நூறு + பழங்கள் = நூறு பழங்கள்
ஒரு , இரு , அறு , எழு என்னும் எண்ணுப்பெயரடைகளின் முன்வரும் வல்லினம் மிகாது .
சான்று :
ஒரு + பொருள் = ஒருபொருள்
இரு + தடவை = இருதடவை
அறு + படைவீடு = அறுபடைவீடு
எழு + கடல் = எழுகடல்
6.2.3 வேற்றுமைப் புணர்ச்சியில் வரும் வல்லினம் மிகாமை
i ) இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது .
சான்று :
சாமி + கும்பிடு = சாமி கும்பிடு ( சாமியைக் கும்பிடு )
நகை + செய்தான் = நகை செய்தான் ( நகையைச் செய்தான் )
கனி + தின்றான் = கனி தின்றான் ( கனியைத் தின்றான் )
காய் + கொடுத்தான் = காய்கொடுத்தான் ( காயைக் கொடுத்தான் )
தமிழ் + படித்தான் = தமிழ் படித்தான் ( தமிழைப் படித்தான் )
நீர் + பருகினான் = நீர் பருகினான் ( நீரைப் பருகினான் )
ii ) நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் அதன்முன் வரும் வல்லினம் மிகாது .
சான்று :
பொன்னி + கணவன் = பொன்னி கணவன் ( பொன்னிக்குக் கணவன் )
iii ) ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாக இருப்பின் அதன்முன் வரும் வல்லினம் மிகாது .
சான்று :
காளி + கோயில் = காளிகோயில்
கண்ணகி + சிலம்பு = கண்ணகி சிலம்பு
தம்பி + துணி = தம்பி துணி
மகளிர் + கல்லூரி = மகளிர் கல்லூரி
ஆசிரியர் + கழகம் = ஆசிரியர் கழகம்
தாய் + சொத்து = தாய் சொத்து
மனைவி + கண்ணீர் = மனைவி கண்ணீர்
நடிகை + கோபம் = நடிகை கோபம்
வள்ளி + திருமணம் = வள்ளி திருமணம்
iv ) மூன்றாம் வேற்றுமைக்கு ஆன் , ஆல் , ஒடு , ஓடு , உடன் என்னும் உருபுகள் உள்ளன .
இவற்றுள் ஒடு , ஓடு என்பன உயிர் ஈறு கொண்டவை .
இவற்றின் முன் வரும் வல்லினம் மிகாது .
சான்று :
என்னொடு + படித்தவன் = என்னொடு படித்தவன்
யாரோடு + பேசினாய் = யாரோடு பேசினாய் ?
இக்காலத் தமிழில் ‘ கொண்டு ’ என்னும் சொல்லுருபும் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய கருவிப் பொருளில் வழங்குகிறது .
இதன் முன் வரும் வல்லினமும் மிகாது .
சான்று :
கத்தி கொண்டு + குத்தினான் = கத்திகொண்டு குத்தினான்
( கத்தியால் குத்தினான் )
வாள்கொண்டு + போர் செய்தான் = வாள்கொண்டு போர் செய்தான்
v ) ஐந்தாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் இல் , இன் என்பன ஆகும் ; பொருள் : நீக்கப் பொருள் ( விலகிச் செல்லல் )
ஐந்தாம் வேற்றுமை விரியில் இல் , இன் என்னும் உருபுகள் மட்டும் நின்று நீக்கப் பொருளைக் காட்டுவது இல்லை .
இல் என்பதோடு இருந்து என்னும் சொல்லுருபும் , இன் என்பதோடு நின்று என்னும் சொல்லுருபும் சேர்ந்தே நீக்கப் பொருளை உணர்த்துகின்றன .
இவ்விரு உருபுகளின் முன்வரும் வல்லினமும் மிகாது .
சான்று :
வீட்டிலிருந்து + சென்றான் = வீட்டிலிருந்து சென்றான்
கூட்டினின்று + பறந்தது = கூட்டினின்று பறந்தது vi ) ஆறாம் வேற்றுமைக்கு உரிய உருபுகளாக நன்னூலார் அது , ஆது , அ என்னும் மூன்றனைக் குறிப்பிடுகிறார் .
