22

புணர்ச்சியை ஏனைய உயிர் ஈற்றுப் புணரியல் , மெய் ஈற்றுப் புணரியல் , உருபு புணரியல் ஆகிய மூன்று இயல்களில் விளக்குகிறார் .

மேற்கூறியவற்றால் தொல்காப்பியரும் , நன்னூலாரும் எழுத்து இலக்கணத்தில் புணர்ச்சிக்கு முக்கியமான இடம் தந்துள்ளனர் என்பது நன்கு புலனாகிறது .

புணர்ச்சி - விளக்கமும் பாகுபாடும்

புணர்ச்சி என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலின் முதல் நூற்பாவில் தருகிறார் .

அவர் தரும் புணர்ச்சி விளக்கம் வருமாறு :

மெய் எழுத்தையும் , உயிர் எழுத்தையும் முதலும் ஈறுமாக உடைய பகாப்பதம் , பகுபதம் என்னும் இரண்டு பதங்களும் , தன்னொடு தானும் ( பகுபதத்தோடு பகுபதமும் , பகாப்பதத்தோடு பகாப்பதமும் ) , பிறிதொடு பிறிதுமாய் ( பகுபதத்தோடு பகாப்பதமும் , பகாப்பதத்தோடு பகுபதமும் ) , அல்வழிப் பொருளிலோ ( வேற்றுமை வழி அல்லாத நிலை ) , வேற்றுமைப் பொருளிலோ சேர்ந்து வரும்பொழுது , நிலைமொழியும் , வருமொழியும் இயல்பாக இருந்தோ , விகாரம் பெற்றோ பொருந்துவது புணர்ச்சி எனப்படும் .

மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்களும் ,

தன்னொடும் பிறிதொடும் , அல்வழி வேற்றுமைப்

பொருளில் பொருந்துழி , நிலைவரு மொழிகள்

இயல்பொடு விகாரத்து இயைவது புணர்ப்பே ( நன்னூல் -151 )

( ஈறு = இறுதி ; இரு பதங்கள் = பகாப்பதம் , பகுபதம் ; பொருந்துழி = சேர்ந்து வரும்பொழுது ; நிலை வருமொழிகள் = நிலை மொழியும் வருமொழியும் ; இயைவது = பொருந்துவது , சேர்வது ; புணர்ப்பு = புணர்ச்சி)

நன்னூலார் தரும் இப்புணர்ச்சி விளக்கத்தை நோக்கும்பொழுது , அவர் எழுத்துகளின் அடிப்படை , பதங்களின் அடிப்படை , பொருளின் அடிப்படை , எழுத்து மாற்றத்தின் அடிப்படை ஆகிய நான்கு வகை நிலைகளில் புணர்ச்சியைப் பாகுபடுத்திக் காண்கிறார் என்பது புலனாகிறது .

இந்நால்வகைப் புணர்ச்சிப் பாகுபாடுகளைப் பற்றி ஒன்றன்பின் ஒன்றாகத் தக்க சான்றுகளுடன் காண்போம் .

எழுத்துகளின் அடிப்படையில் புணர்ச்சிப் பாகுபாடு

தமிழில் உள்ள பதங்கள் ( சொற்கள் ) எல்லாம் மெய் எழுத்தையும் , உயிர் எழுத்தையும் முதலும் ஈறும் ஆக உடையவை என்கிறார் நன்னூலார் .

இதனை அவர் மேலே கூறிய புணர்ச்சி விளக்கத்தில் ,

மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்களும் ( நன்னூல் , 151-1 )

எனக் குறிப்பிட்டிருப்பது காணலாம் .

எனவே பதங்கள் எழுத்து அடிப்படையில் நான்கு ஆகும் .

அவை வருமாறு :

( 1 ) உயிர் முதல் உயிர் ஈறு

சான்று :

அணி - உயிர் முதல் அ ; உயிர் ஈறு இ ( ண் + இ = ணி ) .

( 2 ) உயிர் முதல் மெய் ஈறு

சான்று :

அணில் - உயிர் முதல் அ ; மெய் ஈறு ல் .

( 3 ) மெய் முதல் உயிர் ஈறு

சான்று :

மணி - மெய் முதல் ம் ( ம் + அ = ம ) உயிர் ஈறு இ ( ண் + இ = ணி )

( 4 ) மெய் முதல் மெய் ஈறு

சான்று :

பல் - மெய் முதல் ப் ( ப் + அ = ப ) ; மெய் ஈறு ல்

இவ்வாறு அமையும் பதங்களே புணர்ச்சியில் நிலைமொழியாகவும் வருமொழியாகவும் வரும் .

