3. வரவில்லை , திருவருள் - இவற்றைப் பிரித்துக்காட்டி இடையில் உள்ள உடம்படுமெய்யைக் குறிப்பிடுக .
விடை
4. சே + அடி - இது எவ்வெவ்வாறு புணரும் ?
விடை
5. முச்சுட்டு என்று கூறப்படுவன யாவை ?
விடை
6. எகர வினா , முச்சுட்டின் முன்னர் உயிரும் யகரமும் வரின் இடையே தோன்றும் மெய் யாது ?
விடை
7. செய்யுளில் சுட்டு நீண்டு வருவதற்கு ஒரு சான்று தருக .
விடை
8. எகர வினா , முச்சுட்டின் முன் பொருள் என்ற சொல் எவ்வாறு புணர்ந்து வரும் ?
விடை
9. இ + உலகம் - எவ்வாறு சேர்ந்து வரும் ?
விடை
10. அவ்விடம் - பிரித்துக் காட்டுக .
குற்றியலுகரத்தின் முன்னர் உயிரும் யகரமும் புணர்தல்
இப்புணர்ச்சி பற்றி நன்னூலார் கூறுவனவற்றைக் காண்பதற்கு முன்னர் , குற்றியலுகரம் என்றால் என்ன என்பது பற்றி அறிந்து கொள்வது நலம் .
குற்றியலுகரத்தைப் பற்றியும் , அதன் வகைகளைப் பற்றியும் ஏற்கெனவே சார்பு எழுத்துகள் என்ற பாடத்தில் படித்துள்ளோம் .
அவற்றை ஈண்டு மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம் .
மேலும் குற்றியலுகரத்தோடு தொடர்புடைய முற்றியலுகரத்தைப் பற்றியும் அறிந்து கொள்வோம் .
ஏனெனில் குற்றியலுகரப் புணர்ச்சிக்குக் கூறப்படும் விதிகளுள் சில , முற்றியலுகரத்திற்கும் பொருந்துவனவாக நன்னூலாரால் கூறப்பட்டுள்ளன .
குற்றியலுகரம் என்றால் என்ன ?
தனி நெட்டெழுத்தைத் தொடர்ந்தோ , இரண்டும் அதற்கும் மேற்பட்ட எழுத்துகளைத் தொடர்ந்தோ ஒரு சொல்லின் இறுதியில் வல்லின மெய்கள் ஆறன்மேல் ஏறிவரும் உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவே ஒலிக்கும் .
இதுவே குற்றியலுகரம் எனப்படும் .
குற்றியலுகரம் , தான் ஏறியிருக்கும் வல்லின மெய்க்கு ( கு , சு , டு , து , பு , று ஆகிய ஆறனுள் ஒன்றனுக்கு ) அயலே ( இடப்பக்கத்தில் ) வரும் எழுத்தைக் கொண்டு ஆறு வகைப்படும் .
அவையும் அவற்றிற்கான சான்றும் வருமாறு :
1. நெடில் தொடர்க் குற்றியலுகரம் - நாடு , காது , ஆறு
2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் - அஃது , எஃகு
3. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் - முரசு , வயது , கிணறு
4. வன்தொடர்க் குற்றியலுகரம் - பாட்டு , பத்து , பாக்கு
5. மென்தொடர்க் குற்றியலுகரம் - பந்து , பஞ்சு , குரங்கு
6. இடைத் தொடர்க் குற்றியலுகரம் - சார்பு , மார்பு , வீழ்து
இனி , முற்றியலுகரம் என்றால் என்ன என்று பார்ப்போம் .
தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின மெய்யின் மேல் ஏறி வருகின்ற உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறையாது ஒரு மாத்திரை அளவாகவே ஒலிக்கும் .
இது முற்றியலுகரம் எனப்படும் .
சான்று :
அது , பசு , கொடு , அறு .
மேலும் தனி நெட்டெழுத்தைத் தொடர்ந்தோ , பல எழுத்துகளைத் தொடர்ந்தோ ஒரு சொல்லின் இறுதியில் வல்லினம் அல்லாத பிற மெய்களின் மேல் ஏறி வரும் உகரமும் முற்றியலுகரம் ஆகும் .
