காவிரி, அமராவதி, வைகை, தென்பெண்ணை, பாலாறு முதலிய ஆற்றுப்படுகைகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் நாணயங்கள் குவியலாகவும், தனியாகவும் கிடைத்தன. வரலாற்றை எழுத வேறு சரியான சான்றுகள் கிடைக்காதபோது நாணயங்கள் மிகச் சிறந்த ஆதாரமாகத் திகழ்கின்றன. நாணயங்களில் ஆட்சியாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதால் கல்வெட்டுகளைப்போல் அவை வரலாற்றுக்கு உதவுகின்றன.
சோழர் காசு சுந்தரபாண்டியன் காசு
(முன்பக்கம், பின்பக்கம்)
முதலில் கல்லின் மீது எழுத வேண்டிய செய்தியை ஓவியம்போல் வரைவார்கள். பின்பு அதன்மீது கூர்மையான உளி போன்ற கருவியால் வெட்டுவார்கள். வெட்டிய எழுத்துகள் கல்லில் சிறிது பள்ளமாகத் தோன்றும். கல்லில் வெட்டப்பட்டிருப்பதால் அவை கல்வெட்டுகள் எனப்படும். கல்லைக் குறிக்கச் சிலை என்ற ஒரு சொல்லும் உண்டு. அறிவிக்கும் செய்தி அல்லது உத்தரவு சாசனம் எனப்படும். அதனால் கல்வெட்டைச் சிலாசாசனம் எனவும் கூறுவர் (சிலை+சாசனம்=சிலாசாசனம்).
• கல்வெட்டின் மூலம்
கல்வெட்டுச் செய்திகள் முதலில் ஓலையில் எழுதப்பட்டன. பின்னர் அவை கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டன. சில செப்பேடாகவும் எழுதப்பட்டன. பல கல்வெட்டுகளில் ‘இந்த ஓலையை ஆதாரமாகக் கொண்டு கல்லிலும், செம்பிலும் எழுதிக் கொள்ளலாம்’ என்று எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.
• கிடைக்கும் இடங்கள்
பழங்காலக் கல்வெட்டுகள் தமிழக மலைக் குகைகளிலும், சங்ககால நடுகற்களிலும், தொல்லியல் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளிலும் கிடைக்கின்றன. முத்திரைகளிலும், மோதிரங்களிலும், பழமையான காசுகளிலும் கல்வெட்டுகளை ஒத்த எழுத்துப் பொறிப்புகள் உள்ளன.
• படி எடுப்போர்
மைய அரசின் தொல்லியல் அளவீட்டுத்துறையின் கல்வெட்டுப் பிரிவினர், தமிழகத் தொல்லியல் துறையினர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் தொல்லியல் – கல்வெட்டுத் துறையினர் ஆகியோர் கல்வெட்டுகளைப் படி எடுத்து ஆய்வு செய்கின்றனர்.
• உரைநடை
கி.பி. 926ஆம் ஆண்டு, முதல் பராந்தக சோழனின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டில் திருவிசலூர்ச் சிவபெருமானுக்கு, கிளிநல்லூர் உடையான் பாகன் சர்வதேவன் என்பவன் 96 ஆடுகள் கொடுத்து ஒரு நந்தா விளக்கு வைத்தான். இதை அக்கோயிலில் உள்ள கல்வெட்டு, பின்வருமாறு உரைநடையில் கூறுகிறது :
ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட
கோப்பரகேசரி வன்மர்க்கு
யாண்டு 22 ஆவது வட
கரைத் தேவதான பிரமதேய
ம் அவநிநாராயணச்ச
துர்வேதிமங்கலத்துத் தி
ருவிசலூ ர்ப் பெருமானடி
களுக்குக் கிழார்க் கூற்றத்துக் கிளிநல்
லூ ர்க் கிளிநல்லூர்க் கிழவன் பாக
ன் சர்வதேவன் தொண்ணூற்றா றாட்டா
ல் வந்த நெய்கொண்டு சந்திராதித்த
வல் எரிவதற்கு வைத்த நொந்தா விளக்கு
ஒன்று இது ஊர்ப் பெருங்குறி
பெருமக்கள் ரக்ஷை உ
(யாண்டு 22 ஆவது – பராந்தக சோழனின் இருபத்திரண்டாம் ஆட்சி ஆண்டு ; தேவதானம் – கோயில் கொடை ஊர்; பிரமதேயம் – பிராமணர்கட்குக் கொடையாக அளிக்கப்பட்ட ஊர்; சதுர்வேதம் – நான்கு வேதம்; பெருமானடிகள் – சிவபெருமான்; கூற்றம் – நாட்டின் உள்பிரிவு; கிழவன் – உரியவன்; சந்திராதித்தவல் – சந்திர சூரியர் உள்ளவரை; பெருங்குறி – ஊர் ஆளும் சபை; நொந்தா விளக்கு – எப்பொழுதும் எரியும் நந்தாவிளக்கு)
• பாடல் செய்தி
பாடல் கல்வெட்டின் அமைப்பைப் படத்தில் பாருங்கள்.
பாடல் கல்வெட்டு செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், திருப்புட்குழி விசயராகவப் பெருமாள் கோயில் முன் மண்டபத்துக் கிழக்குச் சுவரில் ஒரு பாடல் கல்வெட்டு உள்ளது.
குலசேகர தேவரான சுந்தர பாண்டியன் சிதம்பரம் கோயில்
பொன்வேய்ந்தான்; பல புலவர்களால் பாடல்
பெற்றான்; எம் மண்டலமும் கொண்டான் என்ற சிறப்புப்
பெயரைப் பெற்றான்; தென்னவனான அப்பாண்டிய
மன்னன் வாழ்க
என்று அப்பாடல் கல்வெட்டுக் கூறுகிறது. இந்தப் பாடல் கல்வெட்டை வெட்டி வைத்தவன் சுந்தர பாண்டியனின் உயர் அலுவலனான அழகியான் பல்லவராயன் என்பவன். இச் செய்தியை அப்பாடலின் கீழ் எழுதப்பட்டுள்ள இரண்டு வரி உரைநடைக் கல்வெட்டுக் கூறுகிறது.
•பாடல் வரிவடிவம்
மேற்கண்ட செய்தி, கீழ்க்காணும் பாடலில் உள்ளது. அப்பாடல்
வாழ்க கோயில் பொன்மேய்ந்த மகிபதி
வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்
வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்
வாழ்க சுந்தர மன்னவன் தென்னனேய்என்பதாகும். அதன் கீழ் ‘பெருமாள் குலசேகர தேவர் திருத்தோளுக்கு நன்றாக, எடுத்தகை அழகியான் பல்லவராயர் செய்வித்த தன்மம்’ என்று வெட்டப்பட்டுள்ளது. (பல்லவராயர் என்பது அரசு உயர் அலுவலர்கட்குத் தமிழக அரசர்கள் அளித்த பட்டப் பெயர்களில் ஒன்று; திருத்தோளுக்கு நன்றாக என்றால் உடல் நலத்தின் பொருட்டாகக் கொடுத்த கொடை என்பது பொருள்; கோயில் – சைவர்களுக்குக் கோயில் என்பது சிதம்பரம்; மகிபதி – அரசன்; செந்தமிழ் மாலை – தமிழ் இலக்கியம்)
(1) மங்கலச் சொல்
(2) மெய்க்கீர்த்தி
(3) அரசன் பெயர்
(4) ஆண்டுக் குறிப்பு
(5) கொடை கொடுத்தவர்
(6) கொடைச் செய்தி
(7) சாட்சி
(8) காப்புச் சொல்
(9) எழுதியவர்
• மங்கலச் சொல் – கிரந்தம்
கல்வெட்டின் தொடக்கத்தில் மங்கலச் சொல் அமைந்திருக்கும். பெரும்பாலும் மங்கலச் சொல் ஸ்வஸ்திஸ்ரீ என்று கிரந்த எழுத்துகளில் வடமொழிச் சொல்லாக எழுதப்பட்டிருக்கும். சுபமஸ்து, நமசிவாய, சித்தம் என்ற சொற்கள் அமைந்துள்ள கல்வெட்டுகளும் உண்டு.
• மங்கலச் சொல் – தமிழ் வடிவம்
ஸ்வஸ்திஸ்ரீ என்ற சொல்லை, தமிழில் ஒலி பெயர்ப்புச் செய்து சுவத்திசீ என்றும் சில இடங்களில் குறிக்கப்பட்டிருக்கும். சில கல்வெட்டுகளில் ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என்பதன் மொழிபெயர்ப்பாக நன்மங்கலம் சிறக்க என்றும் எல்லா நன்மையும் பெறுக என்றும் எழுதப் பெற்றிருக்கும்.
• எழுதியவர்
கல்வெட்டை அல்லது செப்பேட்டை யார் எழுதினார்கள் என்ற பெயர் இறுதிப் பகுதியில் இருக்கும். ‘இச் சாசனம் கல்லில் வெட்டினேன் இவ்வூர் அழகிய தச்சன்’, ‘இவ்வெழுத்து வெட்டினேன் காலிங்கராய ஆசாரியன் எழுத்து’ என்பன கல்வெட்டுகளை வெட்டியவர் பெயர்களைக் குறிப்பிடுகின்றன.
இறுதியில் சிவன் கோயில் கல்வெட்டுகளில் ‘பன்மாகேசுவரர் இரட்சை’ என்றும், திருமால் கோயில் கல்வெட்டுகளில் ‘வைஷ்ணவர் இரட்சை’ என்றும் எழுதப் பெற்றிருக்கும்.
சில கல்வெட்டுகளில் இப்பகுதிகளில் ஒன்றிரண்டு குறைவாகவும் இருக்கும்.
தொடக்க காலத்தில் தமிழ் எழுத்துகளில் கல்வெட்டுகள் வெட்டப்பட்டன. பின்னர் காலப்போக்கில் தமிழ் எழுத்துகள் வட்டெழுத்தாகவும், இன்றைய தமிழ் எழுத்துகளின் முன்னோடி எழுத்தாகவும் வரிவடிவ வளர்ச்சி பெற்றன. பெரும்பாலும் வட்ட வடிவங்களில் உள்ளதால் வட்டெழுத்து எனப் பெயர் பெற்றது.
தமிழ் வட்டெழுத்து
• வட்டெழுத்து
வட்டெழுத்து, கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிறிது சிறிதாகத் தமிழ்நாட்டில் வழக்கு இழந்துவிட்டது. முதலாம் இராசராசன் காலத்தில் (985-1014) சில இடங்களில் வட்டெழுத்துகள் இன்றைய தமிழ் வடிவத்திற்கு மாற்றி எழுதப்பட்டன. குற்றாலம் கல்வெட்டு இதனைத் தெரிவிக்கிறது. ‘பழங்கல்வெட்டு வட்டம் ஆகையால் தமிழாக வெட்டித்து’ என்பது கல்வெட்டுத் தொடர்.
வட்டெழுத்து
• தமிழ் எழுத்து
இன்றைய தமிழ் எழுத்துகள் படிப்படியாகக் காலம் தோறும் வளர்ந்து வந்தன. மெய்யெழுத்துகள் புள்ளிபெறும் என்பது இலக்கண விதி; ஆனால் பெரும்பாலும் கல்வெட்டெழுத்துகள் புள்ளி வைத்து எழுதப்படுவதில்லை. உச்சரிப்பில் குறில், நெடில் வேறுபாடு உண்டு என்றாலும், கல்வெட்டுகளில் அவை ஒரே மாதிரியாகத்தான் எழுதப்பட்டிருக்கும். சில பழந்தமிழ்க் கல்வெட்டுகளில் புள்ளிகளும் உள்ளன.
• கிரந்தம்
வடமொழி நாகரி வரிவடித்தில் எழுதப்பட்டது. பல்லவர்கள் காலம் முதல் வடமொழியை எழுத கிரந்தம் என்ற எழுத்துவகை உருவாக்கப்பட்டது. இன்றும் அரிதாகத் தமிழுடன் கலந்து எழுதப்பெறும் ஸ, ஷ, ஜ, ஹ, ஸ்ரீ ஆகியவை கிரந்த வரிவடிவங்களே.
• சொற் பொருள்
கல்வெட்டுகளில் வழங்கிவரும் சில சொற்களுக்குத் தனிப் பொருள் உண்டு. கீழ்க்கண்ட தொடர்களில் உள்ள சொற்களில் பொருளைக் காணுங்கள்.
பயிர் ஏறின நிலம் -
பயிர் விளைந்த நிலம்
ஒட்டிக் குடுத்த பரிசு – எழுதிக் கொடுத்த விதம்
ரண்டு செய்தான் – தீங்கு செய்தான்
பூசைக்கு உடலாக – பூசைக்கு மூலப் பொருள் ஆக
பொன்னை ஒடுக்குதல் – பொன்னைச் சேர்த்தல்
இம்மரியாதையில் – இந்த முறையில்
கல்வெட்டுச் சொற்களுக்குத் தனி அகராதிகளும் சில தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் கல்வெட்டுகளின் பொருளை அறியுங்கள்.
• எழுத்து முறை
சொல்லுக்குச் சொல் இடைவெளி விடுவதோ, நிறுத்தக்குறிகள் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, கால்புள்ளி இடும் பழக்கமோ இல்லை. மிக அரிதாகச் சில கல்வெட்டுகள் மெய்ப்புள்ளி பெற்று எழுதப்பட்டிருக்கின்றன. ரகரத்திற்கு இடப்படும் கீழ்க்கோடும் இருக்காது. கரடு என்பது காடு என்றே எழுதப்பட்டிருக்கும். பொருளுக்கு ஏற்ப அதனைக் காடு என்றும், கரடு என்றும் படிக்க வேண்டும். வரிவடிவமும் காலம்தோறும் வேறுபடும்.
• கொடைச் செய்தி
கொடை கொடுத்தவனின் வளநாடு, நாடு, ஊர் முதலிய விபரங்களும், அவன் குடிப் பெயரும் பின்னர் அவனுடைய பெயரும் வெட்டப்பட்டிருக்கும். ‘கேயமாணிக்க வளநாட்டு பட்டினக் கூற்றத்துக் குற்றாலம் உடையான் வேளாளன் காரானை விழுப்பரையன்’ என்ற அமைப்பில் பெயர்கள் காணப்படும். பெண்கள் கொடை அளித்தால் அவர்கள் தந்தை பெயர் அல்லது கணவர் பெயருடன் அவர்கள் பெயர் எழுதப்பட்டிருக்கும். சபையார் அல்லது ஊரார் கொடை கொடுத்தால் அவற்றின் பெயர் குறிக்கப்படும். எந்தக் கோயில் இறைவனுக்கு அல்லது யாருக்கு, எதன் பொருட்டு, என்ன கொடுக்கப்பட்டது என்ற விபரங்கள் இப்பகுதியில் குறிக்கப்படும். ‘தென்கரைத் திரைமூர் நாட்டு திருக்குரங்காடு துறை உடைய மகாதேவர்க்கு நந்தா தீபம் ஒன்றுக்கு வைத்த பால்பசு நாற்பத்தெட்டு’, ‘உய்யக் கொண்டார் வளநாட்டுத் திருவழுந்தூர் நாட்டு திருக்கற்றளி மகாதேவர்க்குச் சித்திரைத் திருநாள் அபிஷேகத்துக்குக் கொடுத்த இறையிலி நிலம்’ என்பன போல் எழுதப்பட்டிருக்கும். கோயில் சபையாரிடம் அல்லது ஊரார் வசம் கொடையை அளிப்பார்கள்.
• சாட்சி
கொடைக்குச் சாட்சியாக ஒருவரோ அல்லது சிலரோ கையொப்பம் இடுவர். ‘இதுக்கு அறியும் சாட்சி மணவாளன் எழுத்து’ என்பது ஒரு கல்வெட்டில் கண்ட சாட்சிக் கையெழுத்து ஆகும்.
• காப்புச் சொல்
அளிக்கப்பட்ட ஒரு கொடை நீண்ட நாள் நின்று நிலவ வேண்டும் என்று கருதியவர்கள் அதனைப் பிற்காலத்தவர் காப்பாற்றி வளர்க்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்திருப்பர். ‘இதனை மேன்மேலும் காத்து வளர்ப்பவர் சிவ பிரதிஷ்டை செய்த புண்ணியம் பெறுவார்கள்’.
‘தீங்கு நினைத்தான் ஏழு வம்சம் அறுவான்’, ‘இதற்குத் தீங்கு செய்தார் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற தோஷத்தில் போவார்கள்’ என்பன போல, காப்பாற்றுபவர்களுக்குப் புண்ணியமும், அழித்தவர்களுக்குப் பாவமும் வரும் என்பன போன்ற தொடர்கள் இப்பகுதியில் எழுதப் பெற்றிருக்கும்.
• பதுக்கையில் கல்நடல்
அந்தப் பதுக்கைகள் மீது கல்நட்டு அதில் அவர்கள் உருவத்தைச் செதுக்கி, அவற்றில் அவ்வீரர்களின் பெருமைகளையும், பெயரையும் பொறித்து வைத்தனர். வீரர் நினைவாக நட்டகல் என்பதால் நடுகல் எனப்பட்டது.
நடுகல் நடுகல்
இதனை,
‘அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை’
‘பதுக்கை சேர்த்தி
பீடும் பெயரும் எழுதி
இனி நட்டனரே கல்லும்’
எனச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இந்நடுகற்கள் வீரர்கல், வீரக்கல், நினைவுக்கற்கள் என்றும் கூறப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் எழுத்துடைய பல நடுகற்கள் இருந்தன என்ற குறிப்புகள் கிடைக்கப் பெற்றாலும், எழுத்துடைய சங்ககால நடுகற்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அகழாய்வுகளில் பல பெருங்கற்படைச் சின்னங்களைத் தோண்டியெடுத்து, ஆய்வு செய்துள்ளனர்.
பெருங்கற்படை
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே
என்ற பாடல் பகுதியால் அறியலாம்.
• கல்வெட்டில் பழமொழி
இளமைக் காலத்தில் கல்வி கற்கத் தொடங்குகிறோம். ஒருவர் இளமைக் காலத்தில் கற்கும் கல்வி உள்ளத்தில் ஆழப் பதிந்து என்றும் நிலைத்திருக்கும். அது கல்லின் மேல் எழுதிய எழுத்துகள் போல அழியாமல் இருக்கும் என்பதை ஒரு பழமொழியால் விளக்கினர். அந்தப் பழமொழி,
இளமையில் கல்வி சிலையில் எழுத்து
என்பதாகும் (சிலை-கல்).
• சங்கப் பெயர்கள்
இவையன்றி நாணயம், முத்திரை, மோதிரம், பதக்கம் ஆகியவற்றிலும் தமிழ் எழுத்துப் பொறிப்புகள் பல கிடைத்திருக்கின்றன.
