37

எல்லாம் , எல்லாரும் என்னும் இவை பொதுச்சொற்களாகி விட்ட நிலையில் , இவை வேற்றுமை உருபு ஏற்பதிலும் மாற்றங்கள் ஏற்பட்டன .

எல்லாரும் என்ற சொல் வேற்றுமை உருபு ஏற்று எல்லாரையும் என்று வழங்கியது .

வேற்றுமை உருபை அடுத்தே உம் சேர்க்கப்படுகிறது .

முன்வரும் சொற்களால் இடவேறுபாடு அறியப்படும் .

முன்வரும் சொற்களும் வேற்றுமை உருபு ஏற்கத் தம் நெடுமுதல் குறுகிய வடிவங்களாக உள்ளன .

சான்று :

எங்கள் எல்லாரையும் ஆசிரியர் வரச்சொன்னார்

நம் எல்லாரையும் ஆசிரியர் வரச்சொன்னார்

உங்கள் எல்லாரையும் ஆசிரியர் வரச்சொன்னார்

அவர்கள் எல்லாரையும் ஆசிரியர் வரச்சொன்னார்

எல்லாம் என்ற சொல் இதுபோல உருபு ஏற்பது இல்லை .

முன்னர் வரும் சொற்களால் அஃறிணை , உயர்திணைத் தன்மை , முன்னிலை , படர்க்கை என்ற நான்கு வேறுபாடும் அறியப்படும் .

அச்சொற்களோடு வேற்றுமை உருபு சேர்ந்துவரும் .

சான்று :

மாடுகளை எல்லாம் ஓட்டி வந்தனர்

எங்களை எல்லாம் ஆசிரியர் வரச்சொன்னார்

நம்மை எல்லாம் ஆசிரியர் வரச்சொன்னார்

உங்களை எல்லாம் ஆசிரியர் வரச்சொன்னார்

அவர்களை எல்லாம் ஆசிரியர் வரச்சொன்னார்

மாணவர்களை எல்லாம் ஆசிரியர் வரச்சொன்னார்

5.1.3 தான் , தாம் , நாம் முதலான மூவிடப் பெயர்கள்

யான் , யாம் , நாம் என்பன தன்மை இடப்பெயர்கள் .

நீ , நீர் என்பன முன்னிலை இடப்பெயர்கள் .

தான் , தாம் என்பன படர்க்கை இடப்பெயர்கள் .

இவை வேற்றுமை உருபுகளோடு புணரும் முறை பற்றி நன்னூலார் நான்கு விதிகளைக் கூறுகிறார் .

1. வேற்றுமை உருபுகளோடு புணரும்போது தான் , தாம் , நாம் என்னும் மூன்று பெயர்களும் தமது நெடுமுதல் குறுகி முறையே தன் , தம் , நம் என வரும் .

சான்று :

தான் + ஐ = தன்னை ; தான் + ஆல் = தன்னால்

தாம் + ஐ = தம்மை ; தாம் + ஆல் = தம்மால்

நாம் + ஐ = நம்மை ; நாம் + ஆல் = நம்மால்

2. யான் , யாம் , நீ , நீர் என்னும் நான்கு பெயர்களும் முறையே என் , எம் , நின் , நும் எனக் குறுகி வரும் .

சான்று :

யான் + ஐ = என்னை ; யான் + ஆல் = என்னால்

யாம் + ஐ = எம்மை ; யாம் + ஆல் = எம்மால்

நீ + ஐ = நின்னை ; நீ + ஆல் = நின்னால்

நீர் + ஐ = நும்மை ; நீர் + ஆல் = நும்மால்

3. இவ்வேழு பெயர்களோடு நான்காம் வேற்றுமை உருபாகிய கு வந்து புணரும்போது இடையே அகரச்சாரியை வரும் .