இவற்றுள் ஆது , அ என்பன இக்காலத் தமிழில் இல்லை .
அது என்பது மட்டுமே உண்டு .
அது என்னும் உருபின் முன் வரும் வல்லினம் மிகாது .
சான்று :
யானையது + கொம்பு = யானையது கொம்பு
எனது + புத்தகம் = எனது புத்தகம்
இக்காலத் தமிழில் ‘ உடைய ’ என்னும் சொல்லுருபும் , ஆறாம் வேற்றுமைக்கு உரிய கிழமைப் பொருளில் ( உடைமைப் பொருளில் ) வழங்குகிறது .
இதன் முன் வரும் வல்லினமும் மிகாது .
சான்று :
என்னுடைய + புத்தகம் = என்னுடைய புத்தகம்
பண்புடைய + கணவர் = பண்புடைய கணவர்
ஆசிரியருடைய + பெருமை = ஆசிரியருடைய பெருமை
6.2.4 அல்வழிப் புணர்ச்சியில் வரும் வல்லினம் மிகாமை
அல்வழிப் புணர்ச்சியில் வரும் தொகைநிலைத் தொடர் , தொகா நிலைத்தொடர் என்னும் இருவகைத் தொடர்களில் வல்லினம் மிகும் இடங்கள் எவை என்பதைப் பார்ப்போம் .
• தொகைநிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகாமை
i ) அல்வழியில் உள்ள தொகைநிலைத் தொடர்களில் ஒன்றான வினைத்தொகை மிகவும் அற்புதமான தொகை .
ஊறுகாய் என்று சொன்னதும் , நம் நாவில் அந்தக் காயின் சுவை ஊறி நிற்கும் .
நேற்று ஊறிய காய் , இன்று ஊறுகின்ற காய் , நாளையும் ஊறும் காய் – ஊறுகாய் .
மூன்று காலங்களையும் காட்டும் இடைநிலைகள் என்னும் உருபுகள் மறைந்திருப்பதால் , வினைத்தொகை எனப்பட்டது .
வினைத்தொகையில் வரும் வல்லினம் கட்டாயம் மிகாது .
வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும் எனப் பார்த்தோம் .
ஆனால் வினைத்தொகையில் மட்டும் நிலைமொழி வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தாலும் வல்லினம் மிகாது .
சான்று :
நாட்டு + புகழ் = நாட்டுபுகழ்
ஈட்டு + பொருள் = ஈட்டுபொருள்
இவ் வன்தொடர்க் குற்றியலுகரங்களின் முன்வரும் வல்லினம் வினைத்தொகையில் மிகவில்லை .
சுடு + காடு = சுடுகாடு
நடு + கல் = நடுகல்
குடி + தண்ணீர் = குடிதண்ணீர்
மூடு + பனி = மூடுபனி
சுடு + சோறு = சுடுசோறு
விடு + கதை = விடுகதை
திருவளர் + செல்வன் = திருவளர் செல்வன்
திருவளர் + செல்வி = திருவளர் செல்வி
ii ) இரண்டு சொற்களோ , இரண்டுக்கு மேற்பட்ட சொற்களோ வரும்போது , அச்சொற்களின் இறுதியில் உம்மை மறைந்திருப்பது உம்மைத் தொகை எனப்படும் .
உம்மைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது .
சான்று :
இட்லி + தோசை = இட்லி தோசை ( இட்லியும் தோசையும் )
யானை + குதிரை = யானை குதிரை ( யானையும் குதிரையும் )
மா + பலா + வாழை = மா பலா வாழை ( மாவும் , பலாவும் , வாழையும் )
இரவு + பகல் = இரவு பகல் ( இரவும் பகலும் )
நரை + திரை = நரைதிரை ( நரையும் திரையும் )
கல்வி + கேள்வி = கல்வி கேள்வி ( கல்வியும் கேள்வியும் )
நன்மை + தீமை = நன்மை தீமை ( நன்மையும் தீமையும் )
• தொகாநிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகாமை
i ) எழுவாய்த் தொடரில் வரும் வல்லினம் மிகாது .
