106

பிச்சை புகினும் கற்கை நன்றே

( 35 )

என்னும் வரிகள் , இதற்கு விளக்கம் தருகின்றன .

ஒருவன் செல்வம் இல்லாதவனாக மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டாலும் , அந்த நிலையிலும் கல்வி கற்க வேண்டும் என்பதை இந்த வரிகள் உணர்த்துகின்றன .

• கற்றவரே உயர்ந்தோர்

நமது சமுதாயத்தில் குலத்தால் உயர்வு , தாழ்வு பார்க்கும் இழிநிலை இருக்கிறது .

குலத்தை நான்காகப் பிரித்து வைத்துள்ளார்கள் .

அவை , அந்தணர் , அரசர் , வணிகர் , வேளாளர் என்பவை .

இந்த நான்கு குலத்திலும் அந்தணரை உயர்ந்தோர் என்றும் , அடுத்த நிலையில் அரசர்கள் என்றும் , அதற்கும் அடுத்த நிலையில் வணிகர்கள் என்றும் , கடைநிலையில் வேளாளர்கள் என்றும் தரப்படுத்தியிருக்கிறார்கள் .

இந்தத் தர வரிசையில் முதலில் இருக்கும் அந்தணர் குலத்தைச் சேர்ந்த ஒருவன் கல்வி அறிவு பெறவில்லை என்றால் அவனும் கீழ்க்குலத்தைச் சேர்ந்தவனாகவே கருதப்படுவான் என்று வெற்றிவேற்கை கூறுகிறது .

நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்

கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே

( 37 )

இந்தத் தொடரின் மூலம் அதிவீரராமபாண்டிய மன்னனின் காலத்தில் வருணப் பிரிவு இருந்ததை அறிய முடிகிறது .

இந்த வருணப் பிரிவால் உயர்வு தாழ்வு இருந்ததையும் அறிய முடிகிறது .

எனினும் , கல்வி கற்றவர்களின் உயர்வை வெளிப்படுத்தும் வகையில் கடைநிலையில் இருப்பவர்களும் கற்றவர்களாக இருந்தால் முதல்நிலையில் வைத்துப் போற்றப்படுவார்கள் என்பதையும் பின்வரும் தொடர் வெளிப்படுத்துகிறது .

எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்

அக்குடியில் கற்றோரை ‘ மேல்வருக‘ என்பர்

( 38 )

மேற்கூறிய நால்வருணத்தில் எந்தக் குடியில் யாராக இருந்தாலும் , கற்றவராக இருந்தால் அவரை அறிஞர்கள் வரவேற்பார்கள் .

இந்த இரு தொடர்களும் வருணப்பிரிவைத் தெரிவிக்கின்றன .

என்றாலும் , கற்றோருக்கு வருணப் பிரிவு இல்லை என்பதைத் தெரிவித்து , கல்வியின் சிறப்பைத் தெரிவிக்கின்றன .

• கல்லாமை

கல்வி அறிவு இல்லாதவன் எதற்கும் பயன்அற்றவன் .

அவன் தனது குலத்தின் பெருமையைக் கற்றவர்களிடம் பேசுவதால் அவனுக்குப் பெருமை வந்து சேராது .

இதை உணராமல் கல்லாத ஒருவன் தனது குலப்பெருமையைப் பேசினால் அவன் ‘ பதர் ’ ஆகக் கருதப்படுவான் என்பதை ,

கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்

நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே

( 36 )

என்னும் தொடர் தெரிவிக்கிறது .

நெல்லின் உள்ளே அரிசி இருந்தால் அதை நெல்மணி அல்லது நெல் என்று கூறுவோம் .

அரிசி இல்லாமல் உமியால் மட்டும் மூடப்பட்டு இருக்கும் நெல்லைப் பதர் என்று கூறுவார்கள் .

அரிசி இல்லாமல் வெறும் உமிமட்டும் இருக்கும் பதர் , உணவுக்குப் பயன்படாது .

அதைப்போல , கல்வி அறிவு இல்லாதவனும் பயன்படமாட்டான் என்பது இத்தொடரின் பொருள் .

