39

எலி + பொறி = எலிப்பொறி ( எலியைப் பிடிக்கும் பொறி )

மலர் + கூந்தல் = மலர்க்கூந்தல் ( மலரை உடைய கூந்தல் )

நெய் + குடம் = நெய்க்குடம் ( நெய்யை உடைய குடம் )

( v ) மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும் .

சான்று :

வெள்ளி + கிண்ணம் = வெள்ளிக் கிண்ணம்

( வெள்ளியால் ஆகிய கிண்ணம் )

இரும்பு + பெட்டி = இரும்புப் பெட்டி ( இரும்பினால் ஆகிய பெட்டி )

தேங்காய் + சட்னி = தேங்காய்ச் சட்னி ( தேங்காயால் ஆன சட்னி )

பித்தளை + குடம் = பித்தளைக் குடம் ( பித்தளையால் ஆன குடம் )

( vi ) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் பெரும்பாலும் மிகும் .

சான்று :

கோழி + தீவனம் = கோழித் தீவனம் ( கோழிக்கு உரிய தீவனம் )

குழந்தை + பால் = குழந்தைப் பால் ( குழந்தைக்கு ஏற்ற பால் )

( vii ) ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும் .

சான்று :

வாய் + பாட்டு = வாய்ப்பாட்டு ( வாயிலிருந்து வரும் பாட்டு )

கனி + சாறு = கனிச்சாறு ( கனியிலிருந்து எடுக்கப்படும் சாறு )

( viii ) ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லினம் மிகும் .

சான்று :

தண்ணீர் + பாம்பு = தண்ணீர்ப்பாம்பு ( தண்ணீரில் உள்ள பாம்பு )

சென்னை + கல்லூரி = சென்னைக் கல்லூரி ( சென்னையில் உள்ள கல்லூரி )

மதுரை + கோயில் = மதுரைக்கோயில் ( மதுரையில் உள்ள கோயில் )

மலை + பாம்பு = மலைப்பாம்பு ( மலையில் உள்ள பாம்பு )

( ix ) ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாய் இருப்பின் , அதன் முன்னர் வரும் வல்லினம் மிகும் .

சான்று :

கிளி + கூண்டு = கிளிக்கூண்டு

புலி + குட்டி = புலிக்குட்டி

நரி + பல் = நரிப்பல்

வாழை + தண்டு = வாழைத்தண்டு

எருமை + கொம்பு = எருமைக் கொம்பு

தேர் + சக்கரம் = தேர்ச்சக்கரம்

6.1.6 அல்வழிப் புணர்ச்சியில் வரும் வல்லினம் மிகல்

அல்வழிப் புணர்ச்சியில் வரும் தொடர்கள் தொகை நிலைத்தொடர் , தொகாநிலைத் தொடர் என இருவகைப்படும் .

இவ்விரு வகைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகும் இடங்களைப் பற்றிப் பார்ப்போம் .

• தொகை நிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகல்

அல்வழிப் புணர்ச்சியில் வரும் தொகைநிலைத் தொடர்கள் வினைத்தொகை , பண்புத்தொகை ( இருபெயரொட்டுப் பண்புத்தொகையும் இதில் அடங்கும் ) , உவமைத் தொகை , உம்மைத்தொகை , அன்மொழித் தொகை ஆகிய ஐந்தும் ஆகும் .

இத்தொகைநிலைத் தொடர்களில் எந்தெந்தத் தொடர்களில் வல்லினம் மிகும் என்பதைப் பார்ப்போம் .

i ) பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும் .

சான்று :

சிவப்பு + துணி = சிவப்புத்துணி

புதுமை + பெண் = புதுமைப்பெண்

தீமை + குணம் = தீமைக்குணம்

வெள்ளை + தாள் = வெள்ளைத்தாள்

மெய் + பொருள் = மெய்ப்பொருள்

பொய் + புகழ் = பொய்ப்புகழ்

புது + துணி = புதுத்துணி

பொது + பண்பு = பொதுப்பண்பு

ii ) இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும் . நிலைமொழியில் சிறப்புப் பெயரும் வருமொழியில் பொதுப்பெயருமாகச் சேர்ந்து வரும் .

இடையில் ஆகிய என்ற பண்பு உருபு மறைந்து வரும் .

இதுவே இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும் .

இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும் .

சான்று :

மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள்

வெள்ளி + கிழமை = வெள்ளிக் கிழமை

மல்லிகை + பூ = மல்லிகைப்பூ

சாரை + பாம்பு = சாரைப்பாம்பு

உழவு + தொழில் = உழவுத்தொழில்

iii ) உவமைத் தொகையில் வரும் வல்லினம் மிகும் .

