3. பொருள் இலக்கணம்
4. யாப்பு இலக்கணம்
5. அணி இலக்கணம்
என்பவை ஆகும் .
இந்த ஐவகை இலக்கணம் பற்றிய அறிமுகத்தை இந்தத் தொகுதிவழங்குகிறது .
இந்தத் தொகுதியின் ` தமிழ் இலக்கண அறிமுகம் - எழுத்து , சொல் ’ என்னும் முதல்பாடம் தமிழ் இலக்கணம் பற்றிய பொது அறிமுகத்தையும் எழுத்து இலக்கணம் , சொல்இலக்கணம் பற்றிய அறிமுகத்தை வழங்குகிறது .
முதல் எழுத்துகள் பற்றியும் சார்புஎழுத்துகள் பற்றியும் விளக்குவதுடன் திணை , பால் , எண் , இடம் முதலியவை பற்றியும்இந்தப் பாடம் எடுத்து உரைக்கிறது .
மேலும் நால்வகைச் சொல் இலக்கணம் பற்றியஅறிமுகத்தையும் இந்தப் பாடம் வழங்குகிறது .
` தமிழ் இலக்கண அறிமுகம் - பொருள் , யாப்பு , அணி ’ என்னும் இரண்டாம் பாடம்அகப்பொருள் , புறப்பொருள் இலக்கணத்தையும் அசை , சீர் , தளை , அடி , தொடை , முதலிய யாப்பு இலக்கணத்தையும் அணி இலக்கணத்தையும் அறிமுகம் செய்கிறது .
` எழுத்து இலக்கணத்தின் அமைப்பு ’ என்னும் மூன்றாம் பாடம் தமிழ் எழுத்துகளின்ஒலி , வரி வடிவங்களை அறிமுகம் செய்கிறது .
சுட்டு எழுத்துகள் , வினா எழுத்துகள் , இனஎழுத்துகள் , மாத்திரை முதலியவற்றை அறிமுகம் செய்கிறது .
` சார்பு எழுத்துகள் ’ என்னும் நான்காம் பாடம் உயிர்மெய் முதலான பத்துவகைச்சார்பு எழுத்துகளையும் விளக்குகிறது .
` மொழி முதல் , மொழி இறுதி எழுத்துகள் ’ என்னும் ஐந்தாம் பாடம் தமிழ் மொழியில்சொல்லின் முதலில் வரும் எழுத்துகள் எவை என்பதையும் சொல்லின் இறுதியில் வரும்எழுத்துகள் எவை என்பதையும் தெளிவுபடுத்துகிறது .
` மெய்ம் மயக்கம் ’ என்னும் ஆறாம் பாடம் மெய்ம் மயக்கம் என்பதைவிளக்குவதுடன் வேற்றுநிலை மெய்ம் மயக்கம் , உடன் நிலை மெய்ம் மயக்கம்முதலியவற்றையும் விளக்குகிறது .
எழுத்துகளின் பிறப்பு - பொது அறிமுகம்
பாட முன்னுரை
தமிழ் மொழியில் எழுத்துகள் இருவகைப்படும் என்றும் அவை முதல் எழுத்துகள் , சார்பு எழுத்துகள் என்றும் நீங்கள் படித்திருப்பீர்கள் .
இந்த எழுத்துகள் ஒவ்வொன்றும் இரு வடிவங்களைக் கொண்டவை ; அவை ஒலிவடிவம் , வரிவடிவம் என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் .
தமிழ் எழுத்துகளின் வரிவடிவம் அமையும் இயல்பையும் முந்தைய பாடங்களின் வழி அறிந்திருப்பீர்கள் .
இந்தப் பாடத்தில் தமிழ் எழுத்துகள் ஒலிவடிவம் பெறுவதன் தன்மை விளக்கப்படுகிறது .
எழுத்துப் பிறப்பு - பொது விளக்கம்
ஒவ்வோர் எழுத்தும் பேச்சொலியாக இருந்து , பின்பே எழுத்து ஒலியாகப் பதிவு செய்யப்படுகின்றது .
எனவே பேச்சிற்கு அடிப்படையாக அமையும் ஒலிகள் எவ்வாறு உருவாயின என்பதை இலக்கண நூலார் ஆராய்ந்து உள்ளனர் .
உடலில் இருந்து தோன்றி மேலே எழும் காற்று , எழுத்தொலியாக வெளிப்படும் நிகழ்வு எழுத்துப் பிறப்பு எனப்படும் .
