அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் ‘ ஐ ’ யென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் ( எழுத்து .
56 )
என்னும் தொல்காப்பிய நூற்பாவில் , அகர உயிர் யகர மெய்யுடன் இணைந்து ஐ காரம் தோன்றுகிறது என்று விளக்குகின்றார் .
எனவே பிற்காலத்தில் மொழிநூல் அறிஞர்கள் ஆய்ந்து கண்ட ‘ கூட்டொலி ’ பற்றிய கருத்தினைத் தொல்காப்பியர் எண்ணிப் பார்த்து விளக்க முற்பட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது .
தொகுப்புரை
இந்தப் பாடத்தில் , தமிழ் முதல் எழுத்துகள் முப்பதில் அடங்கி இருக்கும் பன்னிரண்டு உயிர்எழுத்துகளும் கழுத்தில் இருந்து பிறக்கின்றன என்பதை அறிந்து கொண்டீர்கள் .
தொல்காப்பியமும் நன்னூலும் உயிர்எழுத்துகள் பிறப்பதற்கு இடம் கழுத்து என்றும் , ஆனால் அந்த உயிர்எழுத்துகள் மூன்று வித முயற்சியினால் பிறக்கின்றன என்றும் சுட்டிக் காட்டின .
அ , ஆ வாயைத் திறத்தலாலும் , இ , ஈ , எ , ஏ , ஐ ஆகியவை மேல்வாய்ப் பல்லை நாக்கின் அடிப்பகுதி சென்று பொருந்துவதாலும் , உ , ஊ , ஒ , ஓ , ஒள ஆகியவை இதழ்குவிதல் என்ற முயற்சியாலும் பிறக்கின்றன என்பதையும் கண்டோம் .
தொல்காப்பியமும் நன்னூலும் உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் பற்றிக் கூறிய கருத்துகளில் காணப்பட்ட ஒற்றுமை வேற்றுமைகளைத் தொகுத்துக் கண்டோம் .
அதைப்போலவே உயிர்ஒலிகள் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சிகளை விளக்கும் இடத்து இந்த இரு இலக்கண நூல்களும் தெரிவித்த கருத்துகளின் ஒற்றுமையைப் பார்த்தோம் .
தமிழ் இலக்கண நூல்கள் உயிரொலிகளின் பிறப்புப் பற்றித் தெரிவித்த கருத்துகளை மொழிநூலார் கருத்துகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது .
அவ்வாறு கண்டதில் மொழிநூல் அறிஞர்கள் உயிர்ஒலிகளைப் பகுத்த முறையிலேயே தமிழ் இலக்கண நூல்களும் தமிழ் உயிர்ஒலிகளைப் பகுத்துள்ளன என்பதைக் காண முடிந்தது .
இது , தமிழ் இலக்கண நூல்கள் , மொழியை , அறிவியல் நெறியோடு அணுகிய நுட்பத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. பன்னிரண்டு உயிர்எழுத்துகளும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சிகள் எத்தனை ?
அவை யாவை ?
விடை
2. ‘ அ , ஆ ’ ஆகிய இரண்டும் எவ்வாறு பிறக்கின்றன ?
விடை
3. இ , ஈ , எ , ஏ , ஐ ஆகிய ஐந்தும் எவ்வாறு பிறக்கின்றன ?
விடை
4. உ , ஊ , ஒ , ஓ , ஒள ஆகியவை எவ்வாறு பிறக்கின்றன ?
விடை
5. மொழி நூலார் கருத்துப்படி உயிர்ஒலிகள் எத்தனை ?
அவை யாவை ?
மெய்யெழுத்துகளின் பிறப்பு
பாட முன்னுரை
முதற்பாடத்தில் எழுத்துகளின் பிறப்புப் பற்றிய பொதுவான கருத்துகளைத் தெரிந்து கொண்டீர்கள் .
இரண்டாம் பாடத்தில் உயிர்எழுத்துகள் பிறப்பது குறித்து அறிந்து கொண்டீர்கள் .