நிலைமொழியின் ஈற்று எழுத்தும் , வருமொழியின் முதல் எழுத்தும் ஒன்றோடு ஒன்று பொருந்தி நிற்பதே புணர்ச்சி எனப்படும் .

நிலைமொழி ஈற்றில் உயிர் அல்லது மெய் எழுத்து இருக்கும் .

வருமொழி முதலிலும் உயிர் அல்லது மெய் எழுத்து இருக்கும் .

எனவே நிலைமொழியின் ஈற்றிலும் , வருமொழியின் முதலிலும் இருக்கும் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு , புணர்ச்சியை நான்கு வகையாகப் பிரிக்கலாம் .

அவை வருமாறு :

( 1 ) உயிர் ஈற்றின் முன் உயிர் வரல்

( நிலைமொழி இறுதி உயிர் + வருமொழி முதல் உயிர் )

சான்று :

மணி + அடித்தான் ( இ முன் அ வரல் )

( 2 ) உயிர் ஈற்றின் முன் மெய் வரல் :

( நிலை மொழி இறுதி உயிர் + வருமொழி முதல் மெய் )

சான்று :

அணி + கொடுத்தான் ( இ முன் க் வரல் )

( 3 ) மெய் ஈற்றின் முன் உயிர் வரல்

( நிலைமொழி இறுதி மெய் + வருமொழி முதல் உயிர் )

சான்று : கால் + அணி ( ல் முன் அ வரல் )

( 4 ) மெய் ஈற்றின் முன் மெய் வரல்

( நிலை மொழி இறுதி மெய் + வருமொழி முதல் மெய் )

சான்று :

கால் + விரல் ( ல் முன் வ் வரல் )

இவற்றுள் உயிர் ஈற்றின் முன் உயிர் வரல் , உயிர் ஈற்றின் முன் மெய் வரல் என்னும் இருவகைப் புணர்ச்சி பற்றி உயிர் ஈற்றுப் புணரியலிலும் , மெய் ஈற்று முன் உயிர் வரல் , மெய் ஈற்று முன் மெய் வரல் என்னும் இருவகைப் புணர்ச்சி பற்றி மெய் ஈற்றுப் புணரியலிலும் , விதிகள் பலவற்றைக் கொண்டு நன்னூலார் விளக்கிக் காட்டுவார் .

பதங்களின் அடிப்படையில் புணர்ச்சிப் பாகுபாடு

நிலைமொழி பகாப்பதமாகவோ , பகுபதமாகவோ இருக்கலாம் .

வருமொழியும் பகுபதமாகவோ , பகாப்பதமாகவோ இருக்கலாம் .

( பகுபதம்-பகுதி , விகுதி , இடைநிலை என்று பிரித்துப் பார்க்கக் கூடிய பதம் ; பகாப்பதம் - அவ்வாறு பிரிக்க முடியாத பதம். ) எனவே ஒன்றோடொன்று புணருகின்ற பதங்களை அடிப்படையாகக் கொண்டு புணர்ச்சியை நான்கு வகையாகப் பிரிக்கலாம் .

அவை வருமாறு :

( 1 ) பகாப்பதத்தின் முன் பகாப்பதம் வரல்

சான்று :

பொன் + குடம்

( 2 ) பகுபதத்தின் முன் பகுபதம் வரல்

சான்று :

கண்ணன் + ஓடினான்

இவை இரண்டும் , இருவகைப் பதங்களும் தன்னொடு தானே பொருந்தி வந்தவை ஆகும் .

( 3 ) பகாப்பதத்தின் முன் பகுபதம் வரல்

சான்று :

மணி + அடித்தான்

( 4 ) பகுபதத்தின் முன் பகாப்பதம் வரல்

சான்று :

கண்ணன் + கால்

இவை இரண்டும் , இருவகைப் பதங்களும் பிறிதொடு பிறிதுமாய்ப் பொருந்தி வந்தவை ஆகும் .

இங்கே காட்டிய சான்றுகளில் பொன் , குடம் , மணி , கால் ஆகியன பகாப்பதங்கள் .

இவற்றைப் பகுபதங்களைப் போலப் பகுதி , இடைநிலை , விகுதி என்றவாறு பிரித்துக் காண முடியாது .