சான்று :
சாவு , நோவு , கதவு , உறவு , நிலவு
குற்றியலுகரத்தின் முன்னர் உயிர் எழுத்துகளும் , யகர மெய்யும் வந்து புணரும் புணர்ச்சி பற்றி நன்னூலார் இரண்டு விதிகளைக் கூறுகிறார் .
சிலவிடங்களில் முற்றியலுகரத்திற்கும் இவ்விதிகள் பொருந்தும் எனக் கூறுகிறார் .
அவை வருமாறு :
1 நிலைமொழி ஈற்றில் குற்றியலுகரம் இருந்து , வருமொழி முதலில் உயிர் எழுத்து ஒன்று வந்து சேர்ந்தால் , அக்குற்றியலுகரம் தான் ஏறியிருக்கின்ற வல்லின மெய்யை விட்டு நீங்கும் .
சான்று :
நாடு + எல்லாம்
( நா ( ட் + உ ) + எல்லாம் ) = நாடெல்லாம்
அஃது + இல்லார் = அஃதில்லார்
முரசு + அறைந்தான் = முரசறைந்தான் பாட்டு + இசை = பாட்டிசை
பந்து + ஆட்டம் = பந்தாட்டம்
சார்பு + எழுத்து = சார்பெழுத்து
இங்கே காட்டிய சான்றுகளில் நிலைமொழி ஈற்றில் உள்ள குற்றியலுகரம் , வருமொழியின் முதலில் உயிர் வந்து சேரும்போது , தான் ஏறியிருந்த வல்லின மெய்யை விட்டு நீங்கியதைக் காணலாம் .
2 வருமொழி முதலில் யகரமெய் வந்து சேர்ந்தால் குற்றியலுகரம் இகரமாகத் திரியும் .
சான்று :
நாடு + யாது = நாடியாது
குரங்கு + யாது = குரங்கியாது
களிற்று + யானை = களிற்றியானை
இங்கே காட்டிய சான்றுகளில் , நிலைமொழியின் ஈற்றில் உள்ள குற்றியலுகரம் , வருமொழி முதலில் யகரமெய் வந்து சேரும்போது இகரமாகத் திரிந்துள்ளதைக் காணலாம் .
இவ்வாறு திரிந்து வரும் இகரம் குற்றியலிகரம் எனப்படும் .
குற்றியலுகரத்திற்குக் கூறப்பட்ட இவ்விரண்டு விதிகளை முற்றியலுகரமும் சிலவிடங்களில் பெற்றுவரும் .
சான்று :
சாவு + இல்லை = சாவில்லை
கதவு + எங்கே = கதவெங்கே
உறவு + இல்லை = உறவில்லை
இங்கே காட்டிய சான்றுகளில் நிலைமொழியின் ஈற்றில் உள்ள முற்றியலுகரம் வருமொழியின் முதலில் உயிர் வந்து சேரும்போது , தான் ஏறியிருக்கின்ற வகரமெய்யை விட்டு நீங்கியதைக் காணலாம் .
கதவு + யாது = கதவியாது
இங்கே முற்றியலுகரம் வருமொழியின் முதலில் யகரம் வர இகரமாகத் திரிந்திருப்பதைக் காணலாம் .
நூற்பா :
உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும் ;
யவ்வரின் இய்யாம் முற்றும்அற் றொரோவழி .
( நன்னூல் - 164 )
( ஓடும் = நீங்கும் ; உக்குறள் , குறள் உ = குற்றியலுகரம் ; மெய்விட்டோடும் - வல்லின மெய்யை விட்டு நீங்கும் ; அற்று - குற்றியலுகரத்தைப்போல ; முற்றும் - முற்றியலுகரமும் ; ஒரோவழி = சிலவிடங்களில் . )
நன்னூலார் தாம் கூறும் இலக்கண விதிகள் சிலவற்றிற்குச் சான்றுகளை , அவ்விதிகளைக் கூறும் நூற்பாவினுள்ளேயே அமைத்துக் காட்டியிருப்பதைக் காணலாம் .