அதியமான், நெடுஞ்செழியன், மாக்கோதை, குட்டுவன் கோதை, பெருவழுதி, கொல்லிரும்பொறை, கொல்லிப் பொறை, பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ போன்ற சங்க கால அரசர் பெயர்கள் தமிழ் எழுத்துகளில் பொறிக்கப்பட்டுக் கிடைத்துள்ளன.
• எழுத்துப் பொறிப்பு
பானை ஓடுகளில் தமிழ் எழுத்துப் பொறிப்புகள் பல சொற்களாகக் கிடைத்துள்ளன. அவற்றில் பண்ணன், கண்ணன், அந்தை, ஆதன், பிட்டன், கொற்றன், அந்துவன், நள்ளி, சாத்தன் என்பன சங்க இலக்கியத்தோடு தொடர்புடைய சொற்களாக உள்ளன.
• கல்வெட்டில் காணும் அரசு ஆணைகள்
ஆண்டுதோறும் ஊர்க் குளத்தைத் தூர் வார வேண்டும்; குறிப்பிட்ட பகுதிகளில் ‘உயிர்’ உள்ள மரத்தை வெட்டக் கூடாது, தாழ் குடிகள் என்று கூறப்படுவோர் ஊருக்குள் செருப்பு அணிந்து வரலாம்; அவர்கள் வீடுகட்குக் காரை பூசிக் கொள்ளலாம். நன்மை தீமைக்குப் பேரிகை உள்ளிட்டன கொட்டுவித்துக் கொள்ளலாம்; அநியாயம் அழிபிழை செய்தாரை வெட்டியோ குத்தியோ கொன்றால் தூக்குத் தண்டனை (தலை விலை) கிடையாது; வரியோ வட்டியோ கோயிலுக்குக் கொடுக்காதவர்கள் வீட்டில் வெண்கலத்தைப் பறிக்கலாம்; ஆனால் வெண்கலம் பறிக்கும்போது மண்கலம் தந்து வெண்கலம் பறிக்க வேண்டும்; தவறுதலாக அம்பு அல்லது ஆயுதம் எறிந்து கொலை செய்தால் தலைவிலை (தூக்குத்தண்டனை) கிடையாது; குளத்தில் தண்ணீர் இல்லாதபோது நெல்லுக்குப் பதிலாகப் புன்செய்த் தானியங்கள் கொடுக்கலாம் என்பன போன்ற பல ஆணைகளைக் கோயில் சுவர்களில் வெட்டி வைத்துள்ளனர்.
• கோயிலில் காணும் அரசு ஆணைகள்
கோயிலுக்கும், இந்த ஆணைகட்கும் தொடர்பு இல்லாவிடினும் கோயிலில் அவை கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டால் அழியாமல் இருக்கும்; எல்லோர் பார்வையிலும் படும்; அதைப் படித்துப் பார்த்தவர்கள் அந்த ஆணைகளின் மூலம் நாட்டில் செயல்கள் நடைபெறுகின்றனவா என்று அறிந்து, நடைபெறாவிடில் அவைகளை ‘விசாரித்து’ நடைமுறைப்படுத்தலாம் என்பதற்காகவுமே அவை கோயில்களில் கல்வெட்டாக வெட்டப்பட்டன.
• மெய்க்கீர்த்தி
அரசன் பெயருக்கு முன்னர் உள்ள அவனது பெருமை, புகழ் பற்றிக் கூறும் பகுதி மெய்க்கீர்த்தி எனப்படும். முதலாம் இராசராசன் பெயருக்கு முன்பு சிறு தொடராக இம் மெய்க்கீர்த்தி எழுதப்பட்டது.
மதுரை கொண்ட
மதுரையும் ஈழமும் கொண்ட
கச்சியும் தஞ்சையும் கொண்ட
வீரபாண்டியன் தலை கொண்ட
தொண்டை நாடு பாவின
என்று சிறு தொடராகக் காணப்பட்ட இம்மெய்க்கீர்த்தி முதலாம் இராசராசன் காலத்தில் பெரிய வடிவம் பெற்றது. முதல் இராசராசன் மெய்க்கீர்த்தி ‘திருமகள்போல’ என்று தொடங்கும். ஒவ்வொரு அரசருக்கும் தனித்தனித் தொடராக மெய்க்கீர்த்தி தொடங்குவதால் மெய்க்கீர்த்தித் தொடக்கத்தைப் பார்த்து இந்தக் கல்வெட்டு எந்த அரசனுக்குரியது எனக் கண்டு கொள்ளலாம்.
• அரசன் பெயர்
அரசன் பெயர் கோ என்று சில கல்வெட்டுகளில் தொடங்கும். பிற்காலச் சோழர் கல்வெட்டுகளில் திரிபுவனச் சக்ரவர்த்திகள் என்ற தொடர் அரசன் பெயருக்கு முன்னர் இருக்கும். பல்லவர்கள் கல்வெட்டு பல்லவ குல திலக என்றும், சேரர் கல்வெட்டுகள் சந்திராதித்ய குல திலக என்றும் அரசன் பெயருக்கு முன்னர் வெட்டப்பட்டிருக்கும். பிற்காலச் சோழர் கல்வெட்டுகளில் இராசகேசரி, பரகேசரி என்ற பட்டப் பெயர்களும், பாண்டியர் கல்வெட்டுகளில் மாறவர்மன், சடையவர்மன் என்ற பட்டப் பெயர்களும் மாறி மாறி அரசர் பெயர்களுக்கு முன்பு காணப்படும். குலோத்துங்க சோழ தேவர் என்பது போல, பெயருக்குப் பின் தேவர் என்ற சொல் வரும்.
• ஆண்டுக் குறிப்பு
ஓர் அரசன் எந்த ஆண்டு அரசனாக முடி சூடிக் கொண்டானோ அந்த ஆண்டு முதல் அவன் ஆட்சியாண்டு தொடங்குவதாகப் பெரும்பாலும் எழுதுவர். ஓர் அரசன் ஐந்தாம் ஆண்டு ஒரு கட்டளை பிறப்பித்து அவனுடைய ஆறாம் ஆண்டில் கல்லில் கல்வெட்டாக வெட்டப்பட்டால் ‘ஐந்தாவதுக்கு எதிராமாண்டு’ என்று எழுதப்படும். சில கல்வெட்டுகளில் சாலிவாகன சக ஆண்டு, கலியுக ஆண்டு, கொல்லம் ஆண்டு ஆகியவற்றுள் ஒன்று வெட்டப்பட்டிருக்கும். சில கல்வெட்டுகளில் வருடப் பெயர், மாதம், தேதி, நட்சத்திரம், நாள் (கிழமை) முதலியனவும் வெட்டப்பட்டிருக்கும்.
மேற்குறிப்பிட்ட செய்திகளை அக் கல்படுக்கைகளின் அருகே கல்வெட்டெழுத்துகளாகவும் பொறித்தனர். இந்த அமைப்புடைய குகைகள் மாங்குளம், அறச்சலூர், சித்தன்னவாசல், புகலூர், அரிட்டாபட்டி, அய்யர்மலை, அம்மன் கோயில்பட்டி, ஆனைமலை, ஜம்பை, கருங்காலக்குடி, கீழவளவு, கொங்கர் புளியங்குளம், குடுமியான்மலை, குன்னக்குடி, மாமண்டூர், மன்னார் கோயில், மறுகால்தலை, மேட்டுப்பட்டி, முதலைக்குளம், முத்துப்பட்டி, நெகனூர்ப்பட்டி, திருச்சி, திருப்பரங்குன்றம், திருவாதவூர், தொண்டூர், வரிச்சியூர், விக்கிரமங்கலம் போன்ற பல இடங்களில் உள்ளன. இங்கெல்லாம் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன.
• பிராமி
இந்தக் கல்வெட்டு எழுத்துகள் பிராமி என முன்பு அழைக்கப்பட்டன. வடநாட்டு பிராமியிலிருந்து இவற்றின் வரி வடிவத்தில் பல வேறுபாடுகள் காணப்படுவதால் இவை தென்பிராமி எனக் குறிக்கப்பட்டன.
• பிராமியும் தமிழும்
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சமணர் நூலான பன்னவன சூத்திரம் என்னும் நூல் இந்திய எழுத்துகளில் பிராமியுடன் ‘தமிழ்’ என்ற எழுத்து வகையையும் ஒன்றாகக் கூறுகிறது. எனவே 1965இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல் கல்வெட்டுக் கருத்தரங்கில் ‘தென்பிராமி’ என அழைக்கப்பட்ட எழுத்துகளைத் ‘தமிழ்’ என்றே அழைக்க வேண்டும் என்று அறிஞர் சா. கணேசன் கூறினார். பலரும் இன்று அவ்வாறே அழைக்கின்றர். தமிழுக்கு உரிய எழுத்து தமிழ் ஆயிற்று.
தமிழ் பிராமி
தமிழகக் குகை எழுத்துகள் என்னவென்றே புரியாமல் இருந்தபோது முதலில் 1924ஆம் ஆண்டு தமிழாகப் படித்தவர், கோவை கே.வி.சுப்பிரமணியம் அவர்கள். பெரும்பான்மையான தமிழ்க் கல்வெட்டுகளைப் பொருள் பொருத்தமுறப் படித்தவர் ஐராவதம் மகாதேவன் அவர்கள்.
• மகேந்திரனும் கற்கோயிலும்
பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் மேற்கண்ட பொருள்கள் இல்லாமல் கற்களால் கோயில் கட்டினான். அவனுக்குப் பின்னர் கற்கோயில்கள் பல தோன்றின. அவை கற்றளிகள் எனப்பட்டன. பல கோயில் கட்டிய ஒருவன் கற்றளிப்பிச்சன் எனப்பட்டான்.
• தனிக்கற்கள்
செங்கற் கோயில் சுவர்களில் தனிக்கற்களில் கல்வெட்டுகளைப் பொறித்துக் கோயில் சுவர்களில் பதித்திருந்தனர். கற்கோயில்களாக அவை மாற்றப்பட்டபோது தனிக்கல்லில் பொறிக்கப்பட்ட அக்கல்வெட்டுகள் கற்கோயில்களில் மீண்டும் பொறித்து வைக்கப்பட்டன. அக்கல்வெட்டுகளின் தொடக்கத்தில் ‘இதுவும் ஒரு பழங்கல்படி’ என்ற தொடர் வெட்டப்பட்டது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இக்கல் கிடைத்துள்ளது.
• இடங்கள்
கற்கோயில்களில் சுவர்களிலும், தூண்களிலும், வாயில் நிலைகளிலும், மேல் விதானங்களிலும், தனிக்குத்துக் கற்களிலும் கல்வெட்டுகளைப் பொறித்தனர். சில கோயில்களில், சுவாமி சிலைகளின் பீடங்களில்கூடக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
• கோயில் கொடைகள்
கோயில்களுக்கு நாள் வழிபாட்டுக்காகவும், சிறப்பு விழாக்களுக்காகவும், கோயில் பகுதிகளைப் புதிதாகக் கட்டும் திருப்பணிக்காகவும், பழுதுபார்க்கவும், சுவாமிகள் திருவீதிகளில் உலா வரவும், பாடல்களைப் பாடவும், ஆடல் நிகழ்ச்சிகளை நடத்தவும், விளக்குகள் எரிக்கவும், மலர்மாலைகள் அணிவிக்கவும், அடியார்கட்கு அன்னமிடவும், கோயில் பணியாளர்களை நியமிக்கவும், இசைக் கருவிகள் இசைக்கவும் பலர் கொடைகள் அளித்தனர். அவற்றைக் கல்வெட்டாக வெட்டினர். அளித்த கொடைகள் காசு, பொன், நெல், விளைநிலம் முதலிய பொருள்களாக இருந்தன.
பழங்காலத்தில் செய்திகளைக் கல்லில் பொறித்தனர் என்பதையும், நாணயம் அச்சுக் கருவி மூலம் வார்க்கப்பட்டது என்பதையும் அறிந்தீர்கள். கல்வெட்டுகள் சமண முனிவர் தங்கிய மலைக் குகைகளில் காணப்பட்டன. தென்பிராமி எழுத்துகளே தமிழ் என்று கூறப்பட்டது. கே.வி. சுப்பிரமணியம் அவர்களின் முயற்சியால்தான் கல்வெட்டெழுத்துகள் முதலில் படிக்கப்பட்டன. அகழாய்வு நடந்த இடங்களில் பல்வேறு தொல்பொருள்கள் கிடைத்தன. அவற்றில் சங்ககால மன்னர் பெயர்கள் காணப்பட்டன. தனிக் கல்லில் கல்வெட்டுகளைப் பொறித்துக் கோயில் சுவர்களில் பதித்தனர். கல்வெட்டுக் காணப்படும் இடங்கள், அவை கூறும் செய்திகள், அரசு ஆணைகள், கல்வெட்டின் தொடக்கம், அதில் இடம்பெறும் செய்திகளின் வைப்புமுறை, மெய்க்கீர்த்தி, கல்வெட்டைப் படி எடுப்போர் அதில் காணப்படும் அரும் சொற்கள் முதலியவையும் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
பாடம் - 2
• குலமும் சிறப்புப் பட்டமும்
சோழ மன்னர்களுக்கு உரியது சூரிய குலம். பாண்டிய மன்னர்கள் தங்கள் குலம் சந்திர குலம் என்றனர். சேர மன்னர்கள் சந்திராதித்ய குலத்தவர் என்று குறிக்கப்பட்டனர். பல்லவர்கள் சிலர் தங்களைப் பாரத்வாஜகுலம் என்றும் கூறிக் கொண்டனர். அதியமான் மரபினர் அஞ்சி, எழினி என்ற பட்டப் பெயர்களை மாறி மாறி வைத்துக் கொண்டனர். சோழ அரசர்கள் இராசகேசரி, பரகேசரி என்ற பட்டப் பெயர்களை மாறி மாறிப் பெற்றனர். பாண்டிய அரசர்கள் மாறவர்மன், சடையவர்மன் என்ற பட்டப் பெயர்களையும், முற்காலச் சேரர்கள் வானவரம்பன், இமயவரம்பன் என்ற பட்டப் பெயர்களையும் மாறி மாறிப் புனைந்து கொண்டனர்.
• மெய்க்கீர்த்திகள்
பல அரசர்கள் தங்களின் முக்கிய வெற்றிச் சிறப்பைக் குறிக்கும் தொடர்களைத் தங்கள் பெயருக்கு முன்னர்ச் சேர்த்துக் கொண்டனர். அவை மெய்க்கீர்த்திகள் எனப்பட்டன. பொதுவாக அவை அரசனின் வெற்றிச் சிறப்பையும் ஆட்சிச் சிறப்பையும் கூறும். பாட்டியல் இலக்கண நூல்கள் மெய்க்கீர்த்திகட்கு இலக்கணம் கூறுகின்றன. ‘தஞ்சை கொண்ட பரகேசரி’, ‘தொண்டை நாடு பாவின ஆதித்தன்’, ‘ஈழமும் மதுரையும் கொண்ட பராந்தகன்’, ‘கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னரதேவன்’, ‘கங்கையும் கடாரமும் கொண்ட இராசேந்திரன்’, ‘வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்தன்’, ‘சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டியன்’ என்பன சில அரசர்களின் சிறப்பு அடைமொழிகளாக விளங்கின. இச்சுருக்கமான தொடர்களே பின்னர் மெய்க்கீர்த்திகளாக மாறிப் பெரும்பான்மையான கல்வெட்டுகளில் அவர்கள் பெயருக்கு முன்னர்ச் சேர்க்கப் பெற்றன. ஒவ்வொரு அரசருக்கும் தனியாகத் தொடங்கும் மெய்க்கீர்த்திகள் உண்டு. இராசராசன் மெய்க்கீர்த்தி ‘திருமகள்போல’ என்று தொடங்கும். இராசேந்திரசோழன் மெய்க்கீர்த்தி ‘திருமன்னிவளர’ என்று தொடங்கும். ஒரே அரசருக்குப் பலவகைத் தொடக்கங்களைக் கொண்ட பல மெய்க்கீர்த்திகளும் உண்டு.
நாடு அரசனுக்கு உரிமை உடையது. ‘பெருநிலச் செல்வியைத் தனக்கேயுரிமை பூண்டு’ இராசராசன் வாழ்ந்ததாக அவன் மெய்க்கீர்த்தி கூறுகிறது. ‘இருநில மடந்தையைத் தன்பெரும் தேவியாகக் கொண்டான்’ என்று இராசேந்திரன் மெய்க்கீர்த்தி கூறுகிறது. உடையார், தேவர், நாயனார், பெருமாள், ஐயன் என்ற அடைமொழிகள் அரசர்களின் பெயருக்கு முன்பும், பின்பும் சேர்த்துக் குறிப்பிடுவார்கள்.
• அரசிருக்கையும் சின்னமும்
அரசர்கள் அமர்ந்து ஆட்சிபுரிந்த சிம்மாசனம் ஆகிய இருக்கைகளும் பெயர் சூட்டப் பெற்றிருந்தன. சிம்மாசனம் அரியணை எனப்பட்டது. பாண்டியராசன், மழவராயன், முனையதரையன், காலிங்கராயன் என அரியணைகள் தனிப் பெயரிட்டு அழைக்கப்பட்டன. அவை பள்ளிப்பீடம், பள்ளிக்கட்டில் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படும். சோழர் புலிக்கொடியும், சேரர் வில்கொடியும், பல்லவர் நந்திக்கொடியும், விசயநகர மன்னர்கள் பன்றிக் கொடியும், வாணர்கள் கருடக் கொடியும் பெற்றிருந்தனர். பாண்டியர் கொடியில் இரட்டை மீன் இருக்கும். வாளார்ந்த பொற்கிரிமேல் வரிக்கயல்கள் விளையாட என்பது கல்வெட்டுத் தொடர். இணைக்கயல்கள் என்றும் இதனைக் கூறுவர்.
• உயர்வு நவிற்சி
பிற்காலத்தில் சிறு நிலப்பகுதியை ஆட்சிபுரிந்த குறுநிலத் தலைவர்கள் பேரரசர்கட்கு ஒப்பாகத் தங்களைப் புகழ்ந்து கல்வெட்டுகளைப் பொறித்துக் கொண்டனர். கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய எல்லாத் திசைகளிலும் ஆட்சி புரிந்தவராகப் ‘பூருவ தட்சிண பச்சிம உத்தராதிபதி’ என்று அவர்கள் தம்மைக் குறித்துக் கொண்டனர். எல்லா நாடுகளையும் வென்று கைப்பற்றியவர்கள் என்பது தோன்றுமாறு ‘எம்மண்டலமும் கொண்டான்’ என்றும், ‘கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான்’ என்றும் தங்களைக் கூறிக் கொண்டனர். ஏழுகடலையும் அதிபதியாக உடையவர் என்ற பொருளில் சத்த சமுத்திராதிபதி எனக் கூறிக் கொண்டனர். ‘திக்கு அனைத்தும் சக்கரம் நடாத்தி’ அரசு புரிந்ததாகவும் கூறிக் கொண்டனர். இவை, உயர்வு மொழியாகப் படைத்துக் கூறப்பட்டவை ஆகும். மூன்று உலகிற்கு அரசர் என்ற பொருளில் திரிபுவனச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டனர். சம்புவராயர்கள் தம்மை, சகலலோகச் சக்கரவர்த்தி என அழைத்துக் கொண்டனர்.
