என்று பெரியோர் நட்பின் சிறப்பைக் கூறுகிறது .
‘ இருநிலம் ’ என்பதன் பொருள் என்ன ?
ஏற்கனவே ‘ இருநிதி ’ என்ற சொல்லைப் படித்தீர்கள் அல்லவா !
‘ நிதி ’ என்றால் செல்வம் , ‘ இருநிதி ’ என்றால் ‘ பெருஞ்செல்வம் ’ அதுபோல் ‘ இருநிலம் ’ என்பது .
ஆம் !
‘ பெரிய நிலம் ’ என்பது தான் அதன் பொருள் !
பெரியவர்கள் ஒருவரிடம் ஒருநாள் மட்டுமே பழகினாலும் ஆழ்ந்த நட்புடையவர்களாக இருப்பார்கள் .
மரத்தின் வேரானது பெரிய நிலத்தைப் பிளந்து போய் , மரத்தைக் கீழே விழாமல் தாங்குவது போல் அவர்களின் நட்பு உறுதி உடையதாக இருக்கும் .
ஆனால் , அறிவற்றவரின் நட்பு எவ்வளவு நாள் பழகினாலும் நிலைக்காமல் போய் விடும் .
இதை ,
நூறுஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே
( 33 )
என்னும் வெற்றிவேற்கைப் பாடல் தெரிவிக்கிறது .
நீர் நிலையில் காணப்படும் தாவரங்களில் ஒன்று பாசி என்பது .
இது எவ்வளவு காலம் நீரில் கிடந்தாலும் இதன் வேரானது நீர் நிலையின் அடிப்பகுதிக்குச் சென்று நிலத்தில் பதிவது இல்லை .
அதைப்போல அறிவற்றவர்கள் எவ்வளவு காலம் நட்புக் கொண்டாலும் அந்த நட்பு நிலைத்து இருப்பது இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம் .
4.1.7 சொல்திறமும் திறமின்மையும்
சொல்லைச் சரியாகப் பயன்படுத்துவது என்பது தனித்திறமை .
அவ்வாறு சரியாகச் சொல்லைத் தேர்வு செய்து பயன்படுத்துகிறவர்களின் பேச்சைப் பலர் விரும்பிக் கேட்பார்கள் .
சொல்லைத் தேர்வு செய்து பயன்படுத்துவதைப் பின்வரும் திருக்குறள் விளக்குகிறது .
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து
( 645 )
ஒருவன் ஒரு கருத்தை வலியுறுத்திப் பேசும் போது பிறரால் அக்கருத்தை மறுத்துப் பேச இயலாத அளவிற்குச் சொல்லைத் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும் என்பது இதன் பொருள் .
அவ்வாறு பேசும் போது சொல்ல விரும்பும் கருத்துகளை வரிசைப்படுத்தித் தெளிவாகச் சொல்பவர்களின் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் .
• சொல்திறம்
தனது சொல்லாற்றலால் ஒருவன் எந்தச் செயலையும் நிலைநாட்ட முடியும் என்பதை வெற்றிவேற்கை பின்வரும் பாடல் மூலம் அறிவித்துள்ளது .
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்
மெய் போலும்மே ; மெய்போலும்மே
( 73 )
பொய்யைப் பேசுகிற ஒருவனும் சொல்லைத் திறமாகக் கையாளுபவனாக இருந்தால் அவன் தனது பேச்சுத்திறத்தால் பொய்யையும் மெய்யாகக் காட்டி விடுவான் என்பதே இதன் பொருள் .
இதன் மூலம் சொல்திறம் கொண்டவர்களால் எதையும் பேச்சில் வெற்றி கொள்ள முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம் .
• சொல்திறம் இன்மை
சொல்ல விரும்பும் கருத்துகளை ஒருவனால் சரியாக எடுத்துச்சொல்ல இயலவில்லை என்றால் அவனால் எந்தக் கருத்தையும் நிலை நாட்ட இயலாது .
அவன் உண்மையைச் சொன்னாலும் பொய்யாகவே கருதுவார்கள் .
மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்
பொய் போலும்மே ; பொய் போலும்மே
( 74 )
என்னும் வெற்றிவேற்கைப் பாடல் சொல்திறம் இன்மையைத் தெரிவிக்கிறது .
