பெயர்ச் சொல்லாக அமையும் பகாப்பதம் பெயர்ப் பகாப்பதம் எனப்படும் .
எடுத்துக் காட்டுகள் :
நிலம் , நீர் , நெருப்பு , காற்று என வருவன .
( 2 ) வினைப் பகாப்பதம் :
வினைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் வினைப் பகாப்பதங்கள் எனப்படும் .
எடுத்துக் காட்டுகள் :
நட , வா , உண் , தின் முதலியன .
( 3 ) இடைப்பகாப்பதம் :
இடைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் இடைப் பகாப்பதம் எனப்படும் .
எடுத்துக் காட்டுகள் :
மன் , கொல் , போல் , மற்று என்பன .
( 4 ) உரிப் பகாப்பதம் :
உரிச் சொற்களாக வரும் பகாப்பதம் உரிப் பகாப்பதம் எனப்படும் .
எடுத்துக் காட்டுகள் :
கூர் , மிகு , உறு , தவ , நனி , கழி
மேலே சுட்டிய எடுத்துக் காட்டுகளில் கண்ட பெயர் , வினை , இடை , உரிச் சொற்களைப் பிரித்தால் பொருள் தருவதில்லை ; அவை இடுகுறியில் , இட்டு வழங்கி வருகின்ற தன்மையில் அமைந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .
இதனை நன்னூல் பின்வருமாறு விளக்குகின்றது .
பகுப்பால் பயனற்று இடுகுறியாகி
முன்னே ஒன்றாய் முடிந்தியல் கின்ற
பெயர் வினை இடை உரி நான்கும் பகாப்பதம் ( 131 )
பகுபதம்
5.2.1 பகுபதத்தின் இலக்கணம்
பொருள் , இடம் , காலம் , சினை , குணம் , தொழில் ஆகிய ஆறு பெயர்களையும் அடிப்படையாகக் கொண்டு அமையும் பெயர்களும் , வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காலம் காட்டும் வினைச்சொற்களும் பகுபதங்கள் ஆகும் .
இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பகுபதங்கள் ஆக மாட்டா .
5.2.2 பகுபதத்தின் வகைகள்
முதல் நிலையில் பகுபதத்தை இருவகையாகப் பிரிக்கலாம் .
அவை ,
( 1 ) பெயர்ப் பகுபதம் ( பெயர்ச்சொல்லாக அமையும் பகுபதம் )
( 2 ) வினைப் பகுபதம் ( வினைச்சொல்லாக அமையும் பகுபதம் )
பெயர்ப் பகுபதத்தை மேலும் ஆறு வகையாகப் பிரிக்கலாம் .
அவை ,
( 1 ) பொருட்பெயர்ப் பகுபதம்
( 2 ) இடப் பெயர்ப் பகுபதம்
( 3 ) காலப் பெயர்ப் பகுபதம்
( 4 ) சினைப் பெயர்ப் பகுபதம்
( 5 ) குணப் பெயர்ப் பகுபதம்
( 6 ) தொழில் பெயர்ப் பகுபதம்
என்பன .
5.2.3 பெயர்ப் பகுபதங்கள்
( 1 ) பொருட்பெயர்ப் பகுபதம்
ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பெயர்ப் பகுபதம் பொருட்பெயர்ப் பகுபதம் எனப்படும் .
எடுத்துக்காட்டு :
பொன்னன் - அவன் பொன்னை உடையவன் என்பது பொருள் .
இதைப் பிரித்தால் ( பொன் + அன் ) பொருள் தரக் கூடியதாகவும் அமைந்திருக்கின்றது .
எனவே இது பொன் என்னும் பொருள் அடிப்படையாகப் பிறந்த பொருட் பெயர்ப் பகுபதம் ஆகும்( இதைப் போலவே , பிற பெயர்ப் பகுபதங்களும் அமைகின்றன)
( 2 ) இடப் பெயர்ப் பகுபதம்
இடத்தின் அடிப்படையில் அமைவது இடப்பெயர்ப் பகுபதம் ஆகும் .
எடுத்துக்காட்டு :
விண்ணோர் - ‘ விண்‘ என்னும் இடப்பெயரால் அமைந்த பகுபதம் . அகத்தான் - ‘ அகம்‘ என்னும் இடப்பெயரின் அடிப்படையில் அமைந்திருப்பதால் இது இடப் பெயர்ப் பகுபதம் என்று அழைக்கப்படுகிறது .
