எடுத்துக்காட்டாகக் குறிஞ்சித் திணைக்கு உரிய கருப்பொருள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது .
குறிஞ்சித் திணையின் கருப்பொருள்கள்
1 தெய்வம் - முருகன்
2 தலைமக்கள் - வெற்பன் , கொடிச்சி
3 மக்கள் - குறவர் , குறத்தியர்
4 பறவை - கிளி , மயில்
5 விலங்கு - புலி , யானை
6 ஊர் - சிறுகுடி
7 நீர்நிலை - அருவி , சுனை
8 பூ - வேங்கை , குறிஞ்சி
9 மரம் - தேக்கு , அகில்
10 உணவு - மலைநெல் , தினை
11 பறை - தொண்டகம்
12 யாழ் - குறிஞ்சி யாழ்
13 பண் - குறிஞ்சிப் பண்
14 தொழில் - தேன் எடுத்தல் , வெறியாடல்
இவ்வாறே ஏனைய திணைகளுக்கும் கருப்பொருள்கள் சொல்லப் பட்டுள்ளன .
• உரிப்பொருள்
ஒவ்வொரு திணைக்கும் உரிய பொருளை உரிப்பொருள் என்பர் .
உரிப்பொருள் திணைக்கு உரிய முக்கிய உணர்ச்சியைக் குறிக்கிறது .
ஐந்து திணைகளுக்கும் உரிப்பொருள் பின்வருமாறு :
குறிஞ்சி - புணர்தல் - தலைவனும் தலைவியும் ஒன்று சேர்தல் .
முல்லை - இருத்தல் - தலைவி , பிரிவைப் பொறுத்துக் கொள்ளுதல் .
மருதம் - ஊடல் - தலைவனிடம் தலைவி பிணக்குக் கொள்ளுதல் .
நெய்தல் - இரங்கல் - தலைவி பிரிவுக் காலத்தில் வருந்துதல் .
பாலை - பிரிவு - தலைவன் தலைவியை விட்டுப் பிரிதல் .
இவ்வாறு எல்லாத் திணைக்கும் முதல்பொருள் , கருப்பொருள் , உரிப்பொருள் சொல்லப்பட்டிருக்கின்றன .
திணை , நிலத்தை அடிப்படையாகக் கொண்டது .
மற்றபடி உள்ள காலம் , கருப்பொருள் , உரிப்பொருள் ஆகியவை அந்தந்த நிலங்களுக்குச் சிறப்பாக அமையக் கூடியவை ஆகும் .
எல்லா நிலங்களுக்கும் சிறுபொழுது , பெரும்பொழுது ஆகியவை பொதுவானவையே .
ஆயினும் ஒவ்வொரு திணைக்கும் உரியதாகச் சொல்லப்பட்டவை அந்தந்தத் திணைக்குச் சிறப்பானவை ஆகும் .
பறவைகளும் விலங்குகளும் மரங்களும் பூக்களும் மற்ற நிலங்களிலும் இருக்கக்கூடும் .
எனினும் அந்தந்த நிலங்களுக்கு அவை சிறப்பு வாய்ந்தவை என்பதால் ஒரு திணைக்கு உரியதாக அவை சொல்லப்பட்டுள்ளன .
உரிப்பொருள்களும் அவ்வாறே சிறப்புக் கருதிச் சொல்லப்பட்டுள்ளன .
அகப்பொருள் இலக்கணம் களவு , கற்பு என்று இரண்டு கூறாகப் பிரிக்கப் பட்டுள்ளது .
தலைவன் , தலைவி இருவரும் ஒருவரை ஒருவர் பிறர் காணாதவாறு சந்தித்துக் காதல் கொள்ளுவது களவு எனப்படும் .
திருமணத்திற்குப் பின் உள்ள காதல் வாழ்க்கை , கற்பு எனப்படும் .
களவிலும் கற்பிலும் தலைவன் தலைவி இவர்களின் உணர்வுகள் எவ்வாறு இருக்கும் என்று விரிவாக இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது .
பொருள் இலக்கண அமைப்பைப் பின்வருமாறு காட்டலாம் .
அகப்பொருள் திணைகள் ஐந்துடன் கைக்கிளை , பெருந்திணை ஆகிய இரண்டையும் சேர்த்துச் சொல்லுவது உண்டு .
கைக்கிளை என்பது ஆண் , பெண் ஆகிய இருவரில் ஒருவர் மட்டுமே காதல் கொள்ளும் ஒருபக்கக் காதல் ஆகும் .
பெருந்திணை என்பது பொருந்தாத காதல் ஒழுக்கம் ஆகும் .
கைக்கிளை , பெருந்திணை இரண்டையும் அகப்புறத்திணை என்றும் கூறுவர் .
கைக்கிளை , பெருந்திணை இரண்டையும் புறப்பொருள் திணைகளாகவும் குறிப்பிடுவர் .
2.1.2 புறப்பொருள் இலக்கணம்
புறப்பொருள் என்பது வீரம் , போர் , தூது , வெற்றி , கொடை , நிலையாமை முதலியவற்றைக் கூறுவது ஆகும் .
ஒரு குறிப்பிட்ட அரசனையோ வள்ளலையோ குறுநில மன்னனையோ பெயரைச் சுட்டி அவனுடைய வீரம் , வெற்றி , கொடை முதலியவற்றைப் பாடுவது புறப்பொருள் மரபு ஆகும் .
இவ்வாறு அன்றி ஒருவருக்கு அறிவுரை சொல்லுவது போலவோ யாரையும் சுட்டிக் கூறாமலோ புறப்பொருள் பாடல் அமைவதும் உண்டு .
அகப்பொருள் பாடல் போலவே புறப்பொருள் பாடல்களும் திணை , துறை அடிப்படையில் அமைந்துள்ளன . ஆனால் முதற்பொருள் , கருப்பொருள் , உரிப்பொருள் போன்ற இலக்கணங்கள் புறப்பொருளுக்கு இல்லை .
புறப்பொருள் திணைகள் போரை அடிப்படையாகக் கொண்டவை .
போர் செய்யச் செல்லும் அரசனும் படைகளும் போரிடும் முறைக்கு ஏற்ப வெவ்வேறு பூக்களை அணிந்து சென்று போரிடுவர் .
அவர்கள் அணிந்து செல்லும் பூக்களின் பெயர்களே திணைகளுக்குப் பெயர்களாக அமைந்துள்ளன .
பின்வரும் புறத்திணைகள் யாவும் பூக்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டவையே .
புறப்பொருள் திணைகள்
வெட்சித் திணை
கரந்தைத் திணை
வஞ்சித் திணை
காஞ்சித் திணை
நொச்சித் திணை
உழிஞைத் திணை
தும்பைத் திணை
வாகைத் திணை
ஆகியவை புறப்பொருள் திணைகள் ஆகும் .
இந்த எட்டுத் திணைகளும் போரை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன .
இந்தத் திணைகளுக்கான விளக்கமும் பிற திணைகளான
பாடாண் திணை
பொதுவியல்
கைக்கிளை
பெருந்திணை
ஆகியவற்றின் விளக்கமும் பின்வருமாறு :
வெட்சித் திணை :
பழைய காலத்தில் பகை அரசனிடம் போர் செய்ய நினைக்கும் ஒருவன் போரின் முதல் கட்டமாகப் பகை அரசனது பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்வான் .
இது வெட்சித் திணை எனப்படும் .
வெட்சி வீரன் வெட்சிப் பூச் சூடி , போருக்குச் செல்வான் .
கரந்தைத் திணை :
பகை அரசன் கவர்ந்து சென்ற பசுக்கூட்டங்களை அவற்றிற்கு உரியவன் மீட்டுவரச் செய்யும் போர் , கரந்தைத் திணை எனப்படும் .
