இரண்டு + பத்து = இருபது
மூன்று + பத்து = முப்பது
நான்கு + பத்து = நாற்பது
ஐந்து + பத்து = ஐம்பது
ஆறு + பத்து = அறுபது
ஏழு + பத்து = எழுபது
எட்டு + பத்து = எண்பது
6.3.3 பத்து , ஒன்பது முன்னர்ப் பிற எண்ணுப்பெயர்கள் வருதல்
வருமொழியில் ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களும் , ஆயிரம் , கோடி என்னும் எண்ணுப்பெயர்களும் , பிறபெயர்களும் வந்து புணரும்போது , நிலைமொழியாக நின்ற பத்து என்னும் எண்ணுப்பெயர் , தன் இறுதி உயிர்மெய்யாகிய ‘ து ’ என்பதைப் போக்கி , இன் , இற்று என்னும் சாரியைகளுள் பொருந்தும் ஒன்றை ஏற்று நிற்கும் .
ஒன்பது என்னும் நிலைமொழியும் , வருமொழியில் எண்ணுப்பெயர்கள் முதலானவை வந்து புணரும்போது , இவ்விரண்டு சாரியைகளுள் பொருந்தும் ஒன்றை ஏற்று நிற்கும் .
சான்று :
பத்து + ஒன்று > பத் + இன் + ஒன்று = பதினொன்று
பத்து + மூன்று > பத் + இன் + மூன்று = பதின்மூன்று
பத்து + பத்து > பத் + இற்று + பத்து = பதிற்றுப்பத்து
பத்து + மடங்கு > பத் + இன் + மடங்கு = பதின்மடங்கு
ஒன்பது + ஆயிரம் > ஒன்பது + இன் + ஆயிரம் = ஒன்பதினாயிரம்
6.3.4 பத்து முன்னர் இரண்டு வருதல்
வருமொழியில் இரண்டு என்னும் எண்ணுப்பெயர் வந்து புணரும்போது , நிலைமொழியாக நின்ற பத்து என்னும் எண்ணுப்பெயரின் இறுதியில் உள்ள ‘ து ’ என்னும் உயிர்மெய் கெட , நடுவில் நின்ற தகரமெய் னகரமெய்யாகத் திரியும் .
சான்று :
பத்து + இரண்டு > பத் + இரண்டு > பன் + இரண்டு = பன்னிரண்டு
6.3.5 எண்ணுப்பெயர்கள் தம்முன் தாம் வருதல்
ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களில் , ஒன்பது என்ற எண்ணுப்பெயர் மட்டும் தவிர்ந்த ஏனைய ஒன்பது எண்ணுப்பெயர்களும் தமக்கு முன்னர்த் தாமே வந்து இரட்டிக்கும்போது பின்வருமாறு புணரும் .
1. நிலைமொழியில் முதல் எழுத்தைத் தவிர ஏனைய எழுத்துகள் கெடும் .
2. அவ்வாறு கெட்டபின் வருமொழி முதலில் உயிர் வந்தால் வகர மெய் மிகும் ; வருமொழி முதலில் மெய்வந்தால் வந்த மெய் மிகும் .
சான்று :
ஒன்று + ஒன்று > ஒ + ஒன்று > ஒ + வ் + ஒன்று = ஒவ்வொன்று
எட்டு + எட்டு > எ + எட்டு > எ + வ் + எட்டு = எவ்வெட்டு
இச்சான்றுகளில் நிலைமொழியில் வரும் ஒன்று , எட்டு என்னும் எண்ணுப்பெயர்களில் முதல் எழுத்துத் தவிர ஏனைய எழுத்துகள் கெட்டு , வருமொழி முதலில் உயிர் வந்ததால் வகர மெய் மிக்கது .
மெய் வந்ததால் , வந்த அந்த மெய்யே மிக்கது .
மூன்று + மூன்று > மூ + மூன்று > மூ + ம் + மூன்று = மும்மூன்று
பத்து + பத்து > ப + பத்து > ப + ப் + பத்து = பப்பத்து
இச்சான்றுகளில் நிலைமொழியில் வரும் மூன்று , பத்து என்னும் எண்ணுப்பெயர்களில் முதல் எழுத்துத் தவிர ஏனைய எழுத்துகள் கெட்டு , வருமொழி முதலில் மெய்வந்ததால் , வந்த அந்த மெய்யே மிக்கது .