இத்தகைய எழுத்து ஒலிகள் பிறப்பதற்கு உயிரின் முயற்சியும் உறுப்புகளின் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றன .
தொல்காப்பியரின் விளக்கம்
தமிழ் மொழியில் இன்று வரை கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம் .
இதனை இயற்றியவர் தொல்காப்பியர் .
இந்நூல் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று அறிஞர்கள் கருதுகின்றனர் .
இந்நூல் எழுத்து , சொல் , பொருள் , யாப்பு , அணி என்னும் தமிழில் உள்ள ஐந்து இலக்கணங்களையும் விளக்குகின்றது .
இத்தகைய பழமையான தமிழ் இலக்கண நூல் , எழுத்துகளின் பிறப்புப் பற்றி ஆராய்ந்து கூறியிருப்பது சிறப்புடையதாகும் .
1.1.1 எழுத்தொலி பிறத்தல்
எழுத்தை உச்சரிக்க முயலும் ஒருவரின் கொப்பூழில் ( உந்தி ) இருந்து காற்று மேல் நோக்கி எழுகின்றது .
இவ்வாறு எழும் காற்று அவரது தலை , கழுத்து , நெஞ்சு ( மார்பு ) ஆகிய இடங்களில் சென்று தங்கி ( தொட்டு ) நிற்கும் .
பின்னர் , தலை , கழுத்து , நெஞ்சு ஆகிய இந்த மூன்று உறுப்புகளுடன் , பல் , இதழ் , நாக்கு , மூக்கு , அண்ணம் ( மேல்வாய் ) ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து இந்த எட்டு உறுப்புகளின் பொருத்தமான முயற்சியின் விளைவாக வெவ்வேறு எழுத்து ஒலிகள் பிறக்கின்றன .
தமிழில் உள்ள எல்லா எழுத்து ஒலிகளும் இந்த முறையிலேயே பிறக்கின்றன .
இதுவே எழுத்துப் பிறப்பின் பொதுவான இலக்கணம் ஆகும் .
( தொல்காப்பியம் .
எழுத்ததிகாரம் , 83 )
• வெவ்வேறு ஒலிகள்
ஆனால் , எல்லா எழுத்தொலியும் தோன்றுவதற்கு இந்த எட்டு உறுப்புகளின் முயற்சியும் ஒத்துழைப்பும் தேவைப்படுவது இல்லை .
தேவைப்படும் உறுப்புகள் பொருந்தி இயங்கும் தன்மைக்கேற்பவே வெவ்வேறு ஒலிகள் தோன்றும் .
ஒவ்வோர் எழுத்தொலியும் தோன்றுவதற்கு வெவ்வேறு உறுப்புகளின் ஒத்துழைப்புக் காரணமாக அமைகின்றது .
1.1.2 தேவைப்படும் முயற்சி
ஒலியை எழுப்ப நினைக்கும் ஒருவர் முதலில் செய்ய வேண்டியது முயற்சி ஆகும் .
இந்த முயற்சியை இலக்கண ஆசிரியர்கள் ' உயிரின் முயற்சி ’ என்று அழைக்கின்றனர் .
ஒலியை எழுப்பக் கருதிய ஒருவரின் உயிர்ப்புத் தன்மையே அடுத்தடுத்த முயற்சிக்குக் காரணமாக அமைகிறது .
அதனைத் தொடர்ந்து உறுப்புகளின் ஒத்துழைப்புகளுக்கும் அதுவே காரணமாகிறது .
எனவே எழுத்து ஒலிகள் தோன்றுவதற்கு மனித முயற்சி மிகவும் இன்றியமையாததாகும் . இவ்வகையில் , தொல்காப்பியரின் கருத்துப்படி , உயிரின் முயற்சியால் கொப்பூழில் இருந்து காற்று எழுகின்றது .
இக்காற்று மேல்நோக்கிச் செல்கின்றது .
இம்முயற்சிக்கு உறுப்புகள் துணை செய்கின்றன .
இந்த உறுப்புகளில் அக்காற்று சென்று பொருந்துகின்றது .
மேல்நோக்கி எழும் இக்காற்று பொருந்தும் உடல் உறுப்புகளைக் குறிப்பிடும் போது , தலை , கழுத்து , நெஞ்சு என்ற வரிசையில் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார் .
1.1.3 ஒத்துழைக்கும் உறுப்புகள்
எழுத்தொலிகள் தோன்றுவதற்குத் தேவைப்படும் உறுப்புகளாகத் தொல்காப்பியர் எட்டு உறுப்புகளைக் குறிப்பிடுகின்றார் .
இந்த எட்டு உறுப்புகளை இரண்டு பிரிவாகப் பகுத்துக் காணலாம் .
அவை ,
( 1 ) காற்றுப் பொருந்தும் உறுப்புகள் .
( 2 ) ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்கும் உறுப்புகள்
என்பன .
• காற்றுப் பொருந்தும் உறுப்புகள் :
காற்றுப் பொருந்தும் உறுப்புகள் 3 ஆகும் .
அவை ,
தலை ,
கழுத்து ,
நெஞ்சு .
என்பன .
• ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்கும் உறுப்புகள் :
எழுத்தொலிகள் தோன்றுவதற்கு ஒன்றுடன் ஒன்று இயைந்து ஒத்துழைக்கும் உறுப்புகள் எட்டு ஆகும் .
அவை , முதலில் கூறப்பட்ட தலை , கழுத்து , நெஞ்சு ஆகிய மூன்றுடன் ,
பல் ,
இதழ் ,
நாக்கு ,
மூக்கு ,
அண்ணம் ஆகிய ஐந்தும் , சேர்ந்து 8 ஆகும் .
நன்னூலாரின் விளக்கம்
இதுவரை , தொல்காப்பியம் எழுத்தொலிகளின் பிறப்புப் பற்றித் தெரிவித்த கருத்துகளைக் கண்டோம் .
இனி , இதுபற்றி நன்னூல் கூறும் கருத்துகளையும் காண்போம் .
நன்னூல் 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கண நூல் .
இது , எழுத்து , சொல் ஆகிய இரு இலக்கணங்களை மட்டுமே விளக்குகின்றது .
தமிழ் இலக்கணம் கற்க விரும்புவோர் முதலில் இந்நூலில் இருந்து கற்கத் தொடங்குவது மரபு .
1.2.1. எழுத்தொலி பிறத்தல்
நன்னூல் , ஒவ்வோர் எழுத்தும் ஒலியாக வெளிப்படுவதற்கு இரண்டு நிலைகள் தேவைப்படுகின்றன என்று தெரிவிக்கின்றது .
அவை ,
( 1 ) உயிரின் முயற்சி
( 2 ) உடல் உறுப்புகளின் ஒத்துழைப்பு
ஆகியன .
குறைபாடில்லாத நிறைந்த , உயிரின் முயற்சியினால் உள்ளே இருக்கும் காற்றானது மேலே எழும்பி நிற்கும் ; அவ்வாறு எழுகின்ற காற்று , செவிகளுக்குக் கேட்கும்படியான அணுக்கூட்டமாகத் திரண்டு , மார்பு , கழுத்து , தலை , மூக்கு என்ற நான்கு இடங்களில் பொருந்தும் ; பின்பு இதழ் , நாக்கு , பல் , அண்ணம் ஆகிய நான்கு உறுப்புகளின் இயக்கத்தினாலும் வேறுவேறு எழுத்துகளுக்கு உரிய ஒலிகள் தோன்றுகின்றன .
இவ்வாறே எழுத்துகள் ஒலிவடிவம் பெறுகின்றன .
இதனை எழுத்துகளின் பிறப்பு என்று கூறலாம் என்று நன்னூல் தெரிவிக்கின்றது .
1.2.2 தேவைப்படும் முயற்சி
எழுத்தொலி தோன்ற முதலில் தேவைப்படுவது ஒருவரின் முயற்சி ஆகும் .
இந்த முயற்சி உயிரின் முயற்சியாக இருக்க வேண்டும் .
உயிர்ப்புத் தன்மை நிறைந்த ஒருவரின் முயற்சியாக இருக்க வேண்டும் .
முயற்சியில் முழுமை இல்லாமல் இருந்தால் நினைத்த ஒலி எழும்பாது .
எனவே உயிரின் முயற்சி என்று குறிப்பிடாமல் நன்னூல் ஆசிரியர் இங்குத் தேவைப்படும் முயற்சியை ‘ நிறை உயிர் முயற்சி ’ என்று குறிப்பிடுகின்றார் .
இத்தொடர் , ஒலி எழுப்ப நினைப்பவரின் முயற்சிக்கு நிறைந்த உயிர் முயற்சிதான் தேவை என்பதைச் சுட்டுகின்றது .
இத்தகைய முயற்சியின் விளைவாகவே உந்தியில் இருக்கும் காற்று மேல்நோக்கி எழும் . அவ்வாறு எழும் காற்று உடலின் நான்கு உறுப்புகளில் சென்று தங்கும் .
இந்த நான்கு உறுப்புகளையும் எழுத்துஒலிகள் பிறப்பதற்கு முயற்சி செய்யும் உறுப்புகள் எனலாம் .
அவை ,
( 1 ) மார்பு ,
( 2 ) கழுத்து ,
( 3 ) தலை ( உச்சி )
( 4 ) மூக்கு
என்பன .
1.2.3 ஒத்துழைக்கும் உறுப்புகள்
எழுத்தொலிகள் தோன்றுவதற்கு , சில உறுப்புகளின் முயற்சியுடன் வேறு சில உறுப்புகளின் ஒத்து இயங்கும் தன்மையும் தேவைப்படுகின்றது .
சில உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டால்தான் எழுத்தொலிகள் பிறக்கும் .
அவ்வகையில் ஒத்துழைக்கும் உறுப்புகளை நன்னூல் ஆசிரியர் பட்டியலிட்டுக் காட்டுகின்றார் .
அவை ,
( 1 ) இதழ்
( 2 ) நாக்கு
( 3 ) பல்
( 4 ) அண்ணம்
என்பன ஆகும் .
இந்த நான்கு உறுப்புகளில் எந்த உறுப்பின் முயற்சியால் ஓர் எழுத்தொலி பிறக்கின்றதோ , அந்த எழுத்திற்கு அந்த உறுப்பு பிறப்பிடம் என்று அழைக்கப்படுகின்றது .
எனவே உறுப்புகளின் ஒத்துழைக்கும் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு எழுத்தொலிகள் தோன்றுகின்றன .
ஓர் எழுத்தொலி பிறக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகளின் ஒத்துழைப்பும் தேவையாக அமைவதும் உண்டு .
நிறை உயிர் முயற்சியின் உள்வளி துரப்ப
எழும் அணுத்திரள் உரம் , கண்டம் , உச்சி
மூக்கு உற்று , இதழ் , நாப் பல் அணத் தொழிலின் வெவ்வேறு எழுத்தொலியாய் வரல் பிறப்பே .
என்பது நன்னூல் நூற்பா ( 73 )
இதில் , உரம் என்பது மார்பையும் , கண்டம் என்பது கழுத்தையும் குறிக்கும் .
அணம் என்பது அண்ணம் , ( மேல்வாய் ) என்று பொருள்படும் .
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1 ) எழுத்துப் பிறப்பு என்றால் என்ன ?
விடை
2 ) தொல்காப்பியர் காற்றுப் பொருந்தும் இடங்களாகக் குறிப்பிடும் உறுப்புகள் எத்தனை ?
அவை யாவை ?
விடை
3 ) தொல்காப்பியர் எழுத்தொலிகள் தோன்றத் தேவைப்படும் உறுப்புகளாக உரைப்பவை எத்தனை ?
அவை யாவை ?
விடை
4 ) எழுத்துப் பிறப்பிற்கான காற்று உடலின் எப்பகுதியில் இருந்து எழுகின்றது ?
விடை
5 ) எழுத்தொலிகள் தோன்றுவதற்குத் தேவைப்படும் இரு நிலைகள் யாவை ?
எழுத்துப் பிறப்பில் தொல்காப்பியமும் நன்னூலும்
எழுத்தொலிகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவித்த கருத்துகளை அறிந்து கொண்டீர்கள் .
அவற்றைத் தனித்தனியே பார்த்தபோது அவ்விரு நூல்கள் தெரிவித்த கருத்துகளுக்கு இடையில் சில ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் இருப்பதைக் கண்டிருப்பீர்கள் .
இப்போது , அந்த ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் தொகுத்துக் காண்போம் .
இவ்வாறு ஒப்பிட்டுக் காண்பது , நாம் , இக் கருத்துகளை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ளத் துணை செய்யும் .
1.3.1 ஒற்றுமை
( 1 ) இரண்டு இலக்கண நூலாசிரியர்களும் ஓர் எழுத்துப் பிறப்பதற்கு உந்தியில் ( கொப்பூழ் ) இருந்து காற்றுத் தோன்றி மேலே எழும்ப வேண்டும் என்கின்றனர் .
( 2 ) எழுத்துகள் பிறப்பதற்கு ஒத்துழைக்கும் உறுப்புகளில் ஒன்று மற்றொன்றோடு இயைந்து இயங்கும் தன்மைக்கேற்ப வேறு வேறு ஒலிகள் பிறக்கின்றன என்று இருவரும் உரைக்கின்றனர் .
( 3 ) இரு நூலாரும் , அடிப்படையில் எழுத்துஒலிகள் பிறப்பதற்கு அடிப்படையான உறுப்புகளாகக் குறிப்பிடும் உறுப்புகளின் மொத்த எண்ணிக்கை எட்டு ஆகும் .
1.3.2 வேற்றுமை
( 1 ) தொல்காப்பியர் காற்று மேலே எழும்பித் தங்கும் இடங்களாக மூன்று உறுப்புகளை மட்டுமே குறிப்பிடுகின்றார் . அவை முறையே தலை , கழுத்து , நெஞ்சு என்பன .
நன்னூலார் காற்று மேலே எழுந்து தங்கும் இடங்களாக நான்கு உறுப்புகளைச் சுட்டுகிறார் .
அவை முறையே , நெஞ்சு , கழுத்து , உச்சி , மூக்கு என்பன .
( 2 ) உறுப்புகளைக் குறிப்பிடுகையில் தொல்காப்பியர் மேலே இருந்து கீழே இறங்கி வருவது போல் தலை , கழுத்து , நெஞ்சு என்று குறிப்பிடுகின்றார் .
நன்னூலார் காற்று கீழிருந்து மேலே எழும்பும் அதே இயல்பான நிலையில் மார்பு , கழுத்து , உச்சி , மூக்கு என்ற வரிசையில் அமைத்துள்ளார் .
( 3 ) எழுத்தொலிகள் பிறக்கப் பயன்படும் உறுப்புகளைத் தொல்காப்பியர் எட்டு என்று விரித்துள்ளார் .
காற்றுத் தங்கும் இடங்களான மூன்றையும் சேர்த்துக் குறிப்பிடுகின்றார் .
நன்னூலார் , இந்த உறுப்புக்களில் இதழ் , நாக்கு , பல் , அண்ணம் என்ற நான்கு உறுப்புகளை மட்டுமே எழுத்துப் பிறப்பதற்கு இயங்கும் உறுப்புகளாகக் குறிப்பிடுகின்றார் .
எழுத்துப் பிறப்பும் மொழியியலும்
எழுத்தொலிகளின் பிறப்புப் பற்றி இலக்கண நூல்கள் தந்த விளக்கங்களை விரிவாகக் கண்டோம் .
எழுத்தொலிகள் பற்றி மொழிநூல் அறிஞர்கள் மிக விரிவாக ஆராய்ந்துள்ளனர் .
மொழிநூல் அறிஞர்கள் இது குறித்து ஆராய்ந்து விளக்கங்களை வெளியிட்ட பின்னரே , இத்துறையில் பல உண்மைகள் வெளிப்பட்டன என்று கூறலாம் .
எனவே எழுத்தொலிகள் பிறப்புப் பற்றி மொழிநூல் அறிஞர்கள் தெரிவிக்கும் கருத்துகளையும் இங்கு ஒப்பிட்டுக் காண்பது பொருத்தம் உடையது .
1.4.1 மரபு
ஒரு மொழிக்கு இலக்கணம் வகுக்கும் மரபுவழி இலக்கண ஆசிரியர்கள் மொழியின் எழுத்து வடிவத்திற்கே முதன்மை தருவர் .
அதனை விளக்கிக் கூறுவர் .
ஏட்டில் இலக்கிய வடிவம் பெற்ற எழுத்து வடிவத்தினை ஆராய்ந்து அதன் நுட்பத்தை வெளிப்படுத்துவர் .
மொழியின் பேச்சு வடிவத்தை ஆய்வுக்கு ஏற்றுக் கொண்டு அதனை விளக்குவது மரபுவழி இலக்கண நூல்களில் காணப்படுவது இல்லை .
இந்த நிலை உலக மொழிகள் அனைத்திற்கும் பொதுவானதாகும் .
1.4.2 மொழியியல்
ஒரு மொழியை அறிவியல் பார்வையோடு அணுகவேண்டும் என்ற கருத்து எழுந்த போது ‘ மொழியியல் ’ என்ற பிரிவு உருவானது .
மொழியியல் துறையில் ஈடுபடும் அறிஞர்கள் ஒரு மொழியின் எழுத்துவடிவத்தை விட அதன் பேச்சு வடிவத்தையே தங்கள் ஆய்விற்கு ஆதாரங்களாக எடுத்துக் கொண்டனர் .
மொழியியலார் பேச்சு மொழிதான் ஒரு மொழியின் உண்மையான இயல்பினை எடுத்துரைக்கும் என்று கருதுகின்றனர் .
இதனால் பேச்சொலி எழுவதற்குக் காரணமாக இருக்கும் மொழியின் ஒலி வடிவத்தில் தங்கள் ஆர்வத்தைச் செலுத்தினர் .
எனவே மொழியின் ஒலி வடிவத்திற்கு முதன்மை தரும் நிலையில் மொழியியல் ஆய்வுகள் எழுந்தன .
1.4.3 மொழியியல் உண்மைகள்
பேச்சு ஒலிகளை ஆய்வு செய்ய முற்பட்டவர் மொழியியல் அறிஞர்கள் .
இந்த ஆய்வு , பேச்சு ஒலிகள் தோன்றுவதற்குக் காரணமாக அமையும் உடல் உறுப்புகளையும் ஆய்வு செய்யத் தூண்டியது .
எனவே எந்த ஒலி தோன்றுவதற்கு எந்த உறுப்பின் முயற்சியும் ஒத்துழைப்பும் பயன்படுகின்றது என்பதை ஆய்வு செய்து கண்டனர் .
அந்த ஆய்வின்படி பல உண்மைகளை வெளியிட்டனர் .
இந்த மொழியியல் ஆய்வுகள் எல்லாம் 19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டிலும் இடம்பெற்றன .
மேனாட்டு அறிஞர்கள் 19-ஆம் நூற்றாண்டில் தொடங்கி 20-ஆம் நூற்றாண்டில் இதில் மிகவும் முனைந்து ஈடுபட்டனர் .
இவ்வறிஞர்கள் வெளிப்படுத்திய உண்மைகளைத் தொல்காப்பியமும் நன்னூலும் முன்பே எடுத்துரைக்கக் காணலாம் .
எனவே , தமிழ் இலக்கணம் அறிவியல் முறைப்படி அமைந்தது என்பது இதனால் வெளிப்படுகின்றது .
2500 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய தொல்காப்பியம் இன்றைய மொழியியலாரின் கருத்துகளை அன்றே விளக்கி இருப்பது தமிழ் மொழியின் சிறப்புக்குச் சான்றாக உள்ளது .
தொகுப்புரை
இந்தப் பாடத்தில் எழுத்துப் பிறப்பு என்பது எழுத்தொலிகளின் பிறப்பு என்பதைத் தெரிந்து கொண்டோம் .
எழுத்தொலிகள் பிறப்பதற்கு உயிரின் முயற்சியும் உடல் உறுப்புகளின் ஒத்துழைப்பும் தேவைப்படுவன என்று தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் விளக்கங்களைக் கண்டோம் .
எழுத்தொலிகள் , உந்தியில் இருந்து மேல் நோக்கி எழும் காற்று தலை , கழுத்து , மார்பு ஆகிய உறுப்புகளில் தங்கி , பல் , இதழ் , நாக்கு , அண்ணம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பிறக்கின்றன .
தொல்காப்பியமும் நன்னூலும் எழுத்தொலிகளின் பிறப்பினை விளக்கி இருந்தாலும் அவற்றிடையே ஒற்றுமை வேற்றுமைகள் இருப்பது ஒப்பிட்டுக் காட்டப்பெற்றது .
மொழியை அறிவியல் முறையில் ஆராய்ந்த மொழிநூல் அறிஞர்கள் எழுத்துகளின் பிறப்பினை விளக்கியிருப்பதும் எடுத்துக்காட்டப்பட்டது .
தமிழ் இலக்கண நூல்கள் மொழியியல் என்னும் தனித்துறை வளராத காலத்தில் எழுத்துகளின் பிறப்பினை அறிவியல் முறைப்படி விளக்கியிருப்பதையும் இப்பாடத்தின் வழி அறிந்து கொண்டோம் .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1 ) நன்னூல் கருத்துப்படி , எழுத்துப் பிறப்பிற்காக முயற்சியில் ஈடுபடும் உறுப்புகள் எத்தனை ?
அவை யாவை ?
விடை
2 ) எழுத்துஒலி பிறப்பதற்குத் தேவைப்படும் மொத்த உறுப்புகள் எட்டு .
இதில் தொல்காப்பியமும் நன்னூலும் உடன்படுகின்றனவா ?
விடை
3 ) எழுத்துப் பிறப்பிற்கு இடமாகும் உறுப்புகளாக நன்னூலார் குறிப்பிடுவன எத்தனை ? அவை யாவை ?