சான்று :
கண்ணகி + பேசினாள் = கண்ணகி பேசினாள்
மாதவி + பாடினாள் = மாதவி பாடினாள் கோழி + கூவியது = கோழி கூவியது
யானை + பிளிறியது = யானை பிளிறியது
ii ) விளித்தொடரில் வரும் வல்லினம் மிகாது .
சான்று :
மகனே + கேள் = மகனே கேள்
தம்பீ + போ = தம்பீ போ
அரசே + பார் = அரசே பார்
iii ) ஏவல் வினைமுற்று , வியங்கோள் வினைமுற்று ஆகியவற்றின் முன் வரும் வல்லினம் மிகாது .
சான்று :
• ஏவல் வினைமுற்று
வா + கண்ணா = வா கண்ணா
போ + தம்பி = போ தம்பி
படி + பாடத்தை = படி பாடத்தை
புறப்படு + பள்ளிக்கு = புறப்படு பள்ளிக்கு
• வியங்கோள் வினைமுற்று
வாழ்க + தலைவா = வாழ்க தலைவா
ஒழிக + தீமைகள் = ஒழிக தீமைகள்
வருக + புலவரே = வருக புலவரே
iv ) அகர ஈற்றுப் பெயரெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகாது .
பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் , குறிப்புப் பெயரெச்சம் , எதிர்மறைப் பெயரெச்சம் , ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப் பலவகைப்படும் .
இவற்றுள் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தைத் தவிர , மற்றப் பெயரெச்சங்கள் அனைத்தின் முன்னும் வரும் வல்லினம் மிகாது .
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகும் என்பதை ஏற்கெனவே பார்த்தோம் .
• தெரிநிலைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகாமை
தெரிநிலைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகாது .
சான்று :
வந்த + பையன் = வந்த பையன்
ஓடிய + குதிரை = ஓடிய குதிரை
கேட்ட + கேள்வி = கேட்ட கேள்வி
பாடிய + பாட்டு = பாடிய பாட்டு
கொடுத்த + கை = கொடுத்த கை
கூடிய + கூட்டம் = கூடிய கூட்டம்
• குறிப்புப் பெயரெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகாமை
குறிப்புப் பெயரெச்சத்தை இக்கால மொழியியலார் பெயரடை ( Adjective ) என்று குறிப்பிடுவர் .
இதன் முன் வரும் வல்லினம் மிகாது .
சான்று :
நல்ல + பையன் = நல்ல பையன்
பெரிய + தெரு = பெரிய தெரு
புதிய + சிந்தனை = புதிய சிந்தனை
சிறிய + பேனா = சிறிய பேனா
கரிய + குதிரை = கரிய குதிரை
அரிய + பொருள் = அரிய பொருள்
• எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகாமை
செல்லாத , காணாத , ஓடாத என்பன போன்ற பெயரெச்சங்கள் எதிர்மறைப் பொருளை உணர்த்துவதால் எதிர்மறைப் பெயரெச்சங்கள் எனப்படும் .
இவற்றின் முன் வரும் வல்லினம் மிகாது .
சான்று :
செல்லாத + காசு = செல்லாத காசு
காணாத + கண்கள் = காணாத கண்கள்
ஓடாத + குதிரை = ஓடாத குதிரை
v ) ண்டு , ந்து , ன்று என முடியும் மென்தொடர்க் குற்றியலுகர வினையெச்சங்களுக்கு முன்னும் , ய்து என முடியும் இடைத்தொடர்க் குற்றியலுகர வினையெச்சங்களுக்கு முன்னும் வரும் வல்லினம் மிகாது .