இவ்வாறு கல்வியறிவு இல்லாமல் பிறருக்குப் பயன்படாமல் இருப்பவன் , கற்றவர்களிடம் தன் குலத்தை உயர்த்திப் பேசுவது நெல் போன்றே காட்சி தரும் பதருக்கு இணையானது என்று அதிவீரராம பாண்டியன் கூறியுள்ளார் .

4.1.3 உதவியும் உதவாமையும்

மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழவேண்டும் .

உதவியின் சிறப்பை ஒளவையார் மூதுரையில் தெரிவித்துள்ளார் .

உதவி செய்வதற்கு மிகுதியான பொருள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை .

பொருள் குறைவாக இருந்தாலும் நிறைந்த மனம் இருந்தால் போதும் என்பதை வெற்றிவேற்கை அறிவித்துள்ளது .

தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை

தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையிலும்

நுண்ணிதே ஆயினும் , அண்ணல் யானை

அணிதேர் , புரவி , ஆள் பெரும்படையொடு

மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே

( 17 )

என்பதே அப்பாடல் ஆகும் .

இந்தப் பாடலில் உதவியின் சிறப்பு வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை .

உதவியின் சிறப்பை விளக்கும் ஓர் உவமை மட்டுமே சொல்லப்பட்டுள்ளது . அந்த உவமையைக் கண்முன் காட்சியாக விரியும் வகையில் தெளிவாக விளக்கியுள்ளார் அதிவீரராம பாண்டியன் .

நன்கு வளர்ந்த ஆலமரத்தில் ஆலம்பழங்கள் கனிந்து இருக்கும் .

அவற்றின் உள்ளே சிறிய விதைகள் இருக்கும் .

அந்த விதைகள் சிறிய மீனின் முட்டையை விடவும் அளவில் சிறிதாக இருக்கும் .

ஆனால் அந்த விதை மரமாக வளர்ந்து பெரிய ஆலமரமாக நிற்கும் .

அந்த ஆலமரத்தின் நிழலில் யானைப்படை , தேர்ப்படை , குதிரைப்படை , காலாட் படை என்னும் நால்வகைப் படையைக் கொண்ட மன்னனும் தங்க முடியும் .

அதைப்போல , குறைந்த அளவு செல்வம் கொண்டவர்களாக இருந்தாலும் மனம் இருந்தால் பிறருக்கு உதவ முடியும் .

• செல்வரின் கடமை

செல்வம் இருப்பவர்கள் அச்செல்வத்தின் மூலம் பிறருக்கு உதவ வேண்டும் .

அதை அவர்கள் தங்கள் கடமையாகக் கருதிச் செயல்படவேண்டும் .

இதை வெற்றிவேற்கை பின்வரும் தொடர் வாயிலாகத் தெரிவித்துள்ளது .

இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே

( 58 )

ஒருவர் இரந்து உண்ணும் நிலைக்கு வருகிறார் என்றால் அவர் தமது மதிப்புநிலையைத் துறந்து வருகிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும் .

தமது மதிப்பை இழந்து ஒருவர் இரக்கின்ற நிலைக்கு வருகிறார் என்றால் அவரது வறுமைக் கொடுமையை உணர்ந்து செல்வம் இருக்கின்றவர்கள் உதவவேண்டும் .

அது , செல்வம் இருப்பவர்களின் கடமையும் ஆகும் .

• உதவாமை

செல்வம் குறைவாக இருந்தாலும் நல்ல மனம் கொண்டவர்கள் பிறருக்கு உதவி செய்யும் இயல்புடன் இருப்பதை முன்பே நாம் கண்டோம் .

மிகுதியாகச் செல்வம் கொண்டவர்களும் பிறருக்கு உதவாதவர்களாக இருப்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது .

தேம்படு பனையின் திரள்பழத்து ஒருவிதை

வான்உற ஓங்கி , வளம்பெற வளரினும்

ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே

( 16 )

பனைமரத்தின் பழம் திரண்டு பெரியதாக இருக்கும் .

அதன் விதையும் பெரிதாக இருக்கும் அந்த விதையிலிருந்து வளரும் பனைமரமும் வானளாவ ஓங்கி வளரும் .

பனைமரம் உயரமாக வளர்ந்தாலும் அதன் நிழலில் ஒருவர் கூடத் தங்க இயலாது .

