விடை
4 ) தொல்காப்பியம் , நன்னூல் ஆசிரியர்கள் எழுத்துஒலிகள் பிறப்பதில் தெரிவிக்கும் கருத்துகளின் வேற்றுமையைப் புலப்படுத்துக .
விடை
5 ) தமிழ் இலக்கண நூல்கள் , மொழியியல் கருத்துகளை வெளிப்படுத்துவதை விளக்குக .
உயிரெழுத்துகளின் பிறப்பு
பாட முன்னுரை
சென்ற பாடத்தில் தமிழ்மொழியில் எழுத்துஒலிகளின் பிறப்புப் பற்றிய பொதுவான இலக்கணத்தை அறிந்து கொண்டீர்கள் .
எழுத்துஒலிகள் பிறக்கத் தேவைப்படும் முயற்சியும் உடல் உறுப்புகளின் ஒத்துழைப்பும் எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் நன்கு விளங்கிக் கொண்டிருப்பீர்கள் .
தமிழ் இலக்கண நூல்கள் எழுத்துஒலிகளின் பிறப்பு இலக்கணத்தை அறிவியல் முறைப்படி ஆராய்ந்து விளக்கியிருப்பதையும் தெரிந்து கொண்டீர்கள் .
இந்தப் பாடத்தில் உயிர் எழுத்தொலிகள் பிறக்கும் முறை குறித்து விரிவாகக் காணலாம் .
உயிர்எழுத்துகளின் பிறப்பு - பொது
தமிழில் உள்ள எழுத்துகளை முதல் எழுத்துகள் , சார்பு எழுத்துகள் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்துக் காணும் முறையை நீங்கள் முன்பே அறிந்திருப்பீர்கள் .
இந்த முதல் எழுத்துகள் முப்பதில் முதலில் வருவன உயிர் எழுத்துகள் பன்னிரண்டு ஆகும் .
இவை உயிர் போலத் தனித்து இயங்கும் தன்மை உடையவை ஆதலால் உயிர்எழுத்துகள் என்று பெயர் பெற்றன .
எனவே எழுத்துகளின் பிறப்பிற்கான இலக்கணத்தைக் காணும் போது உயிர்எழுத்துகளின் பிறப்பினை முதலில் அறிவது மிகவும் பொருத்தமானது .
2.1.1 தொல்காப்பியர் கருத்து
உயிர்எழுத்துகளின் பொதுப் பிறப்புப் பற்றித் தொல்காப்பியர் கூறும் கருத்துகளை முதலில் காண்போம் .
முந்தைய பாடத்தில் எழுத்துகளின் பிறப்பிற்குக் கூறப்பட்ட பொதுவான அடிப்படை இலக்கணம் உயிரெழுத்துகளின் பிறப்பிற்கும் பொருந்தும் .
உயிர்எழுத்துகள் பன்னிரண்டும் மிடற்றில் ( கழுத்தில் ) பிறக்கும் காற்றினால் உருவாகி ஒலிப்பன .
தம்நிலையில் இருந்து மாறாமல் இருக்கும் உயிர்எழுத்துகள் மட்டுமே கழுத்தில் இருந்து தோன்றுவன .
‘ தம்நிலையில் இருந்து திரியாமல் ’ இருப்பது என்னவெனில் , ஓர் உயிர்எழுத்து எந்தவித மாற்றமும் பெறாமல் இருப்பது ஆகும் .
சில உயிர் எழுத்துகள் , எடுத்துக்காட்டாக ‘ இகர ’மும் ‘ உகர ’மும் , குற்றியலிகரமாகவும் , குற்றியலுகரமாகவும் வருகின்ற போது , அவை தம்நிலையில் இருந்து திரிந்து ( மாறி ) விடுகின்றன .
அவ்வாறு இல்லாமல் , இயல்பாக வருகின்ற உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மிடற்றில் பிறக்கும் காற்றினால் எழுத்துஒலிகளாகத் தோன்றுகின்றன என்பது தொல்காப்பியர் கருத்தாகும் .
