24

உயிரளபெடையில் மட்டும் ஈறாகும் .

சான்று சேஎ ( சேஎ - எருது ) .

உயிர் எழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழு. இவற்றில் ஔகாரம் நீங்கலான ஏனை ஆறும் தனித்து வந்து ஈறாகும் .

சான்று :

ஆ ( பசு ) , ஈ , ஊ ( மாமிசம் ) , ஏ ( அம்பு ) , ஐ ( தலைவன் ) , ஓ ( மதகுப் பலகை )

உயிர் எழுத்துகளில் குற்றெழுத்துகள் ஐந்து , இவற்றில் ‘ அ , இ , உ ’ என்பன சுட்டு எழுத்துகள் ; ‘ எ ’ என்பது வினா எழுத்து .

இவை நான்கும் நிலைமொழியாக வரும்போது அம்மொழியின் ஈற்று எழுத்தாகக் கருதப்படும் .

சான்று :

அ + பொருள் = அப்பொருள்

இ + பொருள் = இப்பொருள்

எ + பொருள் = எப்பொருள்

குற்றெழுத்துகளில் மற்றோர் எழுத்து ‘ ஒ ’ என்பதாகும் .

இது தனித்து வந்து ஈறாவதில்லை .

‘ ந் ’ என்ற மெய் எழுத்தோடு சேர்ந்து ‘ நொ ’ என்ற ஒரு சொல்லில் மட்டும் ஈறாகும் .

( நொ - துன்பப்படு . )

மெய் எழுத்துகள் பதினெட்டு .

இவற்றில் வல்லின எழுத்துகளாகிய ‘ க் , ச் , ட் , த் , ப் , ற் ’ என்னும் ஆறும் , மெல்லின எழுத்துகளில் ‘ ங் ’ என்னும் ஒன்றும் ஆகிய ஏழும் மொழிக்கு இறுதியில் வாரா .

மெல்லின எழுத்துகளில் ஞ் , ண் , ந் , ம் , ன் ’ என்னும் ஐந்தும் , இடையின எழுத்துக்களாகிய ‘ ய் , ர் , ல் , வ் , ழ் , ள் ’ என்னும் ஆறும் ஆகிய பதினொன்று மட்டுமே மொழிக்கு இறுதியில் வரும் .

இவற்றுள் ‘ ஞ் , ந் , வ் ’ ஆகிய மூன்றும் நன்னூலார் காலத்தில் குறிப்பிட்ட ஒரு சில சொற்களில் மட்டுமே மொழிக்கு இறுதியில் வந்தன .

‘ ஞ் ’ என்பது உரிஞ் ( தேய்த்தல் ) என்னும் ஒரு சொல்லில் மட்டும் இறுதியில் வந்தது ; ‘ ந் ’ என்பது பொருந் ( ஒத்திருத்தல் ) , வெரிந் ( முதுகு ) என்னும் இருசொற்களில் மட்டும் இறுதியில் வந்தது ; ‘ வ் ’ என்பது அவ் , இவ் , உவ் , தெவ் ( பகை ) என்னும் நான்கு சொற்களில் மட்டுமே இறுதியில் வந்தது .

இச்சொற்கள் இக்காலத் தமிழில் இல்லை .

குற்றியலுகரம் மொழிக்கு இறுதியில் வல்லின எழுத்துகள் ஆறின்மேல் ஏறி வரும் .

சான்று : பாக்கு , பஞ்சு , பட்டு , பந்து , அம்பு , கயிறு .

எனவே மொழிக்கு இறுதியில் வரும் என மேலே கூறப்பட்ட இருபத்து நான்கு எழுத்துகளே ( உயிர் 12 + மெய் 11 + குற்றியலுகரம் 1 = 24 ) புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதியில் வரும் என்பதை அறியலாம் .

2.1.2 மொழி முதல் எழுத்துகள்

பன்னிரண்டு உயிர்களும் , ‘ க , ச , த , ந , ப , ம , வ , ய , ஞ , ங ’ என்னும் பத்து மெய்களும் மொழிக்கு முதலில் வரும் என்கிறார் நன்னூலார் .

பன்னீர் உயிரும் கசதந பமவய

ஞங ஈர் ஐந்து உயிர் மெய்யும் மொழிமுதல் - ( நன்னூல் , 102 )

இவற்றுள் உயிர்கள் தனித்து மொழிக்கு முதலில் வரும் .