• நேர் வாரிசு இல்லாதவரும் முடிசூடல்
கி.பி. 1070ஆம் ஆண்டு, முதலாம் இராசேந்திரன் பேரனும், வீரராசேந்திரன் மகனுமான அதிராசேந்திரன் மரணமடையவே, முதலாம் இராசேந்திரன் மகள் அம்மங்கைதேவியின் மகன் (கீழைச்சாளுக்கிய இராசராச நரேந்திரன் மகன்) இராசேந்திரன் கீழைச்சாளுக்கிய மரபினனாக இருந்தும் சோழ அரசனாக குலோத்துங்கன் என்ற பெயரில் முடிசூட்டப் பெற்றான்.
பல்லவ மன்னன் இரண்டாம் பரமேசுவரவர்மன் (705-710) ஆட்சிக்குப் பின் அரசன் இல்லாதபோது பல்லவர் மரபில் வந்த இரணியவர்மன் மகன் பல்லவ மல்லனை (12 வயது உடையவன்) அரசனாகத் தேர்ந்தெடுத்து நந்திவர்மன் என்று பெயர் சூட்டினர்.
சேரமான் பெருமாள் தனக்கு வாரிசு இல்லாமையால், பூந்துறை இளைஞர்கள் மானீச்சன், விக்கிரமன் ஆகியோரை அரசராக்கினார் என்று வரலாற்று ஆவணங்களும், இலக்கியங்களும் கூறுகின்றன.
பல்லவ அரசன், அரசி
உலகுடைய பெருமாளுடன்
ஒக்கமுடி கவித்தருளி
(மூன்றாம் இராசராசன் மெய்க்கீர்த்தி)
ஒக்க அபிஷேகம் சூடும் உரிமையுள
தக்க தலைமைத் தனித்தேவி
(இரண்டாம் இராசராசன் மெய்க்கீர்த்தி)
என்ற கல்வெட்டுப் பகுதிகள் அரசியர் முடிசூடுவதைக் கூறுகிறது. பெண்ணரசு என்றே அவர்கள் குறிக்கப்பட்டுள்ளனர்.
செம்பொன் வீர சிம்மாசனத்து
திரிபுவன முழுதுடை யாளொடும்
வீற்றிருந் தருளிய ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்
(மூன்றாம் குலோத்துங்கன் மெய்க்கீர்த்தி)
புவனி முழுதுடை யாளொடும் வீற்றிருந்தருளிய
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜதேவர்
(இரண்டாம் இராசராசன் மெய்க்கீர்த்தி)
என்பன போன்ற கல்வெட்டுப் பகுதிகள் கூறுகின்றன.
ஆணையெங்கும் தனதாக்கிய ஆதிராஜன்மாதேவி
(மூன்றாம் இராசராசன் மெய்க்கீர்த்தி)
உடன் ஆணை திரு ஆணை
உடன் செல்ல முடிகவித்து
(இரண்டாம் இராசாதிராசன் மெய்க்கீர்த்தி)
என்ற மெய்க்கீர்த்திப் பகுதிகளாலும் அரசியர் ஆணை செலுத்திய செய்தியை அறியலாம்.
‘ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ
குலோத்துங்கசோழ தேவர் திருத்தங்கையார்
குந்தவையாழ்வார் ஆளுடையார்க்குத் தண்ணீர் அமுது
செய்தருள குடிஞைக்கல் நிறை மதுராந்தகன்மாடையோடு
ஒக்கும் பொன் ஐம்பது கழஞ்சு’
என்பது சிதம்பரம் கல்வெட்டு.
• நாடுகள்
வளநாடுகட்கு உட்பட்டு, நாடுகளும் கூற்றங்களும் இருந்தன. இவைகள் தலைநகரங்களாக இருந்த பேரூர்களால் பெயர் பெற்றன. நல்லூர் நாடு, நறையூர்நாடு, இன்னம்பர்நாடு, திருவழுந்தூர்நாடு, திருஇந்தளூர்நாடு, நாங்கூர்நாடு, ஆக்கூர்நாடு, அம்பர்நாடு, மருகல்நாடு, திருக்கழுமலநாடு, திருவாலிநாடு, வெண்ணையூர்நாடு, குறுக்கைநாடு, நல்லாற்றூர்நாடு, மிழலைநாடு, உறையூர்க் கூற்றம், தஞ்சாவூர்க் கூற்றம், ஆவூர்க் கூற்றம், வெண்ணிக் கூற்றம், திருவாரூர்க் கூற்றம், பட்டினக் கூற்றம், வலிவலக் கூற்றம், ஆர்க்காட்டுக் கூற்றம் என்பன சோழநாட்டு நாடு, கூற்றங்கட்குச் சில எடுத்துக்காட்டுகள் ஆகும். இவை ஏறக்குறைய 210 ஆகும்.
• பாண்டிய நாட்டுப் பிரிவுகள்
பாண்டிய நாட்டில் மதுரோதய வளநாடு, வரகுண வளநாடு, கேரள சிங்க வளநாடு, திருவழுதி வளநாடு, சீவல்லப வளநாடு, பராந்தக வளநாடு போன்ற வளநாடுகள் இருந்தன. வளநாடுகட்கு உட்பட்டு இரணியமுட்டநாடு, களக்குடிநாடு, செவ்விருக்கைநாடு, பூங்குடிநாடு, கீரனூர்நாடு, களாந்திருக்கைநாடு, அளநாடு, துறையூர்நாடு, வெண்பைக்குடிநாடு, நேச்சுரநாடு, ஆசூர்நாடு, சூரன்குடிநாடு, முள்ளிநாடு முதலிய நாடுகளும், தும்பூர்க் கூற்றம், கீழ்க்களக் கூற்றம், மிழலைக் கூற்றம் முதலிய பல கூற்றங்களும் இருந்தன. ஒல்லையூர் நாடு என்று பழங்காலத்தில் வழங்கிய நாடு பிற்காலத்தில் ஒல்லையூர்க் கூற்றம் என்று வழங்கப் பெற்றதெனக் கல்வெட்டுகளால் அறிகின்றோம்.
பாண்டிய நாடு, ஏழு வளநாடுகளையும், ஐம்பத்திரண்டு நாடுகளையும் கொண்டிருந்தது.
• கொங்குநாட்டுப் பிரிவுகள்
கொங்குநாடு என்பது தொண்டைநாடு போலத் தனித்து இயங்கிய ஒரு நாடு. பூலாங்குறிச்சிக் கல்வெட்டில், கி.பி. 5ஆம் நூற்றாண்டிலேயே கொங்குநாடு குறிக்கப்பட்டுள்ளது. கொங்கு நாடு 24 உள்நாடுகளை உடையது. அண்டநாடு, ஆறைநாடு, அரையநாடு, ஆனைமலைநாடு, இராசிபுரநாடு, தென்கரைநாடு, வடகரைநாடு, காங்கயநாடு, காஞ்சிக்கோயில் நாடு, காவடிக்காநாடு, கிழங்குநாடு, குறுப்புநாடு, தட்டயநாடு, தலைய நாடு, நல்லுருக்காநாடு, பூந்துறைநாடு, பூவாணியநாடு, பொங்கலூர் நாடு, மணநாடு, வாழவந்தி நாடு, வெங்கால நாடு, வையாபுரிநாடு என்பனவற்றைக் கல்வெட்டுகளில் காணுகிறோம். பிற்காலத்தில் மக்கள் குடியேற்றம் பெருக நாடுகளும் பெருகின. 24 உள்நாடுகளைக் கொண்ட கொங்கு நாட்டில் பிற்காலத்தில் இராசராசபுரம் சூழ்ந்த நாடு 24, டணாயக்கன் கோட்டை சூழ்நாடு 6, குன்றத்தூர் துர்க்கம் சூழ்ந்த நாடு 12 என 42 உள்நாடுகள் ஏற்பட்டன.
• பல்லவர் நாட்டுப் பிரிவுகள்
பல்லவர் ஆட்சிப் பகுதியின் வடபகுதியில் முண்டராட்டிரம், வெங்கோராட்டிரம் ஆகியவை விளங்கின. அதன் உட்பகுதி விஷையம் எனப்பட்டது. தலைநகர் காஞ்சி சூழ்ந்த தொண்டைநாட்டில் பழைய 24 கோட்டங்களை அப்படியே வைத்துக் கொண்டனர். அவற்றுள் சில புழல்கோட்டம், ஈக்காட்டுக்கோட்டம், மணவிற்கோட்டம், செங்காட்டுக்கோட்டம், பையூர்க்கோட்டம், எயில்கோட்டம், தாமல்கோட்டம், ஊற்றுக்காட்டுக் கோட்டம், களத்தூர்க்கோட்டம், செம்பூர்க்கோட்டம், ஆம்பூர்க்கோட்டம், வெண்குன்றக் கோட்டம் என்பனவாம்.
பல்லவ நாட்டுப் பிரிவுகள் இருபத்து நான்கு கோட்டங்களைச் சேர்ந்த 79 நாடுகள் ஆகும்.
• பிரிவுகள்
அக்காலத்தில் ஊராட்சி நடத்தி வந்த மன்றங்களைக் கவனிக்குமிடத்து அவை நான்கு வகைப்பட்டிருந்தன என்பதை அறியலாம். பிராமணர்கள் ஊர் நில உரிமையுடன் வசித்துவந்த சதுர்வேதிமங்கலங்களில் இருந்த சபை, கோயில்களுக்கு உரிய தேவதான சபை, உழவர் உள்ளிட்ட ஏனையோர் இருந்த ஊர்ச்சபை, வணிகர்கள் வசித்து வந்த ஊர்களின் சபை என அவை நான்கு வகைப்படும்.
• உறுப்பினர்
சொந்த இடத்தில் வீடு கட்டிக் குடியிருப்போர், வரி செலுத்தக் கூடிய கால்வேலிக்குமேல் நிலம் உடையவர்கள், கல்வி அறிவுடன் அறநெறி தவறாமல் தூய வழியில் பொருள் ஈட்டி வாழ்பவர்கள், காரியங்களை நிறைவேற்றுவதில் வல்லமையுடையவர்கள், முப்பத்தைந்து வயதுக்கு மேல் எழுபது வயதிற்கு உட்பட்டவர்கள், கடந்த மூன்றாண்டு வாரியத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள், பெரும் கல்வியறிவுடன் அரைக்கால் வேலி நிலம் உள்ளவர்கள் ஆகியோர் வாரிய உறுப்பினர் ஆவதற்கு உரிமை உடையவர்கள் ஆவர். அக்காலத்தில் சபை உறுப்பினர் ஆவதற்குச் சொத்து, கல்வி, ஒழுக்கம் ஆகியவையே காரணமாக இருந்தன.
• உறுப்பினராக இயலாதோர்
வாரிய உறுப்பினராக இருந்து கணக்குக் காட்டாதவர்கள், இவர்களின் சிறிய தந்தை பெரிய தந்தை மக்கள், அத்தை மாமன் மக்கள், தாயோடு உடன் பிறந்தான், தகப்பனோடு உடன் பிறந்தான், சகோதரியின் மக்கள், சகோதரியின் கணவன், மருமகன், தகப்பன், மகன் ஆகியோரும் மற்ற நெருங்கிய உறவினர்களும், பெரும்பாதகம் புரிந்தோர், இவர்கள் உறவினர், தீயோர் கூட்டுறவால் கெட்டுப் போனவர், கொண்டது விடாத கொடியோர், பிறர் பொருளைக் கவர்ந்தவர், கையூட்டு வாங்கியோர், ஊர்க்குத் துரோகம் செய்தோர், கூடத்தகாதவர்களோடு கூடியோர், குற்றம்புரிந்து கழுதை மேல் ஏறினோர், கள்ளக் கையெழுத்து இட்டோர் ஆகியோரும் வாரிய உறுப்பினர் ஆவதற்கு உரிமை உடையவர்கள் அல்லர்.
• வாரியம் நடைமுறை
பறை அறைந்து அல்லது முரசு அடித்துச் சபை கூட்டப்படும். பெரும்பாலும் பகல் நேரத்தில் கூட்டம் நடைபெற்றது. இரவுக் கூட்டங்கள் சரியாக நடைபெறாமலிருந்ததும், எண்ணெய், திரிச் செலவு அதிகமானதும் அதற்குக் காரணம் ஆகும். வாரியத்திற்கென்று தனி இடம் கிடையாது. ஏரி, குளக்கரைகளிலும், மரத்தின் அடியிலும், கோயில் கோபுரத்தின் கீழும், கோயில் மண்டபங்களிலும் அவை கூடிற்று. உறுப்பினர்களுக்குச் சம்பளம் எதுவும் கிடையாது. வாரியத்தின் பதவிக் காலம் ஓராண்டாகும். வாரியத் தேர்தலின்போது அரசு அலுவலர் உடன் இருப்பார். முதல் பராந்தக சோழன் காலத்தில் உத்தரமேரூர்ச் சபைத் தேர்தல் நடைபெற்றபோது, இரு முறை அரசு அலுவலர்களான தத்தனூர் மூவேந்த வேளானும், சோமாசிப் பெருமாளும் உடன் இருந்தனர் என்பதை உத்திரமேரூர்க் கல்வெட்டு கூறுகின்றது.
‘நிலம் கடமையும் அந்தராயமும் வினியோகமும் தருவதான அச்சும் காரிய ஆராய்ச்சியும் வெட்டிப்பாட்டமும் பஞ்சுபீலியும் சந்துவிக்கிரகப் பேறும் வாசற்பேறும் இலாஞ்சினைப்பேறும் தறியிறையும் செக்கிறையும் தட்டொலிப்பாட்டமும் இடையர்வரியும் மீன்வரியும் பொன்வரியும் மற்றும் எப்பேற்பட்ட வரியும்’
என்பது கல்வெட்டுத் தொடர்.
நாடுகள், மண்டலங்களாக, வளநாடுகளாக, நாடுகளாக, ஊர்களாகப் பிரிக்கப்பட்டு நல்லாட்சி நடந்ததைக் காணமுடிகிறது. குடஓலை முறையில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாரியத் தலைவர்கள் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. வரிகள் முறையாக வசூலிக்கப்பட்டன. கல்வெட்டில் காணப்படும் கலைச் சொற்களும் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
கல்வெட்டுக் கலைச் சொற்கள்
வாரியங்களும் குழுக்களும்
ஆட்டை வாரியம் இது ஆண்டு வாரியம், சம்வத்சர வாரியம் என்றும் கூறப்பெறும். ஊர்ச் சபையின் குழுக்களில் ஒன்று. இதுவே குழுவில் தலைமையான வாரியம்.
குடும்பு வாரியம் ஊர்ச்சபை அமைந்துள்ள ஊரின் ஒரு பகுதி குடும்பு. இன்றைய நகராட்சி நிர்வாகத்தில் ‘வார்டு’ அமைப்பைப் போன்றது. பெரும்பாலும் இது விளைநிலத்தையொட்டி அமையும். அதை நிர்வகிக்கும் குழு குடும்பு வாரியம்.
தடிவழி வாரியம் ஊர்ச் சபையில் வயலையும் வயல் பற்றிய கணக்கையும் நிர்வகிக்கும் குழு.
மூலபருடையார் கோயில் நிருவாக சபையார்.
சாத்தகணத்தார் சாத்தகணத்தார்னார் கோயிலை நிர்வகிக்கும் குழுவினர்.
ஐகாளிகணத்தார் காளி கோயிலை நிர்வகிக்கும் குழுவினர்.
குமாரகணத்தார் முருகன் கோயிலை நிர்வகிக்கும் குழுவினர்.
சங்கரப்பாடியார் எண்ணெய் வணிகர்கள் கொண்ட குழுவினர்.
பன்மாகேஸ்வரர் சிவனடியார் கூட்டம் (பன்மாகேஸ்வரன் என ஒருமையில் வராது. பன்மாகேஸ்வரர் எனப் பன்மையிலேயே வரும்.)
மண்டலப் பேரவை
திருவிடையாட்டம் விஷ்ணு கோயில்கட்கு அளிக்கப் பெற்ற மானிய நிலம்.
திருநாமத்துக்காணி சிவன் கோயில்கட்கு அளிக்கப் பெற்ற மானிய நிலம்.
பள்ளிச்சந்தம் பௌத்தப் பள்ளிகட்கும் சமணப் பள்ளிகட்கும் அளிக்கப் பெற்ற மானிய நிலம் (சமண, பௌத்தக் கோயில்கள் பள்ளிகள் எனப்படும்.)
அகரப்பற்று பிராமணர்களின் ஊராகிய அக்கிரகாரங்களுக்கு உரிய நிலம் (அகரம் என்பது அக்கிரகாரம் என்பதன் சுருக்கப் பெயர்.)
மடப்புறம் மடங்களுக்கு விடப்பட்ட மானிய நிலம்.
சீவிதப்பற்று வாழ்நாள் வரை அனுபவிக்கும் உரிமையோடு உள்ள நிலம்.
படைப்பற்று படையில் உள்ளவர்கட்குப் பொதுவாக அளிக்கப் பெற்ற நிலம் அல்லது ஊர்.
வன்னியப்பற்று படையில் பணிபுரியும் வீரர்கட்கு அளிக்கப் பெற்ற நிலம் அல்லது ஊர். (வன்னியர் – படை வீரர்)
பலவகை வரிகள்
தட்டாரப்பாட்டம் பொற்கொல்லர்கள் செலுத்தும் வரி.
ஈழம்பூட்சி ஈழவர் மீதான வரி (ஈழவர்- கள் இறக்குவோர்)
வண்ணாரப்பாறை துணி வெளுப்போர் மீதான வரி
இலைக்கூலம் வெற்றிலை வணிகர் மீதான வரி.
பாடம் - 3
சமுதாய நிகழ்ச்சிகளின் பதிவாகப் பண்பாட்டை எடுத்துக்காட்டுவது இலக்கியம். இலக்கியம் கடந்த காலத்தைக் காட்டும் கண்ணாடியாகவும் பயன்படுகிறது. கலை பற்றியும் இலக்கியம் பற்றியும் இப்பாடத்தில் பார்க்கலாம்.