இதனை ,
அவ்வழிப் ,
பன்னீ ருயிருந் தந்நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்
( எழுத்து .
84 )
( தந்நிலை = தம்நிலை ; மிடறு = கழுத்து ; வளி = காற்று )
என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குவதைக் காணலாம் .
2.1.2 நன்னூலார் கருத்து
இனி , உயிர்எழுத்துகளின் பிறப்புப் பற்றி நன்னூல் ஆசிரியர் கூறும் கருத்துகளைத் தெரிந்து கொள்ளலாம் .
நன்னூல் ஆசிரியரும் எழுத்துகள் பிறப்பதற்குக் கூறப்பட்ட பொதுவான இலக்கணத்தின் அடிப்படையில்தான் உயிர்எழுத்துகளும் பிறக்கும் என்கிறார் .
அந்த வழியில் உயிர்எழுத்துகள் பிறப்பதற்கு இடம் மிடறு ஆகும் ( கழுத்து ) என்பது அவர் கருத்து .
நன்னூல் உயிர்எழுத்துகள் பிறப்பதற்கு உரிய இடத்தைச் சொல்லுகின்ற இந்த இடத்தில் , மெய்யெழுத்துகள் பிறப்பதற்கான இடங்களையும் சேர்த்துச் சொல்கின்றது .
• நூற்பா
அவ்வழி ,
ஆவி இடைமை இடம் மிட றுஆகும்
மேவு மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை
( நன்னூல் .
74 )
( ஆவி = உயிர் ; இடைமை = இடையினம் ; மென்மை = மெல்லினம் ; உரம் = நெஞ்சு ; வன்மை = வல்லினம் )
' அவ்வழி ' என்பது முந்தைய பாடத்தில் சொல்லப்பட்ட ' எழுத்துப் பிறப்புக்கான பொது இலக்கணத்தின்படி ' எனப் பொருள்தரும் .
இந் நூற்பா உயிர்எழுத்துகளுக்கும் மெய்எழுத்துகளுக்கும் ( முதல் எழுத்துகளுக்குப் ) பிறப்பிடம் கூறுவதாக அமைகின்றது .
எனினும் நாம் இந்தப் பாடத்தில் உயிர்எழுத்துகள் பிறப்பின் இலக்கணம் பற்றி மட்டும் காண்போம் .
நன்னூல் , உயிர்எழுத்துகளில் ‘ இயல்பாக அமையும் உயிர் ’ என்றும் ‘ தந்நிலை திரியும் உயிர் ’ என்றும் வேறுபடுத்திக் கூறவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .
இப்போது , உயிர்எழுத்துகளின் பொதுவான பிறப்பிடம் குறித்த செய்திகளைத் தொகுத்துக் காணலாம் .
( 1 ) உயிர்எழுத்துகள் , எழுத்துஒலிகளின் பொதுவான பிறப்பிட இலக்கணத்தின் படியே பிறப்பன . ( 2 ) உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் கழுத்து ஆகும் .
( 3 ) தனியே வருகின்ற உயிர்எழுத்தும் , எந்தவித மாற்றமும் அடையாத உயிர்எழுத்தும் மட்டுமே கழுத்தில் இருந்து தோன்றும் .
தன் மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கும் உயிரொலிகளுக்கு இந்தப் பிறப்பிட விதி பொருந்தாது .
பிறப்பிடம் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும்
உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளில் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளைத் தொகுத்துக் காண்போம் .
இச்செய்திகளை மேலும் நன்கு விளங்கிக் கொள்வதற்கு இது பயன்படும் .
2.2.1 ஒற்றுமை
முதலில் , தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளில் காணப்படும் ஒற்றுமைகளைக் காண்போம் .
( 1 ) இரண்டு நூல்களும் , எழுத்துஒலிகள் பிறப்பதற்குத் தேவைப்படும் பொதுவான முயற்சியே , உயிர்எழுத்துகள் பிறப்பதற்கும் தேவைப்படுவது என்பதை உரைக்கின்றன .
