மனித உடம்பையும் பெண்ணையும் சமயங்கள் இழிவாகக் கருதின .
எனினும் தமிழர் பண்பாடு இவற்றுக்கு முழுமையாக இடம் கொடுத்துவிடவில்லை .
3.3.1 தமிழர் கண்ட பொதுமைக் கண்ணோட்டம்
எதனையும் நடுவுநிலைமையோடு சிந்திக்கும் முதிர்ச்சி பெற்றிருந்த தமிழ்ச் சமூகம் , சமயங்கள்பால் ஒரு பொதுமைக் கண்ணோட்டத்தையும் , பொறை நோக்கையும் கடைப்பிடிக்கத் தலைப்பட்டது .
சமயங்கள் கற்பித்த நன்னெறிகளைத் தமிழ்ச் சமூகம் ஏற்றுத் தன் பண்பாட்டுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டது .
கல்வி ஒன்றே வேறுபாடுகளைக் களைந்து மனிதனை உயர்த்தவல்லது என்பதை அற நூல்கள் தெளிவுபட உரைக்கின்றன .
அறிவுடையோனுக்குக் குலம் என்பது இல்லை என்ற தமிழ்ச் சமூகக் கருத்து அதன் பண்பாட்டு உயர்ச்சியைக் காட்டும் .
தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
காணின் கடைப்பட்டான் என்று இகழார் - காணாய்
அவன் துணையா ஆறு போயற்றே , நூல் கற்ற
மகன் துணையா நல்ல கொளல் .
( நாலடி , மர்ரே : 14.6 )
என்று சாதி வேறுபாட்டைக் கருதாமல் , அவரவர் செயல்கண்டு மனிதனை மதிக்கும் பண்பைச் சில சமயங்கள் உருவாக்கின .
தோணி ஓட்டுகிறவன் எந்த வருணத்தினன் என்று பார்த்தா பயணம் செய்வர் ?
அதுபோலக் கல்வியாளன் எக்குலத்தவனாக இருந்தால் என்ன என்ற கருத்து வருணாசிரம நெறியைத் தவிடுபொடி செய்துவிட்டது .
பழமொழி காட்டும் பண்பாடு E
மக்கள் உணரும் வகையில் எளிய மொழிகளிலும் தெரிந்த மொழிகளிலும் அறத்தைக் கூறவேண்டுமென்று சான்றோர் விரும்பினர் .
சமூகம் அறநெறியில் தவறாது இருக்க வேண்டும் எனக் கருதிய பெரியோர் அவ்வப்போது தாம் உணர்ந்தவற்றை எடுத்துக் கூறினர் .
ஒரு மொழியில் இஃது அறம் , இஃது அறமில்லை எனக் கூறும் நூல்கள் அம்மொழி வழங்கும்
சமுதாயத்தின் பண்பாட்டைக் காட்டும் .
தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டை உணர நீதி நூல்கள் சான்றாகும் .
நட்பு இருவரைப் பிணைப்பது .
தீ நட்பு , கூடா நட்பு ஆகியவற்றைக் கொள்ளாது நல்ல நட்பைத் தேர்ந்து கொள்ள வேண்டும் .
நட்பில் பிழை பொறுத்தல் வேண்டும் .
நண்பனிடம் குறை கண்டால் அதற்காகச் சினம் கொள்ளக் கூடாது .
இதனைப் பழமொழி நானூறு எவ்வாறு கூறுகின்றது ?
நண்பு ஒன்றித் தம்மாலே நாட்டப் பட்டார்களைக்
கண் கண்ட குற்றம் உள எனினும் காய்ந்து ஈயார்
பண் கொண்ட தீஞ்சொல் பணைத் தோளாய் - யார் உளரோ
தம்கன்று சாக்கறப் பார் .
( பழ , மர்ரே : 16 )
கன்று சாகுமாறு பால் கறக்கலாமா ?
கூடாது .
அதுபோல நட்பு தீய்ந்து போகுமாறு சினந்து கொள்ளலாமா ?
கூடாது .
இதுபோல அழகிய பழமொழிகள் பலவற்றை உரிய நீதிகளோடு விளக்குவது பழமொழி நானூறு .