ஆனால் மெய்கள் தனித்து மொழிக்கு முதலில் வாரா .

உயிரோடு சேர்ந்து உயிர்மெய்யாகவே மொழிக்கு முதலில் வரும் .

உயிர்மெய்க்கு ‘ மெய் முன்னும் உயிர் பின்னும் ’ வரும் .

சான்று :

க - க் + அ = க ( கடல் )

கா - க் + ஆ = கா ( காடு )

இங்கே காட்டப்பட்ட கடல் , காடு ஆகிய சொற்களில் க் என்ற மெய் முதலில் தனித்து வாராமல் , அ , ஆ என்னும் உயிர்களோடு சேர்ந்து உயிர் மெய்யாக வந்தாலும் , அச்சொற்களுக்கு முதல் எழுத்து ‘ க் ’ என்ற மெய்யே ஆகும் .

மெய் எழுத்துகளில் ‘ ங் ’ என்பது , ‘ ஙனம் ’ என்ற ஒரு சொல்லில் மட்டுமே முதலாக வரும் .

ஙனம் என்ற சொல்லும் தனித்து வாராது .

‘ அ , இ , உ ’ என்னும் சுட்டு எழுத்துகளையும் , ‘ எ ’ என்னும் வினா எழுத்தையும் அடுத்தே வரும் .

சான்று :

அங்ஙனம் , இங்ஙனம் , உங்ஙனம் , எங்ஙனம்

மேலே கூறப்பட்ட இருபத்திரண்டு எழுத்துகளே ( உயிர் 12 + மெய் 10 = 22 ) புணர்ச்சியில் வருமொழியின் முதலில் வரும் என்பதை அறியலாம் .

பொதுப்புணர்ச்சி விதி

உயிர் எழுத்துகளையும் , மெய் எழுத்துகளையும் , குற்றியலுகரத்தையும் இறுதியாகக் கொண்ட நிலைமொழிகளின் முன்னர் மெல்லின மெய்களையும் , இடையின மெய்களையும் முதலாகக் கொண்ட வரு மொழிகள் வந்து புணரும் முறை பற்றி மூன்று பொது விதிகளை நன்னூலார் உயிரீற்றுப் புணரியலின் தொடக்கத்தில் கூறுகிறார் .

அவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சான்றுகளுடன் காண்போம் .

1 மொழிக்கு இறுதியில் வரும் எனக் கூறப்பட்ட இருபத்து நான்கு எழுத்துகளையும் ஈற்றில் கொண்ட எல்லா வகையான நிலைமொழிகளுக்கும் முன்னே , ஞ , ந , ம , வ , ய என்னும் ஐந்து மெய் எழுத்துகளை முதலாகக் கொண்ட வருமொழிகள் வந்து சேரும்போது , அவ்வெழுத்துகள் அல்வழி , வேற்றுமை ஆகிய இருவகைப் பொருளிலும் இயல்பாகவே வரும் .

சான்று :

அல்வழி

இள + ஞாயிறு = இளஞாயிறு ( அ முன் ஞகரமெய் இயல்பாக வந்தது )

தென்னை + நீண்டது = தென்னை நீண்டது

( ஐ முன் நகரமெய் இயல்பாக வந்தது )

பூ + மலர்ந்தது = பூ மலர்ந்தது

( ஊ முன் மகரமெய் இயல்பாக வந்தது )

மரம் + வளர்ந்தது = மரம் வளர்ந்தது

( மகரமெய் முன் வகரமெய் இயல்பாக வந்தது )

எஃகு + யாது = எஃகு யாது

( குற்றியலுகரம் முன் யகரமெய் இயல்பாக வந்தது )

இங்கே காட்டப்பட்ட சான்றுகளில் இளஞாயிறு - பண்புத்தொகை ; மற்றவை எழுவாய்த் தொடர் .

வேற்றுமை

ஒளி + ஞாயிறு = ஒளிஞாயிறு

( ஒளியை உடைய ஞாயிறு .

இரண்டாம் வேற்றுமைத் தொகை )

தென்னை + நீட்சி = தென்னை நீட்சி

( தென்னையினது நீட்சி .

ஆறாம் வேற்றுமைத் தொகை )

மனை + மாட்சி = மனைமாட்சி

( மனையினது மாட்சி .

ஆறாம் வேற்றுமைத் தொகை )

எஃகு + வாள் = எஃகுவாள்

( எஃகால் ஆன வாள் .

