இந்நூல்கள் காட்டும் பண்பாட்டை இங்குக் காணலாம் .
தமிழில் அற நூல்கள் E
சங்க இலக்கியங்களிலேயே ஆங்காங்கு உரிய அறக் கருத்துகளைக் கூறுவதற்குப் புலவர்கள் தவறவில்லை .
சமூகப் போக்கில் மாறுதல்கள் விளைய வேண்டும் என விரும்பிய சான்றோர்கள் அவ்வப்போது அறநூல்களை வரைந்தனர் .
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பதினொரு நூல்கள் அறநூல்கள் .
இவை அக்காலப் பண்பாட்டை உருவாக்கப் பெரிதும் காரணமாயிருந்தன .
அவையாவன :
• திருக்குறள்
• நாலடியார்
• நான்மணிக்கடிகை
• இன்னா நாற்பது
• இனியவை நாற்பது
• திரிகடுகம்
• ஆசாரக் கோவை
• பழமொழி
• சிறுபஞ்சமூலம்
• முதுமொழிக்காஞ்சி
• ஏலாதி
மேற்கூறிய பதினொரு நூல்கள் தமிழரின் அறவாழ்வைக் காட்டுவன .
இவை தவிர , பிற்காலத்தில் ஒளவையார் , குமரகுருபரர் , அதிவீரராம பாண்டியர் , சுப்பிரமணிய பாரதியார் போன்ற புலவர் பெருமக்கள் நீதிநூல்களை இயற்றியுள்ளனர் .
சிறுவர்க்கெனவே ஆத்திசூடி , மூதுரை , நல்வழி , கொன்றைவேந்தன் ( இயற்றியவர் : ஒளவையார் ) , வெற்றிவேற்கை ( இயற்றியவர் : அதிவீரராம பாண்டியன் ) , நன்னெறி ( இயற்றியவர் : சிவப்பிரகாசர் ) போன்ற நீதிநூல்கள் எழுதப்பட்டன .
சதகம் எனப்படும் நூறு பாடல்கள் கொண்ட நீதி நெறித் தொகுப்புகளும் தோன்றின .
திருக்குறள் போற்றும் அறவாழ்வு E
தமிழரின் அறவாழ்வைக் காட்டும் நூல்களில் திருக்குறளின் பங்கு மிகவும் உயரியது .
திருக்குறள் ஒரு சமூகத்தளத்தில் நின்று பாடப்பட்டது எனினும் , உலகனைத்திற்கும் பொதுவான தன்மைகள் அந்நூலில் மிகுதியாயுள்ளன .
கடுமையான குறிக்கோள்களை நடைமுறைக்கு ஒவ்வாத நிலையிலிருந்து பேசாமல் , வாழ்க்கையை உயர்ந்ததாகவும் , இனியதாகவும் ஆக்கிக் கொள்வதற்குப் பயன்படும் ஒரு பண்பாட்டு வழிகாட்டியாகத் திருக்குறள் விளங்குகின்றது .
திருக்குறள் காட்டும் அறநெறிக் கோட்பாடுகள் பிறிதொரு பாடத்தொகுப்பில் ( ' வள்ளுவரின் வாழ்வியல் தத்துவம் ' ) விரிவாகக் கூறப்பெற்றுள்ளன .
இப்பாடத்தில் ஒழுக்கம் , கள் உண்ணாமை , ஊன் உண்ணாமை , வரைவின் மகளிர் - இவை பற்றிய கருத்துகளை மட்டும் காண்போம் .
3.2.1 திருவள்ளுவர் கூறும் கள் உண்ணாமை
சங்க காலச் சமூகம் கள் குடிப்பதைத் தவறென்று குறிக்கவில்லை .
விருந்தோம்புவதில் கள் ஒரு தகுதியான இடத்தைப் பெற்றிருந்தது .
ஆனால் திருவள்ளுவர் கள் குடித்தல் தீய பழக்கமென்பதை அறிவுறுத்தத் தயங்கவில்லை .
கள் குடிப்பதால் வரும் கேடுகளைத் திருவள்ளுவர் கள் உண்ணாமை என்ற அதிகாரத்தில் கீழ்க்காணும் வகைகளில் கூறுகின்றார் :
கள் மயக்கம்
• கள் குடிப்பவரைக் கண்டு பகைவர் அஞ்சமாட்டார் .