• கூத்துக்கலை
கோயிலில் ஆடிய ஆட்டங்கள் பல்வேறு வகைப்பட்டன. சாந்திக்கூத்து, விநோதக்கூத்து, தமிழ்க்கூத்து, ஆரியக்கூத்து, சாக்கைக் கூத்து என்பன அவற்றுள் சில. சாந்திக் கூத்து 108 கரணங்கள் கொண்ட கூத்த நிருத்தம் எனப்படும். அது சொக்கம், அகமார்க்கம் என்னும் மெய்க்கூத்து, கை கால் அசைத்தாடும் அவிநயம், கதை தழுவிய நாடகம் என நால்வகையாகப் பிரிந்தது. அப்பிரிவில் ஒன்றான அகமார்க்கம் தேசி, வடுகு, சிங்களம் என்று மூன்றாக அழைக்கப்பட்டது. கூத்துகள் மூன்று அல்லது ஏழு அங்கங்களாக ஆடப்பட்டன. வரிக்கோலம் என்பதும், சாந்திக் குனிப்பம் என்பதும் சில ஆட்டங்களுக்குப் பெயர்கள் ஆகும்.
இயல், இசை, நாடகம் எனத் தமிழ் மூவகையாகப் பிரிக்கப்பட்டது. நாடகமே கூத்து எனப்பட்டது.
• கருவிகளும் இசைக்கும் முறையும்
கல்வெட்டுகளில் குறிக்கப் பெறும் பல்வேறு இசைக் கருவிகளைத் தோல்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி என நான்காகப் பிரிப்பர். அவைகளை இயக்குவதைக் கொட்டுதல், ஊதுதல், வாசித்தல், அறைதல், ஏற்றுதல், பாடுதல், தடவல் என அழைப்பர். கல்வெட்டுகளில் உடுக்கை வாசித்தல், காகளம் ஏற்றுதல், சேகண்டிகை கொட்டுதல், சங்கு ஊதுதல், பறை அறைதல், வீணை தடவுதல், பதிகம் பாடுதல் எனக் குறிக்கப் பெறும். கருவிகட்கு ஏற்ப இசைக்கும் முறை வேறுபட்டதை இத்தொடர்கள் விளக்குகின்றன.
(புணருத்தான் – சேர்த்தான்)
• இசைக்கருவி
கல்வெட்டுகளில் உடுக்கை, கறடிகை, காளம், காகளம், காசை, குடமுழா, குழல், கொட்டிமத்தளம், சகடை, சங்கு, செண்டை, சேகண்டிகை, சேமக்கலம், டமருகம், தட்டழி, தவில், தாரணி படகம், தாளம், திருச்சின்னம், திமிலை, நகரா, பறை, பஞ்சமுறை, பாரி நாயனம், மல்லாரி, மணி, முகராசு, மேளம், யாழ், வங்கியம், வீரமத்தளம், வீணை போன்ற பல கருவிகள் குறிக்கப்பட்டுள்ளன. ‘இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்’ என்ற திருவாசகப் பாடல் மூலம் வீணைக்கும் யாழிற்கும் வேறுபாடு உண்டு என்பதை அறிகிறோம்.
• இசை அடைவு எழுத்துகள்
அதன் அருகில் இரண்டு தொகுதிகளாக அடவு எனப்படும் இசை, தாள எழுத்துகள் ஐந்து ஐந்து வரிசையாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
தா தி தா தி த
தி தா தே தா தி
தா தே தி தே தா
தி தா தே தா தி
தா தி தா தி தா
என்பன ஒரு தொகுதி எழுத்துகள் ஆகும். இவை 1800 ஆண்டுகட்கு முற்பட்டவை. இவைகளைப் பொறித்தவன்தான் மணியன் வண்ணக்கன் தேவன் சாத்தன் என்பவன்.
• கலைவல்லார் நியமனம்
ஏற்கெனவே கலைவல்லவர்கள் இல்லாத கோயிலில் புதியதாகக் கலைவல்லவர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு கொடைகள் அளிக்கப் பட்டதையும் பற்றிக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
‘திருவிடைமருதூர் உடையார் கோயிலில் பாடவ்யத்துக்கு
முன்பு நிவந்தம் இல்லாமையால் இத்தேவர்க்குப் பாடவ்யம்
வாசித்து நிற்க நெல்லு இரு தூணி’
(திருவிடை மருதூர்க் கல்வெட்டு)
‘குழைஞ்சானான பிரகடகண்ட மாராயனுக்கும், இவன்
தம்பி சோறநுக்கும், பூமனுக்கும் உவைச்சக் காணியாகக்
கல்வெட்டிக் கொடுத்தபரிசாவது இக்கோயிலுக்கும் ஊருக்கும்
நெடுநாள் முதல் இந்நாள் வரையாக காணியாளரென்று
ஒருவரையும் காணாதபடியாலே காணியாகக் கொடுத்த நிலம்’
(திருச்சி மாவட்டம் – பூவாலைக்குடிக் கல்வெட்டு)
போன்ற கல்வெட்டுப் பகுதிகளில் புதுக் கலைவல்லவர்கள் நியமனம் பெற்றுக் கொடையளிக்கப் பெற்றதைக் காணுகிறோம்.
• சிறப்பு பெற்றமை
அரையன், மாராயன், பேரரையன் என்பன அவர்கள் பெற்ற சிறப்புப் பட்டங்களாகும். அருள்மொழி, வீரசோழன், விக்கிரமசோழன் போன்ற அரசர் பெயர்களை அவர்கள் பெற்றிருப்பது அவர்களின் அரசுத் தொடர்பையும், உயர்வையும், சிறப்பையும் காட்டுகின்றது. அரசருடைய படைகளில் பணிபுரிந்தோரும், உயர் அலுவலர் சிலரும் கூடக் கலைகளில் வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர். ‘பக்கவாத்யம் அழகிய சோழத் தெரிந்த வேளைக்காரர் ஐயாறன் சுந்தரன், வங்கியம் நிகரிலி சோழன் தெரிந்த உடனிலை குதிரைச் சேவகரினின்றும் புகுந்த தஞ்சை கணவதி’ என்ற பெயர்களால் அதனை அறியலாம். (தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயில் கல்வெட்டு)
• கொடை பெற்றமை
கோயிலில் பணிபுரிந்த கலைவல்லவர்களுக்குப் பொன்னும் நெல்லும் சம்பளமாக அளிக்கப் பெற்றன. பலருடைய பணிக்காகக் கொடை நிலம் அளிக்கப்பட்டது. நிலம் பெற்ற பலர் பரம்பரை பரம்பரையாகத் தங்கள் பணியைச் செய்து வந்தனர். அவர்களைக் கல்வெட்டு ‘அடுத்த முறைகடவார்’ என்று கூறுகிறது. கொடுத்த நிலங்கள் கூத்துக்காணி, நட்டுவக்காணி, நிருத்தியபோகம், உவச்சக்காணி, நிருத்தியக்காணி, சாக்கைக்காணி என அந்த அந்தக் கலையின் தொடர்போடு அழைக்கப்பட்டன. (கண்டியூர், மேலப் பழூர், திருச்சோற்றுத்துறை, சித்தலிங்க மடம், திருக்கடவூர்க் கல்வெட்டுக்கள்)
• நிலம் பெற்றமை
நட்டுவக்காணி நிலங்கள் ஆயிரத்தளி, மேலப்பழூர், திருச்சோற்றுத்துறை, திருவிடைமருதூர், ஆற்றூர், சித்தலிங்கமடம், திருக்கடவூர் போன்ற பல ஊர்களில் இருந்தன என்பதைக் கல்வெட்டுக்கள் காட்டுகின்றன.
‘திருப்புலிப் பகவர்க்குத் திருவிழா எழுந்தருளும்போது
முன்னின்று நிருத்தம் செய்ய நிருத்தபோகமாக திருப்புலிப்
பகவர் நிருத்த விடங்கிக்கும் இவன் அன்வயத்தார்க்கும்
குடுத்த நிலமான கால்செய் இறையிலி’
(சிதம்பரம் கல்வெட்டு)
‘சித்திரைத் திருநாளுக்குக் கூத்தாடுகைக்குச் சாந்திக்
கூத்தாடுகிற எழுநாட்டு நங்கைக்குக் கூத்தாடுகைக்கு விட்ட
இந்நிலம் கொண்டு இத்திருநாளுக்கு ஆடக் கடவ கூத்து
ஒன்பது ஆடுவாளாகவும்’
(புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் – 128 )
‘பெருந்தனத்துக் காந்தர்ப்பன் அரையன் திருவிடைமருதூர்
உடையார் ஆன மும்முடிச்சோழ நிருத்தப் பேரரையனுக்கு
விட்ட நிலம்’
(திருவிடை மருதூர்க் கல்வெட்டு)
என்ற கல்வெட்டுத் தொடர்களால் அவர்கள் பெற்ற மானிய நிலங்கள் பற்றி அறிகிறோம்.
• பல்லவ மன்னன்
பல்லவப் பேரரசரான மகேந்திரவர்மன் சங்கீரண ஜாதி என்ற பட்டப் பெயரைப் பெற்றிருந்தான். சங்கீரணம் என்பது தாளவகை ஐந்தில் ஒன்று. இதைக் கண்டுபிடித்தவன் மகேந்திரவர்மன். புதிய 8 நரம்புகளோடு பரிவாதினி யாழை உருவாக்கியவன் மகேந்திரன். இராசசிம்ம பல்லவன் வாத்ய வித்யாதரன், ஆதோத்ய தும்புரு, வீணா நாரதன் என்று பெயர் பெற்றிருந்தான். பிற்காலப் பல்லவ மன்னனான கோப்பெருஞ் சிங்கனுக்குரிய பட்டப் பெயர்களில் ஒன்று பரதம் வல்ல பெருமாள் என்பது.
• சோழரும் சேதுபதியும்
குலோத்துங்க சோழன் இசை வகுத்தான் என்பர். அவன் வகுத்த இசையை அவன் முன்னரே பாடிக் காட்டினர் சிலர். ‘தான் வகுத்தவை தன் எதிர்பாடி’ என்ற தொடர் அதனை விளக்கும். குலோத்துங்கன் மனைவியருள் ஒருவர் பெயர் ஏழிசை வல்லபி. அவரும் இசையில் சிறந்தவராக இருந்திருக்க வேண்டும். பிற்காலச் சேதுபதி அரசர்கள் இயலிசை நாடக முத்தமிழ் அறிவாளன், சகலகலாப் பிரவீணன், பரதநாடகப் பிரவீணன் என்ற பெயர்களைப் பெற்றிருந்தனர்.
‘இத்திருவீதி வடசிறகில் பதியிலார் உமையாழ்வியான அழகினும்
அழகியதேவித் தலைக்கோலி பக்கம் இவர்கள் கொண்டு
கற்பித்த மடம்’
என்ற கல்வெட்டு தேவரடியார் மடம் அமைத்தமையைத் தெரிவிக்கிறது. (திருவாரூர்க் கல்வெட்டு)
ஈரோடு மாவட்டம் ஊதியூர் வானவராய நல்லூர் கரிய காளியம்மன் கோயில் தீபத்தம்பத்தை நிறுவியவர் செம்பூத்தகுல மாணிக்கி தெய்வானை என்பவர் என்பதை அங்குள்ள கல்வெட்டால் அறிகிறோம்.
• தேவரடியாரின் கொடை
பதியிலார் கூத்தன் நம்பிராட்டி ஆன செய்ய பெருமாள் திருநெல்வேலிக் கோயிலில் சிறுகாலைச் சந்திக்கு தாளிப்பூப் பறிக்கும் தொண்டர்களின் ஜீவனத்துக்குக் கொடை கொடுத்ததையும், மன்னார்குடி திருவிராமேசுவரர் கோயிலுக்கு விளக்கெரிக்கத் தேவரடியார் உழுதன்தேவி இரண்டு பொற்காசு கொடுத்ததையும் பற்றி இரண்டு கல்வெட்டுகள் கூறுகின்றன. வேதாரண்யம் கோயிலில் சாந்திக் கூத்தாடும் தேமாங்குடி பெருந்திருவாட்டி கயிலைக்கிழத்தி என்பவள் அக்கோயிலுக்கு 30 வேலி நிலம் அளித்தாள். மேற்கண்ட செய்திகள் மூலம் கலைவல்ல மகளிர் வாழ்ந்த செல்வச் சிறப்பும் அவர்கள் பக்தித் தன்மையும், பொதுநல எண்ணமும் நன்கு தெரிகிறது.
• தேவரடியாரின் பொதுப்பணி
பாண்டிய நாட்டில் ஓரூரில் குளம் ஒன்று உடைந்து கரைகள் அழிந்து நாடும் பாழாய்க் கிடந்தது. அந்தக் குளத்தை வெட்டித் திருத்தி ஆக்கிக் கொள்ள, தளியிலாள் நக்கன் நாச்சியார் ஆன தனியாணைவிட்ட பெருமாள் தலைக்கோலி என்பவள் பொன் கொடுத்துத் திருப்பணி செய்தார் என்பதை ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.
இவர்கள் நக்கன், மாணிக்கம், மாணிக்கி, சதுரி, தளியிலார், பதியிலார், தேவரடியார், இஷபத் தளியிலார், கூத்திகள், கணிகையார், அடிகள்மார் என்று பல்வேறு கோயில்களில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டார்கள். இவர்கள் நிலையான பணியில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்குப் பின் இவர்கள் வாரிசுதாரர்கள் பணி செய்யலாம். வாரிசுதாரர் கலைவல்லாராக இல்லாவிடில் கலைவல்ல பிறரை நியமித்து, இவர்கள் உரிய சம்பளம் – நெல் பெறலாம். வாரிசுதாரர் இன்றி யாராவது இறந்தாலோ அல்லது பணிபுரிந்த கலைவல்லவராய் வேறு ஊர் போய்விட்டாலோ அக்கோயில் ஆளும் குழுவினரே தக்கவர்களை நியமிக்கலாம் என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
• தலைக்கோல் பட்டம்
இவர்களில் பெண்கள் சிலர் நல்ல நாட்டியப் பயிற்சி பெற்று அரசு அவையில் அல்லது கோயிலில் அரங்கேற்றம் என்னும் தலையரங்கு ஏறித் தலைக்கோல் பட்டம் பெற்றனர். அவர்கள் தலைக்கோலி என்று அழைக்கப்பட்டனர்.
(திருவிடை மருதூர்க் கல்வெட்டு – முதல் பராந்தகன் காலம்)
‘ஆரூர் தேவனார் மகள் நக்கன் பிரமதேவியாகிய
மும்முடிசோழத் தலைக்கோலி’
‘உறவாக்கின தலைக்கோலி’
‘புங்கத்துறை வல்லவத் தலைக்கோலி’
‘பதியிலார் தியாகவிநோதத் தலைக்கோலி’
(திருவாரூர்க்கோயில் கல்வெட்டுகள்)
என்னும் கல்வெட்டுகள் தலைக்கோல் பட்டம் பெற்ற கலைவல்ல மகளிர் சிலரைக் குறிப்பிடுகின்றன.
• ஒட்டக்கூத்தர்
ஒட்டக்கூத்தர் கவிச்சக்கரவர்த்தி என்று புகழப்பட்டவர். அவர் ஊர் மலரி என்பதாகும். நன்னிலத்தை அடுத்துள்ள பூந்தோட்டம் என்னும் ஊரை அடுத்துள்ள காவிரிக் கரையில் உள்ள கூத்தனூரில் ‘காணி உடைய மலரி உடையார் கவிச் சக்கரவர்த்திகள் பேரனார் கவிப்பெருமாளான ஓவாத கூத்தனார்’ என்ற கல்வெட்டுக் காணப்படுகிறது. இங்குக் குறிக்கப்பட்ட கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரே ஆவார்.
• அருணகிரிநாதர்
அருணகிரிநாதர் தம் பாடலில் பிரபுடதேவமகாராயரையும், சோமநாதன் மடத்தையும் குறிக்கின்றார். திருவண்ணாமலையில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றில் சோமநாத ஜீயர் என்னும் சைவப் பெரியாருக்கு அளித்த கொடை குறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் ‘இத்திருக்கோயில் மாடாபத்யக் காணியாட்சியுடைய அம்மையப்பரான சோமநாத ஜீயர்’ என்று காணப்படுகிறது. அவருக்குப் பிரபுடராயர் தன் பெயரால் பிரபுடராயபுரம் என்ற ஊரைத் தானமாக அளித்துள்ளார். திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் என்ற பெயர் பொறித்த கல்வெட்டும் காணப்படுகிறது. இக்கல்வெட்டின் காலம் கி.பி. 1370 ஆகும்.
• காளமேகம்
விசயநகர மன்னர் விருபாட்சராயர் காலத்தில் (1466 – 1485) தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக நிருவாகம் செய்தவர் திருமலைராயர். திருமலைராயரைக் குறிக்கும் கல்வெட்டு திருச்சி அருகில் உள்ள திருவானைக்காவிலும், திருவரங்கத்திலும் காணப்படுகிறது. அவர் காலத்தில் எண்ணாயிரம் என்ற ஊரில் கவி காளமேகம் வாழ்ந்தார் என்று கல்வெட்டுப் பாடல் ஒன்று கூறுகிறது.
• அகத்தியர்
தமிழுக்கு முதல் இலக்கண நூல் எழுதியவர் அகத்தியர். அவர் எழுதிய அகத்தியம் இன்று கிடைக்கவில்லை. சில நூற்பாக்களே கிடைத்துள்ளன. அவற்றைப் பண்டைய உரையாசிரியர்கள் சில இடங்களில் மேற்கோள் காட்டியுள்ளனர். அகத்தியரைப் பற்றியும், பாண்டியர்கட்கும் அகத்தியருக்கும் உள்ள தொடர்பு பற்றியும் பாண்டியர் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் சில குறிப்புகள் வருகின்றன. ‘அகத்தியனொடு தமிழாய்ந்தும்’, ‘பொருவருஞ்சீர் அகத்தியனைப் புரோகிதனாகப் பெற்றது’ என்பன தளவாய்புரம், சின்னமனூர்ச் செப்பேட்டு வரிகள்.
• பவணந்தி முனிவர்
எழுத்து, சொல் என்ற இரண்டிற்கு இலக்கணம் கூறுவது நன்னூல். அதன் ஆசிரியர் பவணந்தி முனிவர். அவர் கொங்குநாட்டுச் சீனாபுரத்தில் சன்மதி முனிவர் என்பவரின் சீடராகத் தோன்றியவர். நன்னூல் சிறப்புப் பாயிரம் கங்கமன்னன் அமராபரணன் சீயகங்கன் என்னும் குறுநில மன்னன் கேட்க பவணந்தி நன்னூலை இயற்றினார் என்று கூறுகிறது. சீயகங்கன், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (1178 – 1218) வாழ்ந்தவர். சீகாளத்திக் கல்வெட்டில் கங்க குலோத்பவன் சூரநாயகன் திருவேகம்பமுடையான் சீயகங்கன் என்ற கல்வெட்டு உள்ளது. வட ஆர்க்காடு மாவட்டத்தில் ‘பவணந்திபட்டாரகர்’ என்ற பெயர் பொறித்த மூன்று கல்வெட்டுகள் உள்ளன. பவணந்தி, சமண முனிவருள் நந்தி கணத்தைச் சேர்ந்தவர். (கணம் – குழு அல்லது கூட்டம்).
