முதல் சொல்லை நிலைமொழி என்றும் , இரண்டாம் சொல்லை வருமொழி என்றும் கூறுவர் .
இந்த மாற்றங்கள் நிலைமொழியின் இறுதி எழுத்துக்கும் , வருமொழியின் முதல் எழுத்துக்கும் ஏற்ப அமையும் .
எனவே ஒரு சொல்லின் முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் பற்றி அறிய வேண்டியது அவசியம் ஆகிறது .
1.4.5 முதலும் இறுதியும்
உயிர் எழுத்து , மெய் எழுத்து , உயிர்மெய் எழுத்து ஆகிய மூன்று வகை எழுத்துகள் சொற்களில் வரும் .
சந்தி இலக்கணத்தில் உயிர் எழுத்து , மெய் எழுத்து என்ற இருவகை எழுத்துகளை மட்டுமே கொண்டு இலக்கணம் சொல்லப்படும் .
உயிர்மெய் எழுத்து , உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உருவானது ஆகும் .
அதை மெய் எழுத்து , உயிர் எழுத்து என்று பிரித்துக் கொண்டு சந்தி இலக்கணத்தில் பயன்படுத்த வேண்டும் .
எடுத்துக்காட்டாக
பல் என்ற சொல்லின் முதலில் உள்ள ப என்ற உயிர்மெய்எழுத்து ,
ப் + அ என்ற இரண்டு எழுத்துகள் சேர்ந்தது .
பாம்பு என்ற சொல்லின் இறுதியில் உள்ள பு என்ற உயிர்மெய்எழுத்து ,
ப் + உ என்ற இரண்டு எழுத்துகள் சேர்ந்தது .
எனவே சொற்களைப் பின்வருமாறு பிரிக்கலாம் .
ஓடை - உயிர் எழுத்தில் தொடங்கும் சொல் .
மாடு - மெய் எழுத்தில் தொடங்கும் சொல் .
பழம் - மெய் எழுத்தில் முடியும் சொல் .
கிளி - உயிர் எழுத்தில் முடியும் சொல்
இவற்றைக் கொண்டு பார்க்கும்போது சொற்கள் அமையும் விதத்தைப் பின்வருமாறு காட்டலாம் .
ஈறு என்னும் சொல் இறுதி அல்லது கடைசி என்னும் பொருளைக் கொண்டது .
உயிர் ஈறு + மெய் முதல் ( ஓடை + கரை )
உயிர் ஈறு + உயிர் முதல் ( மணி + அடித்தது )
மெய் ஈறு + உயிர் முதல் ( பழம் + உதிர்ந்தது )
மெய் ஈறு + மெய் முதல் ( முள் + குத்தியது )
1.4.6 வேற்றுமையும் அல்வழியும்
சந்திகளில் வேற்றுமைச் சந்தி , அல்வழிச் சந்தி என்று இருவகை உண்டு .
வேற்றுமை அல்லாத சந்தி அல்வழிச் சந்தி எனப்படும் .
நாய் ஓடியது
நாயை விரட்டினேன்
நாய்க்கு மணி கட்டு
இந்தச் சொற்களில் நாய் என்ற சொல்லுடன் ஐ , கு என்ற எழுத்துகள் சேர்ந்துள்ளன .
நாய் என்ற சொல்லுடன் இந்த எழுத்துகள் சேர்ந்தவுடன் நாய் என்ற சொல்லின் பொருள் வேறுபடுகிறது .
முதல் தொடரில் நாய் எழுவாயாக இருக்கிறது .
இரண்டாம் தொடரில் நாய் என்ற சொல்லுடன் ஐ என்ற எழுத்துச் சேர்ந்தவுடன் நாய் செயப்படுபொருளாக மாறுகிறது .
மூன்றாம் தொடரிலும் அவ்வாறே கு என்ற எழுத்துச் சேர்ந்தவுடன் அதன்பொருள் வேறுபடுகிறது .
இவ்வாறு ஒரு பெயர்ச்சொல்லுக்குப் பின்னால் நின்று அதன் பொருளை வேறுபடுத்தும் எழுத்தை அல்லது சொல்லை வேற்றுமை என்கிறோம் .
அவ்வாறு வேறுபடுத்துவதற்குக் காரணமாக உள்ளவற்றை வேற்றுமை உருபு என்பர் .
எழுவாய் வேற்றுமை முதல் விளிவேற்றுமை வரை எட்டு வகை வேற்றுமைகள் உள்ளன .
அவற்றுள் முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை .
இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள ஆறு வேற்றுமைகளுக்கே உருபு உள்ளது .
வேற்றுமையின் இலக்கணம் பற்றிப் பின்னர் விரிவாக விளக்கப்படும் .
நாயை + கண்டேன் இரண்டாம் வேற்றுமை
கல்லால் + அடித்தேன் மூன்றாம் வேற்றுமை
பசிக்கு + உணவு நான்காம் வேற்றுமை
இங்குச் சொற்களுடன் வேற்றுமை உருபுகள் சேர்ந்து வந்துள்ளன .
இவற்றை வேற்றுமைத் தொடர்கள் என்று கூறுவர் .
மண் குடம்
பொன்வளையல்
இவையும் வேற்றுமைத் தொடர்களே . இவற்றை விரித்துப் பார்த்தால் , மண்ணால் ஆகிய குடம் , பொன்னால் ஆகிய வளையல் என்று வரும் .
இந்தத் தொடர்களில் பெயர்ச்சொற்களுக்குப் பின்னால் வரும் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்துள்ளன .
எனவே இவை வேற்றுமைத் தொகை எனப்படும் .
வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்தாலும் , மறைந்து வந்தாலும் , அது வேற்றுமைச் சந்தி எனப்படும் .
வந்த + கண்ணன் ( பெயர் எச்சம் )
வந்து + போனான் ( வினை எச்சம் )
ஓடு + ஓடு ( அடுக்குத்தொடர் )
மழை + பொழிந்தது ( எழுவாய்த்தொடர் )
கண்ணா + செல் ( விளித்தொடர் )
மேலே காட்டப்பட்ட பெயர் எச்சம் , வினை எச்சம் , அடுக்குத் தொடர் , எழுவாய்த் தொடர் , விளித் தொடர் முதலியவை வேற்றுமை அல்ல என்பதால் இவற்றை அல்வழித்தொடர் என்று கூறுவர் .
1.4.7 பெயரும் வினையும்
சொற்கள் பெயர் , வினை , இடை , உரி , என நான்கு வகைப்படும் .
அவற்றுள் பெயர்ச்சொல் , வினைச்சொல் ஆகிய இரண்டும் முக்கியமானவை .
இவை இரண்டும் பின்வருமாறு இணைந்து வரும் .
பெயர் + பெயர் = சேரன் பாண்டியன்
பெயர் + வினை = வளவன் சென்றான்
வினை + பெயர் = சென்றான் வளவன்
வினை + வினை = படித்துச் சென்றான்
சந்தி இலக்கணம் பொருள் அடிப்படையிலும் பெயர்ச்சொல்லின் வகை அடிப்படையிலும் சொல்லப்படும் .
மரப்பெயர்கள் , திசைப் பெயர்கள் , எண்ணுப் பெயர்கள் ஆகியவற்றையும் சுட்டி , சந்தி இலக்கணம் சொல்லப்படுகிறது .
மரப் பெயர் = தென்னை மரம்
திசைப் பெயர் = வட கிழக்கு
எண்ணுப் பெயர் = சேர , சோழ , பாண்டியர்
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் ?
விடை
2. தமிழில் உள்ள இலக்கண நூல்களில் நான்கின் பெயரைக் கூறுக .
விடை
3. தொல்காப்பியத்தில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன ?
விடை
4. முதல் எழுத்துகள் யாவை ?
விடை
5. சந்தி இலக்கணம் என்றால் என்ன ?
சொல் இலக்கண அறிமுகம்
எழுத்து இலக்கணத்திற்கு அடுத்து , எழுத்துகளால் ஆன சொல்லின் இலக்கணம் கூறப்படுகிறது .
சொல்லுக்கு இருவகையான விளக்கம் தரப்படுகிறது .
1. சொல் எழுத்துகளால் உருவானதாக இருக்க வேண்டும் .
சொல் , எழுத்து இலக்கணத்தில் சொல்லப்பட்ட உயிர் , மெய் , உயிர்மெய் , ஆய்தம் முதலிய எழுத்துகளால் உருவானதாக இருக்க வேண்டும் .
எழுத்துகள் அல்லாமல் வேறு ஓசைகளால் வருபவற்றைச் சொல் என்று கூறுவதில்லை .
தொண்டையைக் கனைத்தல்
முக்குதல்
சீழ்க்கை
இவற்றைச் சொல் என்று கூறுவதில்லை .
2. சொல் பொருள் தருவதாக இருக்க வேண்டும் .