• கள் குடிப்பவர் புகழை இழந்துவிடுவர் .
• கள் குடிப்பவர் சான்றோரால் மதிக்கப்படமாட்டார் .
• கள் குடிப்பவரைத் தாயும் வெறுப்பாள் .
• கள் குடிப்பவரை நாணம் என்னும் உணர்ச்சி நீங்கிவிடும் .
• கள் குடித்தல் அறியாமையின் விளைவாகும் .
• கள் குடித்தலும் இறப்பும் வேறுபட்டவை அல்ல .
• கள் குடிப்பவரைக் கண்டு பிறர் நகைப்பர் .
• கள் குடிப்பதனால் பிறர் அறியாமல் இருந்த குற்றங்கள் எல்லாம் வெளிப்படும் .
• கள் உண்பவனைத் திருத்துதல் இயலாது .
• கள் உண்ணும் பழக்கத்திற்கு அடிமையாகிய ஒருவன் , சுய நினைவில் இருக்கும் போது , கள் உண்டு மயங்கிய ஒருவனைக் கண்டால் திருந்தக் கூடும் .
ஒரு மனிதனைப் பண்பாட்டு உயர்நிலையிலிருந்து கீழே தள்ளிவிடும் இக்கொடிய பழக்கத்தைத் திருவள்ளுவரே முதன்முதலில் இந்த அளவுக்குக் கண்டித்துள்ளார் .
3.2.2 ஒழுக்கம் விழுப்பம் தரும்
நல்ல நெறியில் வாழ்வது என்பது உடலுக்கும் மனத்திற்கும் நல்லது ; சமூக அமைதிக்கும் இனியது .
இன்று ஒழுக்கமின்மையே ' எய்ட்ஸ் ' நோயை உருவாக்கியுள்ளது . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று கூறியுள்ளார் .
சங்க காலத்தில் பெரிதும் கடியப்படாத பரத்தைமையினையும் வள்ளுவர் கண்டிக்கின்றார் .
பொருள் கொடுத்து பெண் ஒருத்தியைத் தழுவுவது பிணத்தைத் தழுவுவதைப் போன்றது என்கிறார் .
சங்ககாலப் பண்பாடு பரத்தைமையைக் கண்டித்து மொழியவில்லை .
ஆணின் ஒழுங்கைச் சங்கச் சமூகம் பெரிதும் வற்புறுத்தவில்லை .
பரத்தை என்ற பெண்பாற் சொல் மட்டுமே சங்க இலக்கியத்தில் உண்டு .
அதற்கு நிகராக ஆண்பாலுக்கும் பொருந்தப் பரத்தன் என்ற சொல்லைத் திருவள்ளுவரே ஆளக் காண்கிறோம் ( குறள் , 1311 )
விலைமாதரின் தோளைச் சேர்வோர் கீழ்மக்கள் என்றும் , அவ்வுறவு நரகத்தை ஒத்தது என்றும் வள்ளுவர் கூறுகின்றார் .
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு .
குறள் - 919 )
ஒழுக்க வரையறை இல்லாத பெண்களின் தோள்களைச் சேர்தல் இழிந்த மக்களுக்கு உரிய செயலாகும் ; அச்செயல் சேற்றில் விழுந்து புரள்வது போலக் கீழானதாகும் என்பது மேற்சொன்ன குறளின் பொருளாகும் .
3.2.3 ஊன் உண்ணாமை
திருவள்ளுவர் அருள் உணர்வின் அடிப்படையில் புலால் உணவையும் மறுக்குமாறு அறிவுறுத்துகின்றார் .
சங்க காலத்தில் கபிலர் , ஒளவையார் போன்ற பெரும் புலவர்களும் ஊன் உணவின் பெருமை பேசக் காண்கின்றோம் .
ஆனால் திருவள்ளுவர் ,
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிதுஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள் .
( குறள் - 251 )
புலால் மறுப்பு
என்கின்றார் .