ஒருவனுக்கு ஒரு பொருள் கிடைக்க வேண்டும் என்று இருந்தால் அதை யாராலும் தடுத்தல் இயலாது .
இதனைப் பழமொழி எப்படிக் கூறுகின்றது தெரியுமா ?
கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
விழுமியோன் மேற்சென்றதனால் விழுமிய
வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால
தீண்டா விடுதல் அரிது .
( பழ , மர்ரே : 62 )
( கழுமலம் - சீர்காழி எனப்படும் ஊர். விழுமியோன் - கரிகாலன் என்ற பெயருடைய சோழன் .
உறற்பால - வந்து அடைய வேண்டியவை )
கரிகாலன் சிறுவனாக இருந்தபோது அரசுரிமை இழந்து எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தான் .
அப்போது பட்டத்து யானை அரசனைத் தேர்ந்தெடுப்பதற்காக அனுப்பப் பெற்றது .
அந்த யானை வேறு எவரையும் நாடாமல் கரிகாலனைத் தேடி வந்து அரசனாகத் தேர்ந்தெடுத்தது .
வரவேண்டுமென்ற விதி இருந்தால் வராமல் போகுமா ? இவ்வாறு பல நீதிகளை உணர்த்தி மக்களை வழிப்படுத்துகிறது பழமொழி .
பண்பாட்டு நெறிகள் பலவற்றைப் பழமொழி கற்பிக்கின்றது .
அவற்றுள் சில :
• கன்றை விட்டுத்தான் பசுவிடம் பால் கறக்கலாம் .
அம்பு விட்டுக் கறக்க முடியுமா ?
• ஏர்க்காலில் ஆணி போன்ற நடுவு நிலைமையோடு எந்த நிலையிலும் பணி செய்ய வேண்டும் .
• பெரியவர்களைத் தகுதி அற்ற சொற்களால் குறை கூறுவது நிலாவைப் பார்த்து நாய் குரைப்பது போன்றது .
நிலாவைப் பார்த்து நாய் குரைத்தல்
மருந்து நூல்கள் காட்டும் பண்பாடு
சில நூல்களுக்கு மருந்துகளின் பெயர்களைப் புலவர்கள் வைத்துள்ளார்கள் .
ஏன் தெரியுமா ?
மருந்து நோயைத் தீர்ப்பது போல இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள நீதியும் மனத்தின் குறையைப் போக்கும் என்பதற்காக ஆகும் .
ஏலாதி என்பது ஒரு நூல் .
ஏலக்காய் , இலவங்கப்பட்டை , நாககேசரம் , மிளகு , திப்பிலி , சுக்கு என்ற ஆறு மருந்துச் சரக்குகள் சேர்த்துச் செய்தது ஏலாதி எனப்படும் .
இது போல ஆறு பொருள்களைக் கூறுவது இந்நூல் .
நிறை உடைமை , நீர்மை உடைமை கொடையே
பொறை உடைமை , பொய்ம்மை புலாற்கண் மறை உடைமை
வேய் அன்ன தோளாய் இவை உடையான் பல் உயிர்க்கும்
தாய் அன்னன் என்னத் தகும் .
( ஏலாதி , மர்ரே : 6 )
இதன் பொருள் : ' மூங்கில் போன்ற தோளை உடையவளே !
நிறைந்த பண்பு , அன்பு , கொடைக் குணம் , பொறுமை , பொய் கூறாமை , புலால் உண்ணாமை என்ற ஆறு பண்புகள் கொண்டவன் எல்லா உயிர்க்கும் தாய் போன்றவன் ' என்பதாகும் .
இவ்வாறே திரிகடுகம் என்ற நூலும் , சிறுபஞ்சமூலம் என்ற நூலும் மருந்துப் பெயர்களைக் கொண்டு நீதிக் கருத்துகளைக் கற்பிக்கின்றன .
பிற்கால நீதி நூல்களும் பண்பாடும்
பிற்காலத்தும் பல நீதி நூல்கள் தோன்றியுள்ளன .