எழுத்துகளால் உருவானதாக இருந்தாலும் பொருள் தருவதாக இருந்தால் மட்டுமே அது சொல் எனப்படுகிறது .
பொருள் தராதவை சொல் எனப்படுவது இல்லை .
னேரூவீ லோபுவெ
இவை எழுத்துகளால் உருவாக்கப் பட்டிருந்தாலும் பொருள் தரவில்லை .
எனவே இவற்றைச் சொல் என்று கூறுவதில்லை .
திணை மக்கள் , தேவர் , நரகர் ஆகியவர்கள் உயர்திணை எனப்படுவர் .
இவர்களைத் தவிர்த்து உலகில் இருக்கும் உயிர் உள்ளவை , உயிர் அற்றவை யாவும் அஃறிணை எனப்படும் .
பால்
ஆண்பால் , பெண்பால் , பலர்பால் ஆகிய மூன்றும் உயர்திணை ஆகும் .
ஒன்றன்பால் , பலவின்பால் ஆகிய இரண்டும் அஃறிணை எனப்படும் .
எண்
ஒன்று என்கிற எண்ணைக் குறிப்பது ஒருமை ஆகும் .
மற்ற அனைத்தும் பன்மை ஆகும் .
இவற்றைப் பின்வருமாறு காட்டலாம் .
முருகன் வந்தான் உயர்திணை ஆண்பால் ஒருமை
நங்கை வந்தாள் உயர்திணை பெண்பால் ஒருமை
மனிதர்கள் வந்தனர் உயர்திணை பலர்பால் பன்மை
மாடு வந்தது அஃறிணை ஒன்றன்பால் ஒருமை
நாய்கள் வந்தன அஃறிணை பலவின்பால் பன்மை
இடம்
இடம் மூன்று வகைப்படும் .
அவை தன்மை , முன்னிலை , படர்க்கை ஆகியனவாகும் .
பேசுபவர் தன்னைக் குறிப்பது தன்மை ஆகும் .
நான் , நாம்
பேசுபவர் தன் முன் உள்ளவரைக் குறிப்பது முன்னிலை ஆகும் .
நீ , நீர்
பேசுபவர் தன்னையோ முன் உள்ளவரையோ குறிக்காமல் தொலைவில் உள்ளவரைக் குறிப்பது படர்க்கை ஆகும் .
அவன் , அவள்
1.5.1 செய்யுளில் வரும் சொற்கள்
இலக்கியங்களில் வரும் சொற்கள் நான்கு வகைப்படும் .
1. இயற்சொல் 2. திரிசொல் 3. திசைச்சொல் 4. வடசொல்
• இயற்சொல்
செந்தமிழ் நாட்டில் வழங்கி , எல்லோருக்கும் இயல்பாகப் பொருள் விளங்கும்படி உள்ள சொல் இயற்சொல் எனப்படும் .
கல் , மண் , மரம் , நிலம் , அவன் , நான் , நீ முதலியன இயற்சொற்கள் ஆகும் .
• திரிசொல்
ஒரு பொருள் தரும் பல சொல்லாகவும் , பல பொருள் தரும் ஒரு சொல்லாகவும் வந்து , எளிதாகப் பொருள் உணர முடியாதபடி உள்ள சொற்கள் திரிசொற்கள் ஆகும் .
ஒரு பொருள் தரும் பல சொல் : வெற்பு , விலங்கல் , பொருப்பு , பொறை , நவிரம் , குன்று முதலிய சொற்கள் மலை என்ற ஒரே பொருள் தருகின்றன .
பல பொருள் தரும் ஒரு சொல் : வாரணம் என்ற சொல் கோழி , சங்கு , யானை , பன்றி ஆகிய பொருள்களைத் தரும் .
இவ்வாறு எளிதில் பொருள் உணர இயலாமல் வரும் சொற்கள் திரிசொற்கள் எனப்படும் .
• திசைச்சொல்
செந்தமிழ் நிலத்தைச் சுற்றியுள்ள மற்ற நாடுகளில் பேசப்படும் மொழிகளில் இருந்து வந்து தமிழில் வழங்கும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படுகின்றன .
சொல் பொருள் நாடு
தள்ளை = தாய் = குட்ட நாடு
அச்சன் = தந்தை = குட நாடு
கேணி = கிணறு = அருவாநாடு
எலுவன் = தோழன் = சீதநாடு
• வடசொல்
சமஸ்கிருத மொழியை வடமொழி என்று குறிப்பிடுகிறோம் .
அந்த வடமொழியிலிருந்து வந்து தமிழில் வழங்கும் சொற்களை வடசொற்கள் என்று கூறுவர் .