( 3 ) காலப் பெயர்ப் பகுபதம் :
நாள் , திங்கள் , ஆண்டு எனவரும் காலப் பெயர்களின் அடிப்படையில் அமையும் பகுபதங்கள் காலப் பெயர்ப் பகுபதங்கள் எனப்படுவன .
எடுத்துக்காட்டு :
கார்த்திகையான் - இது கார்த்திகைத் திங்களில் பிறந்தவன் என்று பொருள்படும் .
இது காலப் பெயரின் அடிப்படையில் அமைந்திருப்பதால் காலப்பெயர்ப் பகுபதம் ஆகும் .
ஆதிரையாள் - ஆதிரை நாளில் ( நட்சத்திரத்தில் ) பிறந்தவள் என்று காலப் பெயர் அடிப்படையில் அமைந்த பகுபதம் ஆகும் .
( 4 ) சினைப் பெயர்ப் பகுபதம்
சினை என்பது உறுப்பு என்று பொருள்படும் .
உறுப்பின் பெயர் அடிப்படையில் அமைந்த பகுபதங்கள் சினைப் பெயர்ப் பகுபதங்கள் எனப்படும் .
எடுத்துக்காட்டு :
கண்ணன் - இச் சொல்லில் ‘ கண்‘ என்பது உடலின் உறுப்பு ( சினை ) .
அதன் அடிப்படையில் கண்ணன் எனும் பெயர் அமைந்துள்ளது .
இதனை கண் + அன் என்று பிரித்தால் ‘ கண்‘ என்பது பொருள்தரும் சொல்லாக அமைகின்றது .
எனவே இது சினைப் பெயர்ப் பகுபதம் ஆகும் .
இதைப் போலவே , மூக்கன் , பல்லன் என்னும் சினைப் பெயர்ப் பகுபதங்களையும் அறிந்து கொள்ளலாம் .
( 5 ) குணப் பெயர்ப் பகுபதம் :
ஒரு பண்பைக் ( குணம் ) குறிக்கும் சொல்லின் அடிப்படையில் அமையும் பெயர் குணப் பெயர்ப் பகுபதம் எனப்படும் .
எடுத்துக்காட்டு :
கரியன் , - இச் சொல் கருமை என்னும் பண்புப் பெயரின் அடிப்படையில் அமைந்தது .
( 6 ) தொழிற் பெயர்ப் பகுபதம் :
தொழிலின் பெயரை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பெயர்ச் சொற்கள் தொழிற் பெயர்ப் பகுபதங்கள் எனப்படும் .
எடுத்துக்காட்டு :
தட்டான் , தச்சன் எனவரும் பெயர்ச் சொற்கள் தொழிற்பெயரால் அமைந்தவை .
5.2.4 வினைப் பகுபதங்கள்
பெயர்ப் பகுபதங்கள் ஆறு வகைப்படும் என்பதைக் கண்டோம் .
இனி , வினைப் பகுபதங்களின் வகைகளைக் காண்போம் .
தெரிநிலை ( வெளிப்படையாக ) யாகவும் குறிப்பாகவும் காலத்தைக் காட்டும் வினைச் சொற்கள் வினைப் பகுபதங்கள் எனப்படுவன .
வினைப் பகுபதங்களை முதலில் இரு வகையாகப் பிரித்துக் காணலாம் .
அவை ,
( 1 ) வினைமுற்றுப் பகுபதம்
( 2 ) வினையாலணையும் பெயர்ப் பகுபதம்
என்பன .
வினைமுற்றுப் பகுபதம் இருவகைப்படும் .
அவை ,
( 1 ) தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம்
( 2 ) குறிப்பு வினைமுற்றுப் பகுபதம்
என்பன .
தெரிநிலை , குறிப்பு வினைமுற்றுப் பகுபதங்களின் விளக்கங்களைக் காணலாம் .
( 1 ) தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் : ஒரு வினைப் பகுபதம் காலத்தை வெளிப்படையாகக் காட்டுமானால் அது தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் எனப்படும் .
எடுத்துக்காட்டு :
நடந்தான் , நடக்கின்றான் , நடப்பான் - எனவரும் வினைமுற்றுகளில் இறந்தகாலம் , நிகழ்காலம் , எதிர்காலம் என்று காலங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன .
இவ்வாறு வினை நிகழ்ந்த காலம் வெளிப்படையாகத் தெரிவதால் இவை தெரிநிலை வினைமுற்றுகள் எனப்படுகின்றன .
தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் எதிர்மறையாகவும் வரும் .
எடுத்துக்காட்டு : நடவான்
( 2 ) குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் : ஒரு வினைப் பகுபதம் காலத்தைக் குறிப்பால் உணர்த்துமானால் அது குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் எனப்படும் .