• குணவீர பண்டிதர்
குணவீர பண்டிதர் நேமிநாதம், வச்சணந்திமாலை ஆகிய இரு இலக்கண நூல்களை எழுதினார். அவர் வச்சணந்தி முனிவரின் மாணாக்கர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐவர்மலையில் வச்சணந்தி முனிவர் சீடர் ‘குணவீரக் குரவடிகள்’ பெயர் பொறித்த கல்வெட்டு உள்ளது. அக்கல்வெட்டு கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
• அமிதசாகரர்
யாப்பு என்னும் தமிழ்க்கவிதை பற்றிய இலக்கண நூல்கள் யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்பவை. அவற்றை முதல் குலோத்துங்க சோழன் காலத்தில் (1070 – 1122) இயற்றியவர் அமிதசாகரர் என்பவர். ‘தண்டமிழ் அமித சாகர முனியை, செயங்கொண்ட சோழ மண்டலத்துத் தண்சிறு குன்றக நாட்டகத்து இருத்தி, காரிகை பாடுவித்தவன் கண்டன்மாதவன்’ என்று சோழநாட்டு நீடூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. காரிகைக் குளத்தூர் என்று புலவர் அமிதசாகரர் ஊர்க்குப் பெயர் ஏற்பட்டது.
• சேனாவரையர்
தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதியவர் சேனாவரையர். ‘வடநூல் கடலை நிலைகண்டு உணர்ந்தவர்’ என்றும், ‘ஆனாமரபின் சேனாவரையர்’ என்றும் புகழப்பட்டவர். ‘புவனேக சுந்தரநல்லூர் அரையன் ஆண்டானான சேனாவரையன்’ எனக் கல்வெட்டில் அவர் பெயரைக் காணுகின்றோம். இக்கல்வெட்டு கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
• நச்சினார்க்கினியர்
நச்சினார்க்கினியர், தொல்காப்பியத்தில் உள்ள எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களுக்கும் உரை எழுதியவர். ‘கண்டியதேவரான நச்சினார்க்கினியன்’ என்ற கல்வெட்டுத் தொடரைக் காணுகின்றோம். கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள இக்கல்வெட்டு கி.பி. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
• தெய்வச்சிலையார்
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய மற்றொரு ஆசிரியர் தெய்வச்சிலையார். அவரும் சேனாவரையர்போல, சொல் அதிகாரத்திற்கு மட்டும் உரை எழுதியுள்ளார். கல்வெட்டுக்களில் ‘தெய்வச்சிலை பட்டன்’, ‘அரையன் தெய்வச்சிலையான் எடுத்தகை அழகியான்’ என்பன போன்ற தொடர்கள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் 13, 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
• பரிமேலழகர்
திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியிருப்பினும் பரிமேலழகர் உரையே மிகச் சிறந்தது என்பர். காஞ்சிபுரம் வரதராசப்பெருமாள் என வழங்கும் அருளாளப் பெருமாள் கோயில் கல்வெட்டில் ‘வண்டுவரைப் பெருமாளான பரிமேலழகிய பெருமாள் தாதன்’ என்ற பெயர் காணப்படுகிறது. இக் கல்வெட்டு கி.பி. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
• சாமுண்டிதேவர்
புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலை இயற்றியவர் ஐயன் ஆரிதனார் என்பவர். அதற்கு உரை எழுதியவர் மாகறல் சாமுண்டிதேவர் என்பவர். சீவைகுண்டம் பெருமாள் கோயில் கல்வெட்டில் ‘மாகறல் திருமேற்கோயில் பெருமாளுக்கு இவ்வூர் ஊரங்கிழான் சாமுண்டிதேவன் திருவேகம்பம் உடையான் விளக்கு ஏற்ற ஒரு கழஞ்சு பொன்’ கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
‘அருந்தமிழின் பாத்தொகுப்பின் பயன் உணர்வோன்’
‘திருமலி சாசனம் இதற்குச் செழுந்தமிழ் பாடினோன்’
‘சீர்மிகு செப்பேட்டினுக்குச் செந்தமிழில் பாத்தொடை தொடுத்தோன்’
‘வண்டமிழ்க்கோன் அதிகாரி’
(தளவாய்புரச் செப்பேடு)
என்பன தளவாய்புரச் செப்பேட்டில் காணும் தொடர்கள். இச்செப்பேடு ஆரியம் விராய்த் தமிழ் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. (ஆரியம் விராய் – வடமொழி கலந்து) இதன் தமிழ்ப் பகுதியைப் பாடியவன் பெயர் ‘பாண்டித் தமிழாபரணன்‘ என்பதாகும்.
பிற்காலப் பல்லவ மரபினன் கோப்பெருஞ்சிங்கனைக் கல்வெட்டுப் பாடல் ஒன்று ‘பேணு செந்தமிழ் வாழப் பிறந்தவன்’ என்று புகழ்கிறது. தமிழின் பெருமையும் சிறப்பும் இதன்மூலம் தெரிகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் எருக்கங்குடிக் கல்வெட்டில் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எட்டி சாத்தன் என்பவன் ‘தமிழ்கெழு கூடல் சங்கப் பலகையில் ஏறி வீற்றிருந்த புலவர்’ வழிவந்தவன் என்று புகழப்படுகின்றான். தளவாய்புரச் செப்பேட்டில் ‘தென் மதுராபுரம் செய்து அங்கதனில் அருந்தமிழ் நற்சங்கம் இரீஇத் தமிழ் வளர்த்தும்’ என்றும், வேள்விக்குடிச் செப்பேட்டில் ‘மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்றும் கூறப்படுகின்றன. பாண்டியர்கள் தமிழ்ச்சங்கம் நிறுவியதுடன் மகாபாரதத்தையும் மொழிபெயர்த்துள்ளனர் என்பதை இதன்மூலம் அறிகின்றோம்.
திருச்சி மாவட்டப் புகலூர் அருகில் உள்ள ஆறுநாட்டார் மலை தமிழ்க் கல்வெட்டில் செல்வக்கடுங்கோ வாழியாதன், பாலைபாடிய பெருங்கடுங்கோ, மருதம்பாடிய இளங்கடுங்கோ ஆகிய மூவரின் பெயர்கள் வரிசையாகக் குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மூவரும் பதிற்றுப்பத்தினுடைய 7, 8, 9ஆம் பத்துக்குரிய மன்னர்கள் ஆவர்.
‘மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்ய
கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் இளங்
கடுங்கோ இளங்கோ ஆக அறுத்த கல்’
என்பது கல்வெட்டு.
‘முத்தமிழ் நான்மைத்
தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன்
மூரிவண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப்
பெண்ணை மலையர்க் குதவிப் பெண்ணை
அலைபுனல் அழுவத்து அந்தரிட் சஞ்செல
மினல்புகும் விசும்பின் வீடுபேறு எண்ணிக்
கனல்புகும் கபிலக்கல்’
என்பது அக்கல்வெட்டாகும்.
• சங்ககாலப் பாண்டியர்
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்பான பாண்டிய அரசர்கள். இவர்கள் இருவர் பெயரும் கல்வெட்டுகளிலும், பண்டைய எழுத்துப் பொறிப்புக்களிலும் காணப்படுகின்றன.
• வழுதியும் செழியனும்
வழுதி பெருவழுதி என எழுதப்பட்ட சங்ககாலக் காசு ஒன்று கிடைத்துள்ளது. மாங்குளம் பழந்தமிழ்க் கல்வெட்டில் நெடுஞ்செழியன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. வேள்விக்குடிச் செப்பேட்டில் ‘பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியாதிராசன்’ என்றும், தளவாய்புரச் செப்பேட்டில் ‘ஆலங்கானத்து அமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்திடவும்’ என்றும் இவ்விரு அரசர்களும் குறிக்கப்பட்டுள்ளனர்.
கலைவல்லுநர்கள், தளிச்சேரிப்பெண்கள் ஆகியோர் சிறப்பும், பெருமையும் பெற்றிருந்தனர்.
தேவரடியார்கள் பொதுப்பணி செய்ததும் கோயிலுக்கு நிலம் அளித்த செய்தியும் தெரிய வருகின்றன. தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டு தங்கள் பெயர்களில் தமிழைச் சேர்த்துக் கொண்டதும் புலப்படுகிறது. கல்வெட்டுகளில் சங்ககால மன்னர் பெயர்கள் மட்டுமன்றி, புலவர், உரையாசிரியர், நூலாசிரியர் ஆகியோரின் பெயர்களும் காணப்படுகின்றன. இவ்வாறு, கலையும் இலக்கியமும் பற்றிக் கல்வெட்டு வாயிலாக அறியும் உண்மைகள் பல.
பாடம் - 4
(முக்கண் செல்வர் நகர் – மூன்று திருக்கண்களை உடைய சிவபெருமானது கோயில்; நகர் – கோயில்; பிறவா யாக்கைப் பெரியோன் – தாய் வயிற்றுப் பிறவாத உடம்பினை உடைய சிவபெருமான்; யாக்கை – உடம்பு; கோட்டம் – கோயில்
• நடுகல்
கல்லே பரவின் அல்லது, நெல்
உகுத்துப் பரவும் கடவுளும் இலவே
(இவ்வடிகளின் பொருள் : போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயரும் சிறப்பும் எழுதிய நடுகல்லையே கடவுளாகக் கருதி வழிபடுவதைத் தவிர, நெல்லைத் தூவி வழிபடும் கடவுள் வேறில்லை.)
என்று புறநானூற்றில் சங்கப் புலவர் பாடியதைக் கொண்டு, நடுகல்லே தெய்வமாக மாறியது என்பர் சிலர். நடுகல்லுக்குப் பெரும்படை அல்லது இற்கொண்டு புகுதல் செய்யப்பட்டதைக் கோயிலின் தொடக்கம் என்பர். பெரும்படை என்பதும் இற்கொண்டு புகுதல் என்பதும் நடுகல்லுக்கு எடுக்கப் பெறும் கோயில் ஆகும்.
• முதல் கற்கோயில்
பழங்கோயில்கள் அக்காலத்தில் கற்களால் கட்டப்பெறவில்லை; செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் இவைகளால் கட்டப்பட்டன. பல்லவன் மகேந்திரவர்மன்தான் (615 – 630) கற்கோயிலை முதலில் அமைத்தான் என்று மண்டகப்பட்டுக் கல்வெட்டுக் கூறுகிறது.
• மன்னர்களின் பணி
மாமண்டூர், மகேந்திரவாடி போன்ற இடங்களில் திருமால் கோயில்களையும், திருச்சிராப்பள்ளி, சீயமங்கலம் போன்ற இடங்களில் சிவன் கோயில்களையும், மண்டகப்பட்டில் மும்மூர்த்தி கோயிலையும் பல்லவ மகேந்திரவர்மன் எடுத்தான். அவனுக்குப் பின்வந்த நரசிம்மவர்மன், பரமேசுவரன் போன்றவர்களும், பாண்டியர்களும் பல குகைக் கோயில்களையும், கற்கோயில்களையும் எடுத்தனர். பாண்டியன் பராந்தகன் கொங்கு நாட்டில் திருமாலுக்குக் குன்றமன்னதோர் கோயில் எடுத்ததாகப் பாண்டியர் செப்பேடு கூறுகிறது.
முதலாம் இராசராசன், தஞ்சாவூரில் தான் கோயில் கட்டியதைப் ‘பாண்டி குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராசராசீச்வரம்’ என்று கல்வெட்டில் கூறிக் கொள்கின்றான்.
முதலாம் இராசேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்திலும், திரிபுவன தேவனான மூன்றாம் குலோத்துங்கன் திருபுவனத்திலும், இரண்டாம் இராசராசன் தாராசுரத்திலும் கோயில் எடுத்தனர். அந்தந்த அரசர் பெயராலேயே அக்கோயில்கள் இன்னும் வழங்குகின்றன. பல அரசர்கள் பல்வேறு சமயக் கோயில்கள் கட்டினர்.
• பணியாளர்
திருவாராதனை செய்யும் சிவப்பிராமணர், பரிகாரம் செய்யும் சிவப்பிராமணர், தளி அர்ச்சிப்பார், ஆராதனம் பண்ணுவார், பூசகர், பூசிக்கும் நம்பிமார், பதிகம் பாடுவார், பிடாரர், ஓதுவார், தாசர், பட்டர், பதியிலார், தேவரடியார், குடமும் குச்சியும் கொண்டு கோயில் உள் புகுவார், உவச்சர், இசைக்கலைஞர்கள், இசைக் கருவி இசைப்பார், அலகிடுவார், மெழுகிடுவார், கழுநீர் போகட்டுவான், கணக்கர் ஆகியோர் இறைப்பணி செய்பவர்களாகக் காணுகின்றோம். இவற்றில் ஒரே தொழில் பெயர்கள் பல அமைப்பில் குறிக்கப்பட்டனவும் உள்ளன.
(அலகிடுவார் – துடைப்பம் கொண்டு சுத்தம் செய்வார்; மெழுகிடுவார் – பூசி வழிப்பவர்; கழுநீர் போகட்டுவான் – அசுத்தமான கழிவுநீரை எடுத்து அப்புறப்படுத்துபவன்).
• நிருவாகிகள்
சமயமுதலி, பன்மகேசுவரர், ஸ்ரீவைஷ்ணவர், ருத்ரமகேசுவரர், ஸ்ரீகார்யம் செய்வார், தேவகன்மிகள், காணியுடையார், தலத்தார், தானத்தார், மூலபருடையார், பதிபாத மூலப்பட்டுடைப் பஞ்சாச்சார்ய தேவகன்மிகள், கரணாத்தார், கோயில் அதிகாரம் செய்வார், பண்டாரி, ஆளும் கணத்தார் ஆகியோர் கோயில் நிருவாகத்தோடு தொடர்பு உடையவர்கள்.
• சமயப் பணிக் குழுக்கள்
சில குறிப்பிட்ட பணிகளை மட்டும் செய்ய காளி கணத்தார். சாத்த கணத்தார், கணபதி கணத்தார், திருவாதிரைக் கணப் பெருமக்கள், துவாதசிக் கணப் பெருமக்கள், திருவோணக் கணப் பெருமக்கள் ஆகியோர் இருந்தனர். மேற்கண்ட பணிகளில் ஈடுபட்டோர் பலர் சமய தீட்சை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(சமய தீட்சை – குருவிடம் சமய உபதேசம் பெறுதல்).
• மருத்துவப் பணிகள்
கோயில் நந்தவனங்களில் மருத்துவ மூலிகைகள் பயிர் செய்யப்பட்டதுடன், சில கோயில்களில் ஆதுலர் சாலை என்னும் மருத்துவமனைகளும் விளங்கின. மூலிகைகள் பயிர் செய்யப்பட்ட இடம் விஷவிருத்தி எனப்பட்டது. தஞ்சையில் சுந்தர சோழ விண்ணகர் என்னும் பெருமாள் கோயிலில் சுந்தர சோழன் மகள் ஓர் ஆதுலர் சாலையை ஏற்படுத்தினாள். செங்கல்பட்டு மாவட்டம் திருமுக்கூடலில் வெங்கடேசுவரப் பெருமாள் கோயிலில் வீரசோழன் ஆதுலர் சாலை இருந்தது. திருவாவடுதுறைக் கோயிலில் ஒரு மருத்துவக் கல்லூரி இருந்தது. மருத்துவர்கள் சுவர்ணன் கோதண்டராமன் அசுவத்தாமபட்டன், சுவர்ணன் அரையன் மதுராந்தகன் எனப் பெயர் பெற்றிருந்தனர்.
• கல்விப் பணி – தண்ணீர்ப் பந்தல்
கோயில்களில் வேத பாடசாலை இருந்தது. கோயிலில் பல மாணவர்கள் தங்கி, சமய பாடமும், மருத்துவமும் கற்றனர். பல கோயில்களில் தண்ணீர்ப் பந்தல்கள் இருந்தன. கோயில்களிலும், மண்டபங்களிலும் இருந்த அவைகள், தண்ணீருடன் உப்பு, ஊறுகாய், நீராகாரம் ஆகியவைகளையும் மக்களுக்கு வழங்கின. சிவன் கோயில் தண்ணீர்ப் பந்தலில் இவற்றுடன் திருநீறும், குங்குமமும் இருந்ததாகக் கல்வெட்டொன்று கூறுகிறது.
• அறப்பணிகள்
கோயில் பண்டாரத்தில் உள்ள பொன்னைக் குளம் வெட்டுவதற்கும், ஏரி, குளம் தூர் வாருவதற்கும் அளித்துள்ளனர். கூனரும், குறளரும் சில இடங்களில் விளக்கேந்தியுள்ளனர். குருட்டுப் பெண்களைக் கோயிலுக்கு அளித்து, அவர்களைப் பூமாலை கட்டவும், நெல்லைக் குத்தி அரிசியாக்கவும், பாடல்கள் பாடவும் பணி செய்வித்துக் கோயிலிலிருந்து அவர்களுக்கு உணவளித்துள்ளனர். அவர்களுக்கு வழிகாட்டக் கண்பார்வையுள்ள கண்காட்டுவார் நியமிக்கப்பட்டனர்.
• கோயிலும் சபைகளும்
நாட்டுச்சபைகளும், ஊர்ச்சபைகளும் கோயில்களிலும், கோயில்களைச் சார்ந்த பகுதிகளிலும் கூடித் தங்கள் அலுவல்களைக் கவனித்துள்ளனர். அக்காலத்தில் இரவு நேரங்களில் விளக்கேற்றப் பெரும் செலவு பிடித்ததால் சபைகள் பெரும்பாலும் பகல் நேரங்களிலேயே கூடின. சில ஊர்களில் கோயில் தொடர்பு கொண்ட ஓரிருவர் ஊர்ச்சபையிலும் அங்கம் பெற்றனர். கீழ்வரும் கல்வெட்டுத் தொடர்கள் அதனை விளக்குகின்றன.