தொகுப்புரை
இதுகாறும் எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி பற்றி நன்னூலார் கூறியவற்றை விரிவாகப் பார்த்தோம் .
அவற்றை இங்குச் சுருக்கமாகத் தொகுத்துக் காண்போம் .
பத்து வரையிலான எண்ணுப்பெயர்களும் , நூறு , ஆயிரம் என்னும் எண்ணுப்பெயர்களும் , பிற எல்லா எண்ணுப்பெயர்களும் தோன்றுவதற்கு அடிப்படையாக உள்ளன .
அளவைப் பெயர்களும் , பிற பெயர்களும் வருமொழியில் வந்தால் ஒன்று , இரண்டு என்னும் எண்ணுப்பெயர்கள் முதல் குறில் நீளும் .
மூன்று , ஆறு , ஏழு என்பன முதல் நெடில் குறுகும் .
ஒன்று , இரண்டு , மூன்று , நான்கு , ஐந்து , எட்டு என்பன ஈற்று உயிர்மெய் கெடும் .
ஏழு என்பதில் ஈற்றில் உள்ள உகர உயிர் கெடும் .
இது எண்ணுப்பெயர்ப் புணர்ச்சிக்குப் பொதுவிதியாகும் .
ஒன்று , இரண்டு என்பன வருமொழி முதலில் உயிர் வரும்போது முறையே ஓர் , ஈர் எனவும் , வருமொழி முதலில் மெய்வரும்போது முறையே ஒரு , இரு எனவும் மாறும் .
மூன்று என்பதில் உள்ள னகரமெய் உயிர்வந்தால் கெடும் ; மெய்வந்தால் வருகின்ற மெய்யாகத் திரியும் .
நான்கு என்பதில் உள்ள னகரமெய் உயிரும் இடையினமும் வரும்போது லகர மெய்யாகவும் , வல்லினம் வரும்போது றகர மெய்யாகவும் திரியும் .
ஐந்து என்பதில் உள்ள நகரமெய் மெல்லினம் வரும்போது வருகின்ற மெய்யாகவும் , வல்லினம் வரும்போது அதற்கு இனமெய்யாகவும் திரியும் ; பிறவரின் கெடும் .
எட்டு என்பதில் உள்ள டகரமெய் ணகர மெய்யாகத் திரியும் .
ஒன்பதின் முன்னர்ப் பத்தும் நூறும் வந்து புணர்வதால் முறையே தொண்ணூறு , தொள்ளாயிரம் என்னும் எண்ணுப்பெயர்கள் அமைகின்றன .
எட்டு வரையிலான எண்ணுப்பெயர்களோடு வருமொழியில் பத்து என்பது வந்து புணரும்போது , அதன் இடையில் உள்ள தகரமெய் கெடும் .
பத்து , ஒன்பது என்னும் எண்ணுப்பெயர்கள் மற்ற எண்ணுப்பெயர்களோடும் பிறபெயர்களோடும் புணரும்போது இன் , இற்று ஆகிய சாரியைகளில் ஏதேனும் ஒன்றை ஏற்கும் . அப்போது பத்து என்பதன் இடையில் உள்ள தகர மெய் கெடும் .
இவையாவும் எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி பற்றிய சிறப்பு விதிகளாகும் .
இவற்றையெல்லாம் இப்பாடத்தின் வாயிலாக விரிவாக அறிந்து கொண்டோம் .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. புணர்ச்சியில் இரண்டு என்ற எண்ணுப்பெயரின் முன் வரும் பத்து என்ன மாற்றம் பெறும் ?
விடை
2. எட்டு + பத்து - சேர்த்து எழுதுக .
விடை
3. பதின்மடங்கு - பிரித்து எழுதுக .
விடை
4. வருமொழியில் உள்ள எண்ணுப்பெயர் முதலானவற்றோடு புணரும்போது ஒன்பது ஏற்று நிற்கும் சாரியைகள் யாவை ?
