நிலையை அடைந்தாலும் அடைவார்கள் .
இதை
சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்
( 51 )
என்னும் பாடல் தெரிவிக்கிறது .
குன்று அத்தனை இருநிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர்
( 53 )
( இருநிதி = பெருஞ்செல்வம் )
என்னும் பாடலில் , மலையளவு பெருஞ்செல்வம் உடையவராக இருந்தாலும் ஒரே நாளில் அந்தப் பெருஞ்செல்வத்தை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாகவும் வாய்ப்பு உண்டு என்பது விளக்கப்பட்டுள்ளது .
எழுநிலை மாடம் கால்சாய்ந்து உக்கு
கழுதை மேய்பாழ் ஆயினும் ஆகும்
( 54 )
( உக்கு = அழிந்து )
பல அடுக்குகளைக் கொண்ட மாடி வீடுகூட , தூண் சாய்ந்து கழுதை மேயும் மேடாகவும் மாறிவிடும் என்பது இதன் பொருள் .
இந்த நிலையாமைக் கருத்துகளை ஆசிரியர் ஏன் வலியுறுத்த வேண்டும் ?
செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அனைவரும் சோம்பியிருக்க வேண்டும் என்று சொல்கிறாரா ?
இல்லை , செல்வமும் புகழும் சேரும் பொழுதும் , விலகும் பொழுதும் நாம் நிலை தடுமாறிவிடக் கூடும் என்பதால் இவை ஓர் எச்சரிக்கையாக அமைகின்றன .
செல்வம் சேரும் பொழுது ஆணவம் வந்து விடக் கூடாது , அது விலகும் பொழுது துன்பத்தினால் மீளாத்துயரில் ஆழ்ந்து விடக்கூடாது என்பதே ஆசிரியர் கருத்து .
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்
( குறள் : 629 )
என்ற குறளின் கருத்துக்குச் சார்புடைய கருத்தாகும் இது .
4.1.6 பெரியோர் நட்பும் சிறியோர் நட்பும்
நண்பர்கள் இருவர் தங்களுக்குள் அன்புடன் வாழ்வதை நட்பு என்கிறோம் .
நண்பர்கள் இருவரும் நல்லவர்கள் என்றால் அவர்களின் நட்பு நிலைத்து நிற்கும் .
அவர்கள் இருவரும் தீயவர்கள் என்றால் அவர்களின் நட்பு நிலைத்து நிற்காது .
நல்லவர்களின் நட்பானது பிறைநிலவு வளர்வதைப் போல் வளரும் .
தீயவர்களின் நட்பானது , முழுநிலவு தேய்வதைப் போல் தேயும் என்று திருக்குறள் கூறுவதை அறிவோம் .
வெற்றிவேற்கையும் ,
ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே
( 34 ) ( கேண்மை = நட்பு )