15

பண்பாட்டு வரலாறு - 3

பாடம் - 1

நாயக்கர் காலப் பண்பாடு

1.0 பாட முன்னுரை

தமிழக வரலாற்றில் நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குச் சிறப்பான இடம் உண்டு. மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய இடங்களில் நாயக்கர்களின் ஆட்சி அமைந்தது. சமயப்பற்றும், கலையார்வமும் கொண்ட நாயக்க மன்னர்கள் கோயில் கட்டுவதிலும், அரச மாளிகைகள் அமைப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தனர். சமயப் பிணக்குகளையும், சாதிப் பிரிவினைகளையும் கட்டுக்குள் வைத்திருந்தனர். தெலுங்கு மொழி அரசவையிலும் இசையிலும் சிறப்பிடம் பெற்றிருந்த போதும், இவர்கள் காலத்தில் தமிழில் சிற்றிலக்கியங்கள் பெருகின. இனி இவர்கள் காலத்திய ஆட்சி முறை, கலை வளர்ச்சி, சமய நல்லிணக்கம் ஆகியவற்றை இப்பாடத்தில் காண்க.

1.1 நாயக்கர் வரலாறு

மதுரையில் பாண்டியப் பேரரசு மறைந்தபின், மதுரை டில்லி சுல்தானின் ஆட்சிக்கு உட்பட்டது. டில்லி சுல்தானின் பிரதிநிதியாய் மதுரையில் இருந்து அரசாண்ட சுல்தான், டில்லியின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி, முழுஉரிமை பெற்ற மன்னர் ஆனார். மதுரையில் முஸ்லீம் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. விஜயநகரத்தில் நாயக்கராட்சி ஏற்பட்ட பின் இரண்டாம் கம்பணர் என்ற நாயக்க அரசர், மதுரையின் மீது படையெடுத்துக் கைப்பற்றிச் சுல்தான் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். கம்பணருக்குப் பின் இரண்டாம் ஹரிஹரர் காலத்தில் (1377-1404) மதுரையில் முஸ்லீம் ஆட்சி அறவே அகன்று நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது.

நாயக்கர் என்ற சொல் தலைவன், படைத்தலைவன் என்ற பொருளுடையது. விஜயநகரத்தின் அரசப்பிரதிநிதியைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் இஃது ஒரு சாதிப் பெயராக மாறிவிட்டது. நாயக்கர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்.

1.2 தமிழகத்தில் நாயக்கர் அரசு

விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில், தஞ்சை, செஞ்சி, மதுரை ஆகிய தமிழ்நாட்டு நகரங்களில், நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது. தஞ்சையில் கி.பி. 1532-இல் நாயக்கர் ஆட்சி தொடங்கியது; செஞ்சியில் கி.பி. 1526-இல் தொடங்கியது; மதுரையில் கி.பி. 1529-இல் தொடங்கியது. தொடக்க காலத்தில் இப்பகுதிகள் விஜயநகரப் பேரரசுக்கு அடங்கியிருந்து, பின்னர் முழு உரிமை பெற்ற அரசுகளாக மாறின. மதுரை நாயக்கர்களே நீண்ட காலம் அரசு செய்தவர்கள். 1529-ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. 1736-ஆம் ஆண்டு வரை இவர்கள் ஆட்சி நிலவியது.

1.2.1 மதுரை நாயக்கர்கள் கம்பணர் காலத்தில் மதுரையில் நாயக்கர் ஆட்சி தொடங்கியது. எனினும் விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தில்தான் மதுரையில் நாயக்கர் ஆட்சி வலிவுபெற்றது. விசுவநாத நாயக்கர் கி.பி. 1529இல் மதுரை ஆட்சியை ஏற்றார். அது முதற்கொண்டு நாயக்கராட்சி மதுரையில் வளம் பெற்றது. இவரே பாளையப்பட்டு ஆட்சிமுறையை வலிவு கொண்டதாக மாற்றி அமைத்தார். 72 பாளையப்பட்டுகளின் பொறுப்பில் நாட்டின் பகுதிகள் ஆட்சி செய்ய அனுமதிக்கப் பெற்றன. பாளையக்காரர்கள் தாங்கள் ஆளும் பகுதிகளில் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியைத் தங்கள் செலவுகளுக்கும், இன்னொரு பகுதியைப் படைவீரர்களுக்கும், மற்றொரு பகுதியை மதுரை நாயக்கர்க்கும் என ஒதுக்க வேண்டி இருந்தது. மதுரை அரசு வேண்டும் போது படையுதவி செய்ய வேண்டி இருந்தது. இதுவே பாளையப்பட்டு ஆட்சி முறையாகும். விசுவநாதருக்குப் பின் நாயக்க மன்னர் பலர் மதுரையை ஆண்டனர். அவர்களில் புகழ்மிக்கவர்கள் திருமலை நாயக்கர், சொக்கநாத நாயக்கர், இராணி மங்கம்மாள் என்ற மூவராவர்.

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் வம்சவழி

ஆட்சிக் காலம் ஆண்ட நாயக்க மன்னர்கள்

1529 – 1564 விசுவநாத நாயக்கர்

1564 – 1572 கிருஷ்ணப்ப நாயக்கர் I

1572 – 1595 வீரப்ப நாயக்கர்

1595 – 1601 கிருஷ்ணப்ப நாயக்கர் II

1601 – 1609 முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் (கிருஷ்ணப்ப நாயக்கரின் (II) உடன் பிறந்த சகோதரர் விசுவப்ப நாயக்கரின் மகன்)

1609 – 1623 முத்து வீரப்பர் I (முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் மூத்த மகன்)

1623 – 1659 திருமலை நாயக்கர் (முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் இளைய மகன்)

1659 முத்து வீரப்ப நாயக்கர் II

1659 – 1682 சொக்கநாத நாயக்கர் (இராணி மங்கம்மாள் கணவர்)

1682 – 1689 முத்து வீரப்பர் III

1689 – 1706 இராணி மங்கம்மாள் (சொக்கநாதரின் மனைவி)

1706 – 1732 விஜயரங்க சொக்கநாதர் (சொக்கநாதரின் மகன்)

1732 – 1736 மீனாட்சி (விஜயரங்கநாதரின் மனைவி)

1.2.2 திருமலை நாயக்கர் திருமலை நாயக்கர்

இதோ முறுக்கிய மீசையும் உருட்டி வழிக்கும் விழிகளும் கொண்ட திருமலை நாயக்கர் சிலையைக் காணுங்கள்! இது மதுரைக் கோயிலில் உள்ளது. இவர் 1623 முதல் கி.பி. 1659 வரை மதுரை நாட்டை ஆட்சி செய்த புகழ் மிக்க பெருமன்னர். தன் ஒப்பற்ற கலை ஆர்வத்தால் மதுரை நகரைக் கலையழகு கொஞ்சும் ஏதன்ஸ் நகரம் ஆக்கினார். திருமலை மன்னர் தம் முன்னோர்கள் வழியில் திருச்சியைத் தலைநகராகக் கொண்டிருந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையைத் தலைநகராக மாற்றினார். மைசூர், திருவனந்தபுரம் ஆகிய அரசுகளை இவர் வென்றார். விஜயநகரத்தோடு போரிட்டு வென்று முழுஉரிமை படைத்த மன்னரானார். இவர் 75 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தார். இவர் காலத்தில் மறவர் சீமை எனப்பட்ட இராமநாதபுரம், சிவகங்கை, திருவாடானைப் பகுதிகளில் அமைதி நிலவியது. சேதுபதி அரசரான இரகுநாததேவர் திருமலை மன்னருக்கு உறுதுணையாக இருந்தார்.

1.2.3 சொக்கநாத நாயக்கர், இராணி மங்கம்மாள் நாயக்க மன்னர்களின் வரிசையில் மற்றொரு குறிப்பிடத்தக்க மன்னர் சொக்கநாத நாயக்கர். இவர் 23 ஆண்டுகள் மதுரை நாட்டை ஆண்டார். இவருக்குப் பல சோதனைகளும் தோல்விகளும் ஏற்பட்டன. செஞ்சிப் பகுதி முன்னரே பிஜப்பூர் சுல்தான் வசப்பட்டுவிட்டது. தஞ்சையும் இம்மன்னர் காலத்தில் சுல்தானால் கைப்பற்றப்பட்டது. சுல்தானின் பிரதிநிதியாக இருந்த ஏகோஜி இந்தப் பகுதிகளை அரசாண்டான். இந்த ஏகோஜி மராட்டிய சிவாஜியின் தம்பியாவான். சுல்தானின் மறைவுக்குப் பிறகு ஏகோஜி தஞ்சையில் உரிமைமிக்க மராட்டிய ஆட்சியை நிறுவினான். தமிழகத்தின் ஒரு பகுதியில் மராட்டியர் ஆட்சி ஏற்பட்டு, அதன் பண்பாட்டுக் கூறுகளும் தமிழகத்தில் பரவின. சொக்கநாதர் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது; பசியால் துன்புற்று ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். ஏகோஜி தஞ்சையைக் கைப்பற்றுவதற்கு முன்னர், தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கர், தமக்குப் பெண் கொடுக்க மறுத்தமையால் சொக்கநாதர் அவர் மீது போர் தொடுத்தார். விஜயராகவர் குடும்பத்தையே சொக்கநாதர் அழித்தார். சொக்கநாதர் இறுதிக்காலத்தில் அவருக்கு வேண்டியவர்களாலேயே சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு அவருடைய குதிரைப் படைத் தலைவரால் விடுவிக்கப் பெற்று மறுபடியும் நாட்டை ஆண்டார். சொக்கநாதர் அவசரபுத்தி உடையவர்; பழிவாங்கும் குணம் படைத்தவர். பிடிவாதம் கொண்டவர். எனவே அவர் காலத்தில் நாயக்கர் ஆட்சி நிலை தாழ்ந்தது.

சொக்கநாத நாயக்கரின் மனைவியே இராணி மங்கம்மாள். இவர்களின் மகன், முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சி செய்த போது, அவுரங்கசீப் என்ற மொகலாய மன்னர், தம் செருப்பை, நாடெங்கும் ஊர்வலமாக அனுப்பினார். அச்செருப்புக்கு எல்லாரும் மரியாதை செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் வீரமிக்க முத்துவீரப்பர் அந்தச் செருப்பைத் தன் காலில் அணிந்து கொண்டு “உங்கள் மன்னர் இன்னொரு செருப்பை அனுப்பவில்லையா?” எனக் கேட்டார். ஏழே ஆண்டுகள் வாழ்ந்த முத்து வீரப்பர் இறந்த போது அவர் மனைவி கருவுற்றிருந்தாள். பிள்ளையைப் பெற்றுவிட்டு அவ்வரசியும் உயிர் விட்டாள். இதனால் சொக்கநாத நாயக்கரின் மனைவி மங்கம்மாள் அரசப் பொறுப்பை ஏற்றார். இராணி மங்கம்மாள் வீரமிக்கவர். அவர் தன் தளபதி நரசப்பய்யாவின் துணையால் தஞ்சை, மைசூர், திருவனந்தபுரப் படைகளை வென்றார். தம் கணவர் காலத்தில் இழந்த பகுதிகளை மீட்டார். மங்கம்மாள் செய்த அறச் செயல்கள் பலப்பல. சாலைகள், தண்ணீர்ப் பந்தல்கள், வாய்க்கால் சீரமைப்பு, சாலை ஓரம் மரம் நடுதல், அன்ன சத்திரங்கள் ஆகியன மங்கம்மாள் ஆட்சியில் சிறப்புநிலை அடைந்தன.

1.3 நாயக்கர் கால அரசியல்

நாயக்கர் தெலுங்கு நாட்டிலிருந்து வந்திருந்தாலும் பெரும்பாலும் பழைய தமிழரசர்களின் ஆட்சிமுறையையே பின்பற்றினர். மாலிக்காபூர், குஸ்ருகான், உலூகான் என்ற இசுலாமியத் தளபதிகளின் படையெடுப்பு, கம்பணரின் படையெடுப்பு, பாண்டிய அரசர்களின் தாயாதிப்போர் ஆகியவற்றால் அமைதி இழந்த தென்னாட்டை நாயக்கர் அரசியல், அமைதி நெறிக்குத் திரும்பச் செய்தது. அரசருக்கு அடுத்தபடி தளவாய் என்ற பதவியில் இருப்பவரே அதிக அதிகாரமுடையவர். தலைமை அமைச்சர், படைத்தலைவர் என்ற இருவரின் அதிகாரமும் பெற்றவர் இவர். பெரும்பாலான தளவாய்கள் தெலுங்கு பிராமணர்களே. பிரதானி என்ற பதவி நிதியமைச்சர் பொறுப்புடையது. இவர் அரசின் வரவு செலவுகளைக் கவனிப்பவர். பிரதானிக்கு அடுத்தவர் இராயசம். இவர் அரசின் தலைமைச் செயலாளர் ஆவார். இந்த மூவருமே அரசியல் நடத்திய முக்கிய அதிகாரிகள் ஆவர். இந்த முன்று பதவிகளும் விஜயநகர அரசமைப்பைத் தழுவியவை. என்றாலும் அமைச்சர்களின் கருத்தைக் கேட்டு நடத்தல், குடிமக்கள் தேவையை அறிந்து ஒழுகுதல் ஆகிய பண்புகள் தமிழரசர் பாரம்பரியத்துக்கே உரிய வகையில் நாயக்கர் காலத்திலும் பின்பற்றப் பட்டன. பாளையப்பட்டுகளுக்குச் சுயாட்சி உரிமை அளிக்கப்பட்டிருந்தது.

1.3.1 பாளையப்பட்டு ஆட்சி முறை மதுரை நாட்டைச் சுற்றிலும் அமைந்த பகுதிகள் 72 பாளையப்பட்டுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. கி.பி. 1535-இல் இந்தப் பாளையப்பட்டு முறை நடைமுறைப் படுத்தப்பட்டது. பாளையக்காரர்கள், தங்கள் பகுதிக்குரிய ஆட்சியை முழு உரிமையோடு செய்து வந்தனர். மத்திய அரசுக்கும் உதவினர். மதுரை நாயக்க மன்னர்களுக்குப் பாளையக்காரர்கள் உண்மை உடையோராய் இருந்தனர். சிலர் மாறுபட்டபோது போர் உண்டாயிற்று. போர்க்காலத்தில் நாயக்க மன்னருக்குப் பாளையக்காரர்கள் படைகளைக் கொடுத்து உதவினர். கி.பி. 1611-இல் நிகழ்ந்த போரில் எருமைக்கட்டிப் பாளையம் நாயக்க மன்னருக்கு 3000 காலாட்கள், 200 குதிரைகள், 50 யானைகள் தந்து உதவியதாக வைக்கோ பாதிரியார் கூறியுள்ளார். இப்படி ஒவ்வொரு பாளையமும் உதவி புரிந்ததால் மத்திய அரசு விரிவுடையதாகத் திகழ்ந்தது. பாஞ்சாலங்குறிச்சி, எட்டையபுரம், மணியாச்சி, ஊற்றுமலை, சேற்றூர், சிவகிரி, சிங்கம்பட்டி, கோட்டையூர், நிலக்கோட்டை, ஆய்குடி, போடிநாயக்கனூர், பெரியகுளம் ஆகியன சில பாளையப்பட்டுகளாகும். இப்பாளையக்காரர்களுள் சிலர் கன்னடர், சிலர் தெலுங்கர்.

1.3.2 தலைநகர் மாற்றம் நாயக்கர் ஆட்சியின் தொடக்கத்தில் மதுரையே தலைநகராக இருந்தது. திருச்சிராப்பள்ளி மதுரை நாட்டின் எல்லை நகராக இருந்தது. தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினால், தஞ்சை நாயக்கரோடு போர் புரிய வசதியாக இருக்கும் என்று கருதி கி.பி.1616-இல் முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் இம்மாற்றத்தைச் செய்தார். இவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கர், தன் ஆட்சியின் ஏழாம் ஆண்டில் கி.பி.1630-இல் தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார். திருச்சி அடிக்கடிப் போர்த் தாக்குதலுக்கு உட்பட்டதாலும், தென்பகுதியைத் திருச்சியிலிருந்து கவனிக்க இயலாமையாலும், திருமலை நாயக்கர் மதுரையைத் தலைநகராக்கினார். மீண்டும் 1665-இல் சொக்கநாத நாயக்கர் தஞ்சை மீது படையெடுக்க வசதியாகத் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிக்கு மாற்றினார். இவர் மதுரையில் கட்டப்பட்ட திருமலை மகாலின் பெரும்பகுதிகளை இடித்து, அதிலிருந்த சிற்பங்களையும் சித்திர வேலைப்பாடமைந்த பகுதிகளையும் திருச்சிக்குக் கொண்டு வந்தார். மகாலை இடித்துக்கொண்டு வந்த பகுதிகளைக் கொண்டு ஏதும் கட்டவில்லை.

1.3.3 சிற்றூர் ஆட்சி தமிழகச் சிற்றூர்களின் பெயர்கள் நாயக்கர் காலத்தில் மாறி விட்டன. பாடி, சேரி, பள்ளி, சிறுகுடி, ஊர், பட்டினம், பாக்கம், குறிச்சி என்றெல்லாம் பெயர் இறுதியில் இடம்பெற்ற சொற்கள் மறைந்தன. இவற்றிற்குப் பதிலாகக் கோட்டை, மங்கலம், சமுத்திரம், புரம், குளம் போன்ற சொற்கள் ஊர்ப்பெயர்களின் பின்னால் சேர்ந்தன. எடுத்துக்காட்டாக நிலக்கோட்டை, திருமங்கலம், அம்பாசமுத்திரம், சமயபுரம், பெரியகுளம் போன்ற ஊர்ப் பெயர்களைக் குறிப்பிடலாம். சோழர் காலத்தில் கிராம ஆட்சி, கிராம சபையால் மேற்கொள்ளப்பட்டது. கிராம சபை உரிமையோடு பல செயல்களைச் செய்தது. கோயில்களைப் பாதுகாத்தது. அறநிலையங்களைப் பேணியது; மக்களுக்குக் கடன் உதவி செய்தது. விஜயநகர ஆட்சியில் கிராம ஆட்சி இந்நிலையில் இல்லை. பாளையப்பட்டு ஆட்சி முறையில் கிராம சபைகள் மறைந்தன. கிராம மணியக்காரர், கணக்கர், தலையாரி ஆகியோரைக் கொண்ட ஆயக்கார நிர்வாகம் தோற்றுவிக்கப்பட்டது. கள்ளர், மறவர் ஆகிய சாதியினர் குடியிருந்த ஊரில் வரிவசூல் செய்த அலுவலர் அம்பலக்காரர் எனப்பட்டார்; மற்ற பகுதிகளில் வரிவசூல் செய்தவர் மணியக்காரர் எனப்பட்டார். இவர்கள் வரிப்பணத்தை மாகாண அதிகாரிகளிடம் செலுத்த, அதனை அவ்வதிகாரிகள் பிரதானியிடம் செலுத்துவர். வண்ணார், தட்டார், தச்சர், கருமார் போன்ற கிராமத் தொழிலாளர்களுக்கு அரசு மானியம் வழங்கியது.

1.4 நாயக்கர் காலச் சமயம்

நாயக்கர்கள், வழிவழி வைணவர்களாயிருந்தாலும், மற்ற சமயங்களில் வெறுப்புக் காட்டவில்லை. மதுரை மீனாட்சி கோயிலுக்கு இவர்கள் மிகுதியாகச் செலவிட்டனர். அதை ஒரு சைவக் கோயில் என்று புறக்கணிக்கவில்லை. தில்லையில் பெருமாள் திருவுருவத்தை அகற்ற வேண்டும் என்று சைவர்கள் அறப்போராட்டத்தில் இறங்கியபோது, கிருஷ்ணப்ப நாயக்கர் தளராமல் நடவடிக்கை எடுத்துப் போராட்டத்தை ஒடுக்கினார். மதுரை நாயக்கர் காலத்தில், தென்கலை, வடகலை என்ற இரு வைணவப் பிரிவுகள் தங்களுக்குள் ஓயாது சண்டையிட்டுக் கொண்டன. நாயக்க மன்னர் இப்பிரிவுகளை வேறுபாடு கருதாமல் நடத்தினார். நாயக்கர் காலத்திலேயே, மதுரைவீரன் வழிபாடு தோன்றியது. திருமலை நாயக்கருக்குப் பின்பு, தமிழகத்தில் சக்தி வழிபாடு வலிமை பெற்றது. மீனாட்சியம்மனுக்குத் தனிச்சிறப்பு ஏற்பட்டது. மதுரையிலும், திருச்சியிலும் இசுலாமியர் அமைதியாக வாழ்ந்தனர். இசுலாமிய சுல்தான்களின் ஆட்சியில் இந்துக்கள் கொடுமைப்படுத்தப்பட்டபோதிலும், நாயக்கர் ஆட்சியில் இசுலாமியர் நன்கு பாதுகாக்கப்பட்டனர்.

நாயக்கர் காலத்தில், கிறித்துவர் சமயப் பிரசாரம் செய்யத் தடையில்லாமல் இருந்தது. பெர்னாண்டஸ் என்ற போர்த்துக்கீசியப் பாதிரியார், 1592-இல் மதுரையில் நாயக்க மன்னர் இசைவு பெற்று, முதல் மாதா கோயிலைக் கட்டினார். இராபர்ட்-டி-நொபிலி பாதிரியார், நாயக்கர் காலத்தில் பெரும் அளவில் இந்துக்களைக் கிறித்துவராக்கினார். கி.பி.1630இல் பாதிரிமார்கள் மதமாற்ற முயற்சியில் இறங்கியதற்காக மதுரையிலும் மறவர் சீமையிலும் மிகுதியும் துன்புறுத்தப்பட்டார்கள். திருமலை நாயக்கர் தலையிட்டுப் பாதிரிமார்களைக் காப்பாற்றினார்.

1.4.1 மதுரை மீனாட்சி கோயில் கோபுரம்

இதோ, கம்பீரமான மதுரைக் கோபுரத்தைக் காணுங்கள்! தென்னிந்தியக் கட்டடக் கலைக்கும், சிற்ப ஓவியச் சிறப்புகளுக்கும், தெய்வீக அழகுக்கும் இடமான இந்தக் கோயிலின் பகுதிகளைக் காணுங்கள்! மீனாட்சி, சொக்கநாதர் சன்னதிகளில் பெரிய துவாரபாலகர் உருவங்களை திருமலை மன்னர் அமைத்தார். கொடிக்கம்பங்கள், பலிபீடங்கள் ஆகியன இவரால் அமைக்கப்பட்டன.

கொடிக்கம்பம்

நன்னுதல் அங்கயற்கண்ணி

தனக்கு நலம்பெ றவே

உன்னதமாகும் கொடிக்கம்பம்

மாபலி பீடமுடன்

சொன்னம் அளித்துப் பொன் பூசுவித்தான்

சுகபோகன் எங்கள்

மன்னன் திருமலை பூபன்

மதுரை வரோதயனே

மீனாட்சி திருமலைமன்னர் துவாரபாலகர்

என்று திருப்பணிமாலை என்ற நூல் திருமலை மன்னரின் கோயில் திருப்பணிகளைக் குறிக்கின்றது.

(நன்னுதல் = நல் நுதல் (நெற்றி), சொன்னம் = சுவர்ணம் (தங்கம்), வரோதயன் = வர+உதயன் (வரத்தின் பயனாகத் தோன்றியவன்), அங்கயற்கண்ணி = அம் கயல் கண்ணி (அழகிய கயல் மீனை ஒத்த கண்களையுடையவளாகிய மீனாட்சி)

கோயில் ஆட்சி, அபிடேக பண்டாரம் என்பவரிடம் இருந்தது. நிர்வாகம் சீர்கேடு அடைந்த நிலையில் இருந்தது. மீனாட்சி அம்மை ‘திருமலை! என்னை ஒருவரும் கவனிக்கவில்லையே’ என நாயக்கர் கனவில் தோன்றிக் கூறினாராம். உடனே, மன்னர் தாமே கோயில் நிர்வாகத்தை ஏற்றுப் பல அறக்கட்டளைகளை ஏற்படுத்திக் கோயில் நிர்வாகத்தை ஒழுங்கு செய்தார்.

இதோ தருமிக்குப் பொற்கிழி அளித்த சோமசுந்தரர் திருக்கோயிலைக் காணுங்கள்! மாணிக்க மூக்குத்தி ஒளிவீசக் கிளியுடன் கொஞ்சும் எழில்மிகு மீனாட்சி அம்மையைக் காணுங்கள்! தெப்பக்குளம், ஆயிரங்கால் மண்டபம், முக்குறுணிப் பிள்ளையார், 124 சிற்பத் தூண்களைக் கொண்ட வசந்த மண்டபம் ஆகியன திருமலை மன்னரின் கோயிற்பணிகளுக்குச் சான்றுகளாகும்.

முக்குறுணிப் ஆயிரங்கால்மண்டபம் தெப்பக்குளம்

பிள்ளையார்

1.4.2 திருவரங்கம் ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளிக்குப் பக்கத்தே உள்ள வைணவத் தலமாகும். இத்தலமே தமிழில் திருவரங்கம் எனப்படும். ஆழ்வார்களால் பாடப்பெற்ற இத் திருத்தலத்தில் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார்.

ஏன் பள்ளி கொண்டீர் ஸ்ரீரங்க நாதரே? என்ற பாட்டு இறைவனை எண்ணித் துதிப்பார்க்கு இன்பம் தருவதாகும். திருமலை நாயக்கர், சொக்கநாத நாயக்கர், இராணி மங்கம்மாள், விஜயரங்க சொக்கநாதர் எனப் பலரும் திருவரங்கம் திருக்கோயிலுக்குப் பணி செய்துள்ளனர். நாயக்க மன்னர்களின் தலைநகரமாகத் திருச்சிராப்பள்ளி விளங்கியமையால், அதன் பக்கத்தில் இருந்த திருவரங்கம் அவர்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கியது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளின் வரலாற்றை, விஜயநகர வேந்தரான கிருஷ்ண தேவராயர் ஆமுக்தமாலியதா என்ற தெலுங்கு நூலாகப் படைத்துள்ளார். இன்றும் திருவரங்கத் திருக்கோயிலில், விஜயரங்க சொக்கநாதர் மற்றும் அவருடைய மனைவி மீனாட்சி திருவுருவங்கள் உள்ளன.

1.4.3 கிறித்துவ சமயம் நாயக்கர் காலத்தில் கிறித்துவ சமயம் நன்கு பரவியது. கடற்கரை ஓரப் பகுதிகளில் டச்சுக்காரரும், போர்த்துக்கீசியரும், ஆங்கிலேயரும் ஆதிக்கம் செலுத்தியதை நாயக்க மன்னர்கள் தடுக்கவில்லை. இராபர்ட் டி நொபிலி பாதிரியாரும், வேறு சில பாதிரியார்களும், மதமாற்றம் செய்ததற்காகத் திருச்சிராப்பள்ளியில் சிறையில் அடைக்கப்பட்டனர்; துன்புறுத்தப்பட்டனர். அப்போது, திருமலை மன்னர் தலையிட்டுப் பாதிரியார்களைக் காப்பாற்றினார். மதமாற்றம் செய்வதைத் தடுக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டார். பாதிரிமார்களுக்குப் பரிசுப் பொருட்களை அளித்தார். சொக்கநாத நாயக்கர் காலத்திலும், இந்த ஆதரவு நீடித்தது. மாறாக மறவர் சீமையில் பிரிட்டோ பாதிரியார் கொடுமையாகத் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். மதுரையை விட்டுக் கிறித்துவர்களை வெளியேற்ற வேண்டுமென்று, இராணி மங்கம்மாளுக்குத் தஞ்சை அரசர் கடிதம் எழுதினார். அதற்கு மங்கம்மாள் “எப்படிச் சிலரை அரிசிச் சோறு உண்ணவும், வேறு சிலரை இறைச்சி தின்னவும் விடுகிறோமோ, அப்படி ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் மதத்தை ஏற்றுக்கொண்டு வாழ விடுவதே அறமாகும்” என்று பதில் எழுதினார். நாயக்கர் காலத்தில் கிறித்துவ சமயம் மற்ற சமயங்களைப் போன்றே சமநிலையில் நோக்கப் பெற்றது.

1.5 நாயக்கர் காலக் கலை வளர்ச்சி

சிவனின் ஊர்த்துவ தாண்டவச்சிலை

நாயக்க மன்னர்கள், கலைகளில் ஈடுபாடு உள்ளவர்கள். தமிழ்நாட்டுக்கு அவர்களால் அருமையான கட்டடங்களும், சிற்பங்களும், ஓவியங்களும் கிடைத்தன. மிகப்பெரிய கோயில் மண்டபங்களும், துவாரபாலகர் சிலைகளும் இவர்களால் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் திருமலை நாயக்கர் காலத்தில் 64 கோயில்களில் கோபுரங்கள் எழுப்ப முயன்று பணக்குறையாலோ வேறு காரணத்தாலோ திருப்பணிகள் நின்றுவிட்டன. மதுரை இராய கோபுரமும் அவற்றில் ஒன்றாகும். ஒரு சமயம் கல்லில் உருவம் செதுக்கிக் கொண்டிருந்த சிற்பி, தன் உதவியாளரிடம் வெற்றிலைச் சுருளுக்குக் கை நீட்டினான்.

உதவியாள் எங்கோ போயிருந்தான். சிற்பத்தைப் பார்த்துக் கொண்டே பின்புறம் கையை நீட்டியபடி வெற்றிலை பாக்குக் கேட்டதை, அங்கு வந்த மன்னர் திருமலை கண்டு அவரே வெற்றிலைச் சுருள் மடித்துக் கொடுத்தார். அரசரே தனக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்ததை அறிந்த சிற்பி, தன் விரல்களை வெட்டிக்கொண்டான். மன்னர் அவ்விரல்களுக்கு மாற்றாகப் பொன்னால் விரல்கள் செய்து அளித்தார். இஃது உண்மையோ கதையோ, மன்னரின் கலை ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக இச்செய்தி விளங்கக் காணலாம். மீனாட்சி கோயிலில் உள்ள பிட்சாடனர் சிலை, மோகினி வடிவம், காளியின் நடனம், சிவனின் ஊர்த்துவ தாண்டவச்சிலை போன்றவற்றை வேறு எங்கும் காண இயலாது. ஆயிரங்கால் மண்டபத்தில் இருக்கும் அரிச்சந்திரன், குறவன், குறத்தி சிலைகள் அற்புதமானவை.

கலைகள் வளர்ந்தன. கட்டடம், சிற்பம், ஓவியம், இசை ஆகிய கலைகளில் பலர் வல்லவராய் இருந்தனர். தெலுங்கு இசை, நாட்டில் பரவியது. தெலுங்குப் பண்பாட்டுக் கூறுகள் தமிழர்க்கு அறிமுகமாயின. கோயில்கள், பண்பாட்டின் கருவூலங்களாகத் திகழ்ந்தன. நாயக்கர் காலச் சிற்பங்கள், திராவிடச் சிற்ப இலக்கணம் பொருந்தியவை. இவை அளவில் பெரியன. மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டவை.