இந்தப் பனைமரத்தைப் போல , செல்வம் மிகுதியாக உடையவராக இருந்தாலும் , பிறருக்கு உதவும் மனப்பான்மை இல்லாதவர்கள் உதவி செய்ய மாட்டார்கள் .

பிறருக்கு உதவுவதற்கும் உதவாமல் இருப்பதற்கும் செல்வம் தேவை தான் என்றாலும் அது மட்டுமே அடிப்படை ஆகாது .

ஏனெனில் பிறருக்கு உதவும் மனம் வேண்டும் என்னும் கருத்தை வெற்றிவேற்கை தெளிவாக உணர்த்தியுள்ளது .

4.1.4 நல்லவரும் தீயவரும்

பிறருக்கு நன்மை செய்கிறவர்களை நல்லவர்கள் என்கிறோம் ; தீமை செய்கிறவர்களைத் தீயவர்கள் என்கிறோம் .

நன்மை செய்கின்ற மனத்தை இயல்பாகக் கொண்டவர்கள் எக்காரணத்தாலும் பிறருக்குத் தீமை செய்ய மாட்டார்கள் இந்த நல்லவர்களின் இயல்பை விளக்குவதற்கு ஐந்து தொடர்களை வெற்றிவேற்கை வழங்கியுள்ளது .

அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது

சுடினும் செம்பொன் தன்ஒளி கெடாது

அரைக்கினும் சந்தனம் தன்மணம் அறாது

புகைக்கினும் கார்அகில் பொல்லாங்கு கமழாது

கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது

( 23-27 )

( அடினும் = காய்ச்சினாலும் , கார் அகில் = கறுத்த அகில் கட்டை , பொல்லாங்கு = தீய மணம் )

இந்த ஐந்து தொடர்களிலும் ஐந்து பொருள்கள் குறிக்கப் பட்டுள்ளன .

அவை ஆவின்பால் , செம்பொன் , சந்தனம் , அகில் , கடல் ஆகியவை ஆகும் .

இவை ஐந்தின் நிலைத்த தன்மைகளை நல்லவர்களின் நல்ல குணத்திற்குச் சான்றாக வெற்றிவேற்கை கூறியுள்ளது .

• அடுப்பில் வைத்துக் காய்ச்சுவதால் பசும் பாலின் சுவை குறையாது .

• நெருப்பில் போட்டுச் சுடுவதால் பொன்னின் ஒளி இல்லாமல் போகாது .

• கல்லில் வைத்து அரைப்பதால் சந்தனத்தின் மணம் போகாது .

• நெருப்பில் போட்டு அகில் கட்டையைப் புகைத்தால் கெட்ட மணம் வராது .

• கலக்குவதால் கடல்நீர் சேற்று நீராக மாறாது .

இந்த ஐந்து பொருள்களும் அவற்றின் இயல்பான தன்மையில் மாறாதது போல் நல்லவர்களும் தங்கள் நல்ல குணத்திலிருந்து மாறமாட்டார்கள் .

• தீயவர்கள்

தீயவர்களுக்கு எவ்வளவு நல்ல நெறிகளைக் கூறினாலும் அவர்கள் திருந்துவதில்லை . அவர்களின் இயல்பான தீய குணமே வெளிப்படும் .

இதை வெற்றிவேற்கையின் இரண்டு தொடர்கள் விளக்குகின்றன .

அடினும் பால்பெய்து , கைப்பு அறாது , பேய்ச்

சுரைக்காய்

( 28 )

( கைப்பு = கசப்பு , அறாது = நீங்காது )

என்பது ஒருதொடர் .

இதனை ,

‘ பால் பெய்து அடினும் , பேய்ச்சுரைக்காய் கைப்பு அறாது ’

என்று படித்துப் பொருள் கொள்ள வேண்டும் .

பேய்ச்சுரைக்காய் கசப்புச் சுவை கொண்ட காய் .

இது கடற்கரைகளில் வளரும் .

இந்தப் பேய்ச்சுரைக்காயை எவ்வளவுதான் பால் விட்டுச் சமைத்தாலும் அதிலுள்ள கசப்புச் சுவை மாறாது .

அதைப்போல , தீயவர்களிடம் எவ்வளவு நல்ல கருத்துகளை எடுத்துக் கூறினாலும் அவர்கள் தீய செயல்களையே செய்வார்கள் .