உண்மையைப் பேசவிரும்பும் ஒருவனால் கருத்துகளைச் சரியாக எடுத்துக்கூற இயலாவிட்டால் அவனது உண்மையான சொற்களும் பொய்யாகவே கருதப்படும் .
எனவே , ஒருவன் சொல்திறம் பெற்றவனாக இருக்க வேண்டும் என்பதை அறியலாம் .
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. வெற்றிவேற்கையின் வேறு பெயர் யாது ?
[ விடை ]
2. ஒருவன் கல்வி கற்றவன் என்பதை எதன் மூலம் அறிய முடியும் ?
[ விடை ]
3. செல்வம் உடையவர்களின் கடமை யாது ?
[ விடை ]
4. யாருடைய நட்பு நிலைத்து இருக்கும் ? யாருடைய நட்பு நிலைத்து இருக்காது ?
உலகநீதி
உலகநாதரால் இயற்றப்பட்ட அறஇலக்கியம் உலகநீதி .
இந்நூல் பதிமூன்று பாடல்களைக் கொண்டது .
இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி வரி முருகனின் பெருமையைக் கூறுகிறது .
உலக நீதியின் கடவுள் வாழ்த்தில் விநாயகப் பெருமான் போற்றப்படுகிறார் .
உலகநீதி புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு
( கடவுள் வாழ்த்து )
( கரிமுகன் = யானை முகம் கொண்ட விநாயகன் )
‘ உலகநீதி புராணம் ’ என்னும் அறநூலைச் சொல்வதற்கு யானைமுகம் கொண்ட விநாயகன் காவல் செய்ய வேண்டும் என்று விநாயகனை வேண்டுவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது .
கடவுள் வாழ்த்தில் உலகநீதி என்னும் இந்நூல் ‘ உலகநீதி புராணம் ’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
( புராணம் என்பதற்குப் பல பொருள்கள் வழங்குகின்றன .
அவற்றில் ‘ வேதப் பொருள்களை வலியுறுத்தும் நூல் ' என்பதும் ஒரு பொருள் ) இங்கே , புராணம் என்பதற்கு ‘ அறக்கருத்துகளை வலியுறுத்தும் நூல் ' என்று பொருள் கொள்ளலாம் .
உலகநீதி என்பது உலக மக்கள் நன்றாக வாழ்வதற்கு உதவும் அறக்கருத்துகளைக் குறிக்கும் .
எனவே ‘ உலகநீதி நூல் ' என்பதற்கு உலக மக்கள் நன்றாக வாழ்வதற்கு உதவும் அறக் கருத்துகளைக் கூறும் நூல் என்று பொருள் கொள்ள முடியும் .
4.2.1 முருகன் பெருமை
உலகநீதி என்னும் இந்நூலின் கடவுள் வாழ்த்தில் விநாயகப் பெருமான் போற்றப்பட்டிருந்தாலும் நூல் முழுவதும் முருகன் பெருமை குறிப்பிடப்பட்டுள்ளது .
இந்நூலில் உள்ள எட்டுப் பாடல்கள் , முருகனை மயில் ஏறும் பெருமாள் என்று குறிப்பிடுகின்றன .
இரண்டு பாடல்கள் குமரவேள் என்று குறிப்பிடுகின்றன .
ஒரு பாடல் வேலாயுதன் என்று குறிப்பிடுகிறது .
மேலும் வள்ளி பங்கன் என்றும் , ஏழைபங்கன் என்றும் , உமை மைந்தன் என்றும் முருகன் போற்றப்பட்டுள்ளான் .
4.2.2 வள்ளியின் பெருமை
முருகனின் மனைவியர் இருவர் என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது .
ஒரு மனைவி தெய்வானை ; இரண்டாம் மனைவி வள்ளி .
உலகநீதியில் தெய்வானையைப் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை .
ஆனால் வள்ளியின் பெருமை ஒன்பது பாடல்களில் இடம்பெற்றுள்ளது .
வள்ளி , குறவர்குடியில் தோன்றியவள் .
குறவர்கள் வலிமை மிக்கவர்கள் .
காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாடித் திரிவது குறவர்களின் வழக்கம் .
வேட்டையாடிக் கிடைத்த பொருள்களைக் கொண்டு நிறைவாழ்வு வாழ்கிறவர்கள் குறவர்கள் .
குறவர்கள் மலைச்சாரலில் தினையைப் பயிர் செய்வார்கள் .
