இவை , ஒற்று இடையில் மிக்கவை ஆகும் .
ஆடு என்ற நெடில் தொடர்க் குற்றியலுகரத்தின் இடையில் டகர ஒற்றும் , வயிறு என்னும் உயிர்த்தொடர்க் குற்றியலுகத்தின் இடையில் றகர ஒற்றும் மிகுந்தன .
இவை ஆடு கால் , வயிறு பசி என்று இடையில் ஒற்று மிகாமல் வருவது இல்லை .
• ஒற்று இடையில் மிகாதன
சான்று :
நாகு + கால் = நாகு கால் ( நெடில் தொடர் )
வரகு + சோறு = வரகு சோறு ( உயிர்த் தொடர் )
( நாகு - பசு ; நாகு கால் - நாகினது கால் , பசுவினது கால் - ஆறாம் வேற்றுமைத் தொகை ; வரகு சோறு - வரகு என்னும் தானியத்தால் ஆக்கப்பட்ட சோறு , மூன்றாம் வேற்றுமைத் தொகை )
இவை ஒற்று இடையில் மிகாதவை ஆகும் .
இவை நாக்குக் கால் , வரக்குச் சோறு என்று இடையில் ஒற்று மிகுந்து வருவது இல்லை .
வேற்றுமையில் குற்றியலுகரத்தின் முன் வல்லினம்
வேற்றுமைப் புணர்ச்சியில் இடைத்தொடர்க் குற்றியலுகரம் , ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் , ஒற்று இடையில் மிகாத நெடில்தொடர்க் குற்றியலுகரம் , ஒற்று இடையில் மிகாத உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் ஆகியவற்றின் முன் வருகின்ற வல்லினம் இயல்பாகும் .
இடைத்தொடர் , ஆய்தத் தொடர் , ஒற்று இடையில்
மிகா நெடில் , உயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை
( நன்னூல் , 182 )
சான்று :
மார்பு + கடுமை = மார்பு கடுமை ( இடைத்தொடர் )
எஃகு + பெருமை = எஃகுபெருமை ( ஆய்தத்தொடர் )
நாகு + கால் = நாகு கால் ( ஒற்று இடையில் மிகாத
நெடில் தொடர் )
வரகு + சோறு = வரகு சோறு ( ஒற்று இடையில் மிகாத
உயிர்த்தொடர் )
( மார்பு கடுமை - மார்பினது கடுமை ; எஃகு பெருமை - எஃகினது பெருமை , எஃகு - வேர் .
இவை ஆறாம் வேற்றுமைத் தொகை)
• ஒற்று இடையில் மிகும் குற்றியலுகரங்கள் முன் வல்லினம் வேற்றுமையில் மிகுதல்
ஒற்று இடையில் மிகாத நெடில் தொடர் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்களின் முன் வருகின்ற வல்லினம் வேற்றுமையில் இயல்பாகும் எனவே , ஒற்று இடையில் மிகும் அவ்விரு குற்றியலுகரங்களின் முன் வருகின்ற வல்லினம் வேற்றுமையில் மிகும் என்பது பெறப்படும் .
சான்று :
ஆடு + கால் = ஆட்டுக்கால்
வயிறு + பசி = வயிற்றுப்பசி
மேலும் , இந்நூற்பாவில் வேற்றுமையில் மிகா எனப்பட்ட குற்றியலுகரங்களில் கூறப்படாத வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன்னும் மென்தொடர்க் குற்றியலுகரத்தின் முன்னும் வருகின்ற வல்லினம் வேற்றுமையில் மிகும் .
சான்று :
பாக்கு + தின்றான் = பாக்குத் தின்றான் ( பாக்கைத் தின்றான் )
பாட்டு + பாடினாள் = பாட்டுப் பாடினாள் ( பாட்டைப் பாடினாள் )
கொக்கு + சிறகு = கொக்குச் சிறகு ( கொக்கினது சிறகு )
இச்சான்றுகளில் வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வந்த வல்லினம் வேற்றுமையில் மிகுந்ததைக் காணலாம் .
குரங்கு + குட்டி = குரங்குக் குட்டி ( குரங்கினது குட்டி )
வண்டு + கால் = வண்டுக்கால் ( வண்டினது கால் )
கூண்டு + கிளி = கூண்டுக் கிளி ( கூண்டின்கண் கிளி )
இச்சான்றுகளில் மென்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வந்த வல்லினம் வேற்றுமையில் மிகுந்ததைக் காணலாம் .