இந்நூற்பாவில் ,
மெய்விட்டு + ஓடும் = மெய்விட்டோடும்
அற்று + ஒரோவழி = அற்றொரோவழி
என வருவனவற்றில் குற்றியலுகரம் வருமொழியின் முதலில் உயிர் வரும்போது , முறையே தான் ஏறியிருக்கின்ற டகர , றகர வல்லின மெய்களை விட்டு நீங்கியிருப்பதைக் காணலாம் .
உயிர் ஈற்றின்முன் வல்லினம் புணர்தல்
நிலைமொழியின் இறுதியில் இயல்பு ஈறாகவோ , விதி ஈறாகவோ நிற்கும் உயிர்களின் முன்னர் , வருமொழியின் முதலில் வருகின்ற க , ச , த , ப என்னும் வல்லின மெய்கள் , பெரும்பாலும் மிகும் ; ( சிறப்பு விதிகளில் சொல்லாதவையாய் இருந்தால்)
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
க ச த ப மிகும் விதவாதன மன்னே .
( நன்னூல் - 165 )
( விதவாதன - சிறப்பு விதிகளில் சொல்லாதவை . )
இந்நூற்பாவில் கூறப்படும் இயல்பு ஈறு , விதி ஈறு என்பனவற்றை விளங்கிக் கொள்வது இன்றியமையாதது .
• இயல்பு ஈறு
நிலைமொழியின் ஈற்றில் உள்ள உயிரானது , எத்தகைய விகாரமும் அடையாமல் இயல்பாய் இருப்பது இயல்பு ஈறு எனப்படும் .
சான்று :
பலா , வாழை , மலை
( இவற்றுள் சொல்லின் இறுதியில் உள்ள உயிர் எழுத்துகள் இயல்பாய் அமைந்தவை)
• விதி ஈறு
நிலைமொழியின் ஈற்றில் இயல்பாய் நிற்கின்ற உயிர் , மெய் ஆகிய இரண்டனுள் , ஏதேனும் ஓர் இலக்கண விதி காரணமாக , உயிரானது நீங்கி வேறோர் உயிர் ஈறாய் நிற்பதும் , மெய்யானது நீங்கி உயிர் ஈறாய் நிற்பதும் , மெய்யின் மேல் ஓர் உயிர் ஏறி நிற்பதும் விதி ஈறு எனப்படும் .
சான்று :
நேற்று - நேற்றை
மரம் - மர
தாழ் - தாழ
( இவற்றுள் சொல்லின் இறுதியில் உள்ள உயிர் எழுத்துகள் விதி காரணமாக அமைந்தவை)
இனி , இயல்பு ஈறாகவும் , விதி ஈறாகவும் நிற்கும் உயிர்களின் முன்னர் , க , ச , த , ப என்னும் வல்லின மெய்கள் வந்து புணர்தலைச் சான்றுகளுடன் காண்போம் .
• இயல்பு உயிர் ஈறுகளின் முன்னர் வல்லினம் வந்து மிகுதல் சான்று :
எட்டி + காய் = எட்டிக்காய்
பலா + சுளை = பலாச்சுளை
வாழை + தோப்பு = வாழைத்தோப்பு
மலை + பழம் = மலைப்பழம்
இச்சான்றுகளில் எட்டி , பலா , வாழை , மலை என்னும் நிலைமொழிகளின் இறுதியில் இ , ஆ , ஐ என்னும் உயிர் ஈறுகள் இயல்பாய் நிற்றலால் இயல்பு உயிர் ஈறுகள் ஆகும் .
இவற்றின் முன்னர் வந்த க , ச , த , ப என்னும் வல்லின மெய்கள் மிக்கு வந்துள்ளதை இச்சான்றுகள் காட்டுகின்றன .
• விதி உயிர் ஈறுகளின் முன்னர் வல்லினம் வந்து மிகுதல்
சான்று :
நேற்று + பொழுது = நேற்றைப்பொழுது
மரம் + கிளை = மரக்கிளை
தாழ் + கோல் = தாழக்கோல்
இச்சான்றுகளில் நேற்று என்பது நேற்றை என்றும் , மரம் என்பது மர என்றும் , தாழ் என்பது தாழ என்றும் சில இலக்கண விதிகளின் காரணமாக மாறியுள்ளன .