அந்தத் தினைப்பயிரை நாரைகள் கவர்ந்து செல்லாதவாறு அதைக் காவல் புரிவார்கள் .
வேட்டையாடுதலிலும் பயிர் செய்தலிலும் சிறந்து விளங்கிய குறவர்கள் பெருமையுடன் விளங்கினார்கள் .
குறிசொல்வது குறத்தியர் வழக்கம் .
இத்தகைய புகழ்நிறைந்த குறவர்குடியில் தோன்றியவள் வள்ளி என்று குறவர்குடியின் பெருமை வெளிப்படும் படியாக வள்ளியை உலகநாதர் பெருமைப்படுத்தியுள்ளார் .
உலகநாதர் காலத்தில் பெரிதும் மதிக்கப்பட்ட நல்ல பண்புகள் பலவற்றை உலகநீதி தெரிவித்துள்ளது .
அப்பண்புகளைப் பின்பற்றுவதால் சமுதாயமாகக் கூடி வாழும் வாழ்க்கையில் எழும் சிக்கல்கள் மறைவதற்கு வாய்ப்பு உண்டு .
உலகநீதி தெரிவிக்கும் அறப்பண்புகளில் சில இங்கே கொடுக்கப் பட்டுள்ளன .
4.2.3 சினம்
சினம் ஒரு மனிதனைத் தனது நிலையிலிருந்து மாற்றி அவனையே அழிக்கும் இயல்பு கொண்டது .
இந்தச் சினத்தைக் கொண்டவர்கள் அழிவது உறுதி .
அவர்கள் மட்டும் அல்லாமல் அவர்களைச் சேர்ந்தவர்களையும் அது அழித்துவிடும் .
இதைத் திருவள்ளுவர் ,
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லிஇனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்
( 306 )
என்று குறிப்பிட்டுள்ளார் .
சினம் இரண்டு வகையில் துன்பத்தைக் கொடுக்கிறது .
1. சினம் கொண்டவரை அது அழிக்கிறது . 2. அவருக்குத் துன்பம் ஏற்படும் காலத்தில் உதவி செய்கிறவர்களையும் அது அழிக்கிறது .
தன்னிடத்தில் வந்து சேர்ந்தவர்களை அழிக்கும் இயல்பு கொண்டது நெருப்பு .
எனவே அதைச் சேர்ந்தாரைக் கொல்லி என்று கூறுவார்கள் .
இங்கே திருவள்ளுவர் சினத்தையும் ‘ சேர்ந்தாரைக் கொல்லி ’ என்று குறிப்பிட்டுள்ளார் .
எனவே , சேர்ந்தாரைக் கொல்லக் கூடிய சினம் , சினம் கொண்டவருக்கு உதவி செய்கிறவர்களையும் அழித்து விடுகிறது என்று திருவள்ளுவர் விளக்கியுள்ளார் .
திருவள்ளுவர் கூறியிருப்பது போல் சினத்தின் இயல்பை உலகநாதர் குறிப்பிடவில்லை என்றாலும் சினம் கொண்டவர்கள் துன்பத்தை அடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் .
இதை ,
சினம்தேடி , அல்லலையும் தேடவேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்
( 3 )
என்னும் உலகநீதி வரிகள் விளக்குகின்றன .
சினம் துன்பத்தைத் தருவதால் யாரும் சினம் கொள்ள வேண்டாம் .
தான் சினம் கொள்ளாமல் இருந்தால் மட்டும் போதாது .
சினம் கொள்பவர் வீட்டுக்குப் பக்கத்தில் கூட , போகக் கூடாது என்று உலகநாதர் அறிவுறுத்தியுள்ளார் .
4.2.4 பொய்யாமை
பொய் சொல்லாமல் இருப்பதை நாம் பொய்யாமை என்கிறோம் .
உண்மை பேசுவதை வலியுறுத்துவதே , பொய் சொல்லக்கூடாது என்பதன் பொருள் .
ஒருவனால் உண்மை பேச இயலவில்லை என்றாலும் பொய்யாவது பேசாமல் இருக்கலாம் அல்லவா என்ற நோக்கில் பொய்யாமையை உலகநீதி கூறியுள்ளது .
பொய்யாமையின் சிறப்பை உலகநீதி
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் ( 2 )
என்றும் ,
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்லவேண்டாம் ( 10 )
என்றும் கூறியுள்ளது .