சான்று :

தான் + கு > தன் + கு > தன் + அ + கு = தனக்கு

தாம் + கு = தமக்கு

நாம் + கு = நமக்கு

யான் + கு = எனக்கு

யாம் + கு = எமக்கு

நீ + கு = நினக்கு

நீர் + கு = நுமக்கு

4. நான்காம் வேற்றுமை உருபாகிய கு வந்து புணரும்போது இடையே வரும் அகரச்சாரியையின் உயிர் வந்தாலும் , ஆறாம் வேற்றுமைக்கு உரிய அது , ஆது , அ என்னும் உருபுகளின் முதலில் உயிர் வந்தவிடத்தும் , அவ்வேழு பெயர்களின் குறுக்கங்களாகிய தன் , தம் , நம் , என் , எம் , நின் , எம் என்பனவற்றின் இறுதியில் உள்ள ஒற்றுகள் இரட்டித்து வாரா .

இவை ‘ தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் ’ என்ற விதிப்படி என்னக்கு , என்னது , என்னாது , என்னா என ஒற்று இரட்டித்து வாரா .

ஒற்று இரட்டாமலே வரும் .

சான்று : என் + கு > என் + அ + கு = எனக்கு – நான்காம் வேற்றுமை

என் + அது = எனது

என் + ஆது = எனாது

என் + அ = என ஆறாம் வேற்றுமை

( எனது கை , எனாது கை , என கைகள் )

தான்தாம் நாம்முதல் குறுகும் ; யான்யாம்

நீர் என்எம் நின்நும் ஆம் , பிற

குவ்வின் அவ்வரும் நான்கு ஆறு இரட்டல ( நன்னூல் , 247 )

நூற்பாவில் பிற என்றதனால் நீ என்பது உன் எனவும் , நீர் என்பது உம் எனவும் திரிந்து வரும் .

மேலும் இந்நூற்பாவில் கூறப்படாத நான் என் எனவும் , நீயிர் , நீவிர் என்பன நும் , உம் எனவும் திரிந்துவரும் .

5.1.4 ஆ , மா , கோ என்னும் ஓர் எழுத்துப் பெயர்கள்

ஆ , மா , கோ என்னும் ஓர் எழுத்துப் பெயர்கள் வேற்றுமை உருபுகளோடு புணரும் போது னகரச் சாரியை பொருந்தவும் பெறும் .

ஆ மா கோ னவ் அணையவும் பெறுமே ( நன்னூல் , 248 )

( ஆ – பசு , மா – விலங்கு ; கோ – அரசன் , தலைவன் ; அணையவும் – பொருந்தவும் )

இந்நூற்பாவில் அணையவும் ( பொருந்தவும் ) என்பதில் உள்ள உம்மையால் , சாரியை அணையாமலிருக்கவும் பெறும் என்பது பெறப்படும் .

எனவே இம்மூன்று பெயர்களும் வேற்றுமை உருபுகளோடு புணரும்போது னகரச் சாரியை பெற்றும் , பெறாதும் விகற்பமாக வரும் என்பது புலனாகும் .

சான்று :

ஆ + ஐ > ஆ + ன் + ஐ = ஆனை

மா + ஐ > மா + ன் + ஐ = மானை

கோ + ஐ > கோ + ன் + ஐ = கோனை

என னகரச் சாரியை பெற்றும் ,

ஆ + ஐ > ஆ + வ் + ஐ = ஆவை

மா + ஐ > மா + வ் + ஐ = மாவை

கோ + ஐ > கோ + வ் + ஐ = கோவை

என னகரச் சாரியை பெறாமல் , வகர உடம்படுமெய் பெற்றும் விகற்பமாக வந்தன .

5.1.5 அவ் , இவ் , உவ் என்னும் சுட்டுப்பெயர்கள்

அவ் , இவ் , உவ் என்னும் வகரமெய் ஈற்று மூன்று சுட்டுப்பெயர்களும் , வேற்றுமை உருபுகளோடு புணரும்போது , அற்று என்னும் சாரியை பெறுதல் முறைமை ஆகும் .