விடை
5. பத்து + இரண்டு - சேர்த்து எழுதுக .
விடை
6. ஒன்று என்பது தன்னோடு தானே இரட்டிக்கும்போது எவ்வாறு புணரும் ?
புணர்ச்சி - 2
மெய் ஈற்றுப் புணர்ச்சி விதிகள் - I
பாட முன்னுரை
நன்னூலார் எழுத்திலக்கணத்தைப் பன்னிரு வகையாகப் பிரித்துக் கொண்டார் .
அவற்றுள் இறுதி வகையாகிய புணர்ச்சியை உயிர் ஈற்றுப் புணரியல் , மெய் ஈற்றுப் புணரியல் , உருபு புணரியல் என்னும் மூன்று இயல்களாகப் பிரித்து விளக்குகிறார் .
உயிர் ஈற்றுப் புணரியலில் அவர் கூறியுள்ள புணர்ச்சி விதிகளை இதற்கு முந்தைய பாடங்களில் பார்த்தோம் .
இனி , மெய் ஈற்றுப் புணரியலில் அவர் கூறும் புணர்ச்சி விதிகளைப் பார்ப்போம் .
மொழிக்கு இறுதியில் வல்லின மெய்கள் வாரா .
மெல்லின மெய்களுள் ஙகரம் நீங்கிய ஏனைய ஐந்தும் , இடையின மெய்கள் ஆறுமாக மொத்தம் பதினொரு மெய்கள் மொழிக்கு இறுதியில் வரும் .
இப்பதினொரு மெய்களும் நிலைமொழியின் இறுதியில் நின்று , வருமொழி முதலில் வரும் உயிர்களோடு புணரும் முறையைப் பொது விதிகள் கொண்டு நன்னூலார் விளக்குகிறார் ; பின்னர் , வருமொழி முதலில் வரும் மெய்களோடு புணரும் முறையைச் சிறப்பு விதிகள் கொண்டு மெய் ஈற்றுப் புணரியலில் விளக்கிக் காட்டுகிறார் .
அவற்றை இப்பாடத்திலும் , இதனைத் தொடர்ந்து வரும் இரண்டு பாடங்களிலும் காண்போம் .
இப்பாடத்தில் மெய்யின் முன்னர் உயிர்வந்து புணர்வது பற்றி நன்னூலார் குறிப்பிடும் பொதுவிதிகள் முதலில் விளக்கிக் காட்டப்படுகின்றன .
அதனை அடுத்து ணகர , னகர ஈறுகளுக்கு அவர் கூறும் சிறப்பு விதிகள் விளக்கிக் காட்டப்படுகின்றன .
மெய் ஈற்றின் முன் உயிர்வந்து புணர்தல்
நிலைமொழியின் இறுதியில் நிற்கும் எல்லா மெய்களின் முன்னும் உயிர்வந்து புணர்தல் பற்றி நன்னூலார் இரண்டு பொதுவிதிகளைக் கூறுகிறார் .
அவை மெய்யின் மேல் உயிர் வந்து ஒன்றுதல் , தனிக்குறில் முன் நின்ற மெய் , உயிர்வரின் இரட்டுதல் என்பனவாம் .
1.1.1 மெய்யின் மேல் உயிர் வந்து ஒன்றுதல்
நிலைமொழியின் இறுதியில் நிற்கும் மெய்யின்மேல் , வருமொழியின் முதலில் உள்ள உயிர் வந்து கூடி உயிர்மெய்யாக மாறும் .
இவ்வாறு மாறுவது விகாரப் புணர்ச்சி அன்று ; இயல்பு புணர்ச்சி ஆகும் .
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே ( நன்னூல் , 204 )
( உடல் – மெய் எழுத்து ; உயிர் – உயிர் எழுத்து ; ஒன்றுவது – கூடுவது )
சான்று :
உயிர் + எழுத்து = உயிரெழுத்து
வேல் + எறிந்தான் = வேலெறிந்தான்
( உயிரெழுத்து – உயிராகிய எழுத்து .
இருபெயரொட்டுப் பண்புத்தொகை .
