எனவே இவை எச்ச வினை எனப்படும் .
எச்ச வினை பெயரைக் கொண்டும் முடியும் ; வினையைக் கொண்டும் முடியும் .
பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் எனப்படும் .
வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும் .
ஓடிய குதிரை .
பாடிய பாட்டு .
பாய்கின்ற வெள்ளம் .
பெய்யும் மழை .
இவை எல்லாம் பெயரைக் கொண்டு முடிவதால் பெயரெச்சம் எனப்படும் .
சென்று பேசினான் .
வந்து போனான் .
கற்றுத் தேர்ந்தான் .
இவை எல்லாம் வினையைக் கொண்டு முடிவதால் வினையெச்சம் எனப்படும் .
• இடைச்சொல்
தனித்து இயங்காமல் பெயருடன் அல்லது வினையுடன் சேர்ந்து வரும் சொற்கள் இடைச்சொற்கள் எனப்படும் .
இடைச்சொற்கள் தனித்துப் பொருள் தருவதில்லை .
இடைச் சொற்கள் எட்டு வகைப்படும் .
1. வேற்றுமை உருபுகள்
முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை .
இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள ஆறு வேற்றுமைகளுக்கும் உருபுகள் உண்டு .
அவை ,
இரண்டாம் வேற்றுமை - ஐ
மூன்றாம் வேற்றுமை - ஆல்
நான்காம் வேற்றுமை - கு
ஐந்தாம் வேற்றுமை - இன்
ஆறாம் வேற்றுமை - அது
ஏழாம் வேற்றுமை - கண்
என அமைந்துள்ளன .
2. காலம் காட்டும் இடைநிலைகளும் விகுதிகளும் .
வினைச் சொற்களில் வரும் காலம் காட்டுகின்ற இடைநிலைகளும் விகுதிகளும் இடைச் சொற்கள் ஆகும் .
கிறு , கின்று , ஆநின்று முதலியவை காலம் காட்டும் இடைநிலைகள் .
அன் , ஆன் முதலியவை விகுதிகள் .
3. உவம உருபுகள்
உவமைத் தொடர்களில் வரும் உவம உருபுகள் .
தாமரை போல் மலர்ந்த முகம் .
இதில் போல் என்பது உவம உருபு
4. சாரியைகள்
சந்தி இலக்கணத்தில் வரும் சாரியைகள் .
ஆல் + அம் + காடு = ஆலங்காடு
என்பதில் அம் சாரியை ஆகும் .
5. தத்தம் பொருளை உணர்த்தி வருபவை
ஏ , ஓ , உம் முதலிய இடைச் சொற்கள் தத்தம் பொருளை உணர்த்தி வருபவை .
அவனே கொண்டான் - ஏ
அவனோ கொண்டான் - ஓ
அவனும் வந்தான் - உம்
6. இசைநிறை
ஏ , ஒடு முதலிய இடைச் சொற்கள் இசைநிறையாக வரும் .
ஏஏ இவள் ஒருத்தி பேடியோ - ஏ
இவளொடு - ஒடு 7. அசைநிலை
மன் , மற்று , கொல் ஆகிய இடைச் சொற்கள் அசைநிலையாக வருபவை .
ஒப்பர்மன் - மன்
மற்றுஎன் - மற்று
ஆய்மயில்கொல் - கொல்
8. குறிப்பால் பொருள் உணர்த்துபவை
பொள்ளென , கதும்என , சரேல்என இவற்றில் வரும் என என்பது குறிப்புப் பொருள் உணர்த்தும் இடைச்சொல் ஆகும் .
மேலே காட்டியவாறு இடைச்சொல் எட்டு வகைகளில் அமைந்துள்ளது .
• உரிச்சொல்
உரிச்சொல் இலக்கணம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது .
1. பல வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தி வரும் .
( பண்பு - குணம் )
2. பெயர்ச் சொல்லையும் வினைச் சொல்லையும் சார்ந்து வரும் .