குறத்தி குறவன் அரிச்சந்திரன்

1.5.1 திருமலை நாயக்கர் மகால் சொர்க்க விலாசம்

ஓ! எவ்வளவு பெரிய மகால் என்று பார்த்து அதிசயப்படுகின்றீர்களா? வேண்டாம்! திருமலை மன்னர் கட்டியதில் நான்கில் ஒருபகுதிதான் இப்போது உள்ளது. எஞ்சிய பகுதிகள் இடிக்கப்பட்டுவிட்டன. இது இத்தாலிய நாட்டுச் சிற்பியால் வரைபடம் வரைந்து அமைக்கப்பட்டது. இதோ இந்த மகாலில் இன்று எஞ்சியுள்ள சொர்க்க விலாசம் என்ற பகுதியைப் பாருங்கள்! 40 அடி உயரமுள்ள வழுவழுப்பான சுதைத்தூண்கள் தாங்கும் மண்டபத்தைக் காணுங்கள். இதுதான் அரசர் அரியணையில் இருந்து ஆட்சி செய்த இடம். இரண்டு குதிரைச் சிற்பங்கள் அழகு செய்யும் படிகளைக் கடந்து இந்த இடத்தை அடையலாம். ஆண்டுதோறும் அங்கயற்கண்ணி அம்மையிடம் செங்கோலைப் பெற்றுவந்து மன்னர், இந்த மண்டபத்தில் உள்ள அரியணையில் அமர்வது வழக்கம். நவராத்திரி விழாவின்போது, ஒன்பது நாள்களிலும் இந்தச் சொர்க்க விலாசத்தில் மன்னர் கொலு இருப்பார். பழுதடைந்த இந்தப் பளிங்கு வண்ண மாளிகையை கி.பி. 1868இல் நேப்பியர் பிரபு, மூன்று இலட்ச ரூபாய் செலவு செய்து பாதுகாத்தார்.

மகால் முகப்பு தூண்கள்

1.5.2 இலக்கியம் நாயக்கர்கள் காலத்தில் சிற்றிலக்கியங்கள் பெருகின. திருமலை மன்னர், தெலுங்கையே ஆதரித்தார். எனினும் இவருடைய அவையில் குமரகுருபரர் பாடிய போது, மீனாட்சியம்மையே குழந்தை வடிவாக வந்து கேட்டதாக ஒரு கதை உண்டு. குமரகுருபரர் மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம் ஆகிய இரு நூல்களை மீனாட்சியின் மீது பாடினார். அதிவீரராம பாண்டியர், வரதுங்கராம பாண்டியர் என்ற சிற்றரசச் சகோதரர்கள், திருக்குருகைப்பெருமாள் கவிராயர், இராபர்ட் டி நொபிலி பாதிரியார், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், சுப்பிரதீபக் கவிராயர், வீரமாமுனிவர், உமறுப்புலவர், திரிகூடராசப்பக் கவிராயர் ஆகியோர் நாயக்கர் காலத்தில் வாழ்ந்து இலக்கியம் படைத்த புலவர்களாவர்.

1.6 நாயக்கர் கால வாழ்க்கை முறை

சாதிப் பெருக்கம், பலதார மணம் (Polygamy), சமய மாற்றம், சமய, அரசியல் சார்புடைய விழாக்கள் ஆகியவை நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மக்கள் வாழ்க்கை முறையில் காணும் சிறப்பு நிகழ்வுகளாகும்.

1.6.1 சாதிப் பிரிவுகள் நாயக்கர் காலத்தில் வலங்கைச் சாதிகள், இடங்கைச் சாதிகள் என்று இரு பிரிவுகளாகச் சாதிகள் பிரிந்து பூசல் விளைவித்தன. எனினும் நாயக்க மன்னர்கள் இவற்றை வளரவிடவில்லை. நாயக்கர்கள் தெலுங்கு நாட்டிலிருந்து இக்காலத்தில் தமிழகம் வந்து குடியேறினர். கம்மவார், ரெட்டியார், நாயக்கர், தேவாங்கர், கோமுட்டி, சாலியர், நாவிதர், சக்கிலியர், வண்ணார், ஒட்டர், பிராமணர் ஆகியோர் தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்து இங்குக் குடியேறினர். இக்குடியேற்றங்கள் தமிழர்களால் எதிர்க்கப் படவில்லை.

நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சௌராட்டிரப் பகுதியிலிருந்து சௌராட்டிரர்கள் தமிழகத்தில் குடியேறினர். இவர்களைப் பட்டுநூல்காரர் எனத் தமிழர் குறிப்பிட்டனர். இவர்கள், மங்கம்மாள் காலத்தில், பிராமணரைப்போலத் தமக்கும் பூணூல் போட்டுக் கொள்ளும் உரிமை வேண்டிப் பெற்றனர் என்பர்.

1.6.2 ஆடவர் மகளிர் நிலை ஆண்மக்கள், பெண்களைவிடக் கல்வியில் மேலோங்கி இருந்தனர். மகளிர் உரிமைக்காகப் போராடவில்லை. ஆடவர், மகளிர் பலரை மணந்தனர். திருமலை மன்னருக்கு 200 மனைவியரும், மறவர் நாட்டை ஆண்ட கிழவன் சேதுபதிக்கு 47 மனைவியரும் இருந்தனர். கணவன் இறந்ததால் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் சில இடங்களில் இருந்தது. இராணி மங்கம்மாள் அறிவும் துணிவும் மிக்க மங்கையாகத் திகழ்ந்தார். அவருக்குப் பின்னால் ஆட்சிக்கு வந்த இராணி மீனாட்சிக்கு அத்தகைய ஆற்றல் இல்லை. ஆடவர் மகளிர் ஆகிய இருபாலாரும் சமயம் மாறுகின்ற வழக்கம் இக்காலத்தில் ஏற்பட்டது.

கலை ஈடுபாடு மிகுந்திருந்த இக்காலத்தில், பெருஞ்செல்வர்களும், உயர் அதிகாரிகளும், மகளிர் பலரை மணக்கும் வழக்கம் இருந்தது. மகளிர் பலர் இசை, நடனம் முதலான கலைகளில் சிறந்து விளங்கினர்.

கோயிலுக்குப் பொட்டுக்கட்டும் வழக்கம் என்ற பெயரில் பெண்களைத் தாழ்குடிப் பெற்றோர் கோயிற் பணிக்காக விட்டனர். ஆனால் உயர்குடிச் செல்வர் இம்மகளிரைத் தம் உடல் வேட்கைக்கு ஆளாக்கிக் கொண்டனர்.

1.6.3 கல்வி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து பிள்ளைகள் படிக்கும் வழக்கம் இருந்தது. அரசாங்கங்கள், கல்விக்கூடங்களை வளர்க்கவில்லை. பிராமணர்கள் வேதபாடசாலைகளில் சேர்ந்து வேதம் பயின்றனர் என்றும், இவர்களுக்குரிய செலவை அரசு ஏற்றிருந்ததென்றும் நொபிலி பாதிரியார் தெரிவிக்கின்றார். மடங்கள் சமயக் கல்வியைக் கற்பித்தன. பெண்கல்வி மிகுதியாக வளரவில்லை.

1.6.4 திருவிழாக்கள் திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை விழாக்களின் இருப்பிடம் ஆயிற்று. ஆண்டுதோறும் நான்கு பெருவிழாக்கள் நடந்தன.

திருமலை மன்னர், மாசி மாதத்தில் நிகழ்ந்து வந்த திருக்கலியாண விழாவையும், தேரோட்டத்தையும் மக்கள் கலந்து கொள்ள வசதியாகச் சித்திரை மாதத்திற்கு மாற்றினார். இந்தத் திருவிழாவில், எட்டாம் நாளில் மீனாட்சி அம்மைக்கு முடிசூட்டி, அவரிடமிருந்து மன்னர் செங்கோல் வாங்கும் நிகழ்ச்சி சேர்க்கப்பட்டது. இதுவே மதுரையில் பெரிய திருவிழா ஆகும்.

வைகாசி மாதத்தில் வசந்த விழா நடத்தப் பெற்றது. ஆவணி மாதத்தில் பத்து நாட்கள் சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்றன. பத்து நாள் நிகழ்ச்சிகளில் ஒன்று, இறைவன் விறகு விற்ற நிகழ்ச்சியாகும். இதோ அந்தத் திருவிளையாடலைக் காணுங்கள்! இறைவன் விறகு விற்பவனாக வந்து பாட்டுப்பாடி இறுமாப்பு கொண்டிருந்த இசைப்பாடகர் ஏமநாதனைத் தோல்வியுறச் செய்து, பாண்டிய மன்னனின் அவைக்களப் பாடகன் ஆகிய பாணபத்திரனுக்கு அருள் செய்த இதனை, யார் மறக்க முடியும்? புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா நடைபெற்றது.

இவற்றைத் தவிர, வேறு பல திருவிழாக்களும் நிகழ்ந்தன. அவற்றில் தெப்பத்திருவிழா தைப்பூச நாளன்று நடத்தப் பெற்றது.

1.7 தொகுப்புரை

இசுலாமிய மரபினரிடமிருந்து, நாயக்கர், தமிழக ஆட்சியைக் கைப்பற்றினர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர்களின் ஆட்சியில் தமிழ் வளரவில்லை. எனினும், தமிழரும் அயலவரும் பூசலின்றி வாழ்ந்தனர். கலைகள் செழித்தன. சமயங்கள் சமரச உணர்வு பூண்டிருந்தன. கோயில்கள் சிறப்புப் பெற்றன. பொதுநிலையில் நாயக்கர் காலத்தில் தமிழர் பண்பாடு நலிவு அடையவில்லை எனலாம்.

பாடம் - 2

சிற்றிலக்கியங்கள் காட்டும் பண்பாடு

2.0 பாட முன்னுரை

சிலப்பதிகாரம் ஒரு பேரிலக்கியம். அது பெண்ணைத் தெய்வ நிலைக்கு உயர்த்தியது. கண்ணகியை வேந்தர்கள் தொழுது போற்றும் கற்புத் தெய்வமாகக் காட்டியது. ஆனால் பிற்காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்கள் பெண்ணை அப்படிப் பார்த்தனவா? இல்லை! அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் வாழ்க்கையின் குறிக்கோள் என்று பேரிலக்கியங்கள் முழங்கின. சிற்றிலக்கியங்கள் அப்படிக் கூறினவா? இல்லை! காலச் சூழல் கோவை, உலா, அந்தாதி, தூது போன்ற சிற்றிலக்கியங்கள் தோன்ற இடம் தந்தன. இந்த இலக்கியங்கள் காட்டும் பண்பாட்டு நிலையைக் காண்போமா?

2.1 சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கியங்கள் பல வகைப்படும். கோவை, உலா, அந்தாதி, கலம்பகம், தூது, மாலை, பரணி, மடல், பள்ளு, குறம் முதலாகிய பலவகைச் சிற்றிலக்கியங்கள் தமிழில் உள்ளன. கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன. காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி, இரட்டை மணிமாலை ஆகியவற்றைப் பாடியுள்ளார். இவை காலத்தால் மிகவும் பழமையானவை.

• தெய்வங்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள் ஆகியோரைப் பாடுதல்.

• சிலேடை என்ற இருபொருள் அமையப் பாடுதல்.

• பலரையும் கவரவேண்டும் என்ற கருத்தில் பெண்களை வருணித்தல்.

• தம் புலமையை வெளிக்காட்டும் எண்ணத்தோடு பாடுதல்.

ஆகியன சிற்றிலக்கியங்கள் படைத்தோரின் நோக்கங்களாக இருந்தன.

2.1.1 சிற்றிலக்கியங்களின் பண்புகள் சமயம், சாதி, இன, குலப்பிரிவுகள் போன்றவை தமிழரிடையே ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிட்டமையினைப் பிற்காலப் பாண்டியர் கால, நாயக்கர் காலத் தமிழகம் காட்டுகின்றது. பேரிலக்கியங்கள் தோன்றுகின்ற காலச்சூழல் மறைந்து, அந்தாதி, உலா, கலம்பகம், பிள்ளைத் தமிழ், தூது, பரணி, கோவை, மாலை போன்ற சிற்றிலக்கியங்கள் பெருகத் தோன்றும் காலம் மலர்ந்தது. சமயத் தலைவர்களையும், கொடையாளிகளையும், தெய்வங்களையும், குறுநில மன்னர்களையும், புலவர்கள் புனைந்து பாடத் தொடங்கினர். அளவுக்கு மீறிய புகழ்ச்சி, மீண்டும் மீண்டும் பல நூல்களில் இடம்பெறும். அலுப்பூட்டக்கூடிய, செயற்கையான வருணனைகள், பிறமொழி கற்பித்த உத்திகள், அணிகள், பிறமொழிச் சொற்கள் ஆகியன இக்காலத்து இலக்கியங்களின் பண்புகளாக அமைந்தன.

வகை விளக்கம் உதாரணம்

கலம்பகம் பல பூக்களால் தொடுத்த மாலை போன்று, பல

பாவினங்கள், பல உறுப்புக்கள் கலந்து பாடுவது. நந்திக் கலம்பகம்

திருவரங்கக் கலம்பகம்

மதுரைக் கலம்பகம்

கோவை தலைவன்,தலைவியருடைய களவுஒழுக்கம், கற்பு ஒழுக்கம்

பற்றிப் பலதுறைகளில் (400) பாடுவது. திருக்கோவையார்

பாண்டிக்கோவை

திருவெங்கைக்கோவை

பரணி போரில் 1000 யானைகளைக் கொன்ற வீரனைப் பற்றிப

பாடுவது. கலிங்கத்துப்பரணி

தக்கயாகப்பரணி

இரணியவதைப்பரணி

பள்ளு பள்ளர் (உழவர்)களின் வாழ்க்கையை விளக்கும்

நாடகச் சிற்றிலக்கியம். முக்கூடற்பள்ளு

குருகூர்ப்பள்ளு

திருவாரூர்ப்பள்ளு

பிள்ளைத்தமிழ் தெய்வங்களையும், தமிழ்ப் பெரியோர்களையும்

குழந்தையாகக் கருதி,அவர்களைப் புகழ்ந்து

பாடுவது. மீனாட்சியம்மைபிள்ளைத்தமிழ்,

முத்துக்குமாரசாமி

பிள்ளைத்தமிழ்,

சேக்கிழார் பிள்ளைத்தமிழ்.

உலா தலைவன் வீதியில் உலா வரும்பொழுது ஏழு

வெவ்வேறு பருவ நிலையில் உள்ள பொது

மகளிர் காமுறுவதாகப் பாடுவது மூவர் உலா

ஏகாம்பரநாதர் உலா

சொக்கநாதர் உலா

தூது தலைவனிடம் மையல்

கொண்ட தலைவி தென்றல், வண்டு, கிளி, மயில், மேகம்

போன்றவற்றைத் தன் ஆற்றாமையை இயம்பத்

தூது அனுப்புவதாகப் பாடுவது. தமிழ் விடுதூது

கிள்ளை விடுதூது

பண விடுதூது

அந்தாதி ஒரு பாடலின் இறுதிப்

(அந்தம்) பகுதியை அடுத்த பாடலில் முதலாக (ஆதி)

அமைத்துப் பாடுவது. பொன்வண்ணத்தந்தாதி

திருவரங்கத்தந்தாதி

அபிராமி அந்தாதி

குறவஞ்சி தலைவனிடம் கொண்ட காதல் (குறம்) நிறைவேறுமா எனக்

குறப்பெண்ணிடம் தலைவி குறி கேட்பதாக அமைவது. திருக்குற்றாலக் குறவஞ்சி

பெத்லேகம் குறவஞ்சி

சரபேந்திர பூபாலக்குறவஞ்சி

மடல் தான் விரும்பிய காதலரை அடையப் பெறாத காதலர் பனை

மடலால் செய்த பரியின் மீது அமர்ந்து பாடுவது. பெரிய திருமடல்

சிறிய திருமடல்

வருணகுலாதித்தன் மடல்

2.1.2 கற்பனைப் போக்கு சைவம், வைணவம், இசுலாம், கிறித்துவம் ஆகிய நான்கு சமயங்களும் தத்தம் சமயம் சார்ந்த கடவுளர், பெரியோர், வள்ளல்களைப் புனைந்து பாடும் நெறியில் இவ்வகைச் சிற்றிலக்கிய நூல்கள் பாடப் பெற்றன. இலக்கியத்துள் சாதி ஒரு தகுதியான இடத்தைப் பிடித்துக் கொள்ளத் தொடங்கி விட்டது. குறவஞ்சி, பள்ளு நூல்களும், கலம்பகத்தில் இடம்பெறும் இடைச்சியார், வலைச்சியார் போன்ற உறுப்புக்களும், சாதிய வழக்கங்களைக் குறித்துக் காட்டின. வளமிகுந்த புலமை எல்லையில்லாத கற்பனை வானில் கொடிகட்டிப் பறந்தது. உயர்வு நவிற்சிகளும், சொல் விளையாட்டுக்களும் மிகுந்த நிலையில், புலவர்கள் நடைமுறை உலகை மாற்றிப் பாடத் தொடங்கினர். தம் வித்தகப் புலமை ஆற்றலால், எதையும் பாடமுடியும் என்ற ஆற்றலைக் காட்டவே அவர்கள் இந்த இலக்கியங்களைத் தேர்ந்தனர்.

2.1.3 போலிப் புகழ்ச்சி உண்மையில் உயர்ந்தோங்கிய புகழ் கொண்ட தலைவர்களைப் பாடும் மனப்போக்கு, அக்காலத்தில் இல்லை. எதற்கும் தகுதியற்றவர்களையும் இந்திரன் சந்திரன் என்று தம் புலமையால் போற்றும் நிலை உருவாகிவிட்டது. இவ்வாறு பாடும்போது இவர்கள் எளிய மக்களைச் சென்றடைய வேண்டுமென்று பாடவில்லை. மாறாக நிலஉடைமைச் செல்வர்களும், குறுநில மன்னர்களும், தத்தம் சமய வட்டத்தைச் சார்ந்தவர்களும் ஏற்றுப் போற்றுதற்கென்றே பாடினர். முற்காலச் சோழர் காலத்தில் நாடு அமைதியாயிருந்தது; செல்வச் செழிப்புற்றிருந்தது. கல்வி, கலை முயற்சிகள் பெருகின. பெருங்காவியங்கள் தோன்றின. சோழராட்சி மறைந்தபின் சிற்றரசுகளும் குறுநிலத் தலைமைகளும் தத்தம் பகுதிகளில் அதிகாரம் செலுத்தினர். இவர்களைக் குறித்து வையாபுரிப்பிள்ளையவர்கள் சொல்வதைப் பாருங்கள்:

“இவர்கள் பெரும்பாலும் தோத்திரப் பிரியர்களாக இருந்தனர். தம்மைப் பற்றிப் புகழ்ந்து பாடிப் பிரபந்தங்கள் முதலியன இயற்றிய கவிஞர்களையே இவர்கள் போற்றி வந்தனர். இவ்வகைப் பாடல்களைக் குறித்து :

கல்லாத ஒருவனைநான் கற்றாய் என்றேன்

காடறியும் மறவனைநா டாள்வாய் என்றேன்

பொல்லாத ஒருவனைநான் நல்லாய் என்றேன்

போர்முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்

மல்லாரும் புயம்என்றேன் சூம்பல் தோளை

வழங்காத கையனைநான் வள்ளல் என்றேன்

இல்லாத சொன்னேனுக்கு இல்லை என்றான்

யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.

என்று ஒரு புலவர் இரங்குகின்றார். இப்பாடலிற் குறிக்கப் பெற்றோரைப் போன்றுள்ளவர்கள் மீது தூது, மடல், நொண்டி, காதல் முதலிய பிரபந்தங்கள் உண்டாயின. இப்பிரபந்தங்கள் உண்டாகும் சூழ்நிலை காவியம் தோன்றுதற்குச் சிறிதும் இடந்தரமாட்டாது என்பது வெளிப்படை”.

2.2 சிற்றிலக்கிய காலச் சமூக நிலை

ஒரு குடியில் பிறந்தவர்களுக்குள் அரசுரிமை யாருக்கென்ற சிக்கல் வந்தபோது, பாண்டி நாட்டில் இச்சிக்கலைப் பயன்படுத்தி அலாவுத்தீன் கில்ஜியின் படைத்தலைவனான மாலிக்காபூர் தமிழகத்திற்குள் நுழைந்து மதுரை அரசைக் கைப்பற்றினான். வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் என்ற உடன் பிறந்தார்கள் தங்களுக்குள் போரிட, மாலிக்காபூர் உதவப் புகுந்தது குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாயிற்று. ‘சண்டையிட்டாலும் சகோதரர் அன்றோ’ என்றும், ‘ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி’ என்றும் கருதும் கருத்தின்மையால், தமிழகத்தின் பகுதிகளை அவரவர் எளிதாகக் கைப்பற்ற முடிந்தது. டில்லி சுல்தான்களின் படைத் தலைவர்களும், ஆற்காட்டு நவாபும், விஜயநகர நாயக்கரும், மராட்டியரும் தமிழகத்திற் புகுந்தனர். ஒருகுடை நிழலில் பெரிய நிலப்பரப்பை ஆண்ட வேந்தர் ஆட்சி முறை மறைந்தது. சிற்றூர்த் தலைவர்களும், குறுநில மன்னர்களும் தத்தம் நிலப்பகுதிகளைப் பாதுகாத்துக் கொள்வதிலும், படைவலிமை மிக்க பகைவர்களுக்கு அடங்கி ஒப்பந்தம் செய்து கொள்வதிலும் நாட்டம் உடையோர் ஆயினர். மதுரை நாயக்கர், தம் ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதியை எழுபத்திரண்டு பாளையப்பட்டுகளாகப் பிரித்து அவ்வப்பகுதியில் வலிமை படைத்தவர்களைப் பாளையக்காரராக நியமித்தனர். அயலவர்கள் ஆட்சியுரிமையைக் கைப்பற்றிக் கொண்டமையால், அயல் மொழிகளும், அயற்பண்பாட்டுக் கூறுகளும் தமிழகத்தில் புகுந்தன.

2.2.1 பல்கிப் பெருகிய சாதிகள் கி.பி.500க்குப் பிறகு சாதிய வேர் ஆழமாகத் தமிழ் மண்ணில் வேரூன்றியது. கி.பி. 900க்குப் பிறகு சாதி வேறுபாடுகளும், சாதிச் சண்டைகளும் பெருகின. பொது இடங்களில் சிலரை ஒதுக்கி வைக்கும் வழக்கம் வளர்ந்து வலிமை பெற்றது. பிராமணர்கள் நிலத்தேவர் எனப்பட்டுப் பலராலும் போற்றத்தக்க மேலாண்மையினை எய்தினர். கோயில்கள் பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு உரம் சேர்த்தன. தமிழ், தமிழரின் வாழ்வில் முக்கியமான கட்டங்களிலிருந்து விலக்கி வைக்கப் பெற்றது. பெயரிடுதல், கடவுள் வழிபாடு செய்தல், இறப்புச் சடங்கு நிகழ்த்தல், திருமணம் புரிதல், புதுமனை புகுதல், பெண் பூப்பெய்தல் முதலான சடங்குகளிலெல்லாம் வடமொழி புகுந்துவிட்டது. கோத்திரம், குலம் என்பவற்றைப் பெரிய தகுதிகளாக மதிக்கும் சமுதாயம் உருவாகிவிட்டது. வலங்கைப் பிரிவு, இடங்கைப் பிரிவு எனச் சாதிகள் இருபெரும் பிரிவாகப் பிரிந்தன. வலங்கைச் சாதிகள் 98 என்றும், இடங்கைச் சாதிகள் 98 என்றும் வரலாறு பதிவு செய்துள்ளது. இடங்கையினர் வணிகரும் தொழிலாளருமாக இருந்தனர். ஒவ்வொரு சாதியினரும் மேலும் பல சாதிகளாய்ப் பிரிந்தனர். பிராமணர்கள் ஐயர், ஐயங்கார், சுமார்த்தர், வடமர் எனப் பிரிவுற்றனர். கம்மாளர் என்னும் சாதியினர் தட்டார், தச்சர், சிற்பியர், கன்னார், கருமார் எனப் பிரிந்தனர். இவர்கள் ஐவரும் ஒன்றுகூடக்கூடாது என்று சட்டம் இருந்தது. கள்ளர், மறவர், தேவர், அகம்படியர் என ஓரினத்தார் பல பிரிவு எய்தினர். கணக்குத் தொழில் பார்த்தவர் கைகாட்டிக் கருணீகர், சரட்டுக் கருணீகர், சீர் கருணீகர் எனப் பிரிந்தனர். பிரெஞ்சு அறிஞர் அப்பே துபாய் கூறுவது போலச் சூத்திரர் எனப்பட்ட பதினெட்டுச் சாதியார் நூற்றெட்டுச் சாதியார் ஆயினர். எல்லாத் தொழில்களும் சமமாக மதிக்கப்படாத நிலை மேலும் வளர்ந்தது. அழுக்கு அகற்றல், ஆடை துவைத்தல், தோல் பதனிடுதல், பிணம் சுடுதல், பறை கொட்டுதல் போன்றவை கீழான தொழில்களாகக் கருதப்பெற்று இவற்றைச் செய்வோர் தீட்டு உடையோராய் எண்ணப்பட்டனர். இந்தியா முழுமையிலும் வருண சாதிப்பாகுபாடுகளின் தாக்கம் மிகுதியானதால் படிப்படியே இந்தியாவின் ஒருமை உணர்வும் ஒற்றுமை மனப்பாங்கும் குலைந்தன.

2.2.2 ‘செயல் இழக்கச் செய்த பக்தி’ சமயம், வாழ்க்கையில் இன்றியமையாத இடம்பெற்றுவிட்ட நிலையில் புலவர்கள் சமுதாயச் சிக்கல்களை அகற்றக் குரல் கொடுக்காமல் இறைவனையே போற்றிப் பாடினர். விதியைப் பற்றிய அழுத்தமான நம்பிக்கை, தாம் எதிர்கொள்ளும் எந்தத் துன்பத்தையும், எதிர்த்துப் போராடாத ஒரு மனநிலையை உருவாக்கிவிட்டது. ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்பது இறைவனின் பேராற்றலை வலியுறுத்துவதற்கு மாறாகப் பலரையும் செயல்படாத தன்மைக்கு இட்டுச் சென்றது. பல சமயப் பிடிப்புக்குள் நின்று வாழச் சமூகம் பழகிக் கொண்டது. கோயில்களின்மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வளர்ந்தது. மன்னனைக் காட்டிலும் தெய்வம் வலியது; அது நின்று கொல்லும் சக்தியுடையது என மொழியப் பெற்றன. பக்தியே வாழ்வின் குறிக்கோளாகவும், தலைமைக் கடமையாகவும் உருக்கொண்டது. பக்தியின் பொருட்டு மனைவி, பிள்ளை, உடைமை ஆகிய அனைத்தையும் துறந்துவிடுதல் சரியானது என்ற எண்ணம் வலிவுபெறத் தொடங்கியது. பக்தி நூல்கள் பலப்பல தோன்றின. சிற்றிலக்கியங்கள், தலபுராணங்கள் பலப்பல இயற்றப்பட்டன.

2.2.3 பெண் வெறுப்பு ஓங்கி உயர்ந்திருந்த பெண்களின் நிலை இடைக்காலத்தில் சிறுமையுற்றது. தமிழர் வாழ்வுக்குப் புறம்பான செயற்கைத் துறவுநெறி பெண்களை நோய்க்கலங்களாக வருணித்தது. பெண் வெறுப்பு என்பது பெரும் புலவர்களாலும் சித்திரிக்கப்பட்டது. பட்டினத்தார், அருணகிரியார் ஆகியோரின் பாடல்களில் பெண்ணை வெறுக்கும் மனப்பாங்கு வெளிப்பட்டது. நிலையாமை உணர்வு ஏற்படுத்திய பாதிப்பு துறவாக மலர்ந்தது.

2.2.4 வர்க்கச் சமூகம் பணக்காரர், ஏழை என்ற இரண்டு இனங்கள் சமூகத்தில் என்றும் உள்ளவை. இவ்விரு வகை மக்கள் கூட்டத்தை வர்க்கம் என்பர். பெருங்காப்பியங்கள் செல்வர்களைப் பாடின. சிற்றிலக்கியங்கள் எளிய மக்களைப் பாடத் தோன்றின என்பர். ஆனால் கலம்பகம், பள்ளு, குறவஞ்சி போன்ற இலக்கியங்கள் எளிய மக்களைப் பாடுவது போன்ற தோற்றமளிப்பினும் அவர்களைப் பெருமைப்படுத்துவனவாக இல்லை. இறைவனைப் பெருமையாகப் பேசும் நிலையில், இவை எளிய மக்களின் காதல் உணர்வுகளையும், தொழில் முயற்சிகளையும் நகைப்புக்குரிய நிலையில் சித்திரித்துள்ளன. நமது பண்பாட்டில் வர்க்கம் சார்ந்த சமூக அமைப்பு உருவாவதற்குரிய சூழல் முன்னரே இருந்தது எனினும் இடைக்காலத்திலேயே அது வலிவு மிகப் பெற்றது. கல்வியாளர், சான்றோர் ஆகியோரெல்லாம் செல்வர்க்கு அடங்கிப் போகும் சமூக நிலை தோன்றிவிட்டது. நிலத்தை உழுது உண்பவன், உழுவித்து உண்பவன் என்ற இரு பிரிவு தோன்றி வளர்ந்து ஒரு நிலஉடைமைச் சமுதாயத்தையும் ஓர் அடிமைச் சமுதாயத்தையும் உருவாக்குமாறு அமைந்தது இக்காலமே.

2.2.5 பண்பாட்டுச் சீர்கேடும் வணிக நலிவும் சிற்றிலக்கியங்கள் தோன்றிய காலத்தில் தமிழர் பண்பாடு பல நலிவுகளை அடைந்தது உண்மையே. தெலுங்கு, கன்னடம், சௌராஷ்டிரம், மராட்டியம் ஆகிய மொழி பேசுவோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாகியது. ஒரு கலப்பு இனப் பண்பாடு உருவாவதற்குரிய சூழல் இக்கால நிலையில் தோன்றியது.

உடன்பிறந்தாருக்குள் அரசுரிமைச் சிக்கல், படைத்தலைவர், அமைச்சர் ஆகியோர் அரசனுக்குப் பழுது எண்ணுதல், பொருள்களின் உற்பத்திக் குறைவால் பஞ்சம், வேறு ஊர்களுக்குக் குடிபெயர்தல், விலங்குகள் ஊருக்குள் புகுந்து துன்பம் விளைத்தல், பகை அரசர்கள் ஊருக்குள் புகுந்து கொள்ளையிடுதல் ஆகியன நாயக்கர் கால ஆட்சியில் நிகழ்ந்தன என்பர் வரலாற்று அறிஞர். மார்ட்டின் பாதிரியார் என்பவர் தமிழ்நாட்டு மக்களின் அக்கால வாழ்க்கைநிலை குறித்துக் கூறுகையில்,

“மதுரை நாட்டு மக்கள் எளிமையாகவும் சிக்கனமாகவும் வாழ்ந்தார்கள். அவர்கள் பெருவாணிகம் செய்பவர்களாக இல்லை. உள்நாட்டில் கிடைக்கும் உணவு, ஆடை ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் மனநிறைவு எய்தினர்”

என்று குறிப்பிடுகின்றார் (கி.பி.1699ஆம் ஆண்டு). பெருவாணிகத்தைத் தமிழர்கள், ஆங்கிலேயர், டச்சுக்காரர், போர்ச்சுக்கீசியர் ஆகியோரிடம் படிப்படியாக இழக்கத் தொடங்கினர். தமிழ்நாட்டின் முத்துக்களும் ஆடைகளும் வணிகம் என்ற அளவில் கொள்ளை போயின.