இவ்வாறு விதிகளின் காரணமாக மாறியுள்ள நிலைமொழிச் சொற்களாகிய நேற்றை , மர , தாழ என்பனவற்றில் முறையே இறுதியில் வரும் ஐ , அ என்பன விதி உயிர் ஈறுகள் ஆகும் .
இவ்விதி உயிர் ஈறுகளின் முன்னர் வந்த க , ச , த , ப என்னும் வல்லின மெய்கள் மிக்கு வந்துள்ளதை இச்சான்றுகள் காட்டுகின்றன .
சிறப்பு விதிகளில் சொல்லாதவை பெரும்பாலும் மிகும் என்றமையால் , சிறப்பு விதிகளில் சொல்லியவை பெரும்பாலும் வல்லினம் மிகா என்பது பெறப்படும் .
அதனை அடுத்து வரும் உயிர் ஈற்றுச் சிறப்பு விதிகள் என்ற பாடத்தில் பார்க்கலாம் .
உயிர் ஈற்று மரப்பெயர் முன் வல்லினம் புணர்தல்
மரத்தின் பெயர்கள் சிலவற்றுக்கெனப் புதிய விதிகளை நன்னூல் கூறுகிறது .
வேற்றுமைப் புணர்ச்சியில் , உயிர் எழுத்தை ஈற்றிலே கொண்ட சில மரப்பெயர்களுக்கு முன்னர் வரும் க , ச , த , ப என்னும் வல்லெழுத்துகள் , மேலே சொன்ன பொதுவிதிப்படி மிகாமல் , வருகின்ற அவ்வல்லெழுத்துகளுக்கு இனமான மெல்லெழுத்துகள் தோன்றப் பெறுவதும் உண்டு .
மரப்பெயர் முன்னர் இனமெல் லெழுத்து
வரப்பெறு னவும்உள வேற்றுமை வழியே ( நன்னூல் , 166 )
சான்று :
விள + காய் = விளங்காய்
மா + பழம் = மாம்பழம்
காயா + பூ = காயாம் பூ
நூற்பாவில் , வரப்பெறுனவும் உள ( தோன்றப் பெறுவதும் உண்டு ) என்ற உம்மையால் , மரப் பெயர்களின் முன்னர் மெல்லெழுத்துப் பெறாமல் வல்லெழுத்து மிகப் பெறுவனவே பெரும்பான்மை என்பது பெறப்படும் .
சான்று :
பலா + காய் = பலாக்காய்
அத்தி + பழம் = அத்திப்பழம்
அத்தி + காய் = அத்திக்காய்
வாழை + காய் = வாழைக்காய்
வாழை + பழம் = வாழைப்பழம்
இலந்தை + பழம் = இலந்தைப்பழம்
தொகுப்புரை
நிலைமொழியின் இறுதியிலும் வருமொழியின் முதலிலும் உயிர் வரும்போது , அவ்விரண்டு உயிர்களையும் அடுத்தடுத்து ஒலிக்கும்போது தோன்றும் விட்டிசையைத் தடுக்க , அவ்விரண்டு உயிர்களுக்கு இடையே உடம்படுமெய்களாக யகரமெய்யும் , வகர மெய்யும் வருகின்றன .
விட்டிசை காரணமாக உடம்படாமல் இருக்கும் இரண்டு உயிர்களை உடம்படுத்தும் மெய்களாக இவை வருதலால் உடம்படு மெய்கள் எனப்பட்டன .
நிலை மொழியின் இறுதியில் இ , ஈ , ஐ வரும்போது யகரமெய்யும் , பிற வரும்போது வகர மெய்யும் உடம்படு மெய்களாக வருகின்றன .
எகர வினா , முச்சுட்டுகளின் முன்னர் உயிரும் யகர மெய்யும் வரும் போது இடையில் வகர மெய் தோன்றும் , வல்லினம் , மெல்லினம் , யகரம் நீங்கிய இடையினமும் வரும்போது , இடையில் வருகின்ற அந்தந்த மெய் எழுத்துகளே மிக்குத் தோன்றும் .