முதல் எழுத்துகள் முப்பது என்பதை நாம் முன்னரே கண்டோம் .
அவற்றுள் பன்னிரண்டு உயிர்எழுத்துகளும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் அடங்கும் .
உயிர்எழுத்துகள் பன்னிரண்டு நீங்கலாக எஞ்சியிருக்கும் பதினெட்டு மெய்யெழுத்துகளின் பிறப்புக் குறித்து இப்பாடத்தில் அறிந்து கொள்வோம் .
அவற்றுடன் சார்பெழுத்துகளின் பிறப்புப் பற்றியும் இப்பாடத்தில் காண்போம் .
மெய்யெழுத்துகள் தோன்றுகின்ற முறை குறித்து அறிந்து கொள்வதற்கு முன்னர் , மெய்யெழுத்துகள் அமைக்கப்பட்டிருக்கும் வரிசை முறையை அறிந்து கொள்வது நல்லது .
மெய்யெழுத்துகள் வல்லினம் , மெல்லினம் , இடையினம் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன .
ஆனால் அவை இந்த மூன்று வரிசைப்படி அடுக்கப்படவில்லை .
மெய்யெழுத்துகள் பதினெட்டில் முதலில் வரும் பத்து எழுத்துகள் ஒரு வல்லினம் , ஒரு மெல்லினம் என்ற அமைப்பில் அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருக்கின்றன .
அதன் பின்னர் இடையின எழுத்துகள் ஆறும் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளன .
கடைசியில் இருக்கும் இரண்டு எழுத்துகளும் ஒரு வல்லினம் , ஒரு மெல்லினம் என்ற முறையில் அமைந்துள்ளன .
மெய்யெழுத்துகளின் வகைப்பாடு :
வல்லினம் : க் , ச் , ட் , த் , ப் , ற்
மெல்லினம் : ங் , ஞ் , ண் , ந் , ம் , ன்
இடையினம் : ய் , ர் , ல் , வ் , ழ் , ள்
இப்போது மெய்யெழுத்துகள் அமைக்கப்பட்டிருக்கும் முறையைப் பாருங்கள் .
முதல் பத்து எழுத்துகள் கடைசி எட்டு எழுத்துகள்
க் - வல்லினம்
ங் - மெல்லினம்
ச் - வல்லினம்
ஞ் - மெல்லினம் ட் - வல்லினம்
ண் - மெல்லினம்
த் - வல்லினம்
ந் - மெல்லினம்
ப் - வல்லினம்
ம் - மெல்லினம்
ய் இடையின மெய்கள்
ர்
ல்
வ்
ழ்
ள்
ற் - வல்லினம்
ன் - மெல்லினம்
முதலில் மெய்யெழுத்துகள் பிறப்பது பற்றித் தொல்காப்பியம் தெரிவிக்கும் கருத்துகளைக் காண்போம் .
மெய்யெழுத்துகள் பிறப்பு - நன்னூலார் கருத்து
மெய்யெழுத்துகளின் பிறப்புக் குறித்து நன்னூலார் தெரிவிக்கும் கருத்துக்களையும் இங்குக் காண்போம் .
நன்னூலாரும் வல்லின , மெல்லின , இடையின மெய்களின் பிறப்பிடத்தையும் அவை பிறப்பதற்குத் தேவைப்படும் உறுப்புகளின் முயற்சியையும் தனித்தனியே விளக்குகிறார் .
3.2.1 மெய்யெழுத்துகளின் பிறப்பிடம்
நன்னூலார் உயிர்எழுத்தொலிகளின் பிறப்பிடத்தைக் கூறிய இடத்திலேயே மெய்களின் பிறப்பிடத்தையும் கூறியுள்ளார் .
நன்னூலார் தெரிவிக்கும் மெய்யொலிகளின் பிறப்பிடத்தைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம் .