விக்கிரம சோழ தேவர் திருமருதுடையார் ஸ்ரீகோயிலில் பெரிய திருமுற்றத்து ஏகநாயகன் எடுத்துக்கட்டியில் பள்ளிப்பீடததில் எழுந்தருளியிருந்து
எம்மூர் துர்க்கா பரமேசுவரி ஸ்ரீ கோயிலில் கோபுரத்து நாட்டார் கூட்டம் குறைவறக் கூடி
திருவாய்ப்பாடி ஆழ்வார் திருவோலக்க மண்டபத்தே பெருங்குறி சபையோம் தன்மி கொட்டிக் கூட்டம் குறைவறக் கூடியிருந்து
• வழிபடும் காலம்
கோயில்களில் பெரும்பாலும் மூன்று அல்லது நான்கு நேரங்களில் சிறப்பு இறை வழிபாடு (பூசை) நடைபெறும். சிறுகாலைச் சந்தி, உச்சியம்போது, சாயரட்சை, அர்த்தசாமம் என அதனை வழங்குவர். இறைவழிபாடு நடைபெறும் அந்நேரங்களில் மக்கள் வழிபடச் செல்வர் அல்லது அந்நேரங்களில் சென்று வழிபட இயலாதவர்கள் அவர்களாகவே ஒரு நேரத்தில் கோயிலுக்குச் சென்று வழிபடுவர்.
• பிறந்த நாள் வழிபாடு
மக்கள், தாம் பிறந்த நாள் அன்று இறைவனை வழிபட ஏற்பாடு செய்தார்கள். நந்திவர்மபல்லவன் ரோகிணி அன்றும், முதலாம் இராசராசன் சதயம் அன்றும், முதலாம் இராசேந்திரன் திருவாதிரை அன்றும், முதலாம் குலோத்துங்கள் புனர்பூசம் அன்றும் பிறந்ததால் அந்த நாளில் பல கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறக் கொடைகள் அளித்தனர். ‘சதய நாள் விழா உதியர்மண்டலம் தன்னில் வைத்தவன்’ என்று இராசராசன் புகழப்படுகின்றான். அரசர்கள் பலர் பெயரால் சந்தி எனப்படும் வழிபாடு நடைபெற்றது.
• வழிபடும் காரணம்
பழங்காலத்தில் தன் வேண்டுதலுக்காவும், வேண்டிய அவ்விருப்பம் நிறைவேறியதற்காகவும், இறைவன் அருளால் குழந்தை பிறந்ததற்காகவும், பிறந்த அந்தக் குழந்தையின் நலத்திற்காகவும், அரசன் வெற்றி பெறுவதற்காகவும், அரசனின் உடல் நலத்திற்காகவும், மாசிமகம், வைகாசி விசாகம், பங்குனி உத்தரம், மார்கழித் திருவாதிரை, திருக்கார்த்திகை, ஆடிப்பூரம்,
பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய சிறப்பு நாட்களில் மக்கள் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர்.
• மலர் வழிபாடு
பூசையின்போது மலர் தூவி வழிபடுவதும், மாலை சாத்தி வழிபடுவதும் சிறப்புமிக்கது. பூக்களால் செய்யப்படுவதுதான் (பூ + செய்) பூசை ஆயிற்று என்பர். அவ்வாறு இறைவனுக்கு அளிக்கும் மலரும் மாலையும் வாசனையுடையதாய் இருக்கவேண்டும். இதனைக் கல்வெட்டு நாறு திருப்பள்ளித் தாமம் என்று கூறும். மாலையாகத் தொடுக்கும்போது ஒரு விரல் அகலத்தில் இரு பக்கங்களிலும் இரண்டு இரண்டு வாசனையுடைய பூவாக வைத்துத் தொடுக்க வேண்டும் என ஒரு கல்வெட்டு கூறுகிறது. ஒரு விரற்கிடை ஈரிரண்டு நறும்பூவாக என்பது கல்வெட்டுத் தொடர்.
• நெய்யும் எண்ணெயும்
நெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றால் விளக்கு ஏற்றப்படும். விளக்கு எரிக்கும் நெய்க்காக ஆடு, பசு, எருமை ஆகியவை கொடையாக அளிக்கப்பட்டன. அவை சாவா மூவா ஆடு, சாவாமூவாப் பசு, சாவாமூவா எருமை எனப்படும். பொதுவாக 96 ஆடுகள், 48 பசு, 24 எருமைகள் கொடுக்கப்படும். விளக்குப்புறம் அல்லது விளக்குப்பட்டி என்ற பெயரில் நிலங்களைக் கொடையாகவிட்டு, அதன் வருவாயைக் கொண்டும் விளக்கு எரித்தனர். விளக்கு ஏற்ற விளக்குகளும் இருந்தன.
• இடமும் நேரமும்
விளக்கு எங்கு எரிய வேண்டும், எவ்வளவு நேரம் எரிய வேண்டும் என்றும் கல்வெட்டில் எழுதினர்.
‘ஏகநாயகன் திருவாசலுக்கு இரவு விளக்கு எரிய’
‘அந்திப்பட்டு 1/2 நாழிகை எரியும் விளக்கு’
‘கோயிலைச் சூழவும் எரியும் விளக்கு’
‘விக்கிரம சோழன் திருமாளிகையில் எரியும் விளக்கு’
என்பன கல்வெட்டுத் தொடர்கள். எண்ணிக்கையோ நேரமோ ‘முட்டாமல்’ குறையாமல் எரிய வேண்டும் எனவும் தம் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர். விளக்கு அணையாமல் ‘பார்ப்பவர்கள்’ இருந்தனர். சில இடங்களில் கூனரும், குறளரும் விளக்குப் பிடிப்பதற்காக நியமிக்கப்பட்டு, கோயிலில் உணவு பெற்று வாழ்ந்தனர் என்பதை முன்பே கண்டோம்.
• பெயரிடல்
விளக்குகட்குப் பெயர்களும் வைக்கப்பட்டன. ஈழச்சீயல் விளக்கு, மலையான் சீயல் விளக்கு, அனந்தலை விளக்கு என விளக்குகள் பெயர் பெற்றிருந்தன. ஒரு விளக்கிற்கு இராசராசன் என்று அரசன் பெயரே வைக்கப்பட்டிருந்தது. இவ்விளக்குகள் உலோகத்தால் செய்யப்பட்டிருந்தன.
• வேண்டுதல்
ஒருவன் இறைவனை வேண்டி, குழந்தைப்பேறு பெற்றதால் பால் கறக்கும் பசுவாக 32 பசுக்கள் கொடுத்து விளக்கெரிக்க ஏற்பாடு செய்தான்.
‘திருப்புலிப் பகவற்கு சிவப்பிராமணன் பாரதவாஜி
பஞ்சநதன் பெரியான் இத்தேவர்க்குப் பிரார்த்தித்து
ஆண்பிள்ளை பெற்றமைக்கு திருநந்தா விளக்குக்கு
32 பசு பால் பசு கொடுத்தான்’
என்பது கல்வெட்டுத் தொடர். திருவிடைமருதூரில் ஒரு பெண் தான் விரும்பிய கணவனை அடைந்ததால் லட்சம் விளக்கு ஏற்றினாள்.
அவள் தன்னைப் போலவே பாவை விளக்கு வைத்ததை,
‘கோயில் தேவரடியாள் போகமார்த்தாள் மகன்
உற்றாநாஞ்சி இட்ட தன் பெண்ணுருவாகச் செய்த
பித்தளைப் பாவைமேல் திருநந்தா விளக்கு’
என்பது கல்வெட்டுத் தொடர். சங்கிலியுடன் இணைத்துத் தொங்கும் விளக்கும், நிலத்தில் குத்திவைத்த விளக்கும் ஏற்றப்பட்டன. குத்திவிளக்கே குத்துவிளக்காகப் பெயர் மாறியது.
• புண்ணியம்
கோயிலில் விளக்கேற்றுவது புண்ணியம். அதை அணைப்பது பாவம் என்று கருதினர். கோயில் அறக்கொடைகட்குத் தீங்கு செய்தார் சன்னதி இருளச் சந்தியா தீபம் அணைச்ச தோஷத்தில் போவாராக என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. கொலைப் பாவம் கூட விளக்கேற்றினால் போகும் என நம்பினர். பல கொலையாளிகள் விளக்கு வைத்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
• அமுது
இறைவனுக்குத் திருஅமுது படைக்கக் கொடுக்கும் எல்லாப் பொருள்களுமே அமுது என்று பெயர் பெற்றன. நெய்யமுது, தயிரமுது, உப்பமுது, பருப்பமுது, அடைக்காய்அமுது என எல்லாமே அமுதுதான்.
• பண்பாடு
கோயிலுக்குப் பொன் கொடுக்கும்போது துளைநிறை செம்பொன், தீப்போக்குச் செம்பொன் என உயர் மாற்றுடைய பசும்பொன்னாகக் கொடுத்தனர். கோயில் நிலத்தை உழுது கோயிலுக்கு மேல் வாரமாக நெல் கொடுக்கும்போது, நிலம் விளைந்தாலும், விளையாவிட்டாலும், காய்ந்து அழிந்தாலும், மழை பெய்து அழிந்தாலும், ஊர் கேடு போனாலும் தவறாமல் கோயிலுக்கு நெல் கொடுத்தனர். காசு கொடுக்கும்போது அன்றாடு நற்காசு, குறையில்லாத நல்ல காசு (வாசிபடா நற்காசு) கொடுத்தனர். அன்றாடு நற்காசு என்பது அந்த நாளில் வழக்கில் இருந்த நல்லகாசு ஆகும்.
• தண்டனை
யாராவது கோயிலுக்குக் கொடுக்க வேண்டிய வரியையோ, பலிசை எனப்படும் வட்டியையோ கொடுக்க மறுத்தால், கோயில் சபையார் அவர்கள் வீட்டுக்குச் சென்று மண் கலங்களைக் கொடுத்து வெண்கலங்களைப் பறிமுதல் செய்து கொள்ளலாம் என்று கல்வெட்டில் ஆணையாகப் பொறிக்கப்பட்டது. கொடைகள் சந்திரசூரியர் உள்ளவரை தொடர்ந்து தவறாமல் நடக்க வேண்டும் என்றும் கல்வெட்டில் பொறித்தனர்.
• மடங்களின் பெயர்கள்
திருநீலவிடங்கன் மடம், கூத்தாடு நாயனார் மடம் என இறைவன் பெயரிலும், அருள்மொழித்தேவன் மடம், வீரபாண்டியன் மடம் என அரசர் பெயரிலும், நமிநந்தியடிகள் மடம், பரஞ்சோதி மடம் என நாயன்மார் பெயரிலும், திருமாளிகைப்பிச்சன் மடம், அன்பர்க்கு அடியான் மடம் எனச் சமய அடியார் பெயரிலும், பன்மாகேசுவரர் மடம், நாற்பத்தெண்ணாயிரவர் மடம் எனப் பல குழுவினர் பெயரிலும் மடங்கள் ஏற்பட்டன.
• பலவகை மடங்கள்
திருமுருகன் திருமடம், அறப்பெருஞ்செல்வி சாலை, சங்கரதேவன் அறச்சாலை என்ற அமைப்பில் திருமடம், சாலை, அறச்சாலை எனவும் மடங்கள் அழைக்கப்பட்டன. ஒரே ஊரில் பல மடங்கள் இருந்தன. சோழ மாதேவியில் மேலைமடம், கீழைமடம் என இரு மடங்கள் இருந்தன.
• சமண மடங்கள்
சமண காஞ்சி எனப்படும் திருப்பருத்திக் குன்றத்திலும், பாடலி என அழைக்கப்பட்ட திருப்பாதிரிப் புலியூரிலும் சமணர் மடங்கள் இருந்தன. திண்டிவனத்திற்கும், செஞ்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மேல் சித்தாமூரில் இன்றும் திகம்பர சமண மடம் ஒன்று சிறப்புடன் விளங்குகிறது. தமிழகத்தின் சமணத் தலைமைப் பீடமாக அது விளங்குகிறது. வச்சிரணந்தி, சிம்மசூரி, சர்வநந்தி போன்ற சமணப் பெரியார்கள் சமண மடத்துடன் தொடர்புகொண்டவர்களாகக் குறிக்கப்படுகின்றனர். பல சமணப் பள்ளிகளில் தீர்த்தங்கரர் உருவங்கள் வணங்கப்பட்டன.
• பௌத்த மடங்கள்
இன்று பூதமங்கலம் எனப்படும் போதிமங்கை, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் பௌத்த அறநிலையங்கள் இருந்தன. தமிழகக் கடலோரப் பகுதியான தொண்டி போன்ற பல இடங்களில் பௌத்த மடங்கள் இருந்தன. பல பௌத்தப் பள்ளிகளில் புத்தபெருமான் வணங்கப்பட்டார்.
இறைவன் பெயர்கள் இடல்
மஞ்ஞகன் வயல், கணபதி வாய்க்கால், கூத்தாடும் நல்லூர் என்று வயல், வாய்க்கால், ஊர் என முடியும் பெயர்களும் சமய அடிப்படையில் எழுந்துள்ளன. ஏரி உடைப்பு ஒன்றுக்குக் கூட காளியம்மை உடைப்பு என்று பெயர் வழங்கியது. உடைப்பு என்பது ஏரியின் உடைந்த பகுதியாகும்.
சிவபெருமான் பிள்ளைகள்
பிள்ளையார், முருகன், பைரவர், சேத்திரபாலர், சண்டிகேசுவரர், திருஞானசம்பந்தர் ஆகியோர் சிவபெருமானின் பிள்ளைகள் என்று அழைக்கப் பெறுவர். பிள்ளையாரை மூத்த பிள்ளையார் என்றும், முருகனை இளைய பிள்ளையார் என்றும் கல்வெட்டில் அழைப்பர். அம்மையின் ஞானப்பால் உண்டதால் திருஞானசம்பந்தர் சிவபெருமானின் பிள்ளை ஆனார்.
முருகன் பெயர்கள்
பிள்ளையார் என இவர்களை அழைக்கும் கல்வெட்டுக்கள் முருகப் பெருமானைக் குன்றம் எறிந்த பிள்ளையார், சிறைமீட்ட பெருமாள், தேவ சேனாபதி, இளைய நயினார், வேலாயுதசாமி, கந்தன், ஆறுமுகன், சுப்பிரமணியர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றன. சில கல்வெட்டுகள் ‘சதா வேலுமயிலும் துணை’ என முடிகின்றன.
திருமுறைப் பெயர்கள்
சைவத் திருமுறைகளில் பயின்றுவரும் பல தொடர்கள் மக்களுக்குப் பெயராக வைக்கப்பட்டிருந்தன. அம்பலத்தாடி, ஒளிவளர்விளக்கு, சீருடைக்கழல், செம்பொற்சோதி, பொன்னார் மேனியன், எடுத்தபாதம், மழலைச் சிலம்பு ஆகிய பெயர்கள் அவ்வாறு அமைந்தவை.
சமயமும் வழிபாடும் எந்த வகையில் சிறப்புற்றிருந்ததன என்பதனைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
பாடம் - 5
பெண்களுக்குச் சொத்துரிமை ஓரளவு இருந்துள்ளது. குந்தவையார், செம்பியன்மாதேவி போன்ற அரச குடும்பத்துப் பெண்கள் மட்டுமல்ல சில வணிகர், வேட்டுவர், வேளாளர் குலப் பெண்களும் கோயிலுக்குக் கொடுத்த கொடை பற்றிக் கல்வெட்டுகள் கூறுகின்றன. காவலன் குறும்பிள்ளரில் சொக்கன் மனைக்கிழத்தி, வேளாளரில் கண்ணன் மூவேந்தவேளான் மணவாட்டி பெருந்தேவி ஆகியோர் கோயிலுக்குக் கொடை கொடுத்தமை பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இராசராசன் கூட “நம் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும்” ஆகிய பெண்கள் கொடைகளைத் தன் கல்வெட்டில் குறிக்கின்றான்.
• பெண்களின் பாதுகாவலர்கள்
சில இடங்களில் பெண்கள் கொடை கொடுக்கும்போது அப்பெண்ணின் தந்தை அல்லது கணவன் அல்லது சகோதரன் ஆகியோர் அப்பெண்ணிற்காகக் கொடை கொடுத்ததாகக் கூறிக் கொள்கின்றனர். “திருச்சிற்றம்பல தேவனை முதுகண்ணாக உடைய இவன் பிராமணி சாத்தி’’ என்பது ஒரு கல்வெட்டுத் தொடராகும். முதுகண் என்பது பாதுகாவலரைக் குறிக்கும் கல்வெட்டுச் சொல்லாகும். மனைவிக்குக் கணவரும், மக்களுக்குப் பெற்றோரும் பாதுகாவலராகக் (முதுகண்ணாகக்) குறிக்கப் பெற்றுள்ளனர்.
• தேவரடியார் நிலை தேவரடியார் என்று பெயர் பெற்ற திருக்கோயில் பணிப்பெண்கள் கொடை கொடுக்கும் அளவிற்குச் சிறப்புடன் திகழ்ந்துள்ளனர். சில தேவரடியார்கள் திருமணமும் செய்துகொண்டு கணவனோடு வாழ்ந்துள்ளனர். அவர்கள் மக்கட் செல்வங்களான ஆண்களும், பெண்களும் கொடையளித்துள்ளனர். தேவரடியாருக்குக் கோயிலில் பொட்டுக்கட்டுதல் என்னும் சடங்கு செய்து, சந்தனம் தெளித்து, புத்தாடை, அணிகலன்கள் கொடுத்து நகர்வலம் செய்வித்துச் சிறப்புச் செய்துள்ளனர். அவர்கள் குடும்பத்தார்க்குக் கொடை கொடுத்தனர்.
உலகமுழுதுடையாளொடும்
வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி
மின்மரான ஸ்ரீ ராஜராஜன் “
“உலகுடைய முக்கோக் கிழானடிகளொடும்
செம்பொன் வீரசிம்மாசனத்து
வீற்றிருந்தருளிய சக்கரவர்த்தி
ஸ்ரீ ராஜாதிராஜன்’
என்ற கல்வெட்டு மெய்க்கீர்த்தித் தொடர்களால் அறியலாம்.
• பெண் அதிகாரிகள்
அரசு அதிகாரிகளாகச் சில பெண்கள் இருந்துள்ளனர். “அதிகாரிச்சி எருதன் குஞ்சரமல்லி” போன்றோர் பெயர்களைக் கல்வெட்டில் காணுகிறோம். இவர்கள் சிலர் அதிகாரிகளின் மனைவியராகவும் இருந்துள்ளனர். சில இடங்களில் அரசமாதேவியின் பணிப்பெண்களாக இருந்தனர். இவ்வாறு சில பெண் அதிகாரிச்சிகள் இருந்துள்ளனர்.
முதல் பராந்தகன் காலத்தில் இருங்கோவேள் மரபில் வீரசோழ இளங்கோவேள் மனைவி கங்கமாதேவி தீப்பாய்ந்து இறந்ததையும், கங்கைகொண்ட சோழன் ஆகிய முதல் இராசேந்திரன் மனைவி வீரமாதேவியார் தீப்பாய்ந்ததையும், மூன்றாம் குலோத்துங்கசோழன் மனைவி தீப்பாய்ந்ததையும், இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் மனைவியும் முதலாம் இராசராசன் தாயுமாகிய வானவன்மாதேவி இராசராசன் குழந்தையாக இருக்கும்போதே தீப்பாய்ந்து இறந்ததையும் கல்வெட்டுகள் கூறுகின்றன.