அல்வழிப் புணர்ச்சி ; வேலெறிந்தான் – வேலை எறிந்தான் .
இரண்டாம் வேற்றுமைத் தொகை .
வேற்றுமைப் புணர்ச்சி )
இச்சான்றுகளில் நிலைமொழியின் இறுதியில் நிற்கும் ர் , ல் என்னும் மெய்களோடு , வருமொழியின் முதலில் உள்ள எ என்னும் உயிர் வந்து கூடி , முறையே ரெ , லெ என்று உயிர்மெய்களாக மாறியிருப்பதைக் காணலாம் .
இம்மாற்றம் இயல்பாக நிகழ்ந்திருப்பதால் நன்னூலார் நூற்பாவில் ‘ இயல்பே ’ என்று கூறினார் .
1.1.2 தனிக்குறில் முன் நின்ற மெய் உயிர்வரின் இரட்டுதல்
நிலைமொழி தனிக்குறிலை அடுத்துவரும் ஒரு மெய்யைக் கொண்டதாக இருந்து , வருமொழி முதலில் உயிர்வந்தால் , நிலைமொழி இறுதியில் நிற்கும் அம்மெய்யானது இரட்டிக்கும் .
தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும் ( நன்னூல் , 205 )
( ஒற்று – மெய் ) சான்று :
மெய் + எழுத்து = மெய்யெழுத்து
பல் + உடைந்தது = பல்லுடைந்தது
முள் + இலை = முள்ளிலை
பொன் + ஆரம் = பொன்னாரம்
( மெய்யெழுத்து – மெய் ஆகிய எழுத்து .
இருபெயரொட்டுப் பண்புத்தொகை ; பல்லுடைந்தது – எழுவாய்த் தொடர் .
இவை இரண்டும் அல்வழி .
முள்ளிலை – முள்ளை உடைய இலை. இரண்டாம் வேற்றுமைத் தொகை ; பொன்னாரம் – பொன்னாலாகிய ஆரம் .
மூன்றாம் வேற்றுமைத் தொகை .
இவை இரண்டும் வேற்றுமை )
இச்சான்றுகளில் தனிக்குறிலை அடுத்துவந்த ய் , ல் , ள் , ன் என்னும் மெய்கள் வருமொழி முதலில் உயிர் வரும்போது அவை முறையே ய்ய் , ல்ல் , ள்ள் , ன்ன் என இரட்டித்தமையைக் காணலாம் .
கண் , மண் , கல் , பல் , முள் , எள் , தின் , பொன் போன்ற சொற்கள் தனிக்குறிலை அடுத்த மெய்யை உடையனவாய் வழங்குகின்றன .
ஆனால் பேச்சுத் தமிழில் இச்சொற்களை எவரும் மெய் ஈறாக ஒலிப்பதில்லை .
மெய் ஈறாக ஒலிப்பது அருகிக் காணப்படுகிறது .
இச்சொற்களின் இறுதியில் உள்ள மெய்யோடு உகரம் சேர்த்துப் பேச்சுத்தமிழில் எல்லோருமே கண்ணு , மண்ணு , கல்லு , பல்லு , முள்ளு , எள்ளு , தின்னு , பொன்னு என ஒலிக்கின்றனர் .
உகர உயிர் சேரும்போது இச்சொற்களில் தனிக்குறிலை அடுத்து வரும் மெய்கள் இரட்டிப்பதைக் காணலாம் .
இவ்வாறு உகரம் சேர்த்து ஒலிப்பதில் எளிமை காணப்படுகிறது .
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. மொழிக்கு இறுதியில் வரும் மெய்யெழுத்துகள் எத்தனை ?
விடை
2. மெல்லின மெய்களில் மொழிக்கு இறுதியில் வாராதது எது ?
விடை
3. மெய்யின் முன் உயிர்வந்து புணரும்போது எவ்வாறு மாறும் ?
விடை
4. தனிக்குறில் முன்வரும் மெய் உயிர்வரின் எவ்வாறு ஆகும் ?
விடை
5. உயிரெழுத்து – பிரித்து எழுதுக .
விடை
6. வேல் + எறிந்தான் – சேர்த்து எழுதுக .