கந்தம் , ஞானம் , வீரம் , சுகம் , புராணம் முதலியன வடசொற்கள் ஆகும் .
1.5.2 சொல்லின் வகைகள்
இலக்கண அமைப்புப்படி சொற்களை ,
1. பெயர்ச்சொல்
2. வினைச்சொல்
3. இடைச்சொல் 4. உரிச்சொல்
என்று நான்கு வகையாகப் பிரிப்பார்கள் .
• பெயர்ச்சொல்
ஒன்றன் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லுவது பெயர்ச்சொல் ஆகும் .
மரம் , கல் , மண் முதலியன பெயர்ச்சொற்கள் ஆகும் .
பெயர்ச் சொற்களுக்கு இரண்டு வகையாக இலக்கணம் சொல்லப்படுகிறது .
1. பெயர்ச் சொல் வேற்றுமையை ஏற்கும் .
2. பெயர்ச் சொல் காலம் காட்டாது .
பெயர்ச் சொற்களுக்குப் பின் வேற்றுமை உருபுகள் வந்து நிற்கும் .
நாய் என்பது ஒரு பெயர்ச் சொல் .
இதனுடன் வேற்றுமை உருபுகள் சேர்ந்து பின்வருமாறு அமையும் .
நாய் + ஐ = நாயை - ( இரண்டாம் வேற்றுமை )
நாய் + ஒடு = நாயொடு - ( மூன்றாம் வேற்றுமை )
நாய் + கு = நாய்க்கு - ( நான்காம் வேற்றுமை )
நாய் , கல் , மரம் , முதலிய பெயர்ச் சொற்கள் காலத்தைக் காட்டவில்லை என்பதை அறியலாம் .
பெயர்ச் சொற்களை ஆறு வகையாகப் பிரிக்கலாம் .
பொருள் பெயர் - மரம் , மாடு , பாண்டியன் , குழலி
இடப்பெயர் - ஊர் , சென்னை , மேடு , மதுரை .
காலப்பெயர் - ஆண்டு , வெள்ளிக்கிழமை , சித்திரை , காலை .
சினைப்பெயர் - கை , கண் , மூக்கு , வால் , கிளை , வேர் .
குணப்பெயர் - நன்மை , வெண்மை , தண்மை , கருமை .
தொழில் பெயர் - நடத்தல் , கொடுத்தல் , செய்தல் , கற்றல் .
• வினைச் சொல்
ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும் .
கற்றான் , நிற்கிறாள் , வருவார் முதலியன வினைச் சொற்கள் ஆகும் .
வினைச் சொல்லின் இலக்கணம் பின்வருமாறு .
1. வினைச்சொல் காலம் காட்டும்
2. வினைச்சொல் வேற்றுமையை ஏற்காது .
வினைச் சொற்கள் காலத்தைக் காட்டும் தன்மை கொண்டவை .
காலம் மூன்று வகைப்படும் .
1. இறந்தகாலம் - சென்றான் , உண்டான் , வந்தாள் , படித்தார் .
2. நிகழ்காலம் - செல்கிறான் , உண்கிறான் , வருகின்றாள் , படிக்கிறார் .
3. எதிர்காலம் - செல்வான் , உண்பான் , வருவாள் , படிப்பார் .
மேலே காட்டிய வினைச் சொற்களுடன் வேற்றுமை உருபுகளைச் சேர்க்க முடியாது .
எனவே , அவை வேற்றுமை உருபுகளை ஏற்காது என்பதை அறியலாம் .
வினைச் சொற்கள் எதிர் மறையாகவும் வரும் .
செல்லும் X செல்லாது
நிற்கும் X நிற்காது
ஓடும் X ஓடாது
நடக்கும் X நடக்காது
வினைச் சொற்களில் பல வகைகள் உள்ளன .
முற்று
முற்றுப் பெறுகின்ற வினை , முற்றுவினை எனப்படும் .
நான் நம்பியைப் பார்த்தேன் .
இதில் பார்த்தேன் என்னும் சொல்லில் பார்த்தல் என்னும் செயல் முற்றுப் பெற்றுள்ளது .
எனவே இது முற்று வினை எனப்படும் .
எச்சம்
முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் வினை , எச்ச வினை எனப்படும்
மணி வந்து போனான் .
மரத்திலிருந்து உதிர்ந்த பழம் . இந்தத் தொடர்களில் உள்ள வந்து என்ற வினையும் உதிர்ந்த என்ற வினையும் முற்றுப் பெறாமல் உள்ளன .