( 2 ) இவ்விரு நூல்களும் உயிர்எழுத்துகள் பிறக்கின்ற இடமாகக் கழுத்தைக் ( மிடறு ) குறிப்பிடுகின்றன .
2.2.2 வேற்றுமை
இனி , தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளில் காணப்படும் வேற்றுமையினைக் காணலாம் .
தொல்காப்பியம் ‘ தந்நிலை திரியா ’ என்ற தொடரைப் பயன்படுத்தித் தந்நிலை திரியும் உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் வேறு என்பதை நுட்பமாகப் புலப்படுத்துகின்றது .
நன்னூலில் அனைத்து உயிர்எழுத்துகளுக்கும் பொதுவாகப் பிறப்பிட இலக்கணம் காணப்படுகின்றது .
இதில் இந்த நுட்ப வேறுபாடு கூறப்படவில்லை .
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியம் கூறுவது யாது ?
விடை
2. தொல்காப்பியர் ‘ தந்நிலை திரியா ’ என்னும் தொடரால் உணர்த்துவது யாது ?
விடை
3. உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் குறித்து நன்னூல் கூறுவது யாது ?
விடை
4. நன்னூல் உயிர்எழுத்துகளின் பிறப்புடன் சேர்த்துக் கூறுவன யாவை ?
விடை
5. நன்னூலில் ‘ ஆவி ’ என்னும் சொல் உணர்த்துவது யாது ?
பிறப்பு முயற்சி வேறுபாடும் உயிரெழுத்துகளின் வகைப்பாடும்
பன்னிரண்டு உயிர்எழுத்துகளும் கழுத்தில் இருந்து தோன்றுகின்றன .
ஆனால் இந்த உயிர்எழுத்துகள் அனைத்தும் ஒரே முயற்சியினால் வெளிப்படுவது இல்லை .
உயிர்எழுத்துகள் ஒரே இடத்தில் இருந்து பிறக்கின்றன .
ஆனால் ஒரே முயற்சியினால் பிறப்பதில்லை என்பதை மனத்தில் கொள்ள வேண்டும் .
பன்னிரண்டு உயிர்எழுத்துகள் மூன்று விதமான முயற்சியினால் பிறக்கின்றன .
அந்த முயற்சி வேறுபாட்டின் அடிப்படையில் உயிர்எழுத்துகளைப் பிரித்துக் காண்போம் .
அவை ,
( 1 ) அ , ஆ எழுத்துகளின் பிறப்பு
( 2 ) இ , ஈ , எ , ஏ , ஐ எழுத்துகளின் பிறப்பு
( 3 ) உ , ஊ , ஒ , ஓ , ஒள எழுத்துகளின் பிறப்பு
ஆகியன .
அ , ஆ உயிர்எழுத்துகளின் பிறப்பு
2.4.1 தொல்காப்பியர் கருத்து
உயிர்எழுத்துகள் பன்னிரண்டனுள் முதலில் வருகின்ற ‘ அ ’கரமும் ‘ ஆ ’காரமும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சி பற்றி முதலில் காண்போம் .
இவ்விரண்டு உயிர்எழுத்துகளும் நிறை உயிர் முயற்சியுடன் வாயைத் திறக்கின்ற போது தோன்றுகின்றன .
‘ வாயைத் திறக்கின்ற ’ முயற்சியைத் தமிழ் இலக்கண ஆசிரியர்கள் ‘ அங்காத்தல் ’ - என்ற சொல்லால் குறிப்பிடுவதை அறியலாம் .
அ , ஆ உயிர்எழுத்துகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியர் ,
அவற்றுள்
அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும்
( எழுத்து .
85 )
என்று விளக்குகின்றார் .
எழுத்தொலிகள் பிறப்பதற்கு நான்கு உறுப்புகளின் முயற்சியும் தொழிலும் தேவைப்படுவன என்று முந்தைய பாடத்தில் படித்தீர்கள் .