தன் உடம்பைப் பெருக்க வைத்துக்கொள்ள வேறொன்றின் ஊனை உண்பவன் எங்ஙனம் அருள் உணர்வைக் காட்ட முடியும் எனக் கேட்கிறார் .
சமண பௌத்த சமயங்களும் புலால் உண்ணுதலைக் கண்டித்திருக்கின்றன .
தமிழகத்தில் அதைக் கண்டிக்கும் முதல் குரல் திருவள்ளுவருடையதாக இருந்திருக்கிறது .
தமிழர் அருள் உணர்வு மிக்கவர் .
ஒரு பூங்கொடி , ஒரு மயில் பறவை என அஃறிணை உயிர்களும் துயருறுதல் கூடாது என நினைத்த சமூகத்தில் ஊன் உணவைச் சரியானதென்று கருத முடியாத நிலை தோன்றியதில் வியப்பில்லை .
வைதிக சமயம் வேள்வியில் உயிர்க்கொலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது .
பசுவைப் புனிதமாகக் கருதுவதாகக் கூறும் வைதிக சமயம் முற்காலத்தில் வேள்வியின் பொருட்டுக் கொலைப்படுத்தப் பசுவைக் கட்டி வைத்திருந்ததனை மணிமேகலை குறிப்பிடுகின்றது .
ஆயிரம் வேள்விகள் கூடப் பெரிதில்லை ; ஓர் உயிரைக் கொல்லாத நோன்பே பெரியது என்கிறார் திருவள்ளுவர் .
புண்ணை யாராவது உண்பார்களா என அவ்வுணவில் ஓர் அருவருப்பை ஏற்படுத்துகிறார் .
திருவள்ளுவர் கண்ட இப்பண்பாடே அருளாளர்களின் சமயமாக வளர்ந்து இராமலிங்க வள்ளலாரின் உயிரிரக்கம் எனப்படும் சீவகாருணிய அறமாக ஓங்கியது .
தமிழர்களில் பலர் சைவ உணவினராகவும் , புலால் உண்பவர்களில் பலர் மாதத்தில் சில நாட்களேனும் நோன்பு மேற்கொள்வோராகவும் அமைவது இப்பண்பாட்டின் வளர்ச்சியால்தான் என அறியலாம் .
3.2.4 வாழ்க்கையில் இருநிலைகள்
தமிழர் பண்பாட்டில் மிகக் குறிப்பிடத்தக்க இரண்டு நிலைகள் இல்லறமும் துறவறமும் ஆகும் .
பிரம்மசரியம் , சந்நியாசம் , கிரகஸ்தம் , வானப் பிரஸ்தம் என்ற நான்கு நிலைகளை வடமொழி கூறுகின்றது .
வடமொழி இதிகாசங்களில் இடம்பெறும் முனிவர்கள் காடுகளில் வாழ்ந்தாலும் மனைவி மக்களோடு வாழ்ந்தனர் .
அரசியல் துறையிலும் அவர்களுக்குப் பங்கு இருந்தது .
மேனகை போன்ற பெண்களிடம் அவர்கள் மனத்தைப் பறிகொடுத்ததும் உண்டு .
துருவாசர் , விசுவாமித்திரர் போன்றோர் அடங்காச்சினம் கொண்டவர்களாகவும் இருந்திருக்கின்றனர் .
அம்முனிவர்கள் நீங்காத சாபங்களை இடுவோராகவும் இருந்துள்ளனர் .
தமிழர் பண்பாடு கண்ட இல்லறம் துறவறம் இவற்றினின்றும் வேறானவை .
• இல்லறம் எதற்கு ?
இல்லறம் எதற்கு என்ற வினாவிற்குச் சங்க இலக்கியமான குறிஞ்சிப் பாட்டு விளக்கம் கூறுவதைக் கேளுங்கள் !
விருந்து உபசரித்தல்
“ பலரும் உண்ணும்படி அகலமாகக் கதவு திறந்து கிடக்கும் வாசலையுடைய பெரிய வீட்டில் , சோற்றை வருகின்றவர்களுக்கெல்லாம் இல்லையென்னாமல் இட வேண்டும் .
அதனால் வீடு பொலிவு பெற வேண்டும் .
விருந்தினர் உண்டது போக மிஞ்சியிருக்கும் உணவை மனைவியாகிய நீ இட நான் உண்ண வேண்டும் .