விடை
7. முள்ளிலை – பிரித்து எழுதுக .
விடை
8. பொன் + ஆரம் = சேர்த்து எழுதுக .
விடை
9. கண் , கல் , முள் , பல் – இச்சொற்கள் பேச்சுத்தமிழில் எவ்வாறு ஒலிக்கப்படுகின்றன ?
ணகர , னகர ஈற்றுப் புணர்ச்சி விதிகள்
இதுவரை மெய் ஈறுகளுக்கு உரிய பொதுவான புணர்ச்சி விதிகள் பற்றி நன்னூலார் கூறியனவற்றைப் பார்த்தோம் .
இனி நன்னூலார் மெய் ஈறுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துக்கொண்டு அவை வருமொழி முதலில் வரும் மெய்களோடு புணரும்போது அடைகின்ற மாற்றங்களைக் குறிப்பிட்டு விளக்குகிறார் .
மொழிக்கு இறுதியில் வரும் மெய்கள் ‘ ஞ் , ண் , ந் , ம் , ன் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள் ’ என்னும் பதினொன்றாகும் .
இவற்றுள் ஞ் என்பது உரிஞ் ( தேய்த்தல் ) என்னும் ஒரு சொல்லிலும் , ந் என்பது பொருந் ( பொருநுதல் = ஒத்திருத்தல் ; போல இருத்தல் ) வெரிந் ( முதுகு ) என்னும் இரு சொற்களிலும் , வ் என்பது அவ் , இவ் , உவ் , தெவ் ( பகை ) என்னும் நான்கு சொற்களிலும் மட்டுமே ஈறாகும் .
ஆனால் இச்சொற்கள் காலப்போக்கில் வழக்கிழந்து மறைந்து போயின .
ஏனைய ண் , ம் , ன் , ய் , ர் , ல் , ழ் , ள் என்னும் எட்டு மெய்களே காலந்தோறும் பெருவாரியான சொற்களில் இறுதியாக இருந்து வருபவை ஆகும் .
எனவே இந்த எட்டு மெய் ஈறுகள் பற்றி நன்னூலார் கூறும் புணர்ச்சி விதிகள் மட்டுமே இங்கே விளக்கிக் காட்டப்படுகின்றன .
முதற்கண் , ணகர , னகர மெய் ஈறுகள் , வருமொழி முதலில் வரும் வல்லினம் , மெல்லினம் , இடையினம் என்னும் மூவின மெய்களோடு புணரும்போது அடைகின்ற மாற்றங்கள் பற்றி நன்னூலார் குறிப்பிடும் புணர்ச்சி விதிகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சான்றுடன் காண்போம் .
1.2.1 ணகர , னகர ஈறுகள் இயல்பாதலும் திரிதலும்
1. நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகர , னகரங்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் முறையே டகரமாகவும் , றகரமாகவும் திரியும் .
சான்று :
மண் + குடம் = மட்குடம்
சிறுகண் + களிறு = சிறுகட்களிறு பொன் + காசு = பொற்காசு
பொன் + குடம் = பொற்குடம்
( மட்குடம் – மண்ணால் ஆகிய குடம் .
மூன்றாம் வேற்றுமைத் தொகை ; சிறுகட்களிறு – சிறிய கண்ணை உடைய களிறு .
இரண்டாம் வேற்றுமைத் தொகை ; பொற்காசு – பொன்னால் ஆகிய காசு ; பொற்குடம் – பொன்னால் ஆகிய குடம் .
இவை மூன்றாம் வேற்றுமைத் தொகை)
இச்சான்றுகளில் வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர ணகரம் டகரமாகவும் , னகரம் றகரமாகவும் திரிந்தன .
2. வேற்றுமைப் புணர்ச்சியில் ணகர , னகரங்கள் மெல்லினமும் , இடையினமும் வந்தால் இயல்பாகும் .
சான்று :
மண் + மேடை = மண்மேடை
பொன் + முடி = பொன்முடி
கண் + வலி = கண்வலி
பொன் + வளையல் = பொன்வளையல்
( மண்மேடை – மண்ணால் ஆகிய மேடை ; பொன்முடி – பொன்னால் ஆகிய முடி ; முடி – கிரீடம் ; இவை இரண்டும் மூன்றாம் வேற்றுமைத் தொகை .