“முழங்கு எரி நடுவணும்
தலைமகன் பிரியாத் தையல்’
என இராசராசன் மனைவி வானவன்மாதேவி கல்வெட்டில் குறிக்கப்படுகிறாள்.
• கைம்மை நோன்பு
இவ்வாறு தீப்பாய்ந்து இறந்த பெண்களை வீரமாசத்தி என்பர். பின்னர் இவர்கள் ‘வீரமாசத்தி’ என்று வழிபடப்பட்டனர். சமுதாயத்தில் எல்லாப் பெண்களும் கணவன் இறந்த பின்னர் தீப்பாய்ந்தனர் என்று கொள்ள முடியாது. இவ்வழக்கம் மிக அருகியே காணப்பட்டது. பலர் கைம்மை நோன்பு நோற்றும் வாழ்ந்திருக்கக் கூடும். கண்டராதித்தன் திருத்தேவியரரான செம்பியன் மாதேவி தன் கணவன் இறந்தபின், பல ஆண்டுகள் மூன்று அரசர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்து, பல இறைப்பணிகள் செய்துள்ளார். இவர்கள் கைம்மை நோன்பு நோற்றவர்கள் ஆவர். அரசனும் அரசியும் இறந்த பின்னர் அவர்கட்குப் பள்ளிப்படை என்னும் சமாதிக் கோயில்கள் எடுக்கப்பட்டன. பஞ்சமாதேவி பள்ளிப்படை என்ற பெயரைக் கல்வெட்டில் காணுகின்றோம்.
• வீரக்கல் எடுக்கப்பட்டோர்
பண்டைய நடுகற்கள் மன்னர்களுக்கோ உயர்ந்தோர்களுக்கோ எடுக்கப்படவில்லை. அவை சமுதாயத்தில் பெரும் தொகையாக விளங்கிய மறவர், எயினர், மழவர், வேடர், வடுகர், கோவலர், கள்வர், பறையர், பாணர் குடிகளைச் சேர்ந்த சேவகன், இளமக்கள், தொறுவாளன், இளையோர், ஆள், இளமகன், அடியாள், அடியார், மன்றாடி, மனைமகன் ஆகியோருக்கு மட்டுமே எடுக்கப்பட்டன.
• வீரக்கற்களின் சிறப்பு
பண்டைய நாளில் ஊர் மக்களையும், ஊரையும் காப்பாற்ற புலி, யானை, காட்டுப்பன்றி ஆகியவற்றைக் குத்தி வீரமரணம் அடைந்தோர்க்கும், போரில் வீரமரணம் அடைந்தோர்க்கும் நடுகற்கள் எடுக்கப்பட்டன. அந்நடுகற்களின் மூலம் அக்கால ஆடை, அணிகலன், போர் ஆயுதங்கள், போர்முறை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். நடுகல்லில் உள்ள வீரனை அவ்வீரனின் தலைவன், மனைவி, மக்கள், உற்றார் ஆகியோர் வழிபடுவர். அக்காலச் சமுதாயத்தைப் பற்றி அறிய நடுகல் ஆய்வு ஒரு முக்கியமான ஆதாரமாகத் திகழ்கிறது. பெரும்பாலான நடுகற்களில் இறந்த வீரனின் பெருமையும் பெயரும் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டிருக்கும்.
• தூக்குத்தண்டனை
கொலைக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. அதற்குத் தலைவிலை என்று பெயர். ஆனால் ஈரோடு மாவட்டம் சாத்தம்பூர் என்னும் ஊரில் பூந்துறை நாட்டார் கூடி, அநியாயம் அழிபிழை செய்த தீயவர்களைக் கொன்றால் கொலை செய்தவர்களுக்குத் தலைவிலை இல்லை என்று தீர்மானம் செய்தனர் என்பதை, அவ்வூர் வல்லாள ஈசுவரன் கோயிலில் வெட்டப்பட்ட ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு கொங்குச் சோழன் குலோத்துங்கன் (1149-1183) காலத்ததாகும்.
• விளக்கேற்றுதல்
ஓர் ஊரில் சகோதரர் இருவர் சண்டையிட்டதில் தம்பியால் அடிபட்டு அண்ணன் இறந்தான். தகுந்த சாட்சியங்களால் குற்றம் நிரூபிக்கப்பட்ட போதிலும், வயோதிகப் பெற்றோருக்கு வேறுமக்களோ, ஆதரிப்பவரோ, சொத்தோ, நிலமோ இல்லாத காரணத்தால், நாட்டுச்சபையார் இளையவனின் தலைவிலையை நீக்கிக் கோயிலுக்கு விளக்கேற்றுமாறு கூறினர் என்பதை, ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. பிற்காலச் சோழர் காலத்தில் கி.பி. 12, 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் இச்செய்திகள் கூறப்படுகின்றன.
• இறைப்பணியாளர் குற்றம்
கோயில்களில் இறைப்பணி புரியும் அர்ச்சகர்கள் செய்யும் குற்றங்களுக்குத் தண்டனையாக அவர்கள் நிலம் பறிமுதல் செய்யப்பட்டது. நிலம் இல்லாவிடில் அவர்களைப் பணியிலிருந்து நீக்கி, அவர்கள் பணிசெய் நாளைப் பிற அர்ச்சகர்கட்கு விற்பனை செய்து பெற்ற பொன்னைக் கோயில் கருவூலத்தில் சேர்த்து, ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்தனர்.
• தவறான கொலைக்குரிய தண்டனை
வேட்டைக்குச் சென்ற இடத்தில் ஒருவன் அம்பெய்தபோது தவறுதலாக வேறு ஒருவன் மீதுபட்டு அவன் இறந்தான். கொலை புரியவேண்டும் என்ற தீய நோக்கம் இன்றித் தற்செயலாக ஆயுதம் பட்டு ஒருவன் இறந்தான். இப்படிப்பட்ட கொலைக்குற்றங்களுக்குத் தண்டனை கடுமையாக விதிக்காமல், கோயிலுக்கு ஆயுள் முழுவதும் விளக்கேற்றுமாறு செய்துள்ளனர்.
• சாதிக்கு ஏற்ற தண்டனை
சாதிக்கு ஏற்ற தண்டனையும் அக்காலத்தில் நிலவியது. சிவாச்சாரியார் இருவர் மிகக் கொடிய குற்றங்களைச் செய்தனர். வழக்கமாக அவர்கட்கு எளிய தண்டனை இல்லாமல் கீழ்ச்சாதிக்காரர்களுக்கு அளிக்கும் தண்டனைபோல் அவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது என்பதையும் ஒரு கல்வெட்டு மிக விரிவாகக் கூறுகிறது.
• வரியைக் குறைத்தல்
அரசுக்கோ நாட்டுச்சபைகட்கோ கொடுக்க வேண்டிய வரிகளைக் குறைக்குமாறு சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளமையைக் கல்வெட்டுகளில் காணுகின்றோம். “மச்சுனன் அழகப் பெருமாள் சொன்னமையில்”, “பெருந்தரம் வீரசோழ மூவேந்தவேளான் சொல்லி நினைப்புமிட்டமையில் இறை இழிச்சினோம்’ என்று கூறி, வரியைப் பாதியாகவோ மூன்றில் ஒரு பங்காகவோ குறைத்துள்ளனர். (இழிச்சுதல் – குறைத்தல்).
‘காடெழு கரம்பு நீரேறாப்பாழ்’ போன்ற தரிசு நிலத்தைப் பயிர் செய்தவர்கட்கும், புதிதாகக் குடியேற்றப்பட்ட வேளாளர்கட்கும், கைக்கோளர் முதலிய தொழில் புரியும் மக்களுக்கும் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு வரி இல்லையென்றும், அடுத்துவரும் ஆண்டுகட்கு மூன்றில் ஒன்றும், பின்னர் வரும் ஆண்டுகட்குப் பாதியும் வரி வாங்கப்பட்டது என்பதையும் கல்வெட்டு மூலமாக அறிகிறோம். தவறாக வரிவாங்கிய இடங்களில் வரி திருப்பிக் கொடுக்கப்பட்ட விபரமும் கல்வெட்டால் அறிகிறோம்.
• தீண்டாதார்
மக்கள் சேர்ந்து வாழ்ந்த இடங்கள் சேரி என்று கூறப்பட்டன. பார்ப்பனச் சேரி, கம்மாளச்சேரி, இடைச்சேரி என்ற பெயருடன் பல சேரிகள் இருந்தன. தீண்டாச்சேரி என்ற சேரி ஒன்றும் இருந்ததைக் காண்கிறோம். குளம் தூர் வாரும்போது கூட ஊரில் உள்ள அனைவரும் தங்கள் பங்குக்குத் தூர் வாரவேண்டும் என்று கூறுமிடத்தில் தீண்டாதார் ஒழியப் பிறர்தான் தூர் வாரவேண்டும் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. இச்சேரிகள் பேரூரை ஒட்டி இருந்தன.
• வலங்கை – இடங்கை வேறுபாடு
வலங்கை – இடங்கை என்பது அந்தணர், வேளாளர் அல்லாத இதர மொத்த சமூகங்களின் இரண்டு பிரிவுகள். பிற்காலச் சோழர்களின் தொடக்க காலத்தில் இப்பிரிவு தொடங்கியது. படைப்பிரிவில் ஏற்பட்ட வலங்கை – இடங்கைப் பிரிவு சமுதாயத்தில் எல்லாப் பிரிவினர் இடையேயும் பின்னர் வந்துவிட்டது.
வலக்கை, இடக்கை; வலதுகை, இடதுகை; வலங்கைப் பாணத்தார், இடங்கைப் பாணத்தார்; வலங்கையர், இடங்கையர் எனவும் இவர்கள் குறிக்கப்பட்டுள்ளனர். 10ஆம் நூற்றாண்டில் முதலில் படைப்பிரிவில் இவ்வழக்கம் தோன்றியது. முதலில் உள்நாட்டுப் படை வலங்கைப் பழம்படை, வலங்கைப் படை, வலங்கை மாசேனை என அழைக்கப்பட்டது. பின்னர், குடியேறிய வன்னியர், செங்குந்தர்களைக் கொண்ட படை இடங்கைப் படை என்று அழைக்கப்பட்டது. பிறகு இப்பிரிவு பொதுமக்களிடமும் பரவியது.
வணிகம், தொழில் சார்ந்தோர் வலங்கை இடங்கை எனப்பட்டனர் என்ற கருத்தும் உண்டு. சோழ மன்னனுக்கு வலப்புறமும் இடப்புறமும் அமரும் உரிமை சிலருக்கு அளிக்கப்பட்டது. நாளடைவில் அவர்கள் வலங்கை இடங்கைப் பிரிவுகளாக மாறினர் என்ற கருத்தும் உண்டு. எப்படியோ மொத்த சாதிக்குள் இப்பிரிவு ஏற்பட்டுவிட்டது. இப்பிரிவைப் பற்றிய ஏற்றுக் கொள்ளக்கூடிய பெயர்க்காரணம் இன்னும் சரியாகக் கண்டறியப்படவில்லை. வழிபாட்டில் கூட இப்பிரிவு ஏற்பட்டுவிட்டது. சில கோவில்களில் வலங்கை விநாயகர், இடங்கை விநாயகர் எனப் பிரதிட்டை செய்த நிகழ்ச்சிகள் உள்ளன. இவ்வகையினர் வலங்கைச் சாதியார், இடங்கைச் சாதியார் எனவும் அழைக்கப்பட்டனர்.
• வலங்கையரும் இடங்கையரும்
தட்டார், கொல்லர், தச்சர், கன்னார், மரவேலைக்காரர் ஆகிய பஞ்சகம்மாளரும், கம்பளத்தார், செங்குந்தர், தேவேந்திரர், மாதாரிகள் வன்னியர் போன்ற தொழில் அடிப்படையாக இருப்பவர்கள் இடங்கைச் சாதியார் என்றும், கவறைச்செட்டிகள், சேணியர் போன்ற வணிகப் பிரிவினர் வலங்கைச் சாதியார் என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
• சலுகைகள்
சில சாதியாருக்குச் சில உரிமைகளை அரசர்களும், அதிகாரிகளும் அளித்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. வாயிற்படி அமைத்தல், வாத்தியம் வாசித்தல், சன்னல் அமைத்தல், மேல் ஆடை அணிதல், பகல் தீவட்டிப் பந்தம் பிடித்தல், குதிரை ஏற்றம், குடைபிடித்தல், காலுக்குச் செருப்பு அணிதல் போன்ற உரிமைகளும் சலுகைகளும் சிலருக்கு வழங்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இவை சமூக வேறுபாடுகளை நீக்கும் முயற்சி எனலாம்.
• கோயிலில் அடிமைகள்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலப்பெரும்பள்ளம் திருக்கோயிலில் நாங்கூர் அந்தணன் ஒருவன் பதின்மூன்று காசுக்கு ஆறுபேரை அடிமைகளாக விற்றனன். மற்றும் பெண்கள் இருவர், தம்மை உள்ளிட்ட எழுவரைப் பதினைந்து காசுக்கு விற்றனர். தந்திவர்மமங்கலத்து மத்தியஸ்தன் ஒருவன் வயலூர்க் கற்றளிப்பரமேசுவரர் கோயிலில் திருப்பதியம் பாடுவதற்கும், அடிமைகளாகத் தொண்டு புரிவதற்கும், கி.பி. 948ஆம் ஆண்டு, சிலரை அளித்தான் என்பதை அவ்வூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. திருநெல்வேலி மாவட்டம் கருங்குளம் இராசசிம்மேசுவரமுடையார் கோயிலில் ஓர் உவச்ச அடிமையை அரசியல் அதிகாரி ஒருவன் 1105ஆம் ஆண்டு தந்த செய்தியும் கல்வெட்டில் கூறப்படுகிறது.
• அடிமைகட்கு அடையாளம்
பாணபுரத்திலிருந்து அழகிய பாண்டிப் பல்லவரையன் என்பான் 1119ஆம் ஆண்டு தன் குடும்பப் பெண்கள் சிலரை, தேவரடியாராகப் பணிபுரிந்து வருமாறு சூல இலச்சினை பொறித்து, திருவல்லம் கோயிலில் பணிபுரியுமாறு அடிமைகளாக விட்டான்.
• அடிமைகளின் விற்பனை
1201ஆம் ஆண்டு கொடிய பஞ்சத்தில் வேளாளன் ஒருவனும் அவன் பெண்மக்கள் இருவரும் கோயிலைச் சார்ந்த மடத்திற்கு 110 காசுகளுக்கு விலைப்பட்டு அடிமைகளான செய்தி, திருப்பாம்புரக் கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது. நாகப்பட்டினம் அருகில் உள்ள திருக்காரோணக் கல்வெட்டு ஒன்றில், கணக்கர் இருவர் தம் அடிமைகளைக் கோயிலுக்கு விற்றதைத் தெரிவிக்கிறது. அதற்காக ‘ஆள்விலைப் பிரமாண இசைவுதீட்டு‘ எழுதப்பட்டதையும் அக்கல்வெட்டுக் குறிக்கிறது. சிலர் ஊர்ப் பொது இடத்தில் தம் அடிமைகளைக் கொண்டுவந்து நிறுத்தி “விலைகொள்வார் உளரோ” என்று கூவி விற்றுள்ளனர். விலைகுறித்தால் கொள்வேன் என்று சிலர் விலைக்கு வாங்கியுள்ளனர். செல்வர் சிலர் தம் சொத்துக்களையும், நிலங்களையும் தம் மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கும்போது தமது அடிமைகளையும் பிரித்துக் கொடுத்துள்ளனர் என்பதையும் சில கல்வெட்டுகள் கூறுகின்றன.
• பரம்பரை அடிமை
எதிரிலிசோழக் கங்கநாடாழ்வான் என்பவன் 1219ஆம் ஆண்டு திருமறைக்காட்டுக் கோயிலுக்கு ஆண்கள் ஐவரையும், பெண்கள் ஐவரையும் பரம்பரை அடிமைகளாக விற்ற செய்தி ஒரு கல்வெட்டால் புலப்படுகிறது. தச்சன் ஒருவனும், அவன் மனைவியும் அவர்கள் மக்கள் நால்வரும் அச்சுதமங்கலம் கோயிலில் பரம்பரை அடிமைகளாக இருந்ததை, ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. இவர்களில் பலர் பக்திக்காக மட்டும் அல்லாது, கொடிய பஞ்சம் வந்தபோது வறுமையின் காரணமாகவும் பரம்பரை அடிமையாகத் தங்களைக் கோயில்களுக்கு விற்றுக்கொண்டனர் என்று தெரிகிறது.
• தண்ணீர்ப் பந்தலும் சுமைதாங்கியும்
இறந்தவர்கட்காக நடுகல்லும், பள்ளிப்படைக் கோயிலும் கட்டும்போது, அவர்களின் ஆத்மா சாந்தியடைய, அவர்கள் தாகம் தீர, அருகில் கிணறு வெட்டுவது, தண்ணீர்ப் பந்தல் அமைப்பது வழக்கமாக இருந்தது. முதலாம் இராசராசன் நடத்திய ஈழப் போரில் தன் தந்தை இறந்ததற்காக ஒற்றியூரன் பிரதிகண்ட வர்மன் கிணறுவெட்டித் தண்ணீர்ப் பந்தல் அமைத்தான் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, கருவுற்ற பெண்கள் நலமாகக் குழந்தைப் பேறு அடைய சுமைதாங்கிகள் அமைக்கப்பட்டதையும் கல்வெட்டுக் கூறுகிறது.
• பாவம்-புண்ணியம்
சுவர்க்கம், நரகம் போன்ற நம்பிக்கைகளும் மக்களிடையே இருந்தன. நன்மையும் புண்ணியமும் செய்தோர் சுவர்க்கம் புகுவர் என்றும், தீமையும் பாவமும் செய்தோர் நரகம் புகுவர் என்றும் மக்கள் கருதினர். கங்கையாறு மிகப் புனித ஆறாகக் கருதப்பட்டதால் மக்கள் கங்கைக்கு நீராடச் சென்றனர். அவர்கள் பெயருக்கு முன் ‘கங்கையாடி’, ‘கங்கைக்குப் போய்வந்த’ என்ற தொடர்கள் சேர்த்து எழுதப்பட்டன. சிலர் தங்கள் பெற்றோரின் அஸ்தியைக் கங்கையில் கரைப்பதற்காகச் சிவாச்சாரியார்கள் மூலம் அனுப்பிவைத்தனர். சென்றுவந்த சிவாச்சாரியார்கட்குக் கொடைகள் வழங்கப்பட்டன என்பதையும் சில கல்வெட்டுகள் கூறுகின்றன.