நிலை மொழியின் இறுதியில் உள்ள குற்றியலுகரம் , வருமொழியின் முதலில் உயிர் வரும்போது , தான் ஏறியிருக்கும் வல்லின மெய்யை விட்டு நீங்கும் .
முற்றியலுகரமும் வருமொழியின் முதலில் உயிர் வரும்போது தான் ஏறியிருக்கும் மெய்யை விட்டு நீங்கும் .
இயல்பு ஈறாகவும் , விதி ஈறாகவும் மொழி இறுதியில் வரும் எல்லா உயிர்கள் முன்னும் வரும் க , ச , த , ப என்னும் வல்லின மெய்கள் நான்கும் பெரும்பாலும் மிகும் .
இவ்விதிக்கு மாறாகச் சில உயிர் ஈற்று மரப்பெயர்களின் முன்னர் வரும் வல்லினம் மிகாமல் , அவ்வல்லினத்திற்கு இனமாகிய மெல்லினம் தோன்றப் பெறுவதும் உண்டு .
இவற்றை எல்லாம் இந்தப் பாடத்தின் வாயிலாக விளக்கமாக அறிந்து கொண்டோம் .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும் ?
விடை
2. பின்வரும் சொற்களுள் எவை குற்றியலுகரச் சொற்கள் , எவை முற்றியலுகரச் சொற்கள் எனக் குறிப்பிடுக .
காது , அது , கொடு , நாடு , முரசு , கதவு விடை
3. நாடு + எல்லாம் , சார்பு + எழுத்து - இவற்றைச் சேர்த்து எழுதுக . விடை
4. நிலைமொழி இறுதியில் உள்ள குற்றியலுகரம் வருமொழி முதலில் யகர மெய் வந்தால் எவ்வாறு திரியும் ?
விடை
5. இயல்பினும் , விதியினும் நின்ற நிலைமொழி உயிர் ஈற்றின் முன்னர் வரும் எந்த மெய்கள் மிகும் ?
விடை
6. மரக்கிளை , பலாச்சுளை , நேற்றைப் பொழுது , மலைப்பழம் - இவற்றில் இயல்பு உயிர் ஈறாகவும் , விதி உயிர் ஈறாகவும் அமைந்தவை எவை எனக் காட்டுக .
விடை
7. மா + பழம் , விள + காய் - இவை எவ்வாறு புணர்ந்து வரும் ?
உயிர் ஈற்றுப் புணர்ச்சி - சிறப்பு விதிகள்
பாட முன்னுரை
உயிர் ஈற்றுப் புணரியலில் எல்லா உயிர் ஈறுகளுக்குமான சிறப்புப் புணர்ச்சியை விளக்கிக் கூறிய நன்னூலார் ஒவ்வோர் உயிர் ஈற்றிற்குமான புணர்ச்சி விதிகளை , அகர ஈற்றுச் சிறப்பு விதிகள் , ஆகார ஈற்றுச் சிறப்பு விதிகள் எனத் தனித் தனியாகக் கூறுகிறார் .
மொழிக்கு இறுதியில் பன்னீர் உயிர்களும் வரும் என்கிறார் நன்னூலார் .
இவற்றுள் எ என்பது வினா எழுத்து என்ற நிலையில் மட்டும் ஈறாகும் .
இதனோடு நாற்கணமும் புணர்வது பற்றி உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சியில் ‘ எகர வினா முச்சுட்டின் முன்னர் ’ என்று தொடங்கும் நூற்பாவில் பேசினார் .
இதனைச் சென்ற பாடத்தில் பார்த்தோம் .
ஒ என்பது தனித்து ஈறாகாது .
மெய்யோடு சேர்ந்து ஈறாகும்போது நகர மெய்யுடன் சேர்ந்து ‘ நொ ’ என்ற ஒரு சொல்லில் மட்டும் ஈறாகும் .