3. ஒரு சொல் ஒரு பொருளை உணர்த்துவதாகவும் , ஒருசொல் பல பொருளை உணர்த்துவதாகவும் இருக்கும் .
4. செய்யுளுக்கு உரியதாய் வரும் .
மேலே காட்டியபடி உரிச்சொல் ,
1. ஒரு குணம் தழுவிய உரிச்சொல்
2. பல குணம் தழுவிய உரிச்சொல்
என இரண்டு வகைப்படும் .
1. ஒரு குணம் தழுவிய உரிச்சொல்
ஒரு குணம் தழுவிய உரிச்சொல் என்பது , ஒரு பொருள்தரும் பல சொற்களைக் குறிக்கும் .
எடுத்துக்காட்டு
சால , உறு , தவ , நனி , கூர் , கழி ஆகிய சொற்கள் மிகுதி என்ற ஒரே பொருள் தரும் .
எனவே இவற்றை ஒரு குணம் தழுவிய உரிச்சொல் எனலாம் .
2. பல குணம் தழுவிய உரிச்சொல்
பல பொருள்களைத் தரும் ஒரு சொல்லைப் பல குணம் தழுவிய உரிச்சொல் என்று கூறுவர் .
எடுத்துக்காட்டு
கடி என்ற சொல் காப்பு , கூர்மை , மிகுதி , விரைவு , அச்சம் , சிறப்பு முதலிய பல பொருள்களைத் தரும் .
எனவே இதைப் பல குணம் தழுவிய உரிச்சொல் எனலாம் .
தொகுப்புரை
காலந்தோறும் இலக்கியத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கேற்ப இலக்கணத்திலும் மாற்றங்கள் தேவைப்பட்டுள்ளன .
எனவே பல புதிய இலக்கண நூல்கள் தோன்றியுள்ளன .
அந்த இலக்கண நூல்கள் பற்றிய அறிமுகம் இப்பாடத்தில் தரப்பட்டுள்ளது .
மேலும் தொல்காப்பியம் , நன்னூல் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன .
தமிழ் இலக்கணம் ,
1. எழுத்து இலக்கணம்
2. சொல் இலக்கணம்
3. பொருள் இலக்கணம்
4. அணி இலக்கணம்
5. யாப்பு இலக்கணம்
என்று ஐந்து பிரிவாக உள்ளது .
எழுத்து இலக்கண அறிமுகத்தில் எழுத்துகளின் வடிவங்கள் , வகைகள் முதலியவையும் இடம் பெற்றுள்ளன .
பத இலக்கணம் , சந்தி இலக்கணம் முதலியவையும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன .
சொல் இலக்கண அறிமுகத்தில் திணை , பால் , எண் , இடம் முதலியவையும் இலக்கிய வகைச் சொற்களும் இலக்கண வகைச் சொற்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. செய்யுளில் வரும் சொற்கள் எத்தனை வகைப்படும் ?
விடை
2. திணை எத்தனை வகைப்படும் ?
விடை
3. பெயர்ச் சொல்லின் வகைகள் யாவை ? விடை
4. எச்சவினை என்றால் என்ன ?
விடை
5. உரிச்சொற்கள் எத்தனை வகைப்படும் ?
தமிழ் இலக்கண அறிமுகம் : பொருள் , யாப்பு , அணி
பாட முன்னுரை
தமிழ் இலக்கிய வரலாற்றின் தொடக்க கால இலக்கியங்களைச் சங்க இலக்கியம் என்று அழைக்கிறோம் .
சங்க இலக்கியப் பாடல்கள் காதல் , போர் முதலியவற்றைத் தெரிவிக்கின்றன .
இந்த இலக்கியத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பாடல்களின் பாடுபொருள் பற்றிக் கூறுவதே பொருள் இலக்கணம் ஆகும் .
பொருள் இலக்கணம் என்பது இலக்கியத்தின் பாடுபொருள் பற்றிக் கூறும் இலக்கணம் ஆகும் .