எனவே இவை பகாப்பதங்கள் .

கண்ணன் , ஓடினான் , அடித்தான் ஆகியன பகுபதங்கள் .

இவற்றை முறையே ,

கண் + அன் ( பகுதி + விகுதி )

ஓடு + இன் + ஆன் ( பகுதி + இடைநிலை + விகுதி )

அடி + த் + த் + ஆன் ( பகுதி + சந்தி + இடைநிலை + விகுதி )

என்றவாறு பிரித்துக் காண முடியும் .

எனவே இவை பகுபதங்கள் .

பொருளின் அடிப்படையில் புணர்ச்சிப் பாகுபாடு

நிலைமொழியோடு வருமொழி பொருந்தும்பொழுது , எவ்வகைப் பொருளில் பொருந்துகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு புணர்ச்சியை வேற்றுமைப் புணர்ச்சி , அல்வழிப் புணர்ச்சி என்று இருவகையாகப் பிரிக்கலாம் .

1.5.1 வேற்றுமைப் புணர்ச்சி

வேற்றுமைப் புணர்ச்சி என்றால் என்ன என்பதை விளக்கிக் கூறுவதற்கு முன்பு வேற்றுமை என்றால் என்ன என்பது குறித்துச் சிறிது விளக்கமாகக் காண்போம் .

தமிழில் வேற்றுமைகள் எட்டு .

இவற்றுள் முதல் வேற்றுமை எழுவாய் வேற்றுமை என்று கூறப்படும் .

எட்டாம் வேற்றுமை விளிவேற்றுமை என்று கூறப்படும் .

இவ்விரு வேற்றுமைகளுக்கு என்று தனி வேற்றுமை உருபு கிடையாது .

ஏனைய இரண்டு முதல் ஏழு வரையிலான ஆறு வேற்றுமைகள் ஒவ்வொன்றனுக்கும் தனித்தனி உருபுகள் உண்டு .

அவை பின்வருமாறு :

வேற்றுமை உருபு

இரண்டாம் வேற்றுமை ஐ

மூன்றாம் வேற்றுமை ஆல்

நான்காம் வேற்றுமை கு

ஐந்தாம் வேற்றுமை இன் ஆறாம் வேற்றுமை அது

ஏழாம் வேற்றுமை கண்

இவ்வுருபுகள் பெயர்ச்சொல்லோடு சேர்ந்து வந்து , அப்பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்துவதால் வேற்றுமை எனப்பட்டன .

சான்று :

இராமன் பார்த்தான்

இராமனைப் பார்த்தான்

இராமனால் பார்த்தான்

இத்தொடர்களில் முதல் தொடரில் பார்ப்பவன் இராமனாகவும் , இரண்டாம் தொடரில் பார்க்கப்படுபவன் இராமனாகவும் , மூன்றாம் தொடரில் பார்ப்பதற்குக் காரணமானவன் இராமனாகவும் பொருள் வேற்றுமை பெற்றுள்ளது .

முதல் தொடரில் இராமன் எழுவாயாகவும் , இரண்டாம் தொடரில் இராமன் செயப்படுபொருளாகவும் , மூன்றாம் தொடரில் இராமன் கருவிப் பொருளாகவும் விளங்குவதாக இலக்கணம் கூறும் .

இந்தப் பொருள் வேற்றுமையைச் செய்வது எது ?

ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபும் , ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும்தான் பொருள் வேற்றுமையைச் செய்கின்றன என்பதை உணரலாம் .

இனி , வேற்றுமைப் புணர்ச்சி என்றால் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம் .

நிலைமொழியும் , வருமொழியும் வேற்றுமைப் பொருளில் புணரும் பொழுது , அவ்விரு சொற்களுக்கும் இடையில் ஐ , ஆல் , கு , இன் , அது , கண் என்னும் ஆறு வேற்றுமைகளுக்கு உரிய உருபுகள் தொக்கியோ ( மறைந்தோ ) , விரிந்தோ ( வெளிப்பட்டோ ) வருவது வேற்றுமைப் புணர்ச்சி எனப்படும் .

எனவே வேற்றுமைப் புணர்ச்சி ஆறு வகைப்படும் .

வேற்றுமை உருபுகள் தொக்கி வருவது வேற்றுமைத் தொகை எனவும் , அவ்வேற்றுமை உருபுகள் தொகாது ( மறையாது ) விரிந்து வருவது வேற்றுமை விரி என்றும் கூறப்படும் .