கரந்தை வீரன் கரந்தைப் பூச் சூடி , போருக்குச் செல்வான் .
வஞ்சித் திணை :
பகை அரசன் நாட்டைப் பிடிப்பதற்காக அந்த நாட்டின் மேல் படை எடுத்துச் செல்லுதல் வஞ்சித் திணை எனப்படும் .
வஞ்சி வீரன் , வஞ்சிப் பூச் சூடி , போருக்குச் செல்வான் .
காஞ்சித் திணை :
படை எடுத்து வரும் பகை அரசனைத் தடுத்துத் தன் நாட்டைக் காக்க நினைக்கும் அரசன் போருக்குச் செல்லுதல் காஞ்சித் திணை எனப்படும் .
காஞ்சி வீரன் காஞ்சிப் பூச் சூடி , போருக்குச் செல்வான் .
நொச்சித் திணை :
பகை அரசன் படை எடுத்து வந்து கோட்டை மதிலைச் சூழ்ந்து கொண்டபோது , தன்னுடைய கோட்டையைக் காத்துக் கொள்ள அரசன் போர் செய்தல் நொச்சித் திணை எனப்படும் .
நொச்சி வீரன் நொச்சிப் பூச் சூடி , போருக்குச் செல்வான் .
உழிஞைத் திணை :
பகை அரசனுடைய கோட்டையை வெல்லக் கருதிய அரசன் தன் படைகளோடு மதிலைச் சுற்றி முற்றுகை இடுதல் உழிஞைத் திணை எனப்படும் .
உழிஞை வீரன் உழிஞைப்பூச் சூடி , போருக்குச் செல்வான் .
தும்பைத் திணை :
பகை அரசர்கள் இருவரும் போர்க் களத்தில் எதிர் எதிர் நின்று போரிடுதல் தும்பைத் திணை எனப்படும் .
தும்பை வீரன் தும்பைப் பூச் சூடி , போருக்குச் செல்வான் .
இந்தத் திணைகளுடன் வாகைத் திணை , பாடாண் திணை , பொதுவியல் திணை ஆகிய மூன்று புறத்திணைகளும் உள்ளன .
இவற்றையும் சேர்த்து , பத்துப் புறத்திணைகள் என்று கூறுவர் .
கைக்கிளை , பெருந்திணை ஆகிய இரண்டையும் சேர்த்து , பன்னிரண்டு புறத்திணை என்றும் கூறுவர் .
வாகைத் திணை :
போரில் வெற்றி பெற்ற அரசனைப் புகழ்ந்து பாடுதல் வாகைத் திணை எனப்படும் .
வெற்றி பெற்றவர்கள் வாகைப் பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவார்கள் . பாடாண் திணை :
இதுவரை சொன்ன புறத்திணைகள் போர் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை .
பாடாண் திணையில் கொடை , கடவுள் வாழ்த்து , அரசனை வாழ்த்துதல் முதலியவை இடம்பெறும் .
பொதுவியல் திணை :
போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுத்து வழிபடுதல் , போரில் இறந்த வீரர்களின் மனைவியர் இரங்கல் , நிலையாமை முதலியவை பொதுவியல் திணையில் இடம்பெறும் .
கைக்கிளைத் திணை :
தன்னை விரும்பாத ஒரு பெண்ணிடம் ஒருவன் காதல் கொள்வது கைக்கிளைத் திணை எனப்படும் .
இதை ஒருதலைக்காதல் என்று கூறுவர் .
பெருந்திணை :
தன்னை விட வயதில் மிகவும் மூத்த பெண் ஒருத்தியிடம் ஒருவன் காதல் கொள்வது பெருந்திணை எனப்படும் .
இதைப் பொருந்தாக் காதல் என்று கூறுவர் .
கைக்கிளை , பெருந்திணை என்னும் இவ்விரண்டு திணைகளையும் அகப்பொருள் திணையாகவும் கூறுவர் .
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. பொருள் இலக்கணம் என்றால் என்ன ?