2.3 சிற்றிலக்கியங்கள் காட்டும் சமூகச் சித்திரங்கள்

கலம்பக நூல் பதினெட்டு உறுப்புகள் கொண்டது. புயவகுப்பு, அம்மானை, கழங்கு, ஊசல், கார், வண்டு, கொற்றியார், பிச்சியார், வலைச்சியார், இடைச்சியார் என்ற உறுப்புகள் இந்நூலில் இடம்பெறும். கொற்றியார், பிச்சியார், இடைச்சியார், வலைச்சியார் ஆகிய உறுப்புக்கள் கதைச் சுவைக்காகவும் புலவரின் கற்பனைப் பெருக்கிற்காகவும் சேர்க்கப்பட்டவை. இவர்கள் வழியாக, இரு பொருள்பட மொழியப்படும் சிலேடைகள் நூலில் அறிமுகப்படுத்தப்பட்டன. பள்ளு நூலில் வேளாண் கூலியின் மதுப்பழக்கம், சக்களத்தியர் ஏசிக் கொள்ளுதல், நில உடைமையாளர் தொழிலாளியைத் தொழுவில் கட்டி அடித்தல் ஆகியன பாடப்பெறுகின்றன. குறவஞ்சி நூலில் மேட்டுக்குடியினரின் காதல், பிரிவுத் துன்பம் ஆகியன ஒருவகையாகவும் எளிய குடியினரின் காதல், பிரிவுத்துயர் ஆகியன வேறு வகையாகவும் காட்டப் பெறுகின்றன.

2.3.1 பள்ளு நூலின் காட்சி பள்ளு என்பது சிற்றிலக்கியங்களில் ஒன்று. பள்ளங்களில் வேலை செய்யும் வேளாண் தொழிலாளியைப் பற்றியது இந்நூல். உண்மையில் இந்நூல் அக்காலச் சமய மாறுபாடுகளைத் தெளிவாகக் காட்டுகின்றது. இதோ முக்கூடற்பள்ளு நூலில் வேளாண் தொழிலாளி எப்படிச் சித்திரிக்கப் பெறுகிறான் பாருங்கள்!

வேளாண் தொழிலாளி

கறுக்கும் கிடாய் மருப்பின்

முறுக்கு மீசையும் – சித்ரக்

கத்தரிகை யிட்ட வன்னக்

கன்னப் பரிசும்

குறுக்கில் வளைதடி சேர்த்து

இறுக்கும் கச்சையும் – செம்பொற்

கோலப் புள்ளி உருமாலும்

நீலக் கொண்டையும்

சறுக்கும் தொறும் குதிப்பும்

சுறுக்கும் தலை அசைப்பும்

தடிசுற்றி ஏப்ப மிட்டே

அடிவைப்பதும்

மறுக்கும் மதுவெறிகொண்டு

உறுக்கும் சிரிப்பும் தோன்ற

வடிவழகக் குடும்பன்

தோன்றி னானே.

(கிடாய் மருப்பின் = ஆட்டுக் கிடாயின் கொம்பு போன்ற, சித்ரக்கத்தரிகை = அழகான கத்தரிக்கோல், வன்னக் கன்னப்பரிசு = கன்னங்களின் இருபுறமும் சீர்செய்த முடி, வளைதடி = ஆயுத வகை, உருமால் = மேல் துண்டு)

முக்கூடற்பள்ளு நூலில் வரும் வேளாண் தொழிலாளி, ஈடற்ற பெருமாள் அன்பன். பிற சமயங்களை ஏற்றுக் கொள்ளாத இவனுடைய இரண்டாம் மனைவி, சைவ சமயத்தவள். வைணவ சமய உண்மைகளை மறுப்போரை வெட்டி வீழ்த்தத் தயங்க மாட்டேன் என்கிறான் இவன். இத்தகைய இலக்கியங்களில் நம் வேளாண் துறைப் பண்பாடு மேலோங்கித் தெரிவதை மறுக்க இயலாது. விதைகளின் வகைகள், ஏர்க்காலின் வகைகள், மாடுகளின் குணம், குறிகள் (அடையாளங்கள்), மீன் வகைகள் ஆகியன எல்லாம் தெளிவாகக் கூறப்படுகின்றன. இயற்கை வளப்பம் மிகுந்த நாட்டில் விருந்தோம்பல் தழைக்கின்றது. விருந்தோம்பல் பண்பாட்டை இயற்கையின் குறியீடாகப் புலவர் காட்டுகின்றார். “வருவிருந்தினர்க்கு உபசரிப்பது போல் தாழை சோறிட வாழை குருத்து அளிக்கும்” என்று பாடுகிறார்.

தாழை மகரந்தங்களைச் சிந்துவதும், அதற்குக் கீழே நிற்கும் வாழை தன்னுடைய குருத்து இலையை நீட்டி, சோறு போன்ற மகரந்தத் தாதுக்களைப் பெற்றுக் கொள்வதும் விருந்தினரை உபசரிப்பது போன்று தோன்றுகிறது.

2.3.2 நாணத்தைப் பலி கொடுத்த உலா இலக்கியம் உலா என்பது சிற்றிலக்கியங்களில் ஒருவகை. இந்நூலில் தலைவன் உலா வருவான். அவனை வீதியில் கண்ட ஏழு மகளிர், அவன்மீது காதல் கொண்டு புலம்புவார்கள். இவர்கள் கணிகையர் குலத்தைச் சார்ந்தவர்கள்; பொதுமகளிர். உலா நூல்களில் இத்தகு காட்சியைக் காணலாம். பெண்கள் காமுற்றதாகப் பாடுவது ஓர் உத்தியே. உண்மையில் பெண்கள் இத்தகைய மன விருப்பத்திற்கு உள்ளாகவில்லை. தமிழ்நாட்டுப் பெண்களின் பண்பாடு எந்தக் கால நிலையிலும் உயர்ந்ததாகவே இருந்திருக்கிறது. நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு என்னும் நான்கு பண்புகளும் அவர்களின் நான்கு படைகள்.

பெண்கள் மடலேறுவது என்பது நிகழ்வது இல்லை. ஆண்களே மடலேறுவர். மடலேறுதல் என்பது காதல் மிகுந்த தலைவன் தன்னுடைய காதலியைத் தான் அடைய முடியாத சூழலில் மேற்கொள்ளும் செயலாகும். பெண்ணைப் பெற்றோர் காதலுக்குத் தடையானபோது தலைவன் பனை மடலால் செய்த குதிரை ஊர்ந்து, தன் காதலியின் உருவம் தீட்டிய ஓவியத்தைக் கையில் பற்றி, ஊர்மக்கள் அறிய, இவள் என்னால் காதலிக்கப்பட்டவள் என்று அறிவிப்பான். இதுவே மடலேறுதல் ஆகும். இப்படிப்பட்ட செயலைப் பெண்கள் செய்ய இயலுமா?

கடல்அன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணிற் பெருந்தக்கது இல். (குறள், 1137)

என்று கூறுகிறார் வள்ளுவர். உள்ளத்தில் கடல் போலக் காம உணர்ச்சி இருந்தாலும் பெண்கள் மடலேற மாட்டார். அவ்வாறு ஏறாமையே பெண்ணின் பெருமையாகும். ஆயினும் பக்தி உலகில் பெண்களும் மடலேறுவதாகப் பாடுவதாக இருக்கின்ற ஓர் இலக்கிய உத்தியை இறையன்பர்கள் மேற்கொண்டனர். திருமங்கை ஆழ்வார் நாராயணனை மோகித்த பெண் மடலேறுவதாகப் பெரிய திருமடல், சிறிய திருமடல் என்ற இரண்டு இலக்கியங்களைப் படைத்துள்ளார்.

2.3.3 பெண்களைக் கவர்ச்சிப் பொருள் ஆக்கிய நூல்கள் தூது நூல்களில் பெண் காற்று, வண்டு, மயில், கிளி, மேகம், குயில் ஆகிய பொருள்களைத் தலைவனிடத்துத் தூதாக அனுப்புவாள்.

விலங்கு, பறவை, மேகம், தென்றல் காற்று போன்ற ஒன்றிடம் உரைப்பதாகவே புலவர் பாடுவர். கோவை நூல்களிலும் காதலே பாடுபொருளாய் விளங்கினும், வள்ளல் ஒருவரைப் பாடல்தோறும் பெயர் விளங்கப் புனைய வேண்டும் என்ற விருப்பமே, நூல் தோன்றக் காரணமாகும். எனவே பெண்களும், பெண்கள் பங்கு பெறும் அகப்பொருளும் கவர்ச்சிப் பொருள்களாய்ப் புலவர்களால் இலக்கியப் படைப்பிற்குக் கொள்ளப் பெற்றமையினை நாம் அறியலாம். பெண்ணைப் புனைந்து புனைந்து பாடும் பாங்கிலேயே கவிதையின் செழிப்பு விளங்கியது.

புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன்

கயலே மணந்த கமலம் மலர்ந்து ஒரு கற்பகத்தின்

அயலே பசும்பொன் கொடிநின்றது

ஓர் உருவகக் காட்சியைக் காட்டுகின்றார். கூந்தலைச் சுமந்து பிறைபோன்ற நெற்றியைக் கொண்டு, வில் போன்ற புருவங்களோடு, மீன் போன்ற கண்களையும், தாமரை போன்ற முகத்தையும், கொண்ட கொடி போன்ற பெண் என்பது இவ்வுருவகத்தால் பெறப்படும் பொருள் ஆகும்.

2.3.4 சிற்றின்ப நோக்கம் அழகு கனிந்த பொருள்களையும், ஆக்கம் தரும் பொருள்களையும் பெண்ணாய்க் காண்பது தமிழ்மரபு. நிலம், ஆறு, நிலவு ஆகியவற்றைப் பெண்ணாகச் சித்திரிப்பது தமிழ்ப் பண்பாடு. அந்நிலையில் இடைக்காலத்தில் பெண்டிரைக் குறித்த வருணனை மிகுதியாகி இருக்கின்றது. இந்த நிலை மாறி நொண்டி நாடகங்கள், விறலிவிடுதூது நூல்கள், கூளப்ப நாயக்கன் காதல் போன்றவை சிற்றின்ப வருணனை மிக்க நூல்களாகப் பிறந்தன.

2.4 மடங்களின் தமிழ்த் தொண்டு

துறவு நிறுவனங்களாகிய மடங்கள் நிறுவப்பட்டு வளர்ந்தன. இந்த மடங்கள் தொடக்கக் காலத்தில், சமய நெறி பேணுதல், சமயம் பரப்புதல், அறம் செய்தல், கோயில்களைப் பாதுகாத்தல் போன்ற செயல்களில் நாட்டம் செலுத்தின. இவற்றின் தலைவர்களான துறவியரும் கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையராகவும் இருந்தனர். நாளடைவில் இந்த மடங்களின் நோக்கமும் செயற்பாடும் தளர்ச்சியுற்றன. எனினும் சமயத் திருமடங்கள் தமிழுக்கும், சமயங்களுக்கும் ஆற்றிய பணி, வரலாற்றில் இடம்பெறத் தக்கதாகவே அமைந்தது. குமரகுருபரர், சிவப்பிரகாசர், சிவஞான முனிவர், கச்சியப்பர், மாசிலாமணி தேசிகர், சுப்பிரமணிய தேசிகர் போன்ற புலமைச் சான்றோரும், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர், வித்துவான் தியாகராசச் செட்டியார் போன்ற பெருங்கல்வியாளர்களும் திருமடங்களோடு தொடர்புடையவர்களாயிருந்து, தமிழுக்கு ஆற்றிய பணிகள் பலப்பல. திருமடங்களின் சார்பினால் சிற்றிலக்கியங்கள் பலப்பல தோன்றின. இச்சிற்றிலக்கியங்கள், சமய அடிப்படையிலான பண்பாட்டையே பெரிதும் சித்தரிக்கின்றன.

2.4.1 குமரகுருபரரின் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் குமரகுருபரர் என்னும் புலவர் தென்பாண்டி நாட்டில் தோன்றியவர். ஊமையாகப் பிறந்தவர். இறையருளால் பேசும் வல்லமை பெற்றவர். பெரும் காப்பியங்கள் இயற்றும் ஆற்றல் பெற்றவர் இவர்; இருந்தும் காலச் சூழலால் சிற்றிலக்கியங்களையே பாடினார். மதுரை மீனாட்சியைச் சிறு குழந்தையாக உருவகித்துக் குமரகுருபரர் மிக அழகாகப் பாடுகிறார். மீனாட்சி அம்மையைப் பழந்தமிழ்ப் பாடலின் பயன்; தமிழ்த் தேனின் சுவை; அகந்தை கொண்டவர் மனத்தில் அவ்வகந்தையை அழித்து ஏற்றப்படும் விளக்கு; இமயமலையில் விளையாடும் பெண்யானை; உலகம் கடந்து நிற்கும் இறைவனின் உள்ளத்தில் அழகாய் எழுதப்பெற்ற உயிரோவியம், என்றெல்லாம் மீனாட்சியம்மையைப் பிள்ளைத்தமிழில் மனமுருகிப் பாடுகிறார் குமரகுருபரர். அக்காலத்தில் இது போன்ற இலக்கியங்களில் பக்தி வளர்த்த பண்பாடு நன்கு புலனாகின்றது.

2.4.2 திருக்கோயில் வழிபாடுகளில் தமிழ் கோயில் விழாக்களில் ஊர்வலங்கள் நிகழும். அந்த ஊர்வலங்களில் தமிழ்ப் பாடல்களை, முன்னர்ப் பாடிக்கொண்டு செல்வர். பின்பு தெய்வம் ஊர்வலமாகச் செல்லும். அதன்பின்னர் வைதிகர் வேதம் பாடி நடப்பர். குமரகுருபரர் ‘இறைவன் தமிழின் பின்செல்ல, மறைகள் அவனைத் தேடி நடந்தன’ என்று கூறுகிறார். உண்மைநிலையை மாற்றி மனத்திற்கு உகந்ததாக ஆக்கிக் கொள்கிறார் குருபரர். திருக்கோயில் வழிபாடுகளில் தமிழ் இரண்டாந்தரமான இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டதை, அக்கால நிகழ்வுகள் காட்டுகின்றன.

2.5 சமயப்பூசல்

இக்காலத்தில் சமயங்களுக்குள் வேறுபாடும், சமயச் சண்டைகளும் தோன்றிவிட்டன. சைவ சமயமும் வைணவ சமயமும் கடுமையாக ஒன்றையொன்று எதிர்த்தன. சைவ வைணவப் போராட்டம் மட்டுமன்றி, வைணவ சமய உட்பிரிவுகளான தென்கலை, வடகலை ஆகிய இரண்டையும் சார்ந்தவர்கள் தங்களுக்குள் கடுமையாக மோதிக் கொண்டனர். சமய நிலையில் உயர்ந்த கோட்பாடுகள் மறைந்து, என் தெய்வம் பெரியதா, உன் தெய்வம் பெரியதா என்ற சண்டை தொடங்கிவிட்டது. சிறு தெய்வ எண்ணிக்கைகள் பெருகின. தத்துவ ஆராய்ச்சி மறைந்தது. பண்பாடு ஓரளவுக்குத் தேய்வுற்றது.

2.5.1 சிறு தெய்வ வழிபாடு இக்காலத்தில் சக்தி, மாரி, காளி, மதுரை வீரன், இருளன், முனி போன்ற தெய்வங்களின் வழிபாடு, ஊருக்கு ஊர் பெருகியது. ஒவ்வொரு கோயிலிலும், அவ்வத்தெய்வம் சார்ந்த பூசவிழா, பூரவிழா, பாவை விழா, ஆனித் திருமஞ்சனம், சித்திரை விழா, மகம், பங்குனி விழா, கார்த்திகை விழா ஆகியன கொண்டாடப்பட்டன. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து, நாயக்கர்களால் தமிழகத்தில் புகுத்தப்பட்ட தீபாவளி விழா, வரவர வலிமை பெற்றது. தெய்வங்களின் எண்ணிக்கையும், சடங்குகளின் எண்ணிக்கையும், திருவிழாக்களின் எண்ணிக்கையும் பெருகின. காளி, மாரி போன்ற தெய்வங்கள் கொடூரமானவை, தண்டிக்கும் சக்தி உடையவை என்ற கருத்துப் பரப்பப்பட்டது.

2.5.2 தத்துவ வீழ்ச்சி ஆத்மா, பரம்பொருள், நல்வினை, தீவினை போன்றவற்றைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்த நிலை மாறியது. எந்தத் தெய்வம் அருள் செய்யும்? எந்தத் தெய்வம் எதைச் செய்தால் மகிழ்ச்சி அடையும் என்ற கருத்துத் தோன்றியது. மொட்டை அடித்துக் கொள்ளுதல், தீ மிதித்தல், அலகுக் குத்தி காவடி சுமத்தல், உடம்பைத் தரையில் கிடத்திக் கோயிலைச் சுற்றிப் புரண்டு வருதல் போன்ற பல நோன்புகள் பெருகின. தெய்வத்திற்குக் கள், சுருட்டு, சாராயம் ஆகியவற்றை மக்கள் படைத்தனர். கோயில் உண்டியல்களில் காணிக்கை பெருகியது. தத்துவ ஆராய்ச்சி மறைந்து மூடநம்பிக்கைகள் பெருகின. இதனால் தத்துவங்களுக்குத் கொடுத்த முக்கியத்துவம் குறைந்தது.

2.6 தொகுப்புரை

தமிழர் அல்லாத பிறர், தமிழகத்திற்குள் புகுந்து ஆட்சி செய்யத் தொடங்கிவிட்ட நிலையில், அவர்தம் பண்பாட்டுக் கூறுகளும், மொழி வழக்குகளும், தமிழர் வாழ்விலும் தாக்கங்களை ஏற்படுத்திவிட்டன. தெலுங்குச் சொற்களும், உருதுச் சொற்களும், தமிழ்ச் செய்யுட்களிலேயே இடம்பெற்று விட்டன. கடவுள் வழிபாட்டு நெறிகளில் பல புதிய வழக்கங்கள் தோன்றின. பண்பாட்டு நிலையில், உயர் பண்புகள் என்று போற்றப்பட்டவை மதிப்பு இழந்து சடங்குகள் மதிப்புப் பெறத் தொடங்கிவிட்டன. இவற்றைச் சிற்றிலக்கியங்கள் காட்டுகின்றன.

பாடம் - 3

ஐரோப்பியர் காலப் பண்பாடு

3.0 பாட முன்னுரை

அலெக்சாண்டர் என்ற கிரேக்கப் பேரரசன் உலகின் பெரும்பகுதியைத் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தான் என்று மிகப் பழைய வரலாறு கூறும். அவனைப் போலவே ஆங்கிலேயரும் உலகின் பல பகுதிகளில் ஆட்சி செலுத்தினர். ஆங்கிலேயர் பல நூற்றாண்டுகள் உலகின் பல நாடுகளில் தங்கள் கொடியைப் பறக்க விட்டனர். சின்னஞ்சிறு நாடான இங்கிலாந்து தன் அறிவாலும் முயற்சியாலும் இந்தியா போன்ற பெருநாடுகளை வளைத்துத் தன் ஆட்சியின் கீழே கொண்டு வந்தது. ஐரோப்பியர் தம்மைக் கற்றவர், நாகரிகம் மிக்கவர் என்று கூறிக் கொண்டனர்; எனினும் பிறரை அடிமைப்படுத்துவதில் அவர்கள் மகிழ்ச்சி கண்டனர். இங்கிலாந்து ஒரு ‘கடைக்காரர்களின் நாடு’ என்று நெப்போலியன் கூறினான். அவர்களின் வாணிகமே அவர்களுக்கு நாடு பிடித்துத் தந்தது. ஐரோப்பாக் கண்டத்தில் இங்கிலாந்தே வலிமையுடையதாகத் திகழ்ந்தது. இதன் குடியேற்றம் இந்தியாவைப் பல நூற்றாண்டுகள் பாதித்தது.

3.1 ஐரோப்பியர் வருகை

மேலை நாட்டுத் தொடர்பு இந்தியாவிற்கு ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது. மேற்கிலிருந்து இந்தியாவிற்கு முதல் முதல் வந்தவர் போர்ச்சுக்கீசியர். அவருக்குப்பின் வந்தவர் டச்சுக்காரர். டச்சுக்காரருக்குப் பின்னர் ஆங்கிலேயரும் இறுதியில் பிரெஞ்சுக்காரரும் வந்தனர். இவர்கள் எல்லாரும் தங்கள் உற்பத்திப் பொருள்களுக்குரிய சந்தையாக இந்தியாவைக் கருதி வந்தனர். போர்ச்சுக்கீசியர் வாணிகம் செய்யத் தொடங்கி இறுதியில் கோவா, டையூ, டாமன் என்ற மூன்று இந்தியப் பகுதிகளை உடைமையாகக் கொண்டனர். டச்சுக்காரர் எந்த இடத்தையும் தம்வசம் வைத்துக் கொள்ளாமல் அகன்றனர். பிரெஞ்சுக்காரர் இந்தியாவை வெல்லும் முயற்சியில் ஆங்கிலேயரோடு போட்டியிட்டு இறுதியில் சந்திரநாகூர், ஏனம், மாகி, காரைக்கால், புதுச்சேரி என்ற பகுதிகளை மட்டும் கைக்கொண்ட அளவில் நின்றனர். ஆங்கிலேயரோ இந்தியாவில் பெரும்பகுதியைத் தம் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தனர். 1639இல் சென்னை அவர்களுக்குக் கிடைத்தது. படிப்படியாகத் தமிழகம் முழுதும் ஆங்கிலேயர் வசப்பட்டது. உழவு, நெசவு, இரும்பு, சர்க்கரைத் தொழில்கள் ஆங்கிலேயர் வரவால் இந்தியாவில் நசிவடைந்தன. தமிழகமே நலிவுற்றது. கோயம்புத்தூர்ப் பருத்தி இங்கிலாந்தில் ஆடையாகித் தமிழகக் கடைத் தெருவில் கொள்ளை விலைக்கு விற்கப்பட்டது.

3.1.1 தமிழகத்தில் ஐரோப்பியர் இராபர்ட் கிளைவ்

தமிழகத்தில் சென்னப்பட்டினம் என அன்று பெயர் பெற்றிருந்த சென்னையை விலைக்கு வாங்கிய ஆங்கிலேயர் தமிழ்நாடு முழுவதும் தம் ஆட்சியைப் பரப்பினர். ஆர்க்காட்டு நவாபாகிய ராஜா சாகேப்பைத் தோல்வியுறச் செய்ய ஆங்கிலேயர் தமிழரை மதத்தின் பேரால் பிரித்தனர்; சந்தா சாகேப், மகமது அலி என்ற உறவினர் தம்முள் பகை கொள்ளச் செய்தனர். சூழ்ச்சிப் போர்களாலேயே ஆங்கிலேயர் தமிழகத்தை வென்று கைக்கொண்டனர். தமிழர்களிடையே இருந்த ஒற்றுமை இல்லாமையை இராபர்ட் கிளைவ் என்ற ஆங்கிலத் தளபதி சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். இன ஒற்றுமை இல்லாமை, மதச்சண்டை, சாதிப் பிரிவினை, தீண்டாமை ஆகியனவே நம் நாடு ஆங்கிலேயர்க்கு அடிமைப்படக் காரணமாயின.

கட்டபொம்மன்

வெள்ளையரை எதிர்த்து வீரமுழக்கம் செய்த வீரபாண்டியக் கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கில் இடப்பட்டான்; மருது சகோதரர்களும் கொல்லப்பட்டனர். புலித்தேவர் மறைந்தார். வெள்ளை ஆதிக்கம் தமிழகத்தில் வலுப்பெற்றது.

3.1.2 ஐரோப்பிய ஆட்சிக்கு எதிர்ப்பு மருது சகோதரர்கள்

தமிழகத்தின் குறுநிலப் பகுதிகள் பலவும் வெள்ளையர்க்கு அடிமைப்பட்டன. வழிவழி வந்த வீரப்பண்பாடு, துப்பாக்கி பீரங்கிப் படைகளின் முன் நிற்க முடியாமல் முனை மழுங்கியது. வீரபாண்டியக் கட்டபொம்மன், புலித்தேவன், மருது சகோதரர்கள் ஆகியோரின் விடுதலை முயற்சிகள் தோல்வி கண்டன. சேதுபதி மன்னர்களில் ஒருவரான முத்துராமலிங்க சேதுபதி வெள்ளையர்களின் சிறையில் கிடந்து நலிந்து துயருற்று இறந்தார். தமிழகத்தின் இந்திய விடுதலைப் போர் வேர் கொண்டு வலுவான அமைப்பைப் பெற்றது. அயல் நாட்டினர் நம்மை ஆள்வதா என்ற உணர்ச்சி அழுத்தம் பெற்றது. துறவிகள், தவசிகள், ஞானியர், கற்ற அறிஞர்கள் ஆகியோர் இந்திய விடுதலை உணர்வை வளர்த்தனர். அவர்களில் சிலர் பணி குறிப்பிடத்தக்கது. திருப்பூர்க் குமரனின் தியாகம் தமிழர்களின் விடுதலைப் போர்வேட்கையை வெளிப்படுத்தியது. ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் அந்நிய ஆட்சியை எதிர்த்துக் கப்பலோட்டினார். வெள்ளையர்களால் நாற்பது ஆண்டுச் சிறைவாசம் அளிக்கப் பெற்றார். சிறையில் சிதம்பரனார் செக்கிழுத்தார், கல் உடைத்தார்.

இராமலிங்க சுவாமிகள்

வடலூர் இராமலிங்க சுவாமிகள் வள்ளலார் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர். சாதி மதம் கடந்த சமரச வாழ்வை உலகுக்கு உரியதாக அறிவுறுத்தியவர். வடநாட்டில் விவேகானந்தரைப் போலவே தமிழகத்தில் இராமலிங்க வள்ளலாரும் ‘கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக’ எனப் பாடி அந்நிய ஆட்சியை வெறுத்தார். தமிழ்க்கல்வி, தமிழர் பண்பாடு ஆகியவற்றின் வலிமையை எடுத்துரைக்கும் வண்ணம் அவர் எழுத்து அமைந்தது.

3.2 இந்தியப் பண்பாடு

காசுமீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் வாழும் இந்திய மக்கள் பல்வேறு மொழியினர்; பல்வேறு மதத்தினர்; பல்வேறு பழக்க வழக்கங்கள் கொண்டவர். எனினும் அவர்களின் பண்பாட்டில் ஒரு பொதுமை இருந்தது; இருக்கிறது. கணவன் மனைவி என்ற பிணைப்பும், பிள்ளைகளைக் பேணிக் காக்கும் குடும்ப உறவும், திருமணத்தை முறிக்க முடியாத விதியின் விளைவாகக் காணும் கருத்தும், பிறவிகளில் நம்பிக்கையும், அறம் தழுவிய வாழ்க்கைப் போக்கும் இப்பண்பாட்டின் அச்சாணிகள். இந்தப் பண்பாடு பல சிறப்புக் கூறுகளைக் கொண்டது.

3.2.1 இந்தியப் பண்பாட்டின் சிறப்பு இயல்புகள் வேற்றுமைகளுக்கிடையில் ஓர் ஒற்றுமை என்ற நிலையில் பல மொழிகளும், பல இனங்களும், பல மதங்களும், பல வாழ்க்கைப் போக்குகளும் நிறைந்த இந்தியா ஒரு பொதுப் பண்பாட்டைக் கொண்டிருந்தது.

இந்தியப் பண்பாட்டின் கூறுகளை இன, மத, மொழி, கால, இட வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட பொதுவான நம்பிக்கைகள், பொதுப்படையான வாழ்க்கை நெறிகள் என்ற இரண்டு பகுதிகளாகப் பார்க்கலாம். வாழ்க்கை நெறிகளுக்கு உட்பட்ட கூறுகளை நம் வசதிக்காகச் சிறு உட்கூறுகளாகக் கொள்ளலாம்.

பொதுவான நம்பிக்கைகள்

• நல்வினை, தீவினைகளில் நம்பிக்கை

• மறுபிறப்புப் பற்றிய எண்ணம்

வாழ்க்கை நெறிகள்

குடும்பம்

• வரையறுக்கப்பட்ட உரிமைகளும், இல்லறக் கடமைகளும் கொண்ட பெண்.

• தன் விருப்புரிமையுடைய ஆண்.

• குடும்ப அமைப்பில் பிடிப்பு.

• கணவன் மனைவி உறவு நிலையானது, பிறவிதோறும் தொடர்வது என்ற கருத்து.

• பொருள் ஈட்டுவதோடு, பிறர்க்கு உதவுதல், ஒப்புரவு, ஈகை போன்ற பண்புகளுக்கும் வாழ்க்கை இடமளிக்க வேண்டும் என்ற கோட்பாடு.

சடங்குகளும் நம்பிக்கைகளும்

• சமயம் சார்ந்த வாழ்க்கைச் சடங்குகளில் பற்றும் விடாப்பிடியும்

• விதியின் தீர்ப்பு என வருவதை ஏற்றுக் கொள்ளுதல்.

• காரணத்தை ஆராயாமல் சிலவற்றைப் பாரம்பரிய உணர்வுடன் பின்பற்றும் நெறி.

சாதியப் பாகுபாடு

• சாதியப் பாகுபாடுகளைத் தள்ளிவிடாமலும் அவற்றிலேயே மீண்டு விடாத அளவுக்கு அழுந்திவிடாமலும் அமைந்த ஒரு நடுவுநிலை.

• திருமணம், மகப்பேறு, தெய்வ வழிபாடு, நோன்பு, இழவு, இறந்தார், நினைவு ஆகியவற்றில் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு சாதிக்குள்ளும் சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றல்.

பிணி தீர்த்தல்

• பேய், ஆவி நம்பிக்கை

• செய்வினை, மந்திரித்தல், பில்லிசூனியம் வைத்தல் ஆகியவற்றில் நம்பிக்கை

• இலை தழை, பட்டை வேர் பிற இயற்கை மூலங்களிலிருந்து மருந்து ஆக்கிக் கொள்ளும் அறிவு.

சமயம் போற்றல்

• கோயில்களைச் சார்ந்த வாழ்க்கைப் போக்கு

• புண்ணியத் தலப்பயணம், புண்ணிய நதிகளில் ஆடுதல்.

• பெரியோரைப் போற்றுதல், மரியாதை வழக்கங்களைப் பேணுதல்.

ஆகியன எல்லாம் இந்தப் பொதுப் பண்பாட்டில் அடங்கும்.

3.2.2 தமிழர் பண்பாட்டின் சிறப்பு இயல்புகள் தமிழர்க்கே உரியன என்ற அளவில் சில பண்புகள் மேற்கூறிய இந்தியப் பொதுப் பண்புகளுக்குக் கூடுதலாகக் குறிக்கத்தக்கன.

1. கைம்மாறு கருதாமல் அறம் செய்வதை ஒரு நியதியாகக் கருதுதல்.

2. கூட்டுக் குடும்ப வாழ்வில் சண்டைகள் சச்சரவுகளுக்கிடையில் அறுந்து போகாத ஓர் இறுகிய உறவுப்பிணைப்பு.

3. எவ்வளவு தாழ்ந்த வறுமையிலும் விருந்தோம்பும் ஈரம்.

4. புலால் உண்ணுதல், உயிர்ப் பலியிடல் ஆகியவற்றுக்கிடையிலும் சீவகாருணியத்திற்கும் இடம் கொடுத்தல்.

5. எந்தச் சூழலிலும் அழிந்து போகாத மனித நேயம்.

6. சமய சாதி வட்டங்களைத் தாண்டிப் பிறரோடு உறவுக்குக் கைநீட்டும் பண்பு.