கண்வலி – கண்ணில் வலி. ஏழாம் வேற்றுமைத் தொகை ; பொன்வளையல் – பொன்னால் ஆகிய வளையல் .
மூன்றாம் வேற்றுமைத் தொகை)
இச்சான்றுகளில் வேற்றுமைப் புணர்ச்சியில் ணகர னகரங்கள் மெல்லினமும் , இடையினமும் வர இயல்பாயின .
3. அல்வழிப் புணர்ச்சியில் ணகர , னகரங்கள் வல்லினம் , மெல்லினம் , இடையினம் என்னும் மூவினமெய்கள் வந்தாலும் இயல்பாகும் .
சான்று :
மண் + சரிந்தது = மண் சரிந்தது
பொன் + பெரிது = பொன் பெரிது
கண் + மங்கியது = கண் மங்கியது
பொன் + மலிந்தது = பொன் மலிந்தது
கண் + வலிக்கிறது = கண் வலிக்கிறது
பொன் + வலிது = பொன் வலிது
( இவையாவும் எழுவாய்த் தொடர் )
இச்சான்றுகளில் அல்வழிப்புணர்ச்சியில் ணகர , னகரங்கள் மூவின மெய்களும் வர இயல்பாயின .
மேலே சொல்லப்பட்ட மூன்று விதிகளையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் தொகுத்துக் கூறுகிறார் .
ணன வல்லினம் வரட் டறவும் , பிறவரின்
இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு ; அல்வழிக்கு
அனைத்துமெய் வரினும் இயல்பு ஆகும்மே ( நன்னூல் , 209 )
1.2.2 சில ணகர ஈற்றுப் பெயர்களுக்குச் சிறப்பு விதி
1. சாதி பற்றி வரும் பாண் , உமண் என்ற பெயர்களுக்கும் , கூட்டம் பற்றி வரும் அமண் என்ற பெயர்க்கும் , பரண் , கவண் என்ற பெயர்களுக்கும் இறுதியில் உள்ள ணகர மெய் , வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் இயல்பாகும் .
( பாண் – இசை பாடுவதில் வல்ல சாதியார் ; உமண் – உப்பு விற்கும் சாதியார் ; அமண் – சமண சமயத்தைச் சார்ந்த கூட்டத்தார் .
இவர்கள் ஆடையில்லாமல் திரிவதால் அமண் எனப்பட்டனர் ; பரண் – தினைப்புனம் காப்பதற்கு அதன் நடுவில் போட்டிருக்கும் மேடை ; கவண் – கல் எறியும் கருவி)
சான்று :
பாண் + சேரி = பாண்சேரி
உமண் + குடி = உமண்குடி
அமண் + சேரி = அமண்சேரி
பரண் + கால் = பரண்கால்
கவண் + கல் = கவண்கல்
( கவண்கல் – கவணில் வைத்து எறியப்படும் கல். ஏழாம் வேற்றுமைத் தொகை .
மற்றவை ஆறாம் வேற்றுமைத் தொகை )
2. உணவுப்பொருளாகிய எள் என்பதைக் குறிக்கும் எண் என்ற பெயர்க்கும் , ஒன்பது அங்குல அளவுள்ள சாண் என்ற நீட்டல் அளவைப் பெயர்க்கும் இறுதியில் உள்ள ணகர மெய் , அல்வழிப் புணர்ச்சியில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் டகரமாகத் திரியும் .
சான்று :
எண் + சிறிது = எட்சிறிது
சாண் + கோல் = சாட்கோல்
3. சாதிபற்றி வரும் பெயர்க்கும் , கூட்டம் பற்றி வரும் பெயர்க்கும் இறுதியில் வரும் ணகர மெய் வேற்றுமையில் அகரச் சாரியை பெற்று வருவதும் உண்டு .
( இவ்விதி நூற்பாவில் பிற என்று கூறப்படுவதால் பெறப்படுகிறது)
சான்று : பாண் + குடி = பாணக்குடி