சான்று :

மலர் + கண் = மலர்க்கண் ( மலர் போன்ற கண் )

தாமரை + கை = தாமரைக்கை ( தாமரை போன்ற கை )

• தொகாநிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகல்

எழுவாய்த் தொடர் , விளித்தொடர் , பெயரெச்சத் தொடர் , வினையெச்சத் தொடர் , தெரிநிலை வினைமுற்றுத் தொடர் , குறிப்பு வினைமுற்றுத் தொடர் , இடைச்சொல் தொடர் , உரிச்சொல் தொடர் , அடுக்குத்தொடர் என்னும் ஒன்பதும் அல்வழிப் புணர்ச்சியில் வரும் தொகாநிலைத் தொடர்கள் ஆகும் .

இவற்றுள் எந்தெந்தத் தொடர்களில் வரும் வல்லினம் மிகும் என்பதைப் பார்ப்போம் .

i ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்

பெயரெச்சத்தில் ஒரு வகை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும் .

அறியாத என்பது எதிர்மறைப் பெயரெச்சம் .

இதன் முன் வரும் வல்லினம் மிகாது .

சான்று : அறியாத பிள்ளை .

ஆனால் அறியாத என்பதில் உள்ள ‘ த ’ என்னும் ஈறு கெட்டு ( மறைந்து ) , அறியா என நிலைமொழியில் நிற்கும் .

இது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும் .

இதன் முன் வருமொழி முதலில் வரும் வல்லினம் கட்டாயம் மிகும் .

சான்று : அறியா + பிள்ளை = அறியாப்பிள்ளை .

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகுதலுக்கு மேலும் பல சான்றுகள் காட்டலாம் .

அவை வருமாறு :

செல்லா + காசு = செல்லாக் காசு ( செல்லாத காசு )

ஓடா + குதிரை = ஓடாக் குதிரை ( ஓடாத குதிரை )

தீரா + சிக்கல் = தீராச் சிக்கல் ( தீராத சிக்கல் )

காணா + பொருள் = காணாப் பொருள் ( காணாத பொருள் )

ii ) அகர ஈற்று , இகர ஈற்று , யகர மெய் ஈற்று வினையெச்சங்களின் முன்னும் , வன்தொடர்க் குற்றியலுகர ஈற்று வினையெச்சங்களின் முன்னும் , ஆக , ஆய் என முடியும் வினையெச்சங்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும் .

• அகர ஈற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகல்

சான்று :

வர + சொன்னான் = வரச் சொன்னான்

உண்ண + போனான் = உண்ணப் போனான்

உட்கார + பார்த்தான் = உட்காரப் பார்த்தான்

• இகர ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகல்

சான்று :

ஓடி + போனான் = ஓடிப் போனான்

தேடி + பார்த்தான் = தேடிப் பார்த்தான்

கூறி + சென்றான் = கூறிச் சென்றான்

கூடி + பேசினர் = கூடிப் பேசினர்

• யகர மெய் ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகல்

சான்று :

போய் + பார்த்தான் = போய்ப் பார்த்தான்

• வன்தொடர்க் குற்றியலுகர ஈற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகல்

சான்று :

கற்று + கொடுத்தான் = கற்றுக் கொடுத்தான் வாய்விட்டு + சிரித்தான் = வாய்விட்டுச் சிரித்தான்

படித்து + கொடுத்தான் = படித்துக் கொடுத்தான்

எடுத்து + தந்தான் = எடுத்துத் தந்தான்

கடித்து + குதறியது = கடித்துக் குதறியது

வைத்து + போனான் = வைத்துப் போனான்

• ஆக , ஆய் , என என்று முடியும் வினையெச்சங்களின் முன் வல்லினம் மிகல்

சான்று :

தருவதாக + சொன்னான் = தருவதாகச் சொன்னான்

வருவதாய் + கூறினார் = வருவதாய்க் கூறினார்

வா என + கூறினார் = வா எனக் கூறினார்

மேலே காட்டிய சான்றுகள் எல்லாம் தெரிநிலை வினையெச்சங்கள் ஆகும் .

வினையெச்சத்தில் குறிப்பு வினையெச்சம் என்ற ஒன்றும் உண்டு .

ஒரு தொழிலை உணர்த்தும் வினைப்பகுதியிலிருந்து தோன்றுவது தெரிநிலை வினையெச்சம் .