7. தம்முடைய கோட்பாடுகளையே பெரிதென்று வியந்து கொள்ளாத சமரசம்.

8. நட்பு, காதல், அன்பு, நேயம் ஆகியவற்றுக்காகத் தம்மையே பலி கொடுத்து விடும் தியாகம்.

9. அடுத்த வீடு, தெரு, ஊர் ஆகியவற்றில் உள்ளவர்களோடு விலகியிருக்க முடியாத ஒட்டுறவு.

10. மறுமை உலக வாழ்வைவிட இருக்கும் உலக வாழ்வைச் செம்மையாகப் பேணும் மனம்.

11. வறுமையில் நற்பண்புகளை இழந்து விடாத நிலை

ஆகியவற்றில் தமிழ்நாடு அதிக அழுத்தம் கொண்டிருந்தது.

3.2.3 தமிழர் பண்பாட்டில் பிற பண்பாட்டு நுழைவுகள் இரண்டாயிரம் ஆண்டுக் கால வரலாற்றில் தமிழ்நாட்டில் நுழைந்து தம் சுவடுகளைப் பதித்த அயலகப் பண்பாடுகள் பல. ஆரியப் பண்பாடு, கிரேக்கப் பண்பாடு, பிரெஞ்சுப் பண்பாடு, உருதுப் பண்பாடு, வடஇந்தியப் பண்பாடு, ஆங்கிலப் பண்பாடு எனப் பல பண்பாடுகள் தமிழரிடையே தம் பதிவுகளை ஏற்படுத்தியுள்ளன. அன்றாட வாழ்வில்,

அதிசயம், ஆச்சரியம், அநீதி, அநியாயம், உபயோகம், கிராமம், சத்து, சாட்சி, தாமதம், சுலபம்

- சமஸ்கிருதம்

தகராறு, வசூல், லாயக்கு, ரத்து

மகசூல், முகாம், பக்கிரி, மாமூல், மிட்டாய், டமாரம், சோம்பு, சொக்காய், கொலுசு, பவனி, பவிசு,

ஒட்டாரம், கண்ணராவி, லாகிரி

- அரபி

இரவிக்கை, எக்கச்சக்கம்

- தெலுங்கு

டப்பி, டப்பா, சௌடால், தாயத்து, பேமானி, பேட்டி, போணி, இனாம்,

கசகசா, கச்சா, கசாப்பு

- இந்தி

சப்பாத்தி, தமாஷ், திவால், நகாசு, கலாட்டா, ஏலம், சாவி, கோப்பை, சன்னல், அலமாரி

- உருது

மேசை, கடிதம், கிராதி, மேஸ்திரி, டிக்கெட், டிகிரி, டிபன், சினிமா, ஓட்டல், ஏக்கர், சோப்பு, பேனா,

பென்சில்

- போர்த்துக்கீசு

ஈரங்கி, ஐட்டம், ஒரிஜினல்

- ஆங்கிலம்

போன்ற சொற்கள் இன்று தமிழில் வந்து கலந்து சில சமயங்களில் விலக்க முடியாதனவாகவும் உள்ளன. இச்சொற்கள் பண்பாட்டுப் பாதிப்பையும் காட்டும். ஓட்டல், சோப்பு, சினிமா போன்ற சொற்கள் வெறும் சொற்களாக மட்டும் இல்லை. இவை தமிழர்களுக்கு நன்கு அறிமுகமானவை. தமிழர் வாழ்வில் ஆழமான பதிவை ஏற்படுத்தி உள்ளவையும் ஆகும்.

3.3 அயல்நாட்டுப் பண்பாடுகளின் தாக்கம்

தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்த பல பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டுடன் கலந்தபொழுது, தமிழர் பண்பாட்டுக் கூறுகளில் சிலவற்றைக் கொண்டும், தம்முடையவற்றிலிருந்து சிலவற்றைக் கொடுத்தும் உள்ளன. வேறு எந்தப் பண்பாட்டையும் விட ஆரியர் பண்பாடும், ஐரோப்பியர் பண்பாடும் தமிழர் பண்பாட்டைப் பெரிதும் பாதிக்கச் செய்தன. பண்பாட்டுப் பாதிப்புகள் பெரும்பாலும் மொழிகளால் ஏற்படுத்தப்படுகின்றன. சமஸ்கிருதமும், ஆங்கிலமும் தமிழர் பண்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த இருமொழிகளைப் பயன்படுத்திக் கொண்ட பிராமணர், ஆங்கிலேயர் ஆகியோர் தமிழர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்கினர். பண்பால் தம்மை மிக உயர்ந்த நிலையில் நிறுத்திக் கொண்டிருந்த தமிழினம் ஆரிய இனத்தாலும் வெள்ளை இனத்தாலும் பெரிய வீழ்ச்சியை அடையவே செய்தது.

3.3.1 ஆரியப் பண்பாடு என்ன செய்தது? வடமொழியைத் தேவமொழி என்றும், பிராமணரை நிலத்தேவர் (பூசுரர்) என்றும் உயர்த்தி ஏனையோரைத் தாழ்த்தி உரைத்த வருணாசிரமம் தமிழகத்தில் மெல்ல மெல்லக் காலூன்றி வளர்ந்து கிளை விரித்துப் பலரையும் தன் எல்லைக்குள் வளைத்துக் கொண்டுவிட்டது. நம் சமயம், ஆன்மீகம், தத்துவம் ஆகியன வருணாசிரம நெறி நுழைவதற்குரிய நல்ல வாயில்களாகிவிட்டன. எனவே சமயம் ஆன்மீகம், தத்துவம் ஆகியவற்றை எதிர்த்துப் போரிடுவதற்குரிய தேவையைக் காலம் தோற்றுவித்துவிட்டது, பெண்களின் இலட்சிய வாழ்வின் அடித்தளத்தையே அசைக்கக்கூடிய கருத்துகளை ஆரியச் சார்புடைய இதிகாசங்கள் தமிழகத்தில் பரப்பிவிட்டன.

அவையாவன:

1. பெண் ஒருத்தி கணவர் பலர்க்கு மனைவியாதல், அதனைக் கற்பறம் என்று போற்றுதல்.

2. வேறொருவனைப் பிள்ளைப்பேற்றுக்காகச் சேர்தல்.

3. வரதட்சணை அளித்தல்

தவிரவும், “ஊழையும் உப்பக்கம் காண்”கின்ற வினைத்திட்பம் போற்றிய தமிழகத்தில் தவம், மந்திரம், கழுவாய் ஆகியவை பற்றிய கருத்துகளை இதிகாசங்கள் எடுத்துரைத்தன. இவ்வகையைச் சார்ந்த கருத்துகள் வருமாறு:

1. கடுந்தவம் இயற்றி மேல்நிலை எய்திய முனிவர்களின் கோபமும் சாபமும்

2. வாள்வலிமை, வில்வலிமை போன்றவற்றைவிடத் தவமியற்றிப் பெற்ற மந்திரத் தொடர்புடைய கணைகளின் வலிமையால் பெறும் போர் வெற்றி

3. எப்படிப்பட்ட தவறுகளையும் கழுவாய் செய்து துடைத்துவிட முடியும் என்ற நிலை

இக்கருத்துகள் அனைத்திற்கும் இதிகாசங்கள் தத்துவ முலாம் பூசின.

3.3.2 ஐரோப்பியப் பண்பாடு செய்த நன்மைகள் சமஸ்கிருதத்தின் வழியாகப் புகுத்தப்பட்ட ஆரியப் பண்பாடு தமிழகப் பண்பாட்டில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. பல நூற்றாண்டுகளுக்கு அத்தாக்கம் நீடித்தது. அதிலிருந்து தமிழகம் விடுபடாத நிலையில் ஐரோப்பிய பண்பாட்டுத் தாக்கம் பல வலிமைமிக்க ஊடகங்கள் வழியாக நிகழ்ந்தது.

ஐரோப்பியர் வரவால் தமிழர் பண்பாட்டில் நிகழ்ந்த மாற்றங்களை எல்லாம் எண்ணுங்கள்!

• கல்விச் சீரமைப்பு

திண்ணைப் பள்ளிக்கூடம், அந்தந்த ஆசிரியர் வகுத்துக் கொள்ளும் பாடத்திட்டம் என்ற வகையில் ஒரு திட்டமிடாத கல்வியாக அமைந்து இருந்தது; அதனை உயர் கல்வி நிலையில் கொண்டு சென்று, பல்கலைகக்கழகங்கள் நிறுவிய பெருமை ஐரோப்பியர்க்குரியது. படித்தபிறகு பட்டம் பெறுதல், வேலை வாய்ப்புக்குரிய படிப்புகள், அப்படிப்புகளுக்குப் பாடத்திட்டங்கள், தேர்வுகள் எனக் கல்விமுறை பல வரையறைகளைப் பெற்றது. இதோ மாநிலக் கல்லூரியை நோக்குங்கள். இக்கல்லூரி முதல்வராக இருந்த ஸ்டாதம் துரையின் வெண்பளிங்குச் சிலையைப் பாருங்கள். நூற்றாண்டைக் கடந்த இந்தக் கல்லூரி, நூற்றாண்டைக் கடந்த சென்னைப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களால், பி.ஏ., பி.எஸ்ஸி., எம்.ஏ., எம்.எஸ்ஸி என்று பட்டம் பெறும் ஒரு நாகரிக மாற்றம் நம்மிடையே ஏற்பட்டது.

அது மட்டுமா? கல்வி பெரும்பாலும் பெண்ணுக்குத் தேவையில்லை என்ற கருத்து ஐரோப்பியர் வரவுக்குப் பின் மாறிவிட்டது. தமிழ்நாட்டின் முதல் பெண் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் ஐரோப்பிய நாகரிகத் தாக்கத்தால் மருத்துவராக உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. அடுப்பு நெருப்போடு மட்டும் நெருக்கமான உறவு கொண்டிருந்த தமிழ்ப் பெண்கள் இன்று அணுமின் நிலையத்தில் பணியாற்ற வாய்ப்பளித்தது ஐரோப்பியப் பண்பாட்டின் தாக்கமே.

• அறிவியல் ஏற்றம்

தமிழ்நாட்டில் பாம்புகள் மிகுதி. நல்ல பாம்பு எனும் கொடுமை மிக்க நஞ்சுடைய பாம்பு பலரால் வழிபாடே செய்யப்பட்டது. பாம்புப் புற்றுகளில் முட்டையும் பாலும் வைத்து வணங்கும் நம்பிக்கை இன்றுகூட நம் மக்களிடம் உள்ளது. இத்தகைய கொடிய பாம்புகள் கடித்தால் மருத்துவம் செய்வதை விட மந்திரித்துக் கொள்வதே தக்கது என்று தமிழர் எண்ணியிருந்தனர். கொள்ளைநோய், அம்மை போன்றவை தெய்வத்தின் சினத்தால் வந்தவை என்று கருதியிருந்தனர். இப்படிப்பட்ட நம்பிக்கைகளை அறவே நீக்கி எந்த நோய்க்கும் மருத்துவம் செய்து கொள்வது தக்கது என்ற கருத்தை ஐரோப்பிய நாகரிகம் நம்மிடையே உண்டாக்கியது. பாம்புக்கடிக்கும், வெறிநாய்க்கடிக்கும், அம்மை, கொள்ளைநோய் ஆகியவற்றுக்கெல்லாம் மருந்து கண்டுபிடித்துத் தந்தது ஐரோப்பிய அறிவியல்.

ஆழமான கிணறு :

கைப்பிடிச் சுவர் இல்லை. இதில்தான் நம் கிராமத்துப் பெண் இடுப்புமுறியத் தண்ணீர் இறைப்பாள். இதோ மணல் பரந்த ஆறு: இதில் தான் நம் முன்னோர் ஊற்றுத் தோண்டித் தண்ணீர் பெற்றனர். இப்போது ஊரெங்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குடிநீர்த் தொட்டிகள் இயங்குகின்றன.

மின்சாரம் கிராமங்களில் நிலையாக அப்பிக் கொண்டிருந்த இருளைத் துடைத்துவிட்டது. ஊரெங்கும் ஒளிமெழுகும் வழிகள் இரவைப் பகலாகக் காட்டுகின்றன. கழிப்பறை அமைப்பு இன்று தூய்மை பேணுகின்றது. இவற்றையெல்லாம் நம்மிடையே கொண்டு வந்து தந்தது ஐரோப்பிய நாகரிகமே.

• உணவு, உடைப்பழக்கங்கள்

ஐரோப்பியர் வரவால் நம் உடைகளில் தாம் எவ்வளவு மாற்றங்கள் பாருங்கள்! கால்சராய், மேலே Coat எனப்படும் குப்பாயம், அழகிய கழுத்துப்பட்டி (Tie), கால்களில் Boot எனப்படும் மூடிய காலணி, காலுறைகள் எனத் தோற்றத்திற்கு ஏற்றமும் மதிப்பும் கூட்டியுள்ள மாற்றங்கள் தோன்றியுள்ளன. உணவில் கூட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல குடும்பங்கள் இன்று பிறந்த நாள் கேக் வெட்டுகின்றன. கோதுமை ரொட்டி உணவு பரவலாகி உள்ளது. ரொட்டி, வெண்ணெய், பழக்கூழ் ஆகியவை பலரின் காலை உணவாகியுள்ளன.

• பயண வசதிகள்

ஐரோப்பியர் வரவால் பரந்த இந்த உலகம் சுருங்கி விட்டதா? வானூர்தியில் பறந்து பறந்து போய்த் தூர துருவங்களைத் தொட்டு விட்டுத் திரும்பும் வேக விளையாட்டு அல்லவா இப்போது நிகழ்கிறது! தொடர்வண்டிகள் பந்தயக் குதிரைகளைப் போல் பறக்கின்றன. பேருந்துகள் மாநிலத்தின் வெவ்வேறு முனைகளை விரைவாகத் தொட்டுத் திரும்புகின்றன.

• வேளாண் வளர்ச்சி

இதோ இந்த வயற்காட்டைப் பாருங்கள். செந்நெல் வயல்களும் கரும்புத் தோட்டங்களும், புன்செய்க் கொல்லைகளும் இவ்வளவு செழுமையாய் முன்பு இருந்தனவா? இல்லை. வீரிய விதைகள், தீவிர சாகுபடித் திட்டங்கள், ஊட்டமளிக்கும் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பருவந்தோறும் தக்க செய்நேர்த்திகள், புதிய பயிர் வகைகள் ஆகியவற்றால் இன்று வேளாண்மை மிகுந்த பயன் தருவதாக அமைந்துள்ளது.

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று

ஆனைகட்டி போரடிக்கும் அழகான தென்மதுரை

என்ற நிலை மாறி வேளாண் தொழில் இயந்திரத் தொழில் நுட்ப உதவியால் இன்று வேகப்படுத்தப்பட்டுள்ளது.

கைத்தொழில் என்பதெல்லாம் இன்று இயந்திரங்களின் உதவியால் செய்யப்பெறும் தொழிலாகி விட்டது. வீட்டில்தான் எத்தனை இயந்திரங்கள்! பழைய அம்மிக்கல் திருமணத்தின் போது மிதிப்பதற்குக் கூடக் கிடைக்காமல் போய்விட்டது.

• அச்சுப்பொறியும் அறிவு வளர்ச்சியும்

ஐரோப்பியர் வரவால் நம்மிடம் ஏற்பட்ட ஒரு பெரிய மாறுதல் அச்சுப்பொறியால் ஏற்பட்டதாகும். ஓலைச்சுவடிகளிலிருந்து மெல்ல அழிந்து கொண்டிருந்த நூல்களை அச்சுவடிவில் கொண்டு வர அவர்களின் வருகை தானே உதவியது. நில இயல், பயிரியல், விலங்கியல், உயிரியல் என்று பலப்பல துறைகளுக்குரிய நூல்கள் எழுதப் பெற்றன. தமிழில் புத்தம் புதுக்கலைகள், பஞ்ச பூதத்தின் செயல்கள் விளக்கப்பட்டன.

பொதுவாகவே அறிவு ஆராய்ச்சி ஆகியவற்றில் மக்களுக்கும் ஒரு நம்பிக்கையை உண்டாக்க ஐரோப்பியர் பண்பாடு உதவியது. பேய், பிசாசு, ஏவல், பில்லி சூனியம், வேதாளம், காட்டேறி, கருப்பு என்ற அறிவு சாராத நம்பிக்கைகள் மெல்ல நம்மை விட்டு அகன்றன.

3.3.3 ஐரோப்பியப் பண்பாடு செய்த தீமைகள் ஐரோப்பியர் வரவு அகத்திலும் புறத்திலும் நம்மிடம் பல மாற்றங்களைச் செய்துவிட்டன. அவை எல்லாவற்றையும் நன்மைகள் என்று கூறிவிடுவதற்கில்லை. நம் பண்பாட்டில் சில நலிவுகளையும் ஐரோப்பியப் பண்பாடு ஏற்படுத்திவிட்டது.

• ஆங்கில ஆதிக்கம்

இன்று தமிழனின் பேச்சைக் கவனியுங்கள். நான்கைந்து சொற்களுக்கு இடையே ஆங்கிலச் சொல் புகுந்துவிடுகிறது. அவ்வளவு ஏன்? ஒரு திரைப்படப் பாடல் கேளுங்கள்! அல்லது தொலைக்காட்சித் தொடரைப் பாருங்கள்! ஆங்கிலச் சொற்கள் கலந்து வழங்கப் பெறுதலைக் காணலாம்.

உணவு தரு விடுதிகளைக்

‘கிளப்’ என வேண்டும் போலும்!

உயர்ந்த பட்டுத்

துணிக்கடைக்கு ‘சில்கு ஷாப்’

எனும் பலகை தொங்குவதால்

சிறப்புப் போலும்!

என்று இந்த நிலையை எண்ணிப் பாரதிதாசன் வருந்துகின்றார்!

• தமிழின் நலிவு

ஆங்கிலம் தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகவும், அலுவல் மொழியாகவும், கல்வி மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் பன்னெடுங்காலம் இருக்கும் நிலை ஏற்பட்டதால் தமிழ் நலிந்தது. தமிழ் பலதுறைகளிலும் வளர்தல் தடைப்பட்டது. அறிவியலைக் கற்பிப்பதற்கு ஆங்கிலமே பொருத்தமான மொழி என்ற தவறான கருத்து நிலவியது.

ஐரோப்பியர் வாணிகத்தின் காரணமாக இந்தியாவிற்கு வந்தவர். இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், தமிழகத்திலிருந்தும், அரிய கலைச்செல்வங்களையும் மதிப்புமிக்க செல்வப் பொருட்களையும் ஐரோப்பியர் கொண்டுபோய்விட்டனர்.

• சுயமரியாதை இழப்பு

இவை மட்டுமா? ஆங்கிலேய அதிகாரிகளைத் ‘துரைமார்கள்’ என்று அழைத்த தமிழர்கள் அவர்களுக்கு வேலைக்காரர்கள் ஆயினர். தொண்டு செய்யும் அடிமைக் கூலிகளாகிச் சுயமரியாதை இழந்தனர்.

அரசியல் சூழ்ச்சி வலையால் தமிழர்களைப் பிரித்து அடிமைப்படுத்திய ஐரோப்பியர், பல பிரிவுகளைத் தமிழர்களிடையே வளர விட்டனர். பிரித்தாளும் சூழ்ச்சியால், செல்வர்களுக்குப் பட்டங்கள் கொடுத்தனர். கூலிக்காரர்களுக்கு அலுவலக வேலை தந்தனர். ஆங்கிலப் பண்பாடு உயர்ந்தது என்ற மாயையினை உண்டாக்கினர்.

உரிமைக் கிளர்ச்சி, விடுதலை இயக்க முயற்சி ஆகியவற்றை ஐரோப்பியர் நலியச் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக் கணக்கானோரைச் சிறைக்கூடத்தில் தள்ளிச் சித்திரவதை செய்தனர்.

• பரம்பரைப் பழக்கங்களின் மறைவு

அடுத்து நாம் மிகவும் ஆழ்ந்து கருதவேண்டிய ஒன்றை இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும். தமிழ்க் கல்வி, தமிழ் மருத்துவம், தமிழ்க்கலை என்பன படிப்படியாக மறக்கப்பட்டன. தமிழ்நாட்டு மூலிகைகளின் பெயர்களும், அவற்றின் மருத்துவப் பண்புகளும் நினைவிலிருந்து நீங்கிவிட்டன.

தமிழர் சீயக்காய், ஆவாரம்பொடி, பயற்றமாவு, புற்றுமண் போன்றவற்றைத் தேய்த்து ஓடும் நீரில் நீராடும் வழக்கமுடையவர்கள். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கத்தினர். இவையெல்லாம் ஐரோப்பியர் வரவால் குலைந்தன. சோப்பு, சவர்க்காரம், ஷாம்பு, முகத்திற்குப் பவுடர் என ஆடம்பர சாதனங்கள் பெருகின.

தமிழ்மக்களின் வருவாயில் குறிப்பிடத்தக்க ஒரு பங்கு புறவயமான ஆடம்பரப் பொருள்களின் பொருட்டாக வாரி இறைக்கப்படும் வழக்கம் உருவாயிற்று. புற அழகைக் கவர்ச்சியாகக் காட்டும் ஒப்பனைப் பொருள்களில் இந்தியப் பெண்களுக்கு மேலை நாகரிகத்தால் ஓர் ஈடுபாடு ஏற்பட்ட நிலையில், வலிமைமிக்க தமிழர் பண்பாட்டின் கூறுகளான சில நல்ல பழக்கங்கள் நழுவத் தொடங்கின. மஞ்சள் பூச்சு, மாக்கோலப் புனைவு, வீட்டிற்கு முன் சாணம் தெளித்தல், வாழை இலை உணவு ஆகியவை தமிழர் வாழ்விலிருந்து நீங்கி வருகின்றன. பதநீர், இளநீர், நீராகாரம் ஆகியவற்றின் இடத்தைக் காப்பி, தேநீர், ஐஸ்கிரீம் ஆகியவை பிடித்துக் கொண்டன. திருமணத்தை வாழ்நாள் பிணைப்பாகவும், இரண்டுயிரின் ஒருமைப்பாடாகவும் கருதிய நிலை தளர்ந்தது. மணமுறிவு, மணவிலக்கு ஆகியன நம்மிடையே புகுந்துவிட்டன. ‘மூன்றாவது முறையாக விவாகரத்து செய்தார்’ என்று செய்தியோடு ஒரு பெண்ணைக் குறித்து எழுதும் புதுமை தமிழகத்தில் காணப் பெறுகின்றது.

3.4 ஐரோப்பியப் பண்பாட்டின் பங்களிப்பு

தமிழகத்திற்கு வந்த ஐரோப்பியர் பலரும் தமிழர் பண்பாட்டால் ஈர்க்கப் பெற்றனர். தமிழ்நாட்டின் உணவு, உடை ஆகியன ஐரோப்பியரைக் கவர்ந்திருக்கின்றன. போப்பையரைத் திருக்குறள் நெறிகளும் திருவாசகம் காட்டும் இறையன்பும் பெரிதும் கவர்ந்தன. தமிழ்நாட்டு நிலப்பின்னணியில் இயேசுவின் வரலாற்றைப் புனைந்து பாடினார் வீரமாமுனிவர். தமிழ்நாட்டுத் தெய்வ வடிவங்களில் நடராசர் வடிவம் ஐரோப்பியரைப் பெரிதும் கவர்ந்தது. போப்பையர் தம்மை ஒரு தமிழ் மாணவன் என்று குறித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைந்தார். இல்லறநெறியில் ஆண், பெண் கொண்டிருந்த விலக்கிக் கொள்ள முடியாத உறவு ஐரோப்பியரைக் கவர்ந்தது.

3.4.1 நன்மையும் அறிவும் எத்திசையது ஆயினும் ஏற்புடையனவே

இந்தியா முழுவதும் தோன்றிய விடுதலைக் கிளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தமிழகம் தன் பங்கை உரிய வகையில் ஆற்றியது. இந்த நிலையில் தமிழர்களுக்கு அந்நியப் பொருள்கள், அந்நியத் துணி, அந்நிய நாகரிகம் ஆகியவற்றில் ஒரு மோகம் பிறந்தது.

மேற்றிசை வாழும் வெண்ணிற மாக்களின்

செய்கையும் நடையும் தீனியும் உடையும்

கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை

யவற்றிலும் சிறந்தன ஆதலின் அவற்றை

முழுதுமே தழுவி மூழ்கிடின் அல்லால்

தமிழச்சாதி தரணிமீ திராது

என்று ஒருசாராரும், வேற்று நாகரிகம், வேற்றவர் பொருள் எதனையும் ஏற்கலாகாது என ஒருசாராரும் போரிட்டு நாட்டைக் கெடுத்தனர் என்பர் பாரதியார். நன்மையும் அறிவும் எந்தத் திசையிலிருந்துவரினும் அவற்றை ஏற்றுக் கொள்ளலே தருமமென்பர் அவர். இதுவே தமிழ்ப் பண்பாடாக இருந்தது. தன் விழுமிய நாகரிகக் கூறுகளை அயலவர்களுக்குக் கொடுத்தும், பிறரிடமிருந்து கொள்வன கொண்டும் உயிர்ப்பு அறாமல் தழைத்தது தமிழ்ப் பண்பாடு.

3.4.2 புதிய இலக்கிய வடிவங்கள் ஐரோப்பியர்களின் வரவால் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் சிறுகதை, நாவல், உரைநடை, நாடகம், மேடைநாடகம் எனப் பல புதிய இலக்கிய வடிவங்கள் தோன்றின. மாயூரம் வேதநாயகம் பிள்ளை, இராஜமய்யர், மாதவையா போன்றோர் தமிழர் வாழ்வியலை இந்த இலக்கிய வடிவங்களில் சித்திரித்தனர். இவற்றின்வழி

1. பெண் அறிவும் ஆற்றலும் உடையவள்.

2. குடும்பப் பண்பையும் தமிழினப் பண்பையும் கட்டிக் காப்பவள் பெண்.

3. நீதிநெறிகளை யாரும் மறந்துவிடக்கூடாது.

4. நல்லோர் துன்பப்பட்டாலும் இறுதியில் இன்பம் எய்துவர்.

5. தெய்வம் நல்லோரைக் காக்கும்.

என்பன போன்ற கருத்துகள் சித்திரிக்கப்பட்டன. சமூகக் கேடுகளாக அக்காலத்திலிருந்த தீண்டாமை, மது அருந்துதல், சாதிக் கட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்த்துச் சிறுகதைகள் தீட்டப்பெற்றன. இந்திய விடுதலைக் கருத்தையொட்டிப் பல நாடகங்கள் எழுதவும் நடிக்கவும் பெற்றன. சமூகச் சீர்திருத்த உணர்வும் நாட்டு விடுதலை உணர்வும் வெள்ளமெனப் பொங்கிப் பரவின.

3.4.3 சமூகச் சீர்திருத்தங்கள் ஐரோப்பியர் வரவால் பெருகிய கல்வியின் காரணமாகத் தமிழக இளைஞர்களிடையே கட்டுக்களிலிருந்து விடுபடும் ஒரு மனநிலை உருவாகிற்று. வருணாசிரமம் அறிவுக்குப் பொருத்தமற்றது என்பதை உணர்ந்தனர். சாதிக் கலப்புமணங்கள், கைம்பெண் மணம் ஆகியன மேற்கொள்ளப்பட்டன.

அக்கால உலகிருட்டைத் தலைகீழாக்கி

அழகியதாய் வசதியதாய்ச் செய்து தந்தார்

இக்கால நால்வருணம் அன்றி ருந்தால்

இருட்டுக்கு முன்னேற்றம் ஆவதன்றிப்

புக்கபயன் உண்டாமோ?

என்று பாரதிதாசன் குறிப்பது போல் வருணாசிரமத்தை எதிர்த்துக் கொடி தூக்கப்பட்டது. இந்தியாவிற்கு விடுதலை வேண்டுமெனில் எல்லோரும் வேற்றுமை துறந்து ஒன்றுபட வேண்டுமென்பது வற்புறுத்தப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் அடைந்த கொடுமை ஒவ்வொன்றும் சமூக வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இதன் உச்சநிலையைச் சித்திரிப்பதாக வைக்கம் போராட்டம் அமைந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழையும் உரிமை வேண்டி இப்போராட்டத்தை முன்னின்று நடத்தினார் பெரியார் ஈ.வே.இராமசாமி. தமிழ்நாட்டில் சோழவந்தான் காந்தி ஆசிரமத்தில் பயின்ற பார்ப்பன மாணவர்களுக்கும், ஏனைய மாணவர்க்கும் தனித்தனித் தண்ணீர்ப் பானைகள் வைப்பதைக் கண்டிப்பதில் பெரியார் முன்நின்றார். பின்னர் இவர் காங்கிரசிலிருந்து விலகி நீதிக்கட்சியைச் சார்ந்து, பின் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கித் திராவிடர் கழகம் என்ற இயக்கத்தைக் கண்டார். ஓமகுண்டம், தாலிக்கயிறு, வடமொழி மந்திரம், சடங்குகள் இல்லாமல் மாலை மாற்றிக்கொள்ளும் சீர்திருத்தத் திருமணத்தை இவர் வழக்கத்திற்குக் கொண்டு வந்தார்.

3.4.4 பொது வாழ்வில் பெண்களின் பங்கு ஐரோப்பியப் பண்பாட்டின் தாக்கம் பெண்ணிய வளர்ச்சிக்கு வித்திட்டது. ஆங்கிலக் கல்வியின் பயனைப் பெறுவதில் பெண்களும் பங்கு கொண்டனர். ஆணுக்குப் பெண் நிகர் என்ற உணர்வு பிறந்தது. விடுதலைப் போராட்ட இயக்கங்கள் பலவற்றில் பெண்களும் கலந்து கொண்டனர்; முன்னின்று இயக்கங்களை நடத்தியும் சென்றனர். தென்னாப்பிரிக்காவில் இந்திய மக்களின் குடியுரிமைப் போரைக் காந்தியடிகள் தலைமை ஏற்று நடத்தினார்.

தில்லையாடி வள்ளியம்மாள்

தில்லையாடி வள்ளியம்மாள் என்ற தமிழ்ப்பெண் அப்போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். அவரின் தியாகமும் நெஞ்சுரமும் அண்ணலைப் பெரிதும் கவர்ந்தன. அவரைத் தம் பொதுவாழ்க்கையின் வழிகாட்டி என அண்ணல் பின்னர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் ஈரோடு நாகம்மை என்ற அம்மையார் விடுதலைப் போராட்டத்தில் ஒரு பெண் தலைவியாகப் பெரும்பங்கு ஆற்றினார். தென்னாட்டில் போராட்டம் நிகழ்த்த வேண்டும் என்றால் நாகம்மையாரைக் கேட்டுத்தான் கூறவேண்டும் என்று காந்தியடிகள் அவரின் தலைமையைப் பாராட்டியுள்ளார்.

3.5 தொகுப்புரை

ஐரோப்பியர் வரவு தமிழ்நாட்டின் புறக்கோலத்தை மாற்றியது. ஆயினும், தமிழகத்தின் அகப்பண்பாட்டை ஐரோப்பிய நாகரிகம் மாற்றிவிடவில்லை. உணவு உடையில் எளிமை, பற்று மிகுந்த இல்லறம், மனிதநேயம், வலிய வந்து நன்மை செய்யும் மனித உறவு ஆகியன தமிழர் பண்பாட்டுக் கூறுகளாக அமைந்து அயலவரைக் கவர்ந்தன.