பாடம் - 6
“உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே”
(புறநானூறு-18)
என்று பாடினார். அவரே ‘உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே’ என்றும் பாடியுள்ளார். நீர்பாய்ச்சி நிலத்தில் வேளாண்மை செய்ய, பண்டைக் காலம் முதல் மக்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். அதனால் விளைவு பெருகியது. பெரும்பாலும் வேளாண்மை அடிப்படையாகவே வணிகமும் ஏற்பட்டது. உற்பத்தியாகும் பொருள்களை மக்களிடம் கொண்டு செலுத்துவோர் வணிகர்களே. அவர்களிடையே உள்ள பல்வேறு பிரிவுகளையும், வணிகத்தின் சிறப்பியல்புகளையும் கல்வெட்டுகள் கூறுகின்றன. வேளாண்மைச் சிறப்பையும், வணிகப் பெருமையையும் இப்பாடத்தில் நாம் காணலாம்.
எனப்படும். வாயிலிருந்து செல்லும் கால் வாய்க்கால் ஆயிற்று.
நீர் பாய்ச்சு முறைகள்
மழை நீராலும், ஆற்று நீராலும், ஊற்று நீராலும் வேளாண்மை நடைபெறும். ‘பாயும் நீர் பாயவும், வாரும்நீர் வாரவும், இறைக்கும் நீர் இறைக்கவும் படுவது’ என்ற கல்வெட்டுத் தொடரால் பாய்தல், வாருதல், இறைத்தல் மூலம் நீர் நிலத்தில் சேர்வது தெளிவாகிறது. குற்றேத்தம், நெட்டேத்தம் என இரு முறைகளைக் கல்வெட்டுக் கூறுகிறது. அவை நீர் இறைத்துப் பாய்வதும், தானே பாய்வதும் ஆகும்.
· கிணறுகள்
பழங்காலத்தில் செயற்கையாகத் தோண்டும் கிணறுகள் மிக அரிதாகவே இருந்தன. ‘இவ்வூரில் கிணறு பெற்ற மனை’, ‘கிணறு பெற்ற தோட்டம்’ எனக் கல்வெட்டுகள் குறிப்பது இதன் சிறப்பையும், அருமையையும் உணர்த்தும். கூவலூர், காஞ்சிக் கூவல், கொல்லன்கூவல் என்ற ஊர்ப் பெயர்கள் அங்குள்ள கிணறுகளால் பெயர் பெற்றன. ஊர் மக்கள் பயன்படுத்தும் நீர்நிலை ஊருணி எனப்படும்.
· ஆறுகள்
சங்க காலத்தில் சோழநாட்டில் காவிரி, அரிசில் என இரண்டு ஆறுகள் இருந்தன. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தேவார காலத்தில் மண்ணி, கொள்ளிடம், கடுவாய், வெண்ணி போன்ற ஆறுகள் புதியதாகக் குறிக்கப்படுகிறது. பழங்காவிரி, புதுக்காவிரி போன்ற தொடர்கள் கல்வெட்டில் உள்ளன.
· சோழ மன்னர்களும் பேராறுகளும்
முதல் இராசராசன் (985-1014) திருச்சிக்கு அருகில் ஓடும் உய்யக்கொண்டான் ஆற்றையும், கோனேரிராசபுரம் அருகில் ஓடும் கீர்த்திமான் ஆற்றையும் வெட்டினான். கடுவாய் எனும் பழம் பெயரையுடைய குடமுருட்டி ஆற்றில் பிரியும் முடிகொண்டான் ஆற்றை முதலாம் இராசேந்திரன் (1012-1044) உருவாக்கினான். காவிரியில் பிரியும் வீரசோழன் ஆற்றை வீரராசேந்திர சோழனும் (1063-1070), குற்றாலத்திற்கு அருகே காவிரியில் பிரியும் விக்கிரமன் ஆற்றை விக்கிரம சோழனும் (1118-1136) வெட்டினர்.
· ஏரிகள்
சோழவாரிதி, வீரநாராயணன் ஏரி ஆகியவைகளை முதல் பராந்தகன் (907-953) வெட்டினான். வீரநாராயணன் ஏரி வீராணம் எனப்படுகிறது. கண்டராதித்தப் பேரேரி, செம்பியன் மாதேவிப் பேரேரி ஆகியவை கண்டராதித்த சோழனால் (950-957) அமைக்கப்பட்டன. உத்தமசோழன் (970-985) மதுராந்தகப் பேரேரியையும், சுந்தரசோழன் (957-970) சுந்தர சோழப் பேரேரியையும், அவன் மகள் குந்தவையார் குந்தவைப் பேரேரியையும் உருவாக்கினர். முதலாம் இராசேந்திரன் கங்கை வெற்றியின் நினைவாகக் கங்கை கொண்ட சோழப் பேரேரியை வெட்டினான். அது ‘நீர் மயமான வெற்றித்தூண்’ என்று புகழப்பட்டது. இப்போது பொன்னேரி என வழங்கப்படுகிறது. சோழநாட்டிலும் சோழர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் வேளாண்மை செழிக்கும் பொருட்டுச் சோழர் பல ஏரிகளை ஏற்படுத்தினர்.
(கல்லுவிப்போம் – குழிதோண்டுவோம்)
· தூர் வாருதல்
நங்கவரம் கல்வெட்டில் ஓடத்தைக் குளத்தில இயக்கி நாள்தோறும் ஆறு ஆள் மண் தோண்ட வேண்டும் என்றும், ஒரு நடைக்கு 140 கூடை மண் கரைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், ஒரு நாளைக்கு 4 முறை மண் தோண்டிக் கொண்டுவர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நிலங்களுக்குப் பெயர்கள் வைத்திருந்தார்கள். . ‘கொற்றன் வயல் என்று பேருடைய நிலம்’, ‘பூலாஞ்செய் என்று பெயர் கூவப்பட்ட நிலம்’ என்ற தொடரால் அவைகளை அறியலாம்.
• உடைமை மாறுதல்
ஒருவருக்கு உரிமையான நிலம் அடுத்தவருக்கு விலைக்கு விற்கப்படும் பொழுது, அதன் உடைமையாளர் மாறும்போது, பெரும்பாலும் அந்நிலத்தின் பெயரும் மாற்றமடையும். ‘பண்டுடையாரையும் பழம்பேரையும் தவிர்த்து’ நிலம் வாங்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
• விளைநிலம்
கமுகந்தோட்டம், மாந்தோட்டம், மஞ்சள் விளையும் பூமி, எள்ளு விளையும் பூமி, வழுதிலை கருணை விளையும் பூமி போன்று விளை பொருள்களால் நிலம் சில கல்வெட்டுகளில் குறிக்கப்படுகின்றது. வழுதிலை அல்லது வழுதுணங்காய் என்பது கத்தரிக்காயைக் குறிக்கும். கருணை என்பது ஒரு கிழங்கு வகை.
• நிலம் அளத்தல்
நில அளவு செய்த அலுவலர்கள் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன், உலகு அளவித்த திருவடிகள் சாத்தன், உலகளந்த சோழப் பல்லவரையன், குளத்தூருடையான் உலகளந்தான் ஆன திருவரங்க தேவன் ஆகியோர் ஆவர். அளவு செய்த கோல்கள் ‘திருவுலகு அளந்த ஸ்ரீபாதக்கோல்’, ‘உலகளந்த கோல்’ எனப்பட்டது. இதன்மூலம் விளைநிலம் மிகச் சரியாகக் கணக்கிடப்பட்டது. ஊரின் மற்ற பகுதிகளும் அளந்து குறிக்கப்பட்டன.
• வரிமுறை
நிலம் ‘தரம்’ வாரியாகப் பிரிக்கப்பட்டது. தரம் இல்லாத நிலங்கள் ‘தரமிலி’ எனக் குறிக்கப்பட்டு வரி இல்லாமல் ஆக்கப்பட்டன. சில காரணங்களால் சில காலங்களில் நிலத்தின் தரம் கூட்டப்பட்டது; அல்லது குறைக்கப்பட்டது. பயிர் பார்த்து பயிர் நின்ற நிலத்திற்கு மட்டுமே வரி வசூலிக்கப்பட்டது. வெள்ளத்தாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்ட நிலங்கட்கு வரி குறைக்கப்பட்டது. ‘வெள்ளச்சாவி, வறட்சிச்சாவிக்கு இறை இல்லை’ எனப்பட்டது. வரி நெல்லாகவும், பணமாகவும் வசூலிக்கப்பட்டது. ‘விதைத்துப் பாழ், நாற்றுப்பாழ், நட்டுப்பாழ்’ ஆனால் நெல்லோ பணமோ வரியாக வசூலிக்கக் கூடாது என்று கூறப்பட்டது. நந்தவனம், கன்றுமேய் பாழ், உவர்நிலம், காடு, மானிய பூமிகள் இவைகட்கு வரியில்லை.
புது ஊர் ஏற்படுத்தி உழவர்களைக் குடியேற்றினால் முதல் நான்காண்டுக்கு நிலவரி இல்லை; பின்னர் மூன்று ஆண்டுகட்கு மூன்றில் ஒரு பகுதி மட்டுமே நிலவரி வசூலிக்கப்பட்டது. தானாக நீர் பாய்ந்த நிலத்திற்கு ஒரு மாவுக்கு 12 கலம் நெல்லும், ஏற்றம் இறைத்துப் பயிர்செய்த நிலத்திற்கு ஒரு மாவுக்கு 6 கலம் நெல்லும் வரியாகப் பெறப்பட்டதாக ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.
• நிலம் திருத்துதல்
பயிர் செய்யத் தகுதியற்ற நிலங்களைப் பயிர் நிலமாக மாற்றும் முயற்சிகள் பல நடைபெற்றுள்ளன.
‘பிரம்ம தேசத்துப் புறக்காலில் காடுவெட்டிப் பயிர் செய்ய ஒண்ணாது நின்ற நிலத்தைக் காடுவெட்டிக் கட்டை பறித்து மேடும் தாழ்வும் ஒக்க இட்டு ஆறும் அடைத்து பயிர்நிலமாகத் திருத்தி’ அவ்வூரில் நிலம் பயிர் செய்யத் தகுதி ஆக்கியதைக் கல்வெட்டு ஒன்று விளக்குகிறது.
(ஒண்ணாது – இயலாது, ஒக்க – சமமாக).
வெள்ளப் பெருக்கால் அழிந்த நிலங்களையும் சரி செய்துள்ளனர்.
‘ஆற்றுப் படுகையில் ஆறு உடைந்து மணலிட்டு மணல்மேடாய்க் கிடந்த நிலம்’
`காவேரி உடைந்து மடுவாய் நீர்நிலை ஆன நிலம்’
ஆகியவைகளைத் திருத்தி வேளாண்மைக்கு உரிய நிலங்கள் ஆக்கினர்.
(மடு – பள்ளம்)
• இருவகைப் பயிர்கள்
பயிர்கள் வான் பயிர், புன்பயிர் என்று இரண்டு வகையாக அழைக்கப்பட்டன. நெல், கரும்பு, வாழை, தெங்கு, கமுகு, மா, பலா, மஞ்சள், செங்கழுநீர், கொழுந்து ஆகியவை வான் பயிர்கள் எனப்பட்டன. மானவாரி, புழுதிநெல், எள், வரகு, பருத்தி, ஆமணக்கு ஆகியவை புன்பயிர்கள் எனப்பட்டன. வான்பயிருக்கு வரி அதிகமாகவும், புன்பயிருக்கு வரி குறைவாகவும் விதிக்கப்பட்டது.
• விளைச்சல்கள்
ஒரு போகம் விளைவு பூ எனப்பட்டது. இது முதற்பூ, இடைப்பூ, கடைப்பூ என அழைக்கப்பட்டது. புதியதாகப் பயிர் செய்தால் வம்பு எனப்பட்டது. பருவத்திற்கு ஏற்ப குறுவை, சம்பா, கார், பசானம், தாளடி, மறு, கார்மறு என அவை அழைக்கப்பட்டன.
வணிகக்குழு
கல்வெட்டு
(1) நான்கு திசை சமஸ்தலோக பதினெண் விஷயத்தார்,
(2) ஏறுசாத்து, இறங்கு சாத்து விளங்கு திசையாயிரத்து ஐநூற்றுவர்,
(3) நாடு, நகரங்களில் திசைவிளங்கு திசையாயிரத்து ஐநூற்றுவர்,
(4) கேரளசிங்க வளநாட்டு அருவிமாநகரமான குலசேகரபட்டினத்து நகரத்தார்
(5) திருக்கோட்டியூர் மணியம்பலத்து நகரத்தார்.
(6) ஐம்பொழில் வளநாட்டு கல்வாயல் நாட்டு சுந்தரபாண்டியபுரத்து நகரத்தார்
(7) மண்டலிகள் கம்மரப் பெருந்தெரு நகரத்தார்
(8) கருவூர், கண்ணபுரம், பட்டாலி, தலையூர், இராசராசபுரம், கீரனூர் உள்ளிட்ட கொங்கு நகரத்தார்
ஆகியவர்களைப் பிரான்மலைக் கல்வெட்டுக் கூறுகிறது.
• சித்திரமேழி
வணிகர்குழுக் கூட்டம் பெரும்பாலும் ‘சித்திரமேழிப் பெரியநாட்டார் சபை’ என்று கூறப்படும். வணிகர் குழுக் கூட்டம் பற்றிய கல்வெட்டுகளில் வணிகர்களுக்குரிய தனி மெய்க்கீர்த்தி கூறப்பட்டிருக்கும்.
‘தென்தமிழ்வடகலை தெரிந்துணர்ந்து
நீதிசாத்திர நிபுணர்ஆகி
இன்சொல்லால் இனிதளித்து
வன்சொல்லால் மறங்கடிந்து
செங்கோலே முன்னாகவும்
சித்திரமேழியே தெய்வமாகவும்
செம்பொற்பசும்பையே வேலியாகவும்
உன்னியதுமுடிக்கும் ஒண்டமிழ்வீரர்
வாட்டம் இன்றிக் கூட்டம் பெருகி’
கூடியதாக அவர்கள் மெய்க்கீர்த்திப் பகுதிகள் உள்ளன. அவர்கள் ஐம்பொழில் பரமேசுவரியை வணங்குபவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
• வணிகர் திருப்பணி
தமிழக வணிகர்களின் பக்திப் பெருமையை அவர்கள் வைத்துக் கொண்டிருந்த பெயர்களே காட்டும்.
‘காடையூரில் சிறியான் பிள்ளையான பிறைசூடும் பெருமாள்’
‘முத்தூர் வியாபாரி மன்றுள் ஆடுவான் சம்பந்தப் பெருமாள்’
‘கரையான் அடிக்கீழ்த்தளம் சடையன் நம்பியான சேரமான் தோழன்’
என்பன சில வணிகர் பெயர்களாகும். நெல்லைப் போல் இரு பங்கு அரிசிக்கும், பருத்தியைப் போல் இரு பங்கு நூலுக்கும் மகமை நிர்ணயம் செய்யப்பட்டது. சந்தனம், சவ்வாது, பன்னீர், அகில் ஆகியவற்றிற்கு மகமை அதிகமாக இருந்தது. இந்த மகமை மூலம் பல கோயில்களில் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தனர். திருப்பணிகள் பலவற்றையும் மேற்கொண்டனர். இத்திருப்பணிகள் கிழக்காசிய நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டன. இவர்கள் அமைத்த கோயில்கள் தேசி விநாயகர் கோயில், தேசீசுவரம், பதினெண் விஷய விண்ணகரம் என அழைக்கப்பட்டன. இக்கோயில்கட்கு வணிகர் மட்டுமின்றி அவர்கள் மனைவியரும் கொடையளித்தனர். இதனைக்
‘காங்கயநாட்டு வியாபாரி சொக்கன் மனைக்கிழத்தி தேவி’
‘அறுவை வாணிகன் எழுவன் பிடவன் மணவாட்டி உத்தி’
என்ற கல்வெட்டுத் தொடர்களால் அறிகின்றோம். தொண்டை மண்டலத்துப் பழுவூர்க் கோட்டம் பூதலப்பட்டு பீமீசுரமுடையார் கோயிலுக்கு `நாவலன் பெருந்தெருவில் நானாதேசத்தில் அம்பத்தாறு தேசத்தில் அய்யாவளி சாலுமூலை பெக்கண்டாரும், பலபட்டடை யாரும், அளநாட்டு ராசசிம்ம சோழீசுவரர் கோயிலுக்கு `நாலு நகரம் பதினெண் விஷயத்தாரும், பதினெட்டு ராச்சியத்தில் பதினெண் விஷயத்தாரும், தரகரும், நாட்டுச் செட்டிகளும், தளச் செட்டிகளும்’ அறக்கொடைகள் அளித்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
‘தீவாந்தரங்களில் வியாபாரிகட்கும், பட்டணங்
களில் நாநாதேசி வியாபாரிகளுக்கும் சரக்கு
வேண்டினபடி வேண்டுவார்க்கு விற்றும் மறு
சரக்குக் கொண்டும்’
என்று கூறுகிறது.
வணிகக்குழு
குறியிடுகள்
கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டுப் பிரான்மலை என்னும் திருக்கொடுங் குன்றத்தில் மிகப் பெரிய வணிகச் சந்தை கூடியது. அங்கு விற்கப்பட்ட பொருள்களை அக்கல்வெட்டு பட்டியலிட்டுக் காட்டுகிறது. உப்பு, அரிசி, பயிற்றம், அவரை, ஆமணக்கு, பாக்கு, மிளகு, மஞ்சள், சுக்கு, வெங்காயம், கடுகு, சீரகம், இரும்பு, பருத்தி, நூல், புடவை, மெழுகு, தேன், சந்தனம், அகில், பன்னீர், சவரிமயிர், கற்பூரத்தைலம், சாந்து, புனுகு, சவ்வாது, மாடு, குதிரை, யானை ஆகியவை விற்கப்பட்டதாக அக்கல்வெட்டுக் கூறுகிறது. தேன், பன்னீர் ஆகியவை குடத்திலும், சாந்து, புனுகு, சவ்வாது ஆகியவை கொம்பு மூலமும் கொண்டு வரப்பட்டன.
கல்வெட்டுகளில் காணப்படும் பல்வேறு வணிகக்குழுக்கள், வணிக ஊர்கள், வணிகத் தளங்கள், வணிகப் பெருவழிகள், சந்தைப் பொருள்கள், வணிகர் சமயத் தொடர்பு முதலியவை பற்றிய செய்திகள் பண்டைத் தமிழர்கள் வாணிகத்தில் சிறந்திருந்ததை வெளிப்படுத்துகிறது.