விடை
2. அகப்பொருள் திணைகள் யாவை ?
விடை
3. முதற்பொருள் என்றால் என்ன ?
விடை
4. கருப்பொருள்கள் யாவை ?
விடை
5. புறத்திணைகளின் பெயர்களைத் தருக .
விடை
6. வஞ்சித் திணையைப் பற்றி விளக்குக .
யாப்பு இலக்கண அறிமுகம்
இலக்கியங்களை இயற்றும் போது இரண்டு வகையான ஊடகங்களில் இயற்றுவார்கள் .
அவற்றில் ஒன்று செய்யுள் , மற்றது உரைநடை .
பழைய காலத்தில் தமிழ் இலக்கியங்கள் யாவும் செய்யுளிலேயே இயற்றப்பட்டன .
செய்யுளில் இயற்றப்பட்ட இலக்கியங்களுக்கும் இலக்கணங்களுக்கும் விளக்கம் கூறுவதற்கே உரைநடை பயன்படுத்தப்பட்டது .
இலக்கியம் இயற்றப்பட்ட செய்யுள்களின் அமைப்புப் பற்றிப் படிப்பதே யாப்பு இலக்கணம் ஆகும் .
செய்யுள்களில் பல வகைகள் உள்ளன .
செய்யுளின் முக்கியக் கூறாக இருப்பது ஓசை. வெவ்வேறு விதமான ஓசைகளை அடிப்படையாகக் கொண்டு பலவிதமான செய்யுள்கள் உருவாகியுள்ளன .
பழைய காலத்தில் இருந்த முக்கியமான செய்யுள் வகைகள் ஆசிரியப்பா , வெண்பா , கலிப்பா , வஞ்சிப்பா ஆகியவை ஆகும் .
இவற்றுடன் கலித்துறையும் பழைய காலத்தில் சிறப்பாக விளங்கியது .
பக்தி இலக்கியமும் காப்பியங்களும் தோன்றிய காலத்தில் விருத்தம் என்ற செய்யுள் வகை பரவியது .
பிற்காலத்தில் சிந்து , கும்மி முதலிய இசைப்பாடல் யாப்புகளிலும் செய்யுள்கள் இயற்றப்பட்டன .
யாப்பு இலக்கணத்தில் செய்யுள் பற்றியும் செய்யுளின் உறுப்புகள் பற்றியும் கூறப்படும் .
அசை , சீர் , தளை , அடி , தொடை ஆகியவை யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் ஆகும் .
இந்த உறுப்புகளைப் பற்றியும் ஆசிரியப்பா , வெண்பா , வஞ்சிப்பா , கலிப்பா ஆகிய பாக்களையும் அவற்றின் வகைகளையும் பற்றியும் படிப்பதே யாப்பு இலக்கணம் ஆகும் .
அசை
எழுத்துகள் சேர்ந்து அசையாக வருகின்றன .
அசை நேர் அசை , நிரை அசை என்று இரண்டு வகைப்படும் .
ஒரு குறில் எழுத்து அல்லது நெடில் எழுத்து , தனியாகவோ மெய் எழுத்துடன் சேர்ந்தோ வருவது நேர் அசை எனப்படும் .
க - குறில் எழுத்து
கல் - குறில் + மெய் எழுத்து
கா - நெடில் எழுத்து
கால் - நெடில் + மெய் எழுத்து
குறில் , நெடில் ஆகிய இரண்டும் தொடர்ந்து வருவதும் இரண்டு குறில் எழுத்துகள் தொடர்ந்து வருவதும் நிரை அசை ஆகும் .
இவற்றுக்குப் பின் மெய் எழுத்து வந்தாலும் நிரை அசை ஆகும் .
கிளி - இரண்டு குறில் எழுத்துகள் மயில் - இரண்டு குறில் + மெய் எழுத்து
புறா - குறில் நெடில் எழுத்துகள்
இறால் - குறில் நெடில் + மெய் எழுத்து
மெய் எழுத்தைத் தவிர்த்துப் பார்த்தால் நிரை அசையில் இரண்டு எழுத்துகள் இருக்கும் .