( அவ் - அவை ; இவ் - இவை ; உவ் - உவை )

வவ்விறு சுட்டிற்கு அற்று உறல் வழியே ( நன்னூல் , 250 )

( வழி – முறைமை )

சான்று :

அவ் + ஐ > அவ் + அற்று + ஐ = அவற்றை

இவ் + ஐ > இவ் + அற்று + ஐ = இவற்றை

உவ் + ஐ + உவ் + அற்று + ஐ = உவற்றை

( உவற்றை என்பது இப்போது வழக்கில் இல்லை )

5.1.6 அஃது , இஃது , உஃது என்னும் சுட்டுப்பெயர்கள்

அது , இது , உது என்பன சுட்டுப்பெயர்கள் .

இவை , உயிரை முதலாகக் கொண்ட சொற்கள் தம்முன் வரும்போது இடையே ஆய்தம் பெற்று அஃது , இஃது , உஃது என வழங்கும் .

சான்று :

அஃது அறியாதோர்க்கே ( நற்றிணை , 174:8 )

இஃது எவன்கொல்லோ தோழி ( நற்றிணை , 273:1 )

அஃது , இஃது , உஃது என்னும் மூன்று சுட்டுப் பெயர்களும் வேற்றுமை உருபுகளோடு புணரும்போது , இடையே அன் சாரியை வந்தால் , அ , இ , உ என்னும் சுட்டு எழுத்துகளை அடுத்துள்ள ஆய்தம் கெடும் .

சுட்டின் முன் ஆய்தம் அன்வரின் கெடுமே ( நன்னூல் , 251 )

சான்று :

அஃது + ஐ > அஃது + அன் + ஐ > அது + அன் + ஐ = அதனை .

அன் சாரியை வரும்போது ஆய்தம் கெட்டவிடத்து , அது , இது , உது என ஆய்தம் இல்லாச் சுட்டுப் பெயர்களாகிப் பின்பு அன் சாரியை பெறுதலால் , ஆய்தம் இல்லாச் சுட்டுப்பெயர்கள் அன் சாரியை பெறுவதற்கும் இதுவே விதியாகும் .

5.1.7 அத்துச் சாரியையின் முதல் கெடுதல்

இயல்பாகவோ , இலக்கண விதியின் காரணமாகவோ நிலைமொழியின் ஈற்றில் நின்ற அகர உயிரின் முன் வந்து புணரும் அத்துச் சாரியையின் முதலில் உள்ள அகர உயிர் கெடும் .

அத்தின் அகரம் அகர முனை இல்லை ( நன்னூல் , 252 )

( முனை – முன் ; அகர முனை – நிலைமொழியின் இறுதியில் உள்ள அகர உயிரின்முன் வந்தால் ) சான்று :

மக + அத்து + கை > மக + த்து + கை = மகத்துக்கை

( இயல்பு உயிர் ஈறு )

( மக – மகன் அல்லது மகள் , பிள்ளை )

மரம் + அத்து + ஐ > மர + அத்து + ஐ > மர + த்து + ஐ = மரத்தை ( விதி உயிர் ஈறு )

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. எல்லாம் என்னும் பொதுப்பெயர் வேற்றுமை உருபு ஏற்கும்போது பெறும் இருவேறு சாரியைகள் யாவை ?

விடை

2. எல்லா நம்மையும் – இதில் வரும் சாரியை யாது ?

விடை

3. நன்னூலார் காலத்தில் இருதிணைக்கும் பொதுவான முன்னிலைப் பன்மைப்பெயர் யாது ?

விடை

4. எல்லாரும் என்னும் பெயர் வேற்றுமை உருபோடு புணரும்போது பெறும் சாரியை யாது ?

விடை

5. எல்லாநம்மையும் என்ற சொல் இக்காலத் தமிழில் எவ்வாறு வழங்குகிறது ?

விடை

6. தான் , தாம் , நாம் என்னும் பெயர்கள் வேற்றுமை உருபு ஏற்கும்போது எவ்வாறு மாறும் ?

விடை

7. நாம் + கு – புணர்த்து எழுதுக .

விடை

8. அவற்றை – இதில் வந்துள்ள சாரியை யாது ?