ஊட்டினும் பல்விரை , உள்ளி கமழாதே

( 29 )

( விரை = நறுமணம் )

என்பது மற்றொரு தொடர் .

உள்ளி என்பது வெங்காயத்தின் வேறு பெயர் .

இந்த வெங்காயத்துடன் எவ்வளவு மணப்பொருள்களைக் கலந்தாலும் அதன் இயல்பான வெங்காய வாசம் மாறாது .

அதைப் போல , தீயவர்கள் நல்லவர்களுடன் சேர்ந்து இருந்தாலும் அவர்களின் தீய குணம் போகாது .

4.1.5 உயர்வும் தாழ்வும்

கடலில் உருவாகும் அலைகள் எழுவதும் வீழ்வதும் போல் வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் நிகழ்வது இயல்பு .

செல்வ நிலையில் உயர்ந்து இருப்பவர் , தொடர்ந்து உயர்ந்தே இருப்பார் என்று சொல்ல இயலாது .

அவரே தமது நிலையில் தாழ்ந்தும் போகலாம் .

• நிலை உயர்வு

பொருள் எதுவும் இல்லாமல் ஏழையாக இருக்கும் ஒருவர் பொருள் உடையவராக மாறவும் வாய்ப்பு உண்டு .

ஏனெனில் செல்வம் நிலையற்ற தன்மை கொண்டது .

இதைத் திருவள்ளுவர் ,

பொருள் அற்றார் பூப்பர் ஒருகால்

( 248 )

( பூப்பர் = பொருள் உடையவர் ஆவார் )

என்று குறிப்பிட்டுள்ளார் .

பொருள் இல்லாதவர் மன்னனாகக் கூட முடியும் என்பதை அதிவீரராம பாண்டியன் ,

அறத்திடு பிச்சை கூவி இரப்போர்

அரசோடு இருந்து அரசாளினும் ஆளுவர்

( 52 )

என்று பாடியுள்ளார் .

வீடு வீடாகச் சென்று பிச்சை கேட்டு வாழ்கின்ற இரவலன்கூட அரசனுடன் சேர்ந்து , ஒருநாள் அரசனாகி நாட்டை ஆள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்பது இதன் பொருள் .

இது ஒரு தனி மனிதனின் நிலை உயர்வைக் காட்டுகிறது .

பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்

பொன்தொடி மகளிரும் மைந்தரும் கூடி

நெல்பொலி நெடுநகர் ஆயினும் ஆகும்

( 55 )

( பெற்றம் = எருது , தொடி = வளையல் )

என்னும் பாடலில் பாழான நிலம் , பெரிய நகரமாக நிலைமையில் உயர்வதற்கும் வாய்ப்பு உண்டு என்று வெற்றிவேற்கை கூறியுள்ளது .

வயல்வெளி இல்லாத மேட்டு நிலத்தில் மாடுகளும் கழுதைகளும் மேயும் .

அப்படிப்பட்ட மேட்டு நிலம் கூட ஒரு நாள் , ஆண்களும் பெண்களும் மகிழ்ந்து வாழும் பெரிய நகரமாக மாறும் .

அதைப்போல நிலைமையில் தாழ்ந்தவரும் உயர்ந்தவராக மாறுவார் .

எனவே , யாரையும் இகழ்ச்சியுடன் பார்க்கக்கூடாது என்பதை இவ்வடிகளின் உதவியால் புரிந்து கொள்ள முடியும் . • நிலை தாழ்வு

எல்லா வகையான செல்வங்களையும் பெற்று இன்பமாக வாழ்கின்ற ஒருவர் , இன்று போல் என்றும் இன்பமாகவே வாழ்வார் என்று யாரும் எதிர்பார்க்க இயலாது .

எதிர்பார்க்காத மாற்றங்கள் நிகழ்வது உண்டு .

அந்த எதிர்பாராத தாழ்வுகளை ஐந்து பாடல்களில் வெற்றிவேற்கை தெரிவித்துள்ளது .

குடைநிழல் இருந்து , குஞ்சரம் ஊர்ந்தோர்

நடைமெலிந்து , ஓர்ஊர் நண்ணினும் நண்ணுவர்

( 50 )

( குஞ்சரம் = யானை , நண்ணுவர் = அடைவர் )

வெண்கொற்றக் குடையின் கீழிருந்து ஆட்சி செய்யும் மன்னர் யானைமேல் ஊர்வலம் செல்லும் உயர்ந்த நிலையில் இருப்பவர் .