மூன்றாம் வேற்றுமைத் தொகை )

கல் + யானை = கல்யானை

( கல்லால் ஆன யானை .

மூன்றாம் வேற்றுமைத் தொகை )

2 தனிக்குறிலை அடுத்து யகரமெய் அமையும் சொல் , ஓர் எழுத்து ஒரு மொழியாக வரும் ஐகாரமாகிய சொல் , நொ , து என்னும் ஓர் எழுத்துச்சொற்கள் நிலைமொழிகளாக இருந்து அவற்றிற்கு முன்னே ‘ ஞ , ந , ம ’ என்னும் மெல்லின மெய் எழுத்துகளை முதலாகக் கொண்ட வருமொழிகள் வந்து சேரும்போது , அவ்வெழுத்துகள் அல்வழியிலும் , வேற்றுமையிலும் மிகும் .

தனிக்குறிலை அடுத்து யகர மெய் வரும் சொல் மெய் , பொய் , நெய் என்பன .

ஓர் எழுத்து ஒருமொழியாகிய ஐகாரச் சொல் கை , பை , தை , மை என்பன .

இவை வழக்கில் உள்ளவை .

நொ , து ஆகிய சொற்கள் வழக்கிழந்து போனவை .

நொ = துன்பப்படு ; து = உண் .

சான்று :

அல்வழி

மெய் + ஞான்றது = மெய்ஞ்ஞான்றது

மெய் + நீண்டது = மெய்ந்நீண்டது

மெய் + மாண்டது = மெய்ம்மாண்டது

கை + ஞான்றது = கைஞ்ஞான்றது

கை + நீண்டது = கைந்நீண்டது

கை + மாண்டது = கைம்மாண்டது

இவை எழுவாய்த் தொடர்

நொ + நாகா = நொந்நாகா

து + நாகா = துந்நாகா

இவை வினைமுற்றுத் தொடர்

( ஞான்றது = தொங்கியது ; மாண்டது = சிறந்தது ; நொந்நாகா = துன்பப்படு நாகனே ; துந்நாகா = உண்பாய் நாகனே)

வேற்றுமை

மெய் + ஞாற்சி = மெய்ஞ்ஞாற்சி ( மெய்யினது ஞாற்சி )

மெய் + நீட்சி = மெய்ந்நீட்சி ( மெய்யினது நீட்சி )

மெய் + மாட்சி = மெய்ம்மாட்சி ( மெய்யினது மாட்சி )

இவை ஆறாம் வேற்றுமைத் தொகை கை + ஞாண் = கைஞ்ஞாண் ( கையின்கண் ஞாண் )

கை + நீளம் = கைந்நீளம் ( கையினது நீளம் )

கை + மலர் = கைம்மலர் ( கையின்கண் மலர் )

இவற்றில் , கைஞ்ஞாண் , கைம்மலர் - ஏழாம் வேற்றுமைத் தொகை ; கைந்நீளம் - ஆறாம் வேற்றுமைத் தொகை .

( ஞாற்சி = தொங்கல் ; மெய் = உடம்பு , உண்மை ; மாட்சி = சிறப்பு ; ஞாண் = கயிறு)

3‘ ண , ள , ன , ல ’ என்னும் மெய்களை இறுதியாகக் கொண்ட நிலைமொழிகளின் முன்னே , நகர மெய்யை முதலாகக் கொண்ட வருமொழிகள் வந்து புணரும்போது , வருமொழியின் முதலில் உள்ள நகரமெய் அல்வழி , வேற்றுமை என்னும் இருபொருளிலும் வேறொரு மெய்யாகத் திரியும் .

சான்று :

அல்வழி

மண் + நீண்டது = மண்ணீண்டது

முள் + நீண்டது = முண்ணீண்டது

பொன் + நீண்டது = பொன்னீண்டது

கல் + நீண்டது = கன்னீண்டது

இவை எழுவாய்த் தொடர்

வேற்றுமை

மண் + நீட்சி = மண்ணீட்சி ( மண்ணினது நீட்சி )

முள் + நீட்சி = முண்ணீட்சி ( முள்ளினது நீட்சி )

பொன் + நீட்சி = பொன்னீட்சி ( பொன்னினது நீட்சி )

கல் + நீட்சி = கன்னீட்சி ( கல்லினது நீட்சி )

இவை ஆறாம் வேற்றுமைத் தொகை

இங்கே காட்டிய சான்றுகளில் ண , ள முன்னர் வந்த நகர மெய் ணகர மெய்யாகவும் , ன , ல முன்னர் வந்த நகர மெய் னகர மெய்யாகவும் அல்வழி , வேற்றுமை ஆகிய இரு பொருள்களிலும் திரிந்தமை காணலாம் .