மேற்காணும் இரு அடிகளில் , மனமறிந்து ஒருவன் பொய் சொல்லக்கூடாது என்று முதல் அடி தெரிவிக்கிறது .
பொய் சொல்லக்கூடாது என்னும் உறுதியை மேற்கொண்ட ஒருவன் தனது உயிரே போகின்ற நிலை வந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்பதை இரண்டாம் அடி தெரிவிக்கிறது .
மனிதனின் உயிரைவிட உண்மையையே உலகநீதி பெரிதும் போற்றுகிறது என்பதை இதன் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும் .
4.2.5 இன்னாச் சொல்
இன்னா என்றால் துன்பம் என்று பொருள் .
இன்னாச் சொல் என்பது துன்பம் தரும் சொல்லைக் குறிக்கும் .
இங்கே பிறருக்குத் துன்பம் தரும் சொல் இன்னாச் சொல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
புண்படவே வார்த்தைதனைச் சொல்ல வேண்டாம் ( 9 )
என்னும் தொடரில் பிறரது மனம் புண்படும்படியாகக் கொடிய சொல் எதையும் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஒருவருக்கு முன்னால் நின்று கொண்டு அவரைப் பற்றிக் கொடிய சொற்களைச் சொல்வது மட்டும் இன்னாச்சொல் இல்லை .
அவரைப் பற்றி அவர் இல்லாத போது பழித்துப் பேசுவதும் கொடிய சொல்தான் என்பதை உலகநீதியின் பின்வரும் அடி தெரிவிக்கிறது .
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் ( 1 )
என்று கூறிய உலகநாதர் , வீண்விவாதம் செய்வதையும் இழிவாகக் கூறியுள்ளார் .
இதை ,
வாதாடி வழக்கு அழிவு சொல்ல வேண்டாம் ( 10 )
என்று குறிப்பிட்டுள்ளார் .
வாதிடுவதால் எந்த முடிவையும் எட்டமுடியாது .
வாதம் செய்வதால் பிரச்சனை மேலும் சிக்கலாகவே வாய்ப்பு உள்ளது .
இதை உணர்த்தவே உலகநாதர் இத்தொடரைப் படைத்துள்ளார் .
இத்தொடர்களின் மூலம் , புறங்கூறுதல் , வீண் விவாதம் செய்தல் முதலியவையும் தீமை தரும் சொற்களைப் பயன்படுத்துவதற்கு ஒப்பானது ஆகும் என்பதை உணரமுடியும் .
4.2.6 ஐந்து பேர்
மனிதன் சுகமாக வாழ்வதற்குத் துணைநிற்பவர்களில் இன்றியமையாத ஐந்து பேரை உலகநீதி தெரிவிக்கிறது .
அந்த ஐந்து பேரும் யார் , யார் என்பதைப் பார்ப்போமா ?
1. துணி வெளுப்பவர்
2. முடி திருத்துபவர்
3. ஆசிரியர்
4. மருத்துவச்சி 5. மருத்துவர்
என்னும் ஐவரே அவர்கள் ஆவார்கள் .
இதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது .
அஞ்சுபேர் கூலியைக் கைக் கொள்ள வேண்டாம் ; அதுஏது இங்கு என்னின் , நீ சொல்லக் கேளாய் !
தஞ்சமுடன் வண்ணான் , நாவிதன் தன் கூலி ;
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சம் அற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் தன் கூலி
இன்சொலுடன் இவர்கூலி கொடாதபேரை
ஏது ஏது செய்வானோ ஏமன் தானே !
( 11 )
( ஓதுவித்த = கற்பித்த , நஞ்சு அறுத்த = தொப்பூள் கொடி அறுத்த , நோவு = நோய் , ஏமன் = யமன் )
என்னும் பாடலில் குறிப்பிட்டுள்ள இந்த ஐவரும் மனித வாழ்க்கைக்கு எவ்வாறு அடிப்படையானவர்கள் என்பதை இனிக் காண்போம் .
மனிதனின் பிறப்புக்குத் துணை புரிவதால் மருத்துவச்சி அடிப்படையானவள் ஆகிறாள் .
நோய் ஏற்படும்போது அந்நோயைப் போக்கி உதவுவதால் மருத்துவரும் அடிப்படை ஆகிறார் .