ஒவ்வொரு காலத்திலும் பெரியோர்கள் மற்றவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் பண்பாட்டைக் காக்கும் நீதிகளைக் கூறியுள்ளனர் .
ஒளவையார் , குமரகுருபரர் , அதிவீரராம பாண்டியர் , சுப்பிரமணிய பாரதியார் போன்ற புலவர் பெருமக்கள் இவ்வாறு நீதி நூல்கள் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் .
இவர்கள் இயற்றியவற்றில் சிலவற்றை இங்கே காணலாம் .
3.6.1 நீதி நெறி விளக்கம் காட்டும் பண்பாடு
நீதி நெறி விளக்கம் என்ற நூல் குமரகுருபரர் என்ற புலவரால் இயற்றப்பட்டது .
இவர் துறவியாகிச் சைவ மடம் ஒன்றைத் திருப்பனந்தாள் என்ற ஊரில் தோற்றுவித்தார் .
கற்றார்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா ; யாரே
அழகுக்கு அழகு செய்வார் .
கற்றவர்களுக்கு ஆபரணம் என்பது கல்விதான் .
அதுவே பெரிய அழகு .
அந்த அழகுக்கு மேல் அழகு செய்ய வேண்டுவதில்லை .
இது போன்ற நீதிக் கருத்துகளை இந்நூல் கூறுகின்றது .
பிறரை இகழாதீர்கள் .
ஒழுக்கத்தைப் போற்றுங்கள் , எல்லோருக்கும் வழங்கி உண்ணுங்கள் என்பன போன்றவை இந்நூலில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளன .
3.6.2 சதகங்கள் காட்டும் பண்பாடு
சதம் என்றால் நூறு என்று பொருள் .
சதகம் என்பது நீதி கூறும் நூறு பாடல்கள் கொண்ட நூல் என்பது பொருள் .
பல சதக நூல்கள் தமிழில் உள்ளன .
உயர்ந்த பண்பாட்டு நெறிகளைக் கூறுவன இந்நூல்கள் .
தாம் அழிந்தாலும் தம் குணம் அழியாதவை எவை என்று குமரேச சதகம் கூறுவதைக் கேளுங்கள் .
தங்கமானது தழலில் நின்று உருகி மறுகினும்
தன்னொளி மழுங்கிடாது
சந்தனக் குறடுதான் மெலிந்து தேய்ந்தாலுமே தன்மணம் குன்றிடாது .
பொங்குமிகு சங்குசெந் தழலில்வெந் தாலுமே
பொலிவெண்மை குறைவுறாது .
போதவே காய்ந்துநன் பால் குறுகினாலும்
பொருந்துசுவை போய்விடாது
துங்கமணி சாணையிற் தேய்ந்துவிட்டாலும்
துலங்குகுணம் ஒழியாதுபின்
தொன்மைதரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது
தூயநிறை தவறாகுமோ
மங்கள கல்யாணி குறமங்கை சுரகுஞ்சரியை
மருவுதிண் புயவாசனே
மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு
மலைமேவு குமரேசனே .
பெரியோர் இறந்தாலும் அவர்கள் பெருமை மறையாது என்பதற்குப் பல உதாரணங்கள் இதில் தரப்பட்டுள்ளன .
3.6.3 சிறுவர்களுக்கான நீதி நூல்கள்
ஒளவையார் பாடிய ஆத்திசூடி இரண்டு அல்லது மூன்று சொற்கள் கொண்டது .
அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
போன்ற தொடர்களைக் கொண்ட எளிமையான நூல் இது. இதனை அடுத்துப் பலப்பல ஆத்திசூடிகள் தோன்றின .
முனை முகத்து நில்லேல் என்று ஒளவையார் கூறினார் .
இதன் பொருள் போர் முனைகளில் போய் நிற்காதே என்பதாகும் .
பாரதியார் இதனை மாற்றி முனை முகத்து நில் என்று தன் ஆத்திசூடியில் கூறினார் .
ஒளவையார் பாடிய கொன்றை வேந்தன் , மூதுரை , நல்வழி , சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி , அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை போன்றவையும் சிறுவர் கற்பதற்குரிய நல்ல அறநூல்களாகும் .