அவ்வுயர்ந்த இல்லறம் நம்மைக் கரையேற்றும் "
என்று தலைவன் தன் காதலியிடம் கூறுகின்றான் .
ஒருவன் திருமணம் செய்து கொள்வதே விருந்தோம்பல் என்னும் கடமையைச் செய்ய என்று கூறும் பண்பாடு தமிழருடையதாக இருந்திருக்கின்றது . வேளாண் சமூகத்தின் அடிப்படைப் பண்பாடு இதுதான் .
வீடு முழுவதும் நிறைந்திருக்கும் தானியத்தை அடுத்த விளைச்சல் வந்து சேருமுன் செலவழிக்க வேண்டும் .
விருந்து செய்யவும் விழாக் கொண்டாடவும் வேண்டும் .
பொருளாதார உலகில் ' பணம் ' வந்துவிட்ட பிறகே , விளைச்சல் பொருள் பணமாக மாற்றப்பட்ட பிறகே இந்த விருந்திடும் உள்ளம் சுருங்கியிருக்கிறது .
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு ( குறள் - 86 )
என்று விருந்து செய்தலை இடைவிடாத கடமையாகத் திருவள்ளுவர் கூறுகின்றார் .
எனவே இல்லறத்தின் தலையாய கடன் விருந்தோம்பலாகும் .
• எது துறவறம் ?
மனைவி , மக்கள் , சுற்றத்தார் என நெருங்கிய உறவு வட்டத்தில் அன்பு காட்டி வாழ்ந்த ஒருவன் இல்லறத்தின் தேவைகளை நிறைவு செய்த நிலையில் , தன்னை அடுத்த அயலார்க்கும் , ஊரார்க்கும் , பிறர்க்கும் , பிற பிற உயிர்களுக்கும் நல்லன ஆற்றும் வகையில் அருள் உணர்ச்சி பெற வேண்டும் .
இதுவே துறவு .
துறவு என்பது பற்று நீக்கி வாழ்வதன்று ; பற்றின் விரிவு .
துறவு நிலை அடையும் ஒருவன் தன் வீட்டிலுள்ளவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருந்த நிலை மாறி எல்லா உயிர்க்கும் அன்பு செய்வோராக மாறுகிறான் .
இதுவே துறவறம் எனப்பட்டது .
அருள் என்பது அன்பின் குழந்தை என்கிறார் திருவள்ளுவர் .
எனவே திருவள்ளுவர் கூறும் துறவறம் நாட்டில் ஒவ்வொருவர்க்கும் உரியது என அறியலாம் .
3.2.5 சில நம்பிக்கைகள்
தமிழர் பண்பாட்டில் , நல்வினை , தீவினை , ஊழ் , மறுபிறப்பு ஆகியவற்றுக்குப் பேரிடமுண்டு .
வினைகளின் பயன் தொடர்ந்து அடுத்தடுத்த பிறப்புகளைத் தரும் எனத் தமிழர் நம்பினர் .
திருவள்ளுவரும் இக்கருத்துக்களைக் கொண்டிருந்தார் .
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும் ( குறள்-371 )
என்று ஊழின் வலிமையைத் திருவள்ளுவர் கூறுகின்றார் .
எனினும் ஊழையும் விலக்க முடியும் என்பதே வள்ளுவரின் புரட்சி நோக்கமாகும் .
ஊழையும் உப்பக்கம் காண்பர்
ஆள்வினையோடு தொடர்ந்து முயல்பவர் ஊழின்
தாக்குதலை வென்றுவிட முடியும் என்கிறார்
வள்ளுவர் .
விதி வலியது மாற்ற முடியாதது என்று கூறி அழியும்
குருட்டு நம்பிக்கை கொண்ட சமூகங்களைப் போல
அல்லாமல் முயற்சியின் வலிமையை வற்புறுத்திய
சமூகமாகத் தமிழ்ச் சமூகம் காட்சி தருகின்றது .
3.2.6 வாழ்க்கைக் கடமைகள்
பொருள் ஈட்டுதல் , குடும்பத்தைப் பாதுகாத்தல் , பிள்ளைகளை வளர்த்தல் , சமூகத் தொண்டு செய்தல் போன்ற பல கடமைகள் மனிதர்களுக்கு உள்ளன .