பாடல்கள் எழுதப்படும் யாப்புப் பற்றிக் கூறுவது யாப்பு இலக்கணம் ஆகும் .
செய்யுள்களில் அமையும் அழகுகளைப் பற்றிக் கூறுவது அணி இலக்கணம் ஆகும் .
உலா , தூது முதலிய இலக்கிய வடிவங்களைக் கூறுவது பாட்டியல் இலக்கணம் ஆகும் .
இவற்றைப் பற்றி இந்தப் பாடத்தில் சுருக்கமாகக் காணலாம் .
பொருள் இலக்கண அறிமுகம்
தமிழில் உள்ள மிகவும் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பொருள் இலக்கணம் இடம்பெற்றுள்ளது .
தொல்காப்பியம் பொருள் இலக்கணத்தை மிகவும் விரிவாகக் கூறுகிறது .
தொல்காப்பியத்தில் உள்ள பொருள் அதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில் , ஐந்து இயல்கள் பொருள் இலக்கணத்தைக் கூறுகின்றன .
தொல்காப்பியத்தைத் தொடர்ந்து , இறையனார் அகப்பொருள் , தமிழ்நெறி விளக்கம் , புறப்பொருள் வெண்பாமாலை , களவியல் காரிகை , நம்பி அகப்பொருள் விளக்கம் , மாறன் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்கள் பொருள் இலக்கணம் கூறும் நூல்கள் ஆகும் .
மேலும் ஐந்திலக்கணத்தையும் தெரிவிக்கும் நூல்களிலும் பொருள் இலக்கணம் இடம்பெற்றுள்ளது .
பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது .
மற்ற மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை .
பாடல்களில் வரும் பொருள் எப்படி எல்லாம் இருக்கும் என்று எடுத்துக் கூறும் பொருள் இலக்கணம் தமிழுக்குத் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும் .
பொருள் இலக்கணம் அகப்பொருள் , புறப்பொருள் என்று இருவகைப்படும் .
அகப்பொருள் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல் உணர்ச்சியைப் பற்றிக் கூறுவதாகும் .
புறப்பொருள் என்பது வீரம் , போர் , வெற்றி , கொடை , நிலையாமை முதலிய புறப்பொருள்களைக் கூறுவதாகும் .
2.1.1 அகப்பொருள் இலக்கணம்
ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் உணர்வை மையமாகக் கொண்டு அகப்பொருள் இலக்கணம் அமைந்துள்ளது .
இதில் ஆணைத் தலைவன் என்றும் பெண்ணைத் தலைவி என்றும் கூறுவர் .
தலைவியின் தோழியும் அகப்பொருள் பாடல்களில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு பாத்திரம் ஆவாள் .
காதல் பற்றிப் பாடும்போது தலைவன் தலைவி என்று பொதுவாகப் பாடுவார்களே தவிர ஒருவருடைய இயற்பெயரைச் சுட்டிப் பாடுவதில்லை .
காதல் உணர்ச்சி எல்லோருக்கும் பொது என்பதால் தனி ஒருவருடைய பெயரைச் சுட்டிப்பாடுவதில்லை .
அகப்பொருள் பாடல்கள் நாடகப் பாங்கிலான தன்மை கொண்டிருக்கும் .
எல்லாப் பாடல்களும் தலைவன் , தலைவி , தோழி முதலியவர்களில் யாராவது ஒருவர் கூறுவதாக அமைந்திருக்கும் .
ஒரே பாடலில் இருவர் மூவர் உரையாடுவது போல இருக்காது .
ஒவ்வொரு பாடலுக்கும் திணை , துறை கூறப்பட்டிருக்கும் .
திணை , நிலம் சார்ந்த ஒழுக்கத்தைக் குறிக்கும் .
துறை என்பது பாடப்பெற்ற சூழலைக் குறிக்கும் .
அகப்பொருள் இலக்கணம் திணை அடிப்படையில் அமைந்ததாகும் .
அகப்பொருள் திணைகள் ஐந்து .