சான்று : கண்டு + பேசினார் = கண்டு பேசினார்
கொண்டு + போனான் = கொண்டு போனான்
வந்து + சென்றான் = வந்து சென்றான்
தின்று + பார்த்தான் = தின்று பார்த்தான்
கொன்று + குவித்தான் = கொன்று குவித்தான்
செய்து + தந்தான் = செய்து தந்தான்
கொய்து + கொடுத்தாள் = கொய்து கொடுத்தாள்
வினையெச்சத்திலே குறிப்பு வினையெச்சம் என்ற ஒன்று உண்டு என்பதை ஏற்கெனவே பார்த்தோம் .
அகர ஈற்றுக் குறிப்பு வினையெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகும் என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம் .
குறிப்பு வினையெச்சத்தில் உகர ஈற்றுக் குறிப்பு வினையெச்சங்களும் உண்டு .
இவற்றின் முன் வரும் வல்லினம் மிகாது .
சான்று :
நன்கு + பேசினான் = நன்கு பேசினான்
நன்று + பேசினாய் = நன்று பேசினாய்
6.2.5 வல்லினம் மிகா இடங்கள் - மேலும் சில
i. ஆ , ஓ என்னும் வினா எழுத்துகளை இறுதியிலே கொண்டு முடியும் சொற்களுக்கு முன்னர் வரும் வல்லினம் மிகாது .
சான்று :
அவனா + தந்தான் = அவனா தந்தான் ?
அவளோ + கொடுத்தாள் = அவளோ கொடுத்தாள் ?
ii. பல , சில என்னும் சொற்களின் முன்வரும் வல்லினம் மிகாது .
சான்று :
பல + பொருள் = பலபொருள்
சில + பூக்கள் = சிலபூக்கள்
iii. இரு வடமொழிச் சொற்கள் சேர்ந்து வரும் தொடர்களில் வரும் வல்லினம் மிகாது .
சான்று :
ஆதி + பகவன் = ஆதிபகவன்
தேச + பக்தி = தேச பக்தி
iv. வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் முன் கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதியும் , தல் என்னும் தொழிற்பெயர் விகுதியும் வந்தால் வல்லினம் மிகுவதில்லை .
சான்று :
எழுத்து + கள் = எழுத்துகள்
வழக்கு + கள் = வழக்குகள்
வாக்கு + கள் = வாக்குகள்
வகுப்பு + கள் = வகுப்புகள்
ஆக்கு + தல் = ஆக்குதல்
வாழ்த்து + தல் = வாழ்த்துதல்
கூப்பு + தல் = கூப்புதல்
தூற்று + தல் = தூற்றுதல்
தொகுப்புரை
இதுகாறும் இக்காலத் தமிழில் வல்லினம் எந்தெந்த இடங்களில் மிகும் என்பதையும் , எந்தெந்த இடங்களில் மிகாது இயல்பாகும் என்பதையும் தக்க சான்றுகளுடன் விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்தோம் .
வல்லினம் மிகும் மற்றும் மிகா இடங்கள் பற்றி இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ள விதிகளை நன்கு பின்பற்றினால் நாம் தமிழைப் பிழையில்லாமல் எழுதவும் , பேசவும் முடியும் .
நாம் நாள்தோறும் படிக்கின்ற தமிழ் நாளிதழ்கள் , அவ்வப்பொழுது படிக்கின்ற தமிழ் நூல்கள் , நமக்குப் பாடமாக அமைந்த பாடநூல்கள் , இணையவழிப் பாடங்கள் ஆகியவற்றை உற்று நோக்கி எங்கெங்கு வல்லினம் மிகுகிறது , மிகாது இயல்பாகிறது என்பதை எல்லாம் ஆழ்ந்த கவனத்துடன் படித்து வருவோமேயானால் தமிழை நல்ல தமிழாக , பிழையில்லாத தமிழாக எழுத நம்மால் முடியும் .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. எண்ணுப்பெயர்களில் எவற்றின் முன்வரும் வல்லினம் மிகாது ?
விடை
2. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகுமா ?
விடை
3. மூன்றாம் வேற்றுமைக்கும் , ஆறாம் வேற்றுமைக்கும் உரிய சொல்லுருபுகள் யாவை ?
விடை
4. வினைத்தொகையில் வல்லினம் மிகுமா ?
ஒரு சான்று தருக . விடை