குறிப்பு வினை என்பது பொருள் , இடம் , காலம் , சினை , குணம் , தொழில் என்னும் ஆறுவகைப் பெயர்களின் அடிப்படையாகத் தோன்றி , வினைச்சொல்லின் பொருளைத் தருவது எனப்படும் .
எடுத்துக் காட்டு :
பொன்னன் , ஊணன் , அற்று , இற்று எனவரும் சொற்களில் காலம் தெரிநிலையாக வெளிப்படவில்லை .
ஆனால் இச்சொற்களில் காலம் குறிப்பால் உணர்த்தப்படுகின்றது . அவன் பொன்னனாக இருந்தான் , பொன்னனாக இருக்கிறான் , பொன்னனாக இருப்பான் எனப் பொருள் வரும் போது காலம் குறிப்பாக உணரப்படுகிறது .
எனவே இவை குறிப்பு வினை முற்றுகள் எனப்படுகின்றன .
குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் எதிர்மறையிலும் வரும் .
எடுத்துக் காட்டு : அவன் இல்லாதவன் .
• தெரிநிலையாகவும் குறிப்பாகவும் காலம் காட்டும் பெயரெச்சங்களும் வினையெச்சங்களும் வினைப் பகுபதங்களே .
பெயர் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் .
எடுத்துக் காட்டு :
( 1 ) உண்ட பையன்
( 2 ) ஓடாத குதிரை
இத் தெரிநிலை வினைகள் பையன் , குதிரை என்ற பெயர்ச்சொற்களைக் கொண்டு பொருள் முடிவு பெறுகின்றன .
எனவே , இவை தெரிநிலைப் பெயரெச்சப்பகுபதம் எனப்படும் .
மற்றொரு வினைமுற்றைக் கொண்டு பொருள் நிறைவடையும் வகையில் அமையும் எச்சம் வினையெச்சப் பகுபதம் எனப்படும் .
எடுத்துக்காட்டு :
உண்டு வந்தான்
உண்ண வருகின்றான்
உண்டு , உண்ண எனவரும் வினைகள் , வந்தான் , வருகின்றான் , என்னும் வினைமுற்றுகளைக் கொண்டு பொருள் முடிவைப் பெறுகின்றன .
குறிப்புப் பெயரெச்சம் , குறிப்பு வினையெச்சம் இவை காலத்தைக் குறிப்பாகக் காட்டுவன .
எடுத்துக்காட்டு :
பெரிய பையன் - பெயரெச்சம்
மெல்ல வந்தான் - வினையெச்சம்
இதுவரையில் வினைமுற்றுப் பகுபதங்களை மட்டும் கண்டோம் .
இனி வினையாலணையும் பெயர்ப் பகுபதங்களைப் பற்றிக் காணலாம் .
அவை , இருவகைப் படும் .
( 1 ) தெரிநிலை வினையாலணையும் பெயர்ப் பகுபதம் .
எடுத்துக்காட்டு : நடந்தானைக் கண்டேன் , நடந்தவனைக் கண்டேன் என்பன .
இவை காலத்தை வெளிப்படையாகக் காட்டுகின்றன .
( 2 ) குறிப்பு வினையாலணையும் பெயர்ப் பகுபதம் :
எடுத்துக்காட்டு : பொன்னனைக் கண்டேன் ,
இது காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை .
குறிப்பாகவே காலம் உணர்த்தும் .
பகுபத உறுப்புகள்
ஒரு பதத்தைப் பிரித்தால் அது பொருள் தருமானால் அது பகுபதம் என்று கண்டோம் அல்லவா ?
அவ்வாறு ஒரு பகுபதம் பிரிந்து நிற்கும் நிலையில் அமையும் உறுப்புகள் பகுபத உறுப்புகள் எனப்படுவன .
இப்பகுபத உறுப்புகள் ஆறு. அவை ,
( 1 ) பகுதி
( 2 ) விகுதி
( 3 ) இடைநிலை
( 4 ) சாரியை
( 5 ) சந்தி
( 6 ) விகாரம்
ஆகியன .
இப்பகுபத உறுப்புகளைப் பின்வரும் நன்னூல் நூற்பா தொகுத்துக் கூறுகின்றது .