அவை ,
1. குறிஞ்சித் திணை
2. முல்லைத் திணை
3. மருதத் திணை
4. நெய்தல் திணை
5. பாலைத் திணை
இந்த ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பொருள் இலக்கணம் மூன்று வகைப்படும் .
அவை ,
1. முதற்பொருள்
2. கருப்பொருள் 3. உரிப்பொருள்
ஆகியன ஆகும் .
• முதற்பொருள்
நிலம் , பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள் எனப்படும் .
உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவதற்கும் , இயங்குவதற்கும் ஆதாரமாக உள்ளதால் இவற்றை முதற்பொருள் என்பர் .
நிலம்
ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலம் குறிப்பிடப்பட்டுள்ளது .
ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள் பின்வருமாறு :
குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை - பாலை நிலமும் பாலை நிலம் சார்ந்த இடமும்
தமிழ்நாட்டில் உள்ள நிலப்பகுதி இவ்வாறு ஐந்து திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது .
பொழுது
பொழுது என்பது காலம் என்று பொருள்படும் .
பொழுது சிறு பொழுது , பெரும்பொழுது என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது .
சிறு பொழுது
சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும் .
சிறுபொழுது பின்வருமாறு அமையும் .
வைகறை - விடியற்காலம்
காலை - காலை நேரம்
நண்பகல் - உச்சி வெயில் நேரம்
எற்பாடு - சூரியன் மறையும் நேரம்
மாலை - முன்னிரவு நேரம்
யாமம் - நள்ளிரவு நேரம்
சிறுபொழுது ஆறும் ஒரு நாளின் ஆறு கூறுகளாக இருப்பதை அறியலாம் .
பெரும்பொழுது
பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் காலப்பிரிவு ஆகும் .
ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பிரிவுகளாகப் பிரிப்பர் .
இது நீண்ட காலப் பிரிவாக இருப்பதால் பெரும்பொழுது எனப்படுகிறது .
ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களும் பின்வருமாறு ஆறு பெரும் பொழுதுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன .
சித்திரை , வைகாசி - இளவேனில் காலம்
ஆனி , ஆடி - முதுவேனில் காலம்
ஆவணி , புரட்டாசி - கார் காலம்
ஐப்பசி , கார்த்திகை - குளிர்காலம்
மார்கழி , தை - முன்பனிக் காலம்
மாசி , பங்குனி - பின்பனிக் காலம்
சிறுபொழுது , பெரும்பொழுது ஆகியவற்றை இவை இவை இந்தத் திணைகளுக்கு உரியவை என்று பிரித்து வைத்துள்ளனர் .
திணை பெரும்பொழுது சிறுபொழுது
குறிஞ்சி குளிர்காலம் , முன்பனிக்காலம் யாமம்
முல்லை கார்காலம் மாலை
மருதம் ஆறு காலமும் வைகறை
நெய்தல் ஆறு காலமும் எற்பாடு
பாலை முதுவேனில் , பின்பனி நண்பகல்
ஒவ்வொரு நிலத்திற்கும் மேலே குறிப்பிட்ட காலங்கள் சிறந்தனவாக இருக்கும் என்பதால் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது .
• கருப்பொருள்
நிலமும் பொழுதும் ஆகிய இரண்டு முதற்பொருள்கள் அத்திணையில் உள்ள சூழலைத் தீர்மானிக்கின்றன .
இவற்றின் காரணமாக ஒவ்வொரு திணையிலும் சூழல் வேறுபட்டுள்ளது .
ஒவ்வொரு திணையிலும் வாழும் மக்கள் , அவர்களின் தொழில் , உணவு , பொழுதுபோக்கு , அந்த நிலத்தில் உள்ள மரங்கள் , பறவைகள் , விலங்குகள் , நீர்நிலை முதலியவற்றைக் கருப்பொருள் என்கின்றனர் . கருப்பொருள் , பாடல்களில் பின்னணியாகச் செயல்படுகின்றது .