பாடம் - 4

விடுதலை இயக்கம் வளர்த்த பண்பாடு

4.0 பாட முன்னுரை

மதத்தாலும், மொழியாலும், இனத்தாலும், சாதியாலும் வெள்ளையர் இந்திய நாட்டைப் பிரித்தாள முயன்றனர். பல மதங்கள், பல பண்பாடுகள், பல மொழிகள் எனப் பாகுபட்டிருந்த இப் பெருநாட்டை ஓரணியில் யார் காண முடியும் என்ற வினா எழுந்தது. ஆங்கில ஆட்சியை எதிர்க்கவும், அகற்றவும் வலிவின்றி இந்திய நாடு இருந்தது.

ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின்

வாராது போல் வந்த மாமணியைத் தோற்போமோ?

என்று பாரதி வருந்திப் பாடுவது போல, இந்தியா என்ற பாரதம் தான் வளர்த்துக் கொண்ட பண்பாடு தேய்ந்து போகுமோ என்ற கவலை கொண்டது. நாட்டைப் பற்றிய கவலை, அதைக் காத்துப் பேண வேண்டும் என்று ஆர்வத்திற்கு வித்திட்டது. ஆர்வம் அந்நியரை எதிர்க்கின்ற வீரத்தையும் அனைவரையும் ஓரணியில் கொண்டு வருகின்ற சாதனையையும் நிகழ்த்தியது.

4.1 அடிமைப் பிடியில் தமிழகம்

இந்தியா வெள்ளையர்க்கு ஏன் அடிமைப்பட்டது? வெள்ளையர்கள் அவ்வளவு வலிமை உடையவர்களா? இல்லை! ஆர்க்காட்டு நவாபு தளர்ந்திருந்த வேளையில் ஐந்நூறு பேரைக் கொண்டு பிரிட்டிஷ் கம்பெனி அவரைத் தோல்வியுறச் செய்து அப்பகுதியைப் பிடித்துக் கொண்டது. அந்த ஐந்நூறு பேரில் இருநூறு பேர் ஆங்கிலேயர்; முந்நூறு பேர் இந்தியர். இதோ திரு.வி.கல்யாணசுந்தரனார் கூறுவதைக் கேளுங்கள்.

“இந்தியாவை வீழ்த்தியது எது, பிரிட்டிஷ் வாளா? அன்று பின்னை எது? இந்திய வாளே. சாதிமதவெறி, சம்பிரதாயச் சிறுமை, கண்மூடி வழக்க ஒழுக்கம், தீண்டாமை, பெண்ணடிமை, இந்து முஸ்லீம் வேற்றுமை முதலிய இரும்பு எஃகுத்துண்டங்கள் வாளாக வடிந்தன. அவ்வாள் -அவ்விந்திய வாள் இந்தியாவை வீழ்த்தியது”

இந்தக் கருத்தே தமிழர்களுக்கும் பொருந்தும். கல்வியறிவு இல்லாமையால் எதற்கும் பயம். சிப்பியைக் கண்டால் அஞ்சும் அச்சம், மந்திரம் பில்லி சூனியம் இவற்றில் நம்பிக்கை ஆகியவற்றால் தமிழகமும் வெள்ளையர்க்கு அடிமைப்பட்டது.

4.1.1 முதல் விடுதலைக் குரல் வெள்ளையரின் ஆதிக்கத்தை எதிர்த்து முதல் விடுதலைக் குரலை எழுப்பியவன் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையப்பட்டின் சிற்றரசன் வீரபாண்டியக் கட்டபொம்மனேயாவான்.

வானம் பொழியுது பூமி விளையுது

மன்னன் கும்பினிக்கு ஏன் கொடுப்பேன்?

சீனிச்சம்பா நெல்லு ஏன் கொடுப்பேன்? அந்தச்

சீரகச்சம்பா நெல்லு ஏன் கொடுப்பேன்?

என்னைப் போல் வெள்ளாண்மை இட்டானோ துரை

இங்கிலீசு வெள்ளைக் காரனுந்தான்?

என்று நாட்டுப்புறப் பாடலில் கட்டபொம்மனின் வீரத்தை மக்கள் பாடுகின்றனர். கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள், புலித்தேவர் ஆகியோர் வெள்ளையரை எதிர்த்து வீரமுரசு அறைந்தனர். எல்லாப் பாளையக்காரரும் அன்று ஒன்றுபட்டிருந்தால் தமிழகம் வெள்ளையர்க்கு ஆட்பட்டிராது. ஒற்றுமை இல்லாமை, தமிழர்களின் பெரிய குறைகளில் ஒன்றாகும்.

4.1.2 தீவிரவாத ஆதரவு வட இந்தியாவில் கோபால கிருஷ்ண கோகலே தலைமையில் மிதவாத இயக்கமும் பாலகங்காதர் திலகர் தலைமையில் தீவிரவாத இயக்கமும் தோன்றின. பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா போன்றோர் திலகர் ஆதரவாளர்களாக இருந்தனர். சூரத் நகரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் மோதிக் கொண்டனர். வன்முறை நிகழ்ச்சிகளால் மாநாடு குலைந்தது. தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களே மிகவும் தீவிரம் காட்டினர் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. வ.ரா. என்ற விடுதலை வீரர் தமிழகத்தில் தீவிரவாதம் பின்பற்றப்பட்டது குறித்து எழுதுகையில்,

திலகர் பாரதியார் வ.உ.சிதம்பரம்

“மிதவாத வழியைப் பின்பற்றத் திலகர் உடன்பட வில்லை என்பது சரித்திரம். திலகரின் இந்தத் தீர்மானம் மனமறிந்து கஷ்டங்களை வருவித்துக் கொண்ட தீர்மானமாகும்……….. தீர்மானத்துக்கு மனம் உவந்து ஆதரவு அளித்த பெரியார்களில் பாரதியார் ஒருவர்.”

என்று கூறுகிறார். படிப்படியாகத் தீவிரவாதம் தமிழகத்தில் காந்தியடிகளின் வழிக்கு வந்து விட்டது. மிதவாதம், தீவிரவாதம் என்ற இரண்டும் காந்திய நெறியில் இயங்கும் பரிணாமம் ஏற்பட்டது.

4.1.3 காந்தியடிகளின் தலைமை தமிழகத்தில் காந்தியடிகளுக்கு முன்பே விடுதலை இயக்கம் தொடங்கி விட்டது. வ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரதியார், சுப்பிரமணிய சிவா, சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர், வ.வே.சு. ஐயர் போன்றோர் இந்திய விடுதலை இயக்கம் தோன்றப் பெரும்பணி ஆற்றினர். 1905-இல், வங்காளத்திலிருந்து விபின் சந்திரபிரபு சென்னை வந்தார். சென்னைக் கடற்கரையில் விபினசந்திர பிரபுவின் கூட்டம் நிகழ்ந்தது. கூட்டத்தின் முடிவில் அந்நியத் துணி எரிப்பு இயக்கம் நிகழ்ந்தது. பெருந்தீ மூட்டப்பட்டு அந்நியத் துணிகள் எரிக்கப்பட்டன. ஆனால் இதற்குப்பின் இந்தியா முழுதும் காந்தியடிகளின் தலைமையும் வழிகாட்டலும் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், தமிழகத் தீவிரவாதமும் காந்தியடிகளோடு ஒன்றியது. இந்த நிலையிலேயே பாரதியார்

வாழ்கநீ எம்மான்! இந்த

வையத்து நாட்டில் எல்லாம்

தாழ்வுற்று வறுமை மிஞ்சி

விடுதலை தவறிக் கெட்டுப்

பாழ்பட்டு நின்ற தாமோர்

பாரத தேசம் தன்னை

வாழ்விக்க வந்த காந்தி

மகாத்மா நீ வாழ்க! வாழ்க!

என்று போற்றும் நிலை உருவாகியது. ஆனால் இதற்குப் பல ஆண்டுகள் முன்னரே தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் காந்தியடிகள் நிகழ்த்திய உரிமைக் கிளர்ச்சியில் பங்கேற்று அவர் மனத்தைக் கவர்ந்திருந்தனர். தென்னாப்பிரிக்காவில் அண்ணல் புரிந்த கிளர்ச்சியில் பெருமளவு தமிழர் பங்கேற்றனர்; நாகப்பன், வள்ளியம்மை என்ற இருவர் போராட்டத்தில் உயிரிழந்தனர். காந்தியடிகள் பின்னாளில்

“….இப்போரில் தமிழ்மக்கள் புரிந்த துணையைப் போல வேறு எவ்விந்தியரும் புரியவில்லை. அவர்களுக்கு நன்றியறிதல் காட்ட அவர்கள் நூல்களைப் பயில வேண்டுமென்று நினைத்தேன். அப்படியே அவர்கள் மொழியைப் பயில்வதில் மிக ஊக்கமாக ஒரு திங்கள் கழித்தேன். அம்மொழியைப் பயிலப் பயில அதன் அழகை உணரலானேன்…”

என்று தம் பத்திரிகையில் எழுதியுள்ளார்.

4.2 போராட்ட நெறிகள்

தமிழகத்தில் தொன்று தொட்டு வந்தது அகிம்சை நெறி. சமண பௌத்த சமயங்களின் வரவாலும், சைவ சமயப் போதனையாலும், கொல்லாமை, புலால் உண்ணாமை ஆகியன பரவியிருந்தன. இன்னா செய்தார்க்கும் இனிய செய்யுமாறு திருக்குறள் அறிவுறுத்தியது. இந்தக் கொள்கைகளை உயிராகக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்குக் காந்தியடிகள் போதித்த அகிம்சை நெறி மிகவும் ஏற்புடையதாக இருந்தது. அது என்ன அகிம்சை என்று கேட்கின்றீர்களா? இதோ கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை கூறுகின்றார் பாருங்கள்!

குத்தீட்டி ஒருபுறத்தில் குத்த வேண்டும்

கோடாரி ஒருபுறத்தைப் பிளக்க வேண்டும்

ரத்தம்வரத் தடியால் ரணமுண் டாக்கி

நாற்புறமும் பலர்உதைத்து நலியத் திட்ட

அத்தனையும் நான் பொறுத்தே அகிம்சை காத்தும்

அனைவரையும் அதைப் போல நடக்கச் சொல்லி

ஒத்துமுகம் மலர்ந்து உதட்டில் சிரிப்பி னோடும்

உயிர்துறந்தால் அதுவேஎன் உயர்ந்த ஆசை

என்று கூறுகிறார். தன்னை வருத்திக் கொண்டு பிறரைத் திருத்துவதே அகிம்சை நெறி. அன்னி ஞிமிலி என்ற சங்ககாலப் பெண் அரசரின் கொடுமைகளை எதிர்த்து உண்ணா நோன்பால் அரசர் மனத்தை மாற்றினார். இந்த உண்ணா நோன்பு அறமே காந்தியடிகளால் ஒரு பெரிய ஆயுதமாகக் கொள்ளப்பட்டது.

4.2.1 அந்நியத் துணி மறுப்பு இந்தியத் துணி தமிழகத்திலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் 17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

‘லெக்கி’ என்ற இங்கிலாந்து வரலாற்று ஆசிரியர் என்ன சொல்கிறார் தெரியுமா?

“பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் பலவித இந்தியத் துணிகளும் சிறப்பாக மஸ்லின்களும் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அவை அந்நாட்டில் கம்பளமும் பட்டும் நெய்வோரைக் கதிகலங்கச் செய்தன. 1700-இலும் 1721-இலும் பார்லிமெண்ட்டில் சட்டங்கள் இயற்றப்பட்டு இந்தியத் துணிகள் தடுக்கப்பட்டன.”

இந்த நிலை மாறி இந்தியாவிலிருந்து பருத்தியைக் கொண்டுபோய் மான்செஸ்டர் நகரில் ஆடையாக்கி இந்தியச் சந்தைக்குக் கொண்டுவரும் நிலை தோன்றியது. கிளைவ் இந்தியா வந்தபோது இங்கிலாந்து 74,575,000 டாலர் கடனில் இருந்தது. இந்தியச் சந்தையில், இந்தக் கடன் நீங்கி இங்கிலாந்தில் செல்வம் கொழித்தது. இந்த நிலையை மாற்றவே கதர் இயக்கம் தோன்றியது. கையால் நூற்றுக் கையால் நெய்த ஆடையைப் பலரும் ஏற்றனர். அந்நியத்துணியை மக்கள் வெறுத்து ஒதுக்கினர். இதனால் இங்கிலாந்தின் பொருளாதாரம் நலிந்தது.

4.2.2 ஒத்துழையாமை ஆங்கிலேயரின் சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துப் போவதில்லை என்ற இயக்கம் தோன்றியது. தமிழகத்தில் இந்த ஒத்துழைப்பு மறுப்பு நன்கு நடைபெற்றது. 1919 ஏப்ரலில் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது.

நெருங்கிய பயன்சேர் ஒத்துழையாமை

நெறியினால் இந்தியாவிற்கு

வரும் கதி கண்டு பகைத்தொழில் மறந்து

வையகம் வாழ்க நல்லறத்தே!

என்று இந்த ஒத்துழையாமை இயக்கத்தை பாரதியார் வாழ்த்துகிறார். இளைஞர்களே! கல்லூரிகளை விட்டு வெளியேறுங்கள்! வழக்கறிஞர்களே! நீதிமன்றங்களை விட்டுவிலகுங்கள்! மக்கள் பிரதிநிதிகளே! சட்டசபைகளைப் புறக்கணியுங்கள் என்று காந்தியடிகள் கூறியதை ஏற்றுத் தமிழகத்தில் பலர் ஒத்துழையாமைப் பணியில் ஈடுபட்டனர். பலர் தாம்பெற்ற பட்டங்களைத் துறந்தனர். இந்நிலையில் காங்கிரசிலிருந்து சிலர் பிரிந்து சட்டசபைக்குள் நுழைந்து போராடலாம் என்று முயன்றனர். அம்முயற்சி தோல்வியுற்றது. வெள்ளையர் ஆட்சி தந்த பல நன்மைகளைத் தமிழக இளைஞர்கள் வெறுத்து ஒதுக்கினர்.

4.2.3 உப்பு அறப்போர் உப்புச் சத்தியாக்கிரகம்

உப்புச் சத்தியாக்கிரகம் என்ற புகழ்பெற்ற அறப்போரைக் காந்தியடிகள் வட இந்தியாவில் ‘தண்டி’ என்ற இடத்தில் நடத்தினார். உப்புக்கு வரிவிதித்ததைக் கண்டித்து எழுந்த இந்தப் போராட்டம் தமிழகத்திலும் நிகழ்ந்தது. போராட்டத்திற்குத் தலைமை தாங்கி மூதறிஞர் ராஜாஜி நடைப்பயணத்தைத் தொடங்கினார்.

வேதாரணியத்தில் உப்புக் காய்ச்ச முயன்று கைதாயினர் பலர். 1930இல் திருச்சியிலிருந்து வேதாரணியத்திற்குப் புறப்பட்ட நடைப்பயணத்தில் பாடப்பெற்ற பாட்டை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை எழுதியிருந்தார்.

கத்தியின்றி ரத்தமின்றி

யுத்த மொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை

நம்பும் யாரும் சேருவீர்!

என்று தொடங்கும் அந்தப் பாட்டு வரலாற்றுப் புகழ் பெற்றதாக விளங்கியது.

4.3 தமிழகத்தில் நல்லிணக்கம்

இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் இந்து, முஸ்லீம்களிடையே பிரிவினையை உண்டாக்கித் தாம் தொடர்ந்து இடையூறு இல்லாமல் நாட்டை ஆளலாம் எனக் கருதினர். ஆனால் இரு சமயத்தைச் சார்ந்த பெரியோரும் இதற்கு இடம் ஏற்படாதவாறு நடந்து கொண்டனர்.

இந்துக்களின் மனம் புண்படக் கூடாது என்பதற்காக முஸ்லீம்கள் பசுவதை செய்வதைக் கைவிடுவதென்று முடிவு கட்டினர். தமிழ்நாட்டில் இந்த நல்லிணக்கம் முழுமையானதாகவே இருந்தது. இந்து முஸ்லீம் கலவரங்கள் இங்கு நிகழவில்லை. 1936, 1937ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்த இசுலாமிய மாநாடுகளில் திரு.வி.கலியாணசுந்தரனார் தலைமை தாங்கி இசுலாமிய சமயச் சிறப்பையும், இசுலாமிய இந்து சமயங்கள் ஒத்துப்போக வேண்டிய தேவையையும் சிறப்பாக வலியுறுத்தியிருக்கிறார். தமிழர் பண்பாட்டில் என்றும் மதவெறி ஊடுருவியதில்லை; எனவே இங்கே ஒரு ‘நவகாளி’ நிகழவில்லை. (இசுலாமியரும் இந்துக்களும் தாம் சகோதரர் என்ற உண்மையை மறந்து, ஒருவரோடு ஒருவர் மோதி, இரத்த ஆற்றைப் பெருக்கெடுக்க வைத்த இடம் வங்காளத்தில் உள்ள நவகாளி ஆகும்.)

4.3.1 போராட்டத்தில் ஒருமைப்பாடு இந்தியா விடுதலைக்காகப் போராடியபோது அதன் மக்களிடையே வியக்கத்தக்க ஒற்றுமை உருவாகியது. சாதிபேதங்கள், மதவேறுபாடுகள் ஆகியன மறைந்து இந்தியர் எல்லோரும் ஒரு நிறை என்ற நிலை உருவாகியது.

ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்

அந்நியர் புகல்என்ன நீதி

என்று பாரதி பாடியதற்கேற்ப ஓர் ஒருமை உணர்வு பிறந்தது. தமிழகத்தில் இந்த ஒருமைப்பண்பு நன்கு வெளிப்பட்டது. காங்கிரஸ் மேடையிலே ஐயர், ஐயங்கார், ஆச்சாரியார், முதலியார், செட்டியார் எனத் தலைவர்கள் பலர் வேறுபாடின்றி உட்கார்ந்திருந்தனர். இமயமலையில் ஒருவன் இருமினால் குமரியிலிருந்து மருந்துகொண்டு ஓடுவோம் என்று பாரதிதாசன் கூறுவது போல ஓர் உணர்ச்சியடிப்படையிலான ஒற்றுமை உருவாகியது.

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்

எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு

சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே – இதைத்

தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே! -பொய்யும்

ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே!- இனி

நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே! -கெட்ட

நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே!

என்று பாரதியார் பாடும் பாட்டு இந்த ஒருமைப்பாட்டைக் காட்டும். வேறுபாடுகளை மறந்து கடலெனத் திரண்ட சமூகத்தின் ஆன்ம வலிமையை வெள்ளை அரசு எதிர்த்து நிற்க முடியவில்லை

4.3.2 வேற்றுமையில் ஒற்றுமை இந்திய விடுதலையை நோக்கமாகக் கொண்டு போராடிய காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடுகள் மலிந்தன. தமிழ்நாட்டின் மிகப்பெரிய தேசியத் தலைவராக விளங்கிய பெரியார் ஈ.வெ.இராமசாமி காங்கிரஸை விட்டு விலகினார். திரு.வி.க. தொழிற்சங்க இயக்கங்களை வளர்த்தார்; இராஜாஜியின் தலைமையோடு கருத்து வேறுபாடு கொண்டார். அன்னி பெசன்ட் அம்மையார் அயல்நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர். இவர் இந்தியாவிற்கு சுய ஆட்சி வேண்டும் என்று கிளர்ச்சி செய்தார். இவரைத் தமிழகத்தில் ஆதரித்தவர்களும் எதிர்த்தவர்களும் இருந்தனர். திலகர் தமிழ்நாடு வந்தபோது,

“அன்னி பெசண்ட் நிகழ்த்திவரும் கிளர்ச்சியால் நாட்டில் சுயராஜ்ய வேட்கை வளர்ந்திருப்பது கண்கூடு.. பெசண்ட் அம்மையார் கிளர்ச்சியால் நலம் விளைகிறதா தீமை விளைகிறதா என்று பார்த்தேன். நலம் விளைதல் கண்டேன்; துணை போகிறேன்..”

என்று மேடையில் பேசினார். பெசண்ட் அம்மையாரைத் திரு.வி.க. ஆதரித்தார்; கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம்பிள்ளை எதிர்த்தார். காங்கிரசிலேயே இவ்வளவு வேறுபாடுகள் இருக்கவும், ‘ஜஸ்டிஸ்’ கட்சி என்ற நீதிக்கட்சி சுய ஆட்சிக் கிளர்ச்சியை எதிர்த்தது. ஜஸ்டிஸ் கட்சி பிராமணர் அல்லாதார் நலத்திற்காகப் போரிட்டது. இவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் தமிழகத்தில் அமைதி நிலவும் வகையில் தலைவர்களிடையே நேசம் இருந்தது.

கொள்கைகளில் மாறுபட்டவர்களாயிருந்தாலும் தமிழகத் தலைவர்கள் மனித நேயத்தையும் சான்றாண்மையையும் விட்டுக் கொடுக்கவில்லை. எடுத்துக்காட்டுக்கு ஒன்று காணலாம். பெரியார் ஈ.வெ.இராமசாமி நாத்திகர். திரு.வி.க. ஒருமுறை பெரியார் இல்லத்தில் தங்கினார்; காலையில் ஆற்றுக்குச் சென்று குளித்துக் கரை ஏறினார். நாத்திகரான பெரியார் அவர்க்குத் திருநீறு (விபூதி) அளித்தார். திரு.வி.க. வியப்படைந்தார். பெரியார் விருந்தினர் கடமை என்றார். இந்தப் பண்பாடு தமிழரின் சகிப்புத்தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு இல்லையா?

4.3.3 தொழிற்சங்கம் கண்ட தமிழகம் 1918-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27-ஆம் நாளில்தான் தமிழ்நாட்டில் முதன் முதலில் தொழிற்சங்கம் தோன்றியது. திவான்பகதூர் கேசவப் பிள்ளை, திரு.வி.க., பி.பி. வாடியா, செல்வபதி செட்டியார், இராமாஞ்சலு நாயுடு ஆகியோர் முயற்சியில் பிறந்த இந்தச் சங்கம் தொழிலாளர் நலன்களுக்காகப் போராடியது.

“கதவடைப்பும் வேலை நிறுத்தமும் அடிக்கடி நிகழ்ந்தன. ஒவ்வொரு வேலை நிறுத்தமும் சமதர்ம வேதத்தின் ஒருபடலம் என்பது என் கருத்து”

என்று திரு.வி.க. கூறுகிறார். மார்க்சியம் என்ற பொதுவுடைமைக் கொள்கை இத்தொழிற்சங்க அமைப்பால் தமிழ்நாட்டில் வேர் ஊன்றியது. திரு.வி.க. கூறுகிறார்:

“மகம்மதுவின் தெய்வ ஒருமையும் கிறிஸ்துவின் அன்பும் புத்தர் தர்மமும் அருகர் (சமணர்) அகிம்சையும் கிருஷ்ணன் நிஷ்காமியமும் குமரன் அழகும் தட்சிணாமூர்த்தியின் சாந்தமும் பொதுமை அறத்தை வேராகக் கொண்டவை. அப்பொதுமை அறம் ஏன் ஓங்கவில்லை? சில தடைகள் மறிக்கின்றன. அவை யாவை? சாம்ராஜ்யங்கள், மடங்கள், சம்பிரதாயங்கள், கட்டுப்பாடுகள், கண்மூடி வழக்க ஒழுக்கங்கள் முதலியன. இவற்றைப் படைத்து வளர்ப்பது எது? முதலாளி தொழிலாளி வேற்றுமை. இவ்வேற்றுமையை ஒழிக்கவல்லது பொருட் பொதுமை. பொருட்பொதுமை மகம்மதுவின் தெய்வ ஒருமையும் கிறிஸ்துவின் அன்பும் பிறவும் மன்பதையில் கால் கொள்வதற்குத் துணை செய்யும் ஆற்றல் வாய்ந்தது என்னும் நுட்பம் எனக்குப் புலப்பட்டது. அதனால் மார்க்சியம் என் உள்ளத்தைக் கவர்ந்தது.”

எளியோரின் வாழ்க்கை நலம் கருதிய நோக்கில் தொழிலாளர் இயக்கம் தோன்றி வளர்ந்தமை இக்கூற்றின் வழியாக அறியலாம்.

4.4 தமிழகத்தில் விடுதலை இயக்க விடிவெள்ளிகள் - I

தமிழ்நாட்டில் இந்திய விடுதலை உணர்வை விதைத்து வளர்த்த பெருமைக்குரியவர்கள் பலர்; அவர்களில் சிலரைக் குறித்து இங்குக் காணலாம். இப்பெரியோர்கள் நாட்டுத் தொண்டிற்குத் தம்மை முழுதும் ஒப்படைத்துக் கொண்டவர்கள். தமிழர் பண்பாட்டு வரலாற்றில் இவர்களுக்குப் பேரிடம் உண்டு. எழுத்து, பேச்சு, செயல் ஆகிய மூன்றாலும் இவர்கள் செய்த பணிகள் அளவிடற்கரியன. இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழர் பங்கு கணிசமானது என்பதை இவர்கள் வரலாறு காட்டும்.

துன்பப் பழஞ்சுமையைத் – தூக்கித்

தூளாக்கி யிட்டுச் சுதந்தர பூமியில்

இன்பப் பயிர்வளர்ப்போம் – மாந்தர்

எல்லோரும் சேர்ந்து புதுமைக்கனி உண்போம்

என்று ச.து.சு.யோகியார் என்ற விடுதலைக் கவிஞர் பாடுகிறார். தமிழகத்தில் விடுதலை இயக்கக் கிளர்ச்சியில் நூற்றுக்கணக்கானவர் மடிந்தனர். பல்லாயிரவர் சிறைபுகுந்தனர். ஓர் ஒருமை உள்ளம் உருவாகிய காலமாக அக்காலம் திகழ்ந்தது

4.4.1 வ.உ.சிதம்பரமும் சுப்பிரமணிய பாரதியும் மாமன் மைத்துனன் என்று உறவு சொல்லிப் பழகியவர்கள் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் சுப்பிரமணிய பாரதியும். “சொந்த நாட்டில் பரர்க்கடிமை செய்தே துஞ்சிடோம்” என்று முழங்கியவர் வ.உ.சி.

வ.உ.சிதம்பரம் பாரதி

விஞ்ச் துரையோடு அவர் நிகழ்த்திய வீர உரையைப் பாரதியார் கவிதையாகப் படைத்துள்ளார். சிறையில் கிடந்து நலிந்த சிதம்பரம் பிள்ளைக்குச் சிலநாள் உணவு அனுப்பிய ஒருவரும் சிறைக்குள் தள்ளப்பட்டார்.

கொடுத்தனன் உணவு கொஞ்சநாள்; அதனைத்

தடுத்திட அவனைத் தள்ளினன் சிறையுள்

என்று வ.உ.சி. எழுதுகிறார். சாக்குத்துணியில் கால்சட்டை, கைச்சட்டை, குல்லா அணிந்து சிறையில் சிதம்பரம் பல தொழில் புரிந்தார்.

அவன் என்னைச் சணல்கிழி யந்திரம் சுற்றெனச்

சுற்றினேன். என்கைத் தோல் உரிந்து ரத்தம்

கசிந்தது. என்னருங் கண்ணீர் பெருகவே

திங்கட் கிழமை ஜெயிலர் என் கைத்தோல்

உரிந்ததைப் பார்த்தான். உடன் அவன் எண்ணெய்

ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாய்ப்

பகலெல்லாம் வெயிலில் நடந்து தள்ளிட

அனுப்பினன். அவனுடைய அன்புதான் என்னே!

என்று சுயசரிதையில் கூறுகிறார். விடுதலை இயக்க மென்ற வேள்விக்குச் சிதம்பரனார் தம் இரத்தத்தை நெய்யாக ஊற்றினார் எனக் கூறின் மிகை ஆகாது.

சுப்பிரமணிய பாரதி கவிதைகளால் விடுதலை உணர்வை எழுப்பியவர். தாகூரைக் காட்டிலும் பாரதியே இந்திய தேசியத்தின் குரலைக் கவிதையில் உணர்வுற எழுப்பியவர்.

மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்

மாண்பினை இழப்பரோ

என்று எல்லா இன்பங்களையும் இழந்து துன்பப்பட்டவர் பாரதி. பாரதி ஒரு பெரிய சீர்திருத்தவாதி. தீண்டாமையைக் கடுமையாக அவர் எதிர்த்தார். சாதியில் தாழ்த்தப்பட்ட தம்போலா என்பவர் வீட்டில் போய் உட்கார்ந்து அவர் உணவு உண்டார். கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்டவர்க்குப் பூணூல் அணிவித்து இன்று முதல் நீ பிராமணன் என்று கூறினார். இதோ பாரதியார் பாட்டை இசைத்தட்டிலிருந்து கேளுங்கள்.

“சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”

4.4.2 திரு.வி.க.வும் பெரியார் ஈ. வெ.ராவும் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் தமிழ்நாட்டுக் காங்கிரசில் குறிப்பிடத்தக்க தலைவர். மேடைதோறும் பேசித் தம் நாவன்மையால் தேசிய விடுதலை உணர்வை வளர்த்தவர். தமிழ்த்தென்றல் என்று இவரைச் சிறப்புப் பெயரால் குறிப்பிடுவர். திரு.வி.க. அரசியலில் சமரசத்தையும் சன்மார்க்கத்தையும் வளர்த்தவர். தமிழகத்தில் முதன் முதல் தொழிற்சங்கம் தோன்ற விதையிட்டவர். தொழிலாளர்களிடையே பண்பாட்டை வளர்த்தவர். இவர் நடத்திய தேசபக்தன், நவசக்தி என்ற இரு பத்திரிகைகளும் அக்கால விடுதலை இயக்க நிகழ்ச்சிகளைச் சித்திரிப்பன. தமிழ்நாட்டில் வகுப்பு வேற்றுமை வளராமல் தடுத்த தொண்டு திரு.வி.க.வைச் சாரும். வன்முறை இல்லாத அரசியலை, தொழிலாளர் இயக்கத்தை நடத்திய பெருமையும் திரு.வி.க. அவர்களுக்கு உண்டு. ஆயிரக்கணக்கான தொழிலாளர் வன்முறையில் இறங்க முயன்றபோது,

திரு.வி.க.

“உங்களை நோக்கி விண்ணப்பம் செய்கிறேன். கூட்டத்தை அமைதியாக நடத்தப் போகிறீர்களா? குழப்பத்தில் முடிக்கப் போகிறீர்களா? கூட்டம் அமைதியாக நடந்தால் நான் உயிருடன் வீட்டுக்குத் திரும்புவேன். இல்லையேல் இக்கடலில் பாய்ந்து உயிர் துறப்பேன். என்ன செய்யப் போகின்றீர்கள்? என்னை வீட்டுக்கு அனுப்பப் போகிறீர்களா? கடலுக்கு அனுப்பப் போகிறீர்களா?”

என்று கேட்டார். கூட்டம் அலை அடங்கிய கடலானது. இத்தகைய பண்பாட்டை வளர்த்தவர் திரு.வி.க. திரு.வி.க. அவர்களின் இல்லறம் தமிழ்ப் பண்பாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டு. ஆறே ஆண்டுகள்தாம் அவர் மனைவி வாழ்ந்தார். அக்காலத்தில் திரு.வி.க. அவருக்கு திருக்குறளைக் கற்பித்தார். பொருளின் மீது நாட்டமில்லாத அறவாழ்வு இவர்களுடையது.