தனி மனிதனாயினும் அவனும் சமூகத்தில் ஓர் உறுப்பினன் .
அவ்வகையில் வீட்டுக்கும் நாட்டுக்கும் ஆற்றவேண்டிய கடமைகளைத் தமிழ் அறநூல்கள் எடுத்துரைக்கின்றன .
• பொருள் ஈட்டுதல்
வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது என்பதைத் தமிழினம் உணர்ந்திருந்தது .
பொருள் உடையவரே அறத்தைச் செய்யும் இன்பத்தைத் துய்க்கவும் முடியும் என்பதைத் திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார் .
இரண்டு யானைகள் போரிடும் போது அக்காட்சியை மலை மேலிருந்து பார்ப்பதைப் போலப் பாதுகாப்புடையது பொருள் உடையவன் நிலை என்கிறார் .
அன்பு பெற்றெடுத்த குழந்தை அருள் .
அது பொருள் என்னும் செவிலித் தாயால் வளர்க்கப்படும் என்று கூறுகின்றார் .
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு ( குறள் - 752 )
என்பது உலக நடைமுறையை உணர்ந்து கூறும் குறளாகும் .
பொருளை முயற்சியால் அறவழிகளில் தேடி நற்செயல்களுக்காக அதனைச் செலவிட வேண்டுமென்பது தமிழர் வாழ்க்கை நோக்கமாகும் .
பழியஞ்சிப் பிறரோடு பகுத்துண்டு , ஒப்புரவும் ஈகையும் கொண்டு பண்போடு வாழ்வோர் சான்றாண்மை உடையவர் ஆவர் .
இத்தகையோர் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் ஆவர் .
இவர்கள் மறைந்த பின்னும் தெய்வமென்று போற்றப்படுவர் என வள்ளுவர் கூறுகின்றார் .
• பலர்க்கும் உரிய கடமைகள் வாழ்க்கையில் ஒவ்வொருவர்க்கும் கடமை இருக்கிறது .
தந்தை , தன் மகனைக் கற்றவனாகவும் அவையில் முன்நிற்பவனாகவும் ஆக்க வேண்டும் .
மகன் , ' இவனுடைய தந்தை நோன்பு நோற்று இவனைப் பெற்றிருக்கின்றான் ' என்று கூறுமாறு சிறந்து விளங்க வேண்டும் .
மனைவி , தற்காத்துத் தற்கொண்டானைப் பேணி , புகழை நீங்காமல் காத்து நற்பண்புகளில் சோர்வற்றவள் ஆதல் வேண்டும் .
அரசர் , தன்கீழ் வாழும் குடிமக்களை உயிரெனக் கருதிக் காத்துக் காட்சிக்கு எளியனாகவும் கடுஞ்சொல்லன் அல்லனாகவும் விளங்க வேண்டும் .
அமைச்சர் , வேந்தனுக்கு உறுதுணையாய்ச் சொல்வன்மை , வினைத்தூய்மை உடையவராதல் வேண்டும் .
உழவர் , விளைநிலத்தை நாள்தோறும் சென்று கண்டு , அதனைக் காவல் செய்து பயிர்களுக்குச் செய்யத்தகுவன செய்தல் வேண்டும் .
ஆசிரியன் , மெய்ப்பொருளை எல்லாரும் அறிந்து கொள்ள உரைப்பவனாக ஆதல் வேண்டும் .
மாணவன் , செல்வர் முன் வறியவர் போல ஆசிரியர் முன் தாழ்ந்து நின்று கற்றல் வேண்டும் .
கணவன் , தென் புலத்தார் தெய்வம் விருந்து சுற்றத்தார் தான் எனப்படும் ஐவர்க்கும் உரியன செய்ய வேண்டும் .
வணிகர் , வாணிகத்தை நடுவுநிலைமை தவறாமல் செய்ய வேண்டும் .
சான்றோர் , அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை ஆகிய ஐந்து பண்புகளைக் கொள்ளவேண்டும் .