இதுகாறும் கூறியவற்றிலிருந்து , எந்த எந்தக் குற்றியலுகரங்களுக்கு முன் வரும் வல்லினம் அல்வழியிலும் , வேற்றுமையிலும் மிகும் , மிகாது என்பது பற்றி மூன்று கருத்துகள் பெறப்படுகின்றன .
அவை வருமாறு .
1. ஆய்தத் தொடர் , இடைத் தொடர் , ஒற்று இடையில் மிகாத நெடில் தொடர் , ஒற்று இடையில் மிகாத உயிர்த்தொடர் ஆகிய குற்றியலுகரங்களுக்கு முன் வருகின்ற வல்லினம் அல்வழி , வேற்றுமை என்னும் இருவகைப் புணர்ச்சியிலும் மிகா ( இயல்பாகும் )
2. ஒற்று இடையில் மிகும் நெடில்தொடர் , ஒற்று இடையில் மிகும் உயிர்த்தொடர் , வன்தொடர் ஆகிய குற்றியலுகரங்களுக்கு முன் வருகின்ற வல்லினம் அல்வழி , வேற்றுமை என்னும் இருவகைப் புணர்ச்சியலும் மிகும் .
3. மென்தொடர்க் குற்றியலுகரத்துக்கு முன் வருகின்ற வல்லினம் அல்வழியில் மிகா ; வேற்றுமையில் மிகும் .
ஒற்று இடையில் மிகும் குற்றியலுகரங்கள் முன் நாற்கணம்
டு , று என முடியும் நெடில்தொடர் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்களில் உள்ள ட , ற என்னும் வல்லின மெய்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் நாற்கணமும் ( உயிர் , வலி , மெலி , இடை ) வந்து புணரும்பொழுது பெரும்பாலும் இரட்டிக்கும் .
நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள்
ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே ( நன்னூல் , 183 )
( ஒற்று - மெய் ; ட ற ஒற்று இரட்டும் - ட் என்பது ட்ட் எனவும் , ற் என்பது ற்ற் எனவும் இரட்டிக்கும் ; வேற்றுமை மிகவே - வேற்றுமைப் புணர்ச்சியில் பெரும்பாலும் ) சான்று :
நாடு + அரசன் = நாட்டரசன்
சோறு + பானை = சோற்றுப்பானை
காடு + மனிதன் = காட்டு மனிதன்
மாடு + வால் = மாட்டு வால்
இச்சான்றுகளில் டு , று என முடியும் நெடில்தொடர் முன் வேற்றுமையில் நாற்கணமும் வர , இறுதியில் உள்ள ட , ற என்னும் மெய்கள் இரட்டித்தன .
பகடு + ஏர் = பகட்டேர்
வயிறு + பசி = வயிற்றுப்பசி
முரடு + மனிதன் = முரட்டு மனிதன்
வயிறு + வலி = வயிற்று வலி
( பகடு - எருது , காளை ; பகட்டேர் - காளை மாட்டைப் பூட்டிய ஏர் )
இச்சான்றுகளில் டு , று என முடியும் உயிர்த்தொடர் முன் வேற்றுமையில் நாற்கணமும் வர , இறுதியில் உள்ள ட , ற என்னும் மெய்கள் இரட்டித்தன .
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. வன்தொடர் அல்லன என்று கூறப்படும் குற்றியலுகரங்கள் எத்தனை ?
விடை
2. அல்வழியில் எந்தக் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும் ?
விடை
3. கொக்கு + சிறகு , குரங்கு + குட்டி - இவற்றைச் சேர்த்து எழுதுக .
விடை
4. செய்து + கொடுத்தான் , எடுத்து + கொடுத்தான் - இவற்றைச் சேர்த்து எழுதுக .
விடை
5. வேற்றுமையில் ஒற்று இடையில் மிகுந்தும் , மிகாமலும் வரும் குற்றியலுகரங்கள் யாவை ?
விடை
6. வயிற்றுப்பசி , ஆட்டுக்கால் - இவற்றைப் பிரித்து எழுதுக .
விடை
7. ஒற்று இடையில் மிகும் குற்றியலுகரங்களின் முன் வேற்றுமையில் வல்லினம் மிகுமா ?
விடை
8. வேற்றுமைப் புணர்ச்சியில் நாற்கணம் வரும்போது இரட்டிக்கும் வல்லின மெய்கள் யாவை ?
விடை
9. நாடு + அரசன் - சேர்த்து எழுதுக .
மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் முன் நாற்கணம்
மென்தொடர்க் குற்றியலுகரத்தை ஈற்றிலே பெற்ற சொற்களுள் சில , வேற்றுமைப் புணர்ச்சியில் நாற்கணத்தோடு புணரும்போது , தமக்கு இனமாகிய வன்தொடர்க் குற்றியலுகரமாகத் திரியும் .