பெரியார் ஈ.வெ.இராமசாமி தமிழகக் காங்கிரசின் பெருந்தலைவர்களில் ஒருவராக இருந்தவர். பெரியார் காந்தியடிகளிடம் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். திரு.வி.க. பெரியாரைப் பற்றிக் கூறுகையில்,

பெரியார் ஈ.வே.இராமசாமி

“முன்னாளில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தொண்டு செய்தவர் என்ற முறையில் எவர்க்கேனும் பரிசில் வழங்கப் புகுந்தால் முதற்பரிசில் நாயக்கருக்கே செல்வதாகும். தமிழ்நாட்டுக் காங்கிரஸ் நாயக்கர் உழைப்பை நன்றாக உண்டு கொழுத்தது. அவர் காங்கிரஸ் வெறி கொண்டு நாலாபக்கமும் பறந்து பறந்து உழைத்ததை யான் நன்கு அறிவேன்”

என்கிறார். காங்கிரசிடம் மனம் மாறுபட்டுப் பிரிய வேண்டிய சூழலில் பெரியார் ஜஸ்டிஸ் கட்சியைச் சார்ந்தார். பின் சுயமரியாதை இயக்கத்தை வளர்த்தார். பின் திராவிடர் கழகத்தை உருவாக்கினார். அவரது 70 ஆண்டுக்கால வாழ்க்கை தமிழக அரசியல் வரலாற்றில் புறக்கணிக்க இயலாத ஒன்று. தமிழர் பண்பாட்டில் சீர்திருத்தம் என்ற பகுதியில் பெரியாரே பேரிடம் பெறுவார். வைக்கம் நகரில் பெரியாரே மாபெரும் போரில் ஈடுபட்டுத் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துச் சிறை சென்றார். வைக்கம் வீரர் என்ற சிறப்புப் பெயர் பெரியாருக்கு உரியது.

4.4.3 சுப்பிரமணிய சிவாவும் வ.வே.சு ஐயரும் சுப்பிரமணிய சிவா

தமிழக விடுதலைக்குச் சுப்பிரமணிய சிவா ஆற்றிய தொண்டு மறக்க முடியாதது. வ.உ.சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் ஆற்றிய அனல் கக்கும் சொற்பொழிவுகள் வெள்ளையரசைக் கதிகலங்கச் செய்தன. சுப்பிரமணிய சிவா வெள்ளை அடக்கு முறையை எதிர்த்துச் சிறை சென்றார். சிறை வாழ்வு அவருக்குத் தொழு நோயைத் தந்தது. சிவா திலகர் வழி நின்றவர். தீவிரத் தேசியவாதம் தமிழகத்தில் வளர வழிசெய்தவர்.

வ.வே.சுப்பிரமணிய ஐயர் இலண்டனில் வழக்கறிஞர் கல்வி பயிலும் போது புரட்சி வீரர் வீரசாவர்க்கரைச் சந்தித்து அவருடைய முயற்சிகளுக்குத் துணை நின்றவர். பாரதி நடத்திய இந்தியா பத்திரிகையில் இவர் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் தேச பக்திக் கனலை வளர்த்தன. வீரசாவர்க்கர் ஐயரை ‘என் அன்பிற்குரிய ரிஷி’ என்று அழைத்துக் கடிதம் எழுதியுள்ளார். மணியாச்சியில் ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்ற புரட்சி இளைஞர் வாஞ்சிநாதனுக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்தவர் ஐயர்தான் என்று கூறப்படுகிறது. ஐயர் திருக்குறளை அழகாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். திரு.வி.க.விற்குப் பிறகு தேசபக்தன் நாளிதழ் பொறுப்பை ஏற்றார். ஐயரின் விடுதலை இயக்கப் பணிகள் தமிழக விடுதலை வரலாற்றில் முக்கிய பக்கங்களாகத் திகழ்கின்றன.

4.5 தமிழக விடுதலை இயக்க விடிவெள்ளிகள்-II

மேற்கூறியவர்களைத் தவிர மேலும் பலர் இந்திய விடுதலை இயக்கப் பணிகளில் குறிப்பிடத்தக்கவர் ஆவர். அவர்களைக் குறித்துக் கீழ்வரும் பிரிவுகளில் சில செய்திகளைக் காணலாம்.

4.5.1 வள்ளியம்மையும் நாகம்மையும் இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் சார்பாகப் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். அவருள் குறிப்பிடத்தக்கவர்கள் தில்லையாடி வள்ளியம்மையும் ஈரோட்டு நாகம்மையும் ஆவர். தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் இளமைப் பருவத்திலேயே காந்தியடிகள் நிகழ்த்திய உரிமைப்போரில் கலந்து கொண்டு சிறை சென்றார். பதினாறு வயதுப் பெண்ணான வள்ளியம்மை இப்போரில் காட்டிய மனஉறுதி காந்தியடிகளைக் கவர்ந்தது. இப்பெண் இளம்வயதில் இறந்து விட்டாள். பின்னர் காந்தியடிகள் தமிழகம் வந்தபோது தில்லையாடி கிராமத்திற்கு வந்து வள்ளியம்மையை நினைவுகூர்ந்து நெகிழ்ந்தார்.

ஈரோட்டு நாகம்மையார் பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களின் துணைவியார். தம் கணவரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுச் சிறைபுகுந்தார். ‘தென்னாட்டில் போராட்டம் நிகழ்த்த வேண்டுமாயின் ஈரோட்டு நாகம்மையாரைக் கேட்டுத்தான் கூற வேண்டும்’ என்று காந்தியடிகள் ஒரு முறை கூறினார்.

4.5.2 இராஜாஜியும் சத்தியமூர்த்தியும் ‘இராஜாஜி’

இராஜாஜி என் மனசாட்சியின் குரல் என்று ஒரு முறை காந்தியடிகள் கூறினார். சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் என்ற பெயர் இராஜாஜி எனப் பலராலும் மதிப்போடும் அன்போடும் கூறப்பெற்றது. தீண்டாமை, மது ஆகிய தீமைகளை இராஜாஜி மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடினார்.

“இராஜகோபாலாச்சாரியாரும் யானும் கதராண்டியானோம். (கதர்த் துணியை உடுத்தியமையால்) அரசராயிருந்த ஆச்சாரியார் ஆண்டியானார். சத்தியாக்கிரகப் போர்க்களத்தில் நின்றோம்.”

என்று திரு.வி.க. எழுதுகிறார். நீண்ட சிறைவாசத்தை இராஜாஜி மனமுவந்து ஏற்றார். உப்பு சத்தியாகிரகத்தில் தமிழகத்தின் தலைவராயிருந்து வேதாரண்யத்தில் இவரே இக்கிளர்ச்சியை நிகழ்த்தினார். விடுதலை பெற்ற இந்தியாவில் இராஜாஜி கவர்னர் ஜெனரலாகவும் பின்பு தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் பணியாற்றினார்.

தீரர் என்று போற்றப்பட்ட சத்தியமூர்த்தி தமிழ்நாட்டுக் காங்கிரசை வளர்த்தவர். சத்தியமூர்த்தி மேடைப் பேச்சில் வல்லவர். சட்டமன்றத்தில் சத்தியமூர்த்தி ஆற்றிய பணி பலரைக் கவர்ந்தது. பெருமைக்குரிய தமிழக முதல்வராக இருந்த கர்மவீரர் காமராஜ் சத்தியமூர்த்தியால் உருவாக்கப் பெற்றவர் ஆவர்.

4.5.3 பத்திரிகை வளர்த்த பண்பாடு இந்திய விடுதலை இயக்கத்திற்குப் பல பத்திரிகைகள் பெருந்தொண்டு புரிந்தன. மகாகவி பாரதியின் இந்தியா பத்திரிகை விடுதலைக் கிளர்ச்சியைக் குறித்துப் பல செய்திகளை மக்களுக்கு வழங்கியது. பாரதியாரே முதன் முதல் அரசியல் கார்ட்டூன் வரைந்தவர். இந்தியா பத்திரிகை வெளியிட்ட உணர்ச்சிமிக்க சொற்பொழிவுகள், கட்டுரைகள் பெருந் தீயெனப் பரவின. இப்பத்திரிகை ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டது. திரு.வி.க. நடத்திய தேசபக்தன் வெள்ளையரால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. நவசக்தி என்ற ஏட்டில் திரு.வி.க. அரசியல், சமுதாயம், தொழிற்சங்கம் குறித்த செய்திகளை வழங்கினார். ஜி.சுப்பிரமணிய ஐயர் என்ற தேசபக்தர் பாரதியாரை சுதேசமித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராக்கினார். சுதேசமித்திரனில் பாரதியார் தலையங்கம் எழுதியதில்லை. இதைப் பற்றித் தேச பக்தர் வ.ரா. -

“அய்யர் பாரதியாரைத் தலையங்கம் எழுதும்படி விட்டதில்லையாம். அரசியலில் பாரதியார் அதிதீவிரவாதி என்ற சாக்கே தலையங்கம் எழுதாதபடி அவர் தடுக்கப்பட்டதற்குக் காரணமாயினும், வேறு விஷயங்களைப் பற்றிக் கூடப் பாரதியார் சொந்தமாகக் கட்டுரைகள் எழுதும்படி விடப்பட்டதில்லையாம்”

என்று கூறுகிறார். இந்தக் கட்டுப்பாட்டாலேயே பாரதி மித்திரனைவிட்டு வெளியேறினார். இந்தியா பத்திரிகை அவருடைய வீர சாகசங்களை வெளிப்படுத்தியது. ஆனந்தவிகடன், கல்கி பத்திரிகைகளின் வாயிலாகப் பேராசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆற்றிய பணிகள் மிகச் சிறந்தவை. நையாண்டி செய்யும் போக்கில் வெள்ளையர்களின் நிர்வாகத்தைக் குத்திக் காட்டிய அவருடைய எழுத்தாற்றல் பலரால் சுவைக்கப்பட்டது. வ.வே.சு.ஐயர், டி.எஸ்.சொக்கலிங்கம், இந்து பத்திரிகை ஆசிரியர் கஸ்தூரிரங்க ஐயங்கார் ஆகியோர் பத்திரிகை ஆசிரியர்களாக ஆற்றிய பணிகள் மிகவும் குறிப்பிடத்தக்கன. தமிழ்நாட்டுப் பத்திரிகை உலகம் பல தடைகளையும் அடக்கு முறைகளையும் தாண்டி விடுதலை உணர்வை மக்களிடையே எழுப்பியது. அடிமை என்ற நிலை மாறி உரிமை மிக்க வாழ்வு மலர இவை செய்த பண்பாட்டுப் புரட்சி வரலாற்றில் என்றும் நின்று நிலவுவதாகும்.

4.6 தொகுப்புரை

இருநூற்றாண்டுக் கால அடிமை வாழ்வு ஒரு பேரிருளை இந்தியாவில் உண்டாக்கிவிட்டது; தமிழகமும் இச்சிக்கலில் தவித்தது. இதனை அகற்ற நிகழ்ந்த நிகழ்ச்சிகள், இவ்விருளை அகற்றப் போராடினோர் ஆகியோரைப் பற்றி அறிமுக நிலையில் சில செய்திகள் கூறப்பட்டன. விடுதலை இயக்க வரலாறு மிகப் பெரியது; பல பரிமாணங்கள் கொண்டது. இவற்றைப் பல நூல்கள் வழியாக அறியலாம்.

பாடம் - 5

நிகழ்காலப் பண்பாடு

5.0 பாட முன்னுரை

நீண்ட கால அடிமை இருளிலிருந்து இந்தியா விடுதலை பெற்றது. கி.பி.1947ஆம் ஆண்டு ஆகஸ்டு பதினைந்தில் தன் விடுதலைப்பாட்டை இந்தியா வானவெளியெலாம் ஒலிக்க முழங்கியது. ‘இரவில் வாங்குகின்றனர் என்று விடியுமோ’ என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அன்றே பாடியதை இன்றும் புதுக்கவிதை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மாநிலங்கள் மத்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்பில் புதிய இந்தியாவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டன. மொழிவழி மாநிலங்கள் தவிர்க்க முடியாத தேவையாகி மாநிலங்கள் பிரிவுபட்டன. இன்றுவரை மாநிலங்களின் பிரிவுகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. மாநிலங்களின் எல்லைகள் சிக்கலுக்குள்ளாயின. இவ்வாறு ஒரு பெரிய கூட்டமைப்பிலிருந்து துண்டு துண்டாக மொழி அடிப்படையிலான பிரிவுகள் பிறக்கும் ஒரு நிலை தவிர்க்க முடியாத ஒன்றாக உருவாகிவிட்டது. அவ்வாறு உருவான பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான பண்பாடு அமைந்திருப்பது தெளிவாகப் புலனாகியது.

5.1 பண்பாட்டு வளர்ச்சியில் இடர்ப்பாடுகள்

மொழி சார்ந்த பண்பாடுகளை வளர்க்க உதவும் என்ற பெருநோக்கில்தான் மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப் பெற்றன. ஆனால் தமிழ்நாட்டில் மாறாகப் பண்பாட்டு வளர்ச்சியைத் தடுக்கும் இடர்ப்பாடுகள் தாம் இன்று மிகுந்துள்ளன. தமிழ் மொழி புழங்க வேண்டிய துறைதோறும் மாற்று மொழிகளின் ஆதிக்கம், தமிழ்ப் பயன்பாட்டில் வேற்றுமொழிச் சொல்லாட்சி, சாதிய அரசியல், கட்சிப் பூசல் என மொழியின் ஆக்கத்தையும் பண்பாட்டின் தரத்தையும் சிதைக்கும் பழக்கங்கள் தமிழ்நாட்டில் நிலை கொள்ளத் தொடங்கின.

5.1.1 ‘தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’ “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” என்று காலம் காலமாகச் சொல்லிக் கொண்டிருந்த நிலை மாறியது. வேங்கடம் ஆந்திர மாநிலத்திற்கு உரியதாயிற்று. மாலவன் குன்றம் (திருப்பதி) வடஎல்லை என்ற நிலை மாறி வேலவன் குன்றமாகிய திருத்தணி வடஎல்லையாயிற்று. தேவிகுளம் பீர்மேடு கேரள மாநிலத்திற்கு உரியவை ஆயின. எல்லைகள் குறுகுதல் பற்றிய கவலை தமிழர்க்கு இருந்தது. ஆனால் அதனைவிடப் பெரிய இடர்ப்பாடு தமிழர்க்கு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் ஆங்கிலம்; அலுவலகங்களில் ஆங்கிலம்; மத்திய அரசுத் துறைகளில் இந்தி; இசையில் தெலுங்கு; வழிபாட்டில், மணவினைகளில் இழவுச்சடங்குகளில் சமஸ்கிருதம் என்று அயல்மொழிகள் தமிழர் வாழ்வின் மூச்சுக்குழலை நெருக்கின.

மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை?

தோப்பில் நிழலா இல்லை?

தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த்தெருவில்

தமிழ்தான் இல்லை

(தணிப்பரிதாம் = தணிப்பு அரிதாம், தணிப்பது (நீக்குவது) அரிதானதாகும்.)

என்று பாரதிதாசன் கூறுமாறு ஆயிற்று.

நிலப்பரப்பில் தமிழ்நாடு சில பகுதிகளை இழந்தது. தமிழ் மொழி வழங்கும் இடங்களும் சுருங்கியமையால் பலவகையான நெருக்கடிகளுக்கு ஆளாகித் தமிழர் தம் அடையாளத்தை இழந்துகொண்டு இருக்கும் நிலை நிகழ்காலத்திற்குச் சொந்தமாயிற்று. பெரும்பான்மையான தமிழர்கள் நிலம், மொழி ஆகியவற்றில் ஏற்பட்ட இழப்புகள் குறித்துக் கவலைப்படவில்லை.

5.1.2 ‘தமிங்கிலம்’ எல்லை குறுகிய தமிழகத்தில் பேச்சிலும் எழுத்திலும் தமிழ் பல திரிபுகளைப் பெற்றது. தூய தமிழ் என்பது மிக அரிதாக ஆயிற்று. ஆங்கிலம் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் அளவற்றதாகி விட்டது. பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசவும் எழுதவும் பெரும்பான்மையான தமிழர்கள் எந்தவிதமான மறுப்பும் காட்டவில்லை. தமிழும் ஆங்கிலமும் கலந்த ஒரு பேச்சு வழக்கு உருவாயிற்று. காசி ஆனந்தன் கூறுவது போலத் தமிங்கிலம் என்ற புதிய மொழியும் உருவாகிவிடும் சூழல் இன்றைய தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. இந்தி எதிர்ப்பு, தமிழ்வழிக் கல்வி முனைப்பு, தமிழிசை மன்றப் பணிகள், தமிழ் மக்கள் இசைவிழா, தமிழ் வழிபாட்டியக்கப் போர், தமிழ் ஆட்சிமொழி அறிவிப்பு, தமிழ்த் திருமணங்கள், சுயமரியாதைத் திருமணங்களும் குடும்ப நிகழ்வுகளும் எனப் பெருகிய முயற்சிகளெல்லாம் முழுதுமாகப் பயன் தந்தன எனக் கூற இயலவில்லை. தன் பண்பாட்டின் மீது நிகழ்ந்த படையெடுப்புகளைத் தமிழன் எதிர்ப்பேயின்றி ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டான்.

5.1.3 சாதிய உணர்வு தமிழரிடையே சாதியம் அழுத்தமாக வேரூன்றிக் குருதியின் பண்பென நிலைபெற்றுவிட்டது. சாதிச் சங்கங்கள் அரசியலிலும் சமூக வாழ்விலும் பெரும்பங்கு பெற்றுவிட்டன. மெல்ல மெல்ல அரசியல் சக்கரத்தின் அச்சாணியே சாதிதான் என்று கூறும் நிலை உருவாகியிருக்கிறது. சாதியைக் கண்டறிந்து கொள்வதில் தமிழன் அதிக நாட்டமுடையவனாக இருக்கிறான். அறிவியல் வளர்ந்த இருபதாம் நூற்றாண்டில் சாதிக் கலவரங்கள் ஆங்காங்குத் தோன்றி விடுகின்றன. அரசு சாதிய உணர்வை அழிக்கப் பல முயற்சிகளைச் செய்து வருகின்றது. கலப்பு மணங்கள், சமபந்தி விருந்துகள், சமத்துவபுரங்கள், பொதுச் சுடுகாடுகள் எனப் பல திட்டங்கள் உருவாக்கப் பெற்றுள்ளன. எனினும் இவற்றை மீறிச் சாதி உணர்ச்சி பெருகி உள்ளது. படிக்காதவர்களைவிடப் படித்தவர்களிடையே சாதி உணர்ச்சி வலிமையாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சாதியம் என்ற இந்தப் பண்பாட்டுக் குறையைக் களைந்து கொள்ளத் தமிழர்களால் முடியும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என வாழ்ந்தவர்கள் அவர்கள். ‘கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்’ எனக் கேட்டவர்கள் அவர்கள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என அறிவுறுத்தியவர்கள் அவர்கள். ‘சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே’ என வருந்தியவர்கள் அவர்கள். இன்று சாதிக் கலப்பு மணங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. சாதி பார்க்காமல் ஏனைத் தகுதிகளைப் பார்த்து மணம் செய்து கொள்வோர் எண்ணிக்கை மிகுதியாயுள்ளது. பெரியாரின் நீண்ட காலப் பேருழைப்பின் பயன் இது எனக் கூறவேண்டும்.

5.1.4 கட்சிப் பூசல்கள் ஒரு காலத்தில் தமிழன் மதத்தால் வேறுபட்டுப் பகையும் வெறுப்பும் தம்முள் வளர்த்து மடிந்தான் எனில், இன்று அரசியல் கட்சி பேதங்களால்தான் சமுதாய வீதியில் குருதியாற்றை உருவாக்கி யிருக்கிறான். கட்சிப் போர்களால் சமூக ஒழுக்கமும், தமிழர் பண்பாடும் சிதைந்திருக்கின்றன. பொதுத் தொண்டு என்ற நிலையிலிருந்து அரசியல் நீண்ட தொலைவு விலகிவிட்டது. பதவிக்காக எதையும் இழக்கவும், எதையும் செய்யவும் துணிந்த சமூகநிலை இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருப்பது போலவே தமிழகத்திலும் இருக்கிறது. அரசியல் காரணமாகப் படுகொலைகள் நிகழ்கின்றன. ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்ய முடியும்’ என்ற நிலை மாறிவிட்டது. தேர்தல்களில் பணம், சாதி,  வன்முறை ஆகியவற்றின் செல்வாக்கு  தவிர்க்க இயலாமல் மிகுந்து கொண்டிருக்கின்றது. அரசியலில் அவ்வப்போது தவறு செய்பவர்களைக் குறித்து ஆய்வு செய்து தீர்ப்பு வழங்குவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் வழக்கம் நாடெங்கும் இப்போது உள்ளது அல்லவா? இதனால் அரசியல்வாதிகளின் ஊழல்கள் ஓய்வுபெற்ற நீதிபதிகளை யெல்லாம் மீண்டும் பணிக்குக் கொண்டு வந்திருக்கின்றன. கலவரத்தை ஏற்றுக்கொள்ளாத உள்ளங்கள் தேர்தல் வாக்குச் சாவடிகளைப் புறக்கணித்த நிலையில் பெட்டியில் விழும் வாக்குச் சீட்டுகளின் விழுக்காடு கணிசமாகக் குறைந்துள்ளது. அடிக்கடித் தேர்தல் என்பதை மக்கள் ஏற்காத நிலை உருவாகியிருக்கிறது.

5.2 தமிழர் பண்பாட்டில் நலிவு சேர்த்தவை

தமிழர் பண்பாட்டில் மிகப்பெரிய அளவில் நலிவுகளை உண்டாக்கியவை திரைப்படங்கள், அரசியல் கட்சிகள், வன்முறைக் கருத்தில் நம்பிக்கை கொண்ட கூட்டங்கள், மது அருந்துவதைத் தவிர்க்க முடியாத பழக்கமாகப் பழகிவிட்ட சமூகம் ஆகியன தமிழர்கள் சமூகத்திற்கு இன்று மிகப்பெரும் நலிவு சேர்த்து வருகின்றன. பொருள் தேடுதலில் பல குறுக்கு வழிகளை இன்றைய சமூகம் நாடியிருக்கிறது. குற்றம் செய்வதில் ஓர் உறுத்தலை இன்றைய மனச்சாட்சி இழந்திருக்கிறது. தன் நெஞ்சு தன்னைச் சுடும் என்பது எல்லோருக்கும் அமைந்த பொது இலக்கணமாக இல்லை. பொது நிலையில் தனி மனித ஒழுக்கம் பெரிதும் இறங்கிய நிலை எய்தியிருக்கிறது.

5.2.1 திரைப்படம் மிகப்பெரிய அறிவியல் சாதனங்களாகப் பயன்படக்கூடும் எனக் கருதப்பெற்ற திரைப்படம், தொலைக்காட்சி ஆகியன இன்று தமிழனுக்கு பொழுதுபோக்குக் கருவிகளாகி அவனுடைய உண்ணும் நேரம் உறங்கும் நேரத்தையும் பறித்துக் கொண்டுவிட்டன. திரைப்படமே தமிழனின் பண்பாட்டு முதுகெலும்பாகிவிட்டது. திரைப்படத்தில் வருவன எல்லாம் உண்மையாக நிகழக்கூடுமென அப்பாவிப் பாமரத் தமிழன் நம்புகிறான். திரைப்பட நடிகர்களைத் தமிழன் வழிபாடு செய்கிறான். திரைப்பட நடிகைகளின் அழகை ஆராதிக்கிறான்; நடிகைக்குக் கோயிலே கட்டியவன் தமிழன் என்ற ‘பெருமை’யை அறுவடை செய்திருக்கிறான். தொலைக்காட்சியை ஓர் அறிவூட்டும் கருவியாக மாற்றிக் கொள்ளத் தமிழன் எண்ணவில்லை.

5.2.2 வன்முறைப் பண்பு தமிழனிடத்தில் முன் எப்போதுமில்லாத அளவுக்கு வன்முறைப் பண்பில் நம்பிக்கை வளர்ந்துள்ளது. மறியல்கள், வேலை நிறுத்தங்கள், பணி செய்வாரைச் செய்யவிடாது தடுக்கும் செயல்கள், கதவடைப்புகள், வழக்குகள் எனப் பிணக்கு மனப்பாங்கு பெருகியுள்ளது. உலக முழுவதும் இவை இருந்தாலும், வழிவழியாக அறநெறிவழி ஒழுகும் மனச்சான்றுடைய தமிழினமும் காலவயப்படவேண்டுமா என்பதே நம்முன் தோன்றும் வினா. புரட்சி என்பது மனமாற்றத்தால் விளைவது; குறிப்பிட்ட மாற்றத்தைச் சமூகத்தில் உண்டாக்க முனைவது. ஆழ்ந்த சிந்தனை உடையவர்களே சமூகத்தின் நன்மை கருதிப் புரட்சிகளைக் கொண்டுவரமுடியும். உடல் வலிமையாலும், கலவரம் செய்யும் நோக்கத்தாலும் நன்மைகளை அடைந்துவிடக் கருதுபவர்கள் புரட்சியாளராக ஆக மாட்டார்கள். இவர்கள் செய்வது கலகம் ஆகும். இத்தகைய கலக மனப்பாங்கு தமிழகத்தில் பல இடங்களில் உருவாகியிருக்கிறது. இதன் விளைவாகத் துப்பாக்கிச் சூடுகள், நீதி விசாரணைகள், உயிரிழப்புகள் போன்றவை நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. உடல் வலிமை மிக்க சிலருக்குச் சான்றோர்களின் கூட்டம் அஞ்சி நடுங்கி ஒடுங்கிப் போகும் நிலை உருவாகியிருக்கிறது.

5.2.3 மது, போதை, பாலுணர்ச்சி இந்தியாவில் பல மாநிலங்களில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்த இயலாது போனது போலவே தமிழகத்திலும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த இயலவில்லை. சமயங்கள், அறநிறுவனங்களெல்லாம் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து, இளங்கோவும் சாத்தனாரும் எண்ணியது போல இன்று எண்ணவில்லை. விதை நெல்லாகவும் நாற்றாகவும் அமையும் இளைஞர் கூட்டம் போதை மருந்துக்கு இரையாகி வருகிறது. பாலுணர்ச்சிக் குற்றங்கள் எண்ணிக்கையில் கூடி வருகின்றன. இவையெல்லாம் தமிழர் பண்பாட்டில் இன்று படிந்துள்ள கறைகள்; குறைகள். இவற்றைக் கழுவித் துடைக்கவும் நீக்கவும் தமிழர்களால் முடியும். தமிழகம் சிற்சில போது தவிர ஏனைய காலங்களில் எல்லாம் அமைதிப் பூங்காவாகவே இருந்திருக்கின்றது.

5.3 நம்பிக்கை தரும் சில நிகழ்வுகள்

மேற்காட்டிய சிலவற்றை நீக்கிக் கண்டால் தமிழர் பண்பாட்டில் இன்று ஒளிமிகுந்த பக்கங்கள் பலப்பல உருவாகியுள்ளன. வழிமாறிச் செல்லும் சமூக சிந்தனைகளை நெறிப்படுத்த அரசும், சமூக உணர்வு கொண்ட அமைப்புகளும் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளால் நம்பிக்கை தரும் மாற்றங்கள் தொடங்கியுள்ளன. ஒருங்கிணைந்த சமூக முன்னேற்றம், மனிதநேயம், சமய நல்லிணக்கம், பெண்ணிய வளர்ச்சி போன்றவை குறிப்பிடத்தக்கன.

5.3.1 சமூக ஒருமை உணர்வு தமிழர் பண்பாட்டில் இன்று ஒளி மிகுந்த பக்கங்கள் பலப்பல உருவாகியுள்ளன என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். தாழ்த்தப் பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்டவர்களாகவும் சமுதாய வீதியில் புறக்கணிக்கப்பட்டவர்கள் இன்று கணிசமாக முன்னேறியுள்ளனர். தீண்டாமையை இன்று தமிழகம் போற்றவில்லை. நிறபேத உணர்வுகளும், பிறப்பால் கற்பிக்கப்பட்ட உயர்வு தாழ்வுகளும் இன்று நாகரிகமற்றவை என்ற கருத்து வலிமை பெற்றுவிட்டது. சமய சாதிச் சண்டைகளைப் பெரும்பான்மையான மக்கள் ஒப்பவில்லை. பொது வாழ்வில் சமய நல்லிணக்கம் போற்றப்பட்டு வருகின்றது. இந்து, இசுலாம், கிறித்துவம் என்ற மூன்று சமயங்கள் தமிழகத்தில் ஒருமைப்பாட்டுணர்வைப் பேணி வருகின்றன. தமிழகக் கல்வி நிலையங்களில் அனைத்துச் சமய இலக்கியங்களும் பாடமாக அமைந்துள்ளன. தாயுமானவரையும், மஸ்தான் சாகிபையும், வீரமாமுனிவரையும், குமரகுருபரரையும், வேதநாயகரையும், இராஜமையரையும் ஒப்பிட்டு ஆராயும் உள்ளங்களை இங்குக் காணலாம். பலப்பல முன்னேற்றமான விளைவுகளும் விளைச்சல்களும் தமிழ்ச் சமூகத்தில் இக்காலத்தில் தோன்றியுள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்குக் காணலாம்.

5.3.2 முன்னேறும் பெண்ணியம் தமிழகப் பெண்களின் போக்கில் பெரிய மாறுதல்களை இக்காலக் கல்வியும், வேலைவாய்ப்புகளும் உருவாக்கியுள்ளன. முத்துலட்சுமிரெட்டி முதன் முதல் மருத்துவக்கல்வி பயிலும் பெண்ணாகக் கல்லூரிக்குள் நுழைந்தபோது இருந்த வியப்பும், எதிர்ப்பும் மறைந்து பெண்களே பெரும்பான்மையவராகத் தொழிற்கல்வித் துறைகளில் இடம்பெறும் நிலை வளர்ந்துள்ளது. பெண்கள் பணி வாய்ப்புப் பெறக்கூடிய சூழலை உருவாக்கும் வகையில் தமிழக அரசு 33 விழுக்காட்டுப் பணியிடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கியுள்ளது.

தற்குறியாய், உலகியல் அறியா மூடமாய், அடுப்பங்கரை ஒன்றே அறிந்தவளாய், நகைகளின் சுமைதாங்கியாய், அலங்காரப் பதுமையாய், ஆணுக்கு அடிமையாய், மண்ணெண்ணெய்க்குப் பலிப்பொருளாய், வரதட்சணையால் முடிவு செய்யப்படும் வாழ்க்கைப் பொருளாய்ப் பெண் இருந்த காலம் மாறிவிட்டது. எனினும் தமிழ்ச் சமூகம் முழுமையும் பெண்ணைப் போற்றுவதாகவும் ஆணுக்குச் சமமாகக் கருதுவதாகவும் கூறமுடியவில்லை. பெண் குழந்தையைக் கருவில் அழிப்பது, பிறந்தபின் எருக்கம்பால் ஊட்டிக் கொல்வது போன்ற இரக்கமற்ற செயல்கள் சமூகத்தின் சில பகுதிகளில் நிகழாமலில்லை.

குன்றக்குறவன் ஒருவன் கடவுளை வேண்டிப் பெண் பெற்றான் என்று ஐங்குறுநூறு கூறுகின்றது. இக்கருத்தும்

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல

மாதவம் செய்திட வேண்டு மம்மா

என்று கவிமணி கூறிய கருத்தும் இன்று சில பகுதிகளில் போற்றப் பெறவில்லை.