சான்று : உண்ணப் போனான் .

உண் என்ற வினைப்பகுதியிலிருந்து தோன்றியதால் உண்ண என்பது தெரிநிலை வினையெச்சம் .

ஒரு பண்பை உணர்த்தும் பெயர்ப்பகுதியிலிருந்து தோன்றுவது குறிப்பு வினையெச்சம் .

சான்று : மெல்லப் பேசினாள் .

மென்மை என்ற குணத்தை உணர்த்தும் பெயர்ப்பகுதியிலிருந்து தோன்றியதால் மெல்ல என்பது குறிப்பு வினையெச்சம் .

மொழியியலார் இதனை வினையடை ( Adverb ) என்று குறிப்பிடுவர் .

மேலே பார்த்த தெரிநிலை வினையெச்சம் போலவே குறிப்புவினையெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகும் .

சான்று :

நிறைய + பேசுவான் = நிறையப் பேசுவான்

இனிக்க + பேசுவான் = இனிக்கப் பேசுவான்

நன்றாக + சொன்னான் = நன்றாகச் சொன்னான்

வேகமாக + கூறினான் = வேகமாகக் கூறினான்

விரைவாய் + பேசினார் = விரைவாய்ப் பேசினார்

மெல்லென + சிரித்தாள் = மெல்லெனச் சிரித்தாள்

6.1.7 மகர இறுதி கெட்டு உயிர் ஈறாய் நிற்கும் சொற்கள் முன்வரும் வல்லினம் மிகல்

புணர்ச்சியில் மகர இறுதி கெட்டு , உயிர் ஈறாய் நிற்கும் சொற்கள் முன்வரும் வல்லினம் மிகும் .

சான்று :

மரம் + கிளை > மர + க் + கிளை = மரக்கிளை

குளம் + கரை > குள + க் + கரை = குளக்கரை

ஆரம்பம் + பள்ளி > ஆரம்ப + ப் + பள்ளி = ஆரம்பப் பள்ளி

தொடக்கம் + கல்வி > தொடக்க + க் + கல்வி = தொடக்கக் கல்வி

அறம் + பணி > அற + ப் + பணி = அறப்பணி

கட்டடம் + கலை > கட்டட + க் + கலை = கட்டடக்கலை

வீரம் + திலகம் > வீர + த் + திலகம் = வீரத்திலகம்

மரம் + பெட்டி > மர + ப் + பெட்டி = மரப்பெட்டி

பட்டம் + படிப்பு > பட்ட + ப் + படிப்பு = பட்டப்படிப்பு

மேலே வல்லினம் மிகும் இடங்களைச் சான்றுடன் பார்த்தோம் .

இதுபோல வல்லினம் இன்னும் சில இடங்களில் மிகும் .

ஒற்றைக்கை , இரட்டைக் குழந்தைகள் , மற்றப் பிள்ளைகள் , பயிற்சிப் பள்ளி , பயிற்சிக் கூடம் , நகரவைத் தலைவர் என்பன போல வல்லினம் மிகுந்து வரும் தொடர்கள் பல உள்ளன .

நமக்குப் பாடத்திட்டத்தில் அமைந்துள்ள பாடங்களையும் ( Lessons ) பாடநூல்களையும் ( Text–Books ) , பிற நூல்களையும் படிக்கும்போது வாய்விட்டுப் படித்து , எந்த எந்த இடங்களில் வல்லினம் மிக்கு வருகிறது என்பதை அறிந்துகொள்ளலாம் .

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. தை என்னும் ஓர் எழுத்துச் சொல்லுக்கு முன் வரும் வல்லினம் மிகுதலுக்கு இரு சான்றுகள் தருக .

விடை

2. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் மிகுமா ?

விடை

3. நடு , புது , பொது – இச்சொற்களுக்கு முன் வல்லினம் மிகுதலுக்குச் சான்று தருக .

விடை 4. வேற்றுமைப் புணர்ச்சியில் எந்தெந்த வேற்றுமை உருபுகளின் முன்னர் வரும் வல்லினம் மிகும் ?

விடை

5. இரும்பு + பெட்டி – இதைச் சேர்த்து எழுதி , அதன் பொருளைக் கூறுக .

விடை

6. ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்போது , நிலைமொழி எவ்வாறு இருக்கும் ?

விடை

7. அல்வழியில் உள்ள தொகைநிலைத் தொடர்களில் வல்லினம் மிகுந்துவரும் தொடர்கள் யாவை ?

விடை

8. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகுமா ?