எனவே பல சொற்கள் அவ்வாறு வன்தொடர்க் குற்றியலுகரமாகத் திரியா .
மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்களாகவே இருக்கும் .
மென்தொடர் மொழியுள் சிலவேற் றுமையில்
தம் இன மென்தொடர் ஆகா மன்னே ( நன்னூல் , 184 )
இந்நூற்பாவில் வருமொழி முதல் எழுத்துச் சொல்லப்படவில்லை .
எனவே நாற்கணமும் வருமொழி முதல் எழுத்தாகக் கொள்க என்பர் நன்னூல் உரையாசிரியர்கள் .
சான்று :
குரங்கு + இனம் = குரக்கினம்
மருந்து + பை = மருத்துப் பை
சுரும்பு + நாண் = சுருப்பு நாண்
கரும்பு + வில் = கருப்பு வில்
( சுரும்பு - வண்டு ; நாண் - கயிறு ; சுருப்பு நாண் - வண்டால் ஆகிய கயிறு ; கருப்பு வில் - கரும்பால் ஆகிய வில் .
இது மன்மதனுக்கு உரியது )
இச்சான்றுகளில் வரும் குரங்கு , மருந்து , சுரும்பு , கரும்பு ஆகியன மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் .
இவை வேற்றுமைப் புணர்ச்சியில் நாற்கணம் வர , முறையே குரக்கு , மருத்து , சுருப்பு , கருப்பு என வன்தொடர்க் குற்றியலுகரமாகத் திரிந்தன .
வேற்றுமைப் புணர்ச்சியில் மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்களாக மட்டும் வருபவையே அதிகம் என மேலே பார்த்தோம் .
சான்று :
சங்கு + இனம் = சங்கினம் வண்டு + கால் = வண்டுக்கால்
சங்கு + மாலை = சங்கு மாலை
இவை வேற்றுமைப் புணர்ச்சியில் வன்தொடராகத் திரியாதவை .
ஐகாரச் சாரியை பெறும் குற்றியலுகரச் சொற்கள்
ஐகாரச் சாரியையை இறுதியில் பெற்று வருகின்ற மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்களும் உண்டு .
ஐஈற் றுடைக் குற்றுகரமும் உளவே ( நன்னூல் , 185 )
இந்நூற்பா மென்தொடர் என்று தொடங்கும் நூற்பாவை அடுத்து வருகின்றமையின் , இந்நூற்பாவில் கூறப்படும் குற்றியலுகரம் மென்தொடர் என்றும் , இந்நூற்பாவிலும் வருமொழி முதல் எழுத்துச் சொல்லப்படாமையால் நாற்கணமும் வரும் என்றும் உரையாசிரியர்கள் கூறுகின்றனர் .
சான்று :
ஒன்று + ஆள் = ஒற்றையாள்
பண்டு + காலம் = பண்டைக்காலம்
இன்று + நாள் = இன்றை நாள் , இற்றைநாள்
இரண்டு + வேடம் = இரட்டை வேடம்
‘ ஐ ஈற்றுடைக் குற்றுகரமும் உளவே ’ என்று பொதுப்படக் கூறியிருப்பதால் பிறதொடர்க் குற்றியலுகரங்களும் சில சமயம் ஐகாரச் சாரியை பெறுதல் உண்டு .
சான்று :
நேற்று + கூலி = நேற்றைக் கூலி
நேற்று + பொழுது = நேற்றைப் பொழுது
இங்கே நேற்று என்ற வன்தொடர்க் குற்றியலுகரம் ஐகாரச் சாரியை பெற்று வந்தது .
திசைப்பெயர்ப் புணர்ச்சி
வடக்கு , தெற்கு , கிழக்கு , மேற்கு ஆகிய நான்கும் திசைப்பெயர்கள் ஆகும் .
இவையாவும் வன்தொடர்க் குற்றியலுகரங்கள் ஆகும் .
மேலும் கிழக்குத் திசையைக் குறிக்க , குணக்கு என்ற சொல்லும் , மேற்குத் திசையைக் குறிக்க , குடக்கு என்ற சொல்லும் இலக்கியங்களில் வழங்குகின்றன .
குணக்கு , குடக்கு என்பனவும் வன்தொடர்க் குற்றியலுகரங்களே ஆகும் .