பெண்ணென்று பூமிதனிற் பிறந்துவிட்டால் – மிகப்

பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்

என்று பாரதி கூறுவது போலப் பெண்கள் துன்பப் பிறவிகளாக அல்லற்படுவதும் நம் பண்பாட்டின் ஒரு கூறுதான்.

இன்று பெண்ணியக்கம் வலிமை பெற்றுள்ளது. பெண் போராடும் உள்ளம் பெற்றுள்ளாள். தமிழர் பண்பாட்டில் கண்ணகியும் கண்ணம்மாவும் உயிர்ப்புற்று உலா வருகின்றனர். காவல்துறையில், ஆட்சித் துறையில், வான்படை, கப்பல் துறைகளில், பொறியியல், மருத்துவ அறிவியல் துறைகளில் பெண்கள் பங்கேற்கும் மறுமலர்ச்சி தமிழகத்திலும் தோன்றியுள்ளது.

5.4 திரைகடல் ஓடி திரவியம் தேடியவரின் இன்றைய நிலை

தமிழர் பொருளீட்டும் முயற்சியில் திரைகடல் கடந்தனர். கால்டுவெல் கூறுவது போல எங்கெங்கெல்லாம் பிழைக்க வாய்ப்பு உண்டோ அங்கெல்லாம் எறும்புச் சாரிகளாகத் தமிழர் ஏகினர். கரும்புத் தோட்டங்களிலும், தேயிலைக் காடுகளிலும், காப்பி, ரப்பர் விளையுமிடங்களிலும், வணிகச் சந்தைகளிலும், அலுவலகங்களிலும், செல்வர் இல்லங்களிலும் பற்பல பணி செய்தனர். சில நாடுகளில் மதிக்கப்பட்டனர்; சில இடங்களில் துன்புறுத்தப்பட்டனர்.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா, மொரீசியசு, ரீயூனியன், தென் ஆப்பிரிக்கா, பிரான்சு, பிஜித்தீவு, மேற்கிந்தியத் தீவுகள், தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கெல்லாம் சென்று குடியேறினர் தமிழர்.

இலங்கையில் தமிழர் அடைந்த இன்னல்கள் எண்ணிலவாகப் பெருகிவிட்டதை இன்றைய வரலாறு காட்டுகின்றது. அகதிகளாகத் தமிழகம் நோக்கிக் கண்ணீர் வற்றி உலர்ந்த கண்களோடு பல்லாயிரவர் தமிழகத்திற்குள் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

வளைகுடா நாடுகளிலும், அமெரிக்காவிலும் சென்று பொருள் தேடிவரும் தமிழர் தாயகம் திரும்பி வசதியான வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர். இந்நாடுகளைத் தவிர இந்தியாவின் வடபகுதியில் பல நகரங்களிலும் சென்று பிழைப்பு மேற்கொண்ட தமிழர் பலர். அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மொரீசியசு போன்ற நாடுகளில் சென்ற தலைமுறைகளில் சென்று தங்கிவிட்ட தமிழர்கள் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் மறந்துவிட்டனர். தங்கள் மூதாதையர் தமிழ்நாட்டுக்காரர்கள் என்பதைத் தவிர இவர்களுக்கு வேறு ஏதும் தெரியவில்லை.

5.5 இன்றைய தமிழர் நாகரிகம்: சில காட்சிகள்

தமிழ்நாட்டிலும் நகரங்களில் இன்று தூய தமிழ்ப் பண்பாடு முழுமையாக உள்ளது என்று கூறுவதற்கில்லை. பண்பாட்டின் அடிநிலைகளில் பெரும் மாறுதல்கள் இல்லாவிட்டாலும் பண்பாட்டுக் கூறுகள் சிதைவுறவே செய்திருக்கின்றன. கீழே உள்ள காட்சிகளே பண்பாட்டுச் சிதைவுக்குச் சான்று:

வீட்டு அமைப்பு

வாசலில் குரோட்டன்ஸ் வளர்க்கும் நாகரிகம்.

கதவுகள் அடைக்கப்பட்டு ‘நாய் ஜாக்கிரதை’ அறிவிப்பு.

‘உத்திரவின்றி உள்ளே வரக்கூடாது’ அறிவிப்பு.

திண்ணைகள் இல்லாத வீட்டமைப்பு.

பக்கத்து வீட்டுக்காரர்களைப் பற்றி ஏதும் தெரியாத அடுக்கு வீட்டமைப்பு.

சில அன்றாட சமூகக் காட்சிகள்

‘இன்று ரொக்கம் நாளை கடன்’ என்று கடைகளில் ஏமாற்றும் அறிவிப்பு.

‘இங்கு விற்கப்படும் பலகாரங்கள் நெய்யில் செய்யப்பட்டவை அல்ல’ – உணவுவிடுதிகளில் நயமான அறிவிப்பு.

‘மதுபானம் உடலைக் கெடுக்கும்’ ‘மது அருந்தாதீர்கள்’ என மதுப்புட்டிகளில் அறிவிப்பு.

‘எச்சில் துப்பாதீர், சுவரொட்டி ஒட்டக்கூடாது’ போன்ற எச்சரிக்கைகள்.

ஆண் – பெண் படங்களோடு கழிப்பறைகள்.

பொதுவிடங்களில் நீர் பருகச் சங்கிலி கட்டிய குவளைகள்.

‘இலஞ்சம் கொடுக்கவோ வாங்கவோ கூடாது’ என்று அலுவலகங்களில் அறிவிப்புகள்.

‘ஒரு ரூபாய்க்கு ஒரு கோடி – நாளை குலுக்கல்’ பேருந்து நிலையங்களில் இந்நாட்டு மன்னர்களின் கூவல்கள்.

இவையெல்லாம் நம் பண்பாட்டில் விளைந்துள்ள மாற்றங்களைக் காட்டுவன.

மக்கட் தொகை மிகுதியாக இருக்கக்கூடிய சூழல், நுகர்வுப் பொருள்களைப் பெறுவதில் ஒரு பெரும் துன்பத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில் விருந்தோம்பல் என்பது மறக்கப்பட்ட ஒரு பண்பாக இருக்கிறது. வரவேற்பறை, முகமன் பேச்சு, அதிகப்படியான நிலையில் ஒரு தேநீர் என்ற அளவில் நெருக்கமான உறவுகள் கூடக் கத்தரிக்கப்படுகின்றன. தாய் பிள்ளை உறவுக்கிடையிலும் கூட வேற்றுமை உருவாகியுள்ளது. மருமகள் வருகை, சொத்துப்பிரிவினை போன்றவை பேதங்களை உண்டாக்கியிருக்கின்றன. கருச்சிதைவு, வரதட்சிணை, பெண் வெறுப்பு, குறுக்கு வழியில் பொருள் ஈட்டும் முயற்சி, விளம்பரப் புகழ் பெற்றுவிடும் ஆர்வம் ஆகியன பண்பாட்டைப் பெரிதும் சிதைத்திருக்கின்றன. இந்நிலையில் நகரங்களும் சிற்றூர்களும் எந்த நிலையில் உள்ளன எனக் காணலாம்.

5.5.1 நகரப் பண்பாடு வேகமாகத் தொழில்மயமாகிக் கொண்டிருக்கும் நகரங்களில் புதிய புதிய குடியிருப்புகள், வேலைக்குப் போகும் ஆண் பெண் சிறார்கள், ஆங்கிலப் பள்ளிகளில் சீருடைகளில் வந்திறங்கும் அரும்புகள், இரவைப் பகலாகக் காட்டும் சோடியம் விளக்குகள் ஒளிவெள்ளம் பரப்பும் கடைத் தெருக்கள், ஆடை அணிகலன்களை விற்கும் பெரிய மாளிகைகள் போன்ற கடைகள், நடைபாதைகளில் மலிவுவிலைப் பொருட்களைக் கூவி விற்கும் சிறு வணிகர்கள், பல துறைகளிலும் தேர்ந்த மருத்துவர்களால் நடத்தப்பெறும் தனியார் மருத்துவ மனைகள், ஐந்து நட்சத்திர உணவகத் தங்கும் விடுதிகள், சாலைகளில் ஓயாது போய்க் கொண்டிருக்கும் பேருந்துகள், கடற்கரைகளில் காற்று வாங்க மாலையில் மொய்க்கும் மக்கள் திரள், மக்கள் பார்வை படரும் இடங்களில் மிகப்பெரிய விளம்பரப் பலகைகள், பாராட்டுக்குரிய செயல் புரிந்தோர்க்குச் சிலைகள், சிறிய பெரிய கோயில்கள், காதைத் துளைக்கும் ஒலிபெருக்கிகள், எவ்வளவு திட்டங்களை வகுத்தும் மாற்றமுடியாத நடைபாதைக் குடிசைகள், தெருவோரக் குழாயிலிருந்து ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீர், விழியற்றவரைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று ஓரமாய்விடும் சமூகத் தொண்டர், கோடையில் குலைகுலையாய்க் கட்டி விற்கப்படும் இளநீர், தர்பூஸ் பழங்கள், வெள்ளரிப் பிஞ்சுகள் இப்படிப் பலப்பல காட்சிகள் நம் கண்களை நகர்ப்பகுதிகளில் வந்து தழுவும். நகரப் பண்பாடு புறநிலையில் மேற்கு நாடுகளின் தாக்கத்தைப் பெற்றிருப்பது உண்மைதான். ஆனால் புதைநிலையில் தமிழர் உள்ளப்பாங்கு அங்கும் குலையாமல் இருக்கிறது.

5.5.2 சிற்றூர்ப் பண்பாடு சிற்றூர்களே நம் பண்பாட்டின் கூறு ஒவ்வொன்றையும் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன. இரண்டு மா அளவுள்ள நிலத்தைப் பல தலைமுறைகளுக்குப் பின்னும் தானே உழுது நட்டுக் களையெடுத்து ‘உழந்தும் (துன்பம் அடைந்தாலும்) உழவே தலை’ என்று வாழும் எளிய உழவர் குடிமகன்தான் இப்பண்பாட்டின் முதுகெலும்பு. அறிவியல் விந்தைகள் இவனைத் தீண்டவில்லை. இன்னும் ஏர்க்கலப்பை நாகரிகத்திலிருந்து இவன் மாறவில்லை. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது என்ற பழமொழி இவன் அறிந்ததுதான். ஆனால் இவன் இந்த மண்ணின் காதலன். பெரிய வருவாய் வேண்டி இவன் பிற தொழில்களுக்குப் போக மாட்டான். “வறியவன் ஓம்புமோர் செய்” என்று இப்படிப்பட்டவனைப் பார்த்துத்தான் கம்பன் பாடினான். கம்பன் கூறியதன் பொருள், “மிக வறுமைப்பட்டவன் தனக்குக் கிடைத்த சிறிய அளவு நிலத்தை மிக அக்கறையோடு பாதுகாப்பது போல் நாட்டை அரசன் பாதுகாத்தான்” என்பதாகும். கம்பன் காலத்திலிருந்தே உழவன் நிலத்தின் மீது கொண்டிருந்த அக்கறை இதனால் புலப்படும்.

5.5.3 கிராமத்து வரலாற்றாசிரியன் புதுமைப்பித்தன் கூறுவது போலக் கிராமத்தான் ஒவ்வொருவனும் வரலாற்றாசிரியனாக விளங்குகிறான். போன தையிலே வந்த வெள்ளம், உடைப்பெடுத்த ஏரி, சின்னான் மகன் வீரன் ஏரி உடையாமல் ஊரைப் பாதுகாத்தது, கண்ணாத்தா காட்டில் விறகெடுக்கச் சென்றபோது பாய்ந்து வந்த புலி, ஐயனார் கோயில் புற்றில் யார் கண்ணிலும் படாமல் இருக்கும் அஞ்சுதலை நாகம் என்று பலப்பல உண்மையும் கற்பனையும் கலந்து தான் வாழும் ஊரோடு தனக்கிருக்கும் பிணைப்பைக் காட்டுவான் சிற்றூர்க் குடிமகன். ஒவ்வொரு வீட்டைப் பற்றியும், வீட்டிலுள்ளவர் பற்றியும் அவன் தெரிந்து வைத்திருக்கிறான். அந்தரங்கம் என்பது அவனிடம் இல்லை. ஒப்புரவு, ஒட்டுறவு ஆகியவற்றைக் கொஞ்சமும் பின்னடையாது பாதுகாத்து வைத்துள்ளன தமிழகச் சிற்றூர்கள்.

5.6 கிராமங்கள்: தமிழ்ப் பண்பாட்டின் நிலைக்களன்கள்

வாசலில் கோலமிடுதல் அடுப்பு, மண்பாண்டங்கள்

வாசலில் கோலமிடுதல், கோலத்தின் நடுவே பரங்கிப்பூவை வைத்தல், திண்ணையையும் தெருவையும் சாணமிட்டு மெழுகுதல், தரையோடு போடப்பட்ட அடுப்பு, பெரும்பாலும் மண்பாண்டங்கள், புளியிட்டுத் துலக்கிய பித்தளைக் குடம் தவலைகள், சுரைக்கொடி படர்ந்த கூரைவீடுகளுக்கு இடையே ஒன்றிரண்டு ஓட்டு வீடுகள், மாலையில் திண்ணை மாடத்தில் விளக்கேற்றுதல், பெண்கள் தலையைப் பின்னலிட்டுப் பூச்சூடிக் கொள்ளுதல், மகளிர் வெள்ளி செவ்வாய்க் கிழமைகளிலும் ஆடவர் புதன் சனிக்கிழமைகளிலும் எண்ணெய் முழுக்கு ஆடல், மகளிர் காது மூக்குக் குத்திக் கொள்ளுதல், உடம்பிற்குச் சீயக்காய், ஆவாரந்தூள், செம்பருத்தி இலை ஆகியவற்றைத் தேய்த்து நீராடல், மணமான மகளிர் காலில் மெட்டி அணிதல், கழுத்தில் தாலிக்கயிறு, காலில் கொலுசு, கையில் வளையல் அணிதல், மாமன், மாமன் மகன், அத்தை மகன் என உறவுமுறையில் திருமணம் செய்தல், திருமணத்திற்குமுன் பரிசம் போடுதல், திருமணத்தில் மாலை மாற்றிக் கொள்ளுதல், தாலி கட்டுதல், மெட்டியிடுதல், அம்மி மிதித்தல், நலுங்கு வைத்தல் ஆகிய சடங்குகள் நடைபெறும். இவையெல்லாம் இன்றைக்கும் மிக உள்ளொடுங்கிய சிறிய கிராமங்களில் தவறாது காணப்படும் பண்பாட்டுக் களங்களாகும்.

5.6.1 கிராமியப் பழக்கங்கள் கிராமத்திற்கென்று அமைந்த சில பழக்கங்கள் இவைதாம் தமிழர் பண்பாடு என்று நமக்குக் காட்டுகின்றன. இங்கே திருமணத்தின்போது கூறைப்புடைவை சட்டை அணிந்து பெண் நெற்றியில் திலகம் தீட்டிக் கொள்வாள். ஆடவன் எட்டு முழத்தில் கரையிட்ட வேட்டியும் சட்டையும் அணிவான். திருமணத்தில் உறவினர்களும் நண்பர்களும் பணத்தை அன்பளிப்பாக வழங்குவர். அதை மொய் எழுதுதல் என்பர். திருமண விருந்தில் பெரும்பாலும் சைவ உணவே இடம்பெறும். சில இடங்களில் இறைச்சி உணவும் உண்டு. இசுலாமியர் திருமணத்தின் போது இறைச்சி கலந்த சோற்று விருந்து படைப்பர். பின்னால் மகப்பேறு தாய்வீட்டில் ஊர் மருத்துவச்சி துணையோடு நிகழும். குழந்தைக்கு அரைஞாண் பூட்டும் வழக்கம் உண்டு. பூப்பெய்துதல் சடங்கு, வளைகாப்புச் சடங்கு, தாலி பெருக்கிக் கட்டும் சடங்கு ஆகியன இன்றும் மாற்றமின்றி நடைபெறுகின்றன.

(அரைஞாண் பூட்டுதல் என்பது பச்சிளம் குழந்தைக்குத் தெய்வப் பாதுகாப்பு கருதித் தெய்வத்தின் படைக்கலன்களைப் பொன்னால் உருவாக்கிக் கயிற்றில் கோர்த்து அணிவித்தல் ஆகும்.

பூப்பெய்துதல் ஆவது பெண் பருவம் அடைகின்ற நிகழ்ச்சியைக் கொண்டாடும் சடங்கு ஆகும்.

வளைகாப்பு என்பது கருவுற்ற பெண்ணுக்குத் தெய்வம் பாதுகாப்புத் தர வேண்டி, தெய்வத்தை வாழ்த்தி வணங்கி, வளையல் இடுவதாகும்.

தாலி பெருக்கிக் கட்டுதல் ஆவது புது மணப்பெண் ஆடி மாதத்தில் தாலியைப் புது மஞ்சள் கயிற்றில் சேர்த்துக் கட்டிக் கொள்வதாகும்.)

மகளிர் எட்டுமுழம், பதினாறுமுழம் கொண்ட நூற்சேலைகளை உடுத்துவர்; சிறப்பு நாட்களில் பட்டுச்சேலை உடுத்துவர். திருமணம் போன்ற நாட்களிலும், சிறப்பு விருந்துகளிலும் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொள்ளுதலும் உண்டு.

இதுபோலப் பல பழக்கங்கள் கிராமத்திலிருந்து இன்றும் விடைபெறவே இல்லை.

5.6.2 கிராமியச் சடங்குகள் வழிவழியாகக் கிராமத்தில் வரும் சடங்குகள் பலப்பல இருக்கின்றன. பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான சடங்குகளில் கடைப்பிடிக்கப்பெறும் சில பழக்கங்களுக்குக் காரண காரியம் இன்று அறியப்படவில்லை.

கணவன் இறந்தபின் கிராமங்களில் மகளிர் பூச்சூட்டுதலோ பொட்டிட்டுக் கொள்வதோ இல்லை. பிணத்தைப் பெரும்பான்மை எரித்தலும், சிறுபான்மை புதைத்தலும் மேற்கொள்ளப்படும். இறந்த மறுநாள் பால் தெளிப்பு, பதினாறாம் நாள் காடாற்று கருமாதி ஆகியன நிகழும். பிணத்திற்கு மூத்த மகனே தீயிடுவான். நீர்க்குடம் உடைத்தல், எலும்புகளை ஆற்றில் கரைத்தல் ஆகியன குறிக்கத்தக்க இறப்புச் சடங்குகளாகும். இறந்தவரின் நினைவு நாளைப் போற்றுதல், அவர்களுக்குப் படையலிடுதல் ஆகியன இன்றும் வழக்கிலிருக்கும் சடங்குகளாகும்.

5.7 தொகுப்புரை

தமிழ்ப் பண்பாட்டில் உயிர்ப்புள்ள ஒருபகுதி கிராமமேயாகும். தமிழர் பண்பாட்டை மறுபடியும் படம் பிடித்துக் காட்ட வேண்டுமென்று கருதுபவர்கள் இன்றும் கிராமத்திற்கே செல்லவேண்டும். இன்று எந்த நகரக் கலப்பும் இல்லாமல் கிராமத்து மனிதனே ஓர் அசலான தமிழனாகக் காட்சி தருகிறான்.

பாடம் - 6

தமிழர் பண்பாட்டின் மொத்த உரு - கூட்டல்கள், கழித்தல்கள், மாற்றங்கள், நிலைபேறுகள்

6.0 பாட முன்னுரை

மூவாயிரம் ஆண்டுகள்… காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. “போனால் வராது பொழுது விடிந்தால் கிடைக்காது” என்று சந்தையில் கூவுகிறானே! அது கத்தரிக்காய் புடலங்காய்க்குப் பொருந்துகிறதோ இல்லையோ காலத்துக்குப் பொருந்தும். காலம் போனால் வருமா? இன்று என்பது கழிந்து நேற்றாகி விடுகிறது. பொழுது விடிந்தபின் ‘நேற்று’ இறந்து விடுகிறது. இனிமேல் நம் வாழ்நாளில் கழிந்து போன அந்த நாள் வருமா?

இல்லை, நிகழ்கின்ற காலத்தைத்தான் நிறுத்த முடியுமா? அது முடியாத மாயவேலை. காலம் எத்தனைச் சுவடுகளை, தழும்புகளைப் பூமியின் மேனியில் ஏற்படுத்தி இருக்கிறது? சங்க காலக் கோயில்கள், கோட்டைகள், கொத்தளங்கள் எங்கே? இருந்ததற்கான சுவடுகளே இல்லை! கச்சியும் (காஞ்சிபுரம்) கடல் மல்லையும் (மகாபலிபுரம்) பல்லவர் நினைவாகக் காட்சி தருகின்றன. தஞ்சைக் கோயிலும் பிற கோயில்களும் சோழர் நினைவாக, மாமதுரைப் பெருநகரம் பாண்டியர் நினைவாக இன்றும் பார்க்கிறோம். சேர நாட்டின் சுவடுகளைக் காணோம். இடிந்து சிதைந்து கிடக்கும் பல கோயில்கள், கோட்டைகள் நம் பழம்பண்பாட்டின் உருவங்கள் இல்லையா?

6.1 பண்டைக் காலந் தொட்டு . . .

பாய்மரங்களோடு அணிவகுத்து நின்ற கப்பல்களில் ஏராளமான சரக்குகள் ஏலம், இலவங்கம், மிளகு, யானைத் தந்தம், அரிசி, இஞ்சி, மயில்தோகை, அகில், இரும்பு, ஆட்டுத் தோல், நெய், மரப்பெட்டிகள், மேசைக் கால்கள், பறவைக் கூண்டுகள், சீப்புகள், முத்துக்கள், மஸ்லின் ஆடைகள் ஆகியவைகளெல்லாம் பாரசீகம், ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், ரோம், சீனா, பர்மா, மலேயா போன்ற பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

ரோமாபுரி மட்டும் ஆண்டு ஒன்றுக்கு ஆறு இலட்சம் பொன் மதிப்புள்ள பொருள்களைத் தமிழகத்திடமிருந்து பெற்றது. தொண்டி, முசிறி, கொற்கை, காவிரிப் பூம்பட்டினம் ஆகிய துறைமுகங்கள் இரவு பகலாகச் செயல்பட்டன. தாலமி போன்ற யவன ஆசிரியர்கள் இந்தத் துறைமுகங்களைக் குறிப்பிடுகின்றனர்.

“பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி” என்று தமிழ் இலக்கியம் பேசுகின்றது. பொன்னொடு வந்து மிளகைக் கொண்டு போகும் கப்பல்களைக் கொண்ட முசிறி என்பது இதன் பொருள். இவ்வாறு பெரிய அளவு வணிகம் செய்யக் கூடிய வளமான பொருளாதாரம் படைத்திருந்த தமிழகம் பிற்காலத்தில் வளம் இழக்கக் காரணம் யாது? பண்டைக் காலந்தொட்டு வணிக வளம் மிக்க தமிழகம், பிற்காலத்தில் நலிவுற்றதற்கு யார் காரணம்? காணலாமா?

6.1.1 தமிழர் பண்பாடு உருவான நிலை தமிழர் பண்பாடு எப்படி உருவாயிற்று? ஆண்டுக்கு மூன்று போகம் நெல் விளையும் வயல்கள்; கரும்புக் கழனிகள்; சோளம், கம்பு, தினை முதலான புன்செய்ப் பயிர்கள்; மா, பலா, வாழை எனும் கனிமரங்களின் சோலை; ஆண்டு முழுவதும் ஓடிக் கொண்டிருந்த ஆறுகள்; தென்னந் தோப்புகள்; இயற்கை வளம் செறிந்த குறிஞ்சிக் காடுகள் இவ்வாறு வளம் மிக்க தமிழகமாயிருந்தது. வறுமை உடையோர் எண்ணிக்கை குறைவாயிருந்தது. அவர்களின் வறுமையைத் துடைக்கும் கைகள் பலவாக இருந்தன. அவர்களுக்கு வாழ்க்கையின் தலையாய குறிக்கோள் எது தெரியுமா? பழி வந்துவிடக் கூடாது. வாழ்வில் கடுகளவுகூடக் கறை படிந்து விடக் கூடாது. அப்படி வருமுன் உயிர் போய்விட வேண்டும். புகழ், பலராலும் பாராட்டப் பெறும் புகழ் வேண்டும். எப்படிப் புகழ வேண்டும்? ‘சான்றோர்’ என்று வையகம் சொல்ல வேண்டும். அக்காலத்தின் மிக உயர்ந்த பட்டம் அதுதான். சான்றோர் ஆதல், சான்றோரால் எண்ணப்படுதல் என்பவையே தலையாய பெருமைகள். இந்த அடிப்படையில்தான் பழந்தமிழ்ப் பண்பாடு உருவாயிற்று.

6.1.2 மாற்றங்கள் எதனால் விளைந்தன? • புதிய கண்டுபிடிப்புகள்

புகழ் பெற வேண்டுமென்று விரும்பியவன், தன் வீட்டில் அளவில்லாது கிடக்கும் உணவுப் பொருளைப் பிறர்க்கு வாரி வழங்கினான். வயல் விளைத்துக் கொடுத்தது. வீடு முழுவதும் நெல், பிற தானியங்கள். அவனுக்கு உரிய பல வீடுகளிலும் கொட்டிக் குவித்து வைக்கப்பட்ட கூலங்கள் (தானியங்கள்). அடுத்த அறுவடை வருவதற்குள் செலவிட்டாக வேண்டும். வறியவர்க்கும் புலவர்களுக்கும் வழங்கினால் வாழ்த்துவார்களே! வழங்கினான்; இவ்வாறு வழங்குதல் வழக்கமாயிற்று; அடுத்த தலைமுறையில் இவ்வழக்கம் தொடர்ந்தது; இரத்தத்தில் ஊறிய பண்பாயிற்று. இந்தப் பண்பு எப்போது மெலிவடைந்தது?

நாணயம் என்ற ஒன்று வழக்கத்திற்கு வந்தபிறகு இந்த வழக்கம் படிப்படியே குறைந்தது. விளைச்சலைப் பணமாக்கி, பணத்தை வங்கியில் செலுத்தி வைப்பாக்கி, அதற்கு வட்டி கண்டு, செல்வம் பெருக்கி வாழும் நிலையில் ஈகை, ஒப்புரவு ஆகியன நலிவுற்றன. பண்பாட்டில் ஒரு மாற்றம் தோன்றியது. வீட்டில் வடித்து வைத்த சோறும் குழம்பும் வீணாகுமுன் யாருக்காவது கொடுத்து மகிழும் வழக்கம் பதனப் பெட்டி (Fridge) வந்தவுடன் மாறிவிடவில்லையா – அதுபோலத்தான் பணப் புழக்கம் தோன்றிப் பண்டங்களின் புழக்கம் குறைந்தவுடன் பண்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. பொருளாதார மாற்றங்களாலும், அறிவியல் வளர்ச்சியாலும் பண்பாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் பல மாற்றங்கள் தோன்றிவிட்டன.

• அயலவர் தொடர்பு

தமிழன் வடவேங்கடம் தென்குமரிக்கு இடையில் உள்ளடங்கிய சிற்றூர்களில் வாழ்ந்தபோது அவனுடைய புற நாகரிகத்திலும் மாற்றமில்லை. வேற்றவர்கள் வந்து புகுந்து ஆட்சியைப் பிடித்து அவனை அடிமையாய் ஆக்கினர். ஆண்ட மக்களோடு ஏற்பட்ட பழக்கம் சில புதிய அலைகளைத் தமிழனின் வாழ்க்கைக் கரைகளில் மோதச் செய்தது. பிறகு தமிழன் பிழைப்புக்காகப் பல நாடுகளுக்கும் சென்றான். அங்கங்கே கண்ட நாகரிகக் கூறுகளில் சிலவற்றுக்குத் தன் வாழ்விலும் இடம் கொடுத்தான். தன் பண்பாட்டுக் கூறுகளை அயலவர்க்குக் கொடுத்து அயலவரின் பண்பாட்டுக் கூறுகளை இவன் தழுவிக் கொண்டான். பண்பாட்டு மாற்றங்கள் இவ்வண்ணமே நிகழ்ந்தன.

6.2 படையெடுப்புகள்

தமிழகம் முந்நீர் என்று கூறப்படும் கடல் சூழ்ந்த நில அமைப்பைப் பெற்றது. கடலைப் பழந்தமிழர் முந்நீர் என்றனர். ஒரு தீபகற்பமாய் (Peninsula) விளங்கும் நிலம் இது. இந்த நிலத்தின் மீது அயலவர் படையெடுப்பு என்பது அரிதாகவே நிகழ்ந்திருக்கிறது.

• களப்பிரர்

• பல்லவர்

• மாலிக்காபூர்

• விஜய நகர நாயக்கர்

• மராட்டியர்

• ஆங்கிலேயர்

• பிரெஞ்சுக்காரர்

ஆகியோர் வெவ்வேறு காலங்களில் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்தனர். தமிழரசர்கள் வலிமை குன்றியபோதும், தங்களுக்குள் பகைகொண்ட போதும், திறமையில்லாத அரசர்கள் ஆண்டபோதுமே இந்தப் படையெடுப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. மேலே கண்ட அயலவர்களைக் குறித்துச் சிறிது காணலாமா?

6.2.1 களப்பிரர் களப்பிரர் என்பவர் கருநாடகத்தைச் சேர்ந்த குறுநில மன்னர். கருநாடகத்தில் சந்திரகிரி மலை உள்ள பகுதி பழங்காலத்தில் களப்பு நாடு எனப்பட்டது. இதுவே களப்பிரர்களின் ஆதி இடமாகும். இந்தக் களப்பிரர் குடியைச் சார்ந்த புல்லி என்ற குறுநில மன்னன் வேங்கட மலைப் பகுதியை ஆண்டு வந்தான். இவனே தகடூர்ப் பகுதியின் மீது படையெடுத்துக் கைப்பற்றியவன். தகடூர் என்பது இன்றைய தருமபுரியாகும். இப்பகுதி இப்படையெடுப்புக்கு முன்பு சங்க கால வள்ளலான அதியமான் பரம்பரையினரால் ஆளப்பட்டது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் அச்சுத விக்கந்தன் என்ற களப்பிர அரசன் சேர சோழ பாண்டியர்களை வென்று தமிழ்நாட்டின் பெரும் பகுதியைக் கைப்பற்றினான். இக்காலம் வரலாற்றில் இருண்ட காலம் எனப்பட்டது. தமிழர் பண்பாடு சற்றுச் சிதைந்த காலமாக இதனைக் குறிக்கலாம்.

6.2.2 பல்லவர் பல்லவர்கள் வேங்கட மலைக்கு அப்பாலிருந்து வந்தவர்கள் என்பர் அறிஞர். தொடக்க காலப் பல்லவர்கள் தமிழ் மொழியைப் போற்றவில்லை. கிரந்த எழுத்துக்களிலேயே தம் கல்வெட்டுக்களை வெளியிட்டனர். சிம்ம விஷ்ணு, மகேந்திர வர்மன், நரசிம்மவர்மன் ஆகிய பல்லவ அரசர்கள் காலத்தில் வடமொழி செல்வாக்குப் பெற்று விளங்கியது. தொடக்க காலத்தில் சமண சமயத்தைச் சார்ந்திருந்த பல்லவர்கள் பின்பு சைவர்களாக மாறினர். மாமல்லபுரம், திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை, சித்தன்னவாசல், நாமக்கல் போன்ற இடங்களில் அமைந்த குகைக் கட்டிடங்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்த கட்டடக் கலை மாற்றத்தைக் காட்டுவன. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலைப் பாருங்கள்! இது பல்லவர் காலச் சமய, கலைத் தொண்டுகளுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

6.2.3 ஆங்கிலேயர் உட்பட்ட பிறர் பாண்டியர்களில் உடன் பிறந்தோர் தம்முள் பகைத்துக் கொண்டு மாலிக்காபூரை அழைத்து மொகலாயர் ஆட்சி ஏற்பட வழி வகுத்தனர். குறுநில மன்னர்கள் இடையே ஒற்றுமை இல்லாத நிலையைப் பயன்படுத்திக் கொண்டு விஜயநகர நாயக்கர் தமிழகத்திற்குள்ளே புகுந்தனர். நாயக்கர் தஞ்சையில் தளர்ந்த போது மராட்டியர் நுழைந்தனர். ஆர்க்காட்டு நவாபிடம் உரிமையைப் பெற்று ஆங்கிலேயர் இடம் பிடித்தனர். பிரெஞ்சுக்காரர் கடல் வழியாக வந்து புதுவை காரைக்கால் பகுதிகளைக் கைப்பற்றினர். தமிழ்ப் பேரரசு நிலை குலைந்த பின்பே வேற்றவர்கள் உள்ளே நுழையும் நிலை ஏற்பட்டது.

கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், ஈழம் வென்றான் என்றெல்லாம் சிறப்புப் பெயர் பெற்றனரே! ஏன் அவர்கள் நாடே கொள்ளை போயிற்று? கவனிக்க வேண்டிய கேள்வி அல்லவா இது? தமிழர்கள் வட இந்தியாவை, இலங்கையை, மாலத்தீவுகளை எல்லாம் வென்றார்களே, அப்பகுதிகளை நிலையாகத் தம் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டு வந்தனரா? தம் கொடியும் படையும் நிறுவித் தம் ஆட்சி அங்கு நடக்க வழி கண்டனரா? இல்லை. தோற்ற அரசர்கள் தம் காலில் விழுந்து வணங்கியவுடன் அவர்களிடமே நாட்டைக் கொடுத்துவிட்டுத் திரும்பிவிட்டனர். ஆண்டுக் கணக்கில் தமிழ் அரசர்கள் தாம் வென்ற நாட்டில் இருப்பதில்லை. ஆனால் ஆங்கிலேயர்களைப் பாருங்கள்! தாம் வென்ற நாடுகளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆட்சி நடத்துவர்; தம் மக்களைக் குடியேற்றுவர்; தம் பண்பாட்டை அயல் மண்ணில் வேர் ஊன்றச் செய்வர். தமிழ் அரசர்களின் பெருந்தன்மையும், சொந்த ஊருக்குத் திரும்பிவிட வேண்டுமென்ற ஊர்ப் பற்றும் அவரது ஆட்சியும் பண்பாடும் அயல் நிலங்களில் பரவாமல் தடுத்து விட்டன.

6.3 பண்பாட்டில் கூட்டல்கள்

• புலால் மறுப்பு

இன்றுள்ள தமிழர் பண்பாட்டில் என்னவெல்லாம் வந்து சேர்ந்திருக்கின்றன? தொடக்க காலத்தில் தமிழர் பண்பாட்டில் புலால் உண்ணுதல் பெருமளவு இருந்தது. ஆடு, கோழி ஆகியவற்றைக் கடவுளுக்குப் படையல் என்ற பெயரில் அறுத்தனர். கொழுத்த பசுவை அடித்து உண்டனர். இந்த நிலையில் மாற்றம் வந்தது. சைவம் என்ற ஒரு நெறி பலர் வாழ்வில் இடம் பெற்றது. புலால் உண்பவர்கள் கூட மாதத்தில் சில நாள் சைவமாக விளங்கக் காணலாம். திருவள்ளுவர் புலால் உண்ணுதலைக் கண்டித்திருக்கிறார்.

• பெண்ணிய வளர்ச்சிபெண்கள் பெரும்பாலும் வீட்டோடு அடங்கியிருந்த நிலையிலிருந்து அலுவலகம் செல்பவர்களாகவும், மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளிலிருந்து பல்வேறு தொழில்நுட்பத் துறைகளிலும் பங்காற்றுபவராகவும் மாறியுள்ளனர். பெண்கள் உரிமை வேண்டிப் போராடும் நிலை உருவாகியுள்ளது. ஆண் பெண் சமம் என்ற உணர்வு தோன்றியுள்ளது. ஆணாதிக்கச் சமூகம் என்ற நிலை மாறியுள்ளது. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு ஆகிய குணங்களைக் கொண்டிருந்த பெண் இன்று தேவைக்கேற்ப அக்குணங்களைத் தள்ளிவைக்கப் பழகியிருக்கிறாள்.

• தனிக்குடித்தன முறை

கூட்டுக் குடித்தன முறை மாறித் தனிக் குடித்தன முறை வளர்ந்திருக்கின்றது. திருமணம் ஆன பின் கணவனும் மனைவியும் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்துசெல்வது இயல்பாகிவிட்டது.

• புறத்தோற்றங்களில் மாற்றம்புறத் தோற்றத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மேலே துண்டு மட்டும் போட்டிருந்த ஆடவன் சட்டை அணிகிறான்; அலுவலக உடை என்று ஐரோப்பியர் அணியும் உடை மாதிரியைப் பின்பற்றுகிறான். குடுமி வைத்திருந்த நிலையிலிருந்து ‘கிராப்’ வெட்டிக் கொள்ளும் நிலைக்கு மாறியிருக்கிறான். 18 முழப் புடைவையிலிருந்து பெண் 11 முழத்துக்கு மாறியிருக்கிறாள். கைம்பெண் வெள்ளை உடை உடுத்தும் நிலை மாறியிருக்கிறது; நகர நாகரிகத்தில் கைம்பெண் பொட்டு வைத்துக் கொள்கிறாள்.

• திருமணச் சடங்குகளில் மாற்றம்திருமணச் சடங்குகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. திருமணத்திற்கு முன்னரே வரவேற்பு நிகழ்கின்றது. அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் ஆகியன விடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. பதிவுத் திருமண எண்ணிக்கை பெருகியுள்ளது.

• திருமண உறவு

உறவு முறைக்குள் திருமணம் என்பது மாறிக் காதல் மணங்களும் கலப்பு மணங்களும் பெருகியுள்ளன. திருமண விளம்பர எண்ணிக்கை செய்தித்தாள்களில் பெருகியுள்ளது.

• வாழ்க்கைத் தரம்

பெண்ணும் பொருளீட்டுவதால் வீட்டு வருவாயும் வாழ்க்கைத் தரமும் கூடியுள்ளன. குடிசைகளின் எண்ணிக்கை குறைந்து சிமெண்ட்டால் கட்டப் பெற்ற அழகிய வீடுகள் தோன்றியுள்ளன. குழந்தைகளின் எண்ணிக்கையைப் பெற்றோர் முடிவு செய்து கொள்கின்றனர். அயல் நாடுகளுக்குப் பெண்கள் போவதில்லை என்ற நிலை மாறி ஏராளமான பேர் குடிபெயர்ந்து போகும் நிலை தோன்றியுள்ளது.

6.3.1 நல்லன தீயன இன்று தமிழர் வாழ்வில் அயல் நாகரிகப் பண்புகள் பலவும் புகுந்துள்ளன. அவற்றில் நல்லனவும் உண்டு; தீயனவும் உண்டு.

• நல்லன

ஒரு கிராமத்து இளைஞன் ஏர் கலப்பையோடு, இரண்டு மா வயலில் உழுது, தன் தேவைகளைப் பெருக்கிக் கொள்ளாமல், சுருக்கமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.

உண்பது நாழி உடுப்பவை இரண்டே

என்பது அவனது தேவையைக் கூறும் கூற்றாகும். இன்று அதே கிராமத்து இளைஞன் டிராக்டர் ஓட்டுகிறான்; வீரிய விதை பற்றியும், நீலப் பச்சைப் பாசி பற்றியும், செயற்கை உரம் பற்றியும் பேசும் அளவு அறிவியல் முறையில் அவனது தொழிற்கல்வி விரிவடைந்துள்ளது. நோய்களுக்கு விரைவான வலிமைமிக்க மருத்துவம் கிடைக்கிறது. சாவு எண்ணிக்கை குறைந்துள்ளது. பிறப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொருள் முதலீடு, தொழில்மயமாதல் போன்றவற்றால் வாழ்க்கை வசதிகள் கூடியுள்ளன. விரைவு வண்டிகளில் மனிதன் ஏறிச் சென்று பொழுதை மிச்சப்படுத்துகிறான். இவையெல்லாம் நல்லன.

• தீயன

மேற்கூறியவற்றுக்கு மாறாகச் சில தீயனவும் தமிழர் பண்பாட்டில் புகுந்துவிட்டன. இன்று மனிதனுக்கு மனிதன் இடைவெளி பெருகிவிட்டது. உடம்பால் மிக நெருங்கி வாழும் வாழ்க்கையில் உள்ளக் காப்பு இல்லை. அடுக்கு வீடுகளில் வாழ்பவர்களுக்கு அடுத்த வீட்டுக்காரர் யார் என்று தெரியாமல் ஆண்டுக்கணக்காக வாழும் நாகரிகம் தோன்றியுள்ளது. பொருள் தேடுவதற்காக விரைந்து இயங்கும் முயற்சியில் வாழ்க்கையின் உயர் பண்புகள் கரைந்துவிட்டன. பொருள் தேடும் அவாவால் குற்றங்கள் மலிந்து விட்டன; சிறைக் கூடங்களில் குற்றவாளிகள் பலராக உள்ளனர். மதுப் பழக்கம் சமூகத்தின் மேல் தட்டிலும் கீழ்த் தட்டிலும் விலக்க முடியாததாக ஆகியிருக்கிறது. இரவு விடுதிகள், பாலியல் குற்றங்கள் பெருகியுள்ளன. எது அறம் என்பதில் நெகிழ்ச்சி தோன்றியிருக்கிறது. இவ்வாறு தீயனவும் தமிழர் பண்பில் இடம் பெற்று விட்டன.

• எப்படிப் புகுந்தன?

புதுமைக் கவர்ச்சி, புறத் தோற்ற மாறுபாடுகளில் நாட்டம், அறத்தில் நாட்டக்குறைவு, பொறி புலன்களின் மீது எல்லையற்ற நுகர்வு விருப்பம், செயற்கையை விரும்பி ஏற்கும் மனம், ஆடம்பர உணர்வு, போலி மதிப்பு ஆகியன தீய பண்புகளைப் பிற நாடுகளிலிருந்து தமிழர் தழுவக் காரணமாகும்.

மணவிலக்கு இன்று தமிழர் வாழ்வில் மெல்லத் தலை நீட்டியிருக்கிறது. பிரிந்து போவது இயலாது என்றும், திருமணம் என்பது உயிரோடு ஏற்பட்ட பிணைப்பு என்றும் எண்ணிக் கொண்டிருந்த எண்ணம் தகர்ந்து விட்டது. மணவிலக்கு பெற்ற பெண் விளம்பரம் செய்து மாப்பிள்ளை தேடுகிறாள். இது எப்படி நிகழ்கிறது? திருமணத்தைப் பற்றித் தமிழர் கொண்டிருந்த அடிப்படைக் கோட்பாடு மாறிவிட்டது. மேலை நாட்டுக் கலாச்சாரத் தாக்கம் தமிழர் வாழ்வுப் பிணைப்பை மாற்றி யிருக்கிறது. தமிழர் உணவு, உடை, பழக்கவழக்கம் ஆகியவற்றில் உலகம் முழுவதும் பரவியுள்ள ஐரோப்பியத் தன்மை குடியேறியிருக்கிறது. நாட்டைப் பிடித்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஆண்டவர்களோடு நாமும் பழகியதால் நாம் அவர்களைப் பார்த்து வாழப் பழகியதன் விளைவு இது.

6.3.2 பண்பாட்டில் கழிந்தன பெருமைக்குரியன என்று எவரும் கருதும் சில பண்புகள் இன்று தமிழர்களில் பலரை விட்டு நீங்கியிருக்கின்றன. அவையாவன :

1. பழியென்றால் உயிரை விட்டு விடும் மான உணர்வு.

2. பொது நலத்திற்காகத் தன்னை அழித்துக் கொள்ளும் மாண்பு.

3. செல்வம் என்பது பிறர்க்குக் கொடுத்து மகிழ என நினைத்த பெருந்தகவு (Value) .

4. செல்வர்க்கும் அதிகாரத்திற்கும் அஞ்சாத தறுகண்மை (பேராண்மை).

5. எளிமை வாழ்வில் செம்மை நெறிகள்.

6. நாணத்தையும் அச்சத்தையும் அணிகலனாகக் கொண்ட பெண்மை.

7. பெண்மைக்கு அரணாக நின்ற ஆண்மை.

8. மொழி, நாடு என்பவற்றிற்காக உழைக்கும் நோக்கம்.

9. உலகோர் எல்லோரையும் தழுவிக் கொள்ளும் மனித நேயம்.

இந்தப் பண்புகளை இன்று அரிதாகப் பார்க்கிறோம். இன்றைய தமிழ்ச் செய்திதாளில் வந்த செய்திகளை நாம் எழுதுகிறோம்; படியுங்கள்.

• பாங்கில் கொள்ளையடித்த கும்பல் கைது.

• மனைவியைக் கணவனே வெட்டிக் கொன்றான்! கள்ளக் காதலே காரணம்!

• வரப்புத் தகராறில் மூவருக்கு அரிவாள் வெட்டு.

• பேருந்தில் சக பிரயாணியிடம் கொள்ளை.

• நிலம் வாங்குவதில் தகராறு. போலிக் கையெழுத்திட்டு மோசடி.

• நிறுவனத்தில் இரண்டு கோடி ஊழல். குற்றப்பத்திரிகை தாக்கல்.

• இளம் பெண்ணைக் கடத்திக் கற்பழிப்பு. சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி ஏமாற்றினார்!

• கள்ள நோட்டுக் கும்பல் பிடிபட்டது.

• மூன்று லட்ச ரூபாய் பெறுமான சாராயம் அழிப்பு. போலீஸ் தீவிரம்!

• வரதட்சணைக் கொடுமையில் பெண் எரிப்பு! மாமனார் மாமியார் கணவருக்குச் சிறை.

இவையெல்லாம் எங்கே நிகழ்கின்றன? திருவள்ளுவரும், இளங்கோவடிகளும், கம்பரும், நாலடியார் பாடிய சமண முனிவர்களும் தோன்றிய தமிழ்நாட்டில்தான். நல்ல பண்புகள் கழிந்தன; தீய பண்புகள் மிகுந்தன. ஏன் என்று காண்போமா?

• ஏன் கழிந்தன?

பழங்காலத்தில் மூன்று கேடுகளைக் கூறுவார்கள். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்பன அவை. இவற்றை ஒரு வரையறையோடு அளவாகத் துய்த்து நிறைவடையும் உள்ளத்தை மனிதன் – தமிழன் இழந்துவிட்டான். உலகெங்கும் மேற்கூறிய தவறுகள் நிகழ்கின்றன. ஆனால் இவை தமிழ்நாட்டில் நடக்கலாமா?

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

எனப் புகழ் பெற்றதாயிற்றே.

ஒரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளில்

48 விழுக்காடு (சதவீதம்) – பெண் காரணமாகக் குற்றம் செய்தவர்கள்

29 விழுக்காடு (சதவீதம்) – பணம், நகை திருட்டுக் குற்றம் செய்தவர்கள்

11 விழுக்காடு (சதவீதம்) – நிலத் தகராறு, பாகப் பிரிவினை, சொத்து இவை

காரணமாகக் குற்றம் செய்தவர்கள்.

12 விழுக்காடு (சதவீதம்) – பிற குற்றம் புரிந்தவர்கள்

இன்று பாலியல் குற்றங்கள் பெருகி விட்டன. மறைவாகவும், வரையறையோடும், கணவன் மனைவி என்ற உறவுக்குள்ளும் நிகழவேண்டிய பாலுறவு இன்று எல்லா மறைவுகளையும் வேலிகளையும் தாண்டிப் பொது வீதிக்கு வந்துவிட்டது. ஒழுக்கக்கேடு இன்று சமூகத்தில் இழிவாக எண்ணப்படவில்லை. அறநெறியின்றிப் பொருள் சேர்ப்பது குற்றம் என்ற நோக்குக் குறைந்து வருகிறது. தண்டனையிலிருந்தும் சட்டத்தின் கிடுக்கிப் பிடியிலிருந்தும் தப்பித்துக் கொள்ளும் வழிகளை மனிதனின் அறிவு கண்டுள்ளது. இந்த நிலையில் நற்பண்புகள் விலகித் தானே போகும்!

6.4 இழப்பும் ஆக்கமும்

கோவலன் மனைவியை விட்டுப் பிரிந்து திரிந்தான்; ஊரெங்கும் உலாவினான். மாதவியைச் சார்ந்து மயங்கினான். உதயகுமரன் மணிமேகலையைக் கவர்ந்து கொள்ள அலைந்தான். சாதுவன் சூதாடிப் பொருளையெல்லாம் தோற்றான். இவையெல்லாம் பழந்தமிழ் நாட்டில் நடக்கவில்லையா? நடந்தன. ஆனால் இவர்கள் ஒரு நிலையில் திருந்தினர். இனி இவ்வாறு வாழக் கூடாது எனக் கருதினர். இன்றைய சமூகத்தில் திருந்துதல் குறைவு; திருத்தும் சாதனங்களும் குறைவு. மேலே கழிந்தன என்று சொன்னோமே; அவையெல்லாம் இழப்புகள்.

தமிழன் இழந்தவற்றுள் பெரும் வருத்தம் தருவது எது? அவன் மெல்ல மெல்லத் தமிழன் என்ற அடையாளத்தை மறந்ததுதான்! அவனுடைய வாழ்க்கையிலிருந்து பல கட்டங்களில் தமிழ் விலக்கி வைக்கப்பட்டிருப்பதுதான். பல மொழிப் பண்டிதனாக அவன் மாறிவிட்டானா? அப்படி ஒன்றும் இல்லை!

வணக்கம் பலமுறை சொன்னேன் தமிழ்மகள் கண்ணே!

என்ற திரைப்படப் பாடல் நீங்கள் கேட்க வில்லையா? எத்தனை பேர் வணக்கம் கூறக் கேட்கிறோம். குட் மார்னிங் என்பது எவ்வளவு இயல்பாக வருகின்றது! சீனர்கள் தங்கள் மொழியை இழக்கவில்லை; பிரெஞ்சுக்காரர் தம் மொழியை இழக்கவில்லை. தமிழன் தன் மொழியை இழந்து நிற்கிறான். பண்பாட்டில் ஏற்பட்ட மாபெரும் இழப்பு இது.

ஆக்கங்களே இல்லையா எனக் கேட்கலாம். ஏன் இல்லை? இதோ, நோக்குங்கள்!

1. கல்வி நீரோடை போல எல்லார்க்கும் உரியதாகிவிட்டது. நூற்றுக்கு நூறு விழுக்காடு கற்ற சமூகம் உருவாகிவிட்டது.

2. புதுமைகள் பலப்பல வீட்டிலும் நாட்டிலும் தோன்றியுள்ளன.

3. மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்நுட்பத் துறைகள் பெருக வளர்ந்து நாட்டு மக்களின் வாழ்க்கை நலன்களைக் கூட்டியிருக்கிறது.

4. தமிழ்நாடு உலகனைத்தையும் உற்றுப் பார்க்கிறது; உலகெங்கினும் தமிழர்கள் பரந்துள்ளனர்; உலகம் தமிழ்நாட்டை உற்றுப் பார்க்கிறது. திருக்குறளை இசையோடு படிக்கிறது. திருவாசகம் கேட்டு அழுகிறது.

5. தமிழன் அமெரிக்கப் பெண்ணை மணந்து கொண்டு ஆஸ்திரேலியாவில் குடியேறி ஆங்கிலத்தைத் தாய்மொழி போல் ஆங்கிலேயர் வியக்கப் பேசி, ஜப்பானில் கருவிகள் வாங்கி உலகச் சந்தையில் வணிகம் செய்து, வீட்டுக்கு வந்து தன் அம்மா இறந்த செய்தி கேட்டு அழுது கலங்கிக் குழந்தை போலாகிச் சடங்குகளிலும், பழக்கவழக்கங்களிலும்தான் தமிழன் என்பதை நினைந்து வாழ்கிறான்.

6. குடும்பம் மனைவி, குழந்தை, தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, தாய்மாமன், மைத்துனன் எனத் தலைமுறைகளுக்கு உறவு வலை பின்னிக்கொண்டு வாழ்கிறான்.

7. விமானத்தில் பறக்கும்போது வயது மிகுந்து வருதல் உணர்ந்து பட்டினத்தார் பாடலை மெல்ல மனம் அசை போட மூதாதையர்கள் வாழ்ந்த சுவட்டை மறக்காமல் பற்றிக் கொள்கிறான்.

இப்படி எத்தனையோ? தமிழனுடைய தாய் பாசத்தையும், தங்கை பாசத்தையும் மையமாக வைத்து எத்தனையோ திரைப்படங்கள் காசு பண்ணிவிட வில்லையா?

6.5 வாழும் பண்பாடு : சில காட்சிகள்

தமிழ்ப் பண்பாடு என்றும் அழியாது! ஏன்? உலகில் எங்கெல்லாம் மனிதநேயம் நிலவுகிறதோ அங்கெல்லாம் தமிழ்ப் பண்பாடு நிலவும். எங்கெல்லாம் பகைவனுக்கு அருள்வாய் என்ற உணர்வு பிறக்கிறதோ அங்கெல்லாம் தமிழர் பண்பாடு இருக்கும். தனக்கு இருக்கும் ஒரு கவள உணவைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டுத் தான் பசியாற நினைக்கும் நினைவு எங்கு இருக்கிறதோ அங்கே தமிழன் குணம் இருக்கும். புகழோடு இறக்கவேண்டுமென்ற துடிப்பு எங்கே வாழ்கிறதோ அங்கே தமிழ்ப்பண்பு வாழும். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக மலர்ந்து மணம் வீசிய பண்பு மாறிவிடுமா? மாறாது! அப்பண்பாடு தமிழர் குருதிக்குள் புதை நினைவில் புலப்படாமல் இருக்கும். அப்பண்பாட்டு மரபில் பிறந்தவன் சூழ்நிலையால் திருடனாக மாறினாலும் ஏழை வீட்டில் திருட மாட்டான்; செல்வனிடம் கவர்ந்த பொருளைத் தன்னைப் போன்ற ஏழைகளுக்குப் பங்கிடுவான். அவன் போரிலே ஈடுபட்ட போதும் கண்டவர் மார்பில் எல்லாம் வாளைச் செருக மாட்டான். தன்னைவிட மூத்தவர் அல்லது இளையவர் மார்பை அவன் வாள் தீண்டாது. புத்தரின் எளிமை, மகாவீரரின் உறுதி, இயேசுவின் இரக்கம், முகமதுவின் தோழமை, நாயன்மார்களின் மனிதநேயம், ஆழ்வார்களின் இயற்கை அன்பு ஆகியன எல்லாம் தமிழனின் பண்புகளே. அவை எங்கெங்கே இருந்தாலும் அவை அடிப்படையில் தமிழர் பண்பாட்டின் உயிர்ப்புகளே ஆகும்.

• உன்னதக் காதல்

எவ்வளவு வெட்கம் இந்தப் பெண்ணுக்கு! தன்னோடு வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்று வயதான இந்தக் கணவனை இந்த வயதான பெண் பிறர் முன்னிலையில் அத்தான் என்று உறவு முறை சொல்லி அழைப்பதற்கும் கூசுகின்றாளே!

இதோ சிலந்திக் கூடு கட்டியது போல் முகம் சுருங்கிக் கண் பார்வை மழுங்கிக் கூனல் விழுந்த கிழவி கொல்லைப் பக்கம் உட்கார்ந்திருக்கிறாள். இவளுடைய கணவன், காதலன், உயிர்த் தலைவன் தெருத் திண்ணையில். என்ன சொல்கிறான் இந்தக் கிழவன்?

புதுமலர் அல்ல; காய்ந்த

புற்கட்டே அவள் உடம்பு

சதிராடும் நடையாள் அல்லள்

தளர்ந்து விழும் மூதாட்டி!

மதியல்ல முகம் அவட்கு!

வறள்நிலம்; குழிகள் கண்கள்

எதுஎனக்கு இன்பம் நல்கும்?

இருக்கின்றாள் என்ப தொன்றே!

இருக்கின்றாள் என்றாலே போதுமாம். உடம்பைத் தாண்டி, ஐம்புலன்களைத் தாண்டி, ஆன்மாக்களின் சங்கமமாய் விளங்கும் இந்த உன்னதக் காதல்தான் தமிழ்ப் பண்பாட்டின் வேர்!

• மாற்றங்களின் ஊடே ஒரு நிலைபேறு

வேட்டியும் துண்டும் விடை பெற்றுக்கொண்டிருக்கின்றன. சேலையும் மேற்சட்டையும் அளவு குறைந்து ‘சுடிதார்’ கவுனாய், குட்டைப் பாவாடையாய், வண்ணச் சராயாக மாறிக்கொண்டிருக்கின்றன. தாம்பூலச் சிவப்பை ‘லிப்ஸ்டிக்’ பிடித்துக் கொண்டது.

குதி உயர்ந்த செருப்பால் நடைமாறிக் கொண்டிருக்கிறது. வேர்க்கின்ற கோடையிலும் இறுக்கும் ‘டை’யை அவிழ்க்க மனம் இடம் கொடுக்கவில்லை. தொலைபேசியில் ஒரு ஹலோ; அம்மாவை மம்மியாக்கும் அன்பு; ஆசையாய்ப் படிக்க ஒரு ‘இங்கிலீஷ் மீடியம்’; கொச்சையாய்ப் பிழையாய்க் கொஞ்சம் தமிழ். இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டபோதும், இந்தப் போர்வைகளுக்கெல்லாம் உள்ளே உள்ளத்தின் அடித்தளத்தில் தமிழ்ப் பண்பாடு கொலுவிருக்கத்தான் செய்கிறது. இதோ இந்த உள்ளத்தை அசைக்க

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே!

அன்பினில் விளைந்த ஆரமுதே!

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

புழுத்தலைப் புலையனேன் தனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த

செல்வமே சிவபெரு மானே!

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவது இனியே!

என்ற ஒரு பாட்டுப் போதாதா? இப்பாட்டில் உள்ள சமயக் கருத்து உலகின் பல மூலையிலும் உள்ள தமிழனை உலுக்கவில்லையா? அன்பினுக்கு இரங்கும் ஒரு எளிய தமிழ் உள்ளம் கசிந்து நிற்கும் அந்த உருக்கம் எந்த மனிதனையும் அசைக்குமே! மாற்றங்களுக்கு நடுவில் தமிழ்ப் பண்பாடு அடித்தளத்தில் பெரிய மாற்றமின்றி இருக்கிறது.

• பண்பாட்டு வங்கியில் புதிய ஆக்கங்கள்

தமிழன் இன்று உலக மனிதனாக உருவெடுத்திருக்கிறான். அவனுடைய அறிவு அகன்றுள்ளது. பல்துறை வித்தகத்தை எல்லாம் அவன் தமிழில் கொண்டுவர முயல்கின்றான். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா நாடுகளில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் குடியேறி அந்தந்த நாடுகளின் பொருளாதார அச்சாணியாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். அவனுடைய வாழும் எல்லை மிகப் பெரிதாகி இருக்கிறது; அவனது சிந்தனை வீச்சு துருவங்களை அசைக்கிறது. இவ்வாறு தமிழன் தன் பண்பாட்டு வங்கிக்குப் பல ஆக்கங்களைச் சேர்த்து வருகிறான்.

6.6 நிலைபேறானவை

சுமைதாங்கிக் கல் ‘ஆ உரிஞ்சு கல்’

தமிழர் பண்பாட்டில் நிலை பேறானவை எவை? தமிழர் வாழ்க்கை ஒரு மையத்தைவிட்டு அதிகம் விலகவில்லை. அது எந்த மையம்? இதோ ஒரு சுமைதாங்கிக் கல் நிற்கிறது பாருங்கள்! எதற்கு? யாராவது சுமையோடு வருபவர்கள் இறக்கி வைத்து ஓய்வு கொள்ளவாம். இதோ ஒரு கல் நட்டு வைக்கப்பட்டுள்ளதே ஏன்? பசு மாடுகள் உடம்பில் தினவு ஏற்படும்போது உராய்ந்து கொள்ளவாம். இதற்கு ஆ உரிஞ்சு கல் என்று பெயராம். இதோ ஒருவர் கீற்றுப் பந்தலிட்டு நீரும் மோரும் வைத்துக் கொண்டு கோடை வெயிலில் உட்கார்ந்திருக்கிறாரே யாருக்காக? வழிப் போவோர்களுக்காகவாம். எறும்புகளின் புற்றில் ஒரு பெண் அரிசியைத் தூவுகிறாள் பாருங்கள்!

உண்ணுமுன் ஒருத்தி காக்கையை ஏன் அழைக்கிறாள்? காக்கை உண்ட பிறகே உண்ண வேண்டுமாம். இப்படி அஃறிணை உயிர்களிலிருந்து உயர்திணை மனிதர்கள் வரையில் எல்லா உயிர்க்கும் ‘தருமம்’ செய்து வாழும் உள்ளம், வாழ்க்கையின் நிகழ்ச்சிகளில் அறம் அடிப்படையாகி உள்ள நிலை இதுவே தமிழ்ப் பண்பாட்டின் நிலைபேற்றுக்குக் காரணம்.

எல்லார்க்கும் நல்லன செய்யவேண்டும். தீயவற்றை மறந்தும் செய்யக் கூடாது. தீமை பிறர் செய்து வருவதில்லை. அதற்கு நம் விதியே காரணம். நம் துன்பம், நம் நோய், நம் வறுமை இவற்றுக்கெல்லாம் யாரும் காரணமில்லை. நாமே, நம் விதியே, நம் முன்னை வினையே காரணம் என்று கருதும் மனம் யாருக்கு என்ன தீங்கு செய்ய முடியும்? இதுவும் பண்பாட்டின் நிலைபேற்றுக்கான காரணமே!

பாலைப் பொழிந்துதரும் பாப்பா – அந்தப்

பசுமிக நல்லதடி பாப்பா;

வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது

மனிதர்க்குத் தோழனடி பாப்பா

வண்டி இழுக்கும் நல்ல குதிரை – நெல்லு

வயலில் உழுதுவரும் மாடு

அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு – இவை

ஆதரிக்க வேணுமடி பாப்பா.

என்று எளிய உயிர்களையும் சுற்றமாக்கி வாழும் பண்பாடு என்றும் நிலைபெற்ற பண்பாடாக இருப்பதில் என்ன வியப்பு?

6.7 தொகுப்புரை

தமிழ் நெஞ்சங்களே! சான்றோர்களே! இரண்டாயிரம் ஆண்டுக் காலத் தமிழர் பண்பாட்டை இங்கே கண்டீர்கள். காலம் அழிந்தாலும், வானும் நதியும் மாறினாலும், தமிழனின் பண்பாட்டுக் கூறுகள் சில மாறாமல் நிலைபேறு உடையனவாய்த் திகழ்கின்றன. மனித நல்லிணக்கமும், உயிரிரக்கமும், உடன்பிறப்புப் பண்பும், மாசற்ற தூய உள்ளமும், உயிரோடு பிணைந்த காதலும், எந்த நிலையிலும் உடையாத குடும்ப உறவும் அப்பண்பாட்டின் நிலைபேற்றுக்கு வழிவகுத்தவை எனலாம்.