அவை ,
( 1 ) வல்லின மெய்கள் பிறக்குமிடம் : மார்பு
( 2 ) மெல்லின மெய்கள் பிறக்குமிடம் : மூக்கு
( 3 ) இடையின மெய்கள் பிறக்குமிடம் : கழுத்து
என்பன .
இதனை ,
அவ்வழி
ஆவி இடைமை இடம் மிடறு ஆகும் .
மேவும் மென்மை மூக்கு , உரம்பெறும் வன்மை
( நூற்பா .
74 )
என்னும் நூற்பா விளக்குகின்றது .
இந்நூற்பா இடையின மெய்களும் உயிர்எழுத்துகளும் கழுத்தில் ( மிடறு ) இருந்து பிறக்கின்றன என்பதைச் சேர்த்து உரைக்கின்றது .
உரம் என்பது நெஞ்சு , மார்பு என்று பொருள்படும் .
3.2.2 வல்லின மெல்லின மெய்களின் பிறப்பு
தொல்காப்பியத்தைப் போலவே , நன்னூலும் வல்லெழுத்துகள் மற்றும் மெல்லெழுத்துகளின் பிறப்பினை இணைத்தே விளக்குகின்றது .
வல்லெழுத்துகள் ஆறும் மெல்லெழுத்துகள் ஆறும் பிறக்கின்ற முறையை நன்னூல் நான்கு நூற்பாக்களில் எடுத்துக் கூறுவதைக் காண்கிறோம் .
அவை ,
( 1 ) க் , ங் , ச் , ஞ் , ட் , ண் - பிறக்கும் முறை .
( 2 ) த் , ந் - பிறக்கும் முறை
( 3 ) ப் , ம் - பிறக்கும் முறை
( 4 ) ற் , ன் - பிறக்கும் முறை - என்பன .
3.2.3 க் ங் , ச் ஞ் , ட் ண் - மெய்கள் பிறப்பு
நன்னூல் க் , ச் , ட் என்னும் மூன்று வல்லின மெய்களும் , அவற்றுக்கு இனமான மூன்று மெல்லின மெய்கள் ங் , ஞ் , ண் ஆகியனவும் பிறக்கும் முறையை ஒரே நூற்பாவில் விளக்குகிறது .
நாவின் அடி மேல்வாயின் அடியைச் சென்று பொருந்தினால் க் , ங் பிறக்கும் ;
நாவின் நடுப்பகுதி மேல்வாயின் நடுப்பகுதியைச் சென்று பொருந்தும் நிலையில் ச் , ஞ் என்னும் மெய்கள் தோன்றும் ;
நாவின் நுனிப்பகுதி மேல்வாயின் நுனியைச் சென்று பொருந்தும்போது ட் , ண் மெய்கள் பிறக்கும் .
இதனை ,
கஙவும் சஞவும் டணவும் முதல்இடை நுனிநா அண்ணம் உறமுறை வருமே ( நூற்பா .
78 )
என்னும் நன்னூல் நூற்பா எடுத்துரைக்கின்றது .
இந்நூற்பாவில் ‘ முதல் இடை நுனி ’ என்பதை ,
முதல்நா முதல் அண்ணம் என்றும் ,
இடைநா இடை அண்ணம் என்றும் ,
நுனிநா நுனி அண்ணம் என்றும்
விரித்துப் பொருள் காண வேண்டும் .
3.2.4 த் ந் - மெய்கள் பிறப்பு
த் , ந் என்னும் மெய்கள் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துகின்ற போது தோன்றுகின்றன .
இதனை ,
அண்பல் அடிநா முடியுறத் த , ந வரும் ( நூற்பா .
79 )
என்னும் நன்னூல் நூற்பா விளக்குகின்றது .
இந்நூற்பாவில் ‘ அண்பல் ’ என்பது ‘ மேல்வாய்ப்பல்லின் அடிப்பகுதி ’ என்று பொருள்படும் .
3.2.5 ப் ம் - மெய்கள் பிறப்பு
நன்னூல் ப் , ம் மெய்கள் தோன்றும் முறையைச் சற்றுத் தெளிவாக விளக்குகின்றது .