விடை

9. அஃது + ஐ – புணர்த்து எழுதுக .

விடை

10. மகத்துக்கை – பிரித்து எழுதி , அதில் உள்ள சாரியை யாது எனக் குறிப்பிடுக .

சில வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சிறப்பு விதிகள்

நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலிலும் , மெய் ஈற்றுப் புணரியலிலும் ஒவ்வோர் ஈற்றிற்கான புணர்ச்சி விதிகளைக் கூறும்போது , வேற்றுமைப் புணர்ச்சிக்கான பொதுவிதிகளையும் கூறிச்செல்கிறார் .

வேற்றுமைகளில் இரண்டாம் வேற்றுமையும் , மூன்றாம் வேற்றுமையும் ஆங்கே சொல்லப்பட்ட வேற்றுமைப் புணர்ச்சி விதிகள் ஒரு சிலவற்றினின்று மாறுபட்டு அமைகின்றன .

அவற்றை நன்னூலார் உருபுபுணரியலில் தொகுத்துக் கூறுகிறார் .

அவற்றை ஈண்டுச் சான்றுடன் விளக்கிக் காண்போம் .

5.2.1 இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சிறப்பு விதிகள்

இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி , முன்னமே வேற்றுமைப் புணர்ச்சிக்குக் கூறப்பட்ட பொதுவிதிகள் சிலவற்றிலிருந்து மாறுபட்டு அமையும் .

அவை பின்வருமாறு :

1. இயல்பாக வரவேண்டிய இடத்தில் விகாரப்பட்டு வரும் .

பொதுவிதிப்படி நின் என்ற சொல்லின் இறுதியில் உள்ள னகரமெய் வல்லினம் வந்தால் வேற்றுமையில் இயல்பாகும் .

இது மெய்ஈற்றுப் புணரியலில் ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது .

நின் ஈறு இயல்பாம் ( நன்னூல் , 218 : 2 )

சான்று :

நின் + பகை = நின்பகை ( நினதுபகை , ஆறாம் வேற்றுமைத் தொகை )

ஆனால் இரண்டாம் வேற்றுமையில் நின் என்பதன் இறுதியில் உள்ள னகரமெய் , வல்லின மெய் வந்தால் றகர மெய்யாகத் திரியும் .

சான்று :

வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப ( தொல் .

பொருள் , 415 : 1 )

( அரசே !

நீ வழிபடுகின்ற தெய்வம் நின்னைப் பாதுகாக்க )

இத்தொடரில் இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புணர்ச்சியாக ,

நின் + புறங்காக்க = நிற்புறங்காக்க

என வந்துள்ளது .

நின் என்பதன் இறுதியில் உள்ள னகரமெய் வருமொழி முதலில் வல்லினமெய் வந்தால் இயல்பாகும் என்ற பொதுவிதிக்கு மாறாக இங்கு றகர மெய்யாகத் திரிந்துள்ளது .

னகரம் றகரமாகத் திரிந்தது மூவகை விகாரங்களுள் திரிதல் விகாரம் ஆகும் . 2. விகாரப்பட்டு வரவேண்டிய இடத்தில் இயல்பாக வரும் .

பொதுவிதிப்படி , நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகரமும் னகரமும் , வருமொழி முதலில் வல்லினம் வந்தால் வேற்றுமையில் முறையே டகரமாகவும் , றகரமாகவும் திரியும் .

இது மெய் ஈற்றுப் புணரியலில் ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது .

ணன வல்லினம் வரட் டறவும் .

வேற்றுமைக்கு

( நன்னூல் , 209 : 1-2 )

சான்று :

மண் + குடம் = மட்குடம் ( மண்ணால் ஆகிய குடம் )

பொன் + குடம் = பொற்குடம் ( பொன்னால் ஆகிய குடம் )

இவை இரண்டும் மூன்றாம் வேற்றுமைத்தொகை .

ஆனால் இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகர , னகர மெய்கள் வல்லினம் வந்தால் அவ்வாறு திரியாது இயல்பாக நிற்கின்றன .