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
என்பன கொன்றை வேந்தன் எனும் நூலில் காணப்படும் செய்திகள் ஆகும் .
தொகுப்புரை
சமூகம் நன்கு விளங்க அறநூல்கள் தேவை .
தனி மனிதன் ஒழுக்கமுடையவனாக இருக்க அறநூல்கள் அடிப்படையாகும் .
இவ்வகையில் பலப்பல நூல்கள் தமிழகத்தில் தோன்றி தமிழர் பண்பாட்டைக் காத்துவந்துள்ளன .
கள் மனிதனின் அறிவைக் கெடுப்பது .
அதனைக் குறித்துப் பத்துக் குறள்பாக்களில் திருவள்ளுவர் கூறியிருப்பதைக் கண்டீர்கள் .
திருவள்ளுவர்தான் கள்ளுண்ணுதலை முதன் முதலாகக் கண்டித்த அறநூல் ஆசான் .
ஒருவன் - ஒருத்தி என்ற நிலையில் வாழும் இல்லறமே உயர்ந்தது என்பதையும் திருவள்ளுவர் வற்புறுத்தியுள்ளார் .
எல்லா உயிர்க்கும் அருள் உணர்வு பூண்டு வாழ்வதே துறவறம் .
திருக்குறளுக்குப் பின்வந்த அறநூல்கள் பலவும் பண்பாடு மிக்க வாழ்க்கை நடத்தத் தேவையான நீதிகளை வற்புறுத்தியுள்ளன .
இவற்றையெல்லாம் நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான் .
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. நாலடியார் போன்ற அறநூல்கள் எந்தக் கண்ணோட்டத்துடன் அறம் கூறுகின்றன ?
விடை
2. பழமொழி என்ற அறநூல் கூறும் செய்திகளில் இரண்டைக் கூறுக .
விடை
3. மருந்து நூல்கள் எனப்படுபவை யாவை ?
விடை
4. பிற்கால நீதிநூல்கள் இரண்டைக் குறிப்பிடுக .
விடை 5. நீதி நெறி விளக்கம் ஆசிரியர் யார் ?
சைவ வைணவச் சமயங்கள் வளர்த்த
பண்பாடு
பாட முன்னுரை
சிவம் என்ற சொல்லிலிருந்து சைவம் என்ற சொல் தோன்றியது .
விஷ்ணு என்ற சொல்லிலிருந்து வைணவம் என்ற சொல் தோன்றியது .
இவை இரண்டும் தமிழகத்தின் பழைமையான சமயங்கள் .
இவற்றின் கொள்கைகள் , இச்சமயங்களை வளர்த்த பெரியவர்கள் பற்றி இங்குக் காணலாம் .
இறைவன் ஒரு பெரிய கடல் .
கடலை யாராவது அளக்க முடியுமா ?
அதற்குக் கரைகள்தாம் உண்டா ?
இறைவனும் அப்படித்தான் !
அந்தப் பெருங்கடலை நோக்கிச் சமயங்கள் என்ற ஆறுகள் ஓடுகின்றன .
சைவம் ஓர் ஆறு ; வைணவம் ஓர் ஆறு ; பௌத்தம் ஓர் ஆறு ; சமணம் ஓர் ஆறு ; இசுலாம் ஓர் ஆறு ; கிறித்தவம் ஓர் ஆறு. இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ !
மதங்கள் எல்லாம் இறைவனை வழிபடும் மார்க்கங்களே .
வழிகள் வேறுபடலாம் .
ஆனால் குறிக்கோள் ஒன்றுதான் .
அதனால்தான் இராமலிங்க அடிகள் இறைவனைக் குறிப்பிடுகையில் ,
பொங்குபல சமயம்எனும் நதிகளெலாம்
புகுந்து கலந்து இடநிறைவாய்ப் பொங்கிஓங்கும்
கங்குகரை காணாத கடலே !
என்று பாடுகிறார் .
சமயங்கள் என்ற ஆறுகள் மனிதர்களின் மனஅழுக்கைப் போக்கித் தூய்மை செய்வன ஆகும் .