மேல்உதடும் , கீழ்உதடும் தம்முள் பொருந்தினால் அப்போது ப் , ம் பிறக்கும் என்று கூறுகின்றது .
மீகீழ் இதழ்உறப் பம்மப் பிறக்கும் ( நூற்பா .
80 )
என்பது நன்னூல் நூற்பா .
இந்த நூற்பாவில் மீ என்பது மேல் என்று பொருள்படும் .
எனவே மேல் இதழும் கீழ் இதழும் பொருந்த ( உற ) ப் , ம் என்னும் மெய்கள் பிறக்கும் என்று அறியலாம் .
3.2.6 ற் ன் - மெய்கள் பிறப்பு
மெய்யெழுத்துகளின் வரிசையில் கடைசியாக இருப்பவை ற் , ன் என்பன .
இவை , மேல்வாயை நாவின் நுனி மிகவும் ( நன்றாகப் ) பொருந்தினால் பிறப்பவை என்பது நன்னூல் கூறும் விளக்கம் ஆகும் .
இதனை ,
அண்ணம் நுனிநா நனிஉறின் ற , ன வரும் ( நூற்பா .
85 )
என்னும் நூற்பா தெளிவுபடுத்துகின்றது .
இந்நூற்பாவில் வரும் ‘ நனி ’ என்னும் சொல் நன்றாக என்னும் பொருளைத் தருவதாகும் .
மெய்யெழுத்துகளின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும்
மெய்யெழுத்துகளின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளை ஒப்பிட்டுக் காணலாம் .
முதலில் அவை இரண்டிற்கும் இடையில் காணப்படும் ஒற்றுமைகளைக் காண்போம் .
3.3.1 ஒற்றுமைகள்
( 1 ) இரு நூல்களும் மெல்லின மெய்கள் மூக்கில் இருந்து தோன்றுகின்றன என்று கூறுகின்றன .
( 2 ) இரு நூல்களும் இடையின மெய்கள் கழுத்தில் இருந்து தோன்றுகின்றன என்பதில் ஒற்றுமையாக இருக்கின்றன .
3.3.2 வேற்றுமை
தொல்காப்பியம் வல்லின மெய்கள் தலையில் இருந்து தோன்றுகின்றன என்று கூறுகிறது .
நன்னூலோ வல்லின மெய்கள் நெஞ்சில் இருந்து பிறக்கின்றன என்று உரைக்கின்றது .
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. தமிழில் மெய்யெழுத்துகளின் வரிசை முறையில் ( நெடுங்கணக்கில் ) காணப்படும் நுட்பத்தை விளக்குக .
விடை
2. மெய்யொலிகளின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியம் தெரிவிக்கும் கருத்துகள் யாவை ?
விடை
3. நன்னூல் மெய்யொலிகளின் பிறப்பிடம் குறித்துத் தெரிவிக்கும் செய்திகள் யாவை ?
விடை
4. க் ங் , ச் ஞ் , ட் ண் ஆகிய மெய்கள் பிறக்கும் முறையை விளக்குக .
விடை
5. த் ந் , ப் ம் , ற் ன் எவ்வாறு பிறக்கின்றன ? விடை
6. வல்லின மெல்லின மெய்களின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளின் ஒற்றுமை வேற்றுமைகளை விளக்குக
இடையின மெய்களின் பிறப்பு
வல்லின மெல்லின மெய்யெழுத்துகளின் பிறப்பினைப் பற்றிய செய்திகளை விரிவாகக் கண்டோம் .
மெய்யெழுத்துகளில் இனி எஞ்சி இருப்பவை இடையின எழுத்துகள் ஆகும் .
இடையின எழுத்துகள் ய் , ர் , ல் , வ் , ழ் , ள் என்ற வரிசையில் அமைந்துள்ளன .
இவை பிறப்பதற்கு ஒலி உறுப்புகள் செயற்படும் முறையை இனிக் காண்போம் .
ஆறு இடையின எழுத்துகள் அவை பிறக்கும் இயல்பிற்கு ஏற்ப நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன .
அவை ,
( 1 ) ய்
( 2 ) ர் ழ்
( 3 ) ல் ள்
( 4 ) வ்
என்பன .
3.4.1 தொல்காப்பியமும் நன்னூலும்
இடையின மெய்களின் பிறப்பினை விளக்குவதில் தொல்காப்பியமும் நன்னூலும் பெரிதும் வேறுபடவில்லை .
எனவே , அவை ஒவ்வொரு இடையின மெய்யெழுத்தினையும் விளக்குவதைச் சேர்த்தே அறிந்து கொள்ளலாம் .
3.4.2 யகர மெய்யெழுத்தின் பிறப்பு
யகர மெய் , மேல்வாயை நாவின் அடிப்பகுதி சேரும் போது , கழுத்தில் இருந்து எழும் காற்று மேல்வாயைச் சென்று அடையப் பிறக்கும் என்று தொல்காப்பியம் கூறுகிறது .
யகர மெய் பிறப்பதை நன்னூலும் ,
அடிநா அடிஅணம் உறயத் தோன்றும் ( நூற்பா .
81 )
என்ற நூற்பாவில் விளக்குகின்றது .
நாக்கின் அடியானது மேல்வாய் அடியைச் சென்று பொருந்த யகரம் பிறக்கும் என்று நன்னூல் சுருக்கமாகக் கூறுகின்றது .
3.4.3 ர ழ - மெய்களின் பிறப்பு
மேல்வாய் நுனியை நாக்கின் நுனி வருடும் போது ர் , ழ் மெய்கள் தோன்றுகின்றன எனத் தொல்காப்பியமும் நன்னூலும் கூறுகின்றன .
ரகர , ழகர மெய்களின் பிறப்பினை நன்னூல் ,
அண்ணம் நுனிநா வருட ர ழ வரும் ( நூற்பா .
82 )
என்று கூறுகின்றது .
3.4.4 ல் ள் - மெய்களின் பிறப்பு
ல் ள் என்னும் இரண்டு இடையின மெய்களும் உச்சரிப்பில் சிறிதளவே வேறுபாடு உடையவை .
எனினும் அவற்றிற்கு இடையில் வேறுபாடு தோன்றுமாறு ஒலித்துப் பழகுவதே சிறப்பு .
மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியை நாவின் ஓரமானது ( விளிம்பு ) தடித்துப் பொருந்தும் ( ஒற்றும் ) போது லகர மெய் தோன்றும ; மேல்வாயை நாவின் ஓரமானது தடித்துத் தடவ ( வருட ) ளகர மெய் தோன்றும் .
இதனை ,
நன்னூல் பின்வரும் நூற்பாவில் விளக்குகின்றது .
அண்பல் முதலும் அண்ணமும் முறையின் நாவிளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும் லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும் ( நூற்பா .
83 )
3.4.5 வகர மெய்யின் பிறப்பு
மேற்பல் கீழ் இதழோடு இயைந்து பொருந்த வகர மெய் தோன்றுகிறது .
இதனைத் தொல்காப்பியம் ,
பல்இதழ் இயைய வகாரம் பிறக்கும் ( எழுத்து .
3 : 98 )
என்று கூறுகிறது .
இக்கருத்தையே நன்னூலும் ,
மேற்பல் இதழ்உற மேவிடும் வவ்வே ( நூற்பா .
84 )
என்று விளக்கிக் கூறுகின்றது .
தொல்காப்பியம் பல் , இதழ் என்று பொதுவாகக் கூறியிருப்பதைச் சற்று விளக்கமாக மேற்பல் என்றும் கீழ் இதழ் என்றும் நன்னூல் பிரித்துக் காட்டி விளக்கியுள்ளதை உணர வேண்டும் .
சார்பெழுத்துகளின் பிறப்பு இதுவரை பதினெட்டு மெய்யெழுத்துகளும் பிறக்கின்ற முறையினைக் கண்டோம் .