சான்று :

வேற்றுமைத் தொகை உருபு வேற்றுமை விரி

1. பால் குடித்தான் ஐ பாலைக் குடித்தான்

2. தலை வணங்கினான் ஆல் தலையால் வணங்கினான்

3. அரசன் மகன் கு அரசனுக்கு மகன்

4. மலை வீழ் அருவி இன் மலையின் வீழ் அருவி

5. மலை உச்சி அது மலையினது உச்சி

6. மாடப் புறா கண் மாடத்தின்கண் புறா

1.5.2 அல்வழிப் புணர்ச்சி

வேற்றுமைப் பொருள் அல்லாத வழியில் நிலைமொழியும் வருமொழியும் புணரும் புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி எனப்படும் .

உயர்திணை அல்லாத திணையை அஃறிணை ( அல் + திணை = அஃறிணை ) என்று கூறுவதைப் போன்று , வேற்றுமைப் பொருள் அல்லாத வழி என்பதை அல்வழி என்று தமிழ் இலக்கண நூலார் கூறினர் .

அல்வழிப் புணர்ச்சியில் தொகைநிலைப் புணர்ச்சி , தொகாநிலைப் புணர்ச்சி என இருவகைகள் உள்ளன .

• தொகைநிலைப் புணர்ச்சி

தொகைநிலைப் புணர்ச்சி ஐந்து வகைப்படும் .

அவை வருமாறு :

1. வினைத்தொகை - ஊறுகாய்

( ஊறிய காய் , ஊறுகின்ற காய் , ஊறும் காய் )

2. பண்புத் தொகை - செந்தாமரை

( செம்மை ஆகிய தாமரை )

3. உவமைத் தொகை - தாமரை முகம்

( தாமரை போன்ற முகம் )

4. உம்மைத் தொகை - இராப்பகல்

( இரவும் பகலும் )

5. அன்மொழித் தொகை - பொற்றொடி

( பொன்னாலாகிய வளையலை உடையாள் )

இத்தொகைகளில் வினைத்தொகையில் மூன்று கால இடைநிலைகளும் , பண்புத் தொகையில் ஆகிய என்ற பண்பு உருபும் , உவமைத் தொகையில் போன்ற என்ற உவமை உருபும் , உம்மைத் தொகையில் உம் என்ற உம்மை உருபும் , அன்மொழித் தொகையில் அல்லாத மொழியாகிய ( சொல்லாகிய ) உடையாள் என்பதும் தொக்கு வந்தன .

எனவே இவை தொகை எனப்பட்டன .

• தொகாநிலைப் புணர்ச்சி

அல்வழியில் மற்றொரு வகைப் புணர்ச்சியான தொகாநிலைப் புணர்ச்சி ஒன்பது வகைப்படும் .

அவை வருமாறு :

1. எழுவாய்த் தொடர் - இராமன் வந்தான்

2. விளித்தொடர் - இராமா வா

3. பெயரெச்சத் தொடர் - வந்த இராமன்

4. வினையெச்சத் தொடர் - வந்து போனான்

5. தெரிநிலை வினைமுற்றுத் தொடர் - வந்தான் இராமன் 6. குறிப்பு வினைமுற்றுத் தொடர் - நல்லன் இராமன்

7. இடைச்சொல் தொடர் - மற்றொன்று

8. உரிச்சொல் தொடர் - நனி நன்று ( மிகவும் நன்று )

9. அடுக்குத் தொடர் - பாம்பு பாம்பு

இத்தொடர்களில் இருசொற்களுக்கு இடையே எந்த உருபும் மறைந்திருக்கவில்லை .

எனவே இவை தொகாநிலைத் தொடர்கள் எனப்பட்டன .

மேலே கூறியவற்றால் அல்வழிப் புணர்ச்சி , தொகைநிலை ஐந்தும் , தொகாநிலை ஒன்பதுமாக மொத்தம் பதினான்கு வகைப்படும் என்பது புலனாகும் .

வேற்றுமைப் புணர்ச்சி ஆறாகவும் , அல்வழிப் புணர்ச்சி பதினான்காகவும் வகைப்பட்டு விளங்குவதை நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார் .