பகுதி , விகுதி , இடைநிலை , சாரியை ,
சந்தி , விகாரம் ஆறினும் ஏற்பவை
முன்னிப் புணர்ப்ப முடியும் எப்பதங்களும்
என்பது நூற்பா ( 133 )
இந்த ஆறு உறுப்புகளையும் அறிவுடையோர் கூட்டிச் சேர்த்தால் எல்லாவிதமான பகுபதங்களும் அமையும் என்பது பொருள்
இனி , இந்த ஆறு உறுப்புகள் ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம் .
பெயர்ப்பகுபதம் : வேலன்
வேல் + அன் . இதில் வேல் - பகுதி
அன் - விகுதி
வினைப் பகுபதம் : செய்தான்
செய் + த் + ஆன்
இதில் செய் - பகுதி
த் - இடைநிலை
ஆன் - விகுதி .
எனவே ஒருபகுபதம் பகுதி , விகுதி ஆகிய இரு உறுப்புகளைப் பெற்றுவரலாம் : இவ்விரண்டோடு இடைநிலையைப் பெற்றும் வரலாம் .
மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் பகுபத உறுப்புகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டுத் தரப்பட்டன .
இனி ஆறு பகுபத உறுப்புகளையும் பற்றிக் காண்போம் .
5.3.1 பகுதி
பகுதி ஒரு பகுபதத்தின் முதலில் அமையும் உறுப்பு ஆகும் .
எனவே இதனை முதனிலை என்றும் வழங்கலாம் .
உண்டான் என்னும் பகுபதத்தில் ( உண் + ட் + ஆன் ) உண் என்பது பகுதியாகும் .
5.3.2 விகுதி
விகுதி பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு என்பதால் இதனை இறுதிநிலை என்றும் வழங்குவது மரபு .
பகுதியின் பொருளை , அதற்குப் பின்னால் வந்து நின்று விகாரப் படுத்துவதால் ( வேறுபடுத்திக் காட்டுவதால் ) இது விகுதி என்ற பெயர் பெற்றது என்பர் .
உண்டான் என்னும் பகுபதத்தில் ( உண் + ட் + ஆன் ) ஆன் என்பது விகுதி ஆகும் .
இது திணை , பால் , எண் , இடம் ஆகியவற்றைக் காட்டுகிறது .
5.3.3 இடைநிலை
இடைநிலை , முதனிலைக்கும் ( பகுதி ) இறுதிநிலைக்கும் ( விகுதி ) இடையில் நிற்கும் உறுப்பு என்பதால் இடைநிலை என்னும் பெயர் பெறுகின்றது .
வினைப் பகுபதத்தில் இடைநிலை காலம் காட்டும் உறுப்பு ஆகும் .
உண் + ட் + ஆன் என்னும் பகுபதத்தில் - உண் : முதனிலை
ட் : இடைநிலை
ஆன் : இறுதிநிலை .
என ‘ இடைநிலை‘ - பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்திருத்தலைக் காணலாம் .
5.3.4 சாரியை
சாரியை , பெரும்பான்மையாக , இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் உறுப்பு ஆகும் .
சிறுபான்மையாகச் சந்திக்கும் விகுதிக்கும் இடையிலும் வரும் .
சாரியை = சார்ந்து இயைந்து நிற்பது .
தனக்கெனப் பொருள் எதுவும் இன்றிப் பிற உறுப்புகள் இணையும்போது இடையில் வருவது .
வந்தனன் என்னும் சொல் ‘ வா + த் + த் + அன் + அன்‘
என்று பிரிந்து நிற்கும் .
இதில் ,
வா - பகுதி
த் - சந்தி
த் - இடைநிலை
அன் - சாரியை
அன் - விகுதி ,
‘ த் ’ இடைநிலைக்கும் , ‘ அன்‘ விகுதிக்கும் இடையில் சாரியை வந்துள்ளதைக் காணலாம் .
5.3.5 சந்தி
சந்தி பெரும்பாலும் முதனிலை ( பகுதி ) க்கும் இடைநிலைக்கும் இடையில் வரும் .
பகுதிக்கும் விகுதிக்கும் இடையிலும் சிறுபான்மை வரக்கூடும் .
உறுப்புகளின் இணைவில் ( சந்தி ) , அவற்றை இணைக்க வருவது சந்தி .
நடத்தல் என்னும் பகுபதம் நட + த் + தல் என்று பிரிந்து வரும் .
இதில் - நட - பகுதி
த் - சந்தி
தல் - விகுதி
பகுதிக்கும் , விகுதிக்கும் இடையில் ‘ த்‘ சந்தி வந்திருப்பதைக் காண முடிகிறது .
5.3.6 விகாரம் விகாரம் என்று தனியாக ஓர் உறுப்பு இல்லை .