4.1.1 சமயங்கள் தோன்று முன்பு
சமயங்கள் தோன்று முன்பே கடவுள் நம்பிக்கையும் வழிபாட்டு நெறிகளும் வழக்கத்தில் இருந்தன .
அவரவர்களுக்கு விருப்பமான முறையில் , வாழ்க்கை நெறிகளுக்கு ஏற்ற வகையில் வழிபாடு இருந்தது .
கண்ணப்ப நாயனாருடைய வழிபாடு இதற்கு எடுத்துக்காட்டாகும் .
சிவபெருமானுக்கு இறைச்சியை அவர் படைத்தார் .
ஏன் ?
அவருக்குச் சைவ சமய நெறிகள் தெரியாது .
அன்பு நிறைந்த அவர் செயல்களில் இறைவன் குறை காணவில்லை .
குறவர்கள் ஆட்டை அறுத்துத் தினையரிசி பரப்பி முருகனை வழிபட்டனர் ; முனிவர்கள் நீராடித் துவராடை ( காவி வண்ண உடை ) உடுத்து உச்சிக் கைகூப்பி முருகனை வழிபட்டனர் .
முருகன் இவ் இரண்டையும் ஒருநோக்கோடு கண்டதாக இலக்கியம் கூறுகின்றது .
அவரவர் குடும்பமும் குலமும் அறிந்திருந்த வகையில் வழிபாடு இருந்தது .
4.1.2 தமிழரின் கடவுட்கொள்கை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் வாழ்வில் கடவுள் நம்பிக்கை மற்றும் கடவுளைப் பற்றிய சில கோட்பாடுகள் இருந்தன .
இறந்தவரைப் புதைத்தல் , புதைத்த இடத்தில் மரங்களை நட்டு வளர்த்தல் , மரங்களைக் கடவுளாகக் கருதி வழிபடுதல் ஆகிய பழக்கங்கள் பழந்தமிழர் வாழ்வில் இடம்பெற்றிருந்தன .
மரத்தைக் கடவுள் மரம் என்று குறிப்பிட்டுள்ள நிலை அறியப்படுகின்றது .
மரத்தின் அடிப்பகுதி , நீர்த்துறை , மன்றம் எனப்படும் பலர் கூடுமிடம் , தெருக்கள் சந்திக்கும் இடம் ஆகிய இடங்களில் கடவுட் படிமங்களை வைத்து வழிபட்டனர் .
மரத்தை நட்டுக் கடவுளாக வழிபட்ட நிலையிலிருந்தே லிங்க வழிபாடு தோன்றியிருக்க வேண்டுமென்று அறிஞர் கருதுகின்றனர் .
இன்றும் தமிழ்நாட்டுக் கோயில்கள் சிலவற்றில் மரங்களும் கல்லால் உருவாக்கப் பெற்ற கம்பங்களும் தெய்வங்களாக வழிபடப்படுகின்றன .
சைவநெறி வளர்த்த பண்புகள் E
சைவ சமயத்தினர் கொல்லாமையைப் பெரிதும் போற்றினர் .
புலால் உணவை மறுத்தவர் சைவர் என இன்றும் கூறப்பெறுவதைக் காணலாம் .
சைவம் , சாதி வேற்றுமை , தீண்டாமை ஆகியவற்றுக்கு இடம் தரவில்லை .
இவற்றைச் சைவர் தீமைகள் எனக் கருதி ஒதுக்கவும் செய்தனர் .
சிவபெருமான்மீது அன்பு செலுத்தும் அடியவர்களிடையே எந்தப் பாகுபாடும்
இல்லை என்பது சைவர் கொள்கையாக இருந்தது .
வைதிக நெறி பரப்பிய கோத்திரம் , வருணம் ஆகியவற்றுக்குச் சைவ சமயம் இடம் கொடுக்கவில்லை .
இறைவன் ஒருவன் . அவனை அன்பு நெறியால் அடையலாம் ; இறைவன் அருளால் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என்பது சைவ சமயத்தின் மெய்ப்பொருளாகும் .