சான்று :

மண் + கொணர்ந்தான் = மண்கொணர்ந்தான்

பொன் + கொடுத்தான் = பொன்கொடுத்தான்

( மண்கொணர்ந்தான் – மண்ணைக் கொணர்ந்தான் ; கொணர்ந்தான் – கொண்டுவந்தான் ; பொன் கொடுத்தான் – பொன்னைக் கொடுத்தான் )

எனவே மற்ற வேற்றுமைகள் விகாரப்பட்டு வரவேண்டிய இடத்தில் , இரண்டாம் வேற்றுமை இயல்பாக வந்தது .

இனி இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சியில் உருபு கட்டாயம் விரிந்தே வருதலைப் பற்றியும் , தொக்கு வருதலைப் பற்றியும் நன்னூலார் இரண்டு விதிகளைக் கூறுகிறார் .

அவற்றைக் காண்போம் .

1. உயர்திணைப் பெயரினிடத்து ஐ உருபு விரிந்து வரும் .

தொக்கும் ( மறைந்தும் ) வரும் .

சான்று : 1

நம்பியைக் கொணர்ந்தான்

ஈண்டு நம்பி என்ற உயர்திணைப் பெயரில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு விரிந்து நின்றது .

இவ்விடத்தில் நம்பி கொணர்ந்தான் என உருபு தொக்கு வாராது .

நம்பிகொணர்ந்தான் என்றால் , நம்பி ஏதோ ஒன்றைக் கொண்டுவந்தான் என்று பொருள்படும் .

எனவே நம்பியைக் கொணர்ந்தான் என்ற தொடரில் ஐ உருபு கட்டாயம் விரிந்தே வரும் .

சான்று : 2

மகன் + பெற்றாள் = மகற்பெற்றாள்

( மகற்பெற்றாள் – மகனைப் பெற்றாள் )

ஈண்டு மகன் உயர்திணைப் பெயரில் ஐ தொக்கு வந்தது .

மகன் பெற்றாள் என ஐ உருபு தொக்கு நின்றாலும் , மகனைப் பெற்றாள் என ஐ உருபு விரிந்து நின்றாலும் ஒரே பொருள் ஆகும் .

எனவே இதுபோன்ற தொடரில் ஐ உருபு தொக்கு வரும் .

ஆனால் நம்பியைக் கொணர்ந்தான் என்ற தொடரில் ஐ உருபை விரித்தே சொல்லவேண்டும் .

2. விரவுப்பெயர்களில் ( இருதிணைப் பொதுப்பெயர்களில் ) ஐ உருபு விரிந்தும் , விரிதல் இன்றித் தொக்கும் வரும் .

சான்று : 1

சாத்தனைக் கொணர்ந்தான்

ஈண்டுச் சாத்தன் என்பது பொதுப்பெயர் .

எருதையும் , மனிதன் ஒருவனையும் குறிப்பதால் பொதுப்பெயர் .

இப்பொதுப்பெயரில் ஐ உருபு விரிந்தே வரும் .

சான்று : 2

ஆண் பெற்றாள் ( ஆணைப் பெற்றாள் )

ஈண்டு ஆண் என்ற பொதுப்பெயரில் ஐ உருபு தொக்கு வந்தது .

மற்ற வேற்றுமைகளில் உயர்திணையிலும் , இருதிணைப்பொதுப் பெயர்களிலும் உருபு விரிந்தே வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை .

ஒரு தொடரில் வேற்றுமை உருபு தொக்கும் விரிந்தும் வரலாம் .

பொருள் மாறாது .

சான்றாக , உயர்திணைப் பெயரிலும் , இருதிணைப் பொதுப்பெயரிலும் ஆறாம் வேற்றுமைத் தொகையில் ,

நம்பி பெருமை உயர்திணைப் பெயர்

மகன் பெருமை

சாத்தன் செவி இருதிணைப் பொதுப் பெயர்

ஆண் கை என உருபு தொக்கு வரும் .