• திசைப்பெயரோடு திசைப்பெயரும் , பிறபெயரும் புணரும் முறை
குற்றியலுகரத்தை ஈற்றிலே கொண்டு நிலைமொழியில் இருக்கும் திசைப்பெயர்களோடு , வருமொழியில் மற்றத் திசைப்பெயர்களும் , பிற பெயர்களும் வந்து புணரும் போது , நிலைமொழியின் ஈற்றில் நிற்கும் ‘ கு ’ என்னும் உயிர்மெய்யும் , அதன் அயலில் ( இடப்புறத்தில் ) நிற்கும் , ‘ க ’ கர மெய்யும் நீங்குதலும் , ஈற்று உயிர்மெய் ( கு ) நீங்கி , அதன் அயலில் நிற்கும் றகரமெய் னகரமெய்யாகவும் , லகர மெய்யாகவும் திரிதலும் ஆகும் புணர்ச்சியைப் பெறும் என்கிறார் நன்னூலார் .
திசையொடு திசையும் பிறவும் சேரின்
நிலைஈற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும் ,
றகரம் னலவாத் திரிதலு மாம்பிற ( நன்னூல் , 186 )
( உயிர்மெய் - கு என்பதாகும் )
நிலைமொழி ஈற்று உயிர்மெய்யும் ( கு என்பதும் ) கவ்வொற்று நீங்குதல் , குணக்கு , குடக்கு , வடக்கு என்பனவற்றிற்கும் , றகரம் னகரமாகத் திரிதல் தெற்கு என்பதற்கும் , றகரம் லகரமாகத் திரிதல் மேற்கு என்பதற்கும் ஆகும் .
நூற்பாவில் ‘ பிற ’ என்றதனால் , கிழக்கு என்பதில் உள்ள ழகரத்தின் அகர உயிர் நீங்கி , முதல் நீண்டு வருதலும் கொள்ளப்படும் .
எனவே , இந்நூற்பாவில் திசைப்பெயர்ப் புணர்ச்சி பற்றி நன்னூலார் நான்கு விதிகளைக் கூறியுள்ளார் என்பது புலனாகின்றது .
அவற்றினைச் சான்றுடன் கீழே காண்போம் .
1. ஈற்று உயிர்மெய்யும் கவ்வொற்றும் நீங்குதல்
சான்று :
வடக்கு + கிழக்கு = வடகிழக்கு
வடக்கு + மேற்கு = வடமேற்கு
வடக்கு + திசை = வடதிசை
வடக்கு + வேங்கடம் = வடவேங்கடம்
வடக்கு + நாடு = வடநாடு
குடக்கு + மலை = குடமலை
குடக்கு + நாடு = குடநாடு
குணக்கு + நாடு = குணநாடு
இச்சான்றுகளில் நிலைமொழியில் உள்ள திசைப்பெயர்களின் ஈற்று உயிர்மெய்யும் , அதன் அயலே நின்ற ககரமெய்யும் நீங்கியமை காணலாம் .
2. றகர மெய் னகர மெய்யாகத் திரிதல்
சான்று :
தெற்கு + மேற்கு = தென்மேற்கு
தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு
தெற்கு + திசை = தென்றிசை ( தென்திசை )
தெற்கு + குமரி = தென்குமரி
தெற்கு + நாடு = தென்னாடு இச்சான்றுகளில் நிலைமொழியில் உள்ள தெற்கு என்ற திசைப்பெயரின் ஈற்று உயிர்மெய் நீங்கி , அதன் அயலே நின்ற றகரமெய் னகர மெய்யாகத் திரிந்தது காணலாம் .
3. றகர மெய் லகர மெய்யாகத் திரிதல்
சான்று :
மேற்கு + நாடு = மேல்நாடு
மேற்கு + திசை = மேல்திசை
இச்சான்றுகளில் நிலைமொழியில் உள்ள மேற்கு என்ற திசைப்பெயரின் ஈற்று உயிர்மெய் நீங்கி , அதன் அயலே நின்ற றகரமெய் லகர மெய்யாகத் திரிந்தது காணலாம் .
4. ழகரத்தில் உள்ள அகரஉயிர் நீங்கி முதல் எழுத்து நீளூதல்
சான்று :
கிழக்கு + நாடு = கீழ்நாடு
கிழக்கு + திசை = கீழ்த்திசை
இச்சான்றுகளில் நிலைமொழியில் உள்ள கிழக்கு என்ற திசைப்பெயரின் ஈற்று உயிர்மெய்யும் , கவ்வொற்றும் நீங்கி , அவற்றின் அயலே நின்ற ழ என்பதில் அகர உயிர் நீங்கி , ‘ கி ’ என்னும் முதல் எழுத்து ‘ கீ ’ என நீண்டது காணலாம் .