சீர் :
அசைகள் இணைந்து வருவது சீர் ஆகும் .
ஒரே அசை சீராக இருப்பதும் உண்டு .
இரண்டு , மூன்று , நான்கு அசைகள் சேர்ந்து சீராக அமைவதும் உண்டு .
சீர்கள் பின்வருமாறு அமையும் :
ஓர் அசைச் சீர்
ஓர் அசை மட்டுமே வருவது ஓர் அசைச் சீர் ஆகும் .
க , கல் , கா , கால் - நேர் அசை
கடு , கடல் , பலா , வரால் - நிரை அசை
ஈர் அசைச் சீர்
இரண்டு அசைகள் சேர்ந்து வருவது ஈரசைச் சீர்ஆகும் .
நேர் நேர் நிரை
நேர் நேர் நிரை
நிரை நிரை
இவ்வாறு ஈர் அசைச் சீர்கள் நான்கு ஆகும் .
மூவசைச் சீர்
மூன்று அசைகள் சேர்ந்து வருவது மூவசைச் சீர் ஆகும் .
நேர் நேர் நேர்
நிரை நேர் நேர்
நேர் நிரை நேர்
நிரை நிரை நேர்
நேர் நேர் நிரை
நிரை நேர் நிரை
நேர் நிரை நிரை
நிரை நிரை நிரை
நேர் அசையில் முடியும் மூவசைச் சீர்கள்நான்கும் , நிரை அசையில் முடியும் மூவசைச் சீர்கள் நான்கும் ஆக மூவசைச் சீர்கள் எட்டு ஆகும் .
நாலசைச் சீர்
நான்கு அசைகள் சேர்ந்து வருவது நாலசைச் சீர்எனப்படும் .
நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நிரை நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நிரை நிரை நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நிரை நேர் நிரை நிரை நேர் நிரை நிரை நிரை நிரை நிரை நிரை நிரை
நேர் அசையில் முடியும் நாலசைச் சீர் எட்டும் , நிரை அசையில் முடியும் நாலசைச் சீர் எட்டும் ஆக நாலசைச் சீர்கள் பதினாறு ஆகும் .
சீர்களைப் பற்றிக் கூறும்போது அவற்றை எளிமையாக நினைவில் வைக்கும் பொருட்டு அவற்றுக்கு வாய்பாடு கூறப்பட்டுள்ளது .
சீர் வாய்பாடுகள் பின்வருமாறு அமையும் : ஓரசைச் சீர்களில் நேர் அசைவரும் சீர் நாள் என்றும் , நிரை அசை வரும் சீர் மலர் என்றும் கூறப்படும் .
ஈரசைச் சீர் வாய்பாடு பின்வருமாறு அமையும் .
நேர் நேர் - தேமா
நிரை நேர் - புளிமா
நேர் நிரை - கூவிளம்
நிரை நிரை - கருவிளம்
நேர் ஈற்றுச் சீர்களை மாச்சீர் என்றும் நிரை ஈற்றுச் சீர்களை விளச்சீர் என்றும் கூறுவர் .
மூவசைச் சீர்களில் நேர் ஈற்றுச் சீர்களுக்கு மேற்கண்ட வாய்பாடுகளுடன் இறுதியில் காய் என்பதும் நிரை ஈற்றுச் சீர்களுக்கு இறுதியில் கனி என்பதும் வாய்பாடாக வரும் .
நேர் நேர் நேர் தேமாங்காய்
நிரை நேர் நேர் புளிமாங்காய்
நேர் நிரை நேர் கூவிளங்காய்
நிரை நிரை நேர் கருவிளங்காய்
நேர் நேர் நிரை தேமாங்கனி
நிரை நேர் நிரை புளிமாங்கனி
நேர் நிரை நிரை கூவிளங்கனி நிரை நிரை நிரை கருவிளங்கனி