அந்த உயர்ந்த நிலையில் இருக்கும் மன்னரும் தமது நிலையில் தாழ்ந்து , அந்த ஊரில் வாழ இயலாது வேறு ஓர் ஊருக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்பதை இந்த வரிகள் தெரிவிக்கின்றன .

சிலப்பதிகாரத்தில் காவியத்தலைவனாக இருப்பவன் கோவலன் .

காவியத் தலைவி கண்ணகி .

சோழமன்னனுக்கு இணையாகப் பூம்புகாரில் வாழ்ந்து வந்தவன் கோவலன் .

அவனும் தனது நிலையில் மாறி , பாண்டிய நாட்டிற்குச் சென்று தொழில் செய்து பிழைக்க வேண்டிய நிலைக்குத் தாழ்ந்து விடுகிறான் .

எனவே , எப்போதும் உயர்ந்த நிலையிலேயே இருப்போம் என்று எண்ணக்கூடாது என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம் .

மன்னனாக வாழ்ந்தவன் தனது நாட்டை இழந்து வேறு நாட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது .

புகழும் செல்வமும் உடையவர்கள் அன்ன சத்திரத்துக்குப் போய் உண்டு வாழக்கூடிய வறுமை நிலையை அடைந்தாலும் அடைவார்கள் .

இதை

சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்

அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்

( 51 )

என்னும் பாடல் தெரிவிக்கிறது .

குன்று அத்தனை இருநிதியைப் படைத்தோர்

அன்றைப் பகலே அழியினும் அழிவர்

( 53 )

( இருநிதி = பெருஞ்செல்வம் )

என்னும் பாடலில் , மலையளவு பெருஞ்செல்வம் உடையவராக இருந்தாலும் ஒரே நாளில் அந்தப் பெருஞ்செல்வத்தை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாகவும் வாய்ப்பு உண்டு என்பது விளக்கப்பட்டுள்ளது .

எழுநிலை மாடம் கால்சாய்ந்து உக்கு

கழுதை மேய்பாழ் ஆயினும் ஆகும்

( 54 )

( உக்கு = அழிந்து )

பல அடுக்குகளைக் கொண்ட மாடி வீடுகூட , தூண் சாய்ந்து கழுதை மேயும் மேடாகவும் மாறிவிடும் என்பது இதன் பொருள் .

இந்த நிலையாமைக் கருத்துகளை ஆசிரியர் ஏன் வலியுறுத்த வேண்டும் ?

செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அனைவரும் சோம்பியிருக்க வேண்டும் என்று சொல்கிறாரா ?

இல்லை , செல்வமும் புகழும் சேரும் பொழுதும் , விலகும் பொழுதும் நாம் நிலை தடுமாறிவிடக் கூடும் என்பதால் இவை ஓர் எச்சரிக்கையாக அமைகின்றன .

செல்வம் சேரும் பொழுது ஆணவம் வந்து விடக் கூடாது , அது விலகும் பொழுது துன்பத்தினால் மீளாத்துயரில் ஆழ்ந்து விடக்கூடாது என்பதே ஆசிரியர் கருத்து .

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன்

( குறள் : 629 )

என்ற குறளின் கருத்துக்குச் சார்புடைய கருத்தாகும் இது .

4.1.6 பெரியோர் நட்பும் சிறியோர் நட்பும்

நண்பர்கள் இருவர் தங்களுக்குள் அன்புடன் வாழ்வதை நட்பு என்கிறோம் .

நண்பர்கள் இருவரும் நல்லவர்கள் என்றால் அவர்களின் நட்பு நிலைத்து நிற்கும் .

அவர்கள் இருவரும் தீயவர்கள் என்றால் அவர்களின் நட்பு நிலைத்து நிற்காது .

நல்லவர்களின் நட்பானது பிறைநிலவு வளர்வதைப் போல் வளரும் .

தீயவர்களின் நட்பானது , முழுநிலவு தேய்வதைப் போல் தேயும் என்று திருக்குறள் கூறுவதை அறிவோம் .

வெற்றிவேற்கையும் ,

ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை

இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே

( 34 ) ( கேண்மை = நட்பு )