மேலே கூறிய மூன்று பொதுப்புணர்ச்சி விதிகளை நன்னூலார் பின்வரும் நூற்பாவில் ஒரு சேரக் குறிப்பிடுகிறார் .

எண்மூ எழுத்து ஈற்று எவ்வகை மொழிக்கும்

முன்வரு ஞநமய வக்கள் இயல்பும் ;

குறில்வழி யத்தனி ஐந்நொது முன்மெலி

மிகலுமாம் ; ணளனல வழிநத் திரியும். - ( நன்னூல் , 158 )

( எண்மூ எழுத்து - இருபத்துநான்கு எழுத்து ; எவ்வகை மொழிக்கும் - பெயர்ச்சொல் , வினைச்சொல் , இடைச்சொல் , உரிச்சொல் , திசைச்சொல் , வடசொல் என்னும் பலவகைப்பட்ட சொற்களுக்கும் . )

இந்நூற்பாவில் கூறப்படும் பொதுப்புணர்ச்சி அல்வழி , வேற்றுமை ஆகிய இரு பொருளிலும் நிகழும் என்று நன்னூலார் எங்கும் கூறவில்லை .

புணர்ச்சி பற்றிக் கூறும் நூற்பாக்களில் இதுபோல , அல்வழி , வேற்றுமை இரண்டனுள் ஒன்றை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ கூறாத இடங்களில் எல்லாம் அவ்விரண்டையும் கொள்ள வேண்டும் என்று நன்னூல் உரையாசிரியர் கூறுகின்றனர் .

எனவே இந்நூற்பாவில் கூறப்பட்ட பொது விதிகளுக்குச் சான்றுகள் அல்வழி , வேற்றுமை இரண்டிற்கும் காட்டப்பட்டன .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?

விடை

2. மொழிக்கு இறுதியில் வல்லின மெய்கள் வருமா ?

விடை

3. மொழிக்கு இறுதியில் குற்றியலுகரம் வருமா ?

விடை

4. எல்லா ஈற்று எழுத்துகளுக்கும் முன்னர் எந்த மெய்கள் வந்து சேர்ந்து இயல்பாய் முடியும் ?

விடை

5. மெய் + மாட்சி , கை + மலர் - இவற்றைப் புணர்த்து எழுதுக .

பொதுப்பெயர் , உயர்திணைப் பெயர் முன் வல்லினமும் பிறவும்

உயர்திணைக்கும் , அஃறிணைக்கும் பொதுவாக வழங்கும் பெயர் பொதுப்பெயர் எனப்படும் .

இதனை இருதிணைப் பொதுப்பெயர் என்றும் குறிப்பிடுவர் .

சான்று :

சாத்தன் , சாத்தி

இச்சொற்கள் உயர்திணையில் முறையே ஒருவனையும் , ஒருத்தியையும் குறிக்கும் இயற்பெயர்களாகவும் , அஃறிணையில் முறையே ஓர் எருதையும் , ஒரு பசுவையும் அழைக்கும் பெயர்களாகவும் வழங்கி வந்தன .

எனவே சாத்தன் , சாத்தி என்பன பொதுப்பெயர்கள் என்று கூறப்படுகின்றன .

இதே போல் தாய் , தந்தை , ஆண் , பெண் , பிள்ளை போன்ற சொற்களும் , நான் , யான் , யாம் , நாம் என்னும் தன்மை இடப்பெயர்களும் , நீ , நீர் , நீயிர் , நீவிர் என்னும் முன்னிலை இடப்பெயர்களும் இருதிணைக்கும் பொதுவாக வழங்கிய பெயர்களாகும் .

நாம் வாழும் இக்காலத்திலும் வீட்டில் வளர்க்கும் விலங்குகள் , பறவைகள் , கோயில்களில் வளர்க்கும் விலங்குகள் , பறவைகள் முதலியவற்றிற்கு மக்களுக்கு வைக்கும் இயற்பெயர்களை இட்டு அவற்றை அழைக்கும் வழக்கம் இருப்பதைக் காணலாம் .