நொ என்ற சொல் புணர்ச்சியில் வருவது பற்றி ‘ எண்மூ எழுத்து ’ என்று தொடங்கும் பொதுப்புணர்ச்சி பற்றிய நூற்பாவில் கூறியுள்ளார் , இதனையும் ஏற்கெனவே பார்த்துள்ளோம் .
ஔ என்னும் உயிர் கௌ , வௌ ஆகிய சொற்களில் மட்டுமே ஈறாகும் .
இவை சிறப்பில்லாதவை .
எனவே எ , ஒ , ஔ ஆகிய மூன்று உயிர்களும் நீங்கலான பிற ஒன்பது உயிர் ஈற்றுச் சிறப்பு விதிகள் பற்றி , உயிர் ஈற்றுப் புணரியலில் பேசுகிறார் .
ஈகார ஈற்றுச் சிறப்பு விதியில் அவர் குறிப்பிடும் விதிகள் பெரும்பாலும் இடக்கர் அடக்கல் சொல் ( பொது இடத்தில் பலர் முன் கூறத்தகாத சொல் ) பற்றியனவாக உள்ளன .
எனவே ஈகார ஈற்றைத் தவிர்த்து , ஏனைய எட்டு உயிர் ஈற்றுச் சிறப்புவிதிகளை இப்பாடத்தில் ஒன்றன்பின் ஒன்றாகச் சான்றுகளுடன் விளக்கிக் காண்போம் .
அகர ஈற்றுச் சிறப்பு விதிகள்
‘ இயல்பினும் விதியினும் ’ என்று தொடங்கும் நூற்பாவில் கூறிய பொதுவிதிப்படி , நிலைமொழியின் ஈற்றில் உயிர்வந்து , வருமொழி முதலில் வல்லினம் வந்தால் , அவ்வல்லினம் பெரும்பாலும் மிகும் என ஏற்கெனவே பார்த்தோம் .
அப்பொதுவிதிக்கு மாறாக , சில அகர ஈற்றுச் சொற்களின் முன்னர் வரும் வல்லினம் மிகாமல் இயல்பாய் வரும் என்பதை நன்னூலார் ஒரு சில நூற்பாக்களில் குறிப்பிடுகிறார் .
• அகர ஈற்றுச் சொற்கள் சிலவற்றின் முன் வல்லினம் இயல்பாதல்
1. செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களின் முன்னர் வரும் வல்லினம் ( க , ச , த , ப ) இயல்பாகும் .
சான்று :
காணிய + சென்றான் = காணிய சென்றான் ( காண்பதற்குச் சென்றான் )
உண்ணிய + போனான் = உண்ணிய போனான் ( உண்பதற்குப் போனான் )
2. பல வகைப்பட்ட அகர ஈற்றுப் பெயரெச்சங்களுக்கு முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் .
சான்று :
உண்ட + பையன் = உண்ட பையன் ( தெரிநிலைப்
பெயரெச்சம் )
கரிய + பையன் = கரிய பையன் ( குறிப்புப்
பெயரெச்சம் )
அறியாத + பையன் = அறியாத பையன் ( எதிர்மறைப்
பெயரெச்சம் )
3. பல வகைப்பட்ட அகர ஈற்று வினைமுற்றுகளுக்கு முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் .
சான்று :
உண்டன + குதிரைகள் = உண்டன குதிரைகள் ( தெரிநிலை வினைமுற்று )
கரியன + குதிரைகள் = கரியன குதிரைகள் ( குறிப்பு வினைமுற்று )
வாழ்க + தலைவா = வாழ்க தலைவா ( வியங்கோள் வினைமுற்று )
4. ஆறாம் வேற்றுமைப் பன்மை உருபாகிய ‘ அ ’ என்பது பெயரைச் சார்ந்து வரும்போது அதன் முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் .
சான்று :
என + அ + கைகள் = என கைகள் ( என்னுடைய கைகள் )
5. அகர ஈற்றுப் பன்மைப் பெயர்களுக்கு முன்னர் வரும் வல்லினம் இயல்பாகும் .
சான்று :
பல + குதிரைகள் = பல குதிரைகள் சில + தந்தான் = சில தந்தான்