வேற்றுமை ஐம்முதல் ஆறாம் , அல்வழி

தொழில் , பண்பு , உவமை , உம்மை , அன்மொழி ,

எழுவாய் , விளி , ஈர் எச்சம் , முற்று , இடை , உரி

தழுவுதொடர் அடுக்கு , என ஈர் ஏழே ( நன்னூல் , 152 )

( தொழில் = வினைத்தொகை ; ஈர் எச்சம் = பெயரெச்சம் வினையெச்சம் ; முற்று - ஈர் முற்று = தெரிநிலை வினைமுற்று , குறிப்பு வினைமுற்று ; ஈர்ஏழு = பதினான்கு . )

வேற்றுமைத் தொகைகள் பற்றியும் , அல்வழியில் உள்ள தொகை நிலைத் தொடர்கள் , தொகா நிலைத் தொடர்கள் பற்றியும் அடுத்து வரும் பருவங்களில் விரிவாகப் படித்துத் தெரிந்து கொள்வீர்கள் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. புணர்ச்சியில் வரும் இருசொற்களில் முதலாவதை நன்னூலாரும் , தொல்காப்பியரும் எவ்வாறு குறிப்பிடுகின்றனர் ?

விடை

2. நன்னூல் எழுத்ததிகாரத்தில் புணர்ச்சி பற்றி அமைந்த இயல்கள் எத்தனை ?

அவை யாவை ?

விடை

3. நன்னூலார் எழுத்து இலக்கணத்தை எத்தனை வகையாகப் பிரிக்கிறார் ?

விடை

4. இருபதங்கள் என நன்னூலார் குறிப்பிடுவன யாவை ?

விடை

5. உயிர் ஈற்றின் முன் உயிர் வரல் புணர்ச்சிக்கு ஒரு சான்று தருக .

விடை

6. மெய் ஈற்றின் முன் மெய் வரல் புணர்ச்சிக்கு ஒரு சான்று தருக .

விடை

7. கண்ணன் , பொன் , கொடுத்தான் , குடம் , மணி , அடித்தான் - இச்சொற்களில் பகுபதங்கள் எவை ?

பகாப்பதங்கள் எவை ?

விடை

8. பொருளின் அடிப்படையில் புணர்ச்சி எத்தனை வகைப்படும் ?

அவை யாவை ?

விடை

9. இரண்டாம் வேற்றுமைக்கும் , நான்காம் வேற்றுமைக்கும் உரிய உருபுகள் யாவை ?

விடை

10. வேற்றுமை எட்டனுள் உருபுகள் இல்லா வேற்றுமை எத்தனை ?

அவை யாவை ?

விடை

11. அல்வழியில் தொகாநிலைப் புணர்ச்சி எத்தனை வகைப்படும் ?

விடை

12. வினைத் தொகைக்கு ஒரு சான்று தருக .

எழுத்து மாற்ற அடிப்படையில் புணர்ச்சிப் பாகுபாடு

நிலைமொழியில் உள்ள சொல்லும் , வருமொழியில் உள்ள சொல்லும் அல்வழிப் பொருளிலும் , வேற்றுமைப் பொருளிலும் புணர்ந்து ( சேர்ந்து ) வரும் என்பதை மேலே பார்த்தோம் .

இவ்வாறு புணர்கின்ற இரு சொற்களில் ஏதேனும் மாற்றம் நிகழ்கின்றதா அல்லது நிகழவில்லையா என்பதை அடிப்படையாகக் கொண்டு புணர்ச்சியை நன்னூலார் இயல்பு புணர்ச்சி , விகாரப்புணர்ச்சி என இரண்டு வகையாகப் பிரிக்கிறார் .

இவ்விருவகைப் புணர்ச்சி பற்றி அவர் விளக்கமாகவும் கூறுகிறார் .

1.6.1 இயல்பு புணர்ச்சி

நிலைமொழி வருமொழியுடன் புணரும்பொழுது , அவ்விரு சொற்களிலும் எவ்வித எழுத்து மாற்றமும் நிகழாமல் இயல்பாக இருப்பது இயல்பு புணர்ச்சி எனப்படும் .

அஃதாவது அடுத்துக் கூறப்படும் விகாரப் புணர்ச்சிக்கு உரிய விகார வகைகள் எதனையும் அடையாமல் இயல்பாகப் புணர்வது இயல்பு புணர்ச்சி ஆகும் .

இதனை நன்னூலார் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகின்றார் . விகாரம் அனைத்தும் மேவலது இயல்பே - ( நன்னூல் , 153 )