உயர்திணைக்கு மட்டும் வழங்கும் பெயர் உயர்திணைப் பெயர் எனப்படும் .

சான்று : அவன் , அவள் , அவர்

நம்பி , நங்கை

மகன் , மகள் , மக்கள்

தோன்றல் , குரிசில் , நாடன் , ஊரன்

பொதுப்பெயர் , உயர்திணைப் பெயர் ஆகிய இருவகைப் பெயர்கள் நிலைமொழியில் நின்று , அவை வல்லின எழுத்துகளையும் , பிற எழுத்துகளையும் முதலாக உடைய வருமொழிகளோடு புணரும் முறை பற்றி நன்னூலார் மூன்று பொதுவிதிகளைக் கூறுகிறார் .

அவற்றை ஈண்டுச் சான்றுடன் காண்போம் .

1. பொதுப்பெயர் , உயர்திணைப் பெயர் ஆகியவற்றின் ஈற்றில் உள்ள மெய்கள் , வருமொழி முதலில் வல்லினம் வந்தால் இயல்பாகும் .

• பொதுப்பெயர் ஈற்று மெய் வல்லினம் வர இயல்பாதல்

சான்று :

சாத்தன் + சிறியன் = சாத்தன் சிறியன் - அல்வழி

சாத்தன் + சிறிது = சாத்தன் சிறிது

பெண் + பெரியள் = பெண் பெரியள்

நான் + சிறியேன் = நான் சிறியேன்

இவை எழுவாய்த் தொடர் .

சாத்தன் + கை = சாத்தன் கை - வேற்றுமை

சாத்தன் + கொம்பு = சாத்தன் கொம்பு

ஆண் + செவி = ஆண் செவி

ஆண் + கால் = ஆண் கால்

இவை ஆறாம் வேற்றுமைத் தொகை .

• உயர்திணைப் பெயர் ஈற்றுமெய் வல்லினம் வர இயல்பாதல்

சான்று :

அவன் + சிறியன் = அவன் சிறியன் - அல்வழி

அவள் + பெரியள் = அவள் பெரியள்

மகன் + தடியன் = மகன் தடியன்

ஊரன் + கொடியன் = ஊரன் கொடியன்

இவை எழுவாய்த் தொடர் .

அவன் + புகழ் = அவன் புகழ் - வேற்றுமை

அவள் + பெருமை = அவள் பெருமை

மகன் + சிறுமை = மகன் சிறுமை

நாடன் + கை = நாடன் கை

இவை ஆறாம் வேற்றுமைத் தொகை .

மேலே காட்டிய சான்றுகளில் நிலைமொழியாக உள்ள பொதுப்பெயர்களின் இறுதியிலும் உயர்திணைப் பெயர்களின் இறுதியிலும் உள்ள மெய்கள் , வருமொழி முதலில் வல்லினம் வர , அல்வழியிலும் வேற்றுமையிலும் இயல்பாயின .

2. பொதுப்பெயர் , உயர்திணைப் பெயர்களின் ஈற்றில் நிற்கும் உயிர் எழுத்துகளின் முன்னும் , யகர ரகர மெய்களின் முன்னும் , வருமொழி முதலில் வருகின்ற வல்லின மெய்கள் மிகா ; இயல்பாகவே வரும் .

• பொதுப்பெயர் முன் வருகின்ற வல்லினம் இயல்பாதல்

சான்று :

பிள்ளை + சிறியன் = பிள்ளை சிறியன் - அல்வழி

பிள்ளை + சிறிது = பிள்ளை சிறிது

நீ + பெரியை = நீ பெரியை

நீவிர் + பெரியீர் = நீவிர் பெரியீர்

இவை எழுவாய்த் தொடர் .

( நீவிர் - நீங்கள் )

சாத்தி + கை = சாத்தி கை - வேற்றுமை

சாத்தி + தலை = சாத்தி தலை

தாய் + சொத்து = தாய் சொத்து

தாய் + செவி = தாய் செவி

இவை ஆறாம் வேற்றுமைத் தொகை .

• உயர்திணைப் பெயர் முன் வருகின்ற வல்லினம் இயல்பாதல்

சான்று :

நம்பி + பெரியன் = நம்பி பெரியன் - அல்வழி

நங்கை + பெரியள் = நங்கை பெரியள் அவர் + தீயர் = அவர் தீயர்