விடை

9. குறிப்பு வினையெச்சத்தை மொழியியலார் எவ்வாறு குறிப்பிடுவர் ?

விடை

10. ஆரம்பம் + பள்ளி , கட்டடம் + கலை , பட்டம் + படிப்பு - இவற்றைச் சேர்த்து எழுதுக .

வல்லினம் மிகா இடங்கள்

இதுகாறும் வல்லினம் எந்தெந்த இடங்களில் மிகும் என்பதைப் பார்த்தோம் .

இனி , நிலைமொழி இறுதியில் உள்ள உயிர்களின் முன்னரும் ய , ர , ழ என்னும் மெய்களின் முன்னரும் வருமொழி முதலில் வருகின்ற க , ச , த , ப என்னும் வல்லின மெய்கள் எந்தெந்த இடங்களில் மிகாது இயல்பாகும் என்பதைச் சான்றுடன் காண்போம் .

6.2.1 சுட்டு , வினா அடியாகத் தோன்றிய சொற்கள் முன் வல்லினம் மிகாமை

அது , இது , எது ; அவை , இவை , எவை ; அன்று , இன்று , என்று , அத்தனை , இத்தனை , எத்தனை ; அவ்வளவு , இவ்வளவு , எவ்வளவு ; அவ்வாறு , இவ்வாறு , எவ்வாறு என்னும் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகாது .

சான்று :

அது + சிறிது = அது சிறிது

எது + பெரியது = எது பெரியது ?

அவை + போயின = அவை போயின

எவை + பெரியவை = எவை பெரியவை ?

அன்று + பார்த்தான் = அன்று பார்த்தான்

என்று + காண்பேன் = என்று காண்பேன் ?

அத்தனை + செடிகள் = அத்தனை செடிகள்

எத்தனை + பழங்கள் = எத்தனை பழங்கள் ?

அவ்வளவு + பேர் = அவ்வளவு பேர்

எவ்வளவு + தருவாய் = எவ்வளவு தருவாய் ?

அவ்வாறு + பேசினான் = அவ்வாறு பேசினான்

எவ்வாறு + படித்தாள் = எவ்வாறு படித்தாள் ?

வந்த , கண்ட , சொன்ன , வரும் என்பன போன்ற பெயரெச்சங்களோடு படி , ஆறு என்னும் சொற்கள் சேர்ந்து வரும் வினையெச்சச் சொற்களின் முன்வரும் வல்லினம் மிகாது .

கண்டபடி + பேசினான் = கண்டபடி பேசினான்

சொன்னபடி + செய்தான் = சொன்னபடி செய்தான்

கண்டவாறு + சொன்னான் = கண்டவாறு சொன்னான்

சொன்னவாறு + செய்தான் = சொன்னவாறு செய்தான்

வரும்படி + கூறினான் = வரும்படி கூறினான்

வருமாறு + கூறினான் = வருமாறு கூறினான்

6.2.2 எண்ணுப்பெயர்கள் , எண்ணுப்பெயரடைகள் முன் வல்லினம் மிகாமை

ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களில் எட்டு , பத்து ஆகியன வன்தொடர்க் குற்றியலுகரங்கள் .

இவற்றின் முன்வரும் வல்லினம் மிகுவதை ஏற்கனவே பார்த்தோம் .

ஏனைய ஒன்று , இரண்டு , மூன்று , நான்கு , ஐந்து என்னும் மென்தொடர்க் குற்றியலுகர எண்ணுப்பெயர்களின் முன்னும் , ஆறு , நூறு என்னும் நெடில் தொடர்க் குற்றியலுகர எண்ணுப்பெயர்களின் முன்னும் , ஏழு என்னும் முற்றியலுகர எண்ணுப்பெயரின் முன்னும் , ஒன்பது என்னும் உயிர்த்தொடர்க் குற்றியலுகர எண்ணுப்பெயரின் முன்னும் வரும் வல்லினம் மிகாது .

சான்று :

ஒன்று + போதும் = ஒன்று போதும்

இரண்டு + தடவை = இரண்டு தடவை

மூன்று + குழந்தைகள் = மூன்று குழந்தைகள்

நான்கு + கால்கள் = நான்கு கால்கள்

ஐந்து + சிறுவர்கள் = ஐந்து சிறுவர்கள்

ஆறு + கடைகள் = ஆறு கடைகள்

ஏழு + சிறுகதைகள் = ஏழு சிறுகதைகள் ஒன்பது + கிரகங்கள் = ஒன்பது கிரகங்கள்