அந்த நான்கு உறுப்புகள் ( 1 ) இதழ்
( 2 ) நா
( 3 ) பல்
( 4 ) அண்ணம்
என்பவை .
இந்த நான்கினுள் ‘ அண்ணம் ’ என்பது ‘ மேல்வாய் ’ என்று பொருள்படும் .
எனவே மேல்வாயைத் திறக்கும் முயற்சியின் பயனாக அகர ஆகார உயிர்ஒலிகள் தோன்றும் என்று அறியலாம் .
2.4.2 நன்னூலார் கருத்து
உயிர்எழுத்துகளில் அகரமும் ஆகாரமும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சியை நன்னூலும் தெரிவிக்கின்றது .
அவற்றுள் ,
முயற்சியுள் ‘ அ ஆ அங்காப்பு உடைய ’
( நூற்பா .
75 )
என்று தெரிவிக்கின்றது .
அ , ஆ ஆகிய இவை இரண்டும் ‘ வாயைத் திறத்தல் - அங்காத்தல் ’ என்னும் முயற்சியின் பயனாகத் தோன்றுகின்றன என்பதை , நன்னூலும் தெளிவுபடுத்துகின்றது .
இ , ஈ , எ , ஏ , ஐ ஆகிய எழுத்துகளின் பிறப்பு
இ , ஈ , எ , ஏ , ஐ ஆகிய எழுத்துகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளைக் காண்போம் .
2.5.1 தொல்காப்பியர் கருத்து
இ , ஈ , எ , ஏ , ஐ ஆகிய ஐந்து எழுத்தொலிகள் தோன்றுவதற்குத் தேவைப்படும் முயற்சிகள் குறித்துத் தொல்காப்பியம் தெரிவிக்கும் கருத்துகளை முதலில் காண்போம் .
இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் தோன்றுவதற்கு இரு முயற்சிகள் தேவைப்படுகின்றன .
அவை ,
தேவைப்படும் முயற்சி :
( 1 ) வாயைத் திறத்தலாகிய அங்காத்தல்
( 2 ) மேல்வாய்ப் பல்லை , நாக்கினது அடிப்பகுதியின் விளிம்பு சென்று பொருந்தும் முயற்சி ஆகியன .
ஒத்துழைக்கும் உறுப்புகள் : மேல்வாய்ப்பல் , நாக்கு ஆகியன
இந்த எழுத்துகள் பிறப்பதற்கு ஒத்துழைக்கும் உறுப்புகள் மேல்வாய்ப் பல் , நாக்கு என்பன .
இதனைத் தொல்காப்பியம் ,
இ , ஈ , எ , ஏ , ஐ யென இசைக்கும்
அப்பால் ஐந்தும் அவற்று ஓர் அன்ன
அவைதாம்
அண்பல் முதல்நா விளிம்பு உறல் உடைய
( எழுத்து .
86 )
( அன்ன = போன்றவை ; நா = நாக்கு ; அண்பல் = மேல்வாய்ப்பல் ; முதல்நா = நாவின் அடி )
என்று விளக்குகின்றது .
இந்நூற்பா இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் ஒரே முயற்சியினால் பிறக்கின்றன என்று கூறுகின்றது .
‘ ஐந்தும் அவற்று ஓர் அன்ன ' என்னும் தொடர் , அகரம் ஆகாரம் என்னும் எழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் அங்காத்தல் முயற்சியே இந்த எழுத்துகள் பிறப்பதற்கும் தேவைப்படுகின்றது என்பதை உணர்த்துகிறது .
2.5.2 நன்னூலார் கருத்து
இ , ஈ , எ , ஏ , ஐ ஆகிய உயிர்எழுத்துகள் பிறப்பது குறித்து நன்னூல் தெரிவிக்கும் கருத்துகளைக் காண்போம் .