முடி திருத்துபவரும் துணி வெளுப்பவரும் தங்கள் தொழில்களின் வாயிலாக உதவுகின்றனர் .
எனவே இவர்களும் அடிப்படையானவர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம் .
வாத்தியார் என்று இங்கே குறிப்பிடப் பட்டுள்ளவர் கல்வி கற்பித்த ஆசிரியர் ஆவார் .
முன்பு கண்ட நால்வரும் மனிதனின் புறவாழ்க்கையுடன் தொடர்பு உடையவர்கள் .
ஆசிரியர் மட்டுமே மனிதனின் அகவாழ்க்கையுடன் தொடர்பு உடையவர் ஆவார் .
ஆசிரியர் மனிதனின் அகவாழ்க்கையுடன் எவ்வாறு தொடர்புடையவர் ஆவார் என்பதைப் பார்ப்போமா ?
ஆசிரியர் நமக்குக் கல்வி கற்பிப்பவர் .
அவர் கற்பிக்கும் கல்வியை நன்கு கற்றுத் தேறுகிறவர்களின் மனம் செம்மை அடையும் .
ஒருவருடைய மனம் எந்த அளவிற்குச் செம்மை அடைந்துள்ளது என்பதை நம்மால் அளந்து அறிய இயலாது .
அவரது செம்மையான செயல்பாட்டின் மூலமாகவே நம்மால் அறிய முடியும் .
இதன் வாயிலாக இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள ஐவரும் மனிதவாழ்க்கைக்கு அடிப்படையானவர்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும் .
தொகுப்புரை
தமிழ்மொழியில் பல அறநூல்கள் தோன்றியுள்ளன .
அவை மக்களை நல்ல வழியில் வாழச் செய்கின்றன .
இந்த அறநூல் வரிசையில் தோன்றிய வெற்றிவேற்கையும் உலகநீதியும் பல அறங்களைத் தெரிவித்துள்ளன .
கல்வியின் சிறப்பை எல்லா அறநூல்களும் தெரிவித்துள்ளன .
அதே கல்வியின் சிறப்பை வெற்றிவேற்கை மாறுபடுத்திக் கூறியுள்ளது .
பிச்சை எடுக்கக்கூடாது என்றும் அறநூல்கள் கூறியுள்ளன .
கல்வியின் சிறப்பை வலியுறுத்திக் கூற விரும்பிய வெற்றிவேற்கை , ‘ பிச்சை எடுக்க வேண்டிய நிலை வந்தாலும் கற்க வேண்டும் ’ என்று கூறியுள்ளது .
இதைப் போன்றே கல்வி கற்காதவரின் இழிவையும் வெற்றிவேற்கை கூறியுள்ளது .
பிச்சை எடுத்தாவது கல்வி கற்க வேண்டும் என்று கூறியதால் இரப்பவர்களுக்கு ஈவது , செல்வம் உடையவர்களின் கடமை என்று வெற்றிவேற்கை உணர்த்தியுள்ளது .
உலகநீதி என்னும் நூல் அறக்கருத்துகளைக் கூறியதுடன் முருகன் , வள்ளி ஆகியோர் பெருமைகளையும் கூறியுள்ளது .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. உலகநீதியின் கடவுள் வாழ்த்து , உலகநீதியை எவ்வாறு குறிப்பிட்டுள்ளது ?
[ விடை ]
2. இன்னாச் சொல் என்றால் என்ன ?
[ விடை ]
3. மனித வாழ்க்கைக்கு அடிப்படையானவர் என்று உலகநீதி யாரைக் குறிப்பிடுகிறது ?
நீதிநெறி விளக்கம்
பாட முன்னுரை
தமிழில் தோன்றிய பிற்கால அறநூல்களில் நீதிநெறி விளக்கமும் ஒன்று .
இந்நூல் 102 வெண்பாக்களைக் கொண்டது .
மதுரையை ஆண்ட திருமலை மன்னரின் விருப்பத்திற்கு ஏற்ப இந்நூலைக் குமரகுருபரர் இயற்றினார் .
இந்நூலிலுள்ள கருத்துகள் திருக்குறள் கருத்துகளை அடியொற்றியவை .
குமரகுருபரர் : ஓர் அறிமுகம் இந்நூலை இயற்றிய குமரகுருபரர் திருவைகுண்டம் என்னும் ஊரில் பிறந்தவர் .