இவ்வாறு வாழ்க்கையில் ஒவ்வொருவர்க்கும் உரிய கடமையை வற்புறுத்தும் தமிழரின் அறநூல் சாதி , மதம் ஆகியவற்றைப் போற்றவில்லை .
3.2.7 மனத்தூய்மையே அறம்
தமிழ் அறநூல்கள் புறத்தூய்மையைவிட அகத்தூய்மையையே வற்புறுத்துகின்றன .
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறி மனத்தில் மாசு இன்மையையே அறம் என்று கூறுகின்றது , தமிழ் அறம் .
சடங்குகள் , ஆசாரங்கள் , கழுவாய்கள் ஆகியவற்றுக்குத் தமிழர் வாழ்வில் பேரிடமில்லை .
துறவி என்பவன் மொட்டையடித்துக் கொள்வதா , சடைமுடி கொள்வதா என்பன போன்ற வினாக்களுக்கு இங்கு இடமில்லை .
புறப் புனைவுகள் , வேடங்கள் ஆகியவற்றைத் தமிழர் போற்றவில்லை .
மனத்தின்கண் தூய்மை , எவ்வாறு செயல்படுகின்றார் என்பவற்றைப் பொறுத்தே ஒருவர் சமுதாயத்தில் எத்தகையவர் என்பதை முடிவு செய்தனர் .
உருவு கண்டு போற்றுதலும் தூற்றுதலும் தமிழர்க்குப் பொருந்தாச் செயல்களாகும் .
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. கீழ்க்கணக்கு நூல்களில் எத்தனை நூல்கள் அறநூல்கள் ?
விடை
2. கள் குடிப்பவனைக் காணும் தாயின் நிலை யாது ?
விடை
3. பரத்தன் என்ற சொல்லை முதலில் ஆள்பவர் யார் ?
விடை
4. புலால் உண்ணுதலைக் குறித்துத் திருவள்ளுவர் கூறுவது யாது ?
விடை
5. இல்லறத்தின் நோக்கமாகக் குறிஞ்சிப்பாட்டுக் கூறுவதை எடுத்துரைக்க .
விடை
6. தமிழர் பண்பாட்டில் பேரிடம் பெறும் நம்பிக்கைகள் யாவை ?
சமய நோக்கும் அறங்களும் E
நாலடியார் போன்ற பிற்கால அறநூல்களும் வாழ்க்கைக்குரிய நெறிகளைக் கூறினும் அவற்றைத் தத்தம் சமயக் கண்ணோட்டத்துடன் கூறுகின்றன .
இவை தோன்றிய காலத்தில் சமயம் வாழ்க்கையில் இன்றியமையாத கூறாகிவிட்டது .
இல்லறத்தை வெறுத்த துறவை இந்நூல்கள் போற்றுகின்றன .
இடைக்காலத் தமிழகத்தில் துறவு மதிப்புக்குரியதாகி விட்டது .
வீட்டில் பலரும் இறக்கக் கண்ட ஒருவனை நிலையாமை உணர்வு பற்றிக் கொண்டது .
வாழ்க்கையை வெறுத்துப் பார்க்கும் நோக்குத் தோன்றிவிட்டது .
கணம் கொண்டு சுற்றத்தார் கல்லென்று அலறப்
பிணம் கொண்டு காட்டு உய்ப்பார்க் கண்டும் - மணம்
கொண்டு ஈண்டு
உண்டு உண்டு உண்டு என்னும் உணர்வினாற் சாற்றுமே
டொண் டொண் டொண் என்னும் பறை
( நாலடி , மர்ரே : 3.5 )
( காட்டு உய்ப்பார் = காட்டிற்குக் கொண்டுபோவார் )
என்கிறது நாலடியார் .
தமிழர் சமூக வாழ்வில் சமண பௌத்த சமயங்கள் மதிப்புப் பெற்றன .
பிற சமயங்களும் தத்தம் நெறிகளை மக்களிடையே பரப்பிச் சமூக அமைப்பில் பல சமய வட்டங்கள் தோன்ற வழி வகுத்தன . மத மாற்றங்கள் , போற்றுதல் தூற்றுதல்கள் , மதப் போராட்டங்கள் ஆகியன இடைக்காலத்தில் தொடங்கிவிட்டன .