மேல் , கீழ் என வருவன ஐகாரம் பெற்று வருதலும் உண்டு .
சான்று :
மேல் + நாடு = மேலை நாடு
கீழ் + கடற்கரை = கீழைக் கடற்கரை
திசைப்பெயர்கள் பிறதிசைப் பெயர்களோடும் , பிறபெயர்களோடும் புணரும்போது , மேலே கூறப்பட்டவை போன்று எத்தகைய விகாரமும் பெறாமல் இயல்பாய் நிற்றலும் உண்டு என்பது பெறப்படும் .
சான்று :
தெற்கு + வடக்கு = தெற்கு வடக்கு
கிழக்கு + மேற்கு = கிழக்கு மேற்கு
வடக்கு + திசை = வடக்குத் திசை
மேற்கு + திசை = மேற்குத் திசை
• தெங்கு முன்னர்க் காய்
தெங்கு என்னும் நிலைமொழியின் முன் காய் என்னும் சொல் வருமொழியாக வந்தால் , தெங்கு என்னும் அந்நிலைமொழியின் முதல் நீண்டு அதன் ஈற்றில் உள்ள கு என்ற உயிர்மெய் நீங்கும் .
தெங்குநீண்டு ஈற்றுஉயிர் மெய்கெடும் காய்வரின் ( நன்னூல் , 187 )
( தெங்கு - தென்னை மரம் )
சான்று :
தெங்கு + காய்
தேங்கு + காய் ( முதல் நீளல் )
தேங் + காய் ( ஈற்று உயிர்மெய் நீங்கல் )
= தேங்காய்
தொகுப்புரை
இதுகாறும் ஆறுவகைக் குற்றியலுகரங்களின் புணர்ச்சி பற்றியும் , திசைப்பெயர்களின் புணர்ச்சி பற்றியும் நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் கூறியனவற்றை விரிவாகப் பார்த்தோம் .
அவற்றை ஈண்டுச் சுருக்கமாகத் தொகுத்துக் காண்போம் .
அல்வழியில் வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும் ; ஏனைய ஐந்து தொடர்க் குற்றியலுகரங்களின் முன் வரும் வல்லினம் அல்வழியில் மிகாது .
வேற்றுமைப் புணர்ச்சியில் நெடில் தொடர்க் குற்றியலுகரமும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரமும் ஒற்று இடையில் மிகுதல் , ஒற்று இடையில் மிகாதல் என்னும் இருவகையாக வரும் .
வேற்றுமையில் இடைத்தொடர் , ஆய்தத்தொடர் , ஒற்று இடையில் மிகாத நெடில்தொடர் , ஒற்று இடையில் மிகாத உயிர்த்தொடர் ஆகியவற்றின் முன் வரும் வல்லினம் இயல்பாகும் .
வேற்றுமையில் வன்தொடர் , மென்தொடர் என்னும் குற்றியலுகரங்கள் முன் வரும் வல்லினம் மிகும் .
வேற்றுமையில் நெடில்தொடர் , உயிர்த்தொடர் என்னும் குற்றியலுகரங்களில் ஈற்றில் வரும் ட , ற என்னும் மெய்கள் இரட்டிக்கும் .
மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் சிலவும் , பிற குற்றியலுகரச் சொற்கள் சிலவும் ஈற்றில் ஐகாரச் சாரியை பெற்று வருதல் உண்டு .
வடக்கு , தெற்கு , கிழக்கு , மேற்கு , குணக்கு , குடக்கு ஆகியன திசைகளைக் குறிக்கும் பெயர்கள் .
வடக்கு , குணக்கு , குடக்கு ஆகிய திசைப்பெயர்கள் புணர்ச்சியில் , ஈற்று உயிர்மெய் குவ்வும் , அதன் அயலே உள்ள கவ்வும் நீங்கி வருமொழிகளோடு புணரும் .
தெற்கு என்பதில் உள்ள றகரம் னகரமாகவும் , மேற்கு என்பதில் உள்ள றகரம் லகரமாகவும் திரியும் .
கிழக்கு என்பதில் உள்ள ழகரத்தில் உள்ள அகர உயிர் நீங்கி , முதல் எழுத்து நீண்டு வரும் .
இவற்றை எல்லாம் இப்பாடத்தில் விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்தோம் .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுள் சில வேற்றுமையில் எவ்வாறு திரியும் ?
விடை
2. கருப்புவில் - பிரித்து எழுதுக .
விடை
3. மருந்து + பை = வேற்றுமைப் புணர்ச்சியில் எவ்வாறு வரும் ? விடை