இ , ஈ , எ , ஏ , ஐ ஆகிய உயிர்எழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சி பற்றியும் , ஒத்துழைக்கும் உறுப்புகள் குறித்தும் நன்னூல் எடுத்துரைக்கின்றது .
அவை ,
தேவைப்படும் முயற்சி : ( 1 ) வாயைத் திறத்தலாகிய அங்காத்தல் .
( 2 ) மேல்வாய்ப் பல்லை நாக்கின் அடியின் ஓரமானது சென்று பொருந்துதல் .
ஒத்துழைக்கும் உறுப்புகள் : மேல்வாய்ப்பல் , நாக்கு ஆகியன .
இதனை ,
இ ஈ எ ஏ ஐ அங்காப்போடு
அண்பல் முதல்நா விளிம்புற வருமே
என்று நன்னூல் நூற்பா ( 76 ) விளக்குகின்றது .
( அங்காத்தல் = வாய் திறத்தல் ; முதல் நா = அடி நாக்கு ; விளிம்பு = ஓரம் )
தொல்காப்பியர் கருத்து தொல்காப்பியம் , உ , ஊ , ஒ , ஓ , ஒள ஆகிய உயிர்எழுத்துகள் ஐந்தும் இதழ் குவிந்து சொல்லப் பிறக்கும் என்று விளக்குகின்றது .
இதனை ,
உ ஊ ஒ ஓ ஒள என இசைக்கும்
அப்பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்
( எழுத்து .
87 )
என்னும் தொல்காப்பிய நூற்பா உரைக்கின்றது .
இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் பிறப்பதற்கு உயிரின் முயற்சியோடு , இதழ் குவிதலாகிய முயற்சியும் தேவைப்படுகின்றது என்பது தெளிவாகிறது .
2.6.2 நன்னூலார் கருத்து
உ , ஊ , ஒ , ஓ , ஒள என்னும் இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் எவ்வாறு பிறக்கின்றன என்பதை நன்னூலும் விளக்கியுள்ளது .
நன்னூல் இந்த எழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சியையும் , ஈடுபடும் உறுப்புகளையும் மிகச் சுருக்கமாகத் தெரிவிக்கக் காணலாம் .
இந்த உயிர்எழுத்துகள் இதழ் குவிதலால் தோன்றுகின்றன என்று தெரிவிக்கின்றது .
இக்கருத்தை ,
உ , ஊ , ஒ , ஓ , ஒள இதழ் குவிவே
( நூற்பா .
77 )
என்னும் நூற்பாவின் மூலம் நன்னூல் விளக்கிச் செல்கின்றது .
உயிர் ஒலிகள் பிறப்பது பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும்
உயிர்ஒலிகள் பிறப்பது பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவித்த கருத்துகளில் வெளிப்படும் ஒற்றுமை காணத்தக்கது .
• ஒற்றுமை
இரு இலக்கண நூல்களும் அ , ஆ ஆகிய உயிர்எழுத்துகள் இரண்டும் வாயைத் திறத்தலால் பிறக்கும் என்றும் , இ , ஈ , எ , ஏ , ஐ ஆகிய ஐந்து உயிர்எழுத்துகளும் மேல்வாய்ப் பல்லை ( அண்பல் ) நாக்கின் அடியானது ( நாமுதல் ) சென்று பொருந்த ( விளிம்புறப் ) பிறக்கும் என்றும் , உ , ஊ , ஒ , ஓ , ஒள என்னும் ஐந்து உயிர்எழுத்துகளும் இதழ் குவிதலால் பிறக்கும் என்றும் கூறுகின்றன .
எனவே இதில் இரண்டு நூலாசிரியர்களுக்கும் இடையில் எந்த வித வேறுபாடும் இல்லை .
உயிர்எழுத்துகள் பிறப்பு - இலக்கண நூல்களும் மொழியியலும் .
எழுத்துகளின் பொதுவான பிறப்பியல் குறித்து இலக்கண நூல்களும் மொழியியலாரும் தெரிவித்த கருத்துகளை முந்தைய பாடத்தில் தெரிந்து கொண்டீர்கள் .
இந்தப் பாடத்தில் உயிர்எழுத்துகளின் பிறப்புப் பற்றி இலக்கண நூல்கள் தெரிவித்த கருத்துகள் மொழியியல் கருத்துகளோடு ஒத்திருக்கும் தன்மையைக் காணலாம் .
2.8.1 ஒற்றுமை
( 1 ) தொல்காப்பியம் , நன்னூல் ஆகிய இரு இலக்கண ஆசிரியர்களும் தமிழில் உள்ள உயிர்எழுத்துகள் பன்னிரண்டை மூன்று பிரிவாகப் பிரித்துள்ளனர் .
அவை ,
( 1 ) அ , ஆ ,
( 2 ) இ , ஈ , எ , ஏ , ஐ ,
( 3 ) . உ , ஊ , ஒ , ஓ , ஒள - ஆகியன .
மொழிநூல் அறிஞர்களும் தமிழிலுள்ள உயிர்ஒலிகளை மேற்கண்ட பகுப்பின்படியே பிரித்துக் காட்டியுள்ளனர் .
மொழிநூல் அறிஞர்கள் உயிர்எழுத்துகளை பின்வரும் பகுப்பின்படி பிரிக்கின்றனர் .
அவை ,
( 1 ) முன் அண்ண உயிர்
( 2 ) இடை அண்ண உயிர்
( 3 ) பின் அண்ண உயிர் என்பன .
இந்த மூன்று பகுப்பின் கீழ் , தமிழில் காணப்படும் உயிர்எழுத்துகளை அமைத்துக் காட்டுகின்றனர் .
அவ்வாறு அமைக்குமிடத்து ,
அவை ,
( 1 ) முன் அண்ண உயிர்கள் : இ , ஈ , எ , ஏ
( 2 ) இடை அண்ண உயிர்கள் : அ , ஆ
( 3 ) பின் அண்ண உயிர்கள் : உ , ஊ , ஒ , ஓ
என்று வருவதைக் காணலாம் .
எனவே , தமிழ் இலக்கண நூல்கள் , மொழியை , மொழிநூல் அறிஞர்கள் காணும் அறிவியல் நோக்கில் கண்டு ஆய்ந்துள்ளன என்பதையும் நாம் இங்குத் தெரிந்து கொள்ளலாம் .
2.8.2 கூட்டொலியும் தனிஒலியும்
மேலே கண்ட மூன்று பகுப்பில் எதிலும் ‘ ஐ , ஒள ’ ஆகிய இரண்டு உயிர்எழுத்துகளும் இடம் பெறவில்லை என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள் .
தமிழ் இலக்கண நூல்கள் உயிர்எழுத்துகள் பன்னிரண்டு என்று குறிப்பிட்டாலும் , மொழிநூல் அறிஞர்கள் உயிர்ஒலிகளைப் பத்து என்றே வகுத்துள்ளனர் .
‘ ஐ , ஒள ’ ஆகியவை தனியொலிகள் அல்ல என்பது மொழிநூலார் கருத்து ; ஐ என்பது அகரமும் , யகர மெய்யும் சேர்ந்த கூட்டொலி ; ஒள என்பது அகரமும் வகர மெய்யும் இணைந்த கூட்டொலி என்று மொழியியல் விளக்குகின்றது .
எனவே ‘ கூட்டொலிகள் ’ என்று தாம் கருதுகின்ற ஐ , ஒள ஆகிய இரண்டையும் தவிர்த்துவிட்டு உயிர்ஒலிகள் பத்து என்று மட்டும் மொழியியலார் தெரிவிக்கின்றனர் . ‘ ஐ ’ காரத்தைத் தொல்காப்பியர் உயிர்எழுத்தாகக் கூறியிருப்பினும் ஒலி அமைப்பினை விளக்குமிடத்து அது